பின்பற்றுபவர்கள்

26 மே, 2013

டி எம் எஸ்ஸுக்கு சூட்ட வேண்டியவை புகழாரம். ஒப்பாரி இல்லை !

சிறுவயதில் மார்கழியில் அருகில் இருக்கும் கோவில்களில் பாடும் டி எம் எஸ்ஸின் பக்திப் பாடல்களைக் கேட்டு வளர்ந்தவன் என்ற முறையில் டி எம் எஸ்ஸின் தனித்துவம் வாய்ந்த குரல் என்றுமே எனக்கு மிகவும் பிடித்தவை, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் - நாத்திகரும் விரும்பிக் கேட்கவைக்கும் ஒரு பாடல் அதை டி எம் எஸ் தவிர்த்து வேறு யாராலும் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியாது, எத்தனையோ புகழ்பெற்றப் பாடகர்கள் தமிழத்தில் கோலொச்சினாலும் சவுராஷ்ட்ரா மொழியை தாய்மொழியாகக் கொண்ட சவுந்தராஜனின் தமிழ் பாடலில் எந்த ஒரு சொல்லும் சிதைந்தோ, சொதப்பியோ இருந்தது இல்லை.

ஒரு பாடகரை தொடர்ந்து பாடவைப்பதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வதும் இசையமைப்பாளர்களின் கையில் தான் உள்ளது, இளையராஜாவின் வரவிற்கு பிறகு டி எம் எஸ்ஸுக்கு பாடும் வாய்ப்புகள் குறைந்தது, நன்றாக பாடி வந்த எல் ஆர் ஈஸ்வரியும் திரைப்படங்களில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்கள் என்றாலும் இருவருமே தத்தம் இருப்பை தொடர்ந்து பக்திப் பாடல்கள் தொகுப்பை வெளியிட்டு உறுதிப்படுத்திக் கொண்டனர். இளைஞர்களின் கவனம் எஸ்பிபி பக்கம் திரும்ப டி எம் எஸ் என்றால் எம்ஜிஆர் சிவாஜிப் பாடல்கள் பாடியவர் என்ற அளவில் தான் கடந்த முப்பது ஆண்டுகளாக நினைக்க வைத்தது, இதைத் தவறு என்று சொல்ல முடியாது, அவரவர் காலத்தில் உள்ளவர்களை அறிமுகப்படுத்தினால் தான் தமது தனித்துவம் நிலைத்து நிற்கும் என்று இசையமைப்பாளர்கள் நினைப்பார்கள், எனவே டி எம் எஸின் பாடல் ஆதிக்கம் கிட்டதட்ட அவரது 60 வயதினில் முடிவுக்கு வந்ததை இசை துறைக்கான மிகப் பெரிய இழப்பு என்று கருத முடியாது, பழையன கழிதலும் புதியவை புகுதலும் தானே சமூக வளர்ச்சிக்கும் நல்லது.

*******

டி எம் எஸ் தனது 91 வயதில் மறைந்துவிட்டார், இதை நல்ல சாவு, வாழ்வாங்கு வாழ்ந்தவரின் சாவு என்று தான் வகைப்படுத்த வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து, முக அழகிரி தவிர்த்து டி எம் எஸ் வாழ்ந்த காலத்தில்  திரைத்துறையினர் அவருக்காக பெரிய விழா எடுத்ததில்லை, அழகிரி அரசியல் நோக்கம் காரணமாக இதைச் செய்திருந்தாலும் தனிப்பட்ட கலைஞனுக்கு பாராட்டு என்ற முறையில் அதனை பாராட்டியே ஆகவேண்டும், எம்ஜிஆருக்கும், சிவாஜிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடிய டி எம் எஸ்ஸுக்கு எம்ஜிஆர் ரசிகர்களோ, சிவாஜி ரசிகர்களோ பாராட்டுவிழா எதையும் நடத்தவில்லை, இதற்கெல்லாம் திரையுலகினரோ, அவர்கள் எடுக்கும் திரையுலக பாராட்டு விழாக்களுக்கு தலைமை ஏற்று நடத்தும் அரசியல்வாதிகளுக்கோ வருத்தம் எதுவும் அடைந்தது போல் தெரியவில்லை. ஆனால் டி எம் எஸ் மறைந்த பிறகு இருதரப்பினரும் டி எம் எஸ் மறைவு குறித்து ஆற்றமுடியாத துயரம், ஆத்தமா சாந்தியடைய வேண்டும் என்றெல்லாம் இரங்கல் தெரிவித்துள்ளனர், 91 வயதின் இறப்பின் ஆத்மா சாந்தியடையவில்லை என்றால் எந்த வயதில் இறந்தால் ஆத்மா சாந்தியடையும், இத்தனைக்கும் டிஎம்எஸ் தனது பேரன் திருமணத்தையே பார்த்தவர் தான்.

பணக்காரகள் / வசதியானவர்கள் 80 வயதிற்கு மேல் வாழ்ந்தாலே அது வேலைக்காரகளின் பணிவிடையால் தான், 91 வயதிற்கும் மேல் டி எம் எஸ் வாழ்ந்தால் அவருக்கு உடலில் உயிர் தங்கியுள்ளது என்பது தவிர்த்து வேறென்ன பலனைக் கொடுக்கும் ? இரங்கல் என்ற பெயரில் சாவைக் கொச்சைப்படுத்துவதை விட அவருக்கு சூட்டும் புகழாரமே அவருக்கான சிறந்த அஞ்சலி என்பது எனது தனிப்பட்ட கருத்து. எந்த ஒரு மனிதனும் நன்றாக வாழ்ந்து வாரிசுகளின் மகன்/மகள் / பேரக் குழந்தைகள் சாவைப் பார்க்காமல் போய் சேர்வது தான் சிறந்த இறப்பாகும், டி எம் எஸ்ஸின் மறைவால் வருத்தம் அடைய ஒன்றும் இல்லை.

டி எம் எஸ்ஸின் புகழ் அவரது பாடல்கள் நிலைத்து நிற்கும் வரை நிலைக்கும், பாகவதர்கள் பாட்டுகளே கூட இன்றும் நினைவு கூறும் பொழுது டி எம் எஸ்ஸின் பாடல்கள் இன்னொரு நூற்றாண்டிற்கு கூட கேட்டுக் கொண்டி இருக்கும்

16 மே, 2013

நடுத்தர வயதினருக்கு ...!


80 வயது வரையிலும் வாழ்க்கை என்ற கணக்கில் 40 வயது என்பது நடுத்தர வயது என்கிறார்கள், கிட்டதட்ட பாதி கிணறு தாண்டிய நிலை, உடல் உழைப்பின்றிய இன்றைய கால கட்டத்தில் இந்த வயதில் நோய்கள் எட்டிப் பிடிப்பது இயல்பு. நாம் சாப்பிடும் உணவு வகைகளும், அதன் முறைகளும், மன அழுத்தங்களும் சேர நாற்பது வயதில் நோய் தாக்கம் என்பவை வெகு இயல்பாகவே நடைபெறுகிறது. நமக்கு என்ன தேவை என்பதை விட மற்றவர்களைப் பார்த்து நாமும் அது போல் நிறைய வீடு வாசல் நிலம் என்ற வசதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்கிற அழுத்தம் நமக்கு நாமே கொடுத்துக் கொள்பவை, அதில் எதுவும் இயலாமல் போனால் சோர்வும் சேர இரத்த அழுத்தம், நரம்பு தளர்ச்சி என்று நம்மை நாற்பது வயதில் இறுக்கிப் பிடிப்பவை ஏராளம்.

பொதுவாகவே இந்தியர்களுக்கு நீரிழிவு குறைபாடு உலகிலேயே மிகுதி, 35 வயதாகிவிட்டாலே ஆண்டுக்கு ஒருமுறையேனும் யாரும் சொல்லாமல் நாமே நம் உடலின் சர்கரை அளவை, கொழுப்பு அளவுகளை சரி பார்த்துக் கொள்ள வேண்டும், நல்லா தானே இருக்கிறோம், என்று நினைப்பதைவிட 'எனக்கு எந்த நோயும் அண்டாது' என்று நம்புவோர் நம்மில் பலர். உடலை உயரத்திற்கேற்ற சரியான எடையுடன் (BMI) வைத்திருப்பவர்களைவிட முகம் உருண்டையாகவும், சற்று பூசின மாதிரி இருப்பவர்களே ஆரோக்கியமானவர்கள் என்றும் பலர் நம்புகிறார்கள், அதனால் தான் நம்மவர்கள் உடல் இளைத்தால் சொத்தே பரிபோனது போல உணருகிறார்கள். எலும்பு துருத்தாத அளவுக்கு உடலில் சதைகள் இருந்தால் போதும் அவை தான் நல்ல ஆரோக்கியமான உடலின் அடையாளம் என்று நம்மால் நினைக்கவே முடியவில்லை. குண்டாக இருப்பவர்களைப் பார்த்து கிண்டல் அடித்து தம்மால் அவ்வாறு ஆக முடியவில்லை என்று ஏங்குபவர்கள் பலர், குண்டான உடலே ஆரோக்கியமானது, சூதுவாதற்றது என்று அப்பாவியாக பலர் நம்புகிறார்கள். உடல் நலம் என்பது உடல் கூடுதல் எடையுடன் இருப்பது தான் என்பதாக நம்மவர்களின் எண்ணங்களில் ஆழமாக பதிந்துள்ளது. ஒருவர் 120 கிலோ எடை இருந்தாலும் கொஞ்ச நாளில் 100 கிலோக்கு குறைந்திருந்தால் என்ன துரும்பா இளைத்துவிட்டீர்கள் என்று ஒரு அம்மாவைப் போல் கவலையாக கேட்பவர்கள் உண்டு.

குண்டான உடல் ஒல்லியான உடல் இவையெல்லாம் உணவு முறைகள் மற்றும் பரம்பரைத் தன்மையால் கிடைப்பவை. பரம்பரைத் தன்மையால் பலருக்கு விரும்பாமலேயே அவர்களது உடல் அமைப்பு மாறிவிடுகிறது. நொறுக்கு தீணி, கொழுப்புகள் மிகுதியான அசைவ உணவு, ஐஸ்க்ரீம். நெய் மற்றும் தேவைக்கு அதிகமான தூக்கம் இவை அனைத்தையும் முயற்சித்தால் யார் வேண்டுமானாலும் சதை பற்றுடன் உடலை மாற்றிக் கொள்ள முடியும். எனவே ஒருவர் சூதுவாது உள்ளவரா இல்லையா என்பதையெல்லாம் உடலின் எடையை வைத்து எடை போட முடியாது.

***********

தேன்கூடு சாகரன், சிந்தாநதி, ஈழநாதன் மற்றும் பட்டாபட்டி ஆகியவர்களின் மரணம் என்னை வெகுவாகவே பாதித்தது, இவர்கள் அனைவரும் 35 - 45 வயதிற்குள் உள்ளவர்கள், குடும்பம் குழந்தைகள் உள்ளவர்கள், ஈழநாதனின் மரணம் எப்படி நிகழ்ந்தது என்ற விவரம் தெரியவில்லை, ஆனால் மற்ற மூவரும் மாரடைப்பால் மரணித்திருக்கிறார்கள், ஆண்டுக் கொருமுறையேனும் இவர்கள் தங்களது இரத்தத்தின் கொழுப்பு அளவுகளை சரிபார்த்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தால் மரணம் இவர்களை நெருங்கி இருக்காது என்றே நினைக்கிறேன். உடல் நிலையில் அக்கறை கொள்ளாது அலட்சியாமாக இருந்தார்களோ, அல்லது அதற்கெல்லாம் நேரம் இல்லாது தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தார்களோ, அல்லது நமக்கெல்லாம் நோய் அண்டாது என்று நம்பினார்களோ தெரியவில்லை, இவர்களின் எழுத்துகளைவிட அவர்கள் விட்டுச் சென்ற பாடம் நாம் நம் உடலில் அக்கறை கொள்ளவது மிக அவசியம் என்பதே.

************

மனைவியர் வேலைக்கு செல்பவர்கள் என்றால் கணவனின் திடீர் மறைவிக்கு பின் ஓரளவு சமாளித்து குழந்தைகள் வளர்த்தெடுக்க முடியும், சற்று முற்போக்கானவர்கள் என்றால் உறவினர் நண்பர்கள் ஒத்துழைப்புடன் மறுமணம் கூட செய்து கொள்ள முடியும்,  வீட்டு வேலையை மட்டும் பார்த்துக் கொண்டு, குழந்தைகளை கவனித்துக் கொள்ளவர்களாகவும், வெளி உலகமே தெரியாதவர்களாகவும் இருந்துவிட்டால் அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் இறப்பை விட கொடுமையானது. மனைவியை வேலைக்கு அனுப்ப விரும்பமில்லாதவர்கள், திடிரென்று ஒரு நாளுக்கு பிறகு தான் இல்லை என்றால் தன் குடும்பம் கரையேறுமா ? என்பதை நினைத்துப் பார்த்து பின்னர் சூழல்களை சமாளிக்கும் பக்குவத்தையாவது மனைவியருக்கு பழக்கிவிடுங்கள், வீட்டுக்குள்ளேயே இருப்பதும் வெளியுலகம் தெரியாமல் இருப்பது பெண்களுக்கு பெரும் ஆபத்து தான். 

ஆணுக்கு 50 வயதுவரையிலும் கூட மனைவி மறைந்தால் மறுமண வாய்ப்பு அவனது பொருளாதார வசதியைப் பொருத்தது.  ஆனால் 35 வயது கைம் பெண்ணுக்கு திருமணம் செய்ய யாராவது முயற்சிப்பதே புரட்சி என்று சொல்லும் நிலை தான் உள்ளது. நான் ஒருவேளை மறைந்துவிட்டால் நீ மறுமணம் செய்து கொள் என்று பேச்சோடு பேச்சாக தனது ஒப்புதலை முன்பே சொல்லி வைக்கும் ஆண்கள் அரிது.

*********

நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு ஆகும் செலவுகளை விட நோய் இருக்கிறதா என்று முன்பே சோதனை செய்து கொண்டு தடுப்பதற்கான செலவுகள் குறைவே.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்