1000ம் ஆனாலும் 1001 தானே பெருசு !
Tuesday, November 24, 2009
எனது வலைப்பதிவு காலம் - இதில் 1000 இடுகைகள் இன்றோடு முற்றுகிறது. எழுத்து என்பதை தள்ளி நின்று பார்த்தால் மலை போன்றும் அதன் அருகில் சென்றால் அருவியில் நாமும் குளிக்கலாம் எனது துய்ப்பு(அனுபவம்), ஆழ்ந்த கருத்தைத் தொட்டு எழுதுகிறேன் என்று ஒரு சிலர் பின்னூட்டத்தில் பாராட்டினாலும் சரியான புள்ளிவிவர தரவுகளுடன் நான் எழுதுவதில்லை என்கிற குற்றச் சாட்டுகளும், சில எழுத்துப் பிழைகள், தட்டச்சுப் பிழைகள் நேர்வதையும் சிலர் சுட்டுவதையும் ஏற்கிறேன்.
மிகச் சிறந்த ஆக்கம், கட்டுரை படைக்க வேண்டும் என்கிற உறுதியுடன் நான் எதையும் எழுதுவதில்லை, எழுதுபவர்கள் அனைவருமே கற்பனை என்கிற எல்லைக் கோட்டில் நின்று எழுதுவதில்லை. எங்கோ படித்தவற்றின் பகிர்வுகள் அது குறித்த எண்ணங்களை தான் சார்ந்துள்ள பிடித்த கொள்கைகளின் கருத்துகளையும் நுழைத்தே எழுதுகிறார்கள், நேர்மையான விமர்சனப் பகிர்வுகள் வருவது குறைவுதான். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களம் என்பது சிந்தனைக் களம் என்பதைத் தாண்டி சித்தாந்தங்களை முன்னிருத்தும் களமாக நிற்கிறது. அரசியல் சார்பு, தன்னல முன்முடிவுகள் தான் பெரும்பாலும் கருத்துக்களில் முன்னிறுத்தப்படுகிறது. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல இருந்தாலும் பச்சைப் பொய்களை அல்லது உண்மைகளைத் திரித்துக் கூறி கருத்துக்கு வலுசேர்க்க வேண்டும் என்று முயன்றதில்லை, அதற்கான தேவையும் எனக்கு இல்லை என்று உறுதியாக நினைக்கிறேன்.
முதல் பதிவிலிருந்து 999 இடுகை வரை சிந்தனை ஓட்டங்களில் ஒரு சில கருத்துகளில் மாற்றம் இருந்தாலும் முழுமனதையும் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒருமாற்றமும் நான் படித்தவற்றின் வழியாக எனக்கு ஏற்படவில்லை என்பதை என் எழுதுக்களில் எனது முந்தைய இன்றைய நிலைப்பாடுகளை ஒப்பிடும் போது எனக்கு தெரிகிறது. நாத்திக நிலைப்பாடு, ஆத்திக நிலைப்பாடு என்ற இருபக்கமும் எதோ ஒன்றை சார்ந்து எழுதியது போல் தெரியவில்லை. மதவேறுபாடுகளால் கூறுபட்டு கிடக்கும் மனித இனங்களை ஒன்றிணைக்க வாழ்வு உண்மையானதே, மனம் முதன்மையானது, தனிமனித உரிமை என மனிதம் பேசும் நாத்திகம் எந்த அளவுக்கு எனக்கு முதன்மையாக தெரிகிறதோ அதே அளவுக்கு அனைவரையும் ஒன்றிணைக்க வாழ்வே நிலையற்றது, உடல் நிலையற்றது, நிறம் நாமே விரும்பிப் பெற்றது அல்ல, இனவேறுபாடுகள் தவிர்த்தால் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும் என்று கூறி அதற்கு இறை நம்பிக்கையை முன்வைத்துப் பேசும் ஆத்திகமும் எனக்கு முக்கியமானதே. எனது வலைப்பக்கத்தில் நான் வள்ளலார், பெரியார் வேறு காலகட்டங்களின் வேறு வேறு தமிழ் துருவங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கிறேன். தமிழ் சூழலிலேயே அத்தகைய இருதுருவங்கள் நம்மிடையே வாழ்ந்ததும் நம் தமிழர்களின் கொடுப்பினையாக நினைக்கிறேன்.
தீவிர இறை மறுப்பு மற்றும் ஏற்பு என்ற இரண்டிற்குள்ளும் நான் பொதுவாக மூக்கு நுழைப்பதில்லை, மதவாதமும், சாதிவேற்றுமையும் கண்டிப்பதில் சார்பு நிலையற்றது என்பதால் நாத்திகவாதமாக எனது கருத்தை பேசுவது எனக்கு வசதியாவே இருக்கிறது. எனக்கு இறை நம்பிக்கை உண்டு என்று சொன்னால் அதை நிருபனம் செய்யச் சொல்லி ஆத்திக நண்பர்களே என்னிடம் கேட்கக் கூடிய பேராபத்தும் உண்டு :) என்னை இறைமறுப்பாளனாக நினைப்பவர்களிடம் அப்படி நினைக்காதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன், என்னை இறை ஏற்பாளான நினைப்பவர்களை தடுக்கவும் மாட்டேன். கடவுள் நம்பிக்கை என்பது பெரும்பாலும் ஊட்டப்பட்ட நம்பிக்கையாக இருப்பதால், அதுபற்றி மிகவும் உணர்ச்சிவசப்படுவதும் எதிர்ப்பதும் தேவையற்றது, இருந்தாலும் அவை சமூகத்தில் ஏற்படும் கெடுதல்களை நோக்கும் போது அவை விவாதமாக மாறுகிறது. பூசை அறை நம்பிக்கைகளை யார் குறைச் சொல்லப் போகிறார்கள் ?
என் பதிவின் முந்தைய பிந்தைய இடுகைகளிலும் ஒப்பீட்டு அளவில் எனக்கு தெரிந்த நல்ல மாற்றமாக நான் கருதுவது எழுதும் போது வடமொழி உட்பட்ட பிற மொழிச் சொற்களை தெரிந்த மட்டில் தவிர்த்து எழுதுவதுதான்.
புதிய பதிவர்களின் பதிவுகளை படித்து ஊக்கமளிப்பதை முடிந்தமட்டில் செய்துவருகிறேன், நன்கு தெரிந்த பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கே பின்னூட்டமிடுவதிலும், கும்மி அடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
இங்கு காலத்தில் இருப்பது 1000 இடுகைகள், இவை தவிர்த்து பிறர் மற்றும் எனது பிற வலைப்பக்களிலும் எனது எழுத்துப் பங்களிப்புகள் உண்டு. இதற்கு செலவிட்ட நேரம் பிற நடவடிக்கைகளுக்கான நேர இழப்பு தான் என்றாலும் இந்த நேரப் பங்களிப்பு 200 க்கும் மிகுதியான நண்பர்களைப் பெற்று தந்திருக்கிறது, 100க்கும் மிகுதியானவர்களை நேரடியாக சந்தித்து மகிழவைத்திருக்கிறது, 1000க்கும் மிகுதியானவர்களுக்கு என்னைப் பற்றிய அறிய வைத்ததுடன் எண்ணங்களை வாசிக்க வைத்திருக்கிறது. எழுதுவதன் பிறநோக்கம், ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்துகள் ஏற்பட வைக்க வேண்டும், வாசிப்பவர்களை எழுதத் தூண்டவேண்டும் என்பதே எழுத்து குறித்த எனது தனிப்பட்ட எண்ணம்.
1000 இடுகைகளுக்கு 22,103 பின்னூட்டங்கள் கிடைத்திருக்கிறது. சராசரியாக இடுகைக்கு 22+ பின்னூட்டங்கள் என வாரிவழங்கியதுடன்,
தொடர்ந்து வாசித்துவரும் அனைத்து தரப்பு நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றி (காக்டெய்ல் தாங்கஸ்) ! முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் ஜோதிபாரதி, ஸ்டார்ஜன் மற்றும் அக்பருக்கு மிக்க நன்றிகள்,
வருகை அட்டவணைகள் :


