பின்பற்றுபவர்கள்

24 ஜூன், 2013

இழத்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும் !

மூன்றாம் வகுப்பு படிக்கிறச்ச....ஆண்டவாரானரும் தேவ ஆட்டுக்குட்டியானவருமான ஏசு பிரான் குறித்த 'சண்டே க்ளாஸுகளுக்கு' சனிக்கிழமை வகுப்பு முடிந்ததும் கொடுக்கும் மிட்டாய்க்கு நாக்கு சுரந்து சென்று வந்ததுண்டு, மேற்கண்ட பதிவு தலைப்பில் படத்துடன் கூடிய துண்டு சிறுகதை ஒன்றைக் கொடுத்து படிக்கக் கொடுத்திருக்கிறார்கள், கதையும் அதனுடன் சேர்ந்த கதைத் தலைப்பும் இன்றளவிலும் என்னால் மறக்க முடியவில்லை, அதற்கு காரணம் ரொம்ப எளிது தான். எப்போதாவது எதையாவது தொலைத்தால் அந்த கதை நினைவுக்கு வந்துவிடும், கதை சுறுக்கம் இது தான், ஒரு ஏழையாகப்பட்டவன் ஆடு மேய்க்கப் போறச்ச... தன்னுடைய ஆட்டுக்குட்டியை தொலைத்துவிட்டு அழுது கொண்டிருப்பான், அந்த வழியாக வந்த ஏசு பிரான் அவனுடைய ஆட்டுக்குட்டியை கண்டுபிடித்துக் கொடுப்பார், உடனே அந்த ஏழை மகிழ்ச்சி எல்லைக்கு சென்றுவிடுவான், உங்களது இன்னல்கள் யாவையும் ஏசு பிரானிடம் சொல்லிவிட்டு அவை தீரும் பொழுது அந்த ஏழையைப் போல் நீங்களும் 'சந்தோசம் (மகிழ்ச்சி) அடையுங்கள்' என்பதே அந்த கதை கூறுவதாகும், 

இந்த கதையில் நாம் புரிந்து கொள்ளும் மற்றொன்று, என்ன தான் ஒருவன் உணவுக்கே வழி இல்லை என்றாலும் அவனுக்கு வானத்தில் இருந்து எதுவும் வரவழைத்து வழங்கப்படாது, அவனிடம் இருந்த ஏதேனும் பறிபோனால் அவை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது, கடவுளின் திறன் இவ்வளவே என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும், கடவுளிடம் அதைக் கொடு இதைக் கொடு என்று கேட்டால் எதுவும் கொடுக்கமாட்டார், உங்களின் தற்போதைய நிலைக்கு குந்தகம் வராமல் இருக்க வாய்ப்பு உண்டு அதுவும் 'மன்றாடினால்' மட்டுமே, இவை கிறித்துவ மதம் தவிர்த்து ஏனைய மதங்களின் அடைப்படை நம்பிக்கைகளுள் ஒன்று, அதாவது வழிபாடு என்பவை இழப்பில் இருந்து மீட்டுக் கொள்ள ஒரு (நல்) வழி. இதற்கு மேல் கடவுளுக்கு இயற்பியல் அடிப்படையிலான அந்த திறன் உண்டு, இந்த திறன் உண்டு என்று கட்டுக்கதைகளை பரப்பி விடும் பொழுது அவை போலி நம்பிக்கைகள் என்னும் விமர்சன வளையத்திற்குள் வந்து விடுகின்றன.



******

கடந்த வெள்ளி அன்று அலுவலகம் முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்கும் பொழுது அலுவலக நுழைவு அனுமதி அட்டை (ஐடி கார்டு) தொலைந்துவிட்டது, நானும் மேலே கீழே எங்கெல்லாம் சென்றேனோ அங்கெல்லாம் சென்று தேடிவிட்டேன் கிடைக்கவே இல்லை, எப்படியும் அலுவலகம் நுழையும் முன் வெளியேறும் முன் அட்டையைப் பயன்படுத்தி இருப்போம், தற்பொழுது அலுவலகத்தினுள் இருப்பதால் அட்டை அலுவலத்தினுள் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது, கடைசியாக ஒருவரின் கணிணியில் ஒரு மென்பொருள் நிறுவ சென்ற இடம், அங்கும் சென்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை, பிறகு அட்டையை செயல் இழக்க செய்துவிட்டு, அட்டையை கண்டுபிடிப்பவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளவும் என்று மின் அஞ்சல் அனுப்பிவிட்டு, எதற்கும் மீண்டும் அந்த இடத்தில் சென்று தேடலாம் என்று செல்ல அங்கே அந்த நபர் இல்லை, இருக்கையின் ஓரத்தில் அட்டை தொங்கிக் கொண்டு இருந்தது, முன்பு அவர் உட்கார்ந்திருந்தால் அங்கு சென்று தேடிய பொழுது எனது கண்களில் படவில்லை, நான் அவரது இருக்கையை பயன்படுத்திய பொழுது அட்டை அங்கே இருக்கையின் ஓரத்தில் சிக்கிக் கொள்ள, நான் எழுந்த பிறகு கவனிக்காமல் அவரும் அவரும் தொடர்ந்து அதே இருக்கையில் உட்கார்திருக்க முன்பு தேடிய பொழுது  கண்டுபிடிக்க முடியாமால் போனது. அப்பாடா என்ற என் நிம்மதி பெருமூச்சு ! அட்டை காணமல் போனால்  150 வெள்ளிகள் வரை கட்டணம் செலுத்த வேண்டும், அதுனுடன் கிடைக்கும் வரை மற்றவர்களிடம் அட்டையை கடன் கேட்டு அல்லது அவர்கள் செல்லும் பொழுது கூடவே செல்ல வேண்டி இருக்கும். அட்டை கிடைத்த பிறகு மேற்கண்ட 'இழந்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும் கதை' தான் நினைவுக்கு வந்தது. மீண்டும் கிடைத்த மகிழ்ச்சி 12 மணி நேரம் கூட நீடிக்கவில்லை.


சென்ற சனிக்கிழமை, காலை 8 மணிக்கு வழக்கமான இரத்த சோதனைக்காக அதன் தொடர்பிலான ஆவணங்களை எனது அலுவலக பையிலேயே எடுத்துக் கொண்டு சென்றேன், சோதனை அறையில் இரத்த மாதிரிகளைக் கொடுத்துவிட்டு, வெளியே வந்து காய்கறிகள் கொஞ்சம் வாங்கிக் கொண்டு, உணவுக் கடை பகுதிக்குச் சென்று ஒரு காஃபி குடித்துவிட்டு வீட்டுற்குள் வந்து ஒன்றை மணி நேரம் ஆன பிறகு பையில் இருக்கும் பண அட்டையை எடுத்துக் கொண்டு வெளியே வேறொரு வேலைக்காகச் செல்ல முனைந்து பை இருக்கும் இடத்தை தேட பையைக் காணும், அதே அலுவலகப் பையில் தான் என்னுடைய அலுவலக நுழைவு அட்டை மற்றும் பணப்பை, பண அட்டைகள் உள்ளிட்ட அனைத்தும் இருந்தன. காணும் என்றதும் கலவரம் ஆகியது, நேற்றாவது 150 வெள்ளி இன்னிக்கு எல்லா அட்டையும் புதுப்பிக்க ஆகும் செலவு, அது கைக்கு கிடைக்க ஆகும் நாட்கள் மன உளைச்சல். எங்கு தொலைத்தேன், எங்கு  மறந்துவிட்டு  வந்தேன்....? மருத்துவ சோதனைக்கு சென்ற இடத்திலா, காய்கறி வாங்கிய இடத்திலா ? அல்லது காஃபி குடித்த இடத்திலா ? கொஞ்சம் தான் வாங்கிய காய்கறிகள், வாங்கிய பிறகு பையில் வைத்திருக்க முடியும், ஆனால் காய்கறிகள் மட்டுமே வீடு வந்திருக்கிறது பையைக் காணும், ஒருவேளை மருத்துவ சோதனைகள் நடந்த இடத்தில் தான் இரத்தம் எடுக்கும் பொழுது கீழே வைத்து மறந்து வந்திருக்க வேண்டும், உடனடியாக சென்று பார்ப்போம் பகல் 12:30க்குள் சென்றால் உள்ளே சென்றுவிடலாம் என்று பரப்பானேன், படப்பானேன்,  இது என்ன தேவை இல்லாத அழுத்தம் ?, ஏன் இத்தனை ஞாபக மறதி ? , வயது கூடுவதும் காரணமோ, கிடைக்காமல் போனால் இழப்பு எவ்வளவு........ என்றெல்லாம் என்ன இதயத் துடிப்புக் கூடுதலானது, 'ச்சே' என்ன இது இந்த அளவுக்கு மன உளைச்சல் ஆக என்ன இருக்கிறது. கடைசியாக போகும் பொழுது காணாமல் போனவற்றில் ஒன்றையாவது கொண்டு செல்ல முடியுமா ? கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கிடைக்கட்டும், இதற்காக தேவை இல்லாமல் கலங்கவோ, வருத்தப்படவோ ஒன்றும் இல்லை, போய் கேட்டு, தேடிப் பார்ப்போம் அதன் பிறகு கிடைக்காமல் போனால் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம், என்று நல்ல தெளிவான மனநிலைக்கு வந்துவிட்டேன்.

பேருந்து ஏறி நேராக மருத்துவ சோதனைக்காக சென்ற மருத்துவ கூடத்திற்கு சென்று தேடிவிட்டு விசாரித்தால், கையை விறித்தார்கள், பின்னர் பையின் நிறம், அதனுள் இருந்தவை உள்ளிட்ட விவரங்களுடன் என்னுடைய கைப் பேசி எண் ஆகியவற்றை எழுதி கொடுத்துவிட்டு அங்கிருந்து அடுத்து காய்கறி வாங்கிய கடைக்குச் சென்று பார்க்கலாம் என்று சென்றேன், கடையிலும் யாரும் இல்லை, பையை எங்காவது கண்ணில்படும் படி வைத்திருக்கிறார்களா ? என்று பார்தேன் ம்கூம். ஒரு வேளை யாராவது எடுத்திருந்தாலும் கொடுபபர்களா ? அதனுள் குறிப்பிட்ட அளவு பணமும் இருந்ததே, 'ச்சே சிங்கையில் தொலைந்தால் கண்டிப்பாக கிடைக்கும்', எனக்கு காய்கறி கொடுத்த கடைக்கார சீனப் பாட்டியையும் காணவில்லை, சரி அடுத்து காஃபி குடிக்க சென்ற உணவு கடைத் தொகுதிக்கு சென்று தேடலாம், அங்கு கிடைக்கவில்லை என்றால் இங்கு வந்து மீண்டும் கேட்டுப்பார்கலாம் என்ற நினைத்து அங்கிருந்து அகன்றேன், பொது மருத்துவ சோதனை நிலையத்தில் காணாமல் போய் கிடைக்கும் வாய்ப்பு மறு நாள் ஞாயிறு என்பதால் இனிமேல் திங்கள் தான் என்று நினைத்துக் கொண்டு க்ஃபி குடித்த மேசையைப் பார்க்க அங்கு வேறு யாரோ அமர்து குடித்துக் கொண்டு இருந்தார்கள், அந்த இடத்தில் இருப்பதற்கான அறிகுறி இல்லை, அங்கே குடித்த டம்ளர்களை , சாப்பிட்ட தட்டுகளை எடுத்து செல்லும் பாட்டியிடம் விசாரிக்க அதுவும் நான் பார்க்க வில்லை என்றது, ஏமாற்றம்....... அப்படியே திரும்பி சுற்றிலும் பார்க்க மேசைகளை துடைக்கும் வேலை செய்பவர்கள் ஓய்விற்காக அமர்ந்திருக்கும் இடத்தில் 'பை', அதோ அது தான் என்னுடைய பை என்றேன் பாட்டியிடம், போய் எடுத்துக் கொள், நான் பார்க்கவில்லை, ஒரு வேளை 'டினா' பார்த்து எடுத்து வைத்திருந்தாள் போல என்றது. அப்பாடா என்ற மன நிறைவு பெருமூச்சுடன் பையை எடுத்துக் கொண்டு, அருகே திரும்பி அமர்திருந்த 'டினா' வை விழித்து, விவரம் சொல்லி பையை எடுத்துக் கொண்டு நன்றி கூறி. உள்ளே திறந்து பார்க்க எதுவும் காணாமல் போகாமல், களவாடாமல் அப்படியே இருக்க, நன்றிக்கடனாக 10 வெள்ளியை நீட்ட, வேண்டாம் என்று மறுத்தார், பின்னர் மீண்டும் வழியுறுத்தி நன்று கூறி கொடுக்க வாங்கிக் கொண்டார், 'இழத்தலும் மீண்டும் கண்டுபிடித்தலும்' கதை அடுத்த அடுத்த நாளில் மீண்டும் நினைவு கூர்ந்தேன், அந்த கதையில் கடைசியாக  என்னோடு சேர்ந்து நீங்களும் சந்தோசம் அடையுங்கள் என்று முடித்திருப்பார்கள்.

பை கிடைத்ததன் விவரம் வீட்டிற்கு அழைத்து சொன்னேன், 'என்ன இவ்வளவு கூலாக சொல்றிங்க' என்றார் மனைவி.

மன உளைச்சல் என்பது நாம் எதை தொலைத்தோம் என்பதைப் பொருத்தும் உள்ளது, பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கி கழுத்தில் போட்ட இரட்டை வட தங்கச் சங்கிலியையை, அல்லது ஒரு ரவுண்டு போய்டு உடனே வந்துடுறேன் என்று வாங்கி சென்ற பைக்கையா ? அல்லது சொத்தையே பறிகொடுத்தோமா ? உறவுகளை இழந்தோமோ என்ற பெரிய இழப்புகள் குறித்து நான் இங்கு குறிப்பிடவில்லை, அவற்றின் தாக்கம் வேறு, ஆனால் நம்முடைய நம்மால் ஈட்டக் கூடிய, அது இல்லாவிட்டாலும் நம்மால் வாழ முடியும் என்கிற நிலையில் உள்ள பொருள் குறித்தே எழுதியுள்ளேன்.

காணமல் போனவற்றை தேட முயற்சிக்கலாம் அவை கிட்டலாம் கிட்டாமலும் போகலாம்  அவை மீண்டும் கிடைத்தால் மகிழ்ச்சி, கிட்டாமல் போனால் நமக்கு நாமே ஆறுதலாக, அவை நம்முடனேயே வந்துவிடாது, அவை இல்லை என்றால் வாழ்கையே இல்லை என்ற நிலையும் இல்லை என்ற புரிதல் இருந்தால், நமக்கு மனவுளைச்சலோ, பெரிதாக இழந்தோம் என்கிற மன அழுத்தமோ ஏற்படாது. 

23 ஜூன், 2013

மோடி ஆண்டால் என்ன கேடி ஆண்டால் என்ன ?

சிறுபான்மை பெரும்பான்மை என்ற சொல்லாடலும் அதன் சூழலும் இல்லாத நாடுகளும் இல்லை, இந்தியாவைப் பொருத்த மட்டில் ஊர்களில், மாநிலத்திற்குள் சாதி பெரும்பான்மை, நாட்டிற்குள் மதப் பெரும்பான்மை, வெளி நாடுகளில் இனப் பெரும்பான்மை சிறுபான்மை, அரபு நாடுகளில் மதப்பெரும்பான்மை, அதனுள் இனப் பெரும்பான்மை என்பவை காலம் காலமாகவே அமைந்துள்ளது, நல்லாட்சி என்பது அனைத்து மக்களையும் சமமாக நடத்துதல், அனைத்து உரிமைகளையும் கொடுப்பது என்பது பற்றியது தான் அன்றி யார் ஆளுவது என்ற கேள்விக்கே இடமின்றி பெரும்பான்மையினரின் பிடியில் ஆட்சிகள் இருப்பது தான் நடைமுறை. சிறுபான்மையினருக்கு உரிமை மறுக்கப்பட்டாலோ, பெரும்பான்மையினர் ஆட்சி அதிகாரம் இழந்தாலோ அங்கே பூசல்கள் கலவரம் வெடிக்கும் என்பது உண்மை. 

மதம் / இனம் சார்ந்த சொல்லில் அடைக்கப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு  எந்த ஒரு நாடும் சிறுபான்மையினரை ஆளவிட்டு பார்த்துக் கொண்டு இருக்காது, அதற்கான சகிப்பு தன்மைகள் தாம் ஒரே இனம் என்ற அளவில் அனைவருக்கும் இருந்தால் இன்றி வாய்ப்பில்லை, சுதந்திர இந்தியாவில் அப்படியான எண்ணங்கள் இருந்து அவை படிப்படியாக கரைந்து போனது, சிறுப்பான்மை மதப் பிரிவை சேர்ந்த ஒருவரை (இராசசேகர ரெட்டியைப் போன்று) மாநில முதல்வர் ஆக்குவதே கூட அத்திப் பூத்தாற்போல் நடைபெறும் நிகழ்வு, இந்தியாவிற்கு சிறுபான்மை மதத்தைச் சார்ந்த பிரதமர் ? இன்ற அளவில் வாய்ப்பற்றது, வழிபாடு, நம்பிக்கை என்பதைத் தாண்டி மதங்களால் இறுக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நாம் அதனை மீறி தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவது இயலாத ஒன்று. இருந்தாலும் இந்தியாவில் பாஜக ஆட்சி அமைவதை முற்போக்காளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், பாஜக என்பது மதவாத கட்சி என்பதற்காகவே அல்ல. இந்துக்கள் / கிறித்துவர்கள் / இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இடத்தில் / தொகுதியில் எந்த ஒரு தேசிய / மாநில கட்சியும் மாற்று மத வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கவே மாட்டார்கள், என்பதால் பாஜக மட்டுமே மதவாத கட்சி என்று கூறுவது அரைகுறையான அடிப்படை புரிந்துணர்வு அற்ற கருத்து. ஆனாலும் பாஜக ஏன் இந்துகளாலேயே எதிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. 

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து மதக் கொள்கையை அனைத்து இந்துக்களும் பின்பற்ற வேண்டும். இந்து மதக் கொள்கை என்றால் என்ன ? நான்கு வேதங்களும் அதில் கூறப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மறுக்கும் நான்கு வருண கோட்பாடுகள், சுறுக்கமாகச் சொல்லப்போனால் பார்பனரை ஏனைய இந்துக்கள் பிராமணர் என்று ஒப்புக் கொள்ளப் பட வேண்டும், பிறப்பு அடைப்படையில் பார்பனர் அதிகார வரம்புகள் அனைத்தையும் பெறுவதை எதிர்த்துக் கேட்டால் இந்து மதத்திற்கு எதிரானவன் என்று பழிக்கப்படலாம், அல்லது பேச்சு உரிமை மறுக்கப்படலாம், இடப்பங்கீடுகள் மறுக்கப்படலாம், தவிர தீண்டத்தகாதவர்களின் சாதி அமைப்பும் அவர்களது தொழிலும் அழித்து ஒழிக்கப்படாது, மலம் சுமக்கும் மனிதன் சொர்கத்திற்குப் போவான் என்று திருவாளர் மோடி கூட ஒருமுறை திருவாய் மல(ர்)ந்துள்ளார், பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து மதம் சார்ந்த பழமை வாதங்கள் தலை தூக்கும் என்பதாலேயே பகுத்தறிவாளர்கள், ஒரு சில சமய சார்பற்றவர்கள் ஆகியோர் எதிர்க்கின்றனர், மற்றபடி இந்து சமய பெரும்பானமை அரியணை ஏறினால் இந்தியாவின் மதச் சார்பின்மை அழிந்துவிடும் போன்றவை எடுபடா வாதம், மதச் சார்பின்மை என்பது இன்றைய சூழலில் போலியானவையே. போலி மதச் சார்பின்மை இல்லை என்றால் இந்தியாவில் காங்கிரஸ் என்றோ அழிந்திருக்கும்.

******

மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் இன்றைய சூழலில் பலர் வெளிப்படையாக எதிர்க்கிறார்கள், அதற்கு காரணமாக கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள், இதே போன்று அத்வானியை பாஜக முன்னிறித்திய பொழுது பாபர் மசூதி உடைப்பு பற்றி கூறி எதிர்த்தார்கள், ஆனால் பாபர் மசூதி உடைப்புக்கு பிறகே இந்தியாவில் இருமுறை பாஜக ஆட்சியை பிடித்தது, ஒரு முறை ஜெ-வால் கவிழ்ந்தது, மறுமுறை கருணாநிதியால் நீடித்தது. அத்வானி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது எதிர்க்கக் காரணம் இருந்தது போல் மோடிக்கும் காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள், ஆனால் வெங்கைய்யா நாயுடுவையோ, சுஷ்மா சுவராஜையோ பாஜக முன்னிறுத்தினால் இவர்களெல்லாம் மனம் மாறி காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவிற்கு வாக்களிக்கும் எண்ணம் கொண்டிருந்தார்களா ? என்றால் அதுவும் இல்லை, பாஜக மதவாத கட்சி, சிறுபான்மையினருக்கு ஆபத்து அதனால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என்ற நிலையில் இருந்து கொண்டு அத்வானி ஆகாது, மோடி கூடாது என்கிற கருத்து முத்துகளினால் ஆகப் போவது என்ன ? பாஜகவில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்களை நிறுத்துவது சரியான முடிவு என்று அவர்கள் முடிவெடுப்பது அவர்களது உள்கட்சி விருப்பம், அதில் அவர்களுடைய கட்சியை எந்த காலத்திலும் ஆதிர்க்காதவர்களின் எதிர்ப்புக்கும், எதிர்க்கருத்திற்கும் அடிப்படை ஞாயம் என்று ஏதேனும் உண்டா ?

வாஜ்பாய் ஆட்சியின் பொழுது எந்த மதக் கலகவரமும், சிறுபான்மை அச்சுறுத்தலும் இருக்கவில்லை,கார்கில் நிகழ்வுகளுக்கு பின்னும், கோடிக்கணக்கில் செலவு செய்து இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானின் பிரதமர் முஷ்ரப்பை டெல்லி வரவழைத்து சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்தார், அவர் வளர்ந்த இடங்களையெல்லாம், வீடுகளையும் புதுப்பித்து, மெருகூட்டி அழைத்துச் சென்று காட்டினார், இவையெல்லாம் காங்கிரசு ஆட்சியில் கூட நடைபெற்றதில்லை, ஆனாலும் வாஜ்பாயை போலி மதவாத எதிர்ப்பாளர்கள் ஆதரிக்கவும் இல்லை.

சிறுபான்மை காவலன் என்ற பெயரில் காங்கிரசை ஆட்சியில் உட்கார வைத்து நாட்டில் ஊழல்கள் பெருத்துவிட்டதும், லட்சம் கோடி என்ற அளவில் எல்லாம் ஊழல் நடைபெறுவதும், இந்திய பண மதிப்பு பாதளத்திற்கு சென்றதையும் கண்ணுறுகிறோம், 10 விழுக்காட்டு மக்களின் மன திருப்திக்காக மீதம் 90 விழுக்காடு மக்கள் வதைபடுவது ஞாயம் அது தான் மதச் சார்பின்மை என்றால் நாட்டில் பெரும்பான்மை மக்களின் நலனைவிட சிறுபான்மையினரின் விருப்பமே மேலானது என்கிற மனப்போக்கு வெகுவிரைவில் மதம் சார்ந்தே மீதம் இருக்கும் 90 விழுக்காட்டினரை அழைத்துச் சென்றுவிடும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் பெரும்பானமியினரின் கையில் ஆட்சி இருப்பதும் தான் எந்த ஒரு நாட்டிற்கும் நல்லது, அவை இல்லை என்றால் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்படும்.  இந்திய  மக்கள் பல்வேறு மதவாதிகளின் /  மதங்களின் கையினுள் சிக்கிவிட்டார்கள் என்பதால் தான் இவ்வாறு எழுதுகிறேன். 

***

75 விழுக்காடு சீனர் வசிக்கும் சிங்கப்பூரில் ஒருமுறையாவது இந்தியரோ, மலாய்காரரோ பிரதமாராக வந்தால் நல்லா இருக்கும் என்றே நாம நினைக்கலாம் ஆனால் சீனார்களுக்கு அவை பெருமையானது அல்ல அதற்கான வாய்ப்புகளும் ஏற்படாது, அவை ஞாயம் என்ற அளவுகோலிலும் வைத்துப் பார்க்க முடியாது. இந்தியர்களும், மலாய்காரர்களும் சீனர்களுக்கான உரிமையுடன் இருக்கிறார்களா ? என்பது மட்டும் தான் இங்கே முக்கியம்.

19 ஜூன், 2013

பாமெண்ணையால் வந்த வினை !

செய்திகளில் படித்திருப்பீர்கள், கடந்த மூன்று நாட்களாக கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் புகைமூட்டம், ஜூன் மாதம் துவங்கி அக்டொபர் வரையிலும் இந்த பகுதிகளில் புகைமூட்டம் இருக்குமாம், இந்தோனேசியா சுமத்திரா தீவில் காட்டுத்தீ 'ஏற்படும்' அதனால் தான் புகை என்றே நான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறேன், வெயில் காலத்தில் காட்டில் தீ பற்றுவது இயல்பு, அது காட்டுத்தீயாக பரவி புகை மூட்டம் கிளம்பும் போல என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். 

சிங்கப்பூர் துவங்கி மலேசியா கோலாலம்பூர் நோக்கிய பேருந்து பயணத்தில் வழியெங்கும் பாம் எண்ணை மரங்களைக் காணலாம், ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் காட்டுப்பகுதிகளை அழித்து தான் அவை உருவாக்கியுள்ளனர் என்பது அவற்றைப் பார்க்கும் பொழுதே விளங்கிக் கொள்ள முடியும். தென்னை மரங்களைவிட பாம் எண்ணை மரங்கள் மகசூல் மிகுதியாகக் கொடுத்து முதலாளிகளுக்கு மிகுதியான பணம் ஈட்டித்தருவதால் மலேசியாவில் கிட்டதட்ட பாதி நாட்டு பரப்பளவில் பாமாயில் விவாசயம் தான். 

கடந்த மூன்று நாளில் இன்று உச்சமாக சுற்றுச் சூழல் காற்று எண் 290 (PSI index) தொட்டு இருக்கிறது, முன்பு 1997ல் 224 ஆக இருந்ததே உயரிய அளவாம், அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. காலையில் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது 120....140... பகல் 2 மணிக்கு 160 பின்னர் 4 மணிக்கு 172 ஐ நெருங்கியது. பிறகு குறையவே அலுவலகம் முடிந்து மாலை 8 மணிக்கு 190ஐ தொட்டது, 100க் மேல் சென்றாலே புகை வாடையையும் உணர முடியும், 190 என்று தெரிந்தவர்கள் முகத்தில் முகமுடியுடன் சென்றார்கள், இரவு 9 மணிக்கு PSI 290 ஐ தொட்டு இருக்கிறது, 300க்கும் மேல் சென்றால் எதிரே வருபவர்கள் தெரியாது, போக்குவரத்திற்கு வாய்ப்பில்லை, கப்பல் விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்படும், அல்லது பாதிவழியிலேயே நிறுத்தப்படும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்படுவார்கள்.

வழக்கமாக இரவு 11 மணி வரை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் ஆள் அரவே இல்லை, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர், சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன, அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடம் தாண்டி புகைப்பிடித்தால் தண்டம் கட்ட வேண்டிய சிங்கப்பூரில் எல்லா இடத்திலுமே புகை. நிலமை இன்னும் சில நாட்கள் நீடித்தால் .....அவசரகால அறிவிப்புகள் கூட வெளிவந்தால் வியப்பில்லை, எங்கள் வீட்டில் முடிந்த அளவு பகல் பொழுதில் கூட சன்னல் கதவுகள் அனைத்தையும் சாத்திதான் வைத்திருக்கிறோம், இருந்தும் வீட்டினுள்ளும் புகை நெடியை உணர முடிகிறது.


வரலாறு காணாத புகை மூட்டம் என்று தலைப்பிட்டு தொலைகாட்சியிலும், இணைய செய்திகளிலும் தகவல்கள் வெளி இடுகிறார்கள். சுற்றுலா வந்தவர்களுக்கு மோசமான அனுபவங்கள், நிலமை சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் இவை வெறும் காட்டுத் தீயால் ஏற்பட்டது தானே என்று என்னைப் போல் நினைத்தவர்களுக்கு. கிடைக்கும் தகவல்கள் மனித பேராசைகளே இதற்கு காரணம் என்று தெரியவர அதிர்ச்சி தான். புகையை கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள் என்று சிங்கப்பூர் சுற்றுச் சூழல் அமைச்சு இந்தோனேசியாவை கேட்க, அவர்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அதற்கு முற்றிலும் உதவ எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர் - மலேசிய முதலாளிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பதில் கூறியுள்ளனர். அதாவது



சமையல் எண்ணை நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணை மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசியா காடுகளிலும் கை வைத்துள்ளனர், இவற்றில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் சிங்கப்பூர் மலேசியாவை சேர்ந்த முதலாளிகளாம், காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நடைபெறும் செயலாம். இந்த ஆண்டு கூடுதலான பகுதிகளை அழித்திருக்க வேண்டும், அதன் எதிர்விணையைத் தான் தற்பொழுது நாங்கள் அனுபவிக்கின்றோம்.

இந்தோனேசியா ஏழை நாடு இத்தனை ஆண்டுகளுக்கு பாமாயில் மரங்களுக்கு குத்தகைக்கு இடம் வேண்டும் என்றால் காடுகளை கைகாட்டிவிட்டு கையெழுத்து போட்டு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள், அவர்களையும் குறை சொல்ல முடியாது. போட்டித் தன்மை நிறைந்த உலகத்தில் எதையாவது அழித்தால் வருமானம் வந்தால் சரி என்று நினைக்கும் முதலாளிகளை குறைச் சொல்ல முடியாமல் அரசுளும் கையை பிசைகின்றன, ஏனென்றால் எல்லாம் அரசாங்கம் அனுமதித்தப்படியே நடக்கின்றன, விளைவு ? மக்களுக்கு தான் எல்லா வகையிலும் இழப்பு.

பாமாயில் வாங்குவதை நிறுத்தினால் ஒருவேளை காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்பட்டுவதை தடுக்கலாம்,  ஆனால் அவையெல்லாம் கடல்கடந்து வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து பாமாயிலுக்காக முதலிடு செய்யப்படுவதை தடுத்தால் எரியும்  காடுகளை தடுக்கலாம். பெரிய அளவு உயிர் சேதம் நடந்தால் ஒருவேளை அவர்கள் அது பற்றி யோசிக்கக் கூடும். அதுவரை இவை வழக்கம் போல் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகிவிடும்.

இதை எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால்

The three-hour Pollution Standards Index (PSI) soared to 321 at 10pm local time 

Singapore haze hits 'hazardous' levels of PSI 321.

பொழைச்சு கிடந்தால் பின்னர் பார்ப்போம். (குறைந்துவருவதாகவுக் குறிப்பிட்டுள்ளனர்.

16 ஜூன், 2013

குடுமி !

ளிவழி (சேனல்)  மாற்றும் பொழுது ஜெ தொலைகாட்சியில் விசு வின் மக்கள் அரங்கம், விசுவிற்கு வயதாகிவிட்டது, விசு பழுத்தப் பழம் போன்று உள்ளார், ஒரு காலத்தில் நாயகன் வேடம் கட்டியவரா இவர் என்று வியப்படைய வைத்தது, காலம் எவ்வளவு விரைவாக தோல் சட்டைகளை சுருங்க வைக்கிறது. நான் சிறுவயதில் நட்டுத்தரவயதினராக பார்த்தவர்களெல்லாம் இன்று முதியவர்கள் ஆகிவிட்டனர். பாலச் சந்தர், பாரதி ராஜா போன்றவர்களுக்கு விரைவாக தோற்றம் மாறாவிட்டாலும் ஒரு சிலரின் முகத் தோற்றம் முற்றிலும் மாறிப் போவது மரபுக் கூறுகள் என்பது தவிர்த்து வேறு எதுவும் சொல்ல இயலவில்லை. 

ழமைக்கும் புதுமைக்கும்  என்று எதோ ஒரு தலைப்பில் விசு மக்கள் அரங்கம் நடத்திக் கொண்டிருந்தார், பெரிதாக ஈர்க்கும் படி எதுவும் இல்லை, அரைச்ச மாவிலும் புளித்த மாவைப் போட்டு ஆட்டினர், பேசியவர்களின் பேச்சில் பெரும்பாலும் பார்பன சொல் வழக்கு வாடை. எனக்கு அவை தவறாக தெரியவில்லை, அவரவர் அறிந்தவற்றை, வளர்ந்த விதத்தில் கற்றுக் கொண்டவற்றைத் தானே வெளிப்படுத்த முடியும், பெரியவர்கள் சரியாக சொல்லாததால் நாங்கள் கேட்கவில்லை என்று இளையோர் சார்பாக ஒரு சிற்பி (ஸ்தபதி என்று எழுத்து போட்டார்கள்) பேசினார், தோப்புகரணம் போடுவதற்கு, நெற்றியில் சந்தனம் குங்குமம் வைப்பதற்கும், உச்சி குடுமி வைப்பதற்கும் அறிவியல் காரணங்கள் உள்ளன, அவற்றை சரியாக விளக்காததால் நாங்கள் செய்யவில்லை என்று கூறி அறிவியல் காரணம் என்று கூறி எதோ விளக்கினார், இவர் தெரிந்து கொண்டவற்றை தெரியாதது போல் பேசி விளக்க முயற்சித்தார் என்றே சொல்ல வேண்டும். தோப்புக் காரணம் போடுவதால் காது நரம்பு செயல்பட்டு மூளையை இயக்குமாம், விட்டால் கணிணிக்கே காது வைத்தால் விரைவாக செயல்பட வைக்கும் சேமிப்பு சில் (மெமரி) கூட்டத் தேவை இல்லை என்பார்கள் போல. காதில் பூ வைத்துக் கொள்வதற்கும் அறிவியல் விளக்கம் இருக்குமோ ?

நெற்றியில் குங்குமம் வைத்தால் என்ன நன்மை என்று மற்றும் எதோ ஒரு விளக்கம் கொடுத்தார், நான் அங்கிருந்தால் அப்பறம் அதையெல்லாம் ஏன்யா கைம் பெண்களிடம் இருந்து பறித்தீர்கள் என்று கேட்டு வைத்திருப்பேன், அப்பறம் உச்சிக் குடுமி வைப்பதால் அது குடுமியின் எடை மூளைச் செல்களை இழுத்து இழுத்து செயல்பட வைக்குமாம், மாணவிகள் மிகுதியான மதிப்பெண் பெற அது கூட காரணமாக இருக்கலாம் என்றார். என்ன ஒரு அறிவியல் விளக்கம், நூறாண்டுகளுக்கு முன்பு வரை ஆண்களில் பார்பனர்கள் மட்டுமின்றி இந்தியர்கள், தமிழர்கள் அனைவருக்குக்குமே தலை முடி வெட்டிக் கொள்ளும் பழக்கம் இல்லை என்று சொல்ல முடியாவிட்டாலும், இன்றைக்கு இருப்பது போல் க்ளீன் சேவிங்க், கட்டிங் இவற்றிற்கெல்லம் வாய்ப்பு இல்லை, முடித்திருத்தகங்கள் இல்லை என்று சொல்வதுடன் அத்தகைய தொழில் செய்பவர்களும் குறைவு என்றே சொல்ல வேண்டும், எனவே வளர்ந்த தலைமுடிகளை எல்லா ஆண்களும் முடிந்தே வைத்திருந்தனர் (பரதேசி படம்), எளிதில் பழமையை மாற்றிக் கொள்ளாத பார்பனர்களில் சிலர் இன்றும் தொடர்ந்து முடி வளர்த்து கொண்டை போட்டுக் கொள்வதை அறிவியல் விளக்கம் என்று சொல்லி வந்தால் நம்மால் நகைக்காமல் இருக்க முடியவில்லை, இப்படியே விட்டால் சிங் தலைப்பாகை அணிவதற்கும், இஸ்லாமியர் தாடி வைத்துக் கொள்வதற்கும், அதில் சாயம் பூசிக் கொள்வதற்கும், பெளத்தர்கள் மொட்டை அடித்துக் கொள்வதற்கும், பேராயர்கள் தலையில் குல்லா வைப்பதற்கெல்லாம் கூட அறிவியல் விளக்கம் வரும் போல.

டலில் மயிர்கால்களின் வழியாக வியர்வை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் உறுப்புகளில் (தலை, அக்குள், பிறப்புறுப்பு) இயற்கை அமைப்பாக முடி வளர்ச்சி உள்ளது, கூடுதலாக ஆண் / பெண் சுரப்பு (ஆண்டோஜன், ஈஸ்ட்ரோஜன்) தன்மைக் காரணமாக ஆண்களுக்கு தாடி மீசை வளர்வதுண்டு, அவை உடல் சார்ந்த பாலியல் அடையாளங்களில் ஒன்று என்பது தவிர்த்து முடிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, தலையில் முடி இல்லாதவர்களுக்கு மூளை செயல்படாது என்பது போல், தாடி வைக்காதவர்களுக்கு தாடை இயங்காது என்பது போலும், குடுமி வைக்காதவர்களுக்கு மூளைத் திறன் கூடாது என்பது போல் கருத்து சொல்வது ஒரு மலிவான, அறிவற்ற ஒரு விளக்கம். தலை மற்றும் முக முடிகளை உடல் அழகு சார்ந்த விதமாக மாற்றிக் கொள்வது தவிர்த்து முடி கருப்பாக இருப்பதாலோ, வெள்ளையாக இருப்பதாலோ அல்லது முடியே இல்லாது சோ இராமசாமி போல் இருப்பதாலோ எதாவதை இழந்துவிடுவோமா என்ன ?

கொண்டைப் போட்டவருக்கு தான் அறிவு வளர்ச்சி இருக்கும் என்றால் மொட்டைத் தலையுடன் காட்சி தரும் ஆதிசங்கரருக்கு, சோ இராமசாமிக்கு அவை குறைவு என்று சொல்ல முடியுமா ? அரித்தால் முதுகு சொறிவது மற்றும் சாவியைத் தொங்கவிடுவது தவ்ர்த்து பூணூலின் நன்மைகள் இவை இவை என்று ஏதோனும் ஒன்று உண்டா ?ஆவற்றை விற்பவருக்கு அது வியாபார பலன், நான் பூணூல் அணிவது தவறு என்று சொல்லவரவில்லை, ஆனால் அவற்றையெல்லாம் அறிவியல் விளக்கம் என்று கடைவிரித்து குழப்பாதீர்கள், குடும்ப வழக்கம், சாதி வழக்கம் என்பது தவிர்த்து அவற்றில் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதே நான் சொல்ல வருவது. பூணுல் போட்டுக் கொள்வது போலவே, இடுப்பில் அறைஞான் போடுவதால் கோவணம் கட்டுவதற்கான வசதி என்பது தவிர்த்து ஏதேனும் உண்டா ? நாமெல்லாம் ஜட்டிக்கு மாறிய பிறகும் அறைஞான் அணியும் வழக்கத்தில் வேறு பயன் என்று எதுவும் இல்லை. 

நிகழ்ச்சியில் ஒரு பாட்டி, இன்னிக்கு எல்லாம் பிஸ்ஸா, பர்கர்னு சாப்பிடுறா..பொங்கல் முந்திரி, நெய் போட்டு செய்வதால், அவற்றை உண்ணுவதால் உடலுக்கு என்னனென்ன நன்மை என்று நியுட்ரிசியன் போல்  சொன்னதில் உணமை கூட இருக்கலாம், ஆனால் நாம் இன்று உண்ணும் பொங்கல் ஒரு 100 ஆண்டுகளுக்குள் வந்த உணவே, நெல் அரிசியை நாம் அன்றாட உணவாக்கிக் கொண்டு முழுதாக ஐம்பது ஆண்டுகள் கூட ஆகவில்லை, அவ்வாறு இருக்கையில் பொங்கலை பாரம்பரிய உணவு போன்று பேசியதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, இதற்கு பதில் கம்பங்கூழ் கேப்பக் கூழ் பற்றி கூறி இருந்தாலும் அவை இனிப்பு குறைவான, புரத சத்து மிக்க உணவு என்று கூறலாம், 

நாமெல்லாம் என்னதான் பழம்பெருமை பேசினாலும் அறிவியலிலும், சமூக நலன் சார்ந்த அக்கறைகளுக்கும் வெளிநாட்டினரிடமே, குறிப்பாக வெள்ளைக்காரர்களிடமே பாடம் படிக்க வேண்டியுள்ளது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்,


ந்த ஒரு இனம், சாதி அல்லது மதம் சார்ந்த பழக்கம் வழி வழி வந்தவை, மாற்றிக் கொள்ள விரும்பாதவை என்பது தவிர்த்து அவற்றில் எல்லோருக்குமான பொது நன்மைகள் எதுவும் கிடையாது. மதவாதிகளும், சாதி பற்றாளர்களும் அவற்றை நம்புவதுடன் நிறுத்திக் கொண்டு அவற்றிற்கு அறிவிலி விளக்கம் கொடுக்காமல் இருந்தால் என்னைப் போன்றவர்களுக்கு எழுத்து வேலை எதுவும் இருக்காது.


*********

முன்பைப் போல் பதிவெழுத நேரமில்லை, இருந்தாலும் அவ்வப்போது வாசிப்பதுண்டு, இயக்குனர் மணி வண்ணன் மறைவு மிகவும் வருத்தம் அடைய வைத்தது, சிறந்த ஈழப்பற்றாளர். அவரது உடலில் புலிக் கொடி, அம்மா ஆட்சியில் இல்லை என்றால் அதற்கும் வாய்ப்பிருக்காது.

ணிவண்ணன் தனது சாவையும் அதற்கு கூடும் மாபெரும் கூட்டத்தையும் , அழுகையையும் ஏற்கனவே பார்த்தவர் தான். எந்த மனிதனுக்கும் அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்காது. - படம் சங்கமம் http://youtu.be/8zKNIWHvwWI

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்