காலத்தில் தேட...

1000ம் ஆனாலும் 1001 தானே பெருசு !

Tuesday, November 24, 2009

எனது வலைப்பதிவு காலம் - இதில் 1000 இடுகைகள் இன்றோடு முற்றுகிறது. எழுத்து என்பதை தள்ளி நின்று பார்த்தால் மலை போன்றும் அதன் அருகில் சென்றால் அருவியில் நாமும் குளிக்கலாம் எனது துய்ப்பு(அனுபவம்), ஆழ்ந்த கருத்தைத் தொட்டு எழுதுகிறேன் என்று ஒரு சிலர் பின்னூட்டத்தில் பாராட்டினாலும் சரியான புள்ளிவிவர தரவுகளுடன் நான் எழுதுவதில்லை என்கிற குற்றச் சாட்டுகளும், சில எழுத்துப் பிழைகள், தட்டச்சுப் பிழைகள் நேர்வதையும் சிலர் சுட்டுவதையும் ஏற்கிறேன்.



மிகச் சிறந்த ஆக்கம், கட்டுரை படைக்க வேண்டும் என்கிற உறுதியுடன் நான் எதையும் எழுதுவதில்லை, எழுதுபவர்கள் அனைவருமே கற்பனை என்கிற எல்லைக் கோட்டில் நின்று எழுதுவதில்லை. எங்கோ படித்தவற்றின் பகிர்வுகள் அது குறித்த எண்ணங்களை தான் சார்ந்துள்ள பிடித்த கொள்கைகளின் கருத்துகளையும் நுழைத்தே எழுதுகிறார்கள், நேர்மையான விமர்சனப் பகிர்வுகள் வருவது குறைவுதான். பல்வேறு தரப்பினரின் கருத்துக்களம் என்பது சிந்தனைக் களம் என்பதைத் தாண்டி சித்தாந்தங்களை முன்னிருத்தும் களமாக நிற்கிறது. அரசியல் சார்பு, தன்னல முன்முடிவுகள் தான் பெரும்பாலும் கருத்துக்களில் முன்னிறுத்தப்படுகிறது. நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல இருந்தாலும் பச்சைப் பொய்களை அல்லது உண்மைகளைத் திரித்துக் கூறி கருத்துக்கு வலுசேர்க்க வேண்டும் என்று முயன்றதில்லை, அதற்கான தேவையும் எனக்கு இல்லை என்று உறுதியாக நினைக்கிறேன்.

முதல் பதிவிலிருந்து 999 இடுகை வரை சிந்தனை ஓட்டங்களில் ஒரு சில கருத்துகளில் மாற்றம் இருந்தாலும் முழுமனதையும் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு எந்த ஒருமாற்றமும் நான் படித்தவற்றின் வழியாக எனக்கு ஏற்படவில்லை என்பதை என் எழுதுக்களில் எனது முந்தைய இன்றைய நிலைப்பாடுகளை ஒப்பிடும் போது எனக்கு தெரிகிறது. நாத்திக நிலைப்பாடு, ஆத்திக நிலைப்பாடு என்ற இருபக்கமும் எதோ ஒன்றை சார்ந்து எழுதியது போல் தெரியவில்லை. மதவேறுபாடுகளால் கூறுபட்டு கிடக்கும் மனித இனங்களை ஒன்றிணைக்க வாழ்வு உண்மையானதே, மனம் முதன்மையானது, தனிமனித உரிமை என மனிதம் பேசும் நாத்திகம் எந்த அளவுக்கு எனக்கு முதன்மையாக தெரிகிறதோ அதே அளவுக்கு அனைவரையும் ஒன்றிணைக்க வாழ்வே நிலையற்றது, உடல் நிலையற்றது, நிறம் நாமே விரும்பிப் பெற்றது அல்ல, இனவேறுபாடுகள் தவிர்த்தால் மனிதர்களை ஒன்றிணைக்க முடியும் என்று கூறி அதற்கு இறை நம்பிக்கையை முன்வைத்துப் பேசும் ஆத்திகமும் எனக்கு முக்கியமானதே. எனது வலைப்பக்கத்தில் நான் வள்ளலார், பெரியார் வேறு காலகட்டங்களின் வேறு வேறு தமிழ் துருவங்களை ஒன்றிணைத்து வைத்திருக்கிறேன். தமிழ் சூழலிலேயே அத்தகைய இருதுருவங்கள் நம்மிடையே வாழ்ந்ததும் நம் தமிழர்களின் கொடுப்பினையாக நினைக்கிறேன்.

தீவிர இறை மறுப்பு மற்றும் ஏற்பு என்ற இரண்டிற்குள்ளும் நான் பொதுவாக மூக்கு நுழைப்பதில்லை, மதவாதமும், சாதிவேற்றுமையும் கண்டிப்பதில் சார்பு நிலையற்றது என்பதால் நாத்திகவாதமாக எனது கருத்தை பேசுவது எனக்கு வசதியாவே இருக்கிறது. எனக்கு இறை நம்பிக்கை உண்டு என்று சொன்னால் அதை நிருபனம் செய்யச் சொல்லி ஆத்திக நண்பர்களே என்னிடம் கேட்கக் கூடிய பேராபத்தும் உண்டு :) என்னை இறைமறுப்பாளனாக நினைப்பவர்களிடம் அப்படி நினைக்காதீர்கள் என்று சொல்லவும் மாட்டேன், என்னை இறை ஏற்பாளான நினைப்பவர்களை தடுக்கவும் மாட்டேன். கடவுள் நம்பிக்கை என்பது பெரும்பாலும் ஊட்டப்பட்ட நம்பிக்கையாக இருப்பதால், அதுபற்றி மிகவும் உணர்ச்சிவசப்படுவதும் எதிர்ப்பதும் தேவையற்றது, இருந்தாலும் அவை சமூகத்தில் ஏற்படும் கெடுதல்களை நோக்கும் போது அவை விவாதமாக மாறுகிறது. பூசை அறை நம்பிக்கைகளை யார் குறைச் சொல்லப் போகிறார்கள் ?

என் பதிவின் முந்தைய பிந்தைய இடுகைகளிலும் ஒப்பீட்டு அளவில் எனக்கு தெரிந்த நல்ல மாற்றமாக நான் கருதுவது எழுதும் போது வடமொழி உட்பட்ட பிற மொழிச் சொற்களை தெரிந்த மட்டில் தவிர்த்து எழுதுவதுதான்.

புதிய பதிவர்களின் பதிவுகளை படித்து ஊக்கமளிப்பதை முடிந்தமட்டில் செய்துவருகிறேன், நன்கு தெரிந்த பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்தாலும், தொடர்ந்து அவர்களுக்கே பின்னூட்டமிடுவதிலும், கும்மி அடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

இங்கு காலத்தில் இருப்பது 1000 இடுகைகள், இவை தவிர்த்து பிறர் மற்றும் எனது பிற வலைப்பக்களிலும் எனது எழுத்துப் பங்களிப்புகள் உண்டு. இதற்கு செலவிட்ட நேரம் பிற நடவடிக்கைகளுக்கான நேர இழப்பு தான் என்றாலும் இந்த நேரப் பங்களிப்பு 200 க்கும் மிகுதியான நண்பர்களைப் பெற்று தந்திருக்கிறது, 100க்கும் மிகுதியானவர்களை நேரடியாக சந்தித்து மகிழவைத்திருக்கிறது, 1000க்கும் மிகுதியானவர்களுக்கு என்னைப் பற்றிய அறிய வைத்ததுடன் எண்ணங்களை வாசிக்க வைத்திருக்கிறது. எழுதுவதன் பிறநோக்கம், ஒரு சிலருக்கு மாற்றுக் கருத்துகள் ஏற்பட வைக்க வேண்டும், வாசிப்பவர்களை எழுதத் தூண்டவேண்டும் என்பதே எழுத்து குறித்த எனது தனிப்பட்ட எண்ணம்.


1000 இடுகைகளுக்கு 22,103 பின்னூட்டங்கள் கிடைத்திருக்கிறது. சராசரியாக இடுகைக்கு 22+ பின்னூட்டங்கள் என வாரிவழங்கியதுடன்,
தொடர்ந்து வாசித்துவரும் அனைத்து தரப்பு நண்பர்களுக்கும் அன்பு கலந்த நன்றி (காக்டெய்ல் தாங்கஸ்) ! முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்த நண்பர்கள் ஜோதிபாரதி, ஸ்டார்ஜன் மற்றும் அக்பருக்கு மிக்க நன்றிகள்,


வருகை அட்டவணைகள் :

ஆகக் கடைசி 20 ஆயிரம் வருகைகள்


90 நாடுகளில் 175 நகரங்கள்


வருகை கணக்கு விவரம்



வருகைக்காக பயன்படுத்தியவர்களின் உலவி மற்றும் செயலி

Read more...

புனித குற்றங்கள் (Sacred Crime) !

Monday, November 23, 2009

"தவறிழைத்தாலும் அரசன் மன்னிப்பு கேட்பது என்பது அரசனுக்கே இழுக்கு" - இது வெள்ளைக்காரர்களின் பண்பாட்டுக் கூறு. Man in the iron mask என்கிற படம் பார்த்தேன், அதில் இளவரசன் தவறுதலாக ஒரு கண்ணாடி கோப்பையை உடைத்துவிட்டு 'Sorry' சொல்ல, 'A king cannot ask sorry' என்று அவனுக்கு பயிற்சி கொடுப்பவர் அறிவுரை சொல்லுவார். முதலாளிகள், பணக்காரவர்கம், செல்வாக்குப் படைத்தவர்கள் தவறு செய்வது இயல்பு என்பதே அதன் பொருள். அடிமைசாசனத்தின், ஆளுமைகளின் அனைத்து கயவாளித்தனங்களும் அதில் இருந்தே வளர்ச்சி பெருகின்றன. தவறு செய்தவன் தன் னளவில் மன்னனே, மன்னனின் மகனே ஆனாலும் அவனுக்கும் தண்டனை உண்டு என்பதே நமது கோட்பாடு. 'நானே கள்வன்' கண்ணகிக் கதையின் முடிவு கூட இப்படியாகத்தான் அமைந்திருந்தது. நீதி என்ற சொல்லை இந்தியர்கள் பயன்படுத்துவதற்கும், பிறர் பயன்படுத்துவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இருந்தாலும் பெரிதாக பீற்றிக் கொள்ள ஒன்றும் இல்லை என்பது போலவே பார்பனுக்கு ஒரு நீதி.....பறையனுக்கு மறு(!) நீதி என்பதாக சாதிய வருணாசிரம் கோட்பாடுகள் நாக்கை நீட்டி பழிப்பு காட்டுவதையும் நாம் மறந்துவிடலாகாது.

அரசனோ, தலைவனோ குற்றம் செய்வது பற்றிய பெரிய கருத்துகள் விவாதம் சுயநலம், பொதுநலம் என்ற நோக்கில் சொல்லப்படுவது அவரவர் இன வாழ்வியல் முறை என்றாலும், அனைத்தையும் அறிந்தவர்கள், அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லும் இறை பணியாளர்கள், சாமியார்கள் செய்யும் குற்றங்களுக்கும் அவ்வித அளவீடுகள் பொருந்துமா ? காமம் அல்லது பாலியல் மற்றும் உடல்உறவு குறித்து அனைத்து மதங்களுமே கட்டுபாடுகள் கொண்டிருப்பதாகத்தான் அறிகிறோம். விலை மாந்தர்கள் பற்றிய கருத்துகள் மதவாதிகளினால் மிகவும் தூற்றப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. ஒருவரை புனிதராகக் காட்ட அவர் காமத்தை துறந்தவர் அல்லது காமத்தில் கட்டுபாடு மிக்கவர் என்பதாகச் காட்டுகிறார்கள்.

பொதுவாக மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் வெளியே தெரியாமல் அமுக்கப்படும் அல்லது பிற மதத்தினரால் மிகுதியாகப் பேசப்படும், அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பற்றி விவாதிப்பது குறைவு அல்லது கிடையாது, அவ்வாறு விவாதம் செய்வதும் கூட பிற மதத்தினரால் தூற்றப்படுவோம் என்கிற ஐயம் காரணாமாக விவாதிப்பது இல்லை என்பதைவிட மதப்புனிதம் கெட்டுவிடும் என்பதாகவே அதை மறைத்தே பழகுகிறார்கள். வேதங்களில் பெருமையாகப் பேசப்பட்ட இந்திரன் தற்பொழுது எங்கு சென்றான் என்றே தெரிய்வில்லை, தமிழகத்து முருகனின் மாமனார் என்கிற ஒரு பதவிதவிர்த்து இந்திரன் குறித்து தற்காலத்து இந்து சமயவாதிகளால் பேசப்படுவதில்லை, ஏனெனில் இந்திரன் குறித்துக் கூறப்பட்ட கதைகளில் ஒன்று இந்திரன் காமவயப்பட்டு முனிவர் வேடம் கொண்டு முனிவரின் மனைவியை அடைய முயற்சித்தான், அவளும் அறியாமையால் அதற்கு ஒத்துழைத்ததால் கல்லாக மாறும் படி சாபம் பெற்றாள், இந்திரனும் உடெலெங்கும் பெண் குறிகள் தோன்றக்கடவது என்று சாபம் பெற்றான் என்பதே அந்தக் கதை அந்தக் கதையின் தொடர்ச்சியாக இராமயணத்தில் இராமன் கால்கள் பட்டதும் உயிர்பெற்றாள் என்றும் அவளை இராமன் அன்னையே என்று அழைத்து மகிழ்ந்தான் என்றும் இராமயணக் கதையில் கூறப்பட்டுள்ளது.

அகலிகை (மறு அல்லது மீண்டும்) புனிதம் அடைந்தாளா இல்லையா என்பதைவிட இராமனின் கால் அடிக்கு இருக்கும் புனிதத்துவம் உணர்த்துவதாக அந்தக் கதையின் கட்டமைப்பு இருக்கிறது. பெண்ணாசை மிக்கவன் என்பதாக கதையில் கூறப்பட்டு கதை பரவலாகப் வழங்கிவருவதால் இந்திரன் வணக்கம் வழிபாடுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன என்பதாகத்தான் நினைக்கிறேன். மற்றபடி இந்திரன் வணங்கத்தக்கவனா இல்லையா என்கிற புரிதல்களை நான் எழுப்பவில்லை. பக்திமார்க்கத்தில், சமயத்தில் முறையற்ற காமம் என்பதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை என்பதாகவும் அந்தக் கதைகள் புரிய வைக்கப்படுகின்றன.

இறை தொண்டாற்றுபவர்கள் காம வயப்பட்டார்கள் என்று கூறுவது கூட மதத்திற்கு இழுக்கு என்பதாகவே அனைத்து கதைகளும் கட்டமைக்கப்படுகின்றன. பண்டைய இதிகாச உதாரனங்களைவிட அண்மைய ஆறாம் நூற்றாண்டு கதைகளை குறிப்பாக திருவிளையாடல் புராணம் பெருமையாக பேசும், திருமுறைப் பாடல்கள் பாடியவருமான ஞான சம்பந்தன் திருமணம் முடித்தவுடனேயே அங்கு கலந்துகொண்டவர்களுடன் இறை சோதியில் ஐக்கியம் ஆனதாக கதை சொல்கிறார்கள். ஞானசம்பந்தரை இல்லறவாசியாகக் காட்டவேண்டியதற்கு தேவை அவர் வாழ்வில் முழுமை பெற்றார் என்பதற்கும், அவர் அன்றே சோதியில் ஐக்கியமானார் என்பதை தெய்வீகம் புறக்கணிக்கும் காமத்தை தொடாத, துய்காத புனிதர் அவர் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போல:) இவ்வாறெல்லாம் மறைத்து மறைத்து காமம் என்பது ஆன்மிகத்திற்கு மிகத் தொலைவு என்றெல்லாம் கட்டமைத்துவிட்டு ஒரு சாமியார் காம லீலைகள் புரிகிறார் என்று சொன்னால் நடக்கக் கூடாத இழுக்கு நடந்ததாக கூனிக்குறுகிக் கொள்கிறார்கள், அல்லது அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நம்புகிறார்கள். ஸ்வாமிகள் மலம் கழிப்பார்களா ? என்று நினைப்பது கூட அப்படிப் புனிதப்படுத்தப் படுவதால் ஏற்படும் ஒரு ஐயம் தான், சாமியார்கள் மலம் கழிப்பதுடன் அவர்களே தனக்குத்தானே கழுவியும், மலம் கழிப்பவர் கிறித்துவ வெள்ளைக்கார பாதிரிமார்கள் என்றால் அவர்களே அதைத் தாளால் துடைத்தும் கொள்ள வேண்டும், ஏனென்றால் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள் வயிற்றுக்குள்ளேயே சமாதி ஆகிவிடாது :)

சாமியார்களின் புனிதம் குறித்து மிகுந்த கட்டுமானம் செய்திருப்பதால் தான் என்னவோ, அவர்கள் தவறு இழைக்கும் போது ஒன்று அதை ஏற்க அடியார்களுக்கு மனம் வருவதில்லை, அல்லது அவர்கள் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்கிற கருத்தும் வருகிறது. அவன் அங்கு அந்த பதவிக்கு தகுதியற்றவனாகிறான் என்பதை அவனுடைய பதவியில் புனிதம் இருப்பதாக நம்புவர்கள் நினைப்பது குறைவு. ஒரு சாமியார் எவ்வளவுதான் தவறு செய்தாலும் அவை மறைக்கப்படுகிறது அல்லது மறைமுகமாக ஏற்கப்படுகிறது கையும் களவுமாக மாட்டுபவர்கள் மிக எளிமையாக தப்பித்துவிடுகிறார்கள் சிங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கிறித்துவ பாதிரி பணமோசடி செய்தாதாக கைது செய்யப்பட்டு நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டு கம்பி எண்ணுகிறார், நேற்று ஒரு புத்தமத சாமியார் பணமோசடியில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நம் நாட்டு மதத்தலைவர்களுக்கு அரசியல் செல்வாக்கு மிகுதி.

கருவறையில் பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பிடிபட்ட கோவில் குருக்கள் தேவநா(த்)தன் 'பகவான் என்னை ஏற்கனவே தண்டிச்சிட்டான்' என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். இவ்வளவு நாட்கள் தான் பகவானுக்கு அர்சனை செய்வதாகச் சொல்லி பெண்களை ஏமாற்றி வந்தவன், இன்று பகவான் தண்டித்துவிட்டதாகச் சொல்கிறான், இவனை பகவான் தண்டிச்சாரா இல்லையா ? இவனுக்கு எப்படி தெரியும் ? இவனுடன் இரவோடு இரவு பேசி நான் உன்னை தண்டித்துவிட்டேன் என்று சொன்னாரா ? அவன் செய்தது சராசரி மனிதத் தவறே என்றாலும் கூட பல்வேறு தரப்பினரின் நம்பிக்கைக்கு உலை வைத்தவன், இன்னும் 'பகவான்' பெயரைச் சொல்ல எதுவும் இருக்கிறதா ? இருந்தாலும் தொடர்ந்து சொல்லுவான் ஏனென்றால் அவன் செய்தது புனித அர்சனைத் தொழிலாம், அவனுடைய முறையற்ற பாலியல் நடவெடிக்கை மட்டும் 'தெரியாமல் நடந்த தவறுகலாம், அதை கடவுள் மன்னிப்பாராம்'. இவன் சிக்கியது, இவனைப் பற்றிய செய்திகள் இவற்றிற்கு கொடுக்கப்படும் முதன்மைத்துவம் மற்றவையாவும் இவன் ஒரு பெரிய மடத்தின் தலைவராக இருந்தால் வெளியே தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது, அப்படியே தெரிந்தாலும் அவை நம்பட மாட்டாது.

சாதரண மக்கள் தவறிழைத்துவிட்டால் அது அவர்கள் இழிபிறப்பு, அவர்கள் தவறு செய்யவே பிறந்தவர்கள், மோசமானவர்கள் என்பதும், அதுவே சாமியார்கள், புனிதர்கள் தவறு செய்துவிட்டால் மழுப்பலாக 'நேரம் சரி இல்லை தப்பு நடந்துவிட்டது, கிரக நிலை சரி இல்லை, சேருவார் தோசம்' என்றெல்லாம் பழியை பிறர் மீது சொல்வதும் வாடிக்கை தான்.

புனித குற்றங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதைவிட அவற்றிக்கு தண்டனையே கிடையாது எனெனில் அவைகள் வெளியே தெரியவும் தெரியாது, தெரிந்தாலும், அவை நம்பப்படவே படாது. மனு நீதியாக மறு(த்துவிடும்) நீதியாக இன்னும் புனித குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது.

Read more...

பெரியார் விழுந்து வணங்கிய கால்கள் !

Friday, November 20, 2009

திராவிடக் கொள்கையில் ஒன்றாக சுயமரியாதை என்பது தனிமனித உரிமை, யாருடைய காலில் விழுவதும் தனிப்பட்ட மனிதனுக்கு இழுக்கு என்பதை கொள்கையாக வைத்திருந்த தந்தை பெரியார் அதை தன் தொண்டர்களுக்கும் வலியுறுத்தினார். அப்படிப்பட்ட சுயமரியாதைச் செம்மல் தனது வாழ்நாளின் இறுதி நாட்களில் ஒரு நிகழ்வில் இறைத்தொண்டர் ஒருவரின் காலில் விழுந்தார் என்று படித்த போது பெரும் வியப்பாக இருந்தது.

"தமிழகத்தைப் பொருத்த அளவில் நாத்திகம் என்பது கீழ்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும், ஆத்திகம் என்பது மேல்சாதி மக்களின் வாழ்க்கை முறையாகவும் மாறிவிட்டதை ஏற்றுக் கொள்ளவேண்டி இருக்கிறது"
-மகா சன்னிதானம் தெய்வசிகாமணி அடிகளார் (எ) குன்றக்குடி அடிகளார்

அதாவது ஆத்திகம் - ஆன்மிகம் என்பதே மேல் சாதி மக்களின் நலன் பேணுவதற்கு உருவாக்கப்பட்ட ஒன்று. இப்படிச் சொன்னவர் பெரியாராலும் பெரியார் தொண்டர்களாலும் கொண்டாப்பட்டார் என்று நினைக்கும் போது அது தவறே அல்ல. மேடைப் பேச்சுகளின் வழி ஒருவரை ஒருவர் பெரியாரும், அடிகளாரும் கடுமையாக விமர்சனம் செய்து சாடி வந்த வேளையில், ஒருமுறை பெரியாரும் அடிகளாரும் கலந்து கொண்ட ஒரு பொன்மாலை நிகழ்ச்சி நடந்தது, அந்நிகழ்ச்சியில் இருவரின் பேச்சும் இருவரையுமே கவர அன்று முதல் திராவிட கழக, அடிகளார் ஆன்மிக மேடை நிகழ்ச்சிகள் பல ஒன்றாக நடந்தன.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை அடிகளார் மிகவும் தீவிரமாக ஆதரிக்கவே பெரியார் அடிகளார் முன்பைவிட பலமாக ஆதரித்தார். அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும், அடிகளாரை மேலவை உறுப்பினருக்கு பரிந்துரைக்க, பதவி ஏற்றதும் இந்தியாவிலேயே முதன் முறையாக மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மிகவாதி என்ற பெருமையை அடிகளாருக்கு ஏற்பட்டது.

1967ல், அண்ணா பதவி ஏற்றதும் திருச்சியில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி விழா நடைபெற்றது, அந்த நிகழ்ச்சியில் நாவலர் நெடுஞ்செழியன், குன்றக்குடி அடிகளார், திருச்சி திராவிடக் கழக தலைவர் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த ஆண்டு பிறந்த நாள் செய்தியாக பெரியார் அறிவித்த செய்தியைக் கேட்டதும் அனைவரும் அதிர்ந்தனர், ஒரு சில குடும்ப பிரச்சனைகளை மறைமுகமாகக் குறிப்பிட்ட பெரியார், இறுதியாக "நான் துறவியாகிவிடலாமா என்று பார்க்கிறேன்"

அதை கேள்விபட்டபோது அண்ணா அப்போது அமெரிக்காவில் இருந்தார், அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையிலும் பெரியாருக்கும் ஆறுதல் கடிதம் எழுதினாராம். "அப்படி துறவு மேற்கொள்வதாக இருந்தால் குன்றக்குடி மடத்துக்கு வந்துவிடுங்கள்" என்றாராம் பிறந்த நாள் விழாவில் தலைமை ஏற்ற அடிகளார். 'அப்படி என்றால் பெரியார் குன்றக்குடி மடத்தின் தலைவராகட்டும், அடிகளார் திராவிடக் கழகத்தின் தலைவராகட்டும், அப்படி செய்தால் அது பெரியாருக்கு சிறந்த பிறந்த நாள் பரிசாக அமையும்' என்று கேட்டுக் கொண்டாராம் செல்வேந்திரன். அங்கிருந்தவர்களின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்த பெரியார் எதுவும் பேசாமல் இருக்க, 'பெரியாரே இது பற்றி எதுவும் சொல்லாமல் இருப்பதால் நான் செல்வேந்திரனின் கோரிக்கையை தள்ளுபடி செய்கிறேன்' என்றாராம் அடிகளார்.

அனைவரும் கலகலப்பாக பேசிக் கொண்டு இறுதியாக பாராட்டு நடத்திய அடிகளார் பெரியாருக்கு பொன்னாடைப் போடுவதற்கு எழ, தன்னால் பிறர் துணை இன்றி எழவே முடியாத பெரியார் தானே முயன்று கால்கள் நடுநடுங்க எழுந்து நின்றதும், அடிகளார் பெரியாருக்கு பொன்னாடை போர்த்தி வணக்கம் தெரிவிக்க, பெரியார் கால்கள் நடுநடுங்க குனிய உணர்ந்து கொண்ட அடிகளார் சமாளித்து தடுக்க முயற்சிக்கும் முன் பெரியார் அடிகளாரின் காலை தொட்டு வணங்கிவிட்டார். இது அங்கு பெரியார் பிறந்த நாள் விழாவிற்கு வந்திருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதாம். அடிகளார் ஆன்மிகவாதி என்றாலும் அவர் பெரியாரைவிட வயதில் பாதி அளவுதான். பெரியாரின் சுயமரியாதைக் கொள்கை பெரியாரே மீறுவது அனைவரையும் மவுனத்தில் ஆழ்த்தியதாம்.

மறுநாள் பெரியார் இல்லத்தில் கூடிய தொண்டர்களும், திருச்சி செல்வேந்திரனும் தயங்கி தயங்கி நிற்க, பெரியார் நேற்றைய நிகழ்வு உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் என்றதும் "ஐயா நேற்று நீங்கள் செய்த காரியம் எங்களுக்கு பிடிக்கவில்லை, தூக்கமில்லாம் செய்துவிட்டது" என்றது எல்லோருக்குமே பிடிக்காமல் போய்விட்டதா ? என்று கேட்டு, 'என்னங்க செல்வேந்திரன், நீங்கள் புத்திசாலின்னு நெனெச்சேன்' என்று சொல்லிக் கொண்டே பேசத் தொடங்கினாராம் பெரியார்.

"சர்.சி.பி.இராமசாமி ஐய்யரை தெரியுமா உங்களுக்கு ? எருமை நாக்கை விரும்பி சாப்பிடுகிற பார்பனத் தலைவர்...உலகமெல்லாம் சுற்றி வந்து பெரிய பதவிகளில் இருந்தவர் அவர் போய் காஞ்சிபுரம் சங்கராச்சாரி காலில் விழுகிறாரே ஏன் ?... தான் மரியாதை செய்தால் தான், தன்னுடைய நிறுவனம் பெருமைபடனுமின்னு, அதைத்தான் நானும் செய்தேன், சூத்திர சாதி மடத்தை (அடிகளாரின் மடத்தை) நானும் பெருமைபடுத்த நானும் செஞ்சேன். எனக்கு என் மரியாதை முக்கியமில்லை, என் இனத்தின் மரியாதை தான் முக்கியம், பகுத்தறிவு மற்ற எல்லா எழவையும் அப்பறம் பாத்துக் கொள்ளலாம்" என்றார்

*****

தனது சாதிப் பெருமைக்காக எதைவேண்டுமானாலும் குறிப்பாக பிற சாதியை தாழ்த்தி பெருமை சேர்த்துக் கொள்ளும் பிற சாதித் தலைவர்களைவிட, தனது மக்களுக்காக தனது கொள்கையையையும், சுயமரியாதையும் இழக்க முடிவு செய்த பெரியாரைப் போல் இனி ஒரு பெரியாரைப் பார்க்க முடியாது.

பல்வேறு தரப்பினரால் ஓட்டு வாங்கி பிரதமர் ஆனாலும் சமயத்தலைவர்களின் காலில் விழுவது இன்றும் நடப்பில் இருக்கத்தான் செய்கிறது. (மட)சாமியார்கள் காலில் பெரிய பதவியில் இருப்பவர்கள் விழுவது ஏன் ? பெரியார் சரியாகச் சொல்லியே இருக்கிறார். காலில் விழுவது அரசியல்வாதிகளின் அவர் அவர் விருப்பம் என்றாலும் கிறித்துவர்களின், இஸ்லாமியர்களின் ஓட்டையும் இவர்கள் வாங்கி இருக்கிறார்கள், ஒரு அரசியல்வாதி ஒருசாமியார் காலில் விழுகின்றார் என்றால் அவரை ஆதரிக்கும் மக்களும் சாமியாரைப் பெருமையாக பார்ப்பார்கள் அல்லது அவர்களின் ஆதரவையும் சாமியாரின் காலடியில் வைப்பது போன்றது, விழட்டும் ஆனால், ஒரு பாதிரியின், இமாமின் கால்களில் அமைச்சர்கள், தலைவர்கள் விழுவது போல் தெரியவில்லை. யாரை மக்களுக்கு பெருமைபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அவர்கள் காலில் மட்டும் தான் விழுவார்கள். மதச் சார்பற்ற நாடு என்று நாம் மார்தட்டிக் கொண்டு தான் வருகிறோம், இதெல்லாம் போகப் போகத் தெரியுமா ?

*****

பெரியார் குன்றக்குடி அடிகளாரின் காலில் விழுந்த நிகழ்வைப் பற்றி தற்போதும் எப்போதும் திக தலைமை மற்றும் ஆதரவாளர்கள் வெளியே சொல்வது இல்லை, குறிப்பாக தமிழ் ஓவியா இது பற்றி எழுதியது போல் தெரியவில்லல. அதற்குக் காரணம் இவர்கள் பெரியாரை புனிதராக காட்ட முயற்சிப்பது தான். பெரியார் புனிதரும் அல்ல புத்தரும் அல்ல, நேர்மையான நல்லதொரு புரட்சிகரத் தலைவர், அவரை புனிதப்படுத்தினால் அவர் அந்நியப்பட்டுப்போவார். பெரியார் வாழ்க்கை மகாத்மா காந்தியின் வாழ்க்கையைப் போன்ற திறந்த புத்தகம்.

இடுகை தகவல் : "இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா ?" (பக்கம் 171 - 182)
நூல் ஆசிரியர் திருச்சி செல்வேந்திரன், நாம் தமிழர் பதிப்பகம். 17/1, தாச்சி அருணாச்சலம் தெரு, மயிலாப்பூர். சென்னை 4

Read more...

சாதீ...யம் சில எண்ணங்கள் !

இந்தியாவின் மையப் பிரச்சனை என்றாலும் இப்போது அரசியல்வாதிகள், சாமியார்கள் மறைமுகமாக ஆதரவுக் கொடுத்து வளர்த்துவிடும் ஒன்றாகவும் சாதி இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சிப் பின்னலாகவே பிரிவினைக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் சாதி மற்றும் கற்பு என்கிற சொல்லாடல்கள் சமூகத்தில் அழுத்தமாக பதிந்து கிடக்கின்றன. கற்பு பற்றிய புரிதல் குறித்த மாற்றம் சமூகத்தில் ஏற்பட்டு இருக்கிறது, ஏனெனின்றால் பாலியல் வன்முறை செய்தவனையே திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி பெண்களின் கற்பை மீட்டுக் கொடுக்கும் பழக்கம் தற்போது இல்லை அல்லது மிகக் குறைவு, அதே போன்ற வன்முறையால் (கணவன் தவிர்த்து) பிறரால் பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள், கணவனுக்காக வைத்திருந்தது களவாண்டு போய்விட்டதே என்று தூக்கில் தொங்குவதோ, தீக்குளிப்பதோ நடப்பது இல்லை, மாறாக அப்படி பாலியல் வன்முறை செய்தவர்களை கடுமையான சட்டம் கொண்டே தண்டிக்கிறார்கள், நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்பதாக பாதிக்கப்பட்ட பெண்களில் மன நிலையாக மாறி வந்திருக்கிறது.

(ஆண் ஆளுமை) சமூகத்தில் பெண்கள் மீது பழிபோட்டு அவர்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் சமூக சித்தாந்தமான 'கற்பு நெறி' தூற்றி நல்ல மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினார் பெரியார். பாலியல் வன்முறைக்கு தான் உள்ளானதாக முறையிட்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்கிற மதவாத சட்டங்கள் முசாரப் ஆட்சிக்கு முன்புவரை கூட பாகிஸ்தானில் அமுலில் இருந்ததாம், இதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர முடியாமல் போனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுமாம். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் முறையிட்டு, நான்கு சாட்சிகள் இல்லை என்கிற காரணத்தால் 80 விழுக்காட்டுப் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் முஷ்ரப் ஆட்சியின் போது விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு நூலில் படித்தேன். பெண்கள் தனித்து வெளியே போகக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் இருந்த அந்த காலத்தில் சாட்சியோடு பாலியல் வன்முறைக்கு வாய்ப்பு இருந்திருக்கலாம், இன்றைக்கு பெண்களும் வேலைக்கு, வெளியிடங்களுக்கு செல்லும் போதும் பாலியல் வன்முறை செய்பவன் சாட்சி வைத்துக் கொண்டு செய்வானா ? இந்த ஷரியத் சட்டம் சரியானது தானா ? என்பதை இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நன்று.

சாதி பேதமற்ற சமூகம் அமைப்போம் என்று ஒரு சிலர் உண்மையேலேயே பேசினாலும், சாதி பற்றாளர்களின் புதிய சித்தாந்தம் என்னவென்றால் சாதி அமைப்பு சரியானதே, பின்னால் வந்தவர்கள் அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிட்டார்கள், அதை சரி செய்துவிட்டால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதாக கூறிவருகிறார்கள். நான் சாதிவெறியர்கள் பற்றி குறிப்பிடவில்லை, சாதிவெறியர்களின் சித்தாந்தம் சாதி கடவுளால் படைக்கப்பட்டது, விதிப்பயனால் அவன் உயர்ந்த அல்லது தாழ்ந்த சாதியில் பிறக்கிறான், சாதியைத் தாழ்த்தி வைப்பதும், உயர்த்திச் சொல்வதும் ஏற்றத்தாழ்வை போற்றும் ஆண்டவனின் ஏற்பாடு என்கிறார்கள். ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள் என்பதை இஸ்ரேலிய யூதர்கள் என்றுமே சொல்லிவருவார்கள், அதே போல் பார்பனர்களின் பலர் 'ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள், அதாவது பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள்' என்கிற சித்தாந்ததை நம்புகிறார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்கள் சமூக ஏற்றத்தாழ்வை என்றுமே ஆதரிப்பவர்கள், அவர்களுடைய கருத்துக்கள் படி ஒரு பொதுச் சமூகம் என்றுமே உருவாகிவிட முடியாது, உருவாகக் கூடாது என்பதும் அவ்ர்களின் எண்ணம், அதனால் சாதிவெறியர்களின் சாதி குறித்த சிந்தாந்தம் மிக வெளிப்படையானது என்பதால் அதனை பேசுவது பயனற்றது, அவர்களை மாற்றவும் முடியாது.

அடுத்து சாதிப் பற்றாளர்கள், இவர்கள் அவ்வளவு தீவிரமாக சாதிவெறி கொண்டிருக்காவிட்டாலும் இவர்கள் சாதிக்கு ஆதரவாக கூறும் காரணங்களில் அடிப்படை சாதி ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டது என்றே நம்பினாலும் சாதிய சமூகத்தில் இருக்கும் ஏற்றதாழ்வு களையப்பட வேண்டும், சாதியை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் ஏற்றத்தாழ்வை கடவுள் திணிக்கவில்லை, மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் ஏற்றத்தாழ்வை அதில் நுழைத்துவிட்டார்கள் என்பதே அவர்களின் சாதி குறித்த பார்வையாக இருக்கிறது.
இவர்கள் சொல்லுவது நல்லெண்ண அடிப்படையில் என்றாலும் இவர்களும் சாதி அமைப்புகள் தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், சாதியற்ற சமூகம் அமைத்தால் அவரர்களுக்கான பண்பாடுகள் தொலைந்துவிடும் என்பதாக இவர்கள் அலறுகிறார்கள்.

சாதி முட்களின் மீது சமூக சீலையை உளர்த்திய பின், சேலை கிழியாமல் அதை எடுக்க முடியுமா ? உயர்வு தாழ்வு அற்ற சாதி அமைப்பு வேண்டும் அல்லது சாதிகளில் ஏற்றதாழ்வு தேவை இல்லை என்பது எந்த காலத்திலும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? "சாதி சொல்லி தாழ்த்துவது" என்பது சாதிகள் இருந்தும் உயர்வு தாழ்வு அற்ற சமூகத்தால் சாத்தியப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். 'என் சாதிக்காரனை அடிச்சிட்டான் அந்த சாதிக்காரன்' என்கிற நிலமை ஏற்படாமல் இருக்க சாதி உயர்வு தாழ்வு பாராட்டாத சாதிய சமூகத்தால் ஏற்படுத்திவிடமுடியுமா ? சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இனக்குழுக்கலாக மாறிவிடும் என்பதைத தவிர்த்து, சாதி அமைப்பு முறையில் ஏற்றதாழ்வுகளை மட்டுமே அகற்றுவதால் வேறெதுவும் நிகழ்ந்துவிடாது.

சாதி அமைப்பு சரியானது, அதில் (சாதிய) ஏற்றத் தாழ்வு தேவை இல்லாதது என்ற கூற்றுகள் என்னைப் பொருத்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியாதும், என்றுமே சமூக மாற்றத்திற்கு எந்த ஒரு பயனையும் ஏற்படுத்தாத கூற்று ஆகும். உதிரங்களும் உறுப்புகளும் தேவைப்படும் போது பல்வேறு சாதிகள் என்று நம்பப்படும் மக்கள் ஒருவருக்கொருவர் தேவையின் காரணமாக மாற்றிக் கொள்ளும் இந்த காலத்தில் கண்ணுக்கு தெரியாத வலையாக நம்மீது பின்னப்பட்டு இருக்கும் சாதி என்கிற மாயவலையே தேவையற்றது.

‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’ - இன்றைய தேதியில் சாதி பற்றிய பல்வேறு தரப்பினரின் எண்ணங்கள் பற்றி பதிவர் நண்பர் ஆழியூரான் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

Read more...

கலவை 19/நவ/2009 !

Thursday, November 19, 2009

மாவீரர் நாள் நெருங்குவதை ஒட்டி தமிழகத்தில் குறிப்பாக கருணாநிதியிடம் இருந்து சோக கீதம் எழுகிறது. அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம், தவிர்த்திருக்கலாம் என்று அப்துல்கலாம் போன்று கடந்து போனதற்கு அறிவுரை வழங்கிக் கொண்டு இருக்கிறார். சண்டை முடிந்ததாக அறிவித்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன, தமிழர்கள் இன்னும் குடியமர்த்தப்படவில்லை, இலங்கை அதிபருடன் விருந்து சாப்பிட்டு வந்த திருமாவளவன் உள்ளிட்டவர்கள் ஏப்பம் விட்டதுடன், இலங்கை அரசுக்கு எந்த ஒரு நெருக்கடியும் கொடுக்காமல் இருந்துவருவதைப் பார்க்கும் போது, இவர்கள் இலங்கை அரசின் நிலைப்பாடு அந்த நாட்டின் உள்விவாகாரம் என்ற அதே நிலையில் தொடர்கிறார்கள் என்றே நினைக்க வைக்கிறது. இருந்தும் இழவு வீட்டு ஒப்பாறியை காலம் கடந்து வைப்பதால் யாருக்கு பயன் என்று தெரியவில்லை. மாவீரர் நாள் நெருங்குவதை வைத்து அது குறித்து தகவல்களை கேட்க ஆவலுடன் இருக்கும் மக்கள் குழுக்களின் கவனம் ஈர்க்கும் முதல் துண்டு விரிப்பு என்பதைத் தவிர்த்து இந்திய, தமிழக தலைவர்களின் முகாரி எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்க முடிகிறது. ஈழவரலாறு, ஈரவரலாறு, உறைந்த இரத்தம், இரத்தமும் சகதியும் என்கிற புதிய புதிய தலைப்புகளில் நூல் எழுதி அதை வெளியிட்டு அவ்வப்போது மூக்கு சிந்திக் கொள்வதை பார்ப்பதற்கும் நமக்கும் சகிப்பு தன்மை மிகுதியாகவே இருக்கிறது.

*****

சச்சினும் தேசபக்தியும் பட்டிமன்ற தலைப்புகள் போல் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது, வினவு குழுவினர் சச்சின் பிராண்டிங்க் (Branding) பற்றி புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள். ஒவ்வொருவர் தேசப்பக்திக்கும் பின்னால் இருக்கும் கதைகள் அட போட வைக்கிறது. ஈவேரா சுதந்திர நாளை கருப்பு தினமாக அறிவித்தார், எனவே அவர் தேச தூரோகி என்பது போல் இணையம் இலவசமாக மறைவாகவும் இருக்கிறது என்கிற வசதியில் சிலர் பெரியாரைத் தூற்றி வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்பது போல் அவற்றை எடுத்துக் கொள்ளலாம் தவறே இல்லை. பெரியார் வாழும் காலத்திலே விமர்சனங்களை விரும்பியவர் தான். அண்மையில் டி.ஞானையா எழுதிய 'இஸ்லாமும் இந்தியாவும்' என்ற நூலை வாசித்த போது ராஜாஜி, மூதறிஞர் என்றெல்லாம் புகழப்படுகின்ற இராஜகோபால் ஆச்சாரியார் பற்றி எழுதி இருந்தார், காந்தியும், நேருவும் வெள்ளைக்காரர்களை வெளியேற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப் போவதாக அறிவித்து ஆச்சாரியாரிடம் ஆதரவு கேட்ட போது அதற்கு ஆதரவு தர மறுத்தவர் ராஜாஜி என்று குறிப்பிட்டு இருந்தார். ஏடி ஞானையா தரவுகளுடன் தான் அதனை எழுதி இருந்தார்

*****

சீன தயாரிப்புகள் பற்றி பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்துவரும் வேலையில் 2012 படத்தில் உலக அழிவையே தாங்கும் சக்தி படைத்ததாகவும், அது சீன எல்லையில், சீனத் தயாரிப்பாகவும் மிகப் பெரிய கப்பலைக் இறுதிக்காட்சியில் காட்டுகிறார்கள். சீன அரசு படத்திற்கு பொருளுதவி செய்திருக்கும் என்று மலேசியா குடியுரிமை உள்ள சீன நண்பர் தெரிவித்தார். எங்கும் சீனா எதிலும் சீனா, மலையாளி டீக்கடை போல் உலகமெங்கும் சீன தயாரிப்புகள். மீண்டும் கம்யூனிசம் சீனாவின் மூலம் வலுப்பெறுமோ ? :)

*****

அமெரிக்காவில் பிடிபட்ட லஷ்கர் இ தொய்பா ராணா நடிகைகளுடன் தொடர்பு என்று செய்தி தாள்களில் மிகுதியாக பரப்பரப்பு பரப்பப்படுகிறது. நடிகைகளுடன் தொடர்பை மட்டும் ஏன் செய்தியாக்கவேண்டும், அவனுக்கு அரசியல்வாதிகளிடமும், முறைகேடாக விசா பெற்றது என அரசு அலுவர்களிடமும் கூட நெருங்கிய தொடர்புகள் இருப்பதாகவும் செய்திவருகிறதே. நடிகைகளிடம் தொடர்பை ஏன் மற்றவற்றைவிட விளம்பரப்படுத்த வேண்டும் ? முன்பு கூட தாவூத் இப்ராமுடன் நடிகைகள் தொடர்பு என்று பரபரப்பு கிளப்பினார்கள். வசதி மற்றும் அழகாக இருக்கிறார்கள் என்பதால் பெண்களுக்கு எதிராக பரபரப்பு கிளப்புவதால் அவர்களிடம் பணம் பறிக்க முடியும், முடிந்த அளவுக்கு அவர்களை மிரட்டி மிரட்டி பாலியல் இச்சைகளள தீர்த்துக் கொள்ளமுடியும். இதைச் செய்பவன் பத்திரிக்கைகாரனாகவும் இருக்கிறான், அரசு அதிகாரத்திலும் இருக்கிறான். ராணாக்கள் ஒருமுறை தான் நடிகைகளைப் பயன்படுத்தி இருப்பார்கள். மற்றவர்கள் ?

*****

இன்று உலக கழிவறைநாள் (டாய்லெட் தினம் என்று தினமலரில் குறிப்பிட்டு இருந்தார்கள், வடமொழியில் சவுச்சாலய திதி ? :). 'இருக்க' இடமும், உடுக்க உடையும் மனிதருக்கும் மிகத் தேவை. இந்தியாவின் வசதிக்குறைவில் நான் முதன்மையாக கருதுவது பொதுக்கழிவறைகள். இருப்பவைகள் அனைத்துமே தூய்மை இன்மை, மக்கள் தொகைக்கு ஏற்ற அளவில் இல்லா பற்றாக்குறை. பெரிய நகரங்களில் இருக்கும் கழிவறைகளில் கெட்டநாற்றத்தையும் பொருட்படுத்தாத பாலியல் தொழில். கழிவறை பற்றி முன்பு எழுதிய இடுகைகள்
இரட்டை விரல் ...
கலைகளின் உறைவிடம் ...

Read more...

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP