பின்பற்றுபவர்கள்

27 செப்டம்பர், 2010

தியானம், தவம் !

தன்வயம் என்ற சொல் திரிபின் வடிவமே தவம் என்ற சொல் என்பதாக நினைக்கிறேன். தன் + திறன்(ம்) > தந்திரம், மன்(மனம்) + திறன் > மந்திரம் என்பதாக சொற்பிறப்பியல் அமைந்திருக்கிறது, இவை முழுக்க தூய தமிழ்ச் சொல்லென்றாலும் வடமொழியில் கடன் பெற்றவையோ என்பதான சொல் மயக்கத்தை ஏற்படுத்துவை தந்திரம், மந்திரம் என்ற சொற்கள். த்யான் என்ற சொல் தமிழில் தியானம் என்பதாக வழங்கப்படுகிறது என்றாலும் இவற்றிற்கான மாற்றுப் பொருள் தமிழில் மனப் பயற்சி என்பதாம். அதுபோன்று யோகம் என்பது உடற்பயிற்சியாகும், ஆசனம் என்பது தமிழில் உட்காரும் காலிகள் மற்றும் (உடல்) நிலை அமைப்பு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சம்மணமிட்டு அமர்தல் என்ற சொல் சம + அணம் அல்லது அணங்கு (கட்டுதல், சேர்த்தல்) என்ற பொருளில் கால்களை ஒன்றாக மடித்து உட்காரும் நிலையைக் குறிப்பதாகும். த்யான் (அ) த்யாணம் என்ற சொல்லின் பின்னொட்டான ஆணம் (பற்றுதல், கட்டுதல்) தமிழ் சொல்லாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். மனதைக் கட்டுதல், ஒன்றிணைத்தல் என்ற பொருள் கொண்டவையே தியானம் என்ற சொல்லின் பொருள்.

*****

புத்தர் தவமிருந்தார், 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்று கண்டு கொண்டார் என்பதாக புத்தர் பற்றிய வரலாறு மற்றும் சமூகக் கருத்தாக அறிந்து கொண்டிருக்கிறோம். புத்தர் வைதீக சமயவாதியாக இருந்திருந்தால், புத்தர் கடும் தவம் புறிந்த காரணத்தினால் ஈச்வரன் அவரின் முன் தோன்றி அவருடைய அறிவின் கண் திறந்து ஆசி கொடுத்தார் என்பதாக எழுதி இருப்பார். புத்தர் இறை மறுப்பாளரோ, ஏற்பாளரோ இல்லை என்பதால் விஷ்ணுவோ, சிவனோ அவருக்கு அருள்பாலிக்கவில்லை. நேற்று கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்து மதத்தின் எல்லா கடவுளும் ஏன் கனவில் மட்டுமே வந்து தனக்கு கோவில் கட்டச் சொன்னார்கள் ? நேரடியாக ஏன் ஒருவரும் வரவில்லை என்பதாகப் பேசினோம். நேரில் வந்தால் ஒருவேலை சிறைபிடித்து வேண்டிய வரங்களை அவ்வப்போது அடியார்கள் கறந்துவிடுவார்கள் என்கிற இறை அச்சமே காரணமாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் விட அனைத்து சக்தியும் மிக்க கடவுள் தனக்கு தானே கோவில் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பக்தனை கெஞ்சாமல் தானே பிறந்து வந்து தனக்கு கோவில் கட்டிக் கொள்ள முடியவில்லை என்பதையும் யாரும் எண்ணிப் பார்க்க அங்கே தெய்வ குத்தம் தடுக்கிறது. கடவுள் பற்றிய சிந்தனைகளில் கடவுள் பயத்தின் காரணமாகவே பலர் சிந்திக்க விரும்புவதில்லை, அது ஏன் தொல்லை நாம ஏதாவது நினைக்க அது தவறாகிப் போய் தண்டனை அடைந்துவிட்டால் ? என்கிற அடிப்படை பயமே இவற்றிற்கு காரணம். இவர்களில் ஒருவர் கூட எந்த ஒரு சமய நம்பிக்கைச் சாரந்தவருக்கும் பிற சமயங்களின் நம்பிக்கை கேலியும், கேள்வியும் மட்டுமே என்பதை சிந்திப்பதில்லை. அதாவது பிள்ளையாரைப் பற்றி கேள்வி கேட்க ஒரு இஸ்லாமியருக்கோ, கிறித்துவருக்கோ எந்த கடவுளும் தடைவிதித்து தெய்வக் குற்றம் ஆக்கிவிடவில்லை, கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் அது போல் இந்துக்களுக்கும் அல்லாவின் இருப்பில், ஏசுவின் இருப்பில் ஐயம், கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு தத்தமது மத நம்பிக்கைக்குள்ளான கேள்விகள் என்பது மட்டுமே பெரும்பாலும் இறை அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதை (எந்த ஒரு) நம்பிக்கையாளர்களும் நினைப்பதே இல்லை. ஒரு கிறித்துவர் இந்து சமய நம்பிக்கையை பலிப்பதை பொறுத்துக் கொள்ளும் (இந்துக்) கடவுள் எல்லாக் கடவுளையும் மறுக்கும் நாத்திகனை தண்டித்துவிடுவார் என்று கூட இன்னும் பலர் நம்புகிறார்கள். இவ்வாறான மதம் சார்ந்த இறை நம்பிக்கைகள் அனைத்துமே மடைமை, அறிவீனம் அல்லது பகுத்தறிவின்மை என்று சொல்வதில் நான் என்றுமே தயங்கியதே இல்லை.

குறிப்பிட்ட சில ஆன்மிகம் சார்ந்த இடங்களை குறிப்பாக பெத்லகேம், மெக்கா, வாடிகன், திருப்பதி, இமய மலை ஆகியவற்றை இறைவனின் இருப்பிடம் என்றே அம்மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இவை வழிப்பாட்டுத்தளங்கள் அதுவும் குறிப்பிட்ட மதத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. கடவுளின் நாடு கேரளா என்பதாக கேரளவாசிக்கள் சொல்லிக் கொள்வதைப் போன்றவையே அவை. உலகின் ஆன்மிக நாடு இந்தியா என்பதாக இந்துக்கள் சொல்வது போல், உலகில் அரசியல்வாதிகளின் நாடு (Country of Politicians) என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் :) அந்த அளவுக்கு இந்தியா பல்வேறு அரசியல் வாதிகளால் (உறிஞ்சப்பட்டு) பயன்படுத்திக் கொள்ளப்பட்டுவருகிறது (எழுத வந்தது வேறு, மன ஓட்டம் எங்கே செல்கிறது மன்னிக்கவும்)

மனம், சிந்தனை இவற்றின் அடைப்படையில் தான் செயல்கள் நடக்கின்றன. தவத்தின் பலனாக கிடைததது என்று சொல்வதெல்லாம் 'நாம் அதையே சிந்தனைசெய்து செயலாற்றியதன்' விளைவால் கிடைத்த நன்மை என்பதே பொருள். முன்னோர்கள் தவம் செய்து அதன் மூலம் வரமாக கிடைத்தவற்றையே 'வேதங்களாக' ஆக்கி வைத்தனர் என்று விளக்கம் (வ்யாக்காணம்) சொல்லுவர். தவம், தியானம் செய்வதால் வரம் எதுவும் கிடைகாது. சிந்தனை வளம் பெருகும், அதன் மூலம் சில ஐயங்களுக்கு விளக்கம் கிடைக்கும். இவைதான் மனப் பயிற்சியின் பலன்கள். எந்த ஒரு எழுத்தாளரும் முழுக்க முழுக்க யாருமே அறியாத தகவல்களை தந்துவிட மாட்டார்கள், பல்வேறு நூல்களின் படித்தவற்றில் மனம் விரும்பும், மார்கெட் (விற்பனைக்கு ஈர்ர்கும் தகவல் என்பதை நம்பி) செய்யக் கூடிய தகவல்களை அவர்கள் தொகுப்பார்கள், அந்நூலை அமைக்கும் வரை அவர்களுடைய மனம் அந்நூலை எப்படி சீராகக் கொண்டு செல்வது பற்றிய சிந்தனைகளில் இருக்கும். இது ஒருவகையான தவம், இது போல் இயக்குனர்கள், ஆராய்சியாளர்கள் ஆகியோரும் மனம் சார்ந்து மன ஒரு நிலையில் இருப்பர். இவற்றைத்தான் தவம் என்கிறார்கள். தவம் என்பது தன்வயத்தில் ஒத்த சிந்தனையில் இருப்பது, தியானம் என்பது அதனை வழிநடத்துவதற்கான செயல். ஒவ்வொரு படைப்பாளியும் தவம், தியானம் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி தியானம், தவம் என்ற சொற்களெல்லாம் சமய நம்பிக்கையில் சம்மணம் மிட்டு அமர்ந்திருக்கும் சாமியார்களின் நிலை பற்றியது மட்டுமே அல்ல. வடமொழி சொற்களாக, அலங்காரமாக நமக்கு படுவதால் அந்தச் சொல்லின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறோம், அவையும் செயல்கள் (verb) குறித்தான மற்றொரு சொற்கள் தான். நானும் இந்த இடுகை நிறைவுறும் வரையில் சிறு நினைவு தடங்கல் ஏற்பட்டிருந்தாலும் எழுதி முடிக்கும் வரை தியானமும், தவமும் செய்து கொண்டிருந்தேன் :)

எளிமையாகச் சொல்வதென்றால் ஒன்றைப் பற்றிய சிந்தனையும் செயலும் நல்ல விளைவுகளை தந்திருந்தால் நீங்கள் தவமும் தியானம் செய்து பலன் அடைந்திருக்கிறீர்கள் என்பதே.

23 செப்டம்பர், 2010

மானம் கப்பல் ஏ(ற்)றிய காமன் வெல்த் போட்டி !

உலக அளவிலான ஒலிம்பிக் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்தி முடித்தது, ஏழைகளை இருப்பிடங்களை விட்டுத் தூறத்தினார்கள், பெய்ஜிங்க் மக்களிடம் கடுமையாக நடந்து கொண்டார்கள் என்கிற வெளி நாட்டுத் தகவல்களை தவிர்த்து சீனா ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திமுடித்து ஐரோப்பிய நாடுகளின் விழிகளை விரிய வைத்தது.

காமன்வெல்க்த் போட்டிகளை ஏற்று நடத்துவதாக ஏற்பாடு செய்த இந்தியா பல்வேறு நாடுகளின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவருகிறது. துவக்கம் முதலே ஊழல் குற்றச் சாட்டுகள், தற்போது தரமற்ற கட்டுமானங்களினால் பாதுகாப்புக் கூரைகள் இடிந்துவிழவதும், மற்றும் விளையாட்டுவீரர்களுக்கான வசதிக் குறைபாடுகள் மற்றும் பாதுகாப்புக் குறைபாடுகளால் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, இங்லாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகள் காமன் வெல்த் போட்டிகளுக்காக தங்கள் வீரர்களை அனுப்பப் போவதில்லை என்று அறிவித்திருக்கின்றனர். காமன்வெல்த் போட்டியின் கண்காணிப்புக் குழுவும் இந்தியா வந்து போட்டி நடைபெறும் இடங்களை பார்த்து ஏற்பாடுகள் நிறைவாக இல்லை என்று அறிவித்துவிட்டன. வெளிநாட்டு ஊடக செய்திகளில் காமன்வெல்த் போட்டியின் குறைபாடுகளை கட்டம் கட்டிப் போட்டு இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றிவருகிறார்கள்.

தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சியில் இருக்கும் காங்கிரசு கட்சியின் கையாலகத்தனமாகவே இதனை கருதவேண்டி இருக்கிறது, வடகிழக்கில் நக்சல்களுடன் மோதல், காஷ்மீரில் பதட்டம், காமன்வெல்த் போட்டி நடைபெறும் இடத்திலேயே குண்டு வீச்சு என பாதுக்காப்பு தொடர்புடையவற்றில் காங்கிரசின் செயல்பாடுகள் எதுவும் பாராட்டுவிதமாக இல்லை. பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும், போட்டி ஏற்பாடுகளின் சொதல்பல்களையும் கருத்தில் கொண்டு பல நாடுகள் புறக்கணித்திருப்பதை நாம் தவறு என்று பார்க்க முடியவில்லை. பளுதூக்கும் அரங்கின் கூரையே இடிந்து விழுந்திருக்கிறது என்னும் போது இவர்களை நம்பி எந்த ஒரு நாடும் வீரர்களை அனுப்ப முடிவு செய்வார்கள் என்று நம்புவது நம் மடைமை.

இலங்கைப் போரில் சிங்கள இராணுவத்திற்கு உதவியதில் முனைப்புக் காட்டி தமிழர் அழிவுகளுக்கு அடிகோலியதன் சிறு பங்கை இந்திய நலனின் காட்டி இருந்தால் விளையாட்டுப் போட்டி நடத்தும் நாம் உலகின் முன்பு தலைகுணிந்து நிற்கத் தேவை இல்லை. வாரம் ஒருமுறையாவது மீனவர்கள் மீதான தாக்குதல்களும் தொடர்ந்தே வருகின்றன. இந்திய பாதுகாப்பும், இந்திய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாடுகளும் இராஜபக்சேவை திருப்திபடுத்தி இலங்கை வீரர்களாவது விளையாடவருவார்களா ? அல்லது இராஜபக்சே அரசும் இந்தியாவுக்கு பை பை காட்டுமா என்பது கேள்விக் குறியாக உள்ளது.

உணவு தானியம், பாதுகாப்பு, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காங்கிரசு அரசின் செயல்பாடுகள் மக்கள் நலன் சார்ந்ததாக, இந்திய நலன் சார்ந்ததாகவோ, பொறுப்பாகவோ இல்லை. எந்த ஒரு தனிப்பெரும்பான்மை பலமும் இல்லாத நிலையில் கூட்டணி என்ற பெயரில் ஆளும் காங்கிரசு ஆட்சியை கைப்பற்றியது தவிர்த்து எந்த ஒரு சாதனையும் செய்யவில்லை, ஏழைகளுக்கு இலவச செல்போனாம், எத்தனை ஆண்டுகளுக்கு ? ஒருவேளை ஏழைகளும் செல்போன் பயன்படுத்தி பழகிக் கொண்டால் இலவச செல்போன் திட்டங்களை களையும் போது பயன்படுத்தியவர்கள் எப்படியேனும் செல்போன் பயன்பாட்டை நாடுவார்கள், அதன் மூலம் தனியார் செல்பேசி நிறுவனங்கள் பெருத்த லாபம் அடையும் என்பதைத் தவிர்த்து வேறென்ன நடக்கும் ? கருணாநிதியில் இலவச தொலைகாட்சியைப் பெற்றுக் கொண்டோர் அவர் வாரிசுகள் நடத்தும் கேபிள் நிறுவனங்களுக்கு மாதக் கப்பம் கட்டிவருவது தானே நடந்துவருகிறது. அரசுகள் அறிவிக்கும் இலவசங்களெல்லாம் தனியார் லாபங்களை கருத்தில் கொண்டவையே.

கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணங்களை விளையாட்டு நடத்த செலவிட்டு, ஏற்பாடுகளை சரியாகச் செய்யாமல் நாட்டுமக்களை தலைகுனிய வைத்துவிட்டு, சின்னதம்பி படத்தில் 'எனக்கு கல்யாணம்......எனக்கு கல்யாணம்' என்பதாக காங்கிரசின் விளையாட்டுத் துறை அமைச்சர் செயபால் ரெட்டி 'எந்த நாடு புறக்கணித்தாலும் போட்டி வெற்றிகரமாக நடக்கும்' என்கிறார். போகிற போக்கைப் பார்த்தால் தெற்காசிய நாடுகள் தவிர்த்து எந்த ஒரு நாடும் கலந்து கொள்ளாதோ என்கிற அச்சம் தான் ஏற்படுகிறது. அதிலும் ஆழம் பார்க்க இலங்கை கழண்டு கொண்டால் வியப்பேதும் இல்லை.

17 செப்டம்பர், 2010

தனியார் பள்ளிகள் - என்ன நடக்குது தமிழ்நாட்டில் ?

தரமான கல்வி என்று கடைவிரித்த தனியார் கல்வி நிறுவனங்கள் இன்று தமிழ் நாட்டின் கல்வி அமைப்பை அக்டோபஸ் போன்று வளைத்தும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பெற்றோர்களின் பணத்தையும் உரிஞ்சும் அட்டைகளாக மாறிவிட்டன. முன்று ஊருக்கு 3 என்ற அளவில் இருந்த தனியார் பள்ளிகள் இன்று பெருகி மாநகராட்சி பள்ளிகளையே மூட வைத்துள்ளன. நான் படித்த மாநகராட்சிப் பள்ளிக் கூட மாணவர்கள் சேர்க்கையே நடைபறாததால் மூடப் பட்டுவிட்டது. நான் படிக்கும் காலத்தில் இருந்த தனியார் பள்ளிகளிலும் தரமான கல்வி என்பது கிடையாது என்பது அம்மாணவர்கள் என்னுடன் +2 படிப்பில் சேரும் போது தான் தெரிந்தது, அம்மாணவர்களைவிட அரசு பள்ளியிலேயே ஆங்கில வழியில் கற்றவர்கள் ஆங்கிலத்தில் நல்ல அறிவை பெற்றிருந்தனர். இதற்குக்காரணம் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி என்றாலும் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள் எவரும் +2 படிப்பை தாண்டாதவர்கள் என்பதும் அவர்களைத்தான் மிகக் குறைவான ஊதியத்தில் ஆசிரியர் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும் என்பது தனியார் பள்ளிகளின் தேர்வாக இருந்தது. ஆனாலும் அந்தப் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டில் செலவிடும் தொகையை ஒரு பெற்றோர் அரசு பள்ளி மாணவர்களின் 10 வகுப்பு படிக்கும் வரை கூட செலவிடலாம். ஏனென்றால் அரசு பள்ளிகளில் குறிப்பேடுகள் தவிர்த்து அனைத்தும் இலவசம், மேலும் ஆண்டுக்கட்டனம் மிகக் குறைவே. நான் படிக்கும் போது ஆண்டுக் கட்டணம் ரூபாய் இருபது, அதுவும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கிடையாது. தனியார் பள்ளிகளுக்கு தீனி போட முடியவில்லை என்பதால் என் பெற்றோர்கள் என் தம்பி தங்கைகளை 5 ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு அரசு பள்ளிகளில் சேர்த்துவிட்டனர்.

தற்போது என் தம்பி மகன்கள் தனியார் பள்ளியில் படித்து போது தான் தெரிந்தது அவர்கள் படித்த தனியார் பள்ளிகள் அரசு அங்கிகாரத்துடன் துவங்கி இருக்கவில்லை என்பதே, பிறகு வேறு வழியின்று வேறொரு பள்ளிக்கு மாற்ற வேண்டிய சூழல் உருவானது, ஐந்தாம் வகுப்புகள் முடிந்த பிறகு பழைய படி தம்பியும் மகன்களை அரசு சார்பு/ உதவி பள்ளியில் ஆங்கில வழி கல்வியிலேயே சேர்த்துவிட்டார். நகரங்களில் ஐம்பதற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேசன் கல்வி வழியாக சொல்லிக் கொடுக்கின்றனர். இருந்தாலும் அவற்றில் படிக்கும் மாணவர்களால் அரசு பள்ளி மாணவர்கள் பெரும் மதிப்பெண்களை பெற முடியவில்லை. மாணவர்களுக்கு டை கட்டி, காண்வெண்ட் சீருடைகள், சீரற்ற ஆங்கிலப் பேச்சு, அம்மாவுக்கு 'மம்மி' அப்பாவுக்கு 'டே(ர்)டி' இவைகள் தான் தனியார் கல்வி நிறுவனங்கள் வழியாக கிடைக்கும் வெகுமதிகள், இவற்றிற்கு செல்ல வாகனம் உட்பட பெற்றோர்கள் செலவழிக்கும் தொகை கிட்டதட்ட வருமானத்தில் கால் பங்கு, இவ்வாறு வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் தவிர்த்து பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் பிற வசதிகள் இவற்றிக்கு நன்கொடை என்ற பெயரில் ஆயிரக் கணக்கில் பெற்றோர்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது, இவற்றிற்கெல்லாம் முறையான கணக்கு வழக்குகளை பெற்றோர்களுக்கு கல்வி நிறுவனங்கள் கொடுப்பதும் இல்லை.

குழந்தைகளை (விதைத்து) வைத்து செய்யப் படும் இந்த தனியார் பள்ளி விவசாயங்களில் நட்டமென்ற பேச்சுக்கே இடமின்றி பல மடங்கு லாபமும் வசதிகளும் கூடவே பள்ளியில் தாளாளர், முதல்வர் என்கிற தகுதியும் அதனால் சமூக பெரும்பேறு (அந்தஸ்து) கிடைப்பதால் சாராயம் விற்றவர்களெல்லாம் கல்விக் கூடம் அமைக்கச் சென்றுவிட்டார்கள் என்பதும் உண்மை. அதற்காக பார்பன தனியார் கல்வி நிறுவனங்கள் தரமான கல்வியைத் தருவதாக நினைக்க வேண்டாம். அந்த கல்வி நிறுவனத் தொழில் கிடைக்கும் நன்மைகள் என்பதற்க்காக 'சாராயம் விற்பவர்கள்' என்று குறிப்பிட்டேன். மற்றபடி அந்த தொழில் குறிப்பிட்ட சமூகம் தான் செய்கிறது என்பதற்கு எந்த ஒரு புள்ளிவிவரம் கிடையாது. ப்ரவுசிங் செண்டர் எனப்படும் இணைய மையங்களைப் போல் தனியார் கல்வி நிறுவனங்களும் சாதிமதம் சாராது அனைத்து பிரிவினர்களாலும் நடத்தப்படுகின்றன, ஆனால் பார்பனர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் கூடுதல் கட்டணங்கள் என்பதுடன் அதனை 'ஆஸ்ரமம் அல்லது சேவை அமைப்பு' என்பதாக விளம்பரப்படுத்துவார்கள். (மற்றபடி) எந்த ஒரு தனியார் பள்ளிகளும் பலமடங்கு லாபம் எதிர்நோக்கி உருவாக்கப்பட்ட நிருவனங்கள் என்று சொல்வது பொருத்தமானது.

கல்வி கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்கிற் பெற்றோர் கோரிக்கைகளால் ஓய்வு பெற்ற கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு குறைக்கப்பட்டது, இதற்கு தனியார் பள்ளிகள் ஒப்புக் கொள்ளவில்லை. கொள்ளையில் பங்கு கேட்டாலும் பரவாயில்லை கொள்ளையே அடிக்கக் கூடாது என்பது கொடுமை அல்லவா என்பதாக அவர்கள் கோவிந்தராஜன் பரிந்துரைக்கு தடை ஆணையும் பெற்றுவிட்டார்கள். அந்த தடையை எதிர்ப்பு பெற்றோர்கள் முறையிட்டு போராட தற்போது தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக பள்ளிகளை மூடும் போராட்டம் அறிவித்துள்ளார்களாம்.

இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நெல்லையைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவியே முதல் இடம் பெற்றார். மார்கெட்டிங்க் டிமாண்ட் எனப்படும் சந்தை தேவை இருக்கும் வரை அதற்கான விலையும் மிகுதியாகவே இருக்கும் என்பதாக தனியார் பள்ளிகள் பணவேட்டை நடத்துகின்றனர். தனியார் பள்ளிகளின் கொட்டத்தை அடக்க பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிப்பதே சரியான முடிவு ஆகும்.

15 செப்டம்பர், 2010

வேதாளம் சொல்லாத ஆரிய மாயை !


நவீன இந்து மதம் என்பது பண்டைய ஆரிய மதத்தின் இன்றைய பெயர் வடிவம். வடமொழி இந்தி வடிவமாக மறைந்திருப்பதைப் போலவே ஆரிய வைதீகம் மதம் இந்து மதம் என்ற பெயரில் மறைந்திருக்கிறது என்பதை அதன் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள் வழியாக நன்கு தெரிந்து கொள்ளலாம். இந்திக்கும் இந்து மதத்திற்கும் அதனால் ஏற்படும் சீர்கேட்டிற்கும் சப்பைக் கட்டுபவர்கள் பெரும்பாலும் பார்பனர்களாக இருப்பதில் வியப்பேதும் இல்லை. பிற மக்கள் இனங்களை ஒப்பிடும் போது சிறிய அளவிலான மக்கள் தொகை என்றாலும் குயுக்தி அல்லது பஞ்ச தந்திரம் என்பதை அறிவுத்திறனாக கூறிக் கொண்டு ஆளுமைகளைத் தொடர்ந்துவருவதால் அண்ணா யூதர்களையும் பார்பனர்களையும் ஒன்றாகவே பார்த்தார். இன்றும் கூட யூதர்கள் மீது பார்பனர்கள் பலர் பெருமை கொள்வதை பார்க்கலாம். இன்னும் சில பார்பனர்கள் தாங்கள் ஆரியர் எனப்படும் ஹிட்லர் வம்சத்தை சார்ந்தவர்கள் என்பதாகவும் பறை சாற்றிக் கொள்கின்றனர். ஏனென்றால் யூதர் மற்றும் செருமானியர்கள் ஆளுமை மிக்கவர்கள் என்பதால் இந்த இரு இனங்கள் ஒருவருக்கொருவர் எதிரிகள் என்றாலும் பார்பனர்களைப் பொருத்த அளவில் இருவரும் பார்பனர்களுக்கு மாமா மச்சான்கள் தான்.

தமிழ் நாட்டைப் பொருத்த அளவில் பெரியார் மற்றும் அண்ணாவின் பெயரைச் சொல்லாமலோ 'திராவிடம்' என்கிற பெயரைச் சொல்லாமலோ எந்த ஒரு கட்சியும் இன்னும் ஓர் நூற்றாண்டுக்குக் கூட தனிப் பெரும்பான்மை பெற முடியாத நிலைதான். இந்த இருவர் மீதும் பார்பனர்கள் காண்டு கொண்டிருப்பதற்கு இதற்குமேல் தனிப் பெரும் காரணம் எதுவும் இருக்க முடியாது. பார்பன நலம் விரும்பும் கட்சி எனப்படும் காங்கிரசு கட்சியை தமிழக ஆட்சியில் இருந்து அகற்றியதால், பார்பன எதிர்ப்பில் (திராவிட) ஆட்சி அமைத்ததால் பார்பனர்களின் வெறுப்பு அண்ணா மற்றும் பெரியார் மீது தொடர்வதில் வியப்பே இல்லை. மத அடிப்படையில் பெரும்பான்மை சிறுபான்மை பிரிக்க இந்து என்ற சொல் மிகவும் வசதியாக இருப்பதால் மதவாத அரசியல் நடத்த முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்று பாஜக போன்ற மதவாதக் கட்சிகள் நாட்டின் உயரிய பதவியான பிரதமர் பதவி, ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை கைப்பெற்றும் நிலைக்குச் சென்று, விழித்துக் கொண்டோர்களின் சகிப்புத்தன்மையால் மீண்டும் இந்தியாவில் காங்கிரசு ஆட்சி என்னும் பேரவலமும் நடந்தேறிவருகிறது என்றாலும் அறுதிப் பெரும்பான்மையை மக்கள் காங்கிரசு வசம் தந்துவிட வில்லை என்பதால் இந்தப் பேய்களில் எந்தப் பேயால் ஆபத்துக் குறைவு என்கிற முடிவாகத்தான் இந்திய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

இந்தியாவில் இந்து மதம் சார்ந்த கட்சிகள் வளர்வதற்கு இந்துக்கள் மதவாதிகள் ஆனார்கள் என்று சொல்லமுடியாவிட்டாலும் இஸ்லாமியர்களின் மத ஈடுபாடு , ஊடகங்களின் இந்து சார்பு நிலைகள் அந்தக்கட்சிகளுக்கு வாய்ப்புகளைத் தேடித்தந்திருக்கின்றன. இந்தியா என்ற நாடு மத அடிப்படையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் பிரிந்தது என்னும் போது எஞ்சி இருப்போரின் மத உணர்வுகள் தாம் இந்து என்ற உணர்வை அவர்கள் பெறவதையும் பிரிந்தவர்கள் மறைமுகமாக அதை விதைத்துச் சென்றிருக்கின்றனர் என்பதை மறுக்கலாகாது. இவைதான் இந்தியாவில் மதம் சார்ந்த சக்திகள் தலை எடுப்பதற்கு காரணம். இதைத் தவிர்த்து இந்தியர்கள் மதங்களின் மீது ஆழ்ந்த பற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது, எல்லாம் சூழலால் ஏற்படும் (எதிர்) வினையே. பல்வேறு மொழிகள் பேசும் மாநிலங்கள் இந்தியா என்று சொல்லப்படுவதைப் போலவே பல்வேறு சமய நம்பிக்கைகளை இந்து மதம் என்று சொல்கிறோம் என்பது தவிர்த்து பார்பன இந்து சமய நம்பிக்கைகள் ஒட்டுமொத்த இந்துக்களின் நம்பிக்கை என்பது வெறும் பரப்பல் தான். உண்மையில் சொல்லப் போனால் பார்பன நான்கு வேதங்களில் காணப்படும் நம்பிக்கைகள் சடங்குகள் எல்லாம் என்றோ சிதைந்து போய்விட்டன. நிலம் சார்ந்த தெய்வங்களுக்கு பூணூல் அணிவித்து புராணம் எழுதி அவற்றை வேதகால தெய்வங்களாகக் காட்டி பார்பனர்கள் பிழைப்பு நடத்திவருகின்றனர். பார்பனர்களின் முழுமுதல் கடவுளான இந்திரன், சோமன் உள்ளிட்டோர் என்றைக்கோ முதன்மை வழிபாட்டில் இருந்து மறைந்துவிட்டார்கள். நிலம் சார்ந்த தெய்வங்கள், சிறு தெய்வங்கள், நாட்டார் தெய்வங்கள் ஆகியவற்றைத்தான் பார்பனர்களும் ஆராதனை செய்துவருகின்றனர்.

பெரியார், அண்ணா இராமனை பழிப்பதைவிட பல மடங்கு இந்திரன் புராணங்களில் பழிக்கப்பட்டு இருகின்றான், உடலெங்கும் பெண் குறி பெறக் கடவது என்பதாக சபிக்கப்பட்டு இருக்கிறான். இந்திரன் ஒரு காம வெறியன் என்பதாகவே புராணங்களில் வழியாக பழிக்கப்பட்டு இருக்கின்றான்.

மெட்ராஸ் மாகானம் என்ற பெயரை தமிழ் நாடு என்று மாற்றியதில் அண்ணாவின் பங்கையாராலும் மறக்க முடியாது. கருணாநிதி பேசுவதைவிட பல மடங்கு இலக்கிய சுவையுடன் பொருளுடன் பேசக் கூடியவர் அண்ணா. ஆட்சி அதிகாரம் என்றால் அடிப்படை கொள்கை சீரழிந்துவிடும் என்பதால் கட்சியாக மாறாமல் இருந்த பெரியார் கொள்கைகளை, ஆட்சி அதிகாரம் பெற்றால் மட்டுமே நடைமுறை படுத்த முடியும் என்று பெரியாரிடம் இருந்து பிரிந்து தனிக்கட்சி கண்டு வெற்றிபெற்றவர் அண்ணா. இன்றைக்கும் அண்ணாவின் பெரியாரின் கொள்கைகளின் தேவை என்பதற்கு காரணங்கள் வேண்டுமானால் இல்லாது போய் இருக்கலாம், இதன் காரணமாகவே திராவிடக் கட்சிகளும் தமக்குள் உடைந்து நீர்த்து போய் இருக்கலாம். ஆனால் இன்றைய நிலையை வைத்து அண்ணாதான் தமிழ் நாட்டைக் கெடுத்துவிட்டார் என்று சொல்வது எவ்வளவு கீழ்த்தரமான செயல் என்பதை இங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை இந்தியாவில் தலித்துகள் அனைவருமே சமநிலை பெற்ற பிறகு அம்பேத்கார் என்பவர் சாதிவெறியை தலித்துகளிடம் தூண்டினார் என்று எழுதினால் அது போன்ற அபத்தம் இருக்க முடியுமா ? அண்ணா பற்றி எழுதுபவர்கள் அப்படித்தான் எழுதுகிறார்கள்.

தமிழ் ஹிந்து கட்டுரைக்கு வரிக்கு வரி மறுப்பு எழுத நான் திராவிடக் கட்சிகளின் தீவிர தொண்டனும் இல்லை. பார்பன ஆதிக்கத்தை ஒழித்தவர்கள், மூட நம்பிக்கைகளை சாடியவர்கள் என்பதால் அண்ணா மற்றும் பெரியார் மீது எனக்கு ஆழ்ந்த பற்றுதல்கள் உண்டு. பெரியாரைப் போல் முற்றிலும் இறைமறுப்புக் கொள்கை என்பதாக இல்லாமல் மூட நம்பிக்கைகளை மட்டுமே தாக்கியவர் அண்ணா என்பதை நான் அவரது சொற்பொழிவுகள் மற்றும் நூல்களின் வாயிலாக அறிந்து கொண்டேன். ஒண்றே குலமும் ஒருவனே தேவனும் என்கிற திருமந்திர வரியை அண்ணாவும் பரப்பினார்.

அண்ணாவை கிண்டல் செய்வது அவமானப் படுத்துவதாக கட்டுரை எழுதிய இணைய தளம் மாடு படம் ஒன்றைப் போட்டு அதன் பின்பக்கம் பணமூட்டைகள் கொட்டுவதாகப் போட்டு படம் இருக்கிறார்கள். அந்தப்படத்தைப் பார்த்தால் மாட்டுச் சாணத்தை திருநீராக்கி பசுமாடுகளின் பின்பக்கத்தை பணம் காய்க்கும் மரமாக்கியவர்கள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். பிறரைப் பற்றி சொல்வதெல்லாம் தன்னையும் சுட்டும் என்று அண்ணா சொன்னதை உணராதவர்கள் போலும் இவர்கள். இது தான் ஆரிய மாயை என்பதா ?

அண்ணா என்ன செய்தார் ? பார்பன தமிழ் இந்துக்கள் பார்பனர்களின் ஒருவரான ஜெயலலிதாவே நன்கு சொல்லி இருக்கிறார்.

கருணாநிதி போல் சொல்ல வேண்டுமென்றால் 'அண்ணா பல்கலைகழகம், அண்ணா சாலை, அண்ணா விமான நிலையம், அண்ணா பொது நூலகம், அண்ணா நகர் என தமிழக எங்கெங்கும் இருக்கும் அண்ணாவின் பெயரை ஒரு கேவலமான திரிப்பு கட்டுரைமூலம் கெடுத்துவிட முடியும், அகற்றிவிட முடியும் என்று நினைக்கும் சிறுமதியர்களின் செயலைக் கண்டு நாமெல்லாம் நகைக்கலாம்'

13 செப்டம்பர், 2010

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா !

ஒருவார இடைவெளியில் திரையுலக நட்சத்திரங்களான நடிகர் முரளியும், பாடகி ஸ்வர்ணலதாவும் திரையுலகையும் திரை இசை இரசிகர்களையும் விட்டு மறைந்துவிட்டனர்.

காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தில் மிகவும் இனிமையான பாடல் ஒன்று 'வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா' என்ற பாடல், இந்த பாடல் காட்சி படி கவுசல்யா ஒரு திருமணத்திற்கு வருவார் என்று நண்பர்கள் சொல்ல, அந்த திருமண ஊர்வலத்தில் பாடகராகச் சென்றால் கவுசல்யாவை பார்க்க முடியும் என்பதால் முரளி ஒத்துக் கொண்டு பாடச் செல்லுவார்.

கவுசல்யாவின் குரலை மட்டும் அறிந்தவராக படத்தின் இறுதிவரை காட்சிகளை அமைத்திருப்பார்கள். படத்தின் ஒளிப்பதிவு தங்கர் பச்சான். தங்கர்பச்சான் முரளி மீது மிகவும் அன்பு கொண்டவர், முரளியின் இறுதி சடங்குகளின் போது துக்கம் தாளாமல் மயங்கி விழுந்தாராம்.

மெற்கண்ட பாடலைப் பாடியவர்கள் ஆண் குரலுக்காக எஸ்பிபியும் பெண் குரலுக்கு ஸ்வர்ணலதாவும் மிக நன்றாகப் பாடி இருப்பார்கள். தேவாவின் இசையில் பாடல் நன்றாகவே அமைந்திருந்தது. கிளாரிநெட், ட்ரம்ஸ் என ஊர்வலப் பாடல்களின் இசையில் கேட்க சலிக்காத பாடல், படம் வெளியான பிறகு மூன்று ஆண்டுகள் வரையிலும் கூட அந்தப் பாடல்களை ஊர்வல இசைகளில் அடிக்கடி கேட்க முடிந்தது.

பாடல் காட்சியின் போது பாடகியாக நடிப்பவர் இடையில் தாகத்திற்காக சோடக் குடிப்பதாகவும் உடனேயே பெண் குரலில் தொடரவேண்டிய நிலையில் முரளியே குரலை மாற்றிப் பெண் குரலில் பாடுவதாக அமைந்தப் பாடல். சொர்ணலாதாவின் உருவத்தை ஒத்த ஒரு துணை நடிகை படத்தில் பாடலை பாடிவருவார். முரளி பெண் குரலில் பாடுவதாக அமைந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல். பாடியது ஸ்வர்ணலதாவாக இருந்தாலும் முரளியின் அந்த நொடி நடிப்பு அவரே அதைப் பாடுவதாக ரசிகர்களை உணரவைத்தது.

'ஆட்டமா தேரோட்டமா ?' சொர்ணலாதாவை அடையாளப்படுத்தியதைப் போன்றே ரம்யா கிருஷ்ணனின் இடைகால மீள் வரவையும் அந்தப் பாடல் பெற்றுத்தந்தது. தொடர்ந்து சித்ராவின் பாடல்கள் வெளிவந்த காலங்களில் சொர்ணலதாவின் குரல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன் பிறகு அவர் பாடிய அத்தனை பாடல்களும் இனிமையாக அமைய எல்லா முன்னனி இசை அமைப்பாளர்களிடம் ஸ்வர்ணலதா பாடி வந்தார்.

'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' போன்ற சோகப்பாடல் மட்டுமில்லாது மிகவும் விரைவான 'மாயா மச்சீந்திரா மச்சம் பார்க்க வந்தாயா' போன்ற பாடல்களிலும் தனி முத்திரையை பதித்தார்.

பூந்தோட்டத்தில் எந்தப் பூ அழகு என்று இனம் காண முடியாதது போலவே பாடகியில் இவர் இனிமையான குரலுக்கு சொந்தமானவர் என்பதாக நான் பாடல்களை ரசிப்பதில்லை, என்பதால் எல்லாப் பாடகிகளைப் போலவே ஸ்வர்ணலதாவும் இனிமையான குரலுக்குச் சொந்தகாரராகவே எனக்கு பட்டார். எந்த ஒரு தென்னிந்திய பாடகியும் தமிழில் பாடுவதன் மூலமே பெரும் புகழடைகிறார்கள் என்பதை ஸ்வர்ணலதாவும் நிருபணம் செய்துவிட்டார். மலையாளி என்றாலும் கூட ஒரு தமிழ் பாடகியாக தமிழ் மண்ணில் சென்னையில் இறுதி மூச்சை விட்டு தமிழ் பாடகியாக மறைந்திருக்கிறார் என்பதால் தமிழ் திரை இசை இருக்கும் காலம் வரை ஸ்வர்ணலாதாவும் போற்றப் பட வேண்டிய ஒருவர்.

ஸ்வர்ணலாதவின் குரலில் இனி புதிய பாடல்கள் கிடைக்காது என்று நினைக்கையில் மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. திரை இசை நுகர்வாளன் என்ற முறையில் ஸ்வர்ணலாதாவின் மறைவில் மிகவும் வருத்தம் அடைந்துள்ளேன்.

முரளியும் ஸ்வர்ணலாதவும் முத்திரை பதித்து விட்டுச் சென்ற பாடல், யூடியுபில் கேட்டு பாருங்கள்.

9 செப்டம்பர், 2010

அடுத்தவாரத்தில் பற்றவைக்கப்படும் கலவர திரி !

செப் 11 நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்பு நினைவு நாளில் அமெரிக்காவில் (GAINESVILLE, Fla) ஒரு உள்ள ஒரு தேவாலய பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் இஸ்லாமியர்களின் இறைவாக்கு என்று போற்றப்படும் திருகுரானை எரிக்கப் போகிறாராம். இது குறித்து அமெரிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எவ்வளவோ கேட்டுக் கொண்டும், பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் தனது திட்டமிட்ட முடிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருக்கிறார். குரான் எரிப்பு நிகழ்வு திட்டமிட்டபடி நடந்துவிட்டால் அதன் பிறகு ஏற்படும் படுகொலைகளை, கலவரங்களை யாராலும் தவிர்க்க தடுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

டென்மார்க் செய்தித்தாள் ஒன்றில் முகமது நபி குறித்து கேலிச்சித்திரம் வெளி இடப்பட்டதற்காக பெரும் கலவர சூழல் ஏற்பட்டு, பிறகு சம்பந்தப்பட்ட செய்த்தித்தாள்களும் அரசும் மன்னிப்பு கேட்ட பிறகு அடங்கியது. கலவரங்கள் நடக்கலாம், அப்பாவி உயிர்கள் பறிக்கப்படலாம் என்பதை பாஸ்டர் டெர்ரி அறியாதவர் இல்லை. இருந்தாலும் தற்போது பாதுக்காப்பில் இரும்பு பெட்டமாக இருக்கும் அமெரிக்காவினுள் எதுவும் நடக்காது தடுக்கப்படுவிடும் என்று நம்புகிறார் போலும். அமெரிக்கா தவிர்த்து பிற நாடுகளில் இந்நிகழ்ச்சியின் எதிர்வினையாக மூளும் கலவரங்கள் குறித்து அவர் அலட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. பொதுவாக மதவாதிகள் அனைவருமே 'இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் கிடைக்கட்டும்' என்பதை சமயக் கூட்டங்களில் மட்டுமே சொல்லுவார்கள், வெளியில் அவ்வாறெல்லாம் நடந்து கொள்ளமாட்டார்கள், முடிந்த வரையில் மாற்று மதத்தினரை புண்படுத்தி, கிளறிவிட்டு குளிர்காய முடியுமா என்று மட்டுமே நினைப்பார்கள், அப்படி ஒருவராகத்தான் பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் என்பவர் தெரிகிறார்.

பொதுவாக மெதடிஸ் மற்றும் பெந்தகோஸ், புரோட்டஸ்டாண்ட் கிறித்துவ சபைகளை வழிநடத்துபவர்கள் பாஸ்டர்கள் எனப்படுவார்கள், கத்தோலிக்க கிறித்துவத்தில் அருள் தந்தை அல்லது சகோதரர் என்று சமயப்படிப்பு மற்றும் பயிற்ச்சி நிலைக்கேற்ப பட்டம் வைத்திருப்பார்கள், குரானை எரிப்பதாக அறிவித்தவர் கத்தோலிக்கம் சாராத கிறித்துவ அமைப்பைச் சார்ந்தவர். ஆனால் அவருக்கு எதிராக வன்முறையில் இறங்குபவர்கள் தாங்கள் தாக்குவது எந்த பிரிவு கிறித்துவர்களை என்றெல்லாம் ஆராயமல் கத்தோலிக்கப் பிரிவு உட்பட அனைத்து கிறித்துவ பிரிவுகளையும் தாக்குவர். இந்தியாவில் இந்துத்துவாக்கள் கூட புரோட்டஸ்டாண்டை சேர்ந்தவர்களை கண்டிப்பதாக நினைத்து கத்தோலிக்க கிறித்துவர்களை தண்டிப்பார்கள். பிறமதத்தினர்களுக்கு கிறித்துவத்தினுள் உள்ள பிரிவுகள் எதுவும் தெரியாது. டோனிப் ப்ளேயர் புரோட்டஸ்டாண்டில் இருந்து கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறி இருக்கிறார். நம்மைப் பொருத்த அளவில் அது நமக்கு செய்தி, கிறித்துவவர்களைப் பொருத்த அளவில் அவர்களுக்குள் மதமாற்றம். இவற்றை ஏன் சொல்கிறேன் என்றால் குரான் எரிப்பு நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றவோ கலவரத்தில் ஈடுபவ முனைபவர்கள் கண்ணுக்கு முன் மாதா கோவில் இருந்தாலும் அவர்களைப் பொருத்த அளவில் அது ஒரு கிறித்துவ சின்னமாகத்தான் தெரியும். இதையெல்லாம் அந்த அறிவு கெட்ட பாஸ்டர், அமெரிக்காவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு குரானை எரிப்பேன் என்று அறிவித்திருக்கும் பாஸ்டர் உணர்ந்தவன் இல்லை.


தீயின் பிறப்பு சின்ன உரசல் தான் அதன் பிறகு அதன் பரவல்களை கட்டுப்படுத்துவது எளிதே அல்ல. தீப்பெட்டிக்குள் உறங்கும் சின்ன தீக்குச்சி ஒரு காட்டையே அழிக்கும் ஆற்றல் மிக்கது என்பது நமக்கு தெரியும். ஆனாலும் நிலமை மோசமாகவும் வரை அதை நம்புவதற்குத்தான் நாம் தயாராக இருப்பது இல்லை. யார் கண்டது அடுத்த உலகப் போர் அந்த பாஸ்டர் டெர்ரி ஜோன்ஸ் உரசப் போகும் தீக்குச்சியின் முனையில் கூட உறங்கிக் கொண்டு இருக்கலாம். உரசப்படும் தீக்குச்சி எளிதில் பற்றிப் பரவும் வண்ணம், இஸ்லாமியர்களுக்கு எதிராக எதையுமே விமர்சனம் செய்துவிட முடியாத நிலைக்கு இஸ்லாம் (அடைப்படைவாத நம்பிக்கை என்னும் தீவிரவாத, சகிப்புத் தன்மை அற்றத) பெரும்பான்மை இஸ்லாமியர்களின் பிடியில் இருக்கிறது என்பதும் கசப்பான உண்மை.


சுட்டிகள் :
1. http://www.telegraph.co.uk/news/worldnews/northamerica/usa/7990783/911-Koran-burning-Sarah-Palin-calls-it-unnecessary-provocation.html

2. http://blogs.aljazeera.net/americas/2010/09/08/quran-also-burns-fahrenheit-451

காலத்தை வென்ற முரளி !

ஒரு நடிகர் / நடிகை மக்கள் மனதில் நிற்பவரா இல்லையா என்பதை அவருடைய இழப்பு நிருபனம் செய்துவிடும் என்பது முரளி மறைவால் உண்மையாகி இருக்கிறது. சிலுக்கு ஸ்மிதா மறைந்த போது தான் அவருடைய ரசிகர்கள் அவருடைய கவர்சியை மட்டுமே ரசிக்கவில்லை என்பது உண்மையானது. நேற்று நக்கீரன் இணைய பக்கத்தின் தலைப்பில் முரளிப் படத்தைப் போட்டு நடிகர் முரளி மாரடைப்பால் மரணம் என்று வெளி இட்டு இருந்த செய்தியைப் படித்தவுடன் அந்த ஒரு சில நொடிகள் அதிர்ச்சி கொடுத்தன. நடிகர் என்பதால் அவருடைய இழப்பு நம் கவனம் ஈர்க்கிறதா ? என்று பார்த்தாலும் அதையும் தாண்டி நம்மை அறியாமலேயே நம்முடைய மனதில் இடம்பிடித்த நடிப்புக்குச் உடைமையானவர் என்பதை தொடர்ச்சியான அவர் நடித்தப் படங்களின் காட்சிகள் மனக்கண்ணுக்குள் ஓடி உண்மையாக்கியது. முரளி நடித்த அத்தனை படங்களையும் பார்த்திருக்காவிட்டாலும் அவருடைய வெற்றிப் படங்களை பலமுறை பார்த்திருக்கிறேன். அதில் குறிப்பிடத்தகுந்தது புதுவசந்தம் மற்றும் இதயம். நடிகன் என்றாலும் கூட நம்மைச் சுற்றிலும் இருக்கும் கருப்புநிற மனிதர்களில் ஒன்றாக வரும் பாத்திரங்களை படைத்தவர் என்பதால் முரளி நம்மை அறியாமலேயே நமக்குள் சென்றிருக்கிறார்.

தொடர்ந்து நாயகனாக நடித்தாலும் விஜயகாந்த், சரத்குமார், மம்முட்டி போன்ற பெரும் நடிகர்களின் தம்பியாக, துணைப்பாத்திரமாக நடிக்க தயங்கமால அந்தப் பாத்திரங்களை நிறைவாக செய்தவர். கேஎஸ்ரவிகுமார் இயக்கத்தில் வெளியான சமுத்திரம் படத்தில் சரத்துக்கு தம்பியாகவும் பாரதிராஜாவின் மகன் மனோஜுக்கு அண்ணனாகவும் , ரம்பாவுக்கு கணவனாகவும் சிறப்பாக நடித்திருப்பார், அந்தப் படத்தில் சரத்குமாரைவிட சிறப்பாக செய்தவர் முரளி தான். அதே போன்று லிங்குசாமியின் ஆனந்தம் படத்தில் 'வான்மதி சோப்' விளம்பர பணியனைப் போட்டுக் கொண்டு மம்முட்டிக்கு தம்பியாக அண்ணன் மீது பெரும் மதிப்பு வைத்திருப்பவராகவே நடிப்பில் பின்னி இருப்பார். சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளியான என் ஆசை மச்சான் படத்தில் விஜயகாந்துக்கு தம்பியாக என இவர் தம்பியாக நடித்தப் படங்களில் தம்பி பாத்திரத்திற்கு நல்லதொரு இலக்கணம் என்று சொல்லக் கூடிய நடிப்பை வழங்கி இருப்பார்.

புதுவசந்தம், காலமெல்லாம் காதல் வாழ்க, இதயம் ஆகிய படங்களில் மேடையில் மைக் பிடித்து பாடிய இவரது பாட்டுக்கள் என்றும் இனிமையாகக் கேட்கக் கூடியவை. பெரும்பாலும் குறைவான செலவில் படமெடுக்கவும், மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆன முகம் என்பதால் புதிய இயக்குனர்கள் எப்போதும் நாடிய நடிகர் முரளி. கஸ்தூரி ராஜாவின் என் ஆசை ராசாவே படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கனேசனுக்கு மகனாகவும் நடனக் கலைஞராகவும் நடித்தார். 90களின் முன்னனி நடிகைகள் ரோஜா, மீனா உட்பட நேற்றைய முன்னனி நாயகி சிம்ரன் வரை பல முன்னனி நடிகைகளுடன் 90க்கும் மிகுதியான படங்களில் நடித்துள்ளார்

முரளியின் படங்களையும் சிறப்பான பாத்திரங்களையும் பதிவர் முரளி கண்ணன் தொகுத்து வெளி இடுவார் என்று நினைக்கிறேன்.

நடிகனுக்காக / நடிகைக்காக வருந்துவதா என்று கேட்டால் மறைமுகமாக அந்த நடிகனின் நடிப்பு நம் மனதில் பாதிப்பு ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். நடிகர்கள் பிழைப்புக்காக புகழுக்காக நடிக்கிறார்கள் என்றாலும் அதைத்தாண்டி மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்கிற அவர்களின் நடிப்பின் ஈடுபாடு நம்மை எப்படியும் அடைந்துவிடுகிறது, அப்படியானவர்களுக்கு உருகுவதில் தவறு இல்லை. நடிகர்கள் மட்டும் இல்லை, எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொது நலவாதிகள் இவர்கள் தம்முடைய பிழைப்பு வாதம் என்பதைத் தவிர்த்து அவர்களின் உழைப்பு, ஈடுபாடு, அர்பணிப்பு ஆகியவற்றினால் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கும் போது அவர்களுக்காக உருகுவதில் தவறே இல்லை. அது தான் நாம் அவர்களின் பொது நலத்தை, அர்பணிப்பை அங்கீகரித்ததாக நாம் அவர்களுக்கு கொடுக்கும் மதிப்பும் ஆகும்.

முரளியின் மறைவு பலராலும் பேசப்படுவதில் இருந்து அவர் அதிரடி நாயகனாக இல்லாவிட்டாலும் தமிழ் திரை ரசிகர்களின் ஆழ்மனதில் இடம் பிடித்த நடிகர் என்பதை உறுதிப் படுத்தியுள்ளது. முரளியின் மறைவால் அதிர்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன்.

என்றும் மாறாத் தோற்றத்தில் இருக்கும் முரளி தன் திடிர் மறைவின் வழி தன் தோற்றத்தை காலத்தாலும் மாற்ற முடியாமல் செய்துவிட்டார்.

8 செப்டம்பர், 2010

ஏழைக் கண்ணீரைக் கண்டதும்.....!




படங்களுக்கான விளக்கம் தேவையற்றது ! ஜெய்ஹிந்த் !

படம் : நன்றி தினமலர்

7 செப்டம்பர், 2010

கலவை 07 செப் 2010 !

ஒரு பக்கம் உலக சுகாதார மையம் இந்திய நாட்டுக் குழந்தைகள் பட்டினிச்சாவில் ஆப்பிரிக்க நாட்டுக் குழந்தைகளுடன் போட்டி இடுகிறார்கள் என்கிற புள்ளி விவரம் தருகிறதாம், மறுபுறம் இந்தியாவில் உணவு தானியப் பொருள்கள் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டு வீணடிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. அதனை இலவசமாக வழங்க வேண்டும் என்று இந்திய நீதிமன்றங்கள் குறிப்பிட்டதை கருத்து தெரிவித்தார்கள், உத்தரவிடவில்லை, அது நடைமுறைப்படுத்தப்படாது என்று சரத்பவார் அறிவித்தார். ஐசிசி தலைவர் ஆனபிறகு இந்திய நலம் ஏழைகள் நலம் இவை எல்லாம் விளையாட்டாகப் போய்விட்டது அவருக்கு. உணவு தானியம் வீணடிக்கப்படுவது ஏழைகளுக்கு செய்யும், இந்திய பொருளாதாரத்திற்கு செய்யும் துரோகம் என்றாலும் விவாசாயிகள் பெற்றக் குழந்தைகளை வீதியில் வீசுவதைப் போன்று இதுவும் ஒரு அடாத செயல். இயற்கையே தண்டித்து அடுத்த முறை தேவைக்கு ஏற்ப விளைச்சல்கள் கொடுக்கவிட்டாலும் அரசியல்வாதிகளுக்கு நட்டம் எதுவும் இல்லை. அப்போதும் அல்லாடுவது ஏழைகளே. திரைப்படங்களில் இருக்கிறவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்கு கொடுப்பவர்களை நாயகனாக புரட்சியாகக் காட்டுவார்கள், இந்த கேடுகெட்ட அரசியல் வாதிகளிடம் இருந்து நாட்டைக் கைப்பற்றுவது யார் ?

*****

பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்பது பொதுவான புரிதல், சோதிட மற்றும் மூட நம்பிக்கைக்காரர்களால் இந்தக் கூற்றுக்கு என்றைக்கோ சாவு மணி அடித்துவிட்டார்கள், இராவு காலம் எமகண்டம், முகூர்த்த நாள், நட்சத்திரம் பார்த்து சிசேரியன் செய்து குழந்தையை எடுப்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழகத்தில் கூட நடந்துவருகிறது, இன்னும் கொஞ்ச நாளில் சிசேரியன் செய்து கொள்ள .....என்று நாட்களைக் குறிப்பிட்டு தமிழ் நாட்காட்டிகள் வந்தாலும் வியப்படைய ஒன்றும் இல்லை. சீனர்களுக்கும் இது போன்ற மூட நம்பிக்கைகள் உண்டு, அவர்களுடைய திங்கள்களில் (மாதம்) ஏழாம் திங்கள் பேய் திங்கள் எனப்படும், அந்த திங்கள் முழுவதும் முன்னோர்களுக்கு தாள்களில் செய்யப்பட்ட அவர்களுக்கு விருப்பான பொருள்களை எரிப்பது வழக்கம், இப்படியான பேப்பர் பொருள்களில் பீர் பிராண்ட் முதல் கார் பிராண்ட் வகைகள் வரை அடக்கம். இவையெல்லாம் சொர்கத்தில் இருக்கும் அவர்களைச் சென்று அடையுமாம். இதெல்லாம் பரவாயில்லை, அண்மையில் பேய் திங்களில் குழந்தை பெற்றுக் கொள்வது இல்லத்திற்கு ஆகாது என்று மருமகளை முன்கூட்டியே சிசேரியன் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள மாமியார் மாமனார் கேட்டுக் கொண்டார்களாம்.


*****

நித்தி பழையபடிக்கு கடைத்திறக்க கதவை திறந்துட்டார். எஸ்வீசேகர் போன்ற புண்ணிய ஆத்மாக்களினால் மீண்டும் வெளிச்சத்திற்கு வர முயற்சித்துவருகிறார். நக்கீரன் மற்றும் லெனின் கருப்பன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முதல்வர், பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு ப(க்)தர்கள் ஒவ்வொருவரும் லட்சக்கணக்கான கடிதம் எழுதி வேண்டுகோள் வைக்கனுமாம். நல்லா கவனிங்க நக்கீரன் மற்றும் லெனின் மீது தான் நடவடிக்கை வேண்டுமாம், குழந்தைகளும் இருப்பார்களே என்கிற சிரிதேனும் எண்ணம் எதுவுமே இல்லாமல் ஒளி/ஒலியாக வீட்டின் நடுக்கூடத்தில் நீலப்படம் காட்டிய சன் தொலைக்காட்சி குறித்து நித்தி எழுதச் சொன்னக் நடவடிக்கைக் கடிதத்தில் சன் டிவி பெயரைக்காணும், விரைவில் இந்த நாள் இனிய நாள் சன் நிகழ்ச்சியில் கோல்கேட் புன்னகையுடன் நித்தி தோன்றினாலும் வியப்படைய ஒன்றும் இல்லை.

*****
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் நாளுக்கு நாள் கூடிவருகிறது, 1996ல் அம்மா ஆட்சியில் இறுதி காலத்தில் இருந்தது போலவே ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு ஊடகங்கள் சென்றுவிட்டன. இருந்தாலும் ஆட்சித்தரப்பு அதே போன்று அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று மறுத்து வருகிறது, இப்படியான மறுப்புகளுக்கு செய்தோம் என்பதைவிட ஆட்சி அதிகாரம் பண பலம் இவைதான் முன்பும் காரணமாக இருந்தன. மக்கள் முட்டாள்கள் ... தொடர்ந்து முட்டாளாகவே இருந்துவிடுவார்கள் என்பதாகவும் மேலுமான இலவச அறிவிப்புகள் கைகொடுக்கும் என்பதாக நம்புகிறார்கள். இந்த ஆட்சியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட இலவச தொலைகாட்சிகள் கொடுத்து முடிக்கவே டிசம்பர் வரை ஆகும் என்று துணை முதல்வர் சொல்லி இருக்கிறார். இலவச திட்டங்கள் என்றாலும் அது சென்று அடையும் காலம் ஐந்தாண்டுகள் ஆகுமா ? அல்லது ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அவை தொடர ஆட்சி தொடரவேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள் என்பதாக இலவச திட்டங்களை அறிவிக்கிறார்களா ? தெரியவில்லை. இலவசதிட்டங்களினால் ஏழைகளுக்கு பயனுள்ள ஆட்சி என்ற காட்சியைக் காட்டினாலும் முற்றிலும் பெரும்பான்மை நடுத்தர மக்களின் வரிப்பணங்கள் நடுத்தர மக்களுக்கே எந்த வகையில் பயன்பட்டிருக்கிறது என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு, ஏழைகள் இலவச திட்டம் என குறிப்பிட்டவர்களுக்கு ஆதாயம் என்று பார்த்தாலும் பெரும்பான்மை நடுத்தரவயதினருக்கு விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை, வீட்டுமனை விண்ணளவுக்கு உயர்வு உட்பட எதிராகவே சென்றிருக்கிறது.

*****

வலை நட்பு நிலைக்குமா ? என்கிற ஐயம் எனக்கு இல்லை. எங்கள் வீட்டின் புதியவரவான என் மகனுக்கு பல்வேறு பதிவர்கள் வாழ்த்துகளை அன்புகளையும், முத்தங்களையும் தெரிவித்தார்கள், அதிலும் சிங்கையைச் சேர்ந்த சில பதிவர்கள் மருத்தவமனைக்கே வந்து குழந்தைக்கு பரிசுகளை வழங்கினார்கள், சிலர் இல்லத்திற்கே வந்து மகளுக்கும் சேர்த்தே பரிசுகளை வழங்கினார்கள், சிலர் உறமுறைகளைப் போல் தங்க நகைகளை பரிசாக அணிவித்துச் சென்றார்கள். அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை நெளிய வைக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் பொதுவில் இப்படி குறிப்பிட்டு நன்றி சொல்லாவிட்டால ?, பதிவர்களின் நட்பு வெறும் எழுத்து சார்ந்த நட்பு மட்டுமே என்கிற சிலரின் புரிதல் தவறு என்பதையும் என்னால் மறுக்க முடியாமல் போய்விடும். பதிவுலகில் எழுத்து வழி கற்றதும் நட்பாகப் பெற்றதும் மிக அதிகம். வெளியுலக நட்பிற்கு பதிவுலக நட்பு குறைந்ததே அல்ல என்பதை அழுத்தமாக பதியவைக்கிறேன். பெருமையாகவும் கூறிக் கொள்கிறேன். கிடைத்த நட்புகள் என்பது தவிர்த்து பதிவுலகில் எழுத்தில் என்ன சாதித்தேன் என்பதை என்னால் அறுதி இட்டு எதையும் சொல்லிவிட முடியாது. முகம் காட்டி எழுதுபவர்களுக்கும் முகம் காட்டாமல் எழுதுவதற்கும் இதுதான் வேறுபாடு. எழுத்து நம்மை பிறருக்கு அறிமுகப் படுத்துவதுடன் நட்பையும் பெற்றுத்தருகிறது. புற உலக நட்புகளுக்கும் பதிவுலக நட்புகளுக்கும் ஒரே ஒரு வேறுபாடு தான் அதுவும் சிறப்பான வேறுபாடு பதிவுலக நட்பில் வயது ஒரு தடையே இல்லை.

3 செப்டம்பர், 2010

பெரியார் பற்றாளர்களுக்கு அன்பு வேண்டுகோள் !

தமிழகத்தில் பெரும அளவு மக்களால் தந்தை பெரியார் என்று போற்றப்படும் பெரியார் சிலை குறித்த செய்தியில் ஈவேரா சிலை சேதம் என்று தலைப்பிட்டு தனது பார்பன, இந்துத்துவ அரிப்பை செய்தித்தலைப்பாக வெளி இட்டுள்ளது தினமலர். செய்தி இதழ்கள் தலைவர்களின் பெயரை போட்டு எழுதலாமா அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்ட பெயர்களை வைத்து அழைக்கலாம் என்று கேட்டால் தலைவர்களின் பெயரைப் போட்டு எழுதுவது தவறில்லை என்பது சரியான நிலைப்பாடு என்றாலும் மறைந்த பெண்ணிய எழுத்தாளர் அனுராதா இரமணனை கையைப் பிடித்து இழுத்தவர் என்று சொல்லப்படும் மற்றும் சங்கரராமன் கொலை வழக்கில் வாய்தா வாங்கும் காஞ்சி மட சாமியார் சுப்பிரமணியும் அவரது இளவலையும் பெயரிட்டு இந்த செய்தி இதழ்கள் எழுதுவதில்லை மாறாக 'பெரியவா, பாலப் பெரியவா' என்றே எழுதுகின்றன என்பதில் இருந்து இவர்களின் தமிழர் எதிர்ப்போக்கு மற்றும் இந்துத்துவ நிலைப்பாடு வெட்ட வெளிச்சம். இதே தினமலர் தம் நிறுவனர் பெயரை 'ராமசுப்பையர்' என்று சாதிப் பெருமையுடனே எழுதிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தினமலரை கண்டனம் செய்யவோ, தினமலர் தம் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நான் இதைக் குறிப்பிட வில்லை, நாய்வாலையும், சாதி மதவெறியர்களையும் நிமிர்த, நிறுத்த முடியாது.

*****

பெரியார் வெறுப்பாளர்கள் கோழைகள் போல் இரவு நேரங்களில் பெரியார் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பது பகுத்தறிவு பகலவன் கருணாநிதி ஆட்சி காலங்களில் தான் அவ்வப்போது நடைபெறுகிறது, கடந்த முறை திருவரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது திண்டுகல் அருகே பெரியார் சிலைக்கு சந்தனம் குங்குமம் வைக்கப்பட்டு அவமரியாதை செய்யப்பட்ட போது கருணாநிதியே ஆட்சியில் இருந்தார். கருணாநிதி பெரியாரின் வாரிசு, காவலன் என்று காட்டிக் கொண்டாலும் அவருடைய ஆட்சியின் போது தான் பெரியார் எப்போதும் அவமரியாதை செய்யப்படுகிறார்.

மு.க. ஸ்டாலின் திறந்து வைத்த பெரியார் சிலை சேதம்: நெல்லையில் பரபரப்பு - நக்கீரன்

ஆகஸ்ட் 6 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்ட சிலை ஒரு மாதத்திற்குள் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

பெரியார் சிலை சேதம்: திருச்சியில் பரபரப்பு - நக்கீரன்

அதே நாளில் திருச்சியிலும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதாம்.

*****


கருணாநிதி கன்யாகுமரியில் அமைத்த வானுயர்ந்த திருவள்ளுவர் சிலை சுற்றுலா செய்வோரை மலைக்க வைக்கிறது, தமிழர்களின் தொல் பெருமைகளை பிறர் அறிந்து கொண்டு தமிழர்களை பெருமை படுத்துகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தாழ்த்தப்பட்டோர் படித்து முன்னேறிய நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது, பகுத்தறிவு, சமத்துவம், பெண்ணியம் ஆகியவற்றிற்கு தமிழகத்தில் பெரியார் ஆற்றிய தொண்டுகளை முறியடிக்க இன்னொருவர் பிறக்கவோ, பெரியாருக்கும் முன்பு இருக்கவோ இல்லை. அத்தகைய பெருமை மிகு பெரியாருக்கு திருவள்ளுவருக்கு தென் கோடியில் கடற்கரையில் வானுயர்ந்த சிலை வைத்தது போல் வட தமிழகத்தில் சென்னையில் மெரினா கடற்கரையில் ஏன் வானுயர்ந்த சிலை வைத்து பெருமை படுத்தக் கூடாது ? திராவிடக் கழகம் மற்றும் பெரியார் திராவிடக் கழகம் ஆகிய அரசியல் அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெரியாருக்கு மிகப் பெரிய சிலை வைக்கச் சொல்லி தமிழக முதலவரை வற்புறுத்தலாமே ? தந்தை பெரியாருக்கு திருவள்ளுவரைப் போல் வானுயர்ந்த சிலை அமைந்துவிட்டால் பெரியார் சிலையை உடைக்க நினைப்பவர்கள் பெரியார் சிலையின் கால் நகத்தைக் கூட பெயர்த்துவிட முடியாது. வலைப்பதிவில் பெரியார் பாசறைத் தோழர்கள் இயங்குறார்ர்கள் இவர்கள் தமிழக அரசிடம் பெரியாருக்கு மிகப் பெரிய சிலை வைக்கச் சொல்லி வற்புறுத்தலாமே. கருணாநிதிக்கும் வரலாற்றை எழுதிக் கொள்ள இன்னொமொரு வாய்ப்பு கிடைக்கும் தவறவிட்டுவிடுவாரா என்ன ?

தாடியோடு நின்ற நிலையில் வள்ளுவரும் பெரியாரும் ஒற்றுமைகள் உண்டு. பெரியாரைப் பற்றி மக்களும், தமிழகத்தில் சுற்றுலா வருவோரும் தெரிந்து கொள்ள அவர் அன்றாடம் மக்கள் வந்து செல்லும் இடத்தில் திருவள்ளுவரைப் போல் பெரியார் சிலை பெரிய அளவில் இருக்க வேண்டும்.

2 செப்டம்பர், 2010

அண்மைய இணைய வதந்திகள் !

என்னுடைய மாணவ பருவத்தில் வதந்திகள் எனக்கு அறிமுகம் ஆகின. அப்போது திடிர் திடிரென்று வீடுகள் தீப்பிடித்து எரியும் நிகழ்வுகள் நடந்தேறியது. நெடுநாள் பகையை தீர்த்துக் கொள்ளுதல் என்பதாக தீ வைப்பு நிகழ்வுகள் அமானுஷ்யம் என்கிற பெயரில் தொடர்ந்தது. யார் வீட்டின் முன்பு நாமம் போடவில்லையோ அவர்கள் வீடு பற்றி எரிவதாக கிளப்பிவிட்டார்கள், 90 விழுக்காடு வீடுகளின் முகப்பில் நன்கு தெரியும் படி நாமம் வரைந்து வைத்தனர். எங்கள் வீட்டிலும் எங்க அண்ணன் நாமம் வரைந்து வைத்தார். இந்துக்கள் வீடுகள் மட்டுமல்லாது கிறித்துவ இஸ்லாமியர் வீடுகளிலும் நாமம் வரைந்து வைக்கப்பட்டது. நாமம் எப்படி வரைவது என்று தெரியாதவர்களின் நாமங்கள் சூலம்போன்று இருந்தது. எந்த தெருவில் நுழைந்தாலும் நாமம் வரையாத வீடுகளைப் பார்ப்பதே அரிது என்பதாக மக்களின் மனப் பயம் நாமங்களாக வரையப்பட்டு இருந்தன. இந்த வதந்திகளின் போது வெளியூர்காரர்கள் நேரம் கெட்ட நேரத்தில் சிக்கிக் கொண்டால் விசாரணை எதுவும் இன்றி அவர்களை பொதுமக்கள் கூடி அடித்தே கொன்றுவிடுவார்கள். வதந்திகள் தற்போதும் வீட்டின் முகப்பில் வேப்பிள்ளைக் கட்டுவது, உடன்பிறந்தாளுக்கு பச்சை சேலை வாங்கிக் கொடுப்பது என்பதாக பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கோலச்சுகிறது. சென்னையில் வசிக்கும் காலங்களில் ஸ்கூட்டரில் லிப்ட் கேட்ட ஒருவர் இடம் வந்து இறங்கியதும் 'வெல்கம் டு எய்ட்ஸ் வேர்ல்ட்' என்று சொல்லிக் கொண்டு எய்ட்ஸ் ஊசிப் போட்டுவிட்டு தப்பி ஓடுவதாகச் சொல்ல ஸ்கூட்டரில் சென்றவர்கள் போக்குவரத்து விளக்குகளிலும் நிற்காமல் சென்றதாக ஜூவி உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதினார்கள்.

பிள்ளையார் பால்குடித்தது (சிலை பால் குடிக்கும் ஆய் போகாது என்கிற புனிதம் காரணமாக பிள்ளையார் ஆய் போனர் என்று கிளப்பிவிடவில்லை என்று நினைக்கிறேன்) உட்பட பசுமாட்டின் கண்களில் எம்ஜிஆர், கிருஷ்ணன் வந்து போனார்கள், சில ஊர்களில் மாதாவின் கண்களிலும், ஏசு சிலையும் வடிந்த இரத்தம் வேப்பமரங்களிலும் வடிந்ததாக வதந்திகள் வடிவங்களை மாற்றிக் கொண்டு புழங்கிவருகின்றனர். வதந்திகளின் வேர் எது என்று அரியா வண்ணம் வதந்திகளின் விரைவெடுத்து பின் முற்றிலுமாக அடங்கிவிடுகின்றன.

புற உலகில் நடப்பது போலவே சைபர் ஸ்பேஸ் எனப்படும் இணைய வெளிகளிலும் வதந்திகள் பல்வேறு வடிவில் வீடியோவாக, மின் அஞ்சல்களாக பரப்பப்படுகின்றன. இதில் என்ன கொடுமை என்றால் என்றோ பரவி அடங்கிய வதந்திகள் கூட அண்மையில் ஏற்பட்ட நிகழ்வு ஒன்றைச் சொல்வதாக புதிய வடிவில் மறு உலாவரும். புற உலகில் ஊர் அளவில் பரவும் வதந்திகள் இணையங்களில் உலக அளவில் விரைவாக இணையம் பயன்படுத்துவோரிடம் பரவி விடுகிறது.

சென்ற வாரங்களில் 'நேபாள மசூதியின் அற்புதங்கள்' என்பதாக ஒரு வீடியோ இணையங்களில் சக்கைப் போடு போடுகின்றன. மசூதியின் டூம் எனப்படும் கலசத்தை அல்லா தரையில் இருந்து உயர்த்தி கோபுரத்தில் வைத்தான் என்பதாகவும், அல்லாவின் அற்புதம் என்பதாகவும் அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.


அந்த நிகழ்வு நடந்ததாக வேறு வேறு நாடுகளை வைத்துச் சொல்லப்படுவதாக அத்தகவல் பல்வேறு வரிபடிவங்களில் (வர்சன்) இருப்பதாக இந்த வதந்தியை ஆராய்ந்தவர்கள் வதந்தியை மறுத்து கட்டுரைகளை எழுதி இருக்கிறார்கள். (மறுப்பு இணைப்புக்கு நன்றி: நண்பர் சலாஹுத்தின்)

வானத்தை உயர்த்தி பூமியை பிரித்தான் என்ற குரான் வசனத்தை படிப்பவர்களுக்கு கோபுரம் உயர்த்தப்படுவது மேலும் ஒரு அல்லாவின்அதிசயம், அற்புதம் என்பதாக தெரிவது வியப்பில்லை என்பதாக இந்த வதந்தி பரவிவிடும் என்பது வதந்தி பரப்பியவர்களின் எதிர்ப்பார்ப்பு. அதன்படியே தொடர்புடைய வீடியோக்களில் பல இஸ்லாமியர்கள் நெகிழ்ந்து பின்னூட்டம் இட்டு இருக்கிறார்கள். இஸ்லாம் அற்புதம் (Miracle of Allah) மட்டுமல்ல இணையங்களில் ஏசுவின் அற்புதம், கிருஷ்ணனின் அற்புதம், சாய்பாபாவின் அற்புதம் என்று தேடினால் 1000க் கணக்கான வீடியோக்களை துப்பும். இன்னும் பெரியாரின் அற்புதம் (Miracle of Periyar) என்று வராதவரையில் பெரியார் இன்னும் சாமியாக்கப்படவில்லை என்று நம்புவோம். :)


இன்னும் ஒரு அற்புதமான வதந்தி, 'பூஜாவை அவர்கள் பெற்றோர்களிடத்தில் சேர்க்க உதவுங்கள்' என்கிற வதந்தி, இந்த வதந்தி 2003ல் இருந்தே பரவி வருவதாக இணையத் தேடல்களில் காணக் கிடைக்கிறது, பூஜா என்கிற வட இந்திய குழந்தையை பிச்சைக்காரனிடம் இருந்து மீட்டு அனாதை இல்லத்தில் சேர்த்திருப்பதாகவும், அந்தக் குழந்தை பெற்றோர் பெயர் தவிர்த்து ஊர் பெயரை புரியாத அளவுக்கு சொல்லுவதாகவும், ஹிந்தியை தாய் மொழியாகக் கொண்ட குழந்தை அவளை உங்களுக்கு தெரிந்தால் பெற்றோரை சென்றடைய உதவுங்கள் என்பதாக அச்செய்தி உலாவருகிறது. குழந்தையின் படத்தைப் பார்த்தால் அவை அண்மையில் டிஜிட்டல் கேமராவழி எடுத்தப் புகைப்படம் மாக இல்லாமல் பிலிம் ரோலில் எடுக்கப்பட்ட படத்தில் ஸ்கேன் நகல் போன்று இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அண்மையில் காணாமல் போய் இருந்தால் டிஜிட்டல் கேமராவில் எடுத்த பளிச் புகைப்படமே வந்திருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். குழந்தை பூஜாவைப் பற்றி இணைய மின் அஞ்சல் வழியாக பார்வேட் மெயில் என்பதாக கிடைக்கப் பெறும் இளகிய மனம் படைத்தோர் குழந்தை என்பதில் மனதை பரிகொடுத்து, உச் கொட்டி மற்றவர்களுக்கும் அந்த தகவலை அனுப்புகிறார்கள். மின் அஞ்சல் வர்சனாக வந்தவை தற்போது பதிவாக (பதிவர் படைப்பாளி) எழுதப்படும் அளவுக்கு மாறி இருக்கிறது என்றாலும் அடிப்படையான பூஜாவின் பெயர் மற்றும் படங்களும் அதே தான். 2003ல் 4 வயதில் காணாமல் போன பூஜாவிற்கு தற்போது 11 வயது இருக்கலாம். 2003ல் கூட பூஜா காணமல் போனது உண்மையா என்பது ஆராய்ச்சிக்குரியது. 2000 ஆம் ஆண்டில் இருந்தே இணையம் பல்வேறு தரப்புகளால் நன்கு புழக்கத்தில் இருந்துவருகிறது.

தொடர்புடைய அந்த குழந்தையின் பெற்றோருக்கு வேண்டாத ஒருவர் முன்பு நெருங்கி பழகிய ஒருவர் அவர்களை பலிவாங்க அவள் காணமல் போனதாக இணையங்களில் அவர்களுடையை தொலைபேசி எண்ணுடன் கொடுத்து பல்வேறு நபர்கள் அவர்களை தொடர்பு கொண்டு செய்தி உண்மையா என்று கேட்டு டார்சர் கொடுக்கக் கூட உள்நோக்கத்துடன் வெளி இடப் பட்டிருக்கலாம். (இணையங்களில் விமர்சனக் கட்டுரைகள் எழுதுவோர் தங்கள் குழந்தைகளின் படங்களை இணையங்களில் வெளியிட்டால் விமர்சனங்களால் பாதிக்கப்படுகிறோம் என்று நம்பும் கூட்டத்தாரும், தனிநபரும் இவ்வாறான அவதூறுகள் செய்ய வாய்ப்புகள் இணையத்தில் ஏராளம் உண்டு. எனவே சர்சைகளை எழுதுவோர் குறிப்பாக பெண் குழந்தைகளின் படங்களை இணையங்களில் வெளி இடாதீர்கள் என்று இதன் மூலம் நான் கேட்டுக் கொள்கிறேன்) பூஜாவுக்கும் பூஜாவின் பெற்றோர்களுக்கும் நேரும் கெதி நமக்கும் ஏற்படலாம். பூஜாவின் பெற்றோரை கண்டு பிடித்துத் தாருங்கள் என்கிற தேடலில் 45,300 பக்கங்களை கூகுள் காட்டுகிறது.

தகவலை நம்பி அதில் உள்ள எண்ணுக்கு பல்வேறு நபர்கள் தொடர்பு கொண்டு செய்தி உண்மையா என்று கேட்க அந்த எண்ணுக்கு உரியவர் மன உளைச்சல் அடைந்ததாக ஜெகதீஸ்வரன் என்கிற பதிவர் படைப்பாளியின் பதிவின் பின்னூட்டங்களில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவின் வழி நான் சொல்ல முயன்றது என்னவென்றால் 'இணையங்களில், பதிவுகளில், மின் அஞ்சல்களில் தகவல் பரிமாறுவோர், வந்த மின் அஞ்சலை அனுப்புவோர் தம்மைச் சார்ந்தவர்கள் கவனம் கொள்ள வேண்டும் என்பதாக அனுப்பும் தகவல்களின் உண்மைத் தன்மை குறித்து சிறுது சிந்தித்தோ அல்லது ஆராய்ந்தோ உறுதிப்படுத்திக் கொண்டு அனுப்பலாம், அவ்வாறு செய்யவில்லை என்றால் வதந்திகளிலும் சிலருக்கான சங்கடங்கள் பரவ நாமும் காரணமாக அமைந்துவிடுவோம்.

புற உலகைப் போலவே இணைய உலகிலும் மனநோயாளிகள், ஏமாற்றுக்காரர்கள் நிரம்ப உண்டு.

1 செப்டம்பர், 2010

தற்கொலை தாக்குதல்களும் மரண தண்டனைகளும் !

கொலைக்கு கொலை தண்டனையாகாது என்கிற விருமாண்டி வசனங்களைப் பேசிய கமல் உன்னைப் போல் ஒருவன் படத்தில் கொலைக்கு தண்டனை கொலை செய்யப்பட்டு மரணம் என்பதாக தீர்ப்பு எழுதிய போது திரை உலகம் வழியாக சொல்லப்படும் நீதிகள் என்பவை நடிகர்களின் பிழைப்பு வாதம் என்பதாக புரிந்து கொண்டேன். மற்றபடி கொலைகளும் அதற்கு மரண தண்டனைகளும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அரசுகளின் மரண தண்டனை என்பது கொலைகளின் எண்ணிக்கையைப் பொருத்ததே. ஒரே ஒரு கொலை செய்தால் பெரும்பாலும் மரண தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட என்கிற போது கொலையாளிகள் வாழத்தகுந்தவர்கள் இல்லை என்பதாக அரசுகள் தீர்ப்பு எழுதுகின்றன. இதிலும் கூட அரசியல்வாதிகளின் தூண்டுதலில் நடைபெறும் கலவரங்களினால் அப்பாவிகள் கொல்லப்படும் போது பெரிய தூண்டுதலுக்குக்காரணமான தலைவர்களுக்கு எந்த ஒரு தண்டனையும் கொடுக்கப்படுவதில்லை. அம்புகளை தண்டிக்கும் தீர்ப்புகள் என்பதாக அவை அமைந்துவிடுகின்றன என்பதால் இவ்வகை மரண தண்டனைகள் நீதியை நிலை நாட்டுகிறது என்பதாக நம்பப்படுவை நம்மை நாமே ஏமாற்றிப் பார்த்துக் கொள்ளும் சமூகப் பார்வை என்று புரிந்து கொள்கிறேன்.

மரண தண்டனைகளை பாதிக்கப்படுபவர்களின் மன நிலையில் இருந்து பார்க்கவேண்டும், மற்றும் நம் உறவினர்கள் பாதிக்கப்பட்டால் நாம் மரண தண்டனைகளுக்கு எதிராக பேசுவோமா ? என்றெல்லாம் கூட சிலர் வியாக்கானம் கூறுகிறார்கள். என்னைப் பொருத்த அளவில் பாதிப்பு அடைந்தவர்கள் அதே போன்ற பாதிப்பு, பாதிப்பு ஏற்படுத்தியவர்களும் அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும் என்பதாக சொல்லுகிறார்கள் என்று புரிந்து கொள்கிறேன். மரணம் அதன் வலியும் கொலைகாரர்களின் குடும்பங்களுக்கும் ஏற்பட்டால் தனக்கு ஏற்பட்ட மன வலிகள் ஆறும் என்பதாகக் கொள்ள வேண்டுமாம். பலிவாங்கும் மனநிலையால் காயங்கள் ஆறும் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கிட்டதட்ட என் வாரிசுகள் உன்னை கொன்றுவிட சம்மதம் என்றால் என்னை கொன்றுவிட உன்னை நான் அனுமதிக்கிறேன் என்பது போன்ற கொலைகளை அங்கீகரிக்கும் மறைமுக ஒப்புதல் போன்றவையே பலிக்கு பலி சரி என்பதான மனநிலைகள்.

மரண தண்டனைகள் என்பவை மன்னர் ஆட்சி முறைகளின் நீட்சியாகத் தொடர்கிறதே அன்றி இன்றைய சமூக சூழலில் இன்றும் அவை தேவையான சட்டம் என்று சொல்வதற்கு எனக்கு ஒன்றும் இல்லை. நிரபராதிகள் தண்டிக்கப்பட்ட பிறகு அவற்றை சரிசெய்ய 'மவுனம், வருத்தம்' என்பது தவிர நம்மிடம் எந்த வித சட்டங்களும் இல்லை என்னும் போது கொலையாளிகளுக்கான மரண தண்டனைகள் சட்டங்கள் என்ற அளவில் நாம் சரி என்பது, எந்த விதத்தில் மனித உரிமைக்கான சட்டங்கள் தான் மரண தண்டனை சட்டங்கள் என்று கொள்ள முடியும் ?

கொலைக்கு கொலையாக மரண தண்டனை சரி என்றால் (அரசுகளின் தண்டனைக்கு பயந்து முன்கூட்டியே) கொலைகளை செய்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதோ, மனித வெடிகுண்டுகளின் செயல்களையோ கண்டிக்க நமக்கு என்ன ஞாயாமோ, உரிமையோ, பொருளோ இருக்கிறதா ? மரண தண்டனைக்கும் பயப்படுபவன் கொலை செய்யமாட்டான் என்றால் தற்கொலை தாக்குதல்களை எந்த வகை கொலையில் சேர்ப்பது ? மரண தண்டனைகளினால் சமூகக் குற்றங்கள் குறைந்துவிட்டதற்கான ஆதாராங்கள் எதுவுமே இல்லை, உணர்ச்சி வசப்பட்டு கொலை செய்வதும், சூழலால் கொலை செய்வதும் எங்கும் எப்போதும் நடந்து கொண்டே இருக்கத்தான் செய்கிறது. சமூகக் கொடுங்கோலர்களை தடுக்க அவர்களை நிரந்தரமாக தனிமை படுத்துவதைத் தவிர்த்து நிரந்தரமாக கொலை செய்வது கொலையாளிகளின் செயல்களுக்கும் அரசுகளின் செயல்களுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. குற்றத்திற்கான தண்டனைகள் குற்றவாளிகள் மனம் திருந்த வாய்ப்பு, அதன் மூலம் அவர்களின் தொடர் குற்றங்களை தடுக்கலாம் என்பதே அடிப்படை சட்டங்களின் நோக்கம்.

மரண தண்டனை சட்டங்களுக்கு ஞாயம் பேசுபவர்கள் பெரும்பாலும் மதவாதிகளாகவே இருக்கின்றனர். ஏனென்றால் பவுத்தம் தவிர்த்து பிற அனைத்திலுமே மரண தண்டனை சட்டங்களை கடுமையாக ஆதரிக்கும் மதங்களாகும். மேலும் அரசியல் சார்பு வாதிகளின் நிலைப்பாடுகள் அதைவிடக் கேவலம். ஈழமக்களின் ஒட்டுமொத்தப் படுகொலைக்கான தண்டனைகள் குறித்து எதுவும் பேசாதவர்களும், இந்திராகாந்தி படுகொலைக்குப் பிறகான 3000 சீக்கியர்களின் படுகொலைக்கு ஒரே ஒரு செருப்பு வீச்சு தவிர்த்து எந்த ஒரு தண்டனையும் அதில் ஈடுபட்டவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை, இவ்விரு அரசியல் சார்பு நிலைபாடுகள் கொண்டவர்கள் கூட பேருந்து எரிப்பில் மாணவிகள் கொலையில் ஈடுபட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனைகள் நீதி வழங்கி இருப்பதாக குறிப்பிடுவது நகை முரண் அன்றோ ? தினகரன் அலுவலக படுகொலைக்களுக்கான மரண தண்டனைகள், சங்கர இராமன் படுகொலைக்கான மரண தண்டனைகள் வேண்டும் என்று குறிப்பிடுவர்களுக்கு அரசியல் நிலைப்பாட்டுத் தன்மையோடு மரண தண்டனை குறித்து சரி என்று ஞாயம் பேசுவோர் எந்த ஒரு பதிலையும் வைத்திருப்பதில்லை. எனவே அரசியல், மதவாதிகளின் மரண தண்டனை குறித்த கருத்துகளை நான் புறம் தள்ளுகிறேன். காந்தி கூட மகாத்மாவாக இல்லாவிட்டால் கோட்சேவை இந்த நாட்டின் இந்துத்துவ நிலைப்பாட்டால் தூக்கிலிட அனுமதித்திருக்க மாட்டார்கள்.

இடுகையில் ஒட்டு மொத்தமாகச் சொல்ல வந்தது, பொதுவானவர்கள், சமூக நோக்கர்கள் 'கொலைகளுக்கு மரண தண்டனை சரி' என்றால் மனித நேயம் பேசி மனித வெடிகுண்டுகளின் செயல்களையோ, தற்கொலை தாக்குதல்களையோ நிறுத்த, கண்டனம் தெரிவிக்க யாருடைய உயிர் என்றாலும் மனித உயிர் மேன்மையானது என ஒப்பீட்டு அளவில் சொல்ல நமக்கு எந்த ஒரு வழியோ, ஞாயமோ தென்படவில்லை என்பதும் சரிதானே ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்