சாயங்காலம் அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் நல்ல பசி, இடையில் பேருந்து மாற வேண்டி இருந்தது, நல்லவேளை அங்கு கோமளாஸ் உணவகம் இருந்தது, சாப்பிட சிற்றுண்டிகளை வாங்கிக் கொண்டு உணவு மேசையில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தேன், கூட்டம் மிகுதியானதால் இருவர் அமரும் சிறிய மேசையே கிடைத்தது, எதிரில் இன்னொருவர் அமர்ந்து உண்ணலாம். எதிர்பார்க்காதபடி இன்னொரு இந்திய ஆடவர் 30 வயதிருக்கும் அவரும் எதோ ஒரு சிற்றுண்டியை வாங்கிக் கொண்டு வந்து எதிரில் வந்து, 'இங்கே உட்காரலாமா ?' என்று அனுமதி கேட்டு அமர்ந்தார்.
வழக்கமாக எதிரில் அமர்ந்திருபவர் முகம் பார்க்காது உண்ணுவது தான் எனது வழக்கம், அவராகவே...
'என்னங்க .......நீங்க இந்தியாவில் இருந்து வந்திருக்கிங்களா ?' என்று கேட்டார்
மனதுக்குள் 'பரவாயில்லையே.....நம்ம ஆட்கள் கூச்சப்படாமல் அறிமுகம் ஆகாதவர்களை விசாரிக்கிறார்கள், நாம முந்திக் கொண்டு கேட்டு இருக்கலாம்.....நமக்குத்தான் ஈகோவோ ?' என்றெல்லாம் நினைத்துக் கொண்டே,
'ஆமாங்க.....நான் இந்தியா...தமிழ்நாட்டில் இருந்து வந்தேன்.....வந்து பத்து ஆண்டுகள் ஆகிற்று' என்றேன்
நாம பத்து ஆண்டுகளாக இருக்கோம் என்று சொன்னால் நம்மை மேலும் மதிப்பார்கள் என்பதாக கேட்காமலேயே கூடுதல் தகவலாக சொல்லிக் கொண்டு இருந்தேன்
'எங்கே வேலை செய்றிங்க.....?' என்றார்
'நீங்க ஐட்டியில் வேலை செய்றிங்களா ?' கேட்டேன்
'எப்படி கரெக்டாக கேட்கிறிங்க ?' என்றார்
'முழுக்கை சட்டையோட்.....இன்சர்ட் செய்து.....மாலை நேரத்திலும் கசங்காத உடை......இதைப் பார்த்தாலே நீங்க ஐட்டின்னு தெரியுது' என்றேன் 'நாம அறிவாளி என்பதை நம்ம ஊகமே வெளிப்படுத்துது என்பதை எதிரே உள்ளவர் நினைத்து வியப்படையனும்....என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடி என் உச்சி குளிர்ந்து கொண்டிருந்தது...எதிர்பார்த்தபடியே அதே போன்ற வியப்பை முகத்தில் காட்டினார்....
'நான் இங்கே தான் பக்கத்தில் ஒரு சீன நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினியராக இருக்கிறேன்' என்றேன்
'க்ளையண்ட் ப்ளேசா ?'
'இல்லிங்க.....அதுதான் கம்பெணியே' என்றேன்
என் பெயரெல்லாம் கேட்டு....
'உங்களுக்கு திருமணம் ஆச்சா ?' என்றார்
'அதெல்லாம் எப்போவோ ஆச்சு.......பத்து ஆண்டுகள் ஆச்சு...இப்ப எனக்கு 9 வயதில் மகள் இருக்கிறாள்.......என் வயது.....இப்ப' என்பதாக சொன்னேன்
மறுபடியும் வியப்பு காட்டினார்
அதற்குள் உணவை உண்டு முடித்துவிட்டு....மேலும் நம்மைப் பற்றி நம்பும் படி இருக்கட்டும் என்பதாக விசிட்டிங்க் கார்டையும் கொடுத்துவிட்டு கைகழுவ சென்றேன், கைகழுவும் இடம் எதிரில் என்பதால் எனது அலுவலக பை அங்கேயே விட்டுச் சென்றேன்.
திரும்ப வந்து பையை எடுத்துக் கொண்டு அவருடன் மேலும் பேச காலம் போதவில்லை என்பதால்
'மறக்காம மெயில் போடுங்க, அதில் மெயில் ஐடி இருக்கு.......' என்றேன்
'மொபைல் போன் நம்பர் கொடுக்கிறிங்களா ?'
'அதிலேயே இருக்குங்க' என்பதுடன் அதைக் காட்டிவிட்டு
'நான் தமிழ் ப்ளாக்ஸெல்லாம் எழுதுவேன்.....உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்....மெயில் போடுங்க' என்று கூறி விடைபெற....
'கண்டிப்பாக போடுறேங்க' என்றார்
ஐந்தடி சென்றதும்.........'ச்சே........நம்ம பேரு தகவெல்லாம் கேட்டார்......பதிலுக்கு நாம அவர் பேரைக் கூட கேட்கவில்லையே என்பதாக நினைத்து வந்து.....திரும்பி வந்து
'சாரி..... உங்க பேரை கேட்க மறந்துட்டேன்........'
'என் பேரு கிருஷ்ணா' என்றார் (உண்மை பெயர் மாற்றப்பட்டுள்ளது)
******
பரவாயில்லை முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுபவர்கள் மிகக் குறைவு, இந்த காலத்தில் இப்படிப்பட்டவர்கள் கூட இருக்கிறார்களே.......நம்ம தமிழ் வலையுலகத்தை அறிமுகப்படுத்திவிட்டு தமிழ் சேவை ஆற்றுவோம்... ஆற்றவைப்போம்..என்றெல்லாம் நினைத்து கொண்டு திரும்பினேன்.....அவரு சும்மா சொன்னாரா......இப்போதெல்லாம் ஐட்டியில் வேலை செய்கிறாவர்களுக்கு நேரம் கிடைத்து, நினைத்துக் கொண்டு மெயில் போடுவர்கள் இருக்கிறார்களா......அவராகத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார் கண்டிப்பாக மின் அஞ்சல் அனுப்புவார் என்று நினைத்துக் கொண்டே.....அடடா........நாம அவருடையை கைபேசி எண்ணை கேட்காமல் வந்துவிட்டோமே.... அது எப்படி நம்மைப் பார்த்தாலே நம்மிடம் வந்து பேசத் தோணுமோ.....அதான் முகராசி என்று சொல்லுவார்களோ......நினைக்க நினைக்க பெருமையாகக் கூட இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை நடந்த அந்த நிகழ்வை பிறகு மறந்தே போனேன்.
இருநாட்கள் சென்று ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணிக்கு குட்டி இந்தியாவிற்கு சென்றேன்.....கூடவே இன்னொரு பதிவர் நண்பரும் வந்திருந்தார்.....இடையில் அலைபேசி அடித்தது, புதிய எண் அழைப்பு முகப்பில் தெரிந்தது
'ஹலோ........யார் பேசறது ?'
'நான் தான் கிருஷ்ணா ?'
மண்டைக்குள் அடித்த டார்ச்......அன்னிக்கு கோமளாசில் பார்த்து பேசியவர் என்று உணர
'சொல்லுங்க கிருஷ்ணா......அன்னிக்கு கோமளாசில் பார்த்தோமே......ரொம்ப மகிழ்ச்சி சரியாக நினைவு வைத்துப் மறக்காமல் பேசுகிறீர்கள்......மிக்க நன்றி'
'உங்க கிட்ட முக்கியமா ஒண்ணு பேசனும்.......அதான் அழைத்தேன்.....' என்றார்
'சொல்லுங்க சொல்லுங்க'
'இப்ப ஒண்ணும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே'
'அதெல்லாம் ஒண்ணும் இல்லை ......சொல்லுங்க'
'ஒரு ஈ காமர்ஸ் பிஸ்னஸ் நானும் நண்பரும் செய்கிறோம்.....பார்ட்னர்ஸ் தேவைப்படுது'
கொஞ்ச நாளாக எதாவது பிஸ்னஸ் செய்யதால் நல்லா இருக்கும் என்று அடிக்கடி சொல்லும் என் மூளைக்கு சற்று பிரகாசம் ஏற்பட அதற்காகவே காத்திருந்தது போல்
'ஓ தாரளமாக செய்யலாம்.....நேரில் வேண்டுமானாலும் வருகிறேன்.......சொல்லுங்க' என்றேன்
'நாளைக்கு மாலை ப்ரியா இருப்பிங்களா.......'
'இல்லிங்க நாளைக்கு கடினம் நண்பர் வீட்டில் டின்னருக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள்......நாளை மறுநாள் வேண்டுமானால் வருகிறேன்' என்றேன் உண்மையும் அது தான்.
'அப்ப சரி.......நாளை மறுநாள் அதாவது டே ஆப்டர் டுமாரோ பார்ப்போம்' என்றார்
'சரி......ஆனால் என்னால் மாலை 7 மணிக்கு மேல தான் வரமுடியும்'
'அது பரவாயில்லை......பிஸ்னஸ் பற்றி என்னுடைய ப்ரண்டு தான் சொல்லுவார் நானும் அவரும்....இன்னும் சிலரும் செய்கிறோம்.......நான் வரமாட்டேன்........என்னுடைய பிரண்டு தான் உங்களிடம் எக்ஸ்ப்ளைன் பண்ணுவார்' என்றார்
மண்டைக்குள் பழைய நினைவுகள் ஒன்று பளிச்சிட
'நீங்க என்ன மாதிரி பிஸினஸ் செய்றிங்க........இந்த ஆம்வே.....கீம்வேன்னு.........எதுக்கு நான் கேட்கிறேன் என்றால் அதிலெல்லாம் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை'
எதிர்முனையில் ஐந்து செகண்ட் கள்ள மவுனம்.......... மனதுக்குள் எனக்கு அப்பாடா தப்பித்தேன் என்கிற உணர்வு ஏற்பட்டது
'நீங்க ஏற்கனவே அதை செய்திருக்கிறீர்களா ?' என்றார்
'ஆமாங்க.....நான் செய்யல.......ஒரு நண்பர் கொண்டு போய் விட்டார்.........எனக்கு அதில் விருப்பமில்லை.......நான் செய்யவில்லை' என்றேன்
'ஏன் ஏன் ........'
'இல்லிங்க அதுபோன்ற பிஸினசில் எனக்கு விருப்பமில்லை...ஆம்வே என்றால் என்னை கூப்பிடாதிங்க.....' என்றேன்
சுருதி குறைய
'அப்ப சரி........ஓகே......' என்று அவர் சொல்ல
'ரொம்ப.................ப தாங்க்ஸ்... ! '
விசிட்டிங்க் கார்டெல்லாம் கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளப் பார்த்து....அப்பாடா தப்பித்தோம்..... என்று நினைத்துக் கொண்டே நிம்மதி பெருமூச்சுடன் போனை துண்டித்தேன்.
பின்குறிப்பு : தலைப்பில் க.அ.உ - கதை அல்ல உண்மை