'இறைவன் இருந்தால் நல்லா இருக்கும்' கமலஹாசனின் தசவதாரக் கான்செப்டைக் கேட்டுவிட்டு இறைவன் ஒரு சாதாரண மனிதனாக மாற்றிக் கொண்டு கீழே வருகிறார். அருகில் இருக்கும் ஆலயத்தின் மணி ஓசைக் கேட்க, தன்னை அழைப்பதை உணர்கிறார். உள்ளே நுழைகிறார், பக்தர்களுடன் வரிசையில் நிற்கிறார், அர்சகர் இவருடைய அருகில் செல்லும் போது
இறைவன் : நான் பகவான் வந்திருக்கேன்
அர்சகர் : நட்சத்திரம் சொல்லுங்கோ
இறைவன் : நட்சத்திரமா ? எனக்கு பிறப்பே இல்லை
அர்சகர் : லோகத்துல பிறப்பு இல்லாதவர் இருப்பாரா ? அநாதையா ? பரவாயில்லை...பகவான் பேருக்கு அர்சனைப் பண்ணிடுறேன்... அப்பறம் ஷேமமாக இருப்பேள். போய் அர்சனை தட்டும் சீட்டும் வாங்கி வாங்கோ
*******
இறைவன் வந்த வழியாக திரும்பி நடக்கிறார், அருகே வாசலில் செருப்பு பாதுகாப்பாளரிடம் செல்கிறார்
பாதுகாப்பாளர் : சாமி இன்னா வோணும்,
இறைவன் : நான் தான் சாமி
பாதுகாப்பாளர் : உன் பேரு சாமியா, ரொம்ப களைச்சு போய் இருக்கே...தண்ணி குடிக்கிறியா ?
இறைவன் : அதெல்லாம் வேண்டாம்
பாதுகாப்பாளர் : வேற இன்னா வோணும் ? வீட்டாண்ட போன பையனைக் காணும், சித்த இப்பிடி குந்திகினு இரு யாராவது செருப்புப் போட்டால் வாங்கி வையி, வயித்த கலக்குது போய்டு வந்துடுறேன் என்று சொல்லி கள்ளாவைப் பூட்ட சாவியைத் தேடுகிறார்
இறைவன் எதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்புகிறார்
பாதுகாப்பளர் : ஐயே...இது பூட்ட கேசு
*******
அங்கே அருகில் இருந்த க்ளினிக்கைப் பார்க்கிறார், டாக்டர் பத்மனாபன் என்று போட்டிருந்தது,
மூடப் போகிற நேரம் யாரும் பேசண்ட் இல்லை, இறைவன் டாக்டரைப் பார்க்கனும் என்றதும் ஒரு அம்மா உள்ளே போகச் சொல்லுது. டாக்டர் பக்தி பழமாக இருந்ததுடன், அன்று பிஸ்னஸ் முடியும் நேரம் என்பதால் சாமி படத்திற்கு கற்பூரம் காட்ட ஆயத்தமாகும் வேளையில், இறைவனைப் பார்த்துவிடுகிறார்
டாக்டர் : உட்காருங்க... உங்க பேரு
இறைவன் : நான் தான் இறைவன்
டாக்டர் ; நல்ல பெயர், இறையன்பு, இறையடியான் போல உங்க பேரு இறைவனா ?
இறைவன் : ஆமாம்
டாக்டர் : உங்களுக்கு என்ன செய்து
இறைவன் : எனக்கு ஒண்ணும் செய்யல, நான் தான் எல்லோருக்கும் இறைவன்
டாக்டர் இறைவனின் கையை நீட்டச் சொல்லி நாடியைப் பார்க்கிறார், மனதுக்குள் 'எல்லாம் சரியாகத் தானே இருக்கு...பின்னே... யோசித்தவாறு'
டாக்டர் : நீங்க தப்பான டாக்டரிடம் வந்திருக்கிங்க, பக்கத்து தெருவுல பரந்தாமன் என்று ஒருவர் இருக்கிறார், எனக்கு நண்பர் தான் போன் போட்டுச் சொல்கிறேன், மன நல சிகிச்சை யெல்லாம் அவர் தான் கொடுப்பார்
*******
இறைவன் ஏமாற்றமாக அங்கிருந்து கிளம்ப.....அருகில் "ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர சுவாமிஜி சரணாகதி ஆஸ்ரமம்" என்ற பெயர் முகப்பில் தாங்கி இருந்த ஒரு ஆசிரமம் போன்ற இடம், பஜனைப் பாடல்கள் ஒலிக்க பத்தி மணம் கமழந்தது....அந்த வீட்டிற்குள் நுழைகிறார்..."
எல்லோரும் பக்தி பெருக்குடன் மெய் மறந்த நிலையில் உணர்ச்சி வயப்பட்டு பாடிக் கொண்டு இருக்கின்றனர்
ஆஸ்ரம ஸ்வாமிஜி , எல்லோரையும் சகஜ நிலைக்குத் திரும்பச் சொல்கிறார். வாசலில் நிற்கும் இறைவனை சைகையால் அங்கே ஓரமாக அமரச் சொல்லிவிட்டு பிரசங்கத்தை ஆரம்பிக்கிறார்.....'காமமே கடவுள்....காமத்தை முறையாக பெறுபவனும்...தருபவனும் இறைவனை தரிசிக்கிறான்...இல்லை இல்லை...இறைவனே அவன் தான்...இறைவனாகவே ஆகுகிறான்' ரஜினிஸ் சாமியார் ரேஞ்சிக்கு பேச்சு சென்று கொண்டு இருக்கிறது,
அருகில் இருந்தவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தார் இறைவன்
பக்தர் : புதுசா வந்திருக்கிங்களா ?
இறைவன் : ஆமாம்
பக்தர் : யார் தேடினாலும் கிடைக்காத இறைவனின் அவதாரம் தான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சர்வேஸ்வர ஸ்வாமிகள்... இன்று இவர் இங்கே ரகசியமாகத்தான் வந்திருக்கிறார்...சொல்லிவிட்டு வந்தால் பக்தர் கூட்டம் கட்டுப்படுத்த முடியாது...குறிப்பாக பெண்களின் கூட்டம்....பகவான் அல்லவா ?
இறைவன் : நான் கூட இறைவன் தான்
பக்தர் : எங்க வந்து என்ன சொல்றிங்க..,பாபம் பண்ணிடாதிங்க...நாமெல்லாம் மனிதர்கள்...அவர் ஒருவர் தான் பகவான்... அவர் தேஜஸ் மின்னுவதைப் பாருங்கள்
இறைவன் பார்த்தார், நியான் மற்றும் சோடியம் விளக்கு புண்ணியத்தில் சாமியாரின் தேஜஸ் மின்னியது
சாமியாரின் அருளுரையை கேட்டு பரவசமடைந்தவர்கள்
"சர்வேஸ்வர பகவானே....நாங்கள் ஜென்மம் தொலைத்தோம்...புண்ணியம் பெற்றோம்" என்கிறார்கள்
நல்ல வேளை ஒரு 'பெண்' வேடம் எடுத்து நான் வரவில்லை...தப்பினேன் அங்கிருந்து மெதுவாக வெளியேறினார்.... இறைவன்
*******
அருகில் இருந்த இறைமறுப்பாளர்களின் தலைவரின் பெரிய பங்களா போன்ற இல்லத்துக்குள் அனுமதி கேட்டு காத்திருந்து உள்ளே செல்கிறார்
இறைமறுப்பாளர் : என்ன விசயமாக வந்திருக்கிங்க
இறைவன் : இறைவன் உண்டு, நான் தான் இறைவன்
இறைமறுப்பாளர் : முதலில் நீங்கள் சொல்வது பொய், அப்படி ஒன்று இல்லவே இல்லை
இறைவன் : நான் தான் உங்கள் எதிரில் இருக்கிறேனே, நான் உண்மை
இறைமறுப்பாளர் : அப்படியென்றால் ஒன்று கேட்கிறேன்..... ஒருபக்கம் பணக்காரர்கள் இருக்கிறார்கள், ஏழைகள் இருக்கிறார்கள் ஏற்றத் தாழ்வு ஏன் ? ஏழைகள் வஞ்சிக்கப்பாடுவது ஏன் ?
இறைவன் : உங்களுக்கு இருக்கும் சொத்து மதிப்பு 500 கோடி...நீங்கள் நினைத்தால் ஒரு லட்சம் ஏழைகளுக்கு உதவி இருக்கலாம், 10 தலைமுறைக்கு சொத்து சேர்த்து இருக்கிறீர்கள், இன்றைய தேதியில் எதிர்காலத்தில் உங்கள் பேரனுக்கு வாரிசு இருக்குமா இல்லையா என்றே உங்களுக்கு தெரியாது...உங்கள் சொத்துக்களெல்லாம் 4 ஆவது தலைமுறையால் தின்றே அழிக்கப்படுமா என்று கூட உங்களுக்கு தெரியாது, இருந்தாலும் பேராசையால் சொத்துக்களை குவித்தே வருகிறீர்கள், நீங்கள் மனது வைத்தால் ஏழைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்....பணக்காரர்களின் சுரண்டலால் தானே ஏழை பரம ஏழை ஆகிறான்
இறைமறுப்பாளர் : இன்கெம்டாக்ஸ் ஆலுவலத்திலிருந்து வந்திருக்கிங்களா ? சொத்துவிபரமெல்லாம் சரியாகச் சொல்றிங்க...நாளைக்கு ஆடிட்டரிடம் பேசுங்க...இப்ப கிளம்புங்க
*******
அங்கிருந்து கிளம்புகிறார்... அருகே ரயில் தண்டவாளம்
ஒருவர் பரபரப்புடன் ரயிலை எதிர்நோக்கி காத்திருக்கிறார்... ரயில் நெருங்கவும் தண்டாவளத்தில் பாய முயன்றவரை இழுத்துவிட்டு.... தனது சக்தியால் அவரை சாந்தமடைய வைத்துவிட்டு
இறைவன் : நான் இறைவன் சொல்லுங்க உங்களுக்கு என்ன கஷ்டம்...
தற்கொலை ஆசாமி : நகை பணமெல்லாம் சூதாட்டத்தில் போய்விட்டது கடன் தொல்லை அதனால் தான் தற்கொலை செய்ய வந்தேன்...நீங்கள் இறைவன் என்றால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுங்கள்...இல்லை என்றால் என்னை சாகவிடுங்கள்.
இறைவன் : நீங்கள் புத்திக் கெட்டுப் போய் செய்த பிழையெல்லாம் என்னால் எப்படி சரிசெய்ய முடியும்... அப்படியே செய்தாலும் மீண்டும் சூதாட்டத்தில் இறங்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம் ?
தற்கொலை ஆசாமி : உதவ முடிந்தால் இருங்கள்...இல்லை என்றால் போய்விடுங்கள்... எனக்கு உங்கள் உபதேசம் தேவையில்லை... என்னைப் பொறுத்து இறைவனே இல்லை என்று முடிவு செய்து கொள்கிறேன்
*******
அங்கிருந்து கிளம்ப
தூயத் தமிழில் ஒருவர் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டு நடந்து செல்ல அவரின் அருகில் சென்று இறைவன்
இறைவன் : நானே இறைவன் அனைத்தையும் ரட்சிப்பவன்
செந்தமிழர் : ரட்சிப்பவன் என்பது வடசொல், காப்பவன் என்று சொல்லி இருக்க வேண்டும், செந்தமிழ் பேசாத நீங்கள் இறைவனாக இருக்க முடியாது.
திடுக்கிட்ட கடவுள்... சொல்லிக் கொள்ளமால்
*******
அங்கே, அருகில் ஒரு ஜோதிடரின் வீட்டை அடைகிறார்
இறைவன் : நான் இறைவன் வந்திருக்கிறேன், உண்மையான இறைவன்
ஜோதிடர் : எனக்கு சனி திசையின் ஆரம்ப நாட்கள் நடக்கிறது, இப்போது இறைவன் எனக்கு முன்பு வரும் கிரக அமைப்பு கொஞ்சம் கூட இல்லை. பைத்தியகாரனுக்கு நான் ஜோதிடம் பார்ப்பது இல்லை...கிளம்புங்க
கிளம்பினார்,
*********
வழியில்,
ஒரு தாயின் இடுப்பில் இருந்த குழந்தை இறைவனைப் பார்த்து முகம் மலர... மிக்க மகிழ்ச்சியுடன் டாட்டா சொல்லியது
"சும்மா இரு.... உங்க அப்பாவுக்கு காட்டச் சொன்னால் காட்ட மாட்டே.....கண்டவங்களுக்கும் டாட்டா காட்டனுமா ?" அந்த தாய் அதனை அதட்டினாள்....இறைவன் அதைக் கேட்டதைத் தெரிந்து சிறிது சங்கடமாக நெளிந்தாள் அந்த தாய்
குழந்தையின் முகத்தில் இருந்த புன்னகையில் கிடைத்த திருப்தியுடன் இறைவன் மறைந்துவிட்டார்.
**********
இறைவனைத் தேடுகிறவர்கள் அனைவருமே....ஓவியத்திலும் கல்லிலும் வடித்திருப்பது போன்று இறைவன் இருப்பான் என்றே நினைக்கிறார்கள்.
சாதரண மனிதனாக வெறும் கையோடு வந்தால் எவரும் உணரக்கூடிய நிலையில் கூட இல்லை. அப்படியே முருகனாகவோ வேறு எதோ ஒரு கடவுளாக முன் தோன்றினாலும் போட்டிருக்கும் நகையெல்லாம் ஒரிஜினலா என்று அறிந்து கொள்ளவே ஆர்வம் காட்டுவர், இவர்கள் துயரப்படும் போது சரியான நேரத்தில் உதவி வரவில்லை என்றால் இறைவன் இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றே என்பர்.
இறைவன் இல்லை என்போரும்....தெரிந்தே செய்யும் தங்களின் அடாத செயல் எவருக்கும் தெரியாமல் இருந்தால் தங்களுக்கு தண்டனை இல்லை...இன்று வரை நன்றாகத் தானே வாழ்கிறோம்... நம்மை யார் தடுக்கிறார்கள் ? ஒருவரும் இல்லையே ! என்ற சுய கேள்வி / பதிலில் இறைவனின் இருப்பை பலமாகவே மறுக்கிறார்கள்
இணைப்பு :
நான் கடவுள் - ஸ்வாமி ஓம்கார்