பின்பற்றுபவர்கள்

29 ஜனவரி, 2010

இராமானுஜர்,வடகலை, தென்கலை !

இராமானுஜரின் பெயர், அவருடைய விஷிட்டாத்வைதம் தத்துவம் பரவலாக்கம் செய்யப்பட்டு பெயர்பெற்றதாக இருப்பதை வைத்து அவருடைய காலம் கிமுவாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்வதுண்டு. பொதுவாக இராமானுஜர், ஆதிசங்கரர் ஆகியோர்களின் பிறப்பை தெய்வீகப் பிறப்பு என்று சொல்லி வருவதன் மூலம் அவர்கள் காலத்திற்கு அப்பாற்பட்டவர்களாக நினைக்க வைத்துவிடுகிறது, இவர்கள் இருவருமே கிமுக்கு பிறகு பிறந்தவர்கள் தாம். இராமனுஜர் கிபி 1017 - 1137 (இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர்)

இராமனுஜரையும், அவரைப் பின்பற்றியவர்களையும் சைவ சமயத்தினர் துன்புறுத்தியதாகத்தான் வரலாற்றில் சொல்லப்படுகிறது. தசவதாரம் படத்திலும் அப்படி ஒரு காட்சி இருக்கும். இராமனுஜரை கொலை செய்ய முயன்றவர்கள் பலர், அதில் கிருமி கண்ட சோழனும் ஒருவன், அந்த நிகழ்வில் இருந்து அவரை தப்பிக்க வைக்க அவருக்கு பதிலாக அவர் பெயரில் சென்றவர் தான் கூரத்தாழ்வார் என்கிறார்கள். கூரத்தாழ்வர் இராமானுஜர் அல்ல என்று ஒற்றர்கள் மூலமாக தகவல் பெற்ற சோழன் கூரத்தாழ்வாரின் கண்களைப் பிடிங்கிவிடுவாரென்றும் அல்லது ஆழ்வாரே பிடிங்கிக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

இராமனுஜரின் காலமும் பக்தி இயக்கம் என்ற பெயரில் வைதீக சைவமும் ஒரே காலத்தில் தான் தோன்றி வளர்ந்திருக்கின்றன. சைவம் ஆதிசங்கரரின் அத்வைதத்துடன் இணைந்த வைதீக சைவமாக வளர்ந்து வந்தது, இதற்கு உரமிட்டவர்கள் மூவர் தேவரம் பாடியதாகச் சொல்லப்பட்ட அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர். இதில் அப்பர் தவிர்த்து மற்ற இருவரும் பார்பனர்கள். இராமனுஜரும் பார்பனரே. முழுமுதல் கடவுள் யார் என்பதை முன்னிறுத்துவதில் தான் சைவத்திற்கும் வைணவத்திற்கும் போட்டியே, இரண்டுமே வேத சார்ப்புடையது வேதங்களில் தங்கள் தெய்வத்தைதான் போற்றி இருப்பதாக இருவரது வாதமும். ஆனால் வேதம் சிவனையோ, கிருஷ்ணனையோ போற்றி இருக்கிறது என்றால் உண்மையில் அவ்வாறு இல்லை, வேதங்களில் பிந்தைய மண்டலங்களில் தான் இருவரும் அறிமுகம் ஆகின்றனர். ரிக்வேதத்தின் முக்கிய இறைவணக்கமே இந்திரனுக்கு உரியதுதான். வேதம் பாஷ்யங்கள் (விளக்கம்) மற்றும் உபநிஷத்துகள் (வேத சாரம் என்பார்கள்) ஆக வளர்ச்சி பெற்றபோது சிவனும் விஷ்ணுவும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஜைனமும், பவுத்தமும் நன்கு வளர்ந்திருந்தது, வேத விளக்கங்களுக்கு இந்திரன் தவிர்த்து ஆரியர் அல்லாதவர்களின் நடைமுறையில் இருக்கும் தெய்வங்களை இணைத்துக் கொண்டால் தான் வேதங்களைப் பரவலாக்கம் செய்ய முடியும் என்பதால் சிவன், விஷ்ணு, வினாயகர் போன்ற வணக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

அவ்வாறு இணைக்கும் போது கந்தபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம் போன்ற கதைகளை எழுதி சேர்ப்பதன் மூலம் இந்த தெய்வங்களுக்கு வேத தெய்வங்கள் என்கிற தகுதியும் கொடுக்கப்பட்டது, வழக்கமாக கதையின் அரசியல் (அதை வேண்டுமானால் தத்துவம் என்பதாக கொள்க) என்ன வென்று தெரியாமல் கதையை மட்டும் உண்மை என்று நம்பும் வழக்கத்தால் இந்த தெய்வங்கள் முன்னிலைக்குச் சென்று, மூல வேதத்தில் போற்றப்பட்ட இந்திரன் காணாமல் போனான். மேலும் மிகுதியாக வைதீகமயமாக்கியதில் தம்மையும் மறந்து இந்திரன் குறித்து மிகவும் ஆபாசமான கதைகளை புனைந்து இந்திரன் என்பவன் ஒரு காமவெறியன் என்ற அளவுக்கு கதையை கேட்பவர்கள் நினைக்க இந்திரனின் சிறப்புகள் எனக் கூறப்பட்டவை அனைத்தும் மறைந்து, நாட்டார், தொல்திராவிட தெய்வங்கள் வேதமயமாயின. மாயோன் (கிருஷ்ணன்), சேயோன்(முருகன்), துர்கை, சிவன் ஆகியவை வேதம் போற்றாத காலத்தில் பார்பனர்கள் அல்லாதவர்கள் வணங்கி வந்தவையே. கருப்பு நிறந்தில் இருந்த கிருஷ்ணன், முருகன் போன்ற தெய்வங்கள் இப்பொழுது பலிங்கு வெண்மைக்கு மாறி பூணூலுடன் வைதீக தெய்வமாக மாறிக் கொண்டன.

பழம் இந்தியா முழுவதிலும் கிருஷ்ணனை வழிபட்டவர்கள், சிவனை வழிபட்டவர்கள் என்பதாகத்தான் தனித்தனி நம்பிகையுடன் இருந்தனர். வேத சார்பில் இவ்விரு தெய்வங்களையும் வேதமயமாக்கியவுடன் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் ஏன் பெரும் குழப்பம் ஏற்பட்டது என்றால் இத்தெய்வங்களை வழிபடுபவர்களிடம் ஆளுமை செலுத்த இரண்டையும் ஒன்றாக்குவதும், ஒன்றை மட்டும் உயர்த்துவது என்பது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. வழி வழி வந்த வழிபாடுகளை விட்டுவிட எவரும் துணியாததால். வைதீக மயமாக்கப்பட்ட கிருஷ்ணன் மற்றும் சிவ வழிபாடுகள் முறையே வைதீக வைணவம், மற்றும் வைதீக சைவம் என்று இரண்டுமே பார்பனத் தலைமையால் பிரிந்தன.

சைவ(பக்தி இயக்க) சமண சண்டையைப் போல், வைண சைவ சண்டை பெரிதாக நடக்கவில்லை, காரணம் இரண்டுமே வேத சார்ப்புடையது என்பதால் தான். மற்றபடி இரண்டிற்கும் ஏற்பட்ட சிறு பூசல்கள் அரச ஆதரவு பெறுவது யார் என்பதில் ஏற்பட்ட பிணக்குகளே. வைணவ பெற்றோர்களுக்கு பிறந்த இராமனுஜர் முறைப்படி வேத கல்வி பெற அத்வைத குரு யாதவ பிரகாசரிடம் சென்றார், அவர் கொடுத்த விளக்கங்களில் இராமனுஜர் மனநிறைவு அடையவில்லை.

'தஸ்ய யாதகப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி' இந்த வேத மந்திரத்திற்கு அத்வைத குரு கொடுத்த விளக்கம் 'பிரம்மனின் கண்கள் குரங்கின் பின்புறம் போல் சிவந்து இருந்தது' இதைக் கேட்ட இராமனுஜர் அதிர்ச்சியுற்றார், ஏனெனில் இராமனுஜருக்கு அத்வைதம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் வடமொழி புலமை பெற்றவர், புண்டரீகம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு, குருவின் விளக்கத்திற்கு மாற்றாக 'பிரம்மனின் கண்கள் (செந்)தாமரை போன்று சிவந்திருந்தது' என்று சொல்கிறது என்றார். குரு அதிர்ச்சியுற்றாலும், இராமனுஜர் தன்னை மறுக்கிறார் என்று நினைத்து சினம் அடைந்தார் என்றும், மேலும் குரு சொல்லிக் கொடுக்கும் 'நான் கடவுள்' என்று சொல்லும் அத்வைத சித்தாந்தை பலமாக மறுத்து வந்தவர் என்பதாலும் அத்வைததிற்கு ஆபத்து என்று அலறிய யாதவ பிரகாசர், இராமனுஜரை தீர்த்துக்கட்ட முயன்றார், இராமனுஜரை கங்கைக்கு பயணப்பட வைத்து அங்கு மற்ற மாணக்கரில் ஒருவர் மூலமாக கங்கை ஆற்றில் இராமனுஜரை தள்ளிக் கொல்லும் திட்டம், இராமனுஜர் உறவினர் ஒருவர் உதவியால் தப்பித்து வந்துவிடுவார், அன்றிலிருந்து குருவும், இவரும் பிரிந்துவிடுவார்கள். இது தான் இராமனுஜரை கொலை செய்ய முயற்சிக்கும் முதல் நிகழ்வு, அதன் பிறகு சோழன், அதன் பிறகு திருவரங்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மற்ற பார்பனர்கள், இராமனுஜர் பிச்சை ஏற்கும் போது பிச்சையிடும் ஒருவரின் உணவில் விசம் வைத்துக் கொள்ள முயன்றதாகவும் அதிலும் இராமனுஜர் பிச்சையிட்டவரின் அப்போதைய முகபாவம் வைத்து தெரிந்து கொண்டு தப்பினார் என்கிறது இராமனுஜர் பற்றிய (இந்திரா பார்த்தசாரதியின் இராமனுஜர்பற்றி நூல்)

இராமனுஜரின் விஷ்டாத்வைததில் இருந்து பிரித்ததே மத்வரின் த்வைதம், இராமனுஜர் போற்றிய அனைத்து சாதிகளையும் அடக்கிய வைணவம் 18 ஆம் நூற்றாண்டில் தான் யார் காஞ்சியா ?, திருவரங்கமா ? யார் ஆளுமை செலுத்துவது என்கிற போட்டியில் மனவாள மாமுனிகள் (தென்கலை, லட்சுமி வணக்கம், சாதிவேறுபாடு கூடாது என்பவர்) மற்றும் வேதாந்த தேசிகர் (வடகலை பார்பனர் தலைமையே சிறப்பு என்பவர்)ஆகியோர்களை பின்பற்றிவோர் களுக்கிடையேயான போட்டியாக வடகலை (வட மொழி வேதம் போற்றுபவர்கள்), தென்கலையாக (நாலாயிரம் திவ்ய பிரபந்தம் போற்றுபவர்கள்) பிரிந்தது என்கிறது இராமனுஜர் பற்றிய தொடர்புடைய தகவல்கள்.

மற்றபடி சைவ சித்தர்கள் 18, நாயன்மார்கள் கதைகளுக்கும், வைணவ 12 ஆழ்வார்கள் கதைகளுக்கும் பூச்சுற்றல் அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை, சமயம் வாய்க்கும் போது ஆழ்வார்கள் பற்றி எழுதுகிறேன்.

இன்றைக்கு பலரை போலி சாமியார்கள் என்கிறோம், காரணம் தோற்றம் ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கும், பொதுவாக வைதீக சமயங்களில் சமயத்தலைவர்கள் முற்றிலும் மழித்துக் கொள்வது வழக்கத்தில் இருந்தது இல்லை. சிறிய உச்சிக் குடுமி உண்டு. பழைய புராணங்களில் இருக்கும் அனைத்து ரிஷிகளும், குருமார்களும் சடைமுடி வைத்திருப்பதாகத்தான் காட்டினார்கள். இராமனுஜரும் சரி, ஆதிசங்கரரும் சரி அப்போது முழுதாக மொட்டை அடித்துக் கொள்ளும் சமண, பெளத்தர்களைப் போல் தாங்களும் முழுதாக மழித்துக் கொண்டார்கள், இவர்கள் பரப்பியது இவர்களது வேதமே என்றாலும் கூட அவர்களின் கோலங்கள் பெளத்தசாமியார்களைப் போன்றே இருந்தது, இதில் ஆதிசங்கரர் பெளத்தர்களின் மாயவாதத்தை புதிய ஞானமாக திரித்து அதை அத்வைதம் என்றார். அத்வைதம் முழுமுதற்கடவுள் என்று எதையும் காட்டவில்லை என்பதால் அத்வைதத்தை 'பிரசன்ன பவுத்தம்' அதாவது போலி பவுத்தவாதம் என்று பழித்தவர்களில் இராமனுஜரும் ஒருவர்.

துறவிகள் போலி வேசம் போடுவது புதியதும் அல்ல, இந்தியாவுக்கு பிரச்சாரத்திற்கு வந்த கிறிஸ்துவ பாதிரியார்கள் இந்துசாமியர்களைப் போல் தான் உடை அணிந்திருந்தார்கள். மக்கள் எதை சிறப்பாக கருதுகிறாகளோ அந்த வேடத்தைத்தான் துறவிகள் போட்டுக் கொள்கிறார்கள். நாளடைவில் அது அவர்களது அடையாளமாகவே போய்விடுகிறது. எனக்கு இராமனுஜர் உருவத்தைப் பார்க்கும் போது நாமம், கொடிகளை எடுத்துவிட்டுப்பார்த்தால் நீண்ட காது மற்றும் மொட்டையுடன் சமண மற்றும் பவுத்த துறவி போன்றே தெரிகிறார். பெளத்த, சமண புலால் மறுத்தலை உயர்வாக இராமனுஜர் மற்றும் சங்கரர் பின்பற்றி வரித்துக் கொள்ள பிறகே தென்னிந்திய பார்பனர்கள் சைவ உணவுக்கு மாறினார்கள்.

65 கருத்துகள்:

Robin சொன்னது…

நன்றி ஐயா!

துளசி கோபால் சொன்னது…

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு வரிசையில் இப்போது வைணவமா?

ஜமாய் ராஜா ஜமாய்:-))))

Unknown சொன்னது…

//வைணவ 18 ஆழ்வார்கள் //
:(

மொட்டையடித்தாலே பவுத்தனா? புத்தரை ஏன் இப்பொழுதும் ஜடா முடியுடன் வரைகிறார்கள்?

கோவி.கண்ணன் சொன்னது…

// nandan said...

//வைணவ 18 ஆழ்வார்கள் //
:(

மொட்டையடித்தாலே பவுத்தனா? புத்தரை ஏன் இப்பொழுதும் ஜடா முடியுடன் வரைகிறார்கள்?//

புத்தர் தலைமுடியோடு இருப்பார், புத்த பிட்சுகள் மொட்டைதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு வரிசையில் இப்போது வைணவமா?

ஜமாய் ராஜா ஜமாய்:-))))//

ஐயோ ஐயோ.... என் கற்பனைகள்னு எதுவுமே கிடையாது ராமானுஜர் பற்றிய தகவல்கள் இபா வின் நூலில் படித்தது தான். சைவம் மற்ற தகவல்கள் பல தளங்களில் படித்தவை.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// Robin said...

நன்றி ஐயா!//

நன்றி !

sowri சொன்னது…

Good analysis.

Radhakrishnan சொன்னது…

தங்கள் பதிவுகளிலிருந்து பல விசயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி.கண்ணன்,

//இருவருமே கிமுக்கு பிறகு பிறந்தவர்கள் தாம். இராமனுஜர் கிபி 1017 - 1137 (இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர்)//

இருவரும் கிமு என கூறி கிபி என சுட்டிகாட்டுகிறீர்க்ளே.. புரியலை..


வைணவத்தில் அத்வதைத்தம் உண்டு என்பது தெரியுமோ :) ?

ராமானுஷர் வழித்தோன்றல்கள் ஐயங்கார்கள் என வழங்குகிறார்களே? அவர்களும் வைணவர்களும் ஒன்றா?

குமரன் (Kumaran) சொன்னது…

கோவி.கண்ணன்,

இராமானுச சரணம் கச்சாமி. :-)

சில விளக்கங்கள். உங்கள் புரிதல்கள் அனைத்தும் எனக்கு ஏற்புடையவை இல்லை; ஆனால் அவை புரிதல்கள் என்பதால் அவற்றைப் பற்றிய விளக்கங்களைத் தர முற்படவில்லை; புரிதல்கள் மாறிக் கொண்டே இருக்கும்; ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்; அதில் விளக்கங்கள் தந்து முடிவுறாது. இங்கே தரப் போகும் விளக்கங்கள் உண்மைச் செய்திகளின் மேல்.

பௌத்த சைனர்கள் (சமணர்களில் இருவகையினர் - உங்களின் முந்தைய இடுகையின் படி - இராம.கி. ஐயாவின் விளக்கத்தின் படி) தலைமுடியை முழுவதும் சிரைத்துக் கொள்வார்கள். சங்கரரின் வழி வந்த அத்வைதிகளும் அவ்வாறே. ஆசிவகர்கள் (சமணர்களில் இன்னொரு வகையினர்), இராமானுசரின் முன்னும் பின்னும் வந்த விசிஷ்டாத்வைதிகள், மத்வரின் முன்னும் பின்னும் வந்த த்வைதிகள், (சைவ சிந்தாந்திகளும் என்று நினைக்கிறேன்) - இவர்கள் எல்லாம் முழுக்க சிரைப்பதில்லை - துறவுக்கு முன்னர் இருந்ததைப் போல் குடுமியுடன் தான் இருந்தார்கள்; இருக்கிறார்கள். படங்களில் முன்பக்கத்தை மட்டுமே பார்க்க முடிவதால், பாவம், உங்களுக்கு அவர்களின் குடுமி தென்படவில்லை.

எனினும் உங்களுக்காக இன்னொரு முறை சொல்கிறேன் - இராமானுச சரணம் கச்சாமி. :-)

வடக்கு = காஞ்சிபுரம்; தெற்கு = திருவரங்கம். வடகலை - காஞ்சிபுரத்தில் இருந்தவர்கள்; தென்கலை = திருவரங்கத்தில் இருந்தவர்கள். அவ்வளவு தான் வேறுபாடு.

வடகலை தென்கலையைப் போலவே பார்ப்பனைத் தலைமையை வலியுறுத்துவதில்லை; திருமகளின் முதன்மையை இருகலைகளும் வற்புறுத்துகின்றன. 'திருமகளும் நம்மையுடையவள்' என்ற தலைப்பில் ஒரு இடுகை கூடலில் இருக்கிறது. அது வேதாந்த தேசிகரின் கருத்தினை விவரிக்கும் இடுகையே. வேதாந்த தேசிகர், மணவாள மாமுனிகள் இருவருமே பிறப்பால் பார்ப்பனர்களே. இருவருமே, இரு பிரிவினருமே, பல சாதிகளில் பிறந்த ஆழ்வார்களையும் ஆசாரியர்களையும் போற்றுபவர்களே. சாதி வேறுபாடுகளை மறுத்தவர்களே இரு ஆசாரியர்களும்.

எங்கேயோ படித்ததன் படி இந்த திருவரங்கம், காஞ்சிபுரம் வேறுபாட்டை நீங்களும் குறித்திருக்கிறீர்கள்; ஆனால் பாவம் அங்கே படித்த அந்த விளக்கம் முழுமையாக மனத்தில் பதிவதற்குள் உங்கள் வழக்கமான 'பார்ப்பனர்; பார்ப்பனரல்லாதார்' அரசியல் உங்கள் கருத்தினைக் குழப்பி அதே வரியில் குழப்ப வாதம் பேச வைத்துவிட்டது.

நீங்கள் சுட்டி தந்திருக்கும் இடத்திலும் மிக மிகத் தெளிவாக ‘some race-oriented devotees (an oxymoron) call the Vadakalai the Sanskritic Aryan Srivaishnava theology and Tenkalai the Tamil Dravidian’. Oxymoron என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நகைமுரண் என்போமே அது. 'இன வேறுபாட்டைப் பார்க்கும் பக்தர்கள்' என்று சொல்லிவிட்டு அப்படிப் பார்ப்பவர்கள் பக்தர்களே இல்லை என்று குறிக்க அதனை நகைமுரண் என்கிறது அந்தப் பக்கம்; அப்படிப் பட்ட அரைகுறை மந்தபுத்திகளே, பக்தர்கள் வேடம் போடும் இன வேறுபாட்டை முதன்மையாகக் காணுபவர்களே, வடகலை சமஸ்கிருத ஆரிய சமயம் என்றும், தென்கலை தமிழ் திராவிட சமயம் என்றும் கூறுவார்கள் என்று சொல்கிறது. உண்மையான பக்தர்கள் அப்படி சொல்லமாட்டார்கள் என்பது அந்த வரியின் தெளிவான கருத்து. உண்மையான பக்தர்கள் தான் அப்படி சொல்ல மாட்டார்கள். நீங்கள் (நானும்?) சொல்லலாம். :-)

அந்தப் பக்கம் முழுமையும் இன்னும் படிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்க்கும் போது வடகலை, தென்கலை இரண்டிற்கும் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையை வலியுறுத்தும் பக்கம் போல் தோன்றுகிறது. இந்தப் பக்கத்தைத் தந்ததற்கு நன்றி - படித்துப் பார்க்கிறேன்.

சங்கரர் கி.மு. என்று படித்த நினைவு இருக்கிறது; ஆனால் யாருமே இராமானுசர் கி.மு. என்று சொல்லி படித்த நினைவு இல்லை. அவர் காலம் 10 ஆம், 11ஆம் நூற்றாண்டு என்றே படித்த நினைவு.

கண்ணன் கரு நிறம் என்று இந்திய இலக்கியங்கள் அனைத்துமே சொல்கின்றன; அதே போல் முருகன் சேந்தன்/சிவந்தவன் என்றே இந்திய இலக்கியங்கள் அனைத்துமே சொல்கின்றன. கருப்பு நிறத்தில் முருகன் இருந்தான் என்பதற்கு ஏதேனும் தரவுகள் தர இயலுமா? நான் அறிந்த வரையில் சேயோன் சிவந்த நிறத்தவனே.

கருநிற முருகனுக்கு அரோகரா!
இராமானுச சரணம் கச்சாமி!
கோவிக்காத கண்ணன் திருவடிகளே சரணம்! :-)

கோவி.கண்ணன் சொன்னது…

குமரன்,

உங்கள் பின்னூட்டம் எதிர்பார்த்தேன்.
:)

மற்றபடி வடகலை தென்கலை பற்றி இபா எழுதியதை இங்கு என் வழியில் குறிப்பிட்டேன். அவர் சாதிவேறுபாடட்ற்ற நிலையை போற்றியவர் மனவாள மாமுனிகள் என்றார் தேசிகரின் வழித்தோன்றல்கள் அவ்வாறு இல்லை என்பதாக குறிப்பிட்டு இருந்தார். சாதிவேறுபாடட்டற்ற என்ற சொல்லுக்கும் பார்பன பார்பனரல்லாத தலைமைகள் என்பதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. சொல்லை மாற்றிப் போடும் போது புரிதல் வேறாக இருக்கும் இருந்தாலும் பொருள் ஒன்று தான். சாதிவேறுபாடு பார்க்காத பார்பனர் என்பதற்கும் பார்பனர் பார்பனர் அல்லாதவர் பார்க்காத பார்பனர் என்று எழுதுவதும் பொருள் ஒன்று தான் புரிதல்கள் வேறு.

வேறுபாடுபார்க்கதவர்கள் பக்தர்கள் இல்லை என்றால் யானைக்கு நாமம் (எந்த கலை) போடுபவர்கள் பக்தர் இல்லைன்னு நாம சொல்வதை அவங்க கேட்கனுமே. :)

செவ்வேல் முருகன் நானறிந்தது வேலின் பெயர் முருகனின் நிறத்தையும் முடிவு செய்யும் என்பது நான் அறியாத ஒன்று.

பொன்னாற் மேனியான் சிவன், அதற்காக சிவன் சிகப்பு நிறமானவன் இல்லை. சோதியின் அடையாளப் பெயர் அது, உருவம் குறித்து இல்லை. சிவனுக்கு நாம் பார்க்கும் நடராஜன் சங்கரன் உருவம் இல்லை என்பது நான் அறிந்தவை. எனவே என்னைப் பொருத்த அளவில் சிவப்பி என்று பேருடைய பெண் சிவப்பாக இருக்க வேண்டியது இல்லை என்பதான புரிதல் உண்டு.

எனக்கு வைணவத்திற்கும் சைவத்திற்கும் கூட தொடர்பு இல்லை, எனவே இதில் காழ்புணர்வாக என் சொந்த கருத்து எதையும் வன்மையாக வலியுறுத்தவில்லை. அதில் இருக்கும் அரசியலை எழுதும் போது அப்படியாக நினைக்க வைக்கும் என்பதை அறிவேன். இருந்தாலும் பக்தி ரசமாக எழுத நான் அடியார் இல்லை என்பது உங்களுக்கு தெரியும். நான் எழுதி இருப்பது ஆத்திக நாத்திக கடந்து மூன்றாம் பார்வையாக (நெற்றிக் கண் இல்லை) எடுத்துக் கொள்ளுங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் சுட்டி தந்திருக்கும் இடத்திலும் மிக மிகத் தெளிவாக //

அந்த சுட்டி எனக்கு சுட்டிக்காட்டியது துளசி அம்மா, அவர்களுக்கு என் நன்றி.

priyamudanprabu சொன்னது…

உள்ளேன் அய்யா......

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பதிவு செய்வதற்காக இந்தப் பின்னூட்டம்!

குமரன், பயனில்லை என்பது தெரிந்துமே ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். அதற்குமேலும் இன்னமும் விரிவாகப் பேச வேண்டுமென்றால் சில அடிப்பதைத் தத்துவ நிலைகளில் தெளிவு வந்த பிறகே முடியும்.

இது சுவாமி ஓம்காருக்காக--

பாஞ்சராத்ரம் என்பது வைணவ வழிபாட்டு முறை. அதைப் பின்பற்றுகிறவர்கள் அய்யங்கார் அவ்வளவு தான்!

விசிஷ்டாத்வைதம் -இந்த வார்த்தையைப் பிரித்துப் பார்த்தாலே விசிஷ்ட- அத்வைதம் என்று தெரிய வருமே!

ஆனால், சங்கரர் சொல்வதுபோல, இந்த உலகமே பொய்-பிரம்மம் மட்டும் தான் மெய் பிரம்ம சத்யா ஜகன் மித்யா என்கிற மாயாவாதத்தை நிராகரித்து, மெய்ப்பொருளைச் சுட்டுவது விசிஷ்டாத்வைதம்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

:)))

//எனக்கு இராமனுஜர் உருவத்தைப் பார்க்கும் போது நாமம், கொடிகளை எடுத்துவிட்டுப்பார்த்தால் நீண்ட காது மற்றும் மொட்டையுடன் சமண மற்றும் பவுத்த துறவி போன்றே தெரிகிறார்//

இராமானுச சரணம் கச்சாமி
மாறன் நம்மாழ்வார் சரணம் கச்சாமி
சேனை முதலியார் சரணம் கச்சாமி

எங்கள் கோவி கண்ணன் சரணம் கச்சாமி கச்சாமி! :))

சிங்கக்குட்டி சொன்னது…

நடக்கட்டும் நடக்கட்டும்... சரி,அதை விடுங்க. நான் சொல்ல வந்தததை சொல்லிவிட்டு போகிறேன்.

ஒன்று இராமனுஜர் கிபி தான், அவர் சமாதி நிலையை அடைந்து 850+ வருடமாகிறது.

இரண்டு

//எனக்கு இராமனுஜர் உருவத்தைப் பார்க்கும் போது நாமம், கொடிகளை எடுத்துவிட்டுப்பார்த்தால்//

அவ்வளவு ஏன் கற்பனை கஷ்டம் உங்களுக்கு :-).

ஸ்ரீ ரங்கம் கோவிலுக்குள் இன்றும் அவர் திருமேனி கடந்த 850+ வருடமாக திறந்த இடத்தில் தான் அமர்ந்து இருக்கிறது!.

ஒரு முறை நேரில் சென்று பார்த்து விட்டு வாரலாமே? அல்லது ...

http://www.ramanuja.org/sv/temples/srirangam/ramanuja-image.html

வாய்ப்புக்கு நன்றி கோவி.கண்ணன்.

குமரன் (Kumaran) சொன்னது…

கண்ணன்,

நான் கேட்டது: கருநிற முருகனைப் பற்றிய தரவுகளைத் தாருங்கள்.

நீங்கள் சொன்னது: செவ்வேல் முருகன் நானறிந்தது வேலின் பெயர் முருகனின் நிறத்தையும் முடிவு செய்யும் என்பது நான் அறியாத ஒன்று.

இப்போது நான் சொல்வது: லகர ளகர வேறுபாடுகள் உங்களுக்கு தகராறு என்று தெரியும்; ஆனால் புரிதல் குறைகளை அது ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை. செவ்வேல் செவ்வேள் என்று இரண்டு சொற்கள் இருக்கின்றன. செவ்வேல் என்னும் போது அது வேலைக் குறிக்கிறது; செவ்வேள் என்னும் போது? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பொருள் என்ன என்று புரியாவிட்டால் புரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். கற்றது கைம்மண்ணளவு தானே எனக்கும்?! அதனால் தான் புரிந்தவர்களிடம் கேட்கச் சொல்கிறேன்.

இன்னும் சொல்ல இருக்கிறது. பயனில்லை என்று தெரிந்தும் அதனை கிருஷ்ணமூர்த்தி ஐயா சொல்லி எச்சரித்த பின்பும் நேரத்தை வீணாக்க வேண்டுமோ என்று இருக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//இன்னும் சொல்ல இருக்கிறது. பயனில்லை என்று தெரிந்தும் அதனை கிருஷ்ணமூர்த்தி ஐயா சொல்லி எச்சரித்த பின்பும் நேரத்தை வீணாக்க வேண்டுமோ என்று இருக்கிறது.

10:41 PM, January 31, 2010
//

எனக்கும் கூடத்தான் சொல்லிவருகிறார். நான் வலைப்பதிவில் தீவிரவாதம் எதையும் வளர்க்கவில்லை, என்பதால் அவர் சொல்வதை கருத்து என்று மதிப்பதோடு சரி. நாம என்ன எழுத வேண்டும் என்பதை நாம் முடிவு செய்வது தான் எழுத்து சுதந்திரம் என்று நினைக்கிறேன். நீங்களாச்சு அவராச்சு. நீங்க ஏன் குறைவாக கருத்து சொல்கிறீர்கள் என்று நான் கேட்கமாட்டேன். உங்களின் அந்த கருத்து அவருக்கான 'மெசேஜ்' என்று எடுத்துக் கொள்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...
கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பதிவு செய்வதற்காக இந்தப் பின்னூட்டம்!

குமரன், பயனில்லை என்பது தெரிந்துமே ஒரு நீண்ட விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். //

பிறர் எழுதுவது குப்பை என்று நாசுக்காக சொல்லவும் நல்ல மனம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
:)))

//எனக்கு இராமனுஜர் உருவத்தைப் பார்க்கும் போது நாமம், கொடிகளை எடுத்துவிட்டுப்பார்த்தால் நீண்ட காது மற்றும் மொட்டையுடன் சமண மற்றும் பவுத்த துறவி போன்றே தெரிகிறார்//

இராமானுச சரணம் கச்சாமி
மாறன் நம்மாழ்வார் சரணம் கச்சாமி
சேனை முதலியார் சரணம் கச்சாமி

2:19 AM, January 31
//

சரணம் என்றால் சரணாகெதி தானே. நாராயணாவும் இதைத்தானே சொல்லுது. உங்கள் சரணம் ஓகே தான். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
உள்ளேன் அய்யா......
//

நன்றி !

குமரன் (Kumaran) சொன்னது…

தல. இது என்ன புதுவிதமான வேலையாக இருக்கிறது?! கிருஷ்ணமூர்த்தி ஐயா என்ன சொன்னார் என்பதும் நான் என்ன சொன்னேன் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. என் கருத்தைக் குப்பை என்று அவரும் அவர் கருத்தை எழுத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது என்று நானும் நினைக்கவில்லை. தேவையில்லாத திசை திருப்பல்கள் வேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

// என் கருத்தைக் குப்பை என்று அவரும் அவர் கருத்தை எழுத்துச் சுதந்திரத்தைப் பறிப்பது என்று நானும் நினைக்கவில்லை.//

அடியேன் என்னைப் பற்றிக் கூறிக் கொண்டு, இங்கு தன்மைகள் என்னுடையவை, முன்னிலைக் குறித்து அல்ல. மறு உறுதிப்படுத்துகிறேன்.

"நான் எழுதுவது குப்பை என்று நாசுக்காக சொல்லவும் நல்ல மனம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. நன்றி !"

குமரன் (Kumaran) சொன்னது…

a > b என்று ஒருவர் சொன்னால், a > c என்று இன்னொருவர் சொன்னால், நீங்கள் இரண்டையும் 'தவறாக'ப் புரிந்து கொண்டு b > c என்பீர்கள். எப்படி ஐயா என்று கேட்டால் வேறு பக்கம் சென்றுவிடுவீர்கள். இதனைப் பார்த்துவிட்டும் விளக்க வருவதைத் தான் கிருஷ்ணமூர்த்தி ஐயாவும் நானும் 'பயனில்லாத' வேலை என்று சொல்கிறோம். நான் சொன்னவற்றிற்கு மேல் விளக்கங்களைத் தான் தருவதாகத் தான் ஐயா சொன்னார். என் விளக்கங்கள் குப்பை என்று அவர் நாசூக்காகச் சொன்னார் என்றால் நான் சொன்னவற்றிற்கும் கூடுதலாக அவர் சொன்னவற்றை அவரே குப்பை என்று நாசூக்காகச் சொல்கிறாரா? அப்படி சொல்கிறார் என்று நீங்கள் சொன்னால் கேட்பவர்கள் உங்களைப் போல் கேணையர்களா?

நேர்மையாக உரையாடுபவர் என்றால் கருநிற முருகன் என்பதற்குத் தகுந்த தரவுகள் தாருங்கள். இல்லை செவ்வேல் செவ்வேள் இரண்டையும் குழப்பிக் கொண்டேன் என்று ஒத்துக் கொள்ளுங்கள். நேர்மையில்லாத தனி நபர் தாக்குதல்கள் வேண்டாம்; நானும் இங்கே இந்தப் பின்னூட்டத்தில் இறங்குவது போல் தனி நபர் தாக்குதல்களில் இறங்க எனக்கும் தெரியும். அந்தத் தரத்திற்கு உங்கள் பதிவினைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். கருத்தினைப் பேசும் போது திசை மாற்றாமல் கருத்தினை மட்டுமே பேசுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் பேசுகிறேன். அந்த நம்பிக்கையைக் குலைக்க வேண்டாம்.

குமரன் (Kumaran) சொன்னது…

சரி. நான் எழுதியது குப்பை என்று கிருஷ்ணமூர்த்தி ஐயா சொல்கிறார் என்று நீங்கள் திசை திருப்பியதாக நான் நினைத்தது தவறு என்று புரிந்து கொண்டேன். மன்னித்துக் கொள்ளுங்கள். பிறர் எழுதுவது என்று சொன்னது உங்களையும் குறிக்கலாம்; என்னையும் குறிக்கலாம். இங்கே அது உங்களை மட்டுமே குறித்ததாக நீங்கள் எண்ணி எழுதினீர்கள் என்று இப்போது புரிந்து கொண்டேன். தவறான புரிதலுக்கு மன்னிக்கவும்.

ஆனால் a > b, a > c, so b > c என்று நீங்கள் சொல்வதாக நான் நினைப்பது என்னவோ உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிறர் எழுதுவது குப்பை என்று நாசுக்காக சொல்லவும் நல்ல மனம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. நன்றி !//

எனக்கு தெரிந்து மனிதர்கள் சிவப்பாக கிடையாது. அது எந்த காலமாக இருந்தாலும். சிவப்பு இந்தியர் என்பதால் அவர்கள் சிவப்பு நிறத்தில் இருப்பது இல்லை.

முருகனுக்கு தாங்கள் குறிப்பிட்டிருக்கும் செந்நிறம் பண்பு பெயரே. அது பண்பு பெயர் இல்லை என்று மறுப்பதற்கு நீங்கள் தான் தரவுகள் தரவேண்டும். சாம்பலைப் பூசிக் கொள்ளும் பித்தன் சாம்பல் நிறமானவன் என்பது போல் முருகனுக்காக செந்நிறமும் அவன் போர்வீரன் என்பதால் குறுதியில் தோய்ந்தவன் என்பதற்காக சென்னிற முருகன் என்று பண்பு பெயராகச் சொல்லி இருக்கிறார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

செவ்வேள் என்பதில் இருக்கும் செம்மை பண்புப்பெயர் என்று சொல்வதற்கும் முருகன் கருநிறம் கொண்டவன் என்று சொல்வதற்கும் வேறுபாடு உண்டா இல்லையா? செம்மையைப் பண்புப்பெயர் என்று நீங்கள் சொல்லியிருந்தால் ஒத்துக் கொண்டிருப்பேன் - ஏனெனில் அப்படி இருக்க வாய்ப்புண்டு. ஆனால் முருகன் கருநிறம் கொண்டவன் என்று தான் நீங்கள் சொன்னீர்கள் - அப்படிச் சொல்லும் தரவு ஒன்றையும் நான் பார்த்ததில்லை. அதனால் அப்படிச் சொன்ன நீங்கள் தான் தரவு தரவேண்டும்; இல்லை அது ஊகம் மட்டும் தான் என்றால் தரவுகளைக் கேட்கவில்லை; உங்கள் கருத்து அறுதியானதில்லை என்பதையும் ஊகம் மட்டுமே என்பதையும் ஒத்துக் கொள்ளுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பிறர் எழுதுவது என்று சொன்னது உங்களையும் குறிக்கலாம்; என்னையும் குறிக்கலாம்.//

இன்னொருவர் எழுதியதை அவ்வாறு நான் சொல்ல முயன்றது இல்லை. ஆனால் என் குறித்துக் கூறிக் கொள்ள எனக்கு உரிமை இருக்கிறது. பிறர் என்ற சொல் அவருக்கு பிறர் (முன்னிலை), அதில் என் தன்மை நான் உண்டு.

இங்கு பிரச்சனையே கருத்து சொல்வது வேஸ்ட் என்பது போல் அவர் உதிர்த்தது தான். அதில் கொஞ்சம் எரிச்சல் ஒப்புக் கொள்வதில் எனக்கு தயக்கம் இல்லை. அவராக எப்படி நான் இப்படித்தான் என்று முடிவு செய்து கொள்ளலாம் என்று கேட்க தேவையான காரணங்கள் உண்டு.

உங்கள் பதிவில் அவர் இவ்வாறு சொன்னால் பொறுமையாக எடுத்துக் கொண்டு பதில் சொல்லுவீர்களா ?

எல்லாவற்றையும் சேர்த்து பாருங்கள், நான் ஏன் உங்கள் பாணியில் சொல்வதென்றால் திரித்தேன் என்பது புரியும். நானும் அதை இல்லை என்று சொல்லவில்லை

குமரன் (Kumaran) சொன்னது…

இப்படியே உங்கள் கருத்துகள் ஒவ்வொன்றையும் எடுத்துக் கொண்டு அறுதியாகக் கூறுவதற்கு இல்லை என்று காட்டமுடியும். ஆனால் அது உங்கள் கருத்தை மாற்றுமா? இல்லை. விவாதத்தால் கருத்துகள் மாறினால் அது பயனுள்ள விவாதம். இல்லையேல்? அது பயனில்லாதவையே. உடனே நான் உங்கள் இடுகைகளைக் குப்பை என்று நாசூக்காக சொல்கிறேன் என்பீர்கள். குப்பைகளைத் தொடர்ந்து படிப்பதையும் படிக்கிறோம் என்று பதிவு செய்வதையும் ஏன் தான் செய்கிறோமோ நானும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவும்?! :-) நாங்கள் தொடர்ந்து படிப்பதும் படிக்கிறோம் என்று சொல்வதுமே நீங்கள் எழுதுவதைக் குப்பை என்று நாங்கள் நினைக்கவில்லை என்று காட்டுகிறது. புரிகிறதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் கருத்து அறுதியானதில்லை என்பதையும் ஊகம் மட்டுமே என்பதையும் ஒத்துக் கொள்ளுங்கள்.//

அதில் எனக்கு தயக்கம் இல்லை. ஏனெனில் விண்ணவன் என்கிற மாலோனுக்கு சங்க இலக்கியங்களில் நிறம் குறித்து எதுவும் கூறவில்லை என்றே நினைக்கிறேன்(மறுபடி ஊகம் தான்) ஆனால் முருகன் வெள்ளையோ, சிவப்போ அவையாவும் பண்பு பெயர்களே என்று என்னளவில் நினைக்கிறேன். மற்றபடி முருகன் இந்த நிறம் தான் என்று அடித்து சொல்ல முருகனை யாரும் பார்த்தது இல்லை என்பதும் உண்மை தானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//குப்பைகளைத் தொடர்ந்து படிப்பதையும் படிக்கிறோம் என்று பதிவு செய்வதையும் ஏன் தான் செய்கிறோமோ நானும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவும்?! :-) நாங்கள் தொடர்ந்து படிப்பதும் படிக்கிறோம் என்று சொல்வதுமே நீங்கள் எழுதுவதைக் குப்பை என்று நாங்கள் நினைக்கவில்லை என்று காட்டுகிறது. புரிகிறதா?//

உங்களைப் பற்றிக் கூறிக் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அவரும் அப்படித்தான் என்று நீங்கள் நினைத்தால் அது ஊகம் தான். என் எழுத்தைப்பற்றி அவர் சொன்னதற்கு நான் பதில் சொல்லி இருக்கிறேன் அவ்வளவு தான். நீங்களும் அவரைப் போல் நினைக்கிறீர்களா என்று நான் கேட்கவில்லை, ஆனால் நீங்கள் தான் அவர் சொல்வது (அவர் சொன்னதாக நான் சொன்னது இல்லை :)) சரி என்று ஒப்புதல் கொடுத்துவிட்டீர்களே !

குமரன் (Kumaran) சொன்னது…

பதிவு செய்கிறேன் என்று சொன்னது அவர் தான். அதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
செவ்வேள் என்பதில் இருக்கும் செம்மை பண்புப்பெயர் என்று சொல்வதற்கும் முருகன் கருநிறம் கொண்டவன் என்று சொல்வதற்கும் வேறுபாடு உண்டா இல்லையா?
//

கருநிறம் என்று நிறம் குறித்து சொல்லாமல் பூணூல் அணிந்திருந்திடாத முருகன் என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
பதிவு செய்கிறேன் என்று சொன்னது அவர் தான். அதனை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

12:18 AM, February 01, 2010
//

நானும் என் எதிர்ப்பை பதிவு செய்தேன், அவருக்கும் எனக்கு பதிவுலகைத் தாண்டிய நட்பு உண்டு, ஆனால் அதற்கும் என் எழுத்திற்கும் தொடர்ப்பு இல்லை. இதை நான் உங்களுக்கு கூறினாலும் மேசேஜ் அவருக்குத்தான் :)

குமரன் (Kumaran) சொன்னது…

மாயோன் என்ற பெயரைக் கேட்டிருக்கிறீர்களா? மாயோள் என்று கொற்றவையை சங்க இலக்கியம் கூறும். இரண்டுமே அவர்களின் நிறத்தைத் தொட்டு வந்த பெயர்கள். கருநிறம் கொண்டவர்கள் என்று பொருள். குருதி தோய்ந்தவன் செந்நிறம் கொண்டது போல் கருநிறம் கொள்ள இவர்கள் என்ன பூசிக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லுங்கள். கண்ணனின் கருநிறத்தைப் பற்றி சங்க இலக்கியங்களிலிருந்து இன்னும் சான்றுகள் நிறைய தரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் மறுமொழியைப் பார்த்து அதனைச் செய்கிறேன். அதே போல் முருகன் கருநிறம் என்று உங்களால் சான்றுகள் தர இயலாது என்பதே என் தற்போதைய புரிதல். வெறும் ஊகங்களாலே கருத்துக் கோட்டை எழுப்புவதில் நீங்கள் வல்லவர் என்பதும் என் புரிதல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதே போல் முருகன் கருநிறம் என்று உங்களால் சான்றுகள் தர இயலாது என்பதே என் தற்போதைய புரிதல். வெறும் ஊகங்களாலே கருத்துக் கோட்டை எழுப்புவதில் நீங்கள் வல்லவர் என்பதும் என் புரிதல்//

எதோ எந்த நிறம் இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை. நான் எழுதுவதை ஆதாரமாகக் காட்டுவார்கள் என்று நான் நினைப்பது இல்லை. எனது கட்டுரைகள் ஒன்றோ இரண்டோ விக்கியில் இருக்கிறது, ஆனால் அதையும் நானாக சேர்க்கவில்லை, மேலும் இராமனுஜர் குறித்த இந்தப் பதிவைப் படித்து முருகனின் நிறம் அறிந்து கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. மறுபடியும் ஊகமாகவே சொல்கிறேன். திராவிட (குல)தெய்வங்களில் ஒன்றான முருகன் கருமை நிறமாகத்தான் இருப்பான் என்று நான் ஊகித்தால், அது ஊகமே என்றாலும் அதில் பொருள் குற்றம் இருப்பது போல் எனக்கு தெரியவில்லை. உங்கள் முருகன் குறித்த அனைத்து பின்னூட்டங்களுக்கு இதுவே உறுதியான இறுதியான பதில்.

மிக்க நன்றி, மிக்க நன்றி !

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

சாமி எனக்கு ஒரு உண்மைத் தெரிஞ்சாகனும் ...

கோவி.கண்ணன் சொன்னது…

//வெறும் ஊகங்களாலே கருத்துக் கோட்டை எழுப்புவதில் நீங்கள் வல்லவர் என்பதும் என் புரிதல்.//

குற்றச் சாட்டும் பாராட்டும், வஞ்சப் புகழ்ச்சியாகவே இருந்துவிட்டுப் போகுது. நடைமுறையில் எல்லோருமே அரசியல் தான் செய்கிறோம். மற்றவர்கள் தேவையற்ற பூசலை எழுப்பும் என்று விட்டுவிடும் வேறுமாதிரியான அரசியலை நான் எழுதும் போது அது என்னுடைய அரசியல் அல்லது நிலைப்பாடு என்றாகிவிடுகிறது. இது எல்லோருக்கும் பொதுவானது.

அறுசமயச் செடி அதனை அடி அறுத்தான் வாழியே - மாயாவாதம் என்னும் அறுசமயச் செடியை அதன் அடியோடு மறுத்தவன் வாழ்க.

- என்ற எளிமையான விளக்கத்தைப் படித்தபின்பு, அதற்கு கேஆர்எஸ் விளக்க்ம் எழுதிய பின்பு ஓரளவு புரிந்தது. அரசியல் எல்லோருக்கும் பொதுவானவையே மற்றவர்கள் செய்வது தான் அரசியல் என்பதாக நாமாக கற்பனை செய்து கொள்கிறோம். சொல்லுவது உண்மை என்பது போலவே சொல்லாததும் உண்மை. சொல்லுவதற்குக் காரணம் தேவை என்பது போலவே சொல்லாதற்கும் காரணங்கள் உண்டு. அறுசமயம் என்பது சங்கரர் ச(அ)மைத்த அறுசமயம் என்கிற விளக்கம் தேவையற்றது என்று நீங்கள் நினைப்பதற்கு உங்களுக்கேற்ற ஞாயம் உண்டு என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.

நமச்சிவாயம் வாழ்க ! நாராயண நம ஓம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// ஸ்வாமி ஓம்கார் said...

திரு கோவி.கண்ணன்,

//இருவருமே கிமுக்கு பிறகு பிறந்தவர்கள் தாம். இராமனுஜர் கிபி 1017 - 1137 (இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர்)//

இருவரும் கிமு என கூறி கிபி என சுட்டிகாட்டுகிறீர்க்ளே.. புரியலை..


வைணவத்தில் அத்வதைத்தம் உண்டு என்பது தெரியுமோ :) ?

ராமானுஷர் வழித்தோன்றல்கள் ஐயங்கார்கள் என வழங்குகிறார்களே? அவர்களும் வைணவர்களும் ஒன்றா?//

சங்கரர் காலம் கிமு என்பதாக ஊகம் இருப்பதாக ஆங்கில விக்கிச் சொல்கிறது. ஆனால் அவர் காலம் கிபி என்றே அந்தக் கட்டுரைச் சொல்கிறது.

//வைணவத்தில் அத்வதைத்தம் உண்டு என்பது தெரியுமோ :) ?//

வைணவ அத்வைதிகளுக்கு நாராயணன் தான் பரப்பிரம்மம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சாமி எனக்கு ஒரு உண்மைத் தெரிஞ்சாகனும் ...//

எனக்கும் தெரியலையே

கோவி.கண்ணன் சொன்னது…

// வெ.இராதாகிருஷ்ணன் said...

தங்கள் பதிவுகளிலிருந்து பல விசயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.//
நன்றி !

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

அன்புள்ள கோவி கண்ணன்!

கருத்தைச் சொல்வதே வேஸ்ட் என்ற அர்த்தத்தில் நான் சொல்லியிருந்தால், வேலைமெனக்கெட்டு அதை ஒரு பின்னூட்டமாகச் சொல்லியிருக்கவே வேண்டாமே!

பதிவின் போக்கைக் கவனித்தேன், ஆரம்பத்தில் வந்திருந்த பின்னூட்டங்களையும் படித்தேன். இன்னும் ஆழமாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டிய ஒரு விஷயத்தை எதற்காக இவர் இப்படி மேம்போக்காகவே பேசிக் கொண்டிருக்கிறார் என்று தோன்றியதால், என்னுடைய கருத்தைப் பதிவு செய்யவில்லை, திரும்பவந்து பின்னூட்டங்களைக் கவனித்துக் கொண்டிருந்ததோடு சரி!

திரு குமரன் விரிவான பின்னூட்டத்தை எழுதிய பிறகே, அதிலும் ஓம்கார் எழுப்பியிருந்த கேள்விக்கு மிக எளிதாக இணையத்தில் தேடினாலே விரிவான விவரங்கள் கிடைக்கும். ஆக விவாதத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன், என்பது ஒரு பகுதி, ஓம்காருக்கு விடை சொல்வது இன்னொரு பகுதியாகத் தான் என்னுடைய பின்னூட்டம் இருந்தது.

ஆனால் ஒரு நாலு வரிப் பின்னூட்டமே, இறுக்கமான மன நிலையில் கருத்துச் சொல்வதே வேஸ்ட் என்று சொன்னதாக எடுத்துக் கொண்டு, அது எரிச்சல் ஊட்டுகிறது என்றும் சொல்கிறீர்கள் பாருங்கள் அங்கு தான் விஷயமே இருக்கிறது!

ஏதோ காரணத்தை வைத்துக் கொண்டு, முன்கூட்டியே ஒரு முடிவு செய்துவிடுகிறோம், அதன் அடிப்படையிலேயே விஷயங்களைப் பார்க்கிறோம் என்பது புரிகிற வரை என்ன சொன்னாலும் அது கருத்தைத் திணிக்கிற மாதிரி ஆக்கிரமிப்பாகவே தோன்றும்.

இந்த நிலையைக் கடந்து விட்ட படியால், எனக்கு முரண்பாடுகளைத் தனித்தனியாகப் பார்க்காமல், அவை எப்படி ஒன்றை ஒன்று தூண்டிக்கொண்டு இயக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை முழுமையாகப் பார்க்கிற வாய்ப்பு சமீப காலங்களில், அதுவும் திர்ஹமிழில் வலைப் பதிவு எழுத ஆரம்பித்த பிறகு தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது!

எரிச்சலாக இருந்தால் மறந்து விடுங்கள்! கோவி கண்ணன் என்ற மனிதரோடு எப்போதும் நேசமாகத் தான் இருக்கிறேன்! கருத்தில் உடன்பட்டுத்தான் நிற்க வேண்டும் என்பதில் அல்ல!

ஆனால் இரண்டு பக்கமும் சற்று சீர்தூக்கிப் பார்த்து, அப்புறம் எழுதினால், அது உங்களுக்கே நிறையப் பயனைத் தரக்கூடியது, அவ்வளவு தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...

அன்புள்ள கோவி கண்ணன்!

கருத்தைச் சொல்வதே வேஸ்ட் என்ற அர்த்தத்தில் நான் சொல்லியிருந்தால், வேலைமெனக்கெட்டு அதை ஒரு பின்னூட்டமாகச் சொல்லியிருக்கவே வேண்டாமே!//

கருத்து சொல்வதே வேஸ்ட் என்று தனக்கு தானே நினைத்த வள்ளலாரும் கூட கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று தனக்கு தானே நொந்து கொண்டார்.

மனித நேயத்துடன் தாம் தொடங்கிய வைணவம் வடகலை தென்கலையாக சாதிவேறுபாடுகளை மறைத்துக் கொண்டு பிளவு படும் என்று நினைத்திருந்தால் வள்ளலாரைப் போல் இராமனுஜரும் கூட சொல்லி இருக்க முடியும்.

என் கருத்தில் நான் நிற்பது என்பது பிடிவாதமாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை. நானும் இங்கே தீவிரவாதம் எதையும் ஊக்குவிக்கவோ அனைவரும் இறைமறுப்பாளராக அறை கூவல் இட்டோ எதையும் எழுதவில்லை. இராமனுஜர் மீதான கொலை முயற்சியில் சோழன் செய்த நிகழ்வு மட்டுமே பேசப்படுகிறது, கூடவே இருந்தவர்கள் கொலை செய்ய முயன்றதை யாரும் பேசக்காணும். அதுதான் நான் இங்கு சொல்ல வந்த நோக்கமே, அதை விடுத்து முருகனின் நிறம் உட்பட பிற விசயங்கள் இந்த பதிவைப் பொறுத்த அளவில் முக்கியமற்றதே.

மேலும் இங்கு நான் இராமனுஜர் பற்றி தரக் குறைவான விமர்சனம் எதையும் வைக்கவில்லை. போலி சாமியார் என்கிற தொனி இருந்தது அதுவும் நடைமுறையே என்று சொல்லி இருக்கிறேன். இங்கு தேவையற்ற பிடிவாதம் என்று எதை நினைக்கிறீர்கள் என்றே தெரியவில்லை.

அரவிந்தர் தொடங்கிய இயக்கம் இன்று வரை அப்படியே உள்ளதா ? இன்றைக்கு நீர்த்துப் போனால் கலைத்துவிடுங்கள் என்று அரவிந்தர் எதுவும் அடிக்கோடிட்டு காட்டி இருக்கிறாரா ? ஆனால் பின்பற்றுபவர்கள் அவர் இருப்பதாக நினைத்து தானே செயல்படுகிறார்கள். அவர் இல்லை வேஸ்ட் இனி விட்டுவிடுவோம் என்று செயல்படுகிறார்களா ?

எல்லாவற்றிலுமே அரசியல் உண்டு அதற்காக இவர் பிடிவாதக்காரர் என்பது போல் முத்திரை குத்துவது அதுவும் தெரிந்தவர்களே அவ்வாறு செய்வது வருத்தமளிக்கிறது.

இங்கு குமரன் சொல்லி இருப்பதில் முருகனின் நிறம் குறித்து நான் மறுப்பு தெரிவிக்கவில்லை, ஆனால் எனக்கு ஒப்புதல் இல்லை என்பதற்கான வாதம் மட்டுமே வைத்தேன். நிறம் குறித்த நம்பிக்கைகளில் நிறம் காரணப் பெயராக இருக்கவும் வாய்ப்புள்ளது பச்சையம்மாள் என்று பெயர் உடைய பெண்மணி பச்சையாக இருப்பாள் என்று நான் நினைப்பது இல்லை. ஆனால் அவ்வாறு தான் கொள்ளவேண்டும் என்பது போல் முருகனின் பெயரில் சிவப்பு வண்ணம் இருக்கிறது என்று அவர் கூறினார். எனக்கு ஒப்புதல் இல்லை அவ்வளவு தான். அதற்கு மேலும் அவர் விளக்கம் கொடுக்காதவகையில் உங்கள் 'தேவையற்ற விளக்கம்' என்கிற சொல்லாடல் தடை ஏற்படுத்துவிட்டது.

Kesavan சொன்னது…

தென்கலை திருமனின் அர்த்தம் . இரண்டு பக்கமும் வரும் வெள்ளை கோடு, மகா விஷ்ணுவின் பாதமாகும். மூக்கில் இடுவது அந்த பாதத்தை தாங்கும் மலராகும் . நடுவில் வரும் சிகப்பு கோடு மகா லக்ஷ்மியை குறிக்கும். இது தான் தென்கலை திருமனின் அர்த்தம் . ஆனால் வடகலை திருமனுக்கு எந்த அர்த்தமும் கிடையாது .

வேதாந்த தேசிகரை பின் பற்றுபவர்கள் வடகலை எனவும் , மணவாள மாமுனிகளை பின்பற்றுபவர்கள் தென்கலை எனவும் கூறுகிறீர்கள் . இது மிகவும் தவறானது . முதலில் வேதாந்த தேசிகரும் மணவாள மாமுனிகளும் சம காலத்தவர் அல்ல . தென்கலை பிரிவினர் வேதாந்த தேசிகருக்கு முகியத்துவும் நல்ல முக்கியத்துவும் கொடுப்பார்கள் . ஆனால் வடகலையார் மணவாள மாமுனிக்கு முக்கியத்துவும் கொடுக்க மாட்டார்கள் .

ராமானுஜர் வடகலையா இல்லை தென்கலையா என்றால் அவர் தென்கலை தான். ஏன் வேதாந்த தேசிகரும் தென்கலை தான் . இன்று வடகலையாரால் மிகவும் போற்றப்படும் அகோபில மடம் முதலில் தென்கலை தான் . அஹோபில மடத்தின் முதல் ஜீயாரான ஆதிவன் சடகோபன் வேதாந்த தேசிகரின் பேரன் ஆவர் . அவர் தென்கலை தான் . அதில் முதல் நான்கு ஜீயர்களும் தென்கலை ஜீயர் தான் . பின்னர் தான் தென்கலை வடகலை என்று பிரிந்தது . எதனால் பிரிந்தது என்று எனக்கு தெரியவில்லை.

வைஷ்ணவ சம்பிரதாயத்தில் 108 திவ்யதேசங்கள் மிகவும் முக்கியமானது. இதில் 80% சதவிகிதத்துக்கும் மேலான கோவில்கள் தமிழகத்திலேயே உள்ளது . இதில் 90௦ திவ்யதேசங்களுக்கும் மேலான கோவில்கள் தென்கலை சம்பிரதாயத்தில் உள்ளது . 10௦ க்கும் மேற்பட்ட கோவில்கள் தான் வடகலை சம்பிரதாயத்தில் உள்ளது .

காஞ்சி என்றால் வடகலை என்றும் திரு அரங்கம் என்றால் தென்கலை என்றும் பொதுவாக சிலரால் பேசபடுகிறது . இது மிகவும் தவறான சொல் ஆகும் . காஞ்சியில் உள்ள பத்து திவ்யதேசங்களில் இரண்டு மட்டுமே வடகலை திவ்ய தேசம் ஆகும் . மற்றவை அனைத்தும் தென்கலையே. இந்த இரண்டு வடகலை திவ்யதேசமும் பதினெட்டாம் நூற்றாண்டில் மாறியவையே . அதற்கு முன்னர் இதுவும் தென்கலை திவ்யதேசமே . இதற்காக இன்றும் கோர்டில் வழக்கும் நடந்து
கொண்டிருகிறது .

கோவி.கண்ணன் சொன்னது…

நெடிய விளக்கத்திற்கு நன்றி கேசவன்.

அருமையாக எழுதுகிறீர்கள். தனிப்பதிவு தொடங்கி எழுதத் தொடங்க வேண்டுகிறேன். அதற்கு எதாவது உதவி தேவைப்பட்டால் அன்புடன் செய்வேன்.

குமரன் (Kumaran) சொன்னது…

கேசவன் ஐயா,

கோவி.கண்ணன் சொன்னது போல் மிக நன்றாக எழுதுகிறீர்கள். ஆனால் தென்கலையாருக்கும் வடகலையாருக்கும் தற்காலத்தில் இருக்கும் பிணக்குகளின் அடிப்படையில் எழுதியிருக்கிறீர்கள். நான் சொல்வது / சொன்னது வடகலை, தென்கலை என்பதன் பெயர் விளக்கங்களை. நீங்கள் சொல்வதோ தற்காலத்தில் காஞ்சிபுரத்தில் இருக்கும் கோவில்களில் எத்தனை கோவில்கள் வடகலையாரிடமும் தென்கலையாரிடமும் இருக்கின்றன என்ற கணக்கை.

நீங்கள் தற்காலத் தென்கலையாரின், பிணக்குகளை மனத்தில் பெரிது படுத்திப், பெருமாளைப் பின் தள்ளும், சில தீவிர தென்கலையாரின் கருத்துகளை, அவை உண்மையோ பொய்யோ, அவர்களின் கருத்துகளை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். வடகலையாரில் ஒருவர் வந்து உங்கள் கருத்துகள் அனைத்தையும் தீவிரமாக மறுத்துப் பேச முடியும். பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பெருமாள் இரண்டாம் பட்சம் தான். பெருமாளை முதன்மையாகக் கொள்ளும் எந்த வைணவனும் இப்படி பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நீங்கள் சொல்லும் அதே திருமண்ணின் பொருள் தான் வடகலையாரின் திருமண்ணிற்கும் தரப்படுகிறது. பெருமாளின் பாதங்கள், தாமரை மலர் (ஒன்றில் காம்பும் தெரிகிறது, மற்றதில் தெரியவில்லை), தாயாரைக் குறிக்கும் ச்ரிசூர்ணம். இரண்டும் ஒரே பொருளைச் சொல்கிறது. பெருமாளையும் தாயாரையும் குறிக்கும் இந்த திருமண் எந்த வடிவில் இடப்பட்டாலும் அதனை மதிப்பது தான் ஒரு நல்ல வைணவனுக்கு அழகு.

வடகலையாரிடம் தான் வைணவம் கற்றுக் கொண்டேன். அவர்கள் தான் எனக்கு மணவாளமாமுனிகளைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் சொன்னவர்கள். என் 'கூடல்' பதிவில் மணவாளமாமுனிகளைப் போற்றும் இடுகைகள் நிறைய உண்டு; வேதாந்த தேசிகனைப் போற்றும் இடுகைகளை இது வரை இட வாய்ப்பு கிட்டியதில்லை. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் பிறப்பால் வைணவனல்லாத எனக்கும் மணவாளமாமுனிகளின் பெருமைகளைச் சொல்லி அவரைப் போற்ற வைத்தவர்கள் வடகலை வைணவர்களே என்பதால்.

வடகலை, தென்கலை என்ற பிரிவே இராமானுசருக்குப் பின்னர் வந்தது தான். அதுவும் காஞ்சி (வடகலை), திருவரங்கம் (தென்கலை) என்ற ஊர்களில் 'இருந்த' (இப்போது இருகலையாரும் இரு ஊர்களிலும் இருக்கிறார்கள், நீங்கள் சுட்டிக் காண்பித்தது போல்) வைணவ சாத்திரங்களில் வல்ல வித்வான்களுக்கு இடையே சில தத்துவ அடிப்படைகளில் ஏற்பட்ட பிரிவுகளே இன்று இவ்வளவு பெரிதாக வளர்ந்து நிற்கிறது. இன்றைக்கு இப்படி இரு பிரிவினரும் அடித்துக் கோள்வார்கள் என்று தெரிந்திருந்தால், ஒருவரை ஒருவர் மதித்து தங்கள் எழுத்துகளில் பெருமை படுத்திய அந்தப் பெரியவர்கள் வருங்காலத்தை நினைத்து மிகவும் வருந்தியிருப்பார்கள். அவர்களுக்கு திருமகளும் திருமகள் கேள்வனுமே முக்கியம்; சின்ன சின்ன தத்துவ வேறுபாடுகள் இல்லை.

இப்படி இராமானுசருக்குப் பின் வந்த வேறுபாடுகளில் ஒரு பிரிவில் இராமானுசரை அடக்க முடியுமா? அப்படி அடக்க நினைப்பதும் அறிவுடைமை ஆகுமா? ஒரு எடுத்துக்காட்டுக்காக: சிந்து சமவெளி நாகரிகம் என்று நாம் படிக்கிறோம். அது இந்தியாவிற்கு உரியதா, பாகிஸ்தானிற்கு உரியதா? பாகிஸ்தான், இந்தியா என்ற தற்கால நாடுகள் பிரிவதற்கு முன்னர் அது இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்தது; அதன் தொடர்ச்சியாகத் தான் இந்திய பண்பாடு விளங்குகின்றது என்பதால் அதனை இந்தியாவிற்கு மட்டுமே உரியது என்றோ தற்காலத்தில் அது பாகிஸ்தானில் இருக்கிறது என்பதால் பாகிஸ்தானுக்கு மட்டுமே உரியது என்றோ பேசினால் அது சரி தானா? அது போல் தான் இராமானுசர் வடகலையா தென்கலையா என்று பேசுவதும்.

வடகலையாருக்கும், தென்கலையாருக்கும் இருக்கும் பிணக்குகள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. 'அவனை நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துறேன்' என்று இரு பிரிவினர்களும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதனைக் கண்டு மகிழ்வதற்கே ஒரு கூட்டம் உண்டு என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரியவேண்டியதில்லை. உங்களுக்கு உண்மையிலேயே இராமானுசரின் மேலும் எம்பெருமானின் மேலும் பற்று இருந்தால், உங்களைப் பாராட்டி உதவி செய்ய விரும்பும் நம் நண்பர் கோவி. கண்ணனின் மகிழ்ச்சியின் உட்பொருளைப் புரிந்து கொண்டு அவரது இடுகையில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள். அதுவே 'இராமானுச திவ்யாக்ஞா வர்த்ததாம் அபிவர்த்ததாம்' என்று ஒவ்வொரு வைணவனும் சொல்லும் உறுதிமொழிக்கு ஏற்ற வழியாகும்.

குமரன் (Kumaran) சொன்னது…

கேசவன் ஐயா,

இன்னொன்றையும் சொல்ல விரும்பினேன். என் முதன்மை நோக்கம் நீங்கள் தென்கலை/வடகலைப் பிணக்குகளை இங்கே பேசாமல் விடுக்க வேண்டும் என்று சொல்வது இல்லை; உங்களுக்கு மனமாற்றம் வேண்டும் என்று வேண்டுவதே. எதனையும் சொல்லும் முன் 'திருமகள் கேள்வனின் திருவுள்ளத்திற்கு இது உகப்பாக இருக்குமா? வேதாந்த தேசிகரை 'மஹனீயர்' என்று வார்த்தைக்கு வார்த்தை கொண்டாடும் நம் மணவாள மாமுனிகளின் திருவுள்ளத்திற்கு உகப்பாக இருக்குமா?' என்று சிந்தித்துச் செயல்படுங்கள். பிணக்குகளைப் பெரிதுபடுத்தும் வடகலையாரிடமும் என் வேண்டுகோள் இதாகவே இருக்கும்.

இது வைணவர்களிடம் மட்டுமில்லாமல் அனைவரிடமும் பார்க்க வேண்டிய ஒன்றே. நானும் இதில் பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். முக்கியமாக கோவி.கண்ணனைப் பேசும் போது 'இது நம் இறைவனுக்கு உகப்பாக இருக்குமா?' என்று சிந்திக்க வேண்டும்; அப்போது தான் இன்னும் பணிவு என் வார்த்தைகளில் வரும். கிண்டல் தொனியும் குறையும்.

துளசி கோபால் சொன்னது…

//வடகலையாருக்கும், தென்கலையாருக்கும் இருக்கும் பிணக்குகள் பல நூற்றாண்டுகளாக இருக்கின்றன. 'அவனை நிறுத்தச் சொல்லு. நான் நிறுத்துறேன்' என்று இரு பிரிவினர்களும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்//

இந்த கலாட்டாவில் நம்ம 'யானை' மாட்டிக்கிட்டு முழிக்குதே இதை யாரும் கவனிக்கலையா?
அதுக்கு நெற்றியிலே ஒருநாள் இந்தக் கலை இன்னொரு நாள் அந்தக் கலை(:

பாவம், குழந்தை!

கோவி.கண்ணன் சொன்னது…

//கண்ணனின் மகிழ்ச்சியின் உட்பொருளைப் புரிந்து கொண்டு அவரது இடுகையில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்.//

குமரன்,

நீங்கள் என்ன உட்பொருளை மனதில் கொண்டு சொல்கிறீர்கள் என்பதை நான் அறியேன். இருந்தாலும் கேசவன் பின்னூட்டம் குறித்து ஒரு சிலவற்றைச் சொல்லிக் கொள்கிறேன்.

கேசவன் இதைப் பின்னூட்டமாகவே போட விரும்பவில்லை. அவர் எனக்கு தனி மின் அஞ்சலில் தான் அனுப்பினார். மேலும் கேசவன் எனக்கு வேண்டிய நெருங்கிய நண்பர், என் மீது அன்பு வைத்திருப்பவர், அவர் கருத்தும் என் கருத்தும் ஆன்மிகம் தொடர்பில் வேறு என்றாலும் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நான் இங்கு அவரை பின்னூட்டம் போடச் சொல்லவும் இல்லை. இதற்கு முன்பு அவர் இவ்வளவு பெரிய பின்னூட்டம் எழுதியது இல்லை, அவர் என்ன எழுதி இருக்கிறார் என்பதைவிட அவர் எழுத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே அவருக்கு நான் இட்டிருக்கும் மறுமொழியின் நோக்கம்.

தனி மின் அஞ்சலைவிட உங்கள் கருத்தாக என் பதிவிலேயே அதைப் போடுங்கள் என்றேன், யாராவது கேள்வி எழுப்பினால் எனக்கு வாதம் செய்யத் தெரியாது, மேலும் எனக்கு தெரிந்த அளவில் தான் நான் உங்களுக்கு என் கருத்தை தெரிவித்தேன், அது உண்மையா பொய்யா என்றெல்லாம் எனக்கு தெரியாது, என்று சொல்லி தயக்கம் அடைந்தார். அதெல்லாம் கவலைப்படாதிங்க எனக்கு தெரிந்த ஒரே வடகலை ஐயங்கார், அவரு இதில் ஆர்வம் காட்டமாட்டார் என்று சொன்ன பிறகே அவர் பின்னூட்டமாக பதித்தார்.

குமரன், அவருக்கு நீங்கள் எழுதி இருப்பதைப் பார்த்த பிறகு அவர் என்ன நினைக்கப் போகிறார் என்று தெரியவில்லை.

என்னைப் பொருத்த அளவில் அவர் எழுதியது அவருக்கு தெரிந்தவை மட்டுமே. அதில் அபத்தம் இருக்கிறது என்று நினைக்கும் அளவுக்கு அவர் வலையுலக ஆன்மிகம் மற்றும் அரசியல் முற்றிலும் அறிந்தவர் அல்ல.

அவர் தென்கலையைப் பிரிவைச் சேர்ந்தவர், அதனுடன் தொடர்பு உடையவற்றை என்னைவிட நன்கு அறிந்திருப்பார் என்று மட்டுமே கொள்கிறேன்.

நண்பர் கேசவனுக்கு உங்களை விட அகவை குறைவாகவே இருக்கும், அவரை ஐயா என்று அழைக்கத் தேவை இல்லை என்பதை என்னுடனான அவருடைய நெருக்கம் தொடர்பில் அவர் சார்பில் நான் சொல்ல முடியும்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//துளசி கோபால்
இந்த கலாட்டாவில் நம்ம 'யானை' மாட்டிக்கிட்டு முழிக்குதே இதை யாரும் கவனிக்கலையா?//

நான் கவனிச்சேன் டீச்சர்!

//அதுக்கு நெற்றியிலே ஒருநாள் இந்தக் கலை இன்னொரு நாள் அந்தக் கலை(://

நல்ல வேளை யானைக்கு மட்டும் போட்டார்கள்!
கோயிலில் திரியும் நம்ம கோகொ போன்ற பூனைகளுக்குப் போடாம விட்டாங்களே! சந்தோசப் படுங்க! :)

இப்பல்லாம் தெய்வம் மனுசனைக் காப்பாத்தறது போய்...
மனுசன் தெய்வத்தைக் காப்பாத்துறதா நல்லாவே நெனச்சிக்கிறான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

கோவி அண்ணா

இடுகையைப் பல முறை வாசித்தேன்!
பல செய்திகளைத் தொகுத்து தந்துள்ளீர்கள்! நன்றி!

காலத்தில் இதைப் படிப்பவர்களுக்கு, இராமனுசரைப் பற்றியும், அவர் "சமூகம் சார்ந்த" சமயத் தொண்டுகள் பற்றியும்...அறிதல்கள்/புரிதல்கள் ஏற்பட வழி வகுக்கும்! அவ்வளவில் நன்றி!

கொஞ்சம் கொஞ்சம், வழக்கம் போல, உங்கள் புரிதல்களையும் அதன் மேல் ஏற்றி உள்ளீர்கள்! :)
தவறு இல்லை! அவரவர் அறி அறி வகை வகை தானே!

ஆனால் அந்தப் புரிதல்களை உறுதிப்படுத்திக் கொள்ளவும் வேணும் அல்லவா? எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதுவும் வேண்டும் அல்லவா?

உங்கள் புரிதலை, சரியான ஆதாரங்களோடு ஒருவர் மறுத்தால், அந்த ஆதாரங்களில் "நேர்மை" இருக்கும் பட்சத்தில்...உங்கள் புரிதலைத் திருத்திக் கொள்ளத் தயங்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்!

திருத்திக் கொண்ட புரிதலை மறந்து விட்டு, மீண்டும் பழைய புரிதல்களையே பேச மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்!
பகுத்து அறிவது தானே அறிவு! பகுக்காமலேயே அறிவது அல்லவே!

இது ஒரு பதிவு தான்! ஆராய்ச்சிக் கட்டுரை கிடையாது!
அதனால் எனக்கு இதில் வருத்தங்களே ஒன்றும் இல்லை!

சொல்லப் போனா ஜாலியாப் படிச்சேன்!
குமரன் இந்த இடுகையைச் சுட்டிக் காட்டிய போது, உங்களுக்கு மிகவும் பிடித்தமான சமண/பெளத்த டச்சோடு முடித்ததைப் பார்த்து...
இராமனுச சரணம் கச்சாமி-ன்னு கிண்டல் ஓட்டியதும் நான் தான்! :)))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

இப்போ, கோவி தரப்பு நியாயங்களுக்கு வரேன்...:)

//நானும் இங்கே தீவிரவாதம் எதையும் ஊக்குவிக்கவோ அனைவரும் இறைமறுப்பாளராக அறை கூவல் இட்டோ எதையும் எழுதவில்லை//

ஆகா!
அப்போ நீங்க மெய்யாலுமே தீவிரவாதி இல்லையா? :)

ஒரு வேளை, தீ+விரத+வாதியோ? :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இராமனுஜர் மீதான கொலை முயற்சியில் சோழன் செய்த நிகழ்வு மட்டுமே பேசப்படுகிறது,
கூடவே இருந்தவர்கள் கொலை செய்ய முயன்றதை யாரும் பேசக்காணும். அதுதான் நான் இங்கு சொல்ல வந்த நோக்கமே//

புரிகிறது!
இதுக்குத் தான் குமரன் கிட்ட இம்புட்டு மல்லு கட்டினீங்களா?
ஹா ஹா ஹா! இதை மொதல்லயே சொல்றதுக்கு என்னா? :)
இருங்க உங்க தரப்பு நியாயத்துக்கு வரேன்!

கமல் கலந்து அடிச்சி, சினிமாவில் வந்து விட்டதால், சோழன் கொடுமையை ரொம்ப தெரிஞ்சிருக்கு போல! :)

ஆனால் இராமானுசர் கூடவே இருந்து குழி பறித்த வைணவர்கள் பற்றிப் பேச மாட்டேங்கிறாங்களே!
அவர்கள் வைணவப் "பார்ப்பனர்கள்" என்பதால், "நைசாக" அவர்கள் செய்த சதியை மறைத்து விடுகிறார்கள் என்பது தான் உங்கள் நிஜமான ஆதங்கமா??? :)))

இராமானுசர் திருவரங்க ஆலயத்தில் செய்த சீர் திருத்தங்கள்,
* தமிழைக் கருவறைக்குள் முன்னிறுத்தியது,
* பல்வேறு சாதிகளைக் கோயில் கொத்துகளில் சேர்த்து விட்டது,
* கோயில் வரவு செலவு திட்டத்தை வெளிப்படையாக நிறைவேற்றியது...

இதெல்லாம் பார்த்த சில அதி தீவிர, வைணவர்கள், அவரைத் தீர்த்துக் கட்ட, பிட்சை உணவில் விஷம் வைத்தது உண்மை தான்!

- இதை யாரும் மறைக்கவில்லை! பூசி மெழுக வில்லை! கோயில் ஒழுகு என்னும் ஆலய தினப்படி டைரியில் கூட எழுதி வைத்துள்ளார்கள்! எல்லா இராமானுசர் வரலாற்றிலும் இது கட்டாயம் இடம் பெறும்!

இந்தாங்க சுட்டி!
* வீடியோ (starting from track position 4:22)
* Orthodox புத்தகம் (page 8, they even mention the name of the plotter - uthama nambi, priest of the temple)
* பொதுவான புத்தகம்

சில பார்ப்பன வைணவர்களுக்கு இது நெருடலாக இருக்கலாம்! இது பற்றி அதிகம் பேசாது தவிர்க்கப் பார்க்கலாம்-ன்னு நீங்க நினைக்கறீங்க! ஆனால் அவர்களே நினைத்தாலும் கூடத் தவிர்க்க முடியாத படிக்கு, கோயில் ஒழுகிலே நிரந்தரமாக எழுதப் பட்டு விட்டது!

எல்லா இராமானுச வரலாற்றிலும்,
* அது பார்ப்பன வைணவர்கள் எழுதினாலும்,
* மற்ற வைணவர்கள் எழுதினாலும்,
* பொதுவான மக்கள் எழுதினாலும்,
* சுவாமி சிவானந்தர் போன்றோர் எழுதினாலும்....
யாரும் இதை "மறைக்க முடியாத படிக்கு" இடம் பெறுகிறது! போதுமா? :))

* இராமானுசர் இதனால் இறக்கவில்லை! அதனால் இதற்கு வீரியம் கொஞ்சம் குறைவாகிப் போனது!
* சோழன் செய்ததில் வன்முறை பட்டவர்த்தனமாகத் தெரிவதால், நம்பிகள் துடிக்கத் துடிக்க இறந்து போனதால் - இது கொஞ்சம் வீரியமாகப் பேசப்படுகிறது!
- அவ்வளவு தான் வேறுபாடு!

ஐயம் தீர்ந்ததா? :)

//அதை விடுத்து முருகனின் நிறம் உட்பட பிற விசயங்கள் இந்த பதிவைப் பொறுத்த அளவில் முக்கியமற்றதே//

ஓக்கே! ஓக்கே! :))
என் முருகன் கருப்பா இருந்தா எனக்கும் பிடிக்கும் தான்! கருப்பே அழகு! காந்தலே ருசி! ஆனா என்ன செய்யறது? பரவாயில்லை! அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//உங்கள் புரிதலை, சரியான ஆதாரங்களோடு ஒருவர் மறுத்தால், அந்த ஆதாரங்களில் "நேர்மை" இருக்கும் பட்சத்தில்...உங்கள் புரிதலைத் திருத்திக் கொள்ளத் தயங்க மாட்டீர்கள் என்றே நம்புகிறேன்!//

இங்கு இராமானுஜர் பற்றிய தகவல்களில் குடுமி மேட்டர் தவிர்த்து வேறெதையும் கற்பனையாக எழுதவில்லை. இராமனுஜர் பின்குடுமி வைத்திருந்தார் என்பாதாக சொல்லும் குமரன் பின்னூட்டத்திற்கு நான் எதுவும் மறுப்பு சொல்லவில்லையே !
:)

//திருத்திக் கொண்ட புரிதலை மறந்து விட்டு, மீண்டும் பழைய புரிதல்களையே பேச மாட்டீர்கள் என்றும் நம்புகிறேன்!
பகுத்து அறிவது தானே அறிவு! பகுக்காமலேயே அறிவது அல்லவே!

இது ஒரு பதிவு தான்! ஆராய்ச்சிக் கட்டுரை கிடையாது!
அதனால் எனக்கு இதில் வருத்தங்களே ஒன்றும் இல்லை!//

வருத்தம் ஏற்படுத்திய வரிகள் எது என்று சொன்னால் நன்றாக இருக்கும், பேசாப் பொருளைப் பேசுவது தான் வருத்தமா ?

Kesavan சொன்னது…

// kumaran : உங்களுக்கு உண்மையிலேயே இராமானுசரின் மேலும் எம்பெருமானின் மேலும் பற்று இருந்தால், உங்களைப் பாராட்டி உதவி செய்ய விரும்பும் நம் நண்பர் கோவி. கண்ணனின் மகிழ்ச்சியின் உட்பொருளைப் புரிந்து கொண்டு அவரது இடுகையில் இருக்கும் தவறுகளைச் சுட்டிக் காட்டுங்கள்.//
திரு குமரனின் கருத்துக்கு நன்றி . திரு கண்ணனின் கருத்தும் என்னுடைய கருத்தும் இந்த விஷயத்தில் என்றுமே ஒத்து போகாது என்று முதலில் தெரிவித்து கொள்கிறேன் . அவர் என்னை பற்றி பாராட்டியது நான் நான் எழுதிய எழுத்துக்கு தானே தவிர என்னுடைய கருத்துக்கு அல்ல.

Kesavan சொன்னது…

//சைவ சித்தர்கள் 18, நாயன்மார்கள் கதைகளுக்கும், வைணவ 12 ஆழ்வார்கள் கதைகளுக்கும் பூச்சுற்றல் அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை, சமயம் வாய்க்கும் போது ஆழ்வார்கள் பற்றி எழுதுகிறேன்.//

நீங்கள் எதை தான் உண்மை என்று ஒத்துகொள்கிறீர்கள் . இதை ஒத்து கொள்வதற்கு. எதை எடுத்தாலும் பூச்சுற்றல் இடை சொருகல் என்று தான் சொல்வீர்கள் . அவ்வளவு தான் .

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் எதை தான் உண்மை என்று ஒத்துகொள்கிறீர்கள் . இதை ஒத்து கொள்வதற்கு. எதை எடுத்தாலும் பூச்சுற்றல் இடை சொருகல் என்று தான் சொல்வீர்கள் . அவ்வளவு தான் .//

பெருமாள் சோதிக்க நினைத்து மிகவும் கீழ்த்தரமாக ஒரு பெண்ணை அனுப்பி தன் பக்தன் அசையாமல் நிற்கிறானா என்று பார்த்தாராம். தொண்டர் அடிபொடி ஆழ்வார் கதைதான். படித்துப் பாருங்கள், இன்னிக்கு தேதிக்கு திரைப்படங்களில் கதாநாயகி சொட்ட சொட்ட மழையில் நனைந்து தன்னை இழக்கும் காட்சிகளுக்கு அந்த கதைதான் முன்னோடி.

Kesavan சொன்னது…

//பெருமாள் சோதிக்க நினைத்து மிகவும் கீழ்த்தரமாக ஒரு பெண்ணை அனுப்பி தன் பக்தன் அசையாமல் நிற்கிறானா என்று பார்த்தாராம். தொண்டர் அடிபொடி ஆழ்வார் கதைதான். படித்துப் பாருங்கள், இன்னிக்கு தேதிக்கு திரைப்படங்களில் கதாநாயகி சொட்ட சொட்ட மழையில் நனைந்து தன்னை இழக்கும் காட்சிகளுக்கு அந்த கதைதான் முன்னோடி //

அதே பெருமாள் கதைகளில் நல்ல விஷயங்கள் உள்ளதை பார்த்து பயன் பெறலாமே . வாழ்க்கை என்றால் இன்பம் துன்பம் எல்லாமே இருக்க வேண்டும் . அப்பொழுது தான் அந்த வாழ்க்கை நன்றாக இருக்கும் . எப்பொழுதும் இனிபையே சாப்பிட்டு கொண்டிருந்தால் எப்படி . அதே பெருமாள் தன்னுடைய பக்தை காக்கும் பொருட்டு திரௌபதிக்கு உதவி செய்தானே . அது என் எடுத்து கொள்ள வில்லை . நம் மனம் எதை விரும்புகிறதோ அதை தான் நாம் எழுதுகிறோம் அதை தான் நாம் செய்கிறோம் , இன்றைய சினிமா உலகம் அப்படித்தானே .

கொடிய வினையாதுமிலனே என்னும் *
கொடிய வினையாவேனும் யானே என்னும் *
கொடியவினை செய்வேனும் யானே என்னும் *
கொடியவினை தீர்பேனும் யானே என்னும் *
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் *
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ ? *
கொடிய உலகதீர்க்கு இவையென் சொல்லுகேன் *

கோவி.கண்ணன் சொன்னது…

//அதே பெருமாள் தன்னுடைய பக்தை காக்கும் பொருட்டு திரௌபதிக்கு உதவி செய்தானே . அது என் எடுத்து கொள்ள வில்லை//

அதுகூட இரண்டு கையையும் மேலே தூக்கிய பிறகுதான் !
:)

சூதாட்டம் நடக்க காரணமாக இருந்த
சகுனிக்கு நெருங்கிய நண்பன்.
கண்ணன் நினைத்திருந்தால் குருஷோத்திரமே நடந்திருக்காது !

Kesavan சொன்னது…

//சூதாட்டம் நடக்க காரணமாக இருந்த சகுனிக்கு நெருங்கிய நண்பன். கண்ணன் நினைத்திருந்தால் குருஷோத்திரமே நடந்திருக்காது //

கொடிய வினையாதுமிலனே என்னும் *
கொடிய வினையாவேனும் யானே என்னும் *
கொடியவினை செய்வேனும் யானே என்னும் *
கொடியவினை தீர்பேனும் யானே என்னும் *
கொடியான் இலங்கை செற்றேனே என்னும் *
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ ? *
கொடிய உலகதீர்க்கு இவையென் சொல்லுகேன் *

இந்த பாசுரங்கள் தான் உங்கள் கேள்விக்கு விடை . வேறு எதுவும் சொல்வதற்கில்லை . தூங்குபவனை எழுப்பலாம் . தூங்குகிற மாதிரி நடிபவனை எழுப்ப முடியாது

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//வருத்தம் ஏற்படுத்திய வரிகள் எது என்று சொன்னால் நன்றாக இருக்கும், பேசாப் பொருளைப் பேசுவது தான் வருத்தமா ?//

அடக் கெரகமே!

//அதனால் எனக்கு இதில் வருத்தங்களே ஒன்றும் இல்லை!
சொல்லப் போனா ஜாலியாப் படிச்சேன்!//-ன்னு தானே சொல்லி இருக்கேன்?
அதுக்கு அப்பறமும் வருத்தம் ஏற்படுத்திய வரிகள் எது-ன்னு கேட்டா...என்னாத்த சொல்லுறது? கோவி அண்ணா "தீர்த்தம்ம்ம்" ஏதாவது குடிச்சி இருக்காரா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இங்கு இராமானுஜர் பற்றிய தகவல்களில் குடுமி மேட்டர் தவிர்த்து வேறெதையும் கற்பனையாக எழுதவில்லை//

அப்போ அது மட்டும் கற்பனையா எழுதினேன்-ன்னு இப்பவாச்சும் ஒத்துக்கறீங்களா? :)))
அடடா, "இராமானுச சரணம் கச்சாமிக்கு" வேலையில்லாம போயிருச்சே! :))

உங்க ஆதங்கத்துக்குப் பதில் சொல்லி இருந்தேனே! அதைப் பார்க்கலீயா?

Kesavan சொன்னது…

//இராமனுஜரை கொலை செய்ய முயன்றவர்கள் பலர், அதில் கிருமி கண்ட சோழனும் ஒருவன், அந்த நிகழ்வில் இருந்து அவரை தப்பிக்க வைக்க அவருக்கு பதிலாக அவர் பெயரில் சென்றவர் தான் கூரத்தாழ்வார் என்கிறார்கள். கூரத்தாழ்வர் இராமானுஜர் அல்ல என்று ஒற்றர்கள் மூலமாக தகவல் பெற்ற சோழன் கூரத்தாழ்வாரின் கண்களைப் பிடிங்கிவிடுவாரென்றும் அல்லது ஆழ்வாரே பிடிங்கிக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது. //

இப்பொழுது நான் எழுதுவதற்கும் இந்த கட்டுரைக்கும் சம்பந்தம் இல்லை . அனால் இந்த கட்டுரையில் கூரதழ்வாருடைய பெயரும் வந்திருப்பதனால் இதை எழுதுகிறேன்
இன்று ராமானுஜரின் பிரதான சிஷ்யரில் ஒருவரான கூரதாழ்வனுடைய ஆயிரமாவது பிறந்த நாள் விழா உலகெங்கும் கொண்டாடபடுகிறது. அவர் பிறந்த கூரம் கிராமத்தில் ( காஞ்சிபுரத்துக்கு அருகாமையில் உள்ளது ) வெகு விமரிசையாக நடை பெறுகிறது.

Born year : Tamil year "Sowmya", English year 1010 A.D
Born Month: Tamil Month "THAI"
ThiruNakshathram: "Hastham"
1000th Year Completion: Tamil year "Virodhi", English year 2010.

பித்தனின் வாக்கு சொன்னது…

நான் எதிர்பார்த்தது போலவே எழுதியுள்ளீர்கள். இது உங்கள் கருத்து என்பதைத் தவிர சொல்ல ஒன்றும் இல்லை. நன்றி.

Unknown சொன்னது…

இந்து மக்களே.. பல மக்கள் பல மாதிரி எழுதலாம்,அதுவும் இணையதில் வரும் செய்திகள் அணைத்தும் உண்மையல்ல.. இந்து மதத்திற்கு பிடித்த சனியங்கல் பல, அதில் அக்காலதில் உள்ள அரசுகளும் (சேர,சோழ,பாண்டிய,களப்பிரர்,பல்லவ) மற்றும் இக்காலத்தின் அரசியலும் தான்.இந்த மதிகெட்ட பிரச்சனையின் காரணமாக , நம் இனத்தவர்கள் மற்ற மதத்திற்க்கு (இஸ்லாம் கிறிஸ்துவ) தாவினார்கள். நம் மததில் நிரைய நல்ல விஷயங்கள் உள்ளன, அதை பகிர்ந்துக்கொள்ளவும்.
அதனால் All are equal என்ற தர்மம்தான் இப்போது நம் மதத்தை காப்பாற்ற ஒரே வழி.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் இந்து தர்மத்தைப் பற்றி பேசிப் புகழ் சேர்த்துவிட்டு சென்னை வந்தபோது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

இளைஞர்களே இதை நினைவில் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மிகச் சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்லவேண்டும். ஆன்மிகச் சிந்தனைகள் என்று நான் கூறியது உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல.

கண்ட கண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த மூடநம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகிவிடுங்கள். இது உங்களுக்கும் நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது’ என்று மதராஸ் ராஜதானியில் பேசினார் விவேகானந்தர்.

இது ‘இளையபாரதமே எழுக’ என்று ராமகிருஷ்ணா மடம் விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகளை வெளியிட்டுள்ள புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதம் வகுத்த இயற்கை வழிபாட்டு நெறிமுறைகள் லோக சேமத்துக்கே இந்தா பால் இதைக் குடித்து வளமோடு வாழு’ என்கிறது வேதம். மதம் என்னும் கோப்பையில் நல்லபாலை ஊற்றி அருந்துங்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்