பின்பற்றுபவர்கள்

8 செப்டம்பர், 2013

மூணு கோடு தெரிஞ்சா ! (சிறுகதை மாதிரி) !

என்கூட வேலை பார்த்த நண்பர் ஒருவர், திருமணம் ஆகி இரண்டு ஆண்டு ஆகியது, திருமணம் ஆன புதிதில் அரபு நாட்டுக்கு (கணிணி) வேலைக்கு சென்றவர், உடன் மனைவியை அழைத்துச் செல்ல போதிய சூழல் அமையாததால் ஒரு ஆறுமாதம் அவர் மட்டும் வேலை பார்த்துவிட்டு பின்னர் ஒரு முகவர் வழியாக சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தார், இங்கு சிங்கையில் சுமார் ஒராண்டு வேலை பார்த்துவிட்டு நான் பணிபுரிந்த நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த பிறகு என்னுடன் அறிமுகமானார், வயது வேறுபாட்டால் என்னை அண்ணன் என்று தான் அழைப்பார், பிறகு சிங்கைக்கு மனைவியை அழைத்து வருவதாக சொல்லி அழைத்து வந்து தங்கி இருந்தார். ஓரளவு என்னிடம் தனது சொந்த வாழ்க்கை விவரங்களையும் சொல்லுவார், ஆலோசனை கேட்பார். நம்மீது மதிப்பு மரியாதையும் வைத்திருக்கிறார் என்பதால் நானும் ஆலோசனைகளை (இலவசம் என்பதால்) வாரி வழங்குவதுண்டு.

"அண்ணே.....இந்த மாசமும் பெயிலியர் ஆகிப் போச்சுண்ணே......கலியாணம் ஆகி இரண்டு ஆண்டு ஆச்சு.......எல்லோரும் கேக்க ஆரம்பித்துவிட்டார்கள்' என்று தன் மனைவிக்க்கு இன்னும் குழந்தை உருவாகவில்லை என்று வருத்தத்துடன் சொல்லுவார்.

"எல்லாத்துக்கு நேரம் வரனும், ஆரோக்கியமான உடல் இருக்கும் போது  ஏன் கவலைப்படுறிங்க, பதட்டப்படாமல் உங்க வேலையை சரியா பாருங்க.......எல்லாம் நடக்கும் போது நடக்கும்.......இது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை, சாதாரண காம சூத்திரம்... 99 விழுக்காட்டினருக்கு பெரிசா முயற்சி எடுக்கும் படி இயற்கை சோதிக்காது...எல்லாம் நேரக் கணக்கு மட்டும் தான்...இந்த மாசம் சரியா அமையவில்லை என்றால் அடுத்த மாதம்......என்னமோ கலியாணம் ஆகி 10 வருசம் ஆன மாதிரி கவலைப்படுறே.......இப்பதான் நீங்க இரண்டு பேருமே நீண்ட நாள் கூடவே இருப்பது போல் அமைச்சுருக்கு.....வேலையைப் பாரு...நல்லது நடக்கும்' என்று சற்று நகைச்சுவையாக சொன்னேன்.

"உங்க வாக்கு பலிக்குணும்ணே" என்றார்

நானும் அவரும் இணைந்து வேலை பார்த்தது என்னவே வெறும் இரண்டு மாதங்கள் தான், நான் அந்த வேலையை விட்டு வந்த பின்னர், ஒரு நாள் எனக்கு அழைத்துச் சொன்னார்

"அண்ணே......10 நாள் தள்ளிப் போச்சு.......இன்னிக்கு டாக்டரிடம் கூட்டிப் போகிறேன்......எல்லாம் நல்ல செய்தியாக வரும்' னு நினைக்கிறேன்.

"நல்வாழ்த்துகள், இங்கே யாரும் சொந்தக்காரங்க கிடையாது, நீ தான் நல்லா பார்த்துக் கொள்ளனும்" என்றேன்

அடுத்த நாள் அலைபேசியில் அழைத்து

"கன்பார்ம் ஆயிடுச்சிண்ணே, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.......உங்க வாய் முகூர்தம்" என்றார்

"நல்லது, நல்வாழ்த்துகள், சாயங்காலம் தினமும் மாலையில் நடக்க கூட்டிச் செல், சத்தானதெல்லாம் வாங்கிக் கொடு, ஆசைப் பட்டதெல்லாம் வாங்கிக் கொடு..நீயும் கொஞ்ச நாளைக்கு ..........சும்மா இரு"

"புரியுதுண்ணே, தாங்க்ஸ்" என்றார்.

அதன் பிறகு 10 நாளுக்கு ஒருமுறையாவது பேசுவார், ஐந்து மாதம் ஓடியது, ஒரு நாள் அழைத்து

"அண்ணே.......ஸ்கேனிங்க்ல பொம்பள புள்ளைன்னு சொல்லிட்டாங்க.......என் பொண்டாட்டி அழறா"

(எதிரில் இருந்திருந்தால் கண்டிப்பாக திட்டி இருப்பேன். அவரு கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதால்)

"....ம் மூணு கோடு தெரிஞ்சா இது கண்டிப்பாக இராமன் இல்லை......சீதா லட்சுமி  உனக்கு பிறக்கப் போறா ....ஏன் உனக்கு பொம்பள புள்ளை புடிக்காதா ?"



"என் உள் மனது எனக்கு முதலில் ஆம்பள புள்ளை தான் சொன்னது.......ஸ்கேனிங்கில் மூணு கோடு தெரியுது அதனால் பொம்பள புள்ளைன்னு சொல்றாங்க......ஸ்கேனிங்க் தப்பாகாவும் காட்டும் தானே......மாற வாய்ப்பு இருக்கா......உங்களுக்கு சொன்னதெல்லாம் சரியா இருந்துச்சா"

"யோவ்.....எந்த குழந்தையாக இருந்தால் என்ன ? என்னமோ 10 புள்ளை பெத்து அது அத்தனையும் பொட்டப் புள்ளையாக ஆனது போல் புலம்புறே....."

"இல்லண்ணே என் உள் மனசு....."

"இங்கெல்லாம் ஸ்கேனிங் ரிசல்ட் மாற வாய்பே இல்லை, குழந்தை பாக்கியமே இல்லைன்னு 10 - 15 ஆண்டு தவம் இருக்கிறவங்கெல்லாம் இருக்காங்க, உன்னை மாதிரி ஆளுங்க....முதலில் குழந்தை உண்டாகலனு புலம்புவிங்க அப்பறம் நடந்த பிறகு உங்க விருப்பு வெறுப்ப எதிர்ப்பார்ப்புன்னு நிறைய வச்சிக்குவிங்க.....ஊரான் பொம்பள புள்ளை பெத்தா நீங்க கட்டிகுவிங்க...... நீங்க பெத்துகனும்னா....கசக்குதா ?"

"இல்லண்ணே என் மனைவி தான் அழறாங்க...முதலில் ஆண் குழந்தைண்ணா.......அடுத்து ஆணோ பெண்ணோ பிரச்சனை இருக்காதில்லே.......?"

(என்ன கொடுமை சாமி இது ஆண்குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தையே பிறந்தால் பிரச்சனை இல்லையாம், அதாவது இரண்டு குழந்தையும் ஆணாகவே இருந்தால் பிரச்சனை இல்லையாம்....இரண்டும் பெண்ணா பிறந்தால் மட்டும் தான் பிரச்சனையாம்)

"முதலில் நீ அது போல் நினைப்பது தவறு, பசங்க தான் பெற்றவர்களை நட்டாற்றில் விட்டுறானுங்க, இந்தகாலத்து பொம்பளை புள்ளைங்க மாமியார் மாமனாரை விரட்டிவிட்டு தன்னோட அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கிறாங்க"

"சரிதான்.......ஆனா என் மனைவி ஆம்பள புள்ளை பிறக்கனும் தான் ஆசை பட்டாங்க"

"நீ அவங்கள என்ன பாடுபடுத்தினியோ இதே மாதிரி தனக்கும் ஒரு பெண் பிறந்து படனுமான்னு அவங்க நினச்சிருக்கலாம்.....இல்லேண்ண ஒரு பெண்ணே தனக்கு பொம்பள புள்ளை பிறக்கக் கூடாதுன்னு நினைப்பாங்களா ?"

"நான் ஒண்ணும் படுத்தல, நான் தான் அவளை சமாதானம் பண்ணி வச்சிருக்கேன்"

"ஆம்பள புள்ள தான் வேணுனு நினைக்கிறே......அது பிறந்து ஒரு வேளை உடல் குறைபாட்டோடு பிறந்துட்டா மகிழ்ச்சியாக இருக்குமா ? (சற்று கடுமையாகவே) பிறக்கும் பொழுது சரியாக ஆணாக பிறந்து வளர்ந்த பிறகு இரண்டும் கெட்டானாக போனால் இதுக்கு எனக்கு பொம்பள புள்ளையே பிறந்திருக்கலாம்னனு நினைப்பே இல்லை ?"

"புரியுது......எனக்கு முதலில் பெண் குழந்தைதான், ஸ்கேனிங்கில்  மாறினாலும் மாறும்னு இனி நினைக்க மாட்டேண்ணே......ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்.......அடுத்தது ஆண்குழந்தை பிறக்கும்னு நம்புறேன்"

"அப்பாடா......முதல் குழந்தையை நல்லபடி பெற்றெடுங்க.......ஒரு இரண்டும் மூணு ஆண்டுகள் ஆகட்டும்.....அப்பறம் கேள் ஆண் குழந்தைக்கு பெத்துக்க என்ன செய்யனும்னு.........எனக்கு தெரிஞ்சத விவரமாக சொல்றேன்"

********

பிகு : இத படிச்சுட்டு யாரும் தனி மின்னஞ்சல் அனுப்பி கடைசி பத்திக்கு என்னிடம் யோசனை கேட்க வேண்டாம். :)

2 செப்டம்பர், 2013

செவ்வாயோ வெறும் வாயோ !

மதப் புத்தகங்களுக்கு மாற்று விளக்கம் சொல்ல வேளை வந்துவிட்டது, பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படை மூலக் கூறுகள் பூமியில் இருந்ததற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை, அவை ஒருவேளை செவ்வாயில் இருந்திருக்கலாம் எனவே செவ்வாய் தான் உயிரின தோற்றத்தின் மூலமாக இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர், அறிவியல் கூற்றுகள் காலத்திற்கும் ஏற்றவை என்பதை அறிவியலே ஏற்றுக் கொள்வது கிடையாது, அறிவியல் கொள்கைகள், அறிவியல் கூற்றுகள் மாறக் கூடியது என்பதை அறிவுள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள், அதில் நானும் ஒருவன், எனக்கு செவ்வாய் தான் மூலமா, பவுத்திரமா ? என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் இல்லை. :)


ஏற்கனவே மதத்தையும் அறிவியலையும் கலந்து பேதிக்கு / போதிக்கும் மருந்தாக கொடுப்பவர்களுக்கு தான் இந்த கருத்துகள் அடுத்து என்ன செய்யலாம் என்று மண்டை குடைய வைத்திருக்கும். நானே சிலவற்றை எடுத்து தருகிறேன்.

இறைவன் ஆறு நாளில் உலகை படைத்தான் என்று போதித்த முந்தைய விளக்கங்களை இனி உலகம் என்றால் அம்மையப்பன் அம்மையப்பன் என்றால் உலகம் என்ற ரீதியில் உலகம் என்றால் செவ்வாயும் பூமியும், செவ்வாயும் பூமியும் என்றால் உலகம் என்று புது விளக்கம் அளிக்கலாம்.

அது சரி, களிமண்ணில் இருந்து மனிதனை உருவாக்கினார் என்பதை எப்படி சொல்வதாம் ? என்று கேட்போருக்காக, களிமண்ணால் மனிதனை படைத்தார், என்பது உண்மை தான் என்று கூறிவிட்டு, ஆனால் அதனை செவ்வாயில் இருந்து எடுத்த களிமண் என்பதை இப்போது தான் அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறுவீராக. ஆக மனிதனை (செவ்வாயில் இருந்து எடுத்த) களிமண் மூலமாக படைத்தான் என்று அடைப்புக் குறிக்குள் எழுதிவிட்டால் விளக்கமாகிப் போகும்.

இதுக்கெல்லாம் இந்து மதத்தினர் எளிய விளக்கம் கொடுப்பார்கள், எப்படி என்று கேட்கிறீர்களா ? கிருஷ்ணரின் பவளச் 'செவ்வாயில்' இருந்து தான் உலகமும் உயிர்களும் தோன்றியது என்பதை இந்து கூற்று மெய்பிக்கிறது என்பார்கள்.  படிச்சா செவ்வாய்க்கே செவ்வாய் தோஷம் ஏற்பட்டது போல் இருக்கா ?

:)

இணைப்பு:



மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்