பின்பற்றுபவர்கள்

17 ஆகஸ்ட், 2022

FeTNA வாங்கிய குட்டு

FeTNA எனப்படும் வட அமெரிக்க தமிழ் சங்கம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது, இந்த அமைப்பு அங்குள்ள தமிழர்களுடன் இணக்கமாக இருக்கவும் தாய் தமிழ்நாட்டுடன் தொடர்பை காக்கவும் உருவாக்கப்பட்டது, தொண்டு நிறுவனமாகவும் செயல்படுகிறது, அங்கு நடைபெறும் ஆண்டுவிழாக்களில் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு தமிழறிஞர்களை, திறனாளர்களை அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் பயணத்திற்கான அவர்களது முழுச் செலவையும் ஏற்று, அழைத்து பேச வைப்பது, நிகழ்ச்சி படைப்பது வழக்கம். இது அங்கு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும், இணைய தளமும் செயல்படுகிறது.

அங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் கல்வெட்டு என்கிற பலூன் மாமா என்ற நண்பர் அண்மையில் அந்த இணைய தளத்தை பார்வையிட்ட போது அதிர்ச்சி அடைந்தார். நண்பர் முற்போக்கானவர், தமிழ் அறிவியல் என்ற பெயரில் அந்த அமைப்பு வெளியிட்ட நூல் இணைய பக்கத்தில் இருக்க, அதைப் படித்தும் மிகுந்த கவலைக்குள்ளானார். 

வாட்சப் பார்வேர்டுகளாக வரும் இந்து புராணக் கதைகளை அறிவியலுடன் தொடர்புபடுத்தும் கற்பனையாக எழுத்தப்பட்டவை தமிழ் அறிவியல் என்ற பெயரில் புத்தகமாக்கி வெளியிட்டுள்ளனர். இதனை படிக்கும் அங்குள்ள இளையர்களுக்கு எந்த ஒரு ஆய்வும், அறிவியில் அமைப்புகளில் சான்றிதழோ பெற்றிருக்காத வெறும் கற்பனையாக எழுதப்பட்ட இந்த சோடிப்புகள் இளையோர் மூளையை மழுங்கடிக்கவோ செய்யும். அதை விரும்பியவர்கள் படிக்கட்டுமே உங்களுக்கென்ன ? என்று கேட்டால், ‘இந்து அறிவியல்’ என்ற பெயரில் எதையாவது கடை விரித்தால் யாரும் கேட்கப் போவதில்லை, ஆனால் ‘தமிழ் அறிவியல்’ என்ற பெயரில் இந்து புராணக் கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசி கடைவிரிப்பது கண்டனத்துக்கு உரியதே. இதே போல நாங்களும் தமிழர்கள் தமிழில் மொழியில் எழுதப்பட்ட சீறாப் புராணத்திலும் (இஸ்லாமிய நூல்), தேம்பாவனியிலும்  (கிறித்துவ நூல்) அறிவியல் உள்ளது, அதையும் ‘தமிழ் அறிவியல்’ என்றே கருத வேண்டும் என்று கூறினால், அந்த நூலை எழுதியவர்கள் ஏற்பார்களா ? தமிழமைப்புகள் மதச் சார்பு அற்ற அமைப்புகள் அதில் கள்ளத் தனமாக ஒரு மதம் சார்நத நம்பிக்கையை நுழைப்பது ஏற்கத் தக்கதல்ல.

நண்பர் கல்வெட்டு அதை கவனத்திற்கு கொண்டுவர, நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் அந்த அமைப்புத் தலைமைகளில் ஒருவரான பாலா சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க, அந்த நூலை இணையத் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க நடவெடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். 


தாய்த் தமிழ் ஒன்று, தமிழர்கள் பின்பற்றும் மதங்கள் வேறு வேறு. இந்த புரிதல் இல்லாமல் தமிழுடன் மதம் சார்ந்த (சொந்த) வாட்சப் குப்பையை தமிழ் மீது கொட்டுவது கண்டிக்கத் தக்கதே. விரைந்து செயல்பட்டோருக்கு பாராட்டுகள்



7 ஜூலை, 2017

பதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்

நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்போதும் நம்மை துறத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரை விரைவாக பிடித்துவிடுகிறது, ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பின் தொடர்கிறது, பலருடன் நடந்தே சென்று ஒரு நாள் கை கொடுத்து அணைத்துக் கொள்கிறது. மரணத்திற்கு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை, அதற்கு எவ்வளவு நம்மை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதைப் பொருத்து நம் வாழ்நாள், இந்த ஓட்டத்தினூடாகத் தான் நாம் பல்வேறு உணர்ச்சிகள், குற்ற உணர்ச்சிகளோடு, ஆணவம், எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஓடுகிறோம், நம்மோடு சேர்ந்து அவைகளும் மறைந்து போகின்றன, பின்னர் வேறு பலரின் நினைவுக்குள் மட்டும் அவர்கள் இருக்கும் வரை வாழ்வோம், அதுவும் நமக்கு தெரியாத ஒரு வாழ்க்கை, நம்மால் உணரமுடியாத வாழ்க்கை.

*****

பித்தனின் வாக்கு என்ற பெயரில் பதிவு எழுதும் சுதாகர் சிங்கையில் இருந்து அவற்றை எழுதினார், பதிவர் சந்திகளில் நேரடி அறிமுகம் கிடைத்தது, அவரது சமூகம் சார்ந்த கருத்துகளில் எனக்கு ஏற்பு இல்லை என்றாலும், நகைச்சுவை பதிவுகள், துணுக்குகள், சமையல் பற்றி அவர் எழுதியவை சுவையானவை. நேரில் பழகுவதற்கும் இனியவர், சிங்கையில் ஈராண்டுகள் (2008-2010) பணிபுரிந்தார், பின்னர் சென்னைக்கு திரும்பி கல்பாக்கத்தில் தங்கி, நாள் தோறும் பைக் பயணமாக சென்னையில் வேலை பார்த்து வந்தார், நான் சென்னை வரும் போது அழைத்துப் பேசுவார், எப்போதும் முக நூலில் தொடர்பில் இருப்பார்,  உடன் பிறந்த உறவுகள் தவிர்த்து அவருக்கு தனிக்குடும்பம் இல்லை. ஒண்டிக்கட்டைத்தான் 

3 மாதம் முன்பு பணித் தொடர்பில் சிங்கை வந்திருந்தார், தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன், இரண்டு நாட்கள் இருந்தார், முதல் நாள் மாலையும் அடுத்த நாள் மாலையும் சந்தித்துப் பேசினேன், ஒத்தையாளாக இருக்கிங்க சேமிப்பு கையிருப்பு வைத்துக் கொள்ளுங்கள், முடிந்தால் சொந்தமாக சிறிய வீடு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன், கொஞ்சம் சேமிப்பு இருக்கு ஆனா வீடு வாங்கும் அளவுக்கு இல்லை, முயற்சிக்கிறேன் என்றார்.

நாள் தோறும் கல்பாக்கத்தில் இருந்து 40 நிமிட பைக் பயணம் செய்து வேலை செய்கிறேன் என்றார், இந்த வயதில் 40 நிமிட பயணம் நல்லது அல்ல, முடிஞ்ச அளவு சென்னையில் தங்கி வேலை பார்க்கலாமே என்றேன், தனிமையில் இருப்பதைவிட அண்ணன் வீட்டில் வசிப்பது மன நிறைவாக உள்ளது, அண்ணன் மகளுடன் பொழுது போகிறது என்றார்

புறப்பட்ட நாளில் விமான நிலையத்திற்கு டாக்சி பிடித்து அனுப்பினேன் போகும் போது மொபைலை தவறவிட்டுச் சென்றார், ஒருவழியாக டாக்சி ஓட்டுனரை தொடர்ப்பு கொண்டு திரும்ப போனைப் பெற்று அடுத்து சிங்கை வந்த வேறு நண்பர் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தேன், பெற்று கொண்டு நன்றி தெரிவித்தார் 

அவர் சிங்கையில் இருந்து போன பிறகு ஒருமுறையாவது திரும்ப வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்ததை நிறைவேற்றிக் கொண்டது போல் தெரிகிறது கடந்த அந்த இருநாள் பயணம், சிங்கையில் முன்பு பார்த்து, பார்க்க விரும்பிய கோயில்களை பார்த்து , சாப்பிட விரும்பிய உணவு கடைகளில் சாப்பிட்டு வந்ததாக சொன்னார் வேறு/மாறுபட்ட கருத்துகள் எனக்கும் அவருக்கும் இருந்தாலும் ஒரு வயது தான் வேறுபாடு என்றாலும் என்னை மரியாதையுடன் அழைத்து பேசுவார் 

நேற்று (06/ஜூலை/2017)அவரது உறவினர் அவர் மறைவு குறித்து முகநூலில் பகிர்ந்தது என் பார்வைக்கு டைம்லைனில் வந்தது, மாரடைப்பில் உயிர் பிரிந்ததாக குறிப்பிட்டு இருந்தனர், மேற்கொண்டு தகவல்கள் எதுவும் இல்லை

அவர் தற்போது இல்லை என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. பதிவுலகம் மூலமாக அவரை அறிந்தவர்கள் தொடர்பு கொண்டவர்களுக்கு தகவலாக இதனை இங்கு பதித்துள்ளேன்

நண்பரின் ஆன்மா அமைதியடையட்டும்
மார்ச் 2017ல் சிங்கை வந்திருந்த போது எடுத்தப்படம்

22 அக்டோபர், 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பற்றி !

பொதுவாக பாலியல் என்றாலே நம் சமுகம் முகம் சுளிப்பதால், உடல் உறுப்புகள் நூறு விழுக்காடு சரியுள்ளவர்களாலும் முழுதாக புரிந்து கொள்ள இயலாதவை பாலியல் தேவை, அவைபற்றி பருவ வயது ஆண்களுக்கு சொல்லித் தரத்தேவையில்லை, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை என்பதே நமது சமூக நிலைப்பாடு, மாற்றுத்திறனாளிகளை மன அளவில் ஏனையோரைப் போல் தான் நடத்தவேண்டும் என்பதையே நாம் கற்றுக் கொண்டு அவர்களுக்காகக்கான தேவைகளை அமைத்துதருவது தான் அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று புரிந்து கொள்ளவே நமக்கு இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆகுமோ ?

ஆனால் மாற்றுத்திறனாளுக்கும் பாலுறவு வேட்கை உண்டு, அவற்றைப்பற்றிய தெளிந்த அறிவு, அவைகளுக்கான வடிகால் ஏற்படுத்தித்தருவது, அதற்கான பயிற்சிவகுப்புகள் (Sexuality for Disabilities) என்று ஐரோப்பியர்கள் எங்கேயோ சென்றுவிட்டார்கள், இன்னும் நாம் 'உன்னால முடியாத ஒன்றிற்கு ஆசைபடுவதே தவறு, விதி, முன்பிறவி வினை' என்றெல்லாம் கூறிக் கொண்டு அதற்கான சிந்தனைகளையே மறுக்கிறோம், நம்மைப் பொறுத்த அளவில் மாற்றுத்திறனாளியை விரும்பி மணம் செய்து கொள்பவர்களை தியாகி என்ற அளவில் உயர்த்தி வைப்பதுடன் மாற்றுத்திறனாளிகள் குறித்த சிந்தனையை வளர்க்க விரும்பவே மாட்டோம், எனது கல்லூரிக்கால நண்பர் ஒருவர், இளம்பிள்ளை வாதத்தில் கால்களில் ஒன்றில் திறனும் போதிய வளர்ச்சியும் இல்லாமல் வளர்ந்தவர், திருமணம் ஆகும் முன் 26 வயதில் அவரிடம் பேசும் போது 'எனக்கெல்லாம் எங்கேருந்து திருமணம் ? யாராவது உறவுக்காரர்கள் மனது வைத்து பெண் கொடுத்தால் உண்டு, அதற்கு நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும்...' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார், பின்னர் அவருடைய உறவுக்காரர்கள் பெண் கொடுத்து அவருக்கு நல்ல உடல் நலத்துடன் ஆண்குழந்தை பிறந்து வளர்ந்துவருகிறது.

எதற்காக அவரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால், யாராவது மனது வைத்தால் என்ற அளவில் தான் உடல்குறையுற்றோரின் குடும்ப வாழ்கையும் பாலியல் தேவைக்கான தீர்வும் கிடைக்கும், அனைவருக்கும் உடலில் இரத்தம் ஓடுவது போன்றே அவர்களுக்கும் பாலியல் தேவைகள், வேட்கைகள் இருக்கும், தயக்கங்கள் காரணமாக பெற்றோர்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களுக்கான அமைப்புகள் ஏற்பட்டால், அதன் மூலம் பாலியல் வேட்கையை தனித்துக் கொள்வது (தன்னின்ப வழி) அல்லது கட்டுபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி, உடலை வருத்திக் கொள்ளாமல் எளிய முறையில் எந்த கோணத்தில் (Positions) அவர்களுடைய வாழ்கை துணையுடன் உறவில் ஈடுபடலாம் என்பற்கான விளக்கங்கள் அல்லது செயற்கை பாலியல்கருவிகள் பற்றி அறிதல் , கூச்சத்தை ஒழித்து குறிப்பாக நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் அவர்களை அதுபோன்ற அமைப்புகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம்  தான் அவர்கள் ஏனையோரைப் போல் மனத்தடை இன்றி வாழமுடியும்.

15 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில யாகூ குழுமங்களில் (Yahoo Groups / Geo cities) Disabilities and Sexuality பற்றி நிறைய தகவல்கள், இணையப்பக்கங்கள் பேசின, ஆனால் அவைபற்றி இன்னமும் கூட நமது சமூகம் பெரிதாக அக்கறை கொண்டது போலவே தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் பெரிய மூட நம்பிக்கைகளில் ஒன்று எதையும் விதி என்று நம்பி அவற்றைப் பற்றி சிந்திக்க மறுப்பது தான், உடல்குறையுற்றோர்களுக்கு கண்டிப்பாக தனியறையும் தனிமையும் ஏனையோரை விடத் தேவையானதே. உடற்குறையுற்றோர் ஆணோ பெண்ணோ  திருமணமே அவர்களுக்கு கிட்டாத போது அல்லது அவர்கள் விரும்பாதபோது செயற்கை பாலியல் கருவிகள் (Sex Toys) அவர்களுக்கு கிடைக்கும் படி கடைகள் உருவாகவேண்டும், தற்காலத்தில் இணையம் வழி வாங்கிக் கொள்ள வசதிகள் வந்துவிட்டன ஆனாலும் இந்தியாவில் அவற்றை வாங்கிப்பயன்படுத்துவதற்கான தயக்கங்கள் நீங்குவதற்கு மாற்றுத்திறானிகள் அல்லாத பிறர் ஊக்கப்படுத்தினால், கூச்சங்களை கடந்து அவர்கள் வாங்கிப்பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்னும் கூட மணமாகாத விதவைகள் என்ற அளவில் மாற்றுத்திறானிகளை வைத்திருப்பதற்கும் நாம் தான் வெட்கப்பட வேண்டும்.

ஓரின சேர்கையாளர்களை அங்கீகரிக்காததால் அவர்கள் பேருந்து நிலைய கழிவறையில் அவர்களுகான ஆட்களைப் பிடிப்பது போல் மாற்றுத்திறானிகளின் பாலியல் தேவைபற்றி நாம் நினைக்க மறுத்தால் தவறான நபர்களை அவர்கள் நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்

தைவானில் தன்னார்வ குழுவொன்று கைகள் அற்றவர்களுக்கு சுய இன்பம் செய்துவிடுவதை தொண்டாகக் கொண்டுள்ளனராம், நம்மைப் பொறுத்த அளவில் அது முகம் சுளிக்கக் கூடிய செயல், ஆனால் அந்த சேவைகிடைக்கும் மாற்றுத்திறனாளிகளை பொருத்த அளவில் அந்த தொண்டூழியர்களின் கைகள் கடவுளின் கைகள், பாலியல் வேட்கை தீர்வு என்பதைவிட எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பை உணர்கிறார்கள், மனித மலத்தை அள்ள வைப்பதை முகம் சுளிக்காமல் அதுவும் ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்ட நம் சமூகம் இவற்றையெல்லாம்  அருவெறுப்பாக பார்ப்பதே நகைமுரண் தானே ?

வட இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பயிற்சி வகுப்புகள், அமைப்புகள் உண்டு, தென்னிந்தியாவில் ஏற்பட்டது போல் தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்

இணைப்புகள்:



http://workshop.sexualityanddisability.org/category/workshops/
http://www.sexualityanddisability.org/
https://en.wikipedia.org/wiki/Sexuality_and_disability
http://marius.sucan.ro/propaganda/sex-without-prejudice/

11 செப்டம்பர், 2016

முடவனும் கொம்புத் தேனும்...!

சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எண்ணிப் பாருங்கள், நான் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன், மனிதாபிமானம் / மனிதர் மீதான அன்பு என்ற கோட்டைத் தொட இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிகுதி, ஒரு சில தனிநபர்கள் மனிதாபிமான மிக்கவர்கள், அவர்கள் நாட்டின் பின்புலத்தால் வழிகாட்டலால் அவ்வாறு இல்லை, இயல்பிலேயே அவ்வாறு உள்ளவர்களாக இருக்கக் கூடும். எதோ ஒரு தனிமனித மனிதாபிமானச் செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதை நாட்டிற்கு பொதுவானதாக காட்டுவதற்கு / எடுத்துக் கொள்வது இயலாத ஒன்று, இதே கூற்றைத் தான் சாதி / மத ஆர்வமிக்கவர்கள் குறித்தும் நான் கூறிவருகிறேன், அதாவது ஒரு சாதியில் / மதத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் அது அந்த சாதி / மதத்தின் அடையாளமன்று, அது அவனின் தனித்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ அவனோ / அவனைச் சார்ந்தவர்களோ அதை சாதி மதப் பெருமையாக அடகு வைத்து அவனை முன்னிறுத்தி சாதி / மதத்தின் பிழைகளை மறைக்க முயல்கிறார்கள்.

*****

பொதுவாகவே இந்திய மனநிலையில் / மதவாதிகளின் மனநிலையில் ஊனம் என்பது கடவுளின் தண்டனை / முற்பிறவியில் செய்தவினை என்று பார்க்கப்படுவதால் குறிப்பிட்ட உடற்குறையுற்ற நபரின் இல்லத்தினர் தவிர்த்து உறவினர் உள்ளிட்ட ஏனையோர் ஏளனமாக பார்ப்பதும், பிணக்குகளின் போதும் 'அதான் உனக்கு/உன் குடும்பத்திற்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கானே, தெரிந்துமா ஆடுறே...?' ஒற்றை கேள்வியில் கூனிக்க்குறுக வைப்பர்.

உடைந்த பொருள்கள் என்றாலே அபசகுணம் என்று உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதைப்புடன் அதனை வீட்டில் இருந்து வெளியேற்றுவர், கடவுள் சிலை என்றாலும் உடைந்த்தால் அது குப்பைத் தொட்டிக்குத் தான், உடற்குறையுற்றோர் / திருநங்கைகள் எந்த இனக்குழுவிலும் / சமூகங்களிலும் உண்டு, ஆனால் இவர்களை பெருமைப்படுத்தும் புராணக் கதைகளோ, கடவுள் உருவங்களோ, மதரீதியான கதைகளோ சொல்லப்பட்டதே கிடையாது, இவர்களைப் பொருத்த அளவில் உடற்குறை என்றாலே அவமானம், அதனால் தான் குருடர்களை பார்க்க வைப்போம், முடவர்களை நடக்க வைப்போம் என்ற அற்புதங்கள் இங்குண்டு என்ற ரீதியிலெல்லாம் மதங்களை வளர்க்கிறார்கள், முடவர்களை பாதிரி ஆக்குவோம், முடவர்களை புரோகிதர் ஆக்குவோம், பார்வையற்றவரை இமாம் ஆக்குவோம் என்றெல்லாம் இவர்கள் என்றுமே கூற மாட்டார்கள், அவர்களைப் பொருத்த அளவில் 'ஊனம்' இறைவனின் தண்டனை, ஒருவேளை இறைநாடி இருந்தால் அவன் ஊனமில்லாது பிறந்திருக்கக் கூடும் என்றே அவர்கள் நினைக்கின்றனர்கள். மதங்கள் உடற்குறையுற்றோரையும் உங்களைப் போன்ற மனிதர்களாவே கண்ணியமாக நடத்துங்கள் என்று கூறவில்லை. ஒருவேளை கூறி இருந்ததால் அவர்கள் சமூகத்தில் தனித்து நடத்தபடமால் இருந்திருக்கக் கூடும்.

கைவிடப் பெற்றோர் தவிர்த்து உடற்குறையுற்றோர்கள் அனைவரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தங்களுக்கான வசதிகள் இல்லை, தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று தான் கூறிவருகின்றனர், ஊனமுற்றோர் தங்களின் மீது பரிதாபம் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதில்லை, எங்களால் என்னவெல்லாம் முடியும் என்று புரிந்து கொண்டு எங்களுக்கான வழிவகைகள் செய்துதரவேண்டும் என்று தான் கேட்கிறார்கள், அது உரிமை அல்ல, அரசுகள் பொது நிறுவனங்கள் செய்ய மறந்ததைத் தான் கேட்கிறார்கள்.

******

நான் சென்று வந்த நாடுகளில் உடற்குறையுற்றோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதில்லை, அவர்கள் வெளியே சென்றுவரும் வகையில் அரசுகள் பேருந்து வசதிகளில் அவர்கள் ஏறுவதற்கும், அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து தருகிறது, அனைத்து பேருந்துகளிலும் சர்கரநாற்காலி ஏறக்கூடிய வசதி உண்டு, ஓட்டுநர் சாய்தளம் அமைத்து அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருவார். உடற்குறையுற்றோருக்கான கைப்பிடிகளுடன் கூடிய மின்தூக்கி வசதிகள் உண்டு, பார்வையற்றவர்கள் மின்தூக்கி மற்றும் தொடருந்துகளை பயன்படுத்த அவர்கள் பாதங்கள் உணரக்கூடிய தனிப்பட்ட ஒற்றையடி பாதைகளை அமைத்திருப்பார்கள், யாருடைய உதவியுமின்றி அவற்றின் தடத்தை மிதித்துக் கொண்டே மின் தூக்கி அல்லது ரயில் கதவுகள் இருக்கும் இடத்தின் அருகே வந்துவிட முடியும், குறிப்பாக கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைகள் உள்ளது போலவே உடற்குறையுற்றோருக்கு தனி கைப்பிடிகளுடன் கூடிய கழிவறைவசதிகள், அதனுள் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அழைப்பு பொத்தான்களும் இருக்கும்.

ஆனால் இந்திய மனநிலையில் உடற்குறையுற்ற ஒருவர் வீட்டில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாலும், 'உன்னால தான் முடியலையே, நீ எல்லாம் எதுக்கு இப்படி ஆசைப்படுறே, எங்களையும் ஏன்படுத்துறே...'ன்னு பட்டென்று சொல்லிவிடுவார்கள், இதுக்கு காரணம் நாம காலம் காலமாக உடற்குறையுற்றோர் குறித்து கேட்டுவந்த பழமொழிகள் தான், உடல்குறையுற்றோர்கள் என்றால் மற்றவர்கள் போல் அவர்கள் ஆசைகள் வைத்திருக்கக் கூடாது, இதுதான் தலைப்பு 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ?' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ?' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா ? எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு ? தேன் சாப்பிடுவது நாக்கு தானே...?

கண்ணு தெரியாத கபோதி... கவனக்குறைவாக உள்ளவரை திட்டுவதற்கு அவருக்கு இல்லாத ஒரு உடல் குறையை ஏளனாமாக பயன்படுத்துகிறோம், செவிடன் காதில் ஊதிய சங்கு > காதுகேளாதவர் என்று தெரிந்தும் சங்கு ஊதிப்பார்ப்பவன் தானே மடையன், காதுகேளாதவருக்கு சங்கின் ஒலி ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ? சொன்னதை செய்யாதவர்களை இழிக்க செவிடன் காதில் ஊதியது / ஓதியது என்று சொல்வது என்று ஊனமுற்றோர்களை ஒழிங்கினக் குறியீடுகளாகவே நாம் கேட்டுவந்திருக்கிறோம், அதனால் நம் மனநிலையில் அவர்களை நம்மில் ஒருவராக பொதுவானவர்களாக பார்க்கவே முடியவில்லை.

வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சாதிப்போம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே தாண்டலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தங்கவேலு, தங்கவேலுவின் சாதனை மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதுடன், அவர்கள் யார் உதவியுமின்றி வெளி இடங்களுக்கும் சென்றுவரும் வசதி வாய்ப்புகளை பெருக்கித்தரும் என்று நம்புகிறேன். 

உடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழிகளையும் ஒழித்து அவர்களை தலை நிமிர செய்வோம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்