பின்பற்றுபவர்கள்

2 ஆகஸ்ட், 2008

குசேலன் - கையேந்திபவன் இட்லியும் ஒரு ஓரத்தில் ஸ்டார் ஓட்டல் சட்டினியும் !

'தன்னுடைய வாழ்க்கை வரலாறு போல் இருக்கிறதென்பதால் இந்தக் கதையைத் தேர்ந்தெடுத்தார்' என்றெல்லாம் குசேலன் பற்றி கசியவிட்டார்கள், கட் அவுட் பாலாபிஷேகம், அண்ணாமலை, சந்திரமுகி 2 ஆம் பாகம் எல்லாம் ரஜினி சாமாச்சாரமாகக் காட்டிவிட்டு... ரஜினி தன் பாத்திரத்திலேயே ஏன் 'அசோக் குமார்' என்கிற பெயரில் 'நடிக்கிறார்' என்று புரியவில்லை.

படம் பற்றி எப்போதாவது எதிர்மறை கேள்வி கேட்கும் போது 'அசோக் குமார்' என்ற பாத்திரத்தில் நடித்தேன் அவ்வளவுதான் என்று ஆர் சுந்தாரஜனிடம் படத்தில் சொல்வது போல் சொல்வதற்கான முன்னேற்பாடோ ! எதையும் புதிராகப் பேசக்கூடிய அவருக்கே எல்லாம் வெளிச்சம். அவருடைய மவுனத்திற்குக்கூட இட்டுக்கட்டி ஆயிரம் பொருள் கூறி பெருமை பேசும் ரசிக சிகாமணிகள் இருக்கும் வரையில் அவர் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவை ?

********

பாட்சா, அண்ணாமலை வகையைச் சேர்ந்த 'நட்பை'ப் பற்றிய கதைதான். ஏழ்மையில் வாடும் நண்பன் (பசுபதி) தன் ஊருக்கு படப்பிடிப்புக்காக வரும் சூப்பர் ஸ்டாரின் அசுர வளர்ச்சியைக் கண்டு பயந்து அவரை சந்திக்க தயங்குவதும், அதற்குக் தடையாக அவரது காவலாளிகள் குறுக்கே நிற்பதும், இறுதிக் காட்சியான பள்ளிவிழா ஒன்றில் ரஜினி நண்பனை நினைத்து உருக்கமாக பேசிய காட்சிகள் மூலம், தான் என்றுமே பழசை மறக்காதவன் என்று கருத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார்.

பசுபதியைத் தவிர அவரது குழந்தைகள் மனைவி மீனா ஆகியோர் வறுமையில் இருப்பது போன்று இல்லாமல் உடைகள் பொருத்தமற்று இருக்கிறது. பாழடைந்த வீட்டையும், மரநாற்காலியும், ஒரு சைக்கிளும் தான் படத்தில் பசுபதியின் வறுமையைக் காட்டும் சின்னங்கள்.

நகைச்சுவை என்ற பெயரில் 'பேரீச்சம்பழத்தை கொட்டையோடு முழுங்கிடாதே...அப்பறம் மூனாகிடும்' என்று வடிவேல் பேசும் வசனம், வேட்டியைத் தூக்கிக் காட்டி ஒன்பதாவது அதிசயம் பார்க்கிறியா ? லிவிங்ஸ்டன் பேசும் ஆபாச வசனமும் நகைச்சுவை என்ற பெயரில் முகம் சுழிக்க வைத்தது. சந்தானம் வழக்கமான அண்டங்காக்கா குரலில் நகைச்சுவை செய்ய முயன்றிருக்கிறார். பில்லாவில் நயன்தாராவின் முழுத்திறமைக்(?) கண்டதால் தானோ, அவரது கவர்ச்சியை நகைச்சுவை என்ற பெயரில் அவர் உடை சரிசெய்யும் காட்சியை வடிவேலு மறைந்திருந்து பார்பதாகக் காட்டி வெளிச்சம் அடித்து இருக்கிறார்கள். 'பி'வாசுவுக்கு வயதாகிவிட்டதால் இதுபோன்ற மட்டமான கற்பனைக் கழிசல்களைத் கடைவிரித்து இருக்கிறார்.

ரஜினி ரசிகர்கள் அவரை படப்பிடிப்பில் பார்க்க தவமிருந்து தள்ளுமுள்ளில் போலிஸ்காரர்களிடம் அடிவாங்குவது போன்ற காட்சி இயல்பாகவே இருக்கிறது.

மற்றக் காட்சிகளையெல்லாம் ஏற்கனவே பல பதிவர்கள் விமர்சித்து விட்டபடியால் விட்டுவிடுகிறேன்

60 கோடிக்கு பிரமீடு சாய்மிரா இதை வாங்கி இருக்கிறதாம். படத்தில் ரஜினி வருவது பாடல்காட்சியுடன் சேர்த்தே 40 நிமிடங்கள் தான் இருக்கும், இந்த 60 கோடியையும் வசூலிக்க ரஜினியை முன்னிறுத்தி விளம்பரம் செய்தால் தான் பணத்தை அள்ள முடியும். இதற்காகவே பசுபதி குசேலன் பாடல் வெளியீட்டில் தலைகாட்டுவது நல்லதல்ல என்று முடிவு செய்ததும், பெங்களூருவில் 2 கோடி வசூல் குறைந்துவிடும் என்பதால் ரஜினி மன்னிப்புக் காட்சிகளெல்லாம் நடந்தேறி இருக்கிறது என நினைக்க முடிகிறது.

வியர்வைக்கு தங்கக்காசு என்று எழுதிக் கொடுத்தப் பாட்டைப் பாடும் ரஜினி (அப்படித்தான் அவர் சொல்கிறார்) ஏசி அறையில் நின்றுகொண்டு இதில் பசுபதியின் வியர்வையின் மூலம் தயாரிப்பாளர் கவிதாலயா பாலச்சந்தருக்கு தங்காசு கொட்ட முயற்சி எடுத்து இருக்கிறார். என்ன இருந்தாலும் கேபிசார் வளர்த்துவிட்டவர் ஆயிற்றே. முத்துப்படத்திற்கு பிறகு கலைபிரம்மா பாலச்சந்தர் சார் எவ்வளவோ கெஞ்சியும் கால்சீட் எதையும் கொடுக்காததால் இந்த பேருதவி செய்து கேபிசாரின் கலை தாகத்திற்கு காக்டெய்ல் வழங்கி இருக்கிறார்.

ரஜினியை மையப்படுத்தி அமைந்த ஜிவி.பிரகாசின் இசையில் வந்த பாடல்கள் ஏஆர்ரகுமான் டைப் பாடல்கள் போன்றதே. ஏற்கனவே பலமுறைக் கேட்டதால் படத்தில் பார்க்கும் போது அலுப்பைத் தரவில்லை. பசுபதி - மீனா பாடும் பாடல் சத்தியமாக நினைவில் இல்லை. அவர்களின் ரேஞ்சுக்கு அப்படி பாட்டு வைத்தாலே போதும் என்று நினைத்து இருப்பார்கள் போல.ரஜினி - நயன்தாரா ஆகியோர் தோன்றும் ரஜினி புகழ் பாடல்காட்சியும், கெட்டப்பும் சகானா பாடல்காட்சியை நினைவு படுத்துகின்றன. புதிதாக தெரியவில்லை
20 கெட்டப் என்னன்னவே சொன்னார்கள், அப்படியெல்லாம் தெரியவில்லை. சினிமா தவிர்த்து பொது இடங்களில் நிருபர்களுடன் பேட்டியின் போது சிகெரெட்டும் கையும், மேக்கப் இன்றி வரும் ரஜினி சார், இந்த படத்தில் (அவராகவே) சூப்பர் ஸ்டாராகவே நடிக்கும் ரஜினி, அவர் தூங்க முயன்று அந்த இடத்திற்கு வெளியே ரசிகர்களின் கூச்சல்களால் தூக்கம் தடைபட்டு பிரண்டு பிரண்டு படுக்கும் காட்சியிலும் கூட கருகரு முடியுடன் மேக்கப் போட்டே தூங்குவதாகக் காட்டுவதால் காட்சி அமைப்பில் இயல்பு இல்லை.

********

இந்த படத்திற்கு 2 பாடல்களுக்கு மட்டுமே செலவு ஆகி இருக்கிறது. மற்றக்காட்சிகளில் அப்படி என்ன செலவு செய்தார்கள் என்றே தெரியவில்லை, கதையும் மற்ற காட்சிகள் எல்லாம் வெகு சாதாரணமானவையே, இதற்கு இவ்வளவு பில்டப் ஏன் என்று கேட்க வைக்கிறது.

படத்தில் ரஜினியின் பாத்திரத்தைக் குறைச் சொல்ல ஒன்றும் இல்லை என்றாலும், படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்கள் எவரிடமும் ரஜினி (பிராண்ட்) படம் பார்த்த திருப்தியில்லை என்பது அவர்களின் சலிப்பான பேச்சில் தெரிந்தது.

மொத்தத்தில் கையேந்தி பவன் இட்லி போன்ற சாதாரணப் படத்தை சூப்பர் ஸ்டார் என்னும் சட்டினியை ஓரத்தில் வைத்துவிட்டு ஸ்டார் ஓட்டல் சாப்பாடு என்பது போல் விளம்பரப்படுத்தி வெளியீட்டாளர்களிடம் தயாரிப்பாளர்கள் நிறைய காசு பார்த்துவிட்டார்கள். ரஜினி இதற்கு ஏன் துணை போனார் என்பது தெரியவில்லை? பழசை மறக்காமால் பாலச்சந்தர் சாரின் நட்புக்காக :) காசு கொடுத்து படம் பார்க்கும் ரசிகர்கள் பாவம் இல்லையா ?

குசேலன் 'ஓடி' போட்டியாக இல்லாமல் கண்டிப்பாக தசவதாரத்தையும் இன்னும் நெடுநாள் ஓடவைத்தே தீரும் !

24 கருத்துகள்:

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

snap preview எரிச்சல் ஊட்டும் தொழில்நுட்பம். நீக்கலாம்.

**
எவ்வளவோ பெரிய ஆட்களை எல்லாம் பெயர் சொல்லி வலைப்பதியும் போது, இந்த இடுகையில் பாலச்சந்தர், rajiniக்கு 'சார்' போட்டது ஏன் என்று புரியவில்லை?

கோவி.கண்ணன் சொன்னது…

//ரவிசங்கர் said...
snap preview எரிச்சல் ஊட்டும் தொழில்நுட்பம். நீக்கலாம்.
//
சரி செஞ்சுடுறேன். மிக்க நன்றி !

//எவ்வளவோ பெரிய ஆட்களை எல்லாம் பெயர் சொல்லி வலைப்பதியும் போது, இந்த இடுகையில் பாலச்சந்தர், rajiniக்கு 'சார்' போட்டது ஏன் என்று புரியவில்லை?

12:31 AM, August 03, 2008
//

:)

கவுண்டமணி பேசும் வசனத்தில் வாங்க சார் போங்க சார்...இதிலெல்லம் கூட சார் வரும் !
:)

பரிசல்காரன் சொன்னது…

நானெல்லாம் ரஜினி படம் என்று நினைத்தெல்லாம் போகவில்லை. எப்படிப் பார்த்தாலும் படத்தை ரசிக்க முடியவில்லை!

சந்திரமுகி, குசேலன் என்று ரஜினிகாந்தும் இரட்டை அர்த்த (அல்லது) நேரடியாகவே ஆபாசமான காமெடிகளுக்கு துணை போவது வருத்தத்துக்குரிய விஷயம்!

`நானென்ன பண்ண? எழுதிக் கொடுக்கறவங்க, நடிக்கறவங்களை கேளுங்க” ம்பாரு!

மங்களூர் சிவா சொன்னது…

நல்ல வேளை பார்க்கவில்லை

:)))

முரளிகண்ணன் சொன்னது…

கடைசி வரி அற்புதம்

பரிசல்காரன் சொன்னது…

//பசுபதி - மீனா பாடும் பாடல் சத்தியமாக நினைவில் இல்லை.//


அது சொல்லு.. சொல்லு.. சொல்லம்மா' பாடல்!

எனக்கு எப்படி ஞாபகம் என்று கேக்கறீங்களா? இந்தப் பாட்டுல அடிக்கடி பரிசலைக் காட்டுவாங்க!

(ஆமா, இதுல காட்டறா மாதிரி எந்த ஆத்துல டால்ஃபின் துள்ளுது?)

thamizhparavai சொன்னது…

//அவர் தூங்க முயன்று அந்த இடத்திற்கு வெளியே ரசிகர்களின் கூச்சல்களால் தூக்கம் தடைபட்டு பிரண்டு பிரண்டு படுக்கும் காட்சியிலும் கூட கருகரு முடியுடன் மேக்கப் போட்டே தூங்குவதாகக் காட்டுவதால் காட்சி அமைப்பில் இயல்பு இல்லை//
காலத்தின் கரங்களுக்குள் எதுவும் சிக்கிக்கொள்ளும்..இதுவும் அப்படியே...
//ரஜினியை மையப்படுத்தி அமைந்த ஜிவி.பிரகாசின் இசையில் வந்த பாடல்கள் ஏஆர்ரகுமான் டைப் பாடல்கள் போன்றதே. ஏற்கனவே பலமுறைக் கேட்டதால் படத்தில் பார்க்கும் போது அலுப்பைத் தரவில்லை//

'சரோஜா' படத்தில் 'நிமிர்ந்து நில்' எனும் ஒரு பாடல் கேட்டேன்.. வேகமும், கம்பீரமுமாய் இருந்தது..கேட்கையில் ரஜினி படத்தில் இடம் பெற 100 சதவீதம் பொருந்துவது போல எனக்குத் தோன்றியது...கேட்டுப் பாருங்க்ள்...

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
//பசுபதி - மீனா பாடும் பாடல் சத்தியமாக நினைவில் இல்லை.//


அது சொல்லு.. சொல்லு.. சொல்லம்மா' பாடல்!

எனக்கு எப்படி ஞாபகம் என்று கேக்கறீங்களா? இந்தப் பாட்டுல அடிக்கடி பரிசலைக் காட்டுவாங்க!

(ஆமா, இதுல காட்டறா மாதிரி எந்த ஆத்துல டால்ஃபின் துள்ளுது?)

12:48 AM, August 03, 2008
//

பரிசல் !!! புரியுது புரியுது,

டால்பின் கிராபிக்ஸ் என நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
நானெல்லாம் ரஜினி படம் என்று நினைத்தெல்லாம் போகவில்லை. எப்படிப் பார்த்தாலும் படத்தை ரசிக்க முடியவில்லை!

சந்திரமுகி, குசேலன் என்று ரஜினிகாந்தும் இரட்டை அர்த்த (அல்லது) நேரடியாகவே ஆபாசமான காமெடிகளுக்கு துணை போவது வருத்தத்துக்குரிய விஷயம்!

`நானென்ன பண்ண? எழுதிக் கொடுக்கறவங்க, நடிக்கறவங்களை கேளுங்க” ம்பாரு!
//

பரிசல்,

சந்திரமுகியில் துணைபோகவில்லை அவரே மாற்றான் மனைவியை ஜொள்விடுவது போன்ற காட்சியில் நடித்து இருப்பார். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//முரளிகண்ணன் said...
கடைசி வரி அற்புதம்
//

முரளிகண்ணன் சார்,
பதிவெழுத வந்த பிறகு நுண் அரசியலெல்லாம் விரலிடுக்கிலாவது எப்படியோ நுழைந்துவிடுகிறது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
நல்ல வேளை பார்க்கவில்லை

:)))
//

சிவா,
இதெல்லாம் ஓவரு, நாங்களெல்லாம் பாவம் செஞ்சவங்களா ? பழிக்கு பழி, உனக்கு திருமணம் நடக்கும் போது குசேலன் டிவிடிதான் அன்பளிப்பாக பார்சலில் அனுப்புவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ்ப்பறவை said...


'சரோஜா' படத்தில் 'நிமிர்ந்து நில்' எனும் ஒரு பாடல் கேட்டேன்.. வேகமும், கம்பீரமுமாய் இருந்தது..கேட்கையில் ரஜினி படத்தில் இடம் பெற 100 சதவீதம் பொருந்துவது போல எனக்குத் தோன்றியது...கேட்டுப் பாருங்க்ள்...
//

தமிழ்ப்பறவை,

அப்படியா ? அந்த பாடலை இன்னும் கேட்கவில்லை. படத்தின் டிரய்லரை குசேலன் படத்திற்கு முன்பு காட்டினார்கள்.

கிரி சொன்னது…

//பொது இடங்களில் நிருபர்களுடன் பேட்டியின் போது சிகெரெட்டும் கையும்//

"மனசாட்சியை" (என்னை அல்ல ;-)) தொட்டு சொல்லுங்க கோவி கண்ணன் ரஜினி இப்படியா இருக்கிறார் பொது இடங்களில்..

ஒட்டு மொத்தமா கும்மியடிக்கிறது முடிவு பண்ணியாச்சு நடத்துங்கோ....கோவி கண்ணன் மட்டும் என்ன விதிவிலக்கா ..பரவாயில்லை மத்தவங்க அளவுக்கு மோசம் இல்ல..அதற்காக கோவி கண்ணனுக்கு சுமாரான :-) நடுநிலை கண்ணன் என்று பட்டம் தரலாம் :-)

ஸ்ஸ்ஸு கண்ணை கட்டுதே ..படத்தை பார்த்தல்ல :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
//பொது இடங்களில் நிருபர்களுடன் பேட்டியின் போது சிகெரெட்டும் கையும்//

"மனசாட்சியை" (என்னை அல்ல ;-)) தொட்டு சொல்லுங்க கோவி கண்ணன் ரஜினி இப்படியா இருக்கிறார் பொது இடங்களில்..

ஒட்டு மொத்தமா கும்மியடிக்கிறது முடிவு பண்ணியாச்சு நடத்துங்கோ....கோவி கண்ணன் மட்டும் என்ன விதிவிலக்கா ..பரவாயில்லை மத்தவங்க அளவுக்கு மோசம் இல்ல..அதற்காக கோவி கண்ணனுக்கு சுமாரான :-) நடுநிலை கண்ணன் என்று பட்டம் தரலாம் :-)

ஸ்ஸ்ஸு கண்ணை கட்டுதே ..படத்தை பார்த்தல்ல :-)
//

சின்ன ரஜினி கிரி சார்,

பாட்சா சர்சையின் பிறகு வெளிநாட்டில் இருந்து அவசரமாக திரும்பிய ரஜினி பத்திரிக்கையாளர் மத்தியில் ஜெவுக்கு எதிராக பேட்டி அளித்தக் காட்சி கிடைத்தால் வாங்கிப் பாருங்கள். அதுல செயினாக ஊதிக் கொண்டு இருப்பார். அதை வச்சுதான் ஜெவுக்கு ஆதாரவான பிரச்சாரத்தில் ஆச்சு மனோரமா குடிகாரன், பைத்தியம் என்றெல்லாம் ரஜினிக்கு எதிராக செய்தார்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

//இதுல காட்டறா மாதிரி எந்த ஆத்துல டால்ஃபின் துள்ளுது?//

இதை பற்றி கோவி அண்ணன் ஒரு பதிவும்.

உண்மை தமிழன் 4000 பக்க விமர்சனமும்..

சுப்பையா ஐயா சொற்பொழிவும்.

கூடிய விரைவில் ஏற்பாடு செய்யப்படும்...

Kanchana Radhakrishnan சொன்னது…

கை ஏந்தி பவன் இட்லி சுவை ஸ்டார் ஓட்டலில் இருக்காது என வாசுவிற்கு தெரியும்.அதனால்தான் சாதாரண படம் ஓடணும்னு சூபர் ஸ்டார் சட்னி வைத்து உயர்த்தி காட்டி இருக்கார்.

பிரேம்ஜி சொன்னது…

தப்பை சுட்டி காட்டும் தைரியம் எந்த பத்திரிக்கைக்கும் இல்லை. தசாவதாரமாகட்டும்,குசேலன் ஆகட்டும்.எல்லா பத்திர்க்கையும் ஆஹா ஓஹோ தான்.அதும் சில பத்திரிக்கைகள் இது ஒரு மாஸ்டர் பீஸ் ன்னு வேற சொல்றாங்க. அவனவன் டௌசர் தான் பீஸ் பீஸா கிழிஞ்சது.

பெயரில்லா சொன்னது…

கலைஞர் TV-ல் இந்த வாரம் டாப் டென்ல முதலிடத்துல உளியின் ஓசை வருமா? குசேலன் வருமா?

கிரி சொன்னது…

//அதை வச்சுதான் ஜெவுக்கு ஆதாரவான பிரச்சாரத்தில் ஆச்சு மனோரமா குடிகாரன், பைத்தியம் என்றெல்லாம் ரஜினிக்கு எதிராக செய்தார்.//

கோவிகண்ணன் ஐயா அதெல்லாம் சரிங்க..இப்பத்த கதைய பேசுங்க....ரஜினி படங்களில் சிகரெட் குடிப்பதை நிறுத்திய பிறகு பொது இடங்களிலும் பிடிப்பது இல்லை.. தவறு செய்தவர்கள் திருந்துவதே இல்லையா....அதை எத்தனை "காலம்" தான் சொல்லிட்டு இருப்பீங்க....சரி எதோ சொல்லனும்னு தோணுச்சு மற்றபடி இதை நியாயப்படுத்தி பேசவில்லை..மற்றும் நம்ம நேரம் சரி இல்லையாதலால் :-))) இப்போதைக்கு எஸ் ஆகிக்குறேன் நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம் :-)))

Athisha சொன்னது…

நிருத்துங்க எல்லாத்தையும் நிருத்துங்க

போதும்

பாவம் ரஜினி .

ரோபோ வருதுல்ல உங்களுக்குலாம் அதுல பதில் சொல்லுவாரு ரஜினி

இல்லையா ரஜினி தாத்தா!!!(உங்களுக்கு எங்க தாத்தாவ விட 4 வயசுதான் கம்மி )

சரண் சொன்னது…

படம் இன்னும் பார்க்கவில்லை. சமீப ரஜினி படங்கள் பார்ப்பதில் அவ்வளவு ஆர்வமும் இல்லை. குசேலன் பற்றிய விமர்சனங்களை படிக்கும்போது தோன்றுவது, இப்படத்தை ஏன் மலையாளப் படம் போலவே சீனிவாசனை வைத்தே இயக்கி இருக்கலாமே? இவ்வளவு அசிங்கங்களை சேர்த்தால்தான் தமிழ் (குறிப்பாக ரஜினி) ரசிகர்கள் திருப்தி அடைவார்கள் என்ற பீ.வாசுவின் கணிப்பு இந்தப் படத்தின் வெற்றியில் உறுதி செய்யப்படும் என்பது வேதனையாக இருக்கிறது.

ஜெகதீசன் சொன்னது…

ஹிம்ம்... ரஜினியின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்ட மற்றுமொரு விமர்சனம்...
ஒரு நல்ல படத்தைப் பற்றி எப்படித்தான் இப்படியெல்லாம் தவறாக எழுத முடிகிறதோ..

உங்கள எல்லாம் பார்த்தா பாவமா இருக்கு..... :P

வந்தியத்தேவன் சொன்னது…

அசோக்குமார் என்ற பெயரில் உள்ள நுண்ணரசியல் விளங்கவில்லையா? அது கன்னட சூப்பர் கிழவன் ராஜ்குமார் பெயருடன் ஒத்துப்போகின்றது. ஏன் ரஜனி ஒரு கணேசனாகவோ இல்லை காந்தாகவோ (ஏதோ ஒரு படத்தில் செந்திலின் பெயர் பாவடை காந்த்) இல்லை ஹாசனகவோ இருக்ககூடாது. தமிழில் விஜயகுமார், சரத்குமார், சிவகுமார் தவிர வேறு யாரும் குமார் கிடையாது.

வெண்பூ சொன்னது…

//மொத்தத்தில் கையேந்தி பவன் இட்லி போன்ற சாதாரணப் படத்தை சூப்பர் ஸ்டார் என்னும் சட்டினியை ஓரத்தில் வைத்துவிட்டு ஸ்டார் ஓட்டல் சாப்பாடு என்பது போல் விளம்பரப்படுத்தி வெளியீட்டாளர்களிடம் தயாரிப்பாளர்கள் நிறைய காசு பார்த்துவிட்டார்கள். //

அற்புதமான அனாலஸிஸ் கண்ணன்.. சரியான உதாரணத்துடன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்