பின்பற்றுபவர்கள்

31 ஜூலை, 2008

ரஜினி மன்னிப்புக் கேட்டார் ! நாமும் மன்னிப்போம் !

ஒகனேக்கல் விவகாரத்தில் உணர்ச்சிவசப் பட்ட ரஜினிகாந்த் தன்னைச் சேர்ந்தவர்கள் என்றே உரிமை எடுத்துக் கொண்டு கன்னடர்களை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து பல்வேறு கன்னட அமைப்புகளிடமிருந்து ரஜினிக்கு எதிர்ப்புக் கிளம்பியது தெரிந்ததே.

குசேலன் படம் பெங்களூரில் வெளியிட முடியாதபடி வாட்டாள் கும்பல்கள் தொடர்ந்து அச்சுறுத்திவர, குசேலன் படத் தயாரிப்பாளர்களும் ரஜினிக்கு நெருக்கடி கொடுத்து இருப்பார்கள் என்றே நினைக்க முடிகிறது. அதைத் தொடர்ந்து கன்னட திரைப்பட சங்கத்தலைவருக்கு (சபரிமலை அய்யன் புகழ் அதே ஜெயமாலா) மன்னிப்பு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதை செய்தியாளர்களுக்கு முன்பு எடுத்துக்காட்டி ரஜினி தன்னிடமே மன்னிப்பு கோரியுள்ளார் என்பதுபோல் காட்டி அதைத் தனக்கான விளம்பரம் ஆக்கிக் கொண்டார் ஜெயமாலா. இது ரஜினி தரப்பை மிகவும் சங்கடத்திற்கு உள்ளாக்கி இருக்கும் என்றே தெரிகிறது. முழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் தற்போது (இன்று) தொலைக்காட்சியில் தோன்றி கன்னடர்களிடம் வெளிப்படையான மன்னிப்பும் கேட்டு இருக்கிறார்.

மனிதன் தவறு செய்வது இயல்பு, மன்னிப்புக் கேட்பது பாராட்டுக்குரியது, மன்னிப்பு கேட்பது பெரும்தன்மை கூட.

ஆனால் இதை குசேலன் வெளியீட்டை முன்னிட்டு செய்யாமல் முன்பே செய்திருந்தால் ரஜினி பெரும்தன்மையானவர் என்று பாராட்டலாம். சொல்றத செய்வேன் செய்றதைச் சொல்லுவேன் என்கிற பத்தரை மாற்று பஞ்ச் டயலாக்குக்கு அவரே பங்கம் வைத்துவிட்டார்.

ரஜினி பல்டிகள் தெரிந்தது தான், எல்லா நடிகர்களும் நெய்வேலிக்கு சென்று போராடிய போது, தனக்கு ஒப்புதல் இல்லை என்று தனியாக உண்ணாவிரதம் இருந்தவர் தான் ரஜினி. கன்னடர்களை கண்டிக்கிறேன் என்று கண்டித்தவர் தற்பொழுது அதைத் திரும்ப பெற்று இருக்கிறார். இதில் அவருடைய தவறு எதுவும் இருப்பது போல் தெரியவில்லை. அவர் ஒரு நடிகர் அவருக்கு இருக்கும் மதிப்புக்கு ஏற்றவாறு அவருடைய படங்கள் விற்பனையாகின்றன, அதை வாங்கும் வெளியீட்டாளர்கள் ( விநியோகம்) நட்டப்படக் கூடாது என்று நினைப்பதில் தவறு இல்லை. அதைத்தான் செய்து இருக்கிறார். திரைத்துறையினரிடமே அவர் முரண்டு பிடித்தால் அவர் தன்னை நடிகன் என்று சொல்லிக் கொள்ளவே முடியாது. தான் ஒரு நடிகன் என்பதை நன்றாகவே உணர்ந்து அந்த முடிவை எடுத்து இருக்கிறார். அது தனியாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதைத் தவிர்த்து இந்த திடீர் மன்னிப்புக்கு காரணம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்.

ஆனால் அப்பாவி ரசிகர்களும் சரி, பரபரப்பு செய்தி இதழ்களும் சரி, ரஜினி வாய்ஸ் கொடுத்தால் சூரியன் கூட நிலவாகிவிடும் என்று அவரை சீண்டுவதை நிறுத்தவேண்டும், தன்னால் முடியாத ஒன்றை செய்துவிட்டு அவர் படும் பாடு அவருக்குத்தான் தெரியும்.

ரஜினி ஸ்டெயில் உங்களுக்கு பிடித்து இருந்தால் படத்தை 100 முறை கூட பாருங்கள், தலையில் கூட வைத்து கொண்டாடுங்கள், ஆனால் அவரை உலகரட்சகன் போன்று புகழ்வதால் அவருக்கும் நட்டம், உங்களுக்கும் இழுக்கே !

எனக்கும் ரஜினி படங்கள் பிடிக்கும், ஒரு நல்ல மனிதராகத்தான் பார்க்கிறேன். கடவுள் அவதாரம், அகில உலகத்திற்கும் தலைவன் என்று சொல்வதையெல்லாம் கேட்டால் சிரிப்பே வருக்கிறது.

ரஜினி வாய்ஸ் கொடுக்க வேண்டும் என்று கூவிவிட்டு அவரை ஒகனேக்கல் விவகாரம் போல் தர்மசங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்.

ரஜினி தமிழர்களுக்காக கன்னடர்களைப் பகைத்துக் கொண்டார், கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார். அவர்கள் மன்னித்துவிட்டார்கள். தமிழர் - கன்னடர் விவகாரங்களில் இன்னொமொருமுறை தமிழ்களுக்காக வாய்திறக்கமாட்டேன் என்று மறைமுகமாக சொல்லாமல் சொல்லியதை நாமும் மன்னிப்போம். ரஜினியைத் தவிர்த்து, தமிழ்நாட்டில் தமிழருக்கு எதிராக வன்முறையில் இறங்கும், கன்னடர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேறு தலைவர்களே இல்லையா ? இல்லை.... ரஜினியே சொல்லிவிட்டார் என்ற கன்னடர்கள் தான் அடங்கிவிட்டார்களா ?

*******

இதுபோன்று இனிதர்மசங்கடத்திற்கு ஆளாகவேண்டாம் ரஜினி சார் ! தமிழர்களுக்குஆதரவாக இல்லாவிட்டாலும், எதிர்ப்பாகவே பேசினாலும் கூட இருக்கும் உங்கள் ரசிகர்களில் 50 விழுக்காட்டும் மேல் அதைத் கேட்டு மெய்சிலிர்த்து உங்கள் காலில் விழவும் தயாராக இருக்கும் தமிழ்நாட்டு ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாடு உங்கள் கையில் இருப்பதால் நீங்கள் ஒன்றும் செய்யத் தேவையில்லை பாபா படமே 100 நாள் வரை ஓடிய போது, குசேலனை ஓடவைத்துவிடமாட்டோமா ? நீங்கள் சொல்வதைக் கேட்போர் இங்குண்டு எங்களுக்கெல்லாம் விளக்கம் தேவை இல்லை. கர்நாடகத்தில் தானே நீங்கள் சொல்வதைக் கேட்கமாட்டார்கள், அங்கு நீங்கள் மன்னிப்பு கேட்பது தேவையான ஒன்று தான். இதைக்கூட கன்னடர்கள் சந்தர்பவாத மன்னிப்பு என்று நினைத்து பிரச்சனையை நீட்டிக்காமல் இருந்தால் நல்லதே !

30 ஜூலை, 2008

தலித் கோவிந்தம் ! ஒரு கண்துடைப்பு பஜனை !

இதைவிட தலித் மக்களை கேவலப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை !!!

இதைப் சமூக புரட்சி, நல்லிணக்கம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள்

"இந்த புரட்சிகரமான சமூக மாற்ற நிகழ்ச்சியின் மூலம் ... சமூகத்தில் நிலவி வரும் மூடத்தனத்தை, தலித் புறக்கணிப்புப் போக்குக்கு முடிவு கட்ட முடியும் என்று நம்புகிறோம்.

தலித் மக்களையும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சமமான நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியே இது. இந்த தலித் கோவிந்தம் மூலம் தலித் கிராமங்களுக்கு பெருமாளை நேரடியாக கொண்டு செல்வது, தலித் கிராமங்களில் பஜனைப் பாடல்களை இசைப்பது, அவர்களையும் பூஜிக்க அனுமதிப்பது ஆகியவை அடங்கும்.

தலித் மக்கள் மீது தேவஸ்தானம் அக்கறை கொண்டுள்ளது என்பதை நிரூபிக்கவே இந்தத் திட்டம். இந்தத் திட்டத்திற்கு தலித் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடவுள் யாரையும் பாரபட்சப்படுத்திப் பார்ப்பதில்லை. அதை அனைவருக்கும் உணர்த்தவே இந்த தலித் கோவிந்தம் நிகழ்ச்சி. "


படிப்பதற்கு புரட்சிப் போன்று இருந்தாலும், தலித்துக்களுக்கு திருப்பதி கோவிலுக்குள் செல்ல அனுமதி இல்லை என்பதை பச்சையாகச் சொல்வது தான் இது. யார் சொன்னது ? யார் வேண்டுமானாலும் கோவிலுக்குள் செல்லலாமே ? என்றும் சிலர் வாதிடுகிறார்கள். ஒருவர் தன்னை தலித் என்று கூறிக் கொண்டோ, அல்லது அவர் தலித் என்று தெரிந்த பின்னர் கோவிலுக்குள் அனுமதிப்பபர்களா என்பதே கேள்வி. தேவஸ்தானாத்தின் புரட்சிகர திட்டத்தின் அறிவிப்பிலேயே தலித்துக்களுக்கான அனுமதி மறுப்பு உண்மைத்தான் என்பது போலவே உள்ளது.

"திருமலையைச் சுற்றிலும் உள்ள பல கோவில்களிலும் தலித் மக்கள் நுழைய தடை உள்ளது. இதனால் தலித் மக்கள் தங்களது இஷ்ட தெய்வத்தை வழிபட முடியாத அவலம்.

இந்த நிலையைப் போக்கும் வகையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம், தலித் கோவிந்தம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தான தலைவர் கருணாகர ரெட்டி கூறுகையில், சமூகத்தின் நலிவடைந்த பிரிவினரின் அபிலாஷைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்களை தேவஸ்தானம் தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியே இந்த தலித் கோவிந்தம்."


தலித்துக்களின் சுறுக்குப் பைச் சில்லரை மீதும் குறிவைத்துக் கொண்டு வரப்படும் சிலைகள், திருப்பதி திரும்பும் போது யாரும் புழங்காத இடங்களில் மறைத்து வைக்கப்படும், அல்லது அழிக்கப்பட்டுவிடும் என்று அண்மையில் ஒருவர் மனக்குமுறலைக் கொட்டி இருந்தார்.

புரட்சி செய்வதென்றால் திருப்பதியில் கக்கூஸ் கழுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் தலித் மக்களில் ஒருவரை ஒரு நாள் அர்சகர் ஆக்கிப் பார்க்க வேண்டியதுதானே ?

நீங்கள் அங்கெல்லாம் வந்துடாதிங்க, நாங்களே இங்கே வருகிறோம் அதுதான் நல்லது என்கிறார்களோ.

என்ன கொடுமைய்யா இது 21 ஆம் நூற்றாண்டு கணனியுகத்தில் மனிதரில் சாதியால் தாழ்த்தப்பட்டவர் என்ற முத்திரையை சுமக்க வைப்பதும் இல்லாமல், அவர்களுக்கும் பெருமை சேர்ப்பது போல் இத்தகைய நாடகங்கள் நடத்தப்படுகிறது. இன்னும் எத்தனைக் காலம் தான் பொம்மைகளை வைத்து இப்படி ஆன்மிக பித்தலாட்ட பொம்மலாட்டாம் நடத்தப் போகிறார்களோ. கோவிலுக்குள் நுழைய சம உரிமைகேட்பதோடு அன்றி 'தலித் கோவிந்தத்திற்கு' நாமம் போட்டு திருப்பி அனுப்புவதே நல்லது. கோவிலிலும், கோவில் திருப்பணிகளிலும் இட ஒதுக்கீடு கேட்டு போராடினால் தான் இவற்றிற்கெல்லாம் தீர்வு கிடைக்கும்.

புனிதம்...புண்ணாக்கு...அசுரன்...கிருஷ்ணன்...பரமாத்மா...நாய்...சங்கராச்சாரியார்...விபூதி... வாந்தி...லிங்கம்...பண்ணாடை...சலூன்....சால்னாகடை...ஐயப்ப சாமி...இரட்டை டம்ளர்...வெங்கடாஜலபதி...நடிகைரோஜா...சாராயக்கடை...புளிச்சேப்பம்...புளியோதரை...சோமபானம்...நீலப்படம்...பூக்கூடை...ஆர்லிக்ஸ்...அப்பப்பா

முடியல்ல மூச்சு வாங்குது !

தலித்துக்களை மேலும் இழிவு படுத்த .... அவர்கள் நிலை அப்படித்தான் இருக்கிறது என உறுதி செய்யவும் மேலும் அப்படியே வைத்திருக்க வேண்டும்... என வரும் 'தலித் கோவிந்தம்' வன்மையாக கண்டிக்கத் தக்கது.

பெருமாளுக்கும் தன் சிலையை வைத்து இவர்கள் ஆடும் ஆட்டம் இதெல்லாம் பிடிக்காது.

"புனிதம் என்று சொல்வதெல்லாம் புளிப்பேறியே கிடக்கிறது..." - சமூகவியல் எழுத்தர் க.சு.நடராஜன் !

********

"எலே மூக்கைய்யா...என்னல்லே எதோ சாமி வருதாம்லே"

"ஆமாண்டா செங்கோடா...நாமெல்லாம் கோவிலுக்கு போவ முடியாதுல்ல..."

"அப்ப சாமி வர்றது நமக்கெல்லாம் பெருமைங்கிறியா ?"

"மண்ணாங்கட்டி...அவங்க வருவாங்க போட்டா எடுத்து பேப்பரில போடுவாங்க...அதுல நமக்கு என்னய்யா பெருமை ? அது வந்தாலும் வராட்டாலும் ஏர் ஓட்டினாதான் நமக்கு சோறு...வா போய் வேலய பார்ப்போம்"

29 ஜூலை, 2008

வருத்தம் தான் லக்கிலுக் ! 'கலைஞரின் பிள்ளைப் பாசம்...!'

சென்னை : முதல்வர் பதவியிலிருந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் பொறுப்புக்கு வந்து விடலாமோ என நான் நினைக்கிற அளவுக்கு, உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார், என முதல்வர் கருணாநிதி பெருமிதம் தெரிவித்தார். தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 385 ஊராட்சி ஒன்றிய தலைவர்களுக்கு வாகனம் வழங்கும் விழா, சென்னையில் நேற்று நடந்தது.

- அது தினமலர் செய்தி வழியாக அறிந்தது, இப்போதெல்லாம் திமுக பற்றிய செய்திகளை தினமலர் ஆர்வத்துடன் வெளி இடுகிறது

*****

'தந்தை மகனுக்காற்றும் உதவி, மகன் தந்தைக்காற்றும் உதவி' என்கிற திருக்குறள்கள் பெருமை படுத்தப்படுகிறது என்று தான் இதைப்படித்ததும் நினைக்கத் தோன்றுகிறது. திரு முக ஸ்டாலின் வயது 60 வதை நெருங்கினாலும் இளைஞர் அணியின் நிரந்தர தலைவர், அதற்கும் மேல் பெரிய பதவிக்கெல்லாம் ஆசைப்படாதவர், மிகச் சிறந்த மாநில அமைச்சர், இருமுறை சென்னை மாநில மேயராக இருந்தவர் இதையெல்லலம் பார்க்கும் போது ஒரு தந்தைக்கு பெருமை இல்லையா ?

*****

வாரிசு அரசியல் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் திமுக வாரிசு அரசியல் பற்றி தவறாக எதுவும் சொல்வதற்கு இல்லை. வாரிசுகள் இல்லாத அரசியல் தலைவர்கள் மட்டுமே வாரிசு அரசியல் எதிர்பாளர்களாக இருப்பார்கள் என்ற அளவில் தான் வாரிசு அரசியலின் எதிர்ப்பு இருக்கிறது. முக ஸ்டாலின் அரசியலில் 40 ஆண்டுகாலமாக இருக்கிறார் என்பதால் வாரிசு அரசியல் குற்றச்சாட்டை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆசி உண்டு, ஆசை இல்லை(!) என்ற கொள்கையில் லோக ஷேமம் என்னும் பொதுச்சேவை செய்யும் (!) சங்கரமடமே, வாரிசுகளாக குறிப்பிட்ட சாதியினரே அதுவும் உள் ரெகமெண்டேசன் வழி சங்கராச்சாரியார்களைத் தேர்ந்தெடுக்கும் போது ... பச்சை அரசியலில் வாரிசு என்பதெல்லாம் ஒரு குற்றச்சாட்டே அல்ல... சொல்ல வந்ததைச் சொல்லாமல் சற்று இழுக்கிறது.....பொறுத்தருள்க...

*****

அரசியல் வேறு குடும்பம் வேறு, முக ஸ்டாலின் சிறப்பாக செயலாற்றுகிறார். முதல்வர் என்ற முறையில் மனம் திறந்து பாராட்டுகிறார் உனக்கு ஏன்யா எரியுது ? நல்ல கேள்வி தானே ?

தந்தையை மகன் 'தலைவர் அவர்களே...' என்றும், தந்தை மகனை 'மாண்புமிகு உள்ளாட்சித்துறை அமைச்சர் அவர்களே....' என்று விளிப்பதெல்லாம் நகைச்சுவையா ? பதவிக்கு உரிய மரியாதைதானே ? பொறுங்கள் !

ஒகனேக்கல் பிரச்சனை என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை, கர்நாடக தேர்தல் முடியும் வரை காத்திருப்பதாகச் சொன்னார்கள். பாராளுமன்ற தேர்தல் முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்பது தான் தற்போதைய நிலையா ? கலைஞர் ஒகனேக்கல் குறித்து எதுவும் முடிவு செய்து இருந்தால், பெங்களூரூ வாட்டாள் நாகராஜின் ஆர்பாட்டம் மூலம் இன்னேரம் நமக்கு தெரிந்திருக்கும் :) வாட்டாள் நாகராஜ் வெகு அமைதியாக இருப்பதிலிருந்து தமிழக தரப்பில் இருந்து ஒகனேக்கல் திட்டம் குறித்து எந்த முன்னேற்றமும் இருப்பது போல் தெரியவில்லை.

இராமேஸ்வர மீனவர் பிரச்சனை ? மத்திய அரசின் கவனம் ஈர்ப்புக்காக நாங்கள் உண்ணாவிரதம் இருக்கிறோம் என்று சுழற்சி முறை உண்ணாவிரதம் மட்டுமே இருக்க முடிந்தது, பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை திமுக மத்திய அமைச்சர்களை திரும்பப் பெற்றுக் கொள்கிறோம், காங்கிரஸுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் என்று அறிக்கை கொடுக்க முடிந்ததா ? அப்படி செய்திருந்தால் உண்ணவிரதம் உண்மையிலேயே தமிழக மீனவர் குறித்த அக்கரை என்று பாராட்டி இருக்கலாம்.

அறிவிக்கப்படாத மின்வெட்டு என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தினால் அவர்கள் மீதே கடந்த ஆட்சியின் தவறுகள் இது என திரும்ப குற்றச்சாட்டுகளைச் சொல்வதும், மேலும் மின்வெட்டு தேதிகளை அறிவித்து இந்த தேதிகளில் மின்வெட்டு இருக்கும் என்று உறுதிப்படுத்துவது தான் பிரச்சனைகளை தீர்க்கும் அரசுக்கு அழகா ?

இவற்றிற்கு இடையே தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பாராட்டி மகிழ்வது உண்மையிலேயே பார்க்கும் நம்மை எரிச்சல் அடையவே வைக்கிறது. திமுககாரர்களுக்கு ?

திமுககாரர்களுக்கு ஒரு கேள்விகள்,

கலைஞர் ஒரு கட்சித்தலைவராக திரு முகஸ்டாலினின் சிறப்பான செயல்பாடுகளைப் பாராட்டுகிறார், இதில் குடும்பம் பாசம் எங்கே வந்தது என்று நீங்கள் கேட்க நினைக்கலாம், இதே கேள்விதான் பலரின் மனதிலும் ஏற்படுகிறது, திரு தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக சிறப்பாகத்தான் செயலாற்றினார், மதுரை தினகரன் நிறுவனம் தாக்கப்பட்டத்தைத் தொடர்ந்து மூன்றுபேர் எரித்துக் கொள்ளப் பட்டபோது, சன் டிவி நிர்வாகம் திரு முக அழகிரி அவர்களை 'ரவுடி அழகிரி' என்று சிறப்பு பெயரிட்டு செய்தியில் வாசித்ததற்கும்... தயாநிதி மாறனின் அமைச்சர் செயல்பாட்டுக்கும் என்ன தொடர்பு ? மதுரை தினகரன் அலுவலகத்தில் 3 பேர் அடித்துக் கொல்லப்பட்டது கொல்லப்பட்டது தான், தருமபுரி மாணவிகள் எரிப்பை அதிமுகவுக்கு எதிரான அம்பு போலவே பயன்படுத்திய திமுக அரசு மதுரை தினகரன் ஊழியர்களின் படுகொலைகளுக்கு என்ன நடவெடிக்கை எடுத்தது ?

தன் செல்ல மகனை இழிவாக பேசிவிட்டார்களே... என்று கொதித்தெழுந்து தயாநிதிமாறனுக்கு நெருக்கடிக் கொடுத்து பதவியை பறித்தார்கள் அவ்வளவுதான். இங்கு மட்டும் அரசியல் வேறு குடும்பம் வேறு என்று கலைஞரால் ஏன் பார்க்க முடியவில்லை ? மாறன் சகோதரர்களுடன் நடத்தும் குடும்ப யுத்தம் வேறு, அரசியல் வேறு அதாவது தயாநிதிமாறனின் அமைச்சர் பதவி வேறு என்று ஏன் பார்க்க முடியவில்லை. தயாநிதிமாறனின் 1 ரூபாய் தொலைபேசி இந்தியா முழுவதும் பேசப்பட்டதே. அமைச்சருக்கும் பொதுமக்களிடம் நல்ல பெயர் இருந்ததே.

நான் மாறன் சகோதர்கள் சத்தியவான்கள் என்று சொல்லவரவில்லை. மூன்றுபேர் எரிந்ததைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தாத்தாக் குடும்பத்துடன் இணக்கமாக செல்லவே பல்வேறு தூதுக்கள் விட்டு பலனளிக்காமல் தற்போது(தான்) தங்கள் நிறுவனம் கட்சி சார்பற்றது என்று சொல்லிக் கொள்ள முயல்கிறார்கள், முன்பு இவர்களால் புறக்கணிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் முகங்கள் தற்போதுதான் பொதுமக்கள் பார்வைக்காக காட்டப்படுகிறது.

கலைத்துறையில், தமிழ் இலக்கியத்திலும் யாரும் எட்டமுடியாத சாதனை நிகழ்த்தியவர், திராவிடத் தலைவர் என்பதால் கலைஞர் மீது பெரும் மதிப்பே உண்டு, அரசியல் ? அண்மைக்காலமாக கலைஞரின் அரசியல் ரசிக்கத்தக்கதாக இல்லை.

28 ஜூலை, 2008

முதல் காதல் !

காதலுக்கும் வயதுக்கும் எதாவது தொடர்ப்பு இருக்கிறதா ? முதன் முதலில் அம்மா அப்பா விளையாட்டு யாரோடு விளையாண்டோம் என்று இன்றும் நினைத்திருந்தால் அதெல்லாம் காதல் என்ற இலக்கணத்துக்குள் வராதா ? இன்பேக்ஸ்வேசன் என்று சொல்லுவாங்களே, எதோ ஒரு ஈர்ப்பு அது பேரு காதல் இல்லை என்றெல்லாம் சொல்லுவார்கள், காதல் எந்த வயதில் வரவேண்டும் என்று எதாவது வரையறை இருக்கிறதா ? ஆணோ பெண்ணோ பருவமடைந்ததும் இயல்பாகவே எதிர்பாலினரின் மீது ஈர்ப்பு வரும் பருவம் காதல் பருவமா ? எல்லோருக்கும் அது போல் ஈர்ப்பெல்லாம் நிகழ்ந்து விடுவதில்லை. மீசை அரும்பும் பருவத்தில் காதலா ? செருப்பால் அடி :) அப்போ அந்த வயதில் அது தப்பா ? சென்ற நூற்றாண்டு வரை நமது மரபணுக்களில் சிறுவயது திருமணம் கலந்து இருக்கிறது. தற்பொழுது சமூக அமைப்பால் ஒருவன் சொந்தக் காலில் நிற்கும் தகுதியைப் பெரும் போதுதான் அவனுக்கு திருமணமே. அப்போ காதல் ? முதலில் வேலை அப்பறம் தான் காதல் கத்திரிக்காயெல்லாம். வயதுக்கும் காதலுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்கிறதல்லவா ?

'ஹிஹி... நான் என் மனைவியைக் காதலிக்கிறேன்....' அச்சோ அச்சோ ... திருமணத்திற்கு முன்பு வரும் ஈர்ப்பைப் பற்றிப் பேசுகிறோம். பெண்டாட்டி தாசர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள். :) திருமணத்திற்குப் பிறகு மனைவியைக் காதலிக்காவிட்டால் முதலில் சோறு கிடைக்காது, அப்பறம் மத்ததெல்லாம் வேண்டாம் பாக்கியராஜ் மேட்டர் !!! வேண்டாம் ... எழுத வேண்டாம். திருமணத்திற்கு முன்பு எதிர்பாலினரோடு எந்த வயதிலாவது காதல் இருந்ததா இல்லையா ? கண்டிப்பாக இருக்கும். யாரும் சின்ன வயசிலேயே குட்டிச் சாமியார் ஆகிவிடுவதில்லை. அது இன்பாக்ஸுவேசனா ? வேற எதாவதா ? எப்படி எதோ ஒண்ணு கண்டிப்பாக இருந்திருக்கும்.

ஐந்து வயதாக இருக்கும் போது தெருவில் இருக்கும் அதே வயது பையன் என்னிடம் சொன்னேன். 'அந்த அக்காவை நான் லவ் பண்ணுகிறேன்'. அந்த அக்காவுக்கு அப்ப 15 வயசாவது இருக்கும். சும்மா இருக்க முடியாமல் அதைப் போய் வெளம்பரப்படுத்த அந்த பையனுக்கு முதுகு வீங்கியது மிச்சம். இப்படி பலப் பலக் காதல் கதைகளை எல்லோரும் கடந்தே வந்திருப்போம்.

எனக்கும் ஐந்து வயதிருக்கும் அப்போதெல்லாம் பாட்டி வீட்டுக்குத்தான் விடுமுறைக்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செல்வேன். அங்கேயே அப்பாவின் பெரியம்மா மகள் வீடும் இருந்தது, எனக்கு அத்தை முறை. பார்வதி அத்தை என்று தான் கூப்பிடுவோம். அத்தைக்கு ரோசாப்பு நிறத்துல அழகான குழந்தை மூன்று வயசுதான் இருக்கும், படிப்பறிவு இல்லாத பாட்டியும் அத்தையும்...'டேய் உன் பொண்டாட்டிக் கூட போய் விளையாடுடா என்பார்கள்' குழந்தை கொழுகொழு என இருப்பதால் ஆசை ஆசையாக நானும் அந்த குழந்தையும் விளையாடுவோம், அதுக்குச் சரியாகக் கூட பேச வராது. எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும். பெயர் திலகா. எப்போது பாட்டி வீட்டுக்குச் சென்றாலும் திலகா எனக்குத்தான் என்பார்கள். அவர்கள் சொல்லும் போது கூச்சமாகக் கூட இருக்காது. அறியாத வயசு இல்லையா ? பெரியவங்களானதும் கல்யாணம் தானே பண்ணிக்கிறாங்க, அது போல் பெரியவனானதும் திலகாவை நான் கட்டிக்கனும் போல.....' திலகாவிடம் அப்படித்தான் நானும் சொல்வேன். 'உன்னைய பெரியவனானதும் கட்டிக்கிறேன்...' பதிலுக்கு சிரிக்கும்.

இப்படி ஒரு ஆண்டு வரையில் அன்பாக திலகாவிடம் விளையாடியது விதிக்குப் பிடிக்கவில்லை போலும். திலகாவிற்கு பெரியம்மை போட்டு ... மூன்று நாளில் இறந்ததுவிட்டது. தொட்டியில் போட்டு சுடுகாட்டிற்கு தூக்கிச் சென்றார்கள். அந்த வயதில் எல்லாவற்றையும் பறிகொடுத்தது போன்ற சொல்லமுடியாத சோகம். பார்வதி அத்தை தஞ்சாவுருக்கு குடும்பத்தோடு பெயர்ந்த பிறகுதான் அவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்தது.

இது காதலா ? இல்லையா ? எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அந்த இழப்பின் சோகம் பல ஆண்டுகள் நீடித்தது. மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் எந்த நிகழ்வும் மறக்கவே முடியாத நினைவுகளாகவே இருக்கும். அந்த வகையில் என்னுடைய ஐந்துவயதில் மூன்று வயது அத்தை மகள் திலகா மறைந்தது இன்றும் கூட நினைவில் இருக்கிறது. எங்கள் வீட்டில் 10 ஆண்டுவரை கருப்பு வெள்ளை புகைப் படமாக இருந்த திலாவின் நிழல்படம் அதன் பிறகு கரையானுக்கு உணவாகி மறைந்தது. அந்த குழந்தை உயிரோடு இருந்து, நானும் பெரியவனாக இருந்தால் நான் அவளைத்தான் மணந்து கொண்டிருப்பேன் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதால் அதுபற்றி கற்பனை கூட வீண் தான். கால ஓட்டத்தில் எது எப்படி நடக்கும் என்பதை யார் அறிவார்.

என்னுடைய முதல் காதல் 5 வயதில் ஆரம்பித்து 6 வயதில் முடிந்தது. அதன் பிறகு காதலெல்லாம் வரவில்லை. எனக்கும் காதல் திருமணம் செய்து கொள்ளவே ஆசை. எனக்கு அப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லை. நிச்சயக்கிப்பட்ட திருமணம் தான் எனது திருமணம்.

பெரியவர்களே...தாய்மார்களே...குழந்தைகளின் சின்ன வயசிலேயே இன்னாருக்கு இன்னார் என்று முடிச்செல்லாம் போட்டு வைத்துடாதிங்க. அது பெரிய தப்பு !


டிஸ்கி 1 : இது பரிசல்காரனின் 'முதன் முதலில்...' சங்கிலி பதிவுக்காக எழுதியது. ஐந்து வயது நினைவை கிளறிவிட்ட அவருக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் :). பதிவர்மார்களே... நான் எதோ சோகத்தில் இருப்பது போல் நினைச்சு பின்னூட்டத்தில் கண்ணீர் வடிச்சுடாதிங்க. அது ஒரு நிகழ்வு அது என் நினைவுப் பகுதியில் இன்னும் இருக்கிறது அம்புட்டுத்தான். நான் செல்லமாக வளர்த்த நாய்குட்டியை லவ் பண்ணினேனா ? என்றெல்லாம் தங்கள் சொந்த அனுபவத்தைச் சொல்லி... அதெல்லாம் காதல் இல்லையான்னு கேட்கப்படாது ? :)))

டிஸ்கி 2 : காதல் பற்றி தான் சொல்லி இருக்கிறேன். பால் உணர்வைப் பற்றி அல்ல. இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை, காதலும் காமமும் சேர்ந்தே இருப்பது என்று சொல்கிறவர்களெல்லாம் எட்டப் போங்க.

இந்த தொடர் விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளமல அடுத்து தொடரவேண்டியது பதிவர் வடகரைவேலன்.

மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் பிரசவ வைராக்கியம் !

இராமதாஸ் ஐயாவின் அரசியல் எல்லோருக்கும் தெரிந்ததுதான். பாமக எதிர்கட்சியில் ஒன்றாக சட்டமன்றத்தில் அமர்ந்தாலும் சரி, ஆளுங்கட்சியுடன் ஒட்டிக் கொண்டு அமர்ந்தாலும் சரி. உரத்தக் குரல் எழுப்புவது ஐயாக் கட்சிக்கு இணை எந்தக் கட்சிக்கும் கிடையாது. சாதி அரசியல், சாதிக் கட்சி என்பதைத் தவிர்த்துப் பார்த்தோமேயானால் இராமதாஸ் ஓரளவுக்கு ஆளும் கட்சிக்கு வளைந்து கொடுக்காமல் எப்போதும் ஆப்பு அரசியலே செய்கிறார் என்றே நினைக்கிறேன்.

2001ல் அதிமுக ஆட்சியில் அமர்ந்த அப்போது பாமக அதிமுக கூட்டனியில் தான் இருந்தது, ஜெ ஆட்சியில் அமர்ந்த ஒரு மாதத்திலேயே கலைஞர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்து அதிர்ச்சியடைய வைத்தார். திமுகவின் அப்போதைய கூட்டணிக் கட்சியான பாஜகவே இதுபற்றி வாய்திருக்காமால் இருக்கும் போது, ஜெ வுடன் கூட்டணியில் இருந்தாலும் தைரியமாக ஜெவின் அடாவடியை கைது நடந்த மறுநாளே விமர்சித்து கூட்டணியை பிறகு கூட்டணியை முறித்துக் கொண்டவர் இராமதாஸ். ஆளுங்கட்சியிடன் கூட்டணி என்றால் பெரிய கட்சியான காங்கிரஸ் கூட எதிர்த்துப் பேசக் கூடாது என்பது போன்ற ஒப்பந்த அரசியல் தான் தமிழகத்தில் நடந்தேறியது. அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து வென்ற ஒரே மாதத்திலும், பதவி ஏற்ற அதே நாளிலும் ஜெவின் செயல்பாடு காரணாமாக இராமதாஸ் ஜெவை புறக்கணித்தார் என்பதை யாரும் மறக்க முடியாது.

கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கக் கூடாது என்பது எழுதாதவிதியாக வைத்துக் கொண்டு இருப்பதால் என்னவோ திமுக - பாமக கூட்டணியில் விரிசல் விழ அதுவே காரணம். கடந்த காலங்களில் இராமதாஸ் ஜெவை விமர்சனம் செய்ததை கலைஞரோ, திமுகவினரோ நினைத்துப்பார்ந்திருந்தால் இந்த விரிசல் மறைக்கப்பட்டு இருந்திருக்கும். இரண்டு நாள்களுக்கு முந்தைய கலைஞர் அறிக்கையில் அண்மைய மின்வெட்டுகளுக்கு கடந்த கால ( மூன்றாண்டுக்கு முன்பு இருந்த ) அதிமுக ஆட்சியே காரணம் என்று சப்பைக் கட்டுகிறார். ஜெ ஆட்சியின் குளறுபடிகளை கண்டுபிடிக்க எங்களுக்கும் மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது என்பது போல் மறைமுகமாக தங்கள் கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தும் பேச்சு அது. திமுக அரசு குடோனில் வைத்திருந்தவை அனைத்தும் புழுத்த அரிசி என்று குறை கூறி, அந்த அரிசியும் கிடைக்காத ஏழைகள் உள்ள நாட்டில் அத்தனை மூட்டைகளையும் ஆழக் குழி தோண்டி புதைத்த ஜெவின் மட்டமான அரசியலுக்கும், தற்போது மின்வெட்டுக்குக் காரணமாக ஜெவின் ஆட்சியைக்
குறை சொல்லும் கலைஞரின் அதே மட்டமான அரசியலுக்கும் யாதொரு வேறுபாடும் இல்லை.

காடுவெட்டி குரு தேசத் தியாகி என்பது போல், தற்போது இராமதாஸ் ஐயா பிரச்சாரம் செய்வது மிக மட்டமான அரசியலே, பிற கட்சியின் அரசியல் செயல்பாடுகளை மனம் கோணாமல் விமர்சிக்கும் இராமதாஸ் ஐயா, தன்னுடைய கட்சியனர் மட்டும் எதோ உத்தமர் போல் பேசி வருவது நகைப்புக்கிடமாகவே இருக்கிறது. பாமகவிற்கு செல்வாக்கு உள்ள இடங்களில் தான் அண்மையில் தலித் கிறித்துவர்களுக்கும் - வன்னிய கிறித்துவர்களுக்கும் மோதல் நடைபெற்று இறுதியில் சாதிப்பெருமை காக்க வன்னிய கிறித்துவர்கள், தாய்(!) இந்துமதம் திரும்புவதாக அறிவித்தனர். இந்துமதத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் இராமதாஸ் இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. அங்கு நடைபெற்ற வன்னியர் - தலித் மோதல்களுக்குப் பிறகு அவர்களின் ஒற்றுமைக்காக என்ன செய்தார் ? ஒன்றும் இல்லை. ஆனால் திருமாவும், நானும் சகோதரர்காள் என்று மேடைக்கு மேடை கூச்சமில்லாமல் சொல்லிக் கொள்வார். ஒட்டுக்கள் சிதராமல் இருக்க ஒற்றுமை என்பது மேல்மட்ட அளவில் இருந்தாலே போதும் என்கிற மனநிலையில் தான் அண்ணன் திருமாவுடன் இராமதாஸ் ஐயா கைகோர்த்துக் கொண்டு இருக்கிறார்.

தற்போது இராமதாஸ் ஐயா திமுக அரசின் மீது வைக்கும் மற்றொரு குற்றச் சாட்டு நகைப்பிற்கு இடமாகவே இருக்கிறது. 'இங்கு சட்டமும் இல்லை, ஒழுங்கும் இல்லை' என்கிறார். குரு கைது நடவெடிக்கை இல்லை என்றால் இதெல்லாம் இருக்கும் போல. வன்னிய சாதித் தலைவன் என்ற போர்வையில், பாதுகாப்பில் குரு கண்டபடி ஒருமையில் கலைஞரை, ஆர்காடு வீராசாமியை, ராஜாவை படுகேவலமாகப் பேசி, கொலை மிரட்டல் விட்டதைப் பொறுக்கமுடியாமல் சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று தானே குரு கைது செய்யப்பட்டார் ? பின் எங்கே சட்ட ஒழுங்கு காணாமல் போனது ?

இனி எஞ்சியிருக்கும் 2 ஆண்டுகால திமுக அரசுக்கு எதிராக அதிமுகவோ, பிற எதிர்கட்சிகளோ கேள்விக் கேட்கத் தேவை இல்லை என்று நினைக்கும் அளவுக்கு திமுக அரசின் மீது குற்றச்சாட்டு கணைகளை வைத்து அறிக்கைப் போர் நடத்திவருவார்.

'இனியும் திமுக அரசுவுடன் கூட்டணியா ? இனி திரும்பிக் கூட பார்க்க மாட்டோம்' என்பது தான் அவரின் உச்சகட்ட நகைச்சுவை. தேர்தல் நெருங்க நெருங்க...'இது கொள்கை கூட்டணி அல்ல...தேர்தல் கால கூட்டணி' என்ற அறிவிப்புகளும் வரும்.

*********

பின்குறிப்பு : படத்தில் இருக்கும் நிழல் படம் குறித்து, படத்தில் நான், மருத்துவர் இராமதாஸ் ஐயா மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி. 2006ல் பொங்குதமிழ்ப் பண்னிசை விழாவுக்காக மருத்துவர் ஐயாவும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தியும் சிங்கை வந்திருந்த போது (முன்னாள்) நண்பர் ஒருவர் அழைத்துச் சென்றதால் ,மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் அருகில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு நண்பர் அவரது நிழல்படக் கருவியிலேயே க்ளிக்கிக் கொடுத்தது தான் இந்தப்படம். அந்த பொன்னான வாய்ப்பு வழங்கிய நண்பருக்கு நன்றி. அதே நண்பருடன் மற்றொருமுறை வீரமணி ஐயா கலந்து கொண்ட திருக்குறள் விழாவில் எடுத்துக் கொண்ட புகைப்ப்படம் கூட இருக்கிறது, எப்போதாவது வலை ஏற்றுகிறேன்.

ஆப்பு ரேசன் - பரிசல்காரன் வித் லதானந்த் !

பரிசல் : ஹலோ சென்ஷியா ?

சென்ஷி : யெஸ் யெஸ் ஸ்பீக்கிங்.

பரிசல் : மனதுக்குள் (நல்லவேளை பின்னவீனத்துவம் எதும் பேசல) ஒரு விசயம் சென்ஷி....

சென்ஷி : ம் சொல்லுங்க மதுரையில் தான் இருக்கேன், சாயங்காலம் கோவி.கண்ணன், வெயிலான் ராமேஷ் மதுரை வர்றாங்க

பரிசல் : நல்லாதாப் போச்சு...நானும் கிளம்பி வந்துடுறேன்.....சரி அங்கே வந்தே சொல்லிக் கொள்கிறேன்

*****

மதுரை.

பரிசல்காரன் மதுரை பஸ்டாண்டில் வந்து இறங்குகிறார்.

ஏற்கனவே கோவி, வெயிலான் மற்றும் சென்ஷி பெரிய மாலையோடு நிற்கிறார்கள்

எல்லோரும் பரிசல்காரனுக்கு மாலை அனுவிக்கிறார்கள்

பரிசல்காரன் மனதுக்குள் 'வெட்டப் போற ஆட்டுக்கு போடுறமாதிரியே போடுறானுங்களே...என்ன திட்டம் வச்சிருக்கானுங்களோ...'

சென்ஷி : பரிசல் நீங்க ஏன் பரிசலில் வராமல் பஸ்ஸில் வந்திங்கோ ?

பரிசல்காரன் : நாங்கெல்லாம் பேரையே பின்னவீனத்துவமாகத் தான் வைத்திருப்போம்

சென்ஷி : பூப்படைந்த பூமியில் மூப்படைந்த கன்னியராய் ....

பரிசல்காரன் அவர் வாயைப் பொத்துகிறார். நீ இந்த மாதிரி பேசினா நான் இப்படியே பஸ் ஏறிடுவேன்

கோவி: கோவிச்சிக்காதிங்க பரிசல்...நம்ம சென்ஷிதானே பொறுத்துப் போகலாமே ?

பரிசல் : இவ்வளவு நேரம் இவர்கிட்ட பேசிக் கொண்டு இருந்திங்களே நீங்கள் எரிச்சல் அடையல ?

கோவி : அதெல்லாம் ஒன்னும் இல்லை, நான் பாதிப்பே அடையல...

பரிசல் : எப்படி எப்படி ?

பாக்கெட்டில் இருந்து பஞ்சை எடுத்துக் காட்டுக்கிறார்.

கோவி: இப்படித்தான், இம்மா நேரம் காதில் தான் வைத்திருந்தேன். உங்களைப் பார்த்ததும் தான் எடுத்தேன்

பரிசல் : வெயிலான் ரமேஷ் ஏன் எதுவுமே பேசமாட்டேன்கிறார் ?

கோவி: அதுவா ? அவர் இன்னும் பஞ்சை எடுக்கவே இல்லை,

சொல்வதைப் புரிந்து கொண்டு காதில் இருந்த பஞ்சை வெயிலான் ரமேசும் எடுக்கிறார்

வெயிலான் : திருப்பூரில் இருந்து வந்துருக்கிங்க, ஷென்சிக்கும், கோவிக்கும் என்ன வாங்கி வந்திருக்கிங்க

பரிசல் : 'மனதுக்குள் இவர் மட்டும் எதோ துபாயிலேர்ந்து வர்றமாதிரி முண்டா பணியனும், டிசர்டும் தானே எடுத்துவர முடியும், போட்டு வாங்குறாரோ...?'

"ஹிஹி எல்லாம் எடுத்து வச்சேன். மீராவும், மேகாவும் கிளம்புற நேரத்தில் ஒரே அடம்...சமாதனப்படுத்தி முடிக்கிறதுக்குள்ள மூச்சு வாங்கிட்டு...எடுத்துவச்சதெல்லாம் அப்படியே மறந்துட்டு வந்துட்டேன்..."

வெயிலான் : திருப்பூரில் இருந்து என்னத்த கொண்டுவந்து கொடுத்துட போறோம்...கைவச்ச பணியனும், காட்டன் டீ சர்ட்...நான் ஒரு செட் கொடுத்துட்டேன் விடுங்க...அவ்வளவு தூரம் வந்ததே பெருசு

சரி சரி எல்லோரும் சாப்பிட்டுக் கிட்டே பேசுவோம்

*******

மாலை 6 மணியாகிவிட்டது... சென்ஷி, வெயிலான் மற்றும் கோவி ஆகிய மூவர் பரிசலை வழியனுப்பிவிட கண்ணீர் ததும்ப நிற்கிறார்கள்.

கோவி : பரிசல் உங்களுக்கு நான் எதுவுமே கொடுக்கலையே....

தோளில் மாட்டி இருந்த பையில் இருந்து 4 - 5 பாக்கெட்டுகளை எடுக்கிறார்

பரிசல் : என்னாது ?

கோவி : தெரியல சிங்கபூர் பிஸ்கெட் ...எல்லாம் உங்களுக்குத்தான். ரயிலில் போய்கிட்டே சாப்பிடுங்க...யாராவது கேட்டாலும் கொடுங்க...நல்லா இருக்கும்

பரிசல் : அம்புட்டு நல்லவரா நீங்கள் ... !

கோவி : ரொம்ப புகழாதிங்க...எனக்கு கூச்சமாக இருக்கு... !

மூவரும் டாட்டா காட்ட டிரெயின் கிளம்புகிறது........

************

பரிசல் 'மேகா...மீரா...உமா...' என்று மாறி மாறி நினைத்துக் கொண்டே பயணம் செய்கிறார்

எதிரே ஒரு சின்னக் குழந்தையும், குழந்தையின் இளம் வயது அம்மா மற்றும் குழந்தையின் பாட்டி அமர்ந்திருக்கிறார்கள்.....திடிரென்று குழந்தை அழுகிறது

பரிசல் மனதுக்குள் : 'பார்க்க நம்ம மேகா மாதிரியே இருக்கா...எப்படியாவது அழுகையை நிப்பாட்டானுமே....என்ன செய்வது......ஆங்...கோவி.கண்ணன் கொடுத்த பிஸ்கெட் இருக்கு.....ஒரு பாக்கெட்டை வெளியே எடுத்து பிரித்து குழந்தையின் கையில் கொடுக்கிறார்

அங்குதான் மாபெரும் திருப்பம் நிகழ்கிறது,

திடிரென்று ஒரு முறுக்கு மீசை....வேகமாக அந்த பிஸ்கெட்டை தட்டிவிட்டு.....பற்களை நறநறவென கடித்து.....விழிசிவக்க...ஒரு கையால் பரிசலின் கழுத்தை அப்படியே கோழி அமுக்குவது போல் அமுக்குகிறது.

அதிர்சியடைந்த பரிசல் நிலைகுழைந்து ... அந்த உருவத்தின் சட்டைப் பாக்கெட்டைப் பார்க்கிறார்

'லதானந்த் இன்ஸ்பெக்டர் ஆப் ரயில்வே போலிஸ்' மிரட்டும் குரலில்...

லதானந்த் : இங்கே ரொம்ப நாளாகவே புகார் வந்துக்கிட்டு இருக்கு...நீ தானா அது ?

பரிசல் : 'என்ன புகார்...என்ன வந்தது...வீரப்பனைத்தான் சுட்டுட்டாங்களே...இங்கே எப்படி மாறுவேசத்துல'

லதானந்த் : என்ர கெட்டப்பு உனக்கு வீரப்பனாக்கும் ? இது செட்டப்பு இல்ல கெட்டப்பு

பரிசல் : எதோ ஒன்னு...என் கழுத்தை விடுங்கோ...நான் என்ன தப்பு செஞ்சேன் ?

லதானந்த் : என்ன தப்பு செஞ்சியா ? செய்றது தப்புன்னே தெரியாமல் செய்துகிட்டே இருக்கியே அதான் பெரிய தப்பு

பரிசல் : சத்தியமாக ஒன்னும் 'புரியல தயவு செய்து விளக்கவும்...'

லதானந்த் : நிசமா ஒன்னும் புரியலையா ? இல்லாட்டி நடிக்கிறியா ?...சொல்றேன் கேளு... இந்த ட்ரெயினில் மயக்க பிஸ்கெட் கொடுத்து நகை பணத்தையெல்லாம் கொள்ளையடிச்சுட்டு போறதா அடிக்கடி எங்களுக்கு புகார் வருது.....இன்னிக்குத்தான் கண்ணி வச்சு புடிச்சிருக்கோம்

பரிசல் : வடிவேல் பாணியில் மனசுகுள் 'அடப்பாவிங்களா...உண்மையான திருடனுங்களிடம் பிஸ்கெட் வாங்கிதிண்ணுட்டு மயங்கித் தூங்கி கோயம்பத்தூரில் போய் முழுக்கிறவனுங்க இவனுங்க...என்னையைப் போய் திருடன்னு சொல்றானுங்களே' அவ்வ்வ்வ்வ்

லதானந்த் : என்னமேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்

பரிசல் : சார்...நீங்க வேண்டுமானால் ஒரு பிஸ்கெட் திண்ணுபாருங்க...நல்ல பிஸ்கெட் தான்

லதானந்த் : வாய்யா வா...போலிசுக்கே மயக்க பிஸ்கெட் கொடுத்துட்டு ஓடிடலாம்னு பார்க்கிறிய ? அடுத்த ஸ்டேசனில் உன்னைய ஹேண்ட் ஓவர் பண்ணுறேன்...அங்க வந்து நல்ல பிஸ்கெட்டா மயக்க பிஸ்கெட்டான்னு சொல்லு.....

ரயில் நின்றதும்...கழுத்தில் கைவைத்தப்படி பரிசலை கீழே இறக்குகிறார்...

பரிசல் : மனதுக்குள் இந்த கோவிதான் நம்மளை சிக்க வைத்தது...போனைப் போட்டு நாலு கேள்வி நறுக்குனு கேட்கனும்..மொபைலைத் தேடி எடுத்து...டயல் செய்கிறார்

'இந்த தொலை பேசி தற்பொழுது உபயோகத்தில் இல்லை' என்று குரல் வர எரிச்சல் அடைகிறார்

லதானந்த் : என்ன மேன் லேட்டஸ்டு மொபைல் போனா ? நல்லா இருக்கே...நேற்று டிரெயினில் அடிச்சதா ?

பரிசல் மீண்டும் மனதுக்குள் : செல்போனும் பறிபோகப் போகுதா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

*******

மீரா : அப்பா அப்பா எழுந்திரு போன் அடிக்குது....

பரிசல் : அடச்சே எல்லாம் கனவா ? லதானந்த் அங்கிளை நினைத்தாலே இப்படி கெட்ட கெட்ட கனவாக வருது.


பிகு : நண்பர் பரிசலை, பிரச்சனையில் சிக்க வைக்க மனசு வரல, அதனால் கடைசி பத்தி கடைசியில் சேர்த்திருக்கிறேன்.... கோவி-மதுரை-சென்ஷி-வெயிலான் - பஸ்டாண்டு - ரயில்வேஸ்டேசன் எல்லாம் தொடர்போ லாஜிக்கோ இல்லாமல் இருக்கும். கனவு தானே ? அதில் என்ன லாஜிக் ? :)

26 ஜூலை, 2008

ரோபோ ஸ்டில் !



நன்றி : தட்ஸ் தமிழ்

கதை இங்கே :) பழசுதான் படிச்சுட்டு பொழந்து கட்டிடாதிங்கோ...!

25 ஜூலை, 2008

பெண்டாட்டி கையில் அடிவாங்கியவர்கள் :)

தெக்கிக்காட்டான் பதிவில் ஒரு சுவையார்வமான விவாதம் ஓடிக் கொண்டிருந்தது, பதிவர் கயல்விழி பின்னூட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

"மாட்டுக்கு பதில் நிலத்தில் உழ உறுதி இருக்கும், தனியே பிரசவம் பாக்க உறுதி இருக்கும் கருவாச்சி, தன்னுடைய கணவன் அடிக்கும் போது திரும்ப அடிக்க உறுதி இருக்காதா?? ஏன் அந்த உறுதியோ அல்லது தைரியமோ கருவாச்சிக்கு இல்லை?" - கயல்விழி

அங்கேயே கூட அவருக்கு பதில் அளித்தேன். ஞாயப்படுத்துதல் இல்லை. என்னைப் பொறுத்து அடிப்பதும், அடிவாங்குவதும் கூட தவறுதான். கண்டிக்கத் தக்கதே.

அடித்தல், அடிவாங்குதல் எல்லாம் உளவியல் தொடர்புடையது, மேற்கத்திய நாடுகள் தவிர்த்து கண்டிப்பு என்பதில் வன்முறையாக அடி உதை என்று குடும்பத்திற்குள்ளேயே நடப்பெதெல்லாம் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் தான்.

திருப்பி அடிப்பதற்கு தைரியம் மட்டுமே தேவை என்றால் தானே தவறு செய்துவிட்டு, அதைச் சுட்டிக் கேட்கும் மகனை தாக்கவரும் தந்தையைக் கூட மகன் திருப்பி அடித்துவிட முடியும். வளர்ந்த அண்ணனை தம்பிகள் கூட 'தட்டி'க் கேட்ட முடியும். அடிப்பவர்கள் வயதில் பெரியவராகவும், அடிவாங்குபவர் அவரைவிட இளையராக இருப்பதும், சென்டிமென்ட்ஸ் காரணமாக எழுதப்படாத விதி. ஒத்த வயது நண்பர்களிடம் கூட அடிதடி நடந்தால் நட்பே கெட்டுவிடும், நட்பில் சமநிலையாக இருப்பதால் அடிதடி அந்த சமநிலையை குலைத்துவிடும்.

கணவன் - மனைவி உறவில் கணவர் தன்னைவிட வயதில் பெரியவர் என்பதாலேயே திருப்பி அடிக்கும் நிலைக்கு மனைவி செல்வது இல்லை என்பதைத் தவிர்த்து வேறு காரணம் தெரியவில்லை. ஆனால் அந்த சினத்தையெல்லாம் பிள்ளைகள் மீதும், மாமியார் மீதும் காட்டிவிடுவார்கள், ஆக வாங்கிக் கொண்டு மவுனியாக இருப்பார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.

சமவயது ஆணையோ, தன்னைவிட இளைய ஆணை மணக்க முன்வரும் பெண்களுக்கு அடிவாங்கும் நிலை இருக்காது என்று நினைக்கிறேன். தன்னைவிட மனைவிக்கு ஒரு வயது அதிகம் என்றாலும் உளவியல் ரீதியாக மனைவி மீது தன்னைவிட வயதில் மூத்தவர் என்ற மதிப்பு ஆணின் மனதில் கண்டிப்பாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இதெல்லாம் விட முதன்மைக் காரணமாக மனிதர்கள் நெருக்கமானவர்களிடம் கை ஓங்குவதற்கு கட்டற்ற சினம் தவிர்த்த் பார்த்தோமேயானால், ஆளுமையே காரணம், தான் சொல்வதைக் கேட்க வைப்பதன் மூலம், தன்மீது ஒரு பயத்தை ஏற்படுத்துவதன் மூலம் உளவியல் ரீதியாக தனக்கு ஒரு பலத்தை (செயற்கையாக) ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சமுகவியல் ரீதியாக ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கும் கீழ்யாராவது வைத்திருப்பதுதான் தனக்கான பெருமை என்று நினைக்கிறார்கள். ஒன்றுமே இல்லாவிட்டாலும் நாய், பூனை ஆகியவற்றிக்கு பாதுகாப்புக் கொடுக்கும் காவலர்களாகவும், சிலர் விலங்குகளையும் ஆட்டிப்படைப்பவர்களாக மாறிவிடுவார்கள். உண்மையிலேயே விலங்குகள் மீது அன்பு செலுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

உயர்ந்த மனிதன் படத்தில் சவுக்கார் ஜானகியும் அவரது தோழியும் பேசிக் கொள்வார்கள், "புருசன் கையில் அடிவாங்குறதும்...அதைப் பின்பு நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் இருக்கிறதே...அப்பப்பா..." என்று தோழி சொல்ல.

சவுக்கார் ஜானகி ஒரு காட்சியில் சிவாஜியிடம் அறைவாங்கிவிட்டு அதை நினைத்துப் பார்ப்பது கலக்கலான ரொமான்ஸ்.

திருமணமான ஆண்கள் மென்மையாக மனைவியிடம் அடிவாங்குவதையும், கிள்ளப்படுவதையும் ரசிக்கிறார்கள். மென்மையின் அளவு மாறும் போதுதான் பிரச்சனையே வெடிக்கிறது.

கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் அடிப்பது தவறுதான். நாலுபேருக்கு தெரியாமல் (வடிவேல் பாணியில்) அடிவாங்கிக் கொண்டால் எதுவாக இருந்தாலும் தப்பு இல்லை :) அன்பானவர்களிடம் அன்பை அனுபவிக்கும் போது, எதோ பொறுக்க முடியாமல் என்றோ ஒருநாள் சற்று கைநீளும் போது அதை ஏற்றுக் கொள்வது கடினம் தான் என்றாலும், பெரிதுபடுத்தாமல் எல்லோருமே புலன்களை அடக்கியாளும் பொறுமை சாலிகள் என்று புரிந்து கொள்ளவேண்டும். சரியான காரணமின்றி தொடர்ந்து அடிவாங்குவதும் தவறே. அடிப்பவர்களின் நிழலில் வாழ்வதைவிட விட்டு விலகுவதே நல்லது.

உழைக்கும் வர்கத்தில் கணவனை முடியைப் பிடித்து உலுக்கி அடித்து நெருக்குவதெல்லாம் நடப்பது தான். நடுத்தர வர்கத்திடம் எல்லோருக்கும் தெரிவது போல் நடப்பது இல்லை என்பதால் முற்றிலும் அவ்வாறெல்லாம் நடக்கவே நடக்காது என்று சொல்ல முடியாது.

எல்லாப் பெண்களும் பாலசந்தர் படத்துக் புரட்சிக் கதைநாயகிகள் போல் இருந்துவிட்டால் ஒரு பயலும் திருமணமே செய்து கொள்ளமாட்டான். :)

பெண்களுக்கு சிறப்பு குணம் இருப்பதாகவும், அது பெருமைக் குரியதாகவும் இருக்கும் என்று நீங்கள் நம்பினால், அதே குணம் தான் மறைமுகமாக அவளை பலவற்றில் அமைதி காக்கவும் வைக்கிறது, பலவீனமாக்கியும் வைத்திருக்கிறது. இல்லற வாழ்வில் ஏற்படும் இடர்களின் போது சினங்களை கட்டுப்படுத்தாமல் பெண்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற பொதுப்புத்தி கற்பிப்பது (பின்நவீனத்துவச் சொல்) தவறே. சூழலுக்கு ஏற்றவாறு தான் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முடிவெடுக்க, நடந்து கொள்ள முடியும்.

பெண்டாட்டியிடம் அடிவாங்கிய எந்த கணவனும் அதை வெளியே சொல்லிக் கொள்ளமாட்ட்டார்கள். அதனால் பெண்கள் கணவனை அடிக்கிறார்களா இல்லையா என்பதே வெளியே தெரியவில்லை. அப்படியும் தவிர்க்கக் கூடாது என்றே திரை இயக்குனர்கள் கற்பனை என்ற பெயரில் தன்னுடைய அனுபவத்தையோ, பிறருடைய அனுபவத்தையோ நகைச்சுவை காட்சிகளாக வைத்துவிடுகிறார்கள்

பெண்டாட்டியிடம் அடிவாங்கியவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?

தலையில் கொத்துக் கொத்தாக முடி காணாமல் போய் இருக்கும். வழுக்கைத் தலையர்களுக்கு தலையில் தலையில் அங்கங்கே வெட்டுக்காயம் இருக்கும். :) சும்மா நகைச்சுவை !

பி.கு: தலைப்பைத் தொட்டு அல்லது உண்மையாகவே பொருளுக்காக இந்த பதிவு சூடானால் நான் பொறுப்பல்ல.

24 ஜூலை, 2008

பட்டையைக் கிளப்பும் லக்கிலுக் !

லக்கிலுக்கின் (கிருஷ்ணகுமார்) எழுத்துக்கள் வார இதழ்களில் வர ஆரம்பித்துவிட்டன. ஒரு எழுத்தாளராக அவர் வளர்ந்து வருவதைப் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பழகுவதற்கு இனிய நண்பரான லக்கிலுக் இன்னும் குறுகிய காலத்திற்குள்ளேயே பல்வேறு தமிழ் ஊடகங்கள் அடங்கிய வாசிப்பு உலகம் அறிந்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு வளர்ந்துவிடுவார். எதை எழுதினாலும் நகைச்சுவை ததும்ப எழுதும் அவரது எழுத்துக்கள் வளரும் பதிவர்களுக்கு நல்ல வாசிப்பு அனுபவத்தையும், எழுதத்தூண்டும் ஆர்வத்தையும் கொடுக்கிறது.

நமக்கு தெரிந்த பதிவர்கள் லிவிங்ஸ்மைல் வித்யா, பாலபாரதி, லக்கிலுக் என பதிவர்கள் சிறந்த எழுத்தாளர்களாக மாறி இருப்பது பதிவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

லக்கிலுக் புத்தகம் ஒன்றும் எழுதி இருக்கிறார் என்று அண்மையில் மற்றொரு பதிவரும் குறிப்பிட்டு இருந்தார். லக்கிலுக்குடன் உரையாடிய போது அடுத்த புத்தகக் கண்காட்சியில் லக்கிலுக்கின் புத்தகம் வாசிப்பதற்கு கிடைக்கும் என்றார்.

நேற்று.....

"நான் சுஜாதாவோ, பாலகுமாரனோ அல்ல. அதனால் என் எழுத்துக்கள் அவ்வளவு சுவாரஸ்யமாக இல்லாமல் இருக்கலாம்! :-) " - லக்கி லுக்

இன்று...

"நான் லக்கிலுக்கோ, யெஸ். பாலபாரதியோ அல்ல. என் எழுத்துகள் உங்களுக்கு பிடிக்காமல் இருக்கலாம்.. " - பரிசல்காரன்

மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள் லக்கிலுக் !!




அன்புடன்
கோவி.கண்ணன்

23 ஜூலை, 2008

ஒரு விஞ்ஞானக் கடத்தல் !

2054 - ஜனவரி 30ல் உலகையே பரபரப்பு தொற்றிக் கொண்டது

"அணு ஆயுத விஞ்ஞானி ஏகே.தாசன் கடத்தல்..." என்ற

ஒருவரிச் செய்தி தொலைக்காட்சி ஊடகங்களில் ஓடிய மறுநாள்... சன் உட்பட உலக தொலைக்காட்சிகளில்...காட்டிய அசைபடத்தில் ... அணு விஞ்ஞானியைக் காட்டி தீவிரவாதிகள் கொக்கறித்துக் கொண்டு இருந்தனர்...


"நாங்கள் விஞ்ஞானியை தற்போது கொல்லப் போவதுமில்லை, அணு ஆயுதங்களைக் கடத்தப் போவதுமில்லை, இதோ இந்த விஞ்ஞானியை வைத்தே நாங்கள் அதைச் சாதிக்கப் போகிறோம்..." என்று சொல்லிவிட்டு மறைந்தார்கள்

ஏகே.தாசன் அணு ஆயுத தொழில் நுட்பம் தெரிந்தவர் என்பதால் அவரை வைத்து அணு ஆயுதங்களை தயாரித்து உலகை தொடர்ந்து அச்சுறுத்தலில் வைத்திருப்பது தான் தீவிரவாதிகளின் திட்டம் என்று உளவுத் துறை மோப்பம் பிடித்து இருந்தது

அங்கே தீவிரவாதிகளின் ஆயுதக் கூடத்தில்...

"என் உயிரே போனாலும் இந்த திட்டத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டேன்..." தீவிரம் தெரிந்து...நாட்டுப்பற்று மிகுதியால் முரண்டு பிடித்தார் ஏகே.தாசன்

தீவிரவாதத் தலைவன் வீரப்பன் பாணியில் கொக்கறித்தான்

"மிஸ்டர் விஞ்ஞானி யாருக்கு வேண்டும் உன் உயிர் ? உன்னைக் கேட்டுக் கொண்டு தான் செய்வேன் என்று எதிர்பார்த்தாயா ?....ஹஹ்...ஹஹ்ஹா...இந்த ஏகே.தாசனை தூக்கிச் சென்று படுக்க வையுங்கள்"

அவரை வலுக்கட்டாயமாக சிலர் தூக்கிக் கொண்டு படுக்க வைத்தனர். அருகில் இன்னொருவனையும் படுக்க வைத்தனர்.

கணணியில் உள்ள மென்பொருளை இயக்க... கம்பியில்லா இணைப்பின் (வயர்லஸ்) மூலம் ஏகே.தாசனின் மூளைப் பதிவுகள் அனைத்தும் வினாடிக்கு 100 டெராபைட் விரைவில் அருகில் படுத்து இருந்தவரின் மூளைச் செல்லுக்குள் பதிந்து கொண்டிருந்தது,

100 வினாடியில் பயன்படுத்தப் பட்ட முளை செல்களில் (Used Cells) இருந்த தகவல்கள் சுமார் 100 எக்ஸாபைட் அளவுடையதாக இருந்ததாகவும்...அது முழுவதும் பதிவு செய்யப்பட்டதாக கணணி தகவல் வரவே..

"ஏகே.தாசனை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றுவிடுங்கள்..." என்றான் தீவிரவாதத் தலைவன்.

அதன்படியே ஈவு இரக்கமின்றி ஏகே.தாசன் சுட்டுக் கொல்லப்பட்டார்... இந்த செய்தியும் வெளியே வர நாட்டை சோகம் அப்பிக் கொண்டது

தீவிரவாதிகளின் ஆயுதக் கூடத்தில் அடுத்த 60 நாட்களுக்குள் அணு ஆயுதம் செய்யப்பட்டு ஏவுவதற்கு தயாராக வைக்கப்பட்டு இருந்தது.

மீண்டும் தொலைக்காட்சிக்கு தீவிரவாதிகளின் தலைவன் அனுப்பிய அசைபடத்தில் அவனே தோன்றி ... அவர்கள் தயாரித்த அணு ஆயுதத்தை வைத்து வேண்டாத சில நாடுகளை அடுத்த ஒருவாரத்திற்குள் சிதறடிக்கப் போவதாக சொல்லிக் கொண்டு இருந்தான்.

உலகெங்கும் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது, மக்கள் என்ன செய்வதென்று திகைத்தனர்...எங்கும் குழப்பம் நிலவியது

பாதுகாப்புத் துறை அமைச்சர் அரசின் ரகசிய கூட்டத்தில் அமைதியாக பேசிக் கொண்டு இருந்தார்

"விலைவாசி உயர்வில் பொதுமக்களுக்கு அரசு மீது இருந்த வெறுப்பு...தீவிரவாதிகள் விஞ்ஞானியை கடத்தி கொன்று இருப்பதாலும் , தீவிரவாதிகளின் அணு ஆயுத அச்சுறுத்தலாலும் சற்று மறைந்திருப்பதை பிரதமரே ஒப்புக் கொண்டிருக்கிறார் ... "

"ஏகே.தாசனைக் கடத்தி அணு ஆயுதம் செய்தவரை தீவிரவாதிகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். பாதுகாப்புக் காரணங்களுக்காகவே தொழில் நுட்பம் முழுவதையும்
நாங்கள் ஒரே விஞ்ஞானியை / பொறியாளரைக் கொண்டு உருவாக்குவதில்லை..."

"விஞ்ஞானி ஏகே.தாசனின் மூளை அணு ஆயுதத்தை வடிவமைக்கும் திறன் பெற்றது தான், அதுவரையில் தீவிரவாதிகள் அணு ஆயுதத்த வடிவமைத்துவிட்டார்கள். ஏகே.தாசனின் அறிவைப் பயன்படுத்திச் செய்யப்பட்ட அணு ஆயுதம்... விசையை அழுத்திய 10வினாடிக்குள் முற்றிலும் அழிந்துவிடுவது போன்று மட்டுமே அணு ஆயுதத்தை அதனால் செய்ய முடியும்..."

சற்று நிறுத்தி...தொடர்ந்தார்

"அந்த ரகசியம் ஏகே.தாசனுக்கே கூட தெரியாது... அந்த 10 வினாடிக்குள் அணு ஆயுதத்தின் செயல்பாட்டு மென்பொருளில் திசை திருப்பும் மாற்றம் செய்யாவிட்டால், ஆயுதம் தன்னைச் சார்ந்துள்ள பகுதியையே அழித்துவிடும். 10 வினாடிக்குள் மாற்றம் செய்யும் வல்லுனர்கள் / பொறியாளர்கள் நம்மிடம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறார்கள். எனவே நாம் தீவிரவாதிகளுக்கு அடிபணிய வேண்டாம்...." என்றார்

மறுநாள் அனைத்து உலக தொலைகாட்சிகளும் ஏதோ ஒரு மலைப்பகுதியில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு அந்த இடமே 50 கிலோ மீட்டர் வரை தரைமட்டமானாதாக செய்கள் காட்டப்பட்டன.

மக்கள் திகைப்பில் இருந்து மீண்டனர்

அதுதான் ஏகே தாசனின் அறிவைப் பயன்படுத்தி அணுஆயுதம் தயாரித்த தீவிரவாதிகளின் இடம் என்று உடனடியாக அறியப்பட்டது.

அடுத்தவாரத்தில் தீவிரவாதிகள் மொத்தமாக அழிந்ததற்காக விழாக்கள் எங்கும் நடைபெற்றன. ஏகே.தாசனுக்கு உலக மக்கள் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

**********

சிறில் அலெக்சின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்ட மூன்றாவது சிறுகதை இது. முதலிரண்டு,

சிறுகதை 1சிறுகதை 2

சிறுகதை மேலேயே முடிந்தது... இதற்கும் கீழே உள்ளது அறிவாளிகளுக்கு அல்ல.

மெசேஜ் : பாதுகாப்புக் காரணங்களுக்கு ஏற்படும் தொழில் நுட்பத்தையே பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் மிகப் பெரிய சேலஞ்ச்.

இதெல்லாம் தேவையா ? :)

அறிவியல் கதைதான் என்பதற்கான குறிப்பு : டெராபைட், எக்சாபைட் மற்றும் மூளைப் பதிவு டெக்னாலஜி :)

22 ஜூலை, 2008

மரணத்தை வென்றவர்கள் !

அந்த ஆய்வுக்கூட அறையில் உரையாற்றிக் கொண்டு இருந்தார் 125 வயது விஞ்ஞானி வெள்ளையன்.

"அறிவியல் வளர்ச்சியின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இதனைக் கருதுகிறோம்..." 120 வயதிலும் சற்றும் பிசிறு இல்லாத கணீர் குறல்.

"மரணம் என்பது இயற்கையே... இன்றைக்கு செவ்வாயில் கோளில் உழுது பயிர்விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் மனித ஆற்றல் அளவிட முடியாது என்பது உறுதியாகிவிட்டது, நாட்டில் சாதாரண மக்களை விடுவோம், அறிவியல் அறிஞர்களை நீண்ட நாள் உயிர் வாழவைத்தால் அது ஒட்டு மொத்த மனித இனத்துகே நன்மை அளிக்கும்...எங்கள் ஆய்வுக்கூடத்து 70 ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக நான் இங்கே 120 ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கூடத்தில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்த இளமை மாறாத வாழ்கைக்கு ஆதாரமாக இருப்பது உடல் செல்கள்...உடல் செல்களை எப்போதும் புதுப்பித்துக் கொண்டிருக்க உதவுவது ஆன்டி ஆக்சிடென்ட் உணவு வகைகளே, காய்கறிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து அதிகம் ஆன்டி ஆக்சிடென்ட் உற்பத்தி செய்யும் உணவு பயர்களை விளைவித்துள்ளோம்...அதனையே உண்டும் வருகிறோம்...ஆனால் ஒன்று இரத்தம், செல்கள் புதுபிக்கப்பட்டாலும், உடலில் உள்ள எலும்புத் தேய்மானத்தின் காரணமாக இங்கு நான் உட்பட யாரும் எழுந்து நடமாடாத நிலையிலேயே இருக்கிறோம். சிந்திக்கும் ஆற்றலில் எங்களுக்கு குறைவில்லை.

வருங்காலத்தில் மனித இனத்தை 150 ஆண்டுகள் வரை வாழவைக்க எங்களது ஆராய்ச்சி உதவும் என்றே நினைக்கிறோம்"

மற்றொரு விஞ்ஞானி பழனியாண்டி உட்கார்ந்தே பேசினார்.

"எல்லாம் சரி...140 வயது ஆகும் எனக்கு சிந்தித்து செயல்படுவதில் குறைபாடு எதுவும் இல்லை...ஒரு இயந்திரத்தைப் போல் செயல்படுகிறேன். எனது கொள்ளுப் பேரனுக்கு பேரன் கூட மடிந்துவிட்டான், இவ்வளவு நாள் வாழ்வதால் எனக்கு தனிப்பட்ட பயன் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்கை என்பது நீண்ட நாள் வாழ்வது என்றே பலரும் நினைக்கிறார்கள். நீண்ட நாள் வாழ்வதைவிட இறந்து போவதே மேல். எனக்கான பொழுது போக்கு என்றால் கணணி திரையில் அமர்ந்து விளையாட்டுக்களைப் பார்ப்பது, உலக செய்திகளை அறிந்து கொள்வது தான், விளையாடும் அளவுக்கு உடலில் இருக்கும் எலும்புகள் அசைந்து கொடுத்து ஒத்துழைப்பது இல்லை. காவலாளி ஒருவன் அசையாது ஒரே இடத்தில் நின்று கொண்டு வருவேர் போவோரைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலவே உணர்கிறோம். கண்ணுக்கு முன்பு இளைஞர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனதிற்குள் அது போன்று நாமும் வாழவேண்டும் என்று நினைத்தாலும், அதனைச் செயல்படுத்தும் ஆற்றல் உடலுக்குள் இல்லை. மொத்தத்தில் 80 வயதுக்குபிறகு நான் வாழ்ந்து கொண்டிருக்கும் 60 ஆண்டுகளில் எந்த சுவையும் இல்லை. உலகத்தில் அறிஞர்கள், அறிவியாளர்கள் மடிவது போலவே அங்கங்கே பிறப்பார்கள், ஒட்டுமொத்த அறிவியல் கண்டு பிடிப்பென்பது தனிப்பட்ட ஒருவரின் முயற்சி அல்ல, பல்வேறு காலங்களில் தோன்றியவர்களின் பங்களிப்பே. என்னைப் போன்ற விஞ்ஞானிகளின் மூளையை வாழவைக்கிறேன் என்ற பெயரில் நாங்கள் உயிரோடு இருப்பதைத் தான் இந்த ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. இவை தேவையற்றது. இந்த வாழ்கை என் வயதை ஒத்த எவருக்குமே பிடிக்கவில்லை. வாழ்க்கை என்பது இயக்கத்துடன் இருந்து இயங்கும் போதே மடிவதுதான். அப்படி இல்லை என்றால் இயந்திரத்திற்கும் மனிதனுக்கும் வேறுபாடே இல்லை...இன்னும் எத்தனைக் காலம் இந்த ஆராய்ச்சிக் கூடத்திலேயே காலம் தள்ளப் போகிறோம் என்று நினைத்தால் வெறுப்பாகவே இருக்கிறது" என்றார்

அடுத்து ஒருவர் பேச ஆயத்தமாகும் போதே.....

இந்த நிகழ்ச்சியின் இடர்பாடாக அங்கே உள்ள பெரிய திரையில்.... "இன்னும் 10 வினாடிகளில் 10 ரிக்டர் அளவுகோளில் இங்கு பூகம்பம் நிகழ வாய்ப்புள்ளது.....உடனடியாக பாதுகாப்பான இடங்க..." என்று ஓடிக் கொண்டிருந்த போதே அங்கு ஏற்பட்ட வெறும் 10 வினாடி நேரமே நீடித்த பயங்கர நில அதிர்வில் அந்த நிலப்பகுதியே தரைமட்டமாகி இருந்தது.

**********

பின்குறிப்பு : சிறில் அலெக்சின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய மற்றொரு சிறுகதை.

கருப்பொருள் : மனிதன் எதிர்காலத்தில்... தன் வாழ்வை 150 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும், ஆனால் பெரிதாக பயனில்லை என்பது என் எண்ணம்... மருத்துவ கண்டுபிடிப்புகள் தவிர்த்து ... இயற்கைக்கு மாறனவற்றில் மனிதன் எவ்வளவுதான் போராடி வெற்றிப் பெற்றாலும்... எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளுக்கு முன்னால் அவை தூசு.

21 ஜூலை, 2008

போஃபர்ஸ் பணமெல்லாம் ஆட்சியை காத்துக் கொள்ளும் பேரத்துக்கா ?

'மதவாத சக்திகளை அனுமதிக்க மாட்டோம்' என்ற கொள்கை அடிப்படையில் இடது சாரிகள் காங்கிரசுக்கான நிபந்தனை ஆதரவை... அமெரிக்காவுடன் ஆன அணு உடன்படிக்கைக்கு எதிராக விலக்கிக் கொள்ள, நம்பிக்கை இல்லா(த) / கோரும் தீர்மானத்தின் மீது தற்பொழுது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.

செய்தி இதழ்களின் வாயிலாக வந்த செய்திகள் பலவற்றில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க ரூ 25 கோடிகள் முதல் ரூ 100 கோடிகள் வரை பேரம் நடைபெறுவதாக கோடி(ட்டுக்)காட்டி அறிவிக்கின்றன

இடதுசாரிகள் உறுப்பினர் எண்ணிக்கை மொத்தம் 59, இந்த இழப்பை 59 பிற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆதரவாக திருப்புவதன் மூலம் தான் ஈடு செய்ய முடியும், ஒரு உறுப்பினருக்கு சராசரி(க்கும் குறைவுதான்) 50 கோடிகள் என்று வைத்துக் கொண்டாலும் ரூ 2950 கோடிகள், முழுமையாகச் சொன்னால் 3000 கோடி, கிட்டதட்ட தமிழகம் போன்ற ஒரு மாநில அரசின் ஆண்டுக்கான வரவு செலவு (பட்ஜெட்).

இப்படி பேரத்திற்கு செலவிடும் பணம் எதுவும் திரும்பப் போவதில்லை என்பதால், இதை காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கான கட்சியின் முதலீடு உறுதியாக சொல்லிவிடமுடியாது.
அதையெல்லாம் வீட இவ்வளவு பெரிய தொகையை கொடுக்கும் அளவுக்கு அம்பாணி சகோதர்களையே மிஞ்சும் அளவுக்கு காங்கிரஸ் கட்சியிடம் அசையும் / அசையா சொத்துக்கள் இருக்கிறதா ? இவை செய்தித்தாள்களின் மூலம் பரப்படும் அவதூறு என்றால் காங்கிரஸ் கட்சி ஏன் பொய் செய்திகள் போடுவோர் மீது அவதூறு வழக்குக் போடக் கூடாது?

அவர்கள் மறுப்பேதும் சொல்லாமல் மவுனமாக இருப்பதிலிருந்தே தெரிகிறது, திரைமறைவில் பேரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்றே. அப்படியென்றால் இந்த பேரத்தில் பயண்படும் பணமெல்லாம் காங்கிரஸ் தொண்டர்கள் கட்சியைக் காப்பாற்ற மனமுவந்து கொடுத்த நன்கொடையா ? அப்படி என்றால்,

இதுபோல் தேசியக் கட்சித் தொண்டர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்தே இந்தியாவின் கடன் அத்தனையையும் அடைத்துவிட்டு பணவீக்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்திவிட முடியுமே.

மக்கள் ஆட்சி என்றாலும், மன்னர் ஆட்சி என்றாலும், சர்வாதிகார ஆட்சி என்றாலும் பொதுவாகப் பார்க்கப் போனால் எல்லாம் பல்வேறு வேடத்தில் மக்களை ஏமாற்றும் அரசியலே. அரசியல்வாதிகளின் எண்ணமெல்லாம் மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்து அவர்களது வரிப்பணத்தில் சுகபோகமாக உண்டு கொளுத்துவிட்டு, அதன் பிறகு வரும் அவர்களுடைய தலைமுறைகெளெல்லாம் இனி உழைக்கமாலேயே சொகுசு வாழ்வை அனுபவிக்க வேண்டுமமென்பதற்காகவே சொத்துக்களை குவிக்கிறார்கள். இதில் அரசியல் கொள்கையாவது... மயிராவது..! எல்லாம் ஏமாற்று வித்தை, வாய்ச்சொல்.

இதையெல்லாம் பார்க்கும் போது, தன்னால் ஆரம்பிக்கப் பட்ட 'திராவிட கழகம்' என்ற இயக்கம் எந்த நாளும் அரசியல் கட்சியாக மாறிவிடக் கூடாது என்று நினைத்து அதில் உறுதியாக நின்ற தந்தைப் பெரியார் போற்றுதலுக்குரியவர்.

இதுதான் உண்மை...!

பலசமயங்களில் செய்தியின் கருப்பொருளைவிட தலைப்பைத் தொட்டுவரும் வாசகர் கருத்துக்களுக்காகவே தட்ஸ்தமிழ் செய்தியைப் படிப்பதுண்டு. வலை அரசியலுக்கும் கொஞ்சம் சளைக்காமல் அங்கே நடக்கும் வாசகர் கருத்துக்கள் ரசிக்கத்தக்கவையாகவும் இருக்கும், முகம் சுழிக்க வைக்கக் கூடியதாகவும் இருக்கும், இங்கு நடப்பது போன்றே, கிறித்துவ பெயர்களில் இஸ்லாமியரைத் திட்டுவது, இஸ்லாமியர் பெயரில் கிறித்துவர்களைத் திட்டுவது, ஈழத்தமிழர் என்று சொல்லிக் கொண்டு தமிழகத் தமிழர்களைத் திட்டுவது, இஸ்லாமியர் பெயரில் பிஜேபி / இந்துத்துவ இயக்கங்களுக்கு ஆதரவு முழங்குவது போன்ற தந்திர பின்னூட்ட அரசியல் நடப்பிற்கு தட்ஸ்தமிழில் 'வாசகர் கருத்து' குறைவே இல்லை. அவற்றைத் தாண்டியும் அவ்வப்போது கருத்தாழமிக்க வாசகர் கருத்துக்கள் இடம் பெறுவதுண்டு. இன்று படித்தது,

பெங்களூரில் ஷீரடி சாய்பாபா சிலை கண் திறந்ததாக பரபரப்பு - இது செய்தி,

வாசகர் ஒருவரின் இதற்கான கருத்து...

பதிவு செய்தவர்: தந்தை பதிவு நேரம்: 21 Jul 2008 02:28 am

சிறுவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள மேஜிக் கலையைப் பாடத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று பிரபல மேஜிக் நிபுணர் ஜாதுகர் ஆனந்த் சென்னையில் கூறியிருக்கிறார். பாடத் திட்டத்தில் வைக்க வாய்ப்பு இல்லை என்றாலும், தந்திரக்கலை நிபுணர்களைக் கல்விக் கூடங்களுக்கு அழைத்து மாணவர்கள் மத்தியிலே நடத்தச் செய்யலாம். மேஜிக் என்பது தந்திரமே தவிர, அதில் எந்தவித மந்திரமும் கிடையாது. மந்திரம் என்ற ஒன்று இல்லை என்கிறபோது மந்திரத்தால் ஆகக்கூடியது என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. மக்கள் மத்தியில் பாமரத்தனமாக மந்திரம் என்ற ஒன்று இருப்பதுபோலவும், அதன்மூலம் எதையும் சாதித்துக் கொள்ளலாம்; நம்மைப் பிடிக்காதவர்களை இதன்மூலம் வீழ்த்திவிடலாம் என்பது போன்ற மூடத்தனங்களும் இருந்து வருகின்றன.

இந்த மந்திரத்தின் தொப்புள் கொடி பிள்ளைகள் தாம், பில்லி, சூன்யம் வகையறாக்களும்; மக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் இத்தகு மூட எண்ணங்களைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டக் கூடிய ஆசாமிகள்தான் இந்த மந்திரவாதிகள் - சாமியார்கள் என்கிற கூட்டத்தார். இந்த மூட நம்பிக்கைகளின் உச்சம்தான் நரபலி என்கிற மாபெரும் கொடுமையாகும். எனவே, பள்ளிப் பருவத்திலேயே இந்த மூட நம்பிக்கையின் ஆணி வேர்களைக் கெல்லி எறியும் வகையில் மந்திரமும் அல்ல - மண்ணாங்கட்டியும் அல்ல என்று செயல்முறைகள் (Demonstration) மூலம் விளக்கிக் காட்டினால் இந்தப் பித்தலாட்டங்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்று இல்லாமலே போகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமை என்ற பகுதியில், மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மை வளர்க்கப்படவேண்டும்; எதையும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கும் உணர்வை உருவாக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தாலும், மந்திரத்தால் மாங்காய் விழும் என்கிற பித்தலாட்ட மூடத்தனங்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில், தந்திரக்கலை வகுப்புகளைத் தொடக்கக் கல்வி முதல் தொடர்ந்து நடத்தச் செய்வது அவசியமாகும். அப்படி நடத்துகின்றவர்கள் தொடக்கத்தில் கைத்திறனால் செய்து காட்டி, அதன்பின் எப்படி செய்யப்பட்டது என்பதைக் காரண காரியத்தோடு விளக்கிச் சொல்லி, செய்து காட்டவும் வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால், அதுவும் மந்திரத்தால்தான் நடந்தது என்ற எண்ணம்தான் ஏற்படும். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் இத்தகைய மந்தி ரமா? தந்திரமா? நிகழ்ச்சிகளை ஒரு பிரச்சாரத் திட்டமாகவே கொண்டு நாடு முழுவதும் செய்து காட்டப்படுகிறது. அதன் காரண மாகப் பெரும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பணியைக் கழகம் செய்து வருகிறது. புட்டபர்த்தி சாய்பாபா போன்றவர்கள் இத்தகைய தந்திரவாதி களே! ஆனால், அதனைத் தந்திரம் என்று சொல்லாமல், பகவான் சக்தி தங்களிடம் இருப்பதால் அவ்வாறு செய்ய முடிகிறது என்று பாமர மக்களை ஏய்த்து வருகின்றனர்.

கையசைப்பில் தங்கச் சங்கிலியைக் கொண்டு வந்து காட்டி, மக்களைப் பிரமிக்க வைக்கும் சாய்பாபா, இதுபோன்ற கை அசைவில் ஒரு பூசணிக்காயைக் கொண்டு வந்து காட்ட முடியுமா என்ற கேள்வி வெகுநாள்களாகக் கேட்கப்படுகிறது. அதற்கு எந்த விதமான நாணயமான பதில் அவரைப் போன்றவர்களிடத்தி லிருந்து வரவில்லை. புட்டபர்த்தியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தியப் பிரதமர் நரசிம்மராவ் பங்குகொண்டார். அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த புட்டபர்த்தி சாய்பாபா தம் கை அசைப்பில் ஒரு தங்கச் சங்கிலியை வரவழைத்து, அதனைப் பிரதமரிடம் அளித்தார்.
எல்லோரும் ஆச்சரியமாகப் பல்லிளித்துக் கிடந்தனர்.திரைமறைவில் அந்தத் தங்கச் சங்கிலி எப்படி சாய்பாபாவின் கைக்கு வந்தது என்பது வீடியோவில் பதிவாகி விட்டது. அந்த வீடியோவைப் பறிமுதல் செய்வதில் சாய்பாபா எந்தெந்த முயற்சி களையெல்லாம் கையாண்டார் என்பது சுவையான கதையாகும். அந்த வீடியோ அவர் கைக்கு வருவதற்குள் பல படிகள் எடுக்கப்பட்டு இந்தியா முழுமையும் பரவிவிட்டது. அதற்குப்பின் கொஞ்சகாலம் சாய்பாபாவின் சாகசம்பற்றி பேச்சு மூச்சு இல்லாமலே இருந்தது.

அதுபோலவே, சந்திராசாமி, பிள்ளையார் பால் குடித்தார் என்ற கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டார். தேர்தல் நோக்கத்தோடு பா.ஜ.க.வுக்கு ஆதரவு சேர்க்கும் வகையில் செய்யப்பட்ட பிரச்சாரம் என்பதும் அம்பலத்திற்கு வந்துவிட்டது. என்றாலும், மக்கள் மத்தியில் அந்த மூட நம்பிக்கை இன்னும் நிலவி வருவதால், அவர்கள் சுரண்டப்படாமல் இருக்கவும், மோசம் போகாமல் காப்பாற்றப்படவும் இந்தத் தந்திரக்கலையை பள்ளிப் பருவத்தில் சொல்லிக் கொடுப்பது அவசியம்தான். பகுத்தறிவாளர் கழகத் தோழர்களும் பள்ளிகளில் இத்தகைய தந்திரக் கலை நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யலாமே.

நன்றி : தட்ஸ்தமிழ்

*********

பின்குறிப்பு : ஆன்மிகத்தின் பெயரில் நடக்கும் பித்தலாட்டங்கள் என்பது வேறு, ஆன்மிகம் வேறு என்பதை நம்பிக்கையாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும், ஒருவர் ஆன்மிகவாதி என்பதாலேயே அதன் பெயரில் நடக்கும் மோசடிகளுக்கெல்லம பொறுப்பேற்றுக் கொண்டு சப்பைக் கட்டத் தேவையில்லை. அதுபோலவே திராவிட உணர்வாளர் என்பதாலேயே மானமிகுக்களின் மலைபோன்ற சொத்துமிகுதிக்கும் சப்பைக் கட்டத் தேவையில்லை. (ப)சப்பைக் கட்டுவதாலேயே மோசடிப் பேர்வழிகள் திருந்துவதற்கு வாய்ப்பு என்பதைவிட அவர்கள் வளர்வதற்கு வாய்ப்பாகவே அது அமைந்துவிடுகிறது. 80 விழுக்காடு ஏழைகளாகவே இருக்கும் நாட்டில், தன்னை சாமியார் என்று கூறிக் கொள்ளும், சொல்லவைக்கும் ஒருவரிடமிருந்து தங்கச் சங்கிலி பெருவதற்கான வாய்ப்பும் தகுதியும் என்னதாக இருக்க முடியும் ?

18 ஜூலை, 2008

மீண்டும் சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு !

ஜேகே ரித்தீஸ் அளவுக்கு புகழடைந்துள்ள என்னைப் பார்க்க 1000க் கணக்கான பதிவர்கள் நீண்ட காலமாக காத்துக்கிடக்கிறார்கள், 'நேரம் ஸ்பெண்ட் பண்ண டைம் இல்லாததால் (நேற்று வானொலியில் ஒரு நேயர் அப்படித்தான் சொன்னார்) எப்போதாவது பதிவர் சந்திப்பு நடக்கும், அதில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் என் செகரெட்டரியிடம் பெயரை பதிந்து கொள்ளுங்கள். என்றெல்லாம் சொல்ல ஆசைதான். ஹிஹி இது டூ மச்சி !

காம்ப்ளான் குடிச்சி வளர்ந்தேன் என்று சொல்வதுடன் இன்றைய பதிவில் தமிழ்மணம் படிச்சி, எழுதி வளர்ந்தேன் என்று நாளை பதிவிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார் பதிவர் ஓசை செல்லா. ஒரு பொய்யை எப்படிச் சொல்வது, காம்ப்ளான் குடிச்சு வளரும் பணக்கார பையனாக பிறக்கவில்லை. அப்போதைய 10 ரூவா காம்பளானுக்கு பணக்காரனாத்தான் பிறக்கனுமா ? என்றெல்லாம் கேட்கக் கூடாது.
காம்பளானெல்லாம் வளரும் பருவத்தில் கேள்விபட்டதே இல்லை. இன்னிக்கும் நினைவு இருக்கிறது கம்பங்கூழ், கேழ்வரகுகூழ் முதல் நாள் இரவே செய்து, மறுநாள் கொஞ்ம் தயிரோ மோரோ போட்டு, கூழாகக் கரைத்துக் கொடுப்பார்கள், இரண்டு டம்ப்ளர், கடித்துக் கொள்ள பச்சை மிளகாய் கிடைக்கும். கம்பங்கூழ்தான் நான் குடிச்சு வளர்ந்த காம்ப்ளான்.
நினைவை மீட்டுத்தந்த ஓசை செல்லாவிற்கு நன்னி.

வெறும்பயலாக (பயலாக - நடுத்தர வயசில் வயதைக் குறைத்துக் காட்டும் டெக்னிக்) பொட்டித் தட்டிக் கொண்டிருந்தால் ஒருபயலுக்கும் (ரொமப் ஓவர் இல்லே ?) சாரி ஒருத்தருக்கும் என்னையைப் பற்றி தெரிந்திருக்காது. இப்ப தெரியும் என்பதால் அடுத்த எலெக்சனில் நான் நிற்கமுடியாமல் உட்காரும் போது என்னிய எழுப்பிவிடுவாங்க.... அதுக்குள்ள விசயம் மறந்துட்டு.

ச்சே.....ச்சே என் மூஞ்சைக் காட்டுவதற்கு அல்ல,

பல்வேறு சிந்தனைத் தளங்களில் பயணம் செய்யும் பதிவர்கள், ஒன்று கூடி இளைப்பாறும் மோட்டல் (மாமண்டூர் போல்) தான் பதிவர் சந்திப்பு. புதிய பதிவர்கள் என்றால் 'இந்த மூஞ்சிதான் இப்படியெல்லாம் எழுதியதா ?' வியப்படையலாம், அதிர்ச்சியடையலாம்.

தாரளமனசுக்காரர் யாரவது நிச்சயம் கலந்து கொள்வார்கள், அவர் செலவில் போண்டா தின்றுவிடலாம். கோவையில் சென்றவாரம் பதிவர் சந்திப்பு நடத்திய பெரியவர் மஞ்சூர் ராஜாவை உண்மையில் மனம் திறந்து பாராட்டுகிறேன். பதிவர் சந்திப்பை தன் வீட்டு விழா போல் சிறப்பாக நடத்தி இருக்கிறார். சொந்தக்காரன் இல்லை, சாதிக்காரன் இல்லை, சிறுவயது நண்பனோ, கூடப்படித்தவனோ இல்லை. இத்தனை இல்லைகளாகவும் இருக்கும் பதிவர்களை தன் வீட்டிற்கு அழைத்து உணவு கொடுத்து, நல்ல இடம் கொடுத்து, சுப்பையா சாரின் 4 மணிநேர அடைமழை சொற்பொழிவையும் பொறுமையாகக் கேட்டு இருக்கிறார் என்றால், உண்மையில் மஞ்சூர் ராஜா மற்றும் அவரது இல்லத்தோர்... அவர்களின் பதிவர் பற்றும் அதற்கு அடிப்படைக் காரணமான தமிழ்பற்று, தமிழ் உணர்வு பற்று நெகிழ வைக்கிறது.

*************

பதிவர் சந்திப்பு அழைப்புக்கு இவ்வளவு நீளமாக பதிவிடலாமா ?

சுறுக்கமாக முடித்துவிடுகிறேன்,

மாரனேரி என்ற புதிய வலையின் புதிய பதிவரும் நீண்ட காலமாக பதிவுகளை வாசித்துவரும் ஜோசப் பால்ராஜ் (பயந்துடாதிங்க பால் தினகரன் இல்லை), சிங்கைப் பதிவர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார். தேதி இடம் மற்றவர்களுடன் கலந்து பேசி சிறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது

தேதி : 2008, ஆகஸ்டு 3, ஞாயிற்றுக் கிழமை
இடம் : அங்மோக்யோ நூலக எதிரில் உள்ள பூங்கா (வருபவர்களுக்கு வழிகாட்ட தட்டி வைத்துக் கொண்டு நூலகம் அருகில் ஜெகதீசன் நிற்பார்)
நேரம் : மாலை 4:30 முதல் 7:00 வரை (அதற்கும் மேலும் மொக்கைப் போடுவோர் போடலாம்)

சென்ற முறை கலந்து கொண்டவர்களும், கலந்து கொள்ளாதவர்களும், கோவித்துக் கொண்டவர்களும், மற்றும் எல்லா'ளும்' வெட்கப்படாமல் இந்த முறை கலந்து கொள்ள வேண்டும் என்று என் சார்பிலும், ஜோசப் பால்ராஜ் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்

பின்குறிப்பு : பதிவர்களில் தலை / கால் / வால் என்று யாரும் இல்லை, யாராவது ஒருவர் ஏற்பாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். ஏற்பாட்டு குழுதலைவர் யார் என்றால் கலந்து கொள்ளும் ஒவ்வொரு பதிவர்களும் தான். சொந்தக்காரர்கள் போல் 'எனக்கு அழைப்பு விடுக்கவில்லை' என்று யாரும் நினைக்காமல் தவறாது கலந்து கொள்ளவேண்டும், இது போல் பதிவர் சந்திப்புக்களை அடுத்து அடுத்து ஏற்படுத்த முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

17 ஜூலை, 2008

இனி தமிழ்மணம் செய்ய வேண்டியது என்ன ?

மூன்று நாளாக மேட்டர் ஓடுது, ஏங்க நீங்களும் ஒரு மூத்த பதிவர் தானே ? ( மூத்த பதிவர் என்று இவனுங்களாக நினைத்துக் கொண்டால் நான் என்ன செய்வது ?) உங்கள் கருத்து என்ன ? என்ன ? ஜிமெயில் சாட்டில் ஒரே நச்சரிப்பு, ஒரு பத்து நாளைக்கு ஜிமெயிலையே திறக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டேன்.

தலைப்பைப் பார்த்தீர்கள் தானே ?

இன்னும் ஒருவாரத்திற்கு தமிழ்மணத்தில் வரக்கூடிய பல்வேறு பதிவர்களின் பதிவுகளின் தலைப்புகள் இவைதான்

தமிழ்மணம் ஒரு பாசிச திரட்டி
தமிழ்மணம் நடுநிலையான திரட்டி
தமிழ்மணம் வெறும் திரட்டிதானே ?
தமிழ்மணத்தை இனி நம்பலமா ?
தமிழ்மணத்துக்கு 10 யோசனைகள்
**** பதிவரின் பிடியில் தமிழ்மணம்
காமக் கதைகள் ஆபசமானதா ? (101 ஆவது விளக்கமாக பதிவர் குசும்பன்),
தமிழ்மணம் ஒரு பாயாச திரட்டி,
தமிழ்மணம் ஒரு ஆயாச திரட்டி,
தமிழ்மணத்தினால் பயன் என்ன ?,
தமிழ்மணத்திற்கு இறங்கு முகம்,
தமிழ்மணத்திற்கு வரப்போகும் பொற்காலம் - ஜோதிட ரத்னா சுப்பையா வாத்தியார்,
தமிழ்மணத்தினால் பயனடைந்தேன் - டோண்டு ராகவன் (108 ஆவதுமுறையாக)
தமிழ்மணம் பதிவர் நலனில் அக்கரை காட்டுகிறதா ?
தமிழ்மண வளர்ச்சியில் பதிவர்களின் பங்கிடு
தமிழ்மணத்தால் பாதிப்படைந்தேன்
தமிழ்மணத்தால் கொதிப்படைந்தேன்
காமத்துப்பாலில் வரும் காமம் ஆபாசமானதா ? (50 ஆவது விளக்கம்)

இன்னும் எதும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்க சேர்ப்போம் :)
**********

தமிழ்மணத்தில் எழுதாமல் வேறெங்காவது எழுதி இருந்தால் இன்னேரம் தேசிய அளவில் பேசப்படும் இலக்கியம் எழுதி, எழுதி... சாகித்திய அகாடமி விருது வாங்கி தமிழகத்துக்கு பெருமை சேர்த்து இருப்பேன் இருப்பேன். என்னுடைய நேரம் நான் இங்கே வந்து சிக்கிவிட்டேன். என்னுடைய வளர்ச்சியை கெடுத்துவிட்டது தமிழ்மணம் :) ஹிஹி

*********

யப்பா.....யாராவது எதாவது எழுதிட்டு போங்க, எனக்கு அடையாளம் தந்தது தமிழ்மணம், எழுத பயிற்சிக்களமாக இருந்ததும் தமிழ்மணம் தான்.

தமிழ்மணத்தில் எழுதி இருக்காவிடில் பதிவர் நண்பர்கள் வட்டம் கிடைத்திருக்காது. நான் தமிழ்மணத்தை வெறும் திரட்டிதானே என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பந்தய குதிரை எல்லாமே குதிரைதான். பலம் உள்ளது மட்டுமே முதலில் வருகிறது. அதன் மீதுதான் பணமும் கட்டுகிறார்கள். பலனடைந்தவர்கள் எல்லா குதிரையும் குதிரைதான் என்று சொல்ல முயல்வார்களா ?
அம்புட்டுதான் நம்ம கருத்து !

பின்குறிப்பு : சூட்டைக் குறைக்க வேண்டுமென்றால் பிரச்சனையை 'காம'டியாக்கிவிடனும் :) இந்த பதிவிற்கு நல் ஓசனை வழங்கிய பதிவர் பெருந்தகை குசும்பன் வாழ்க.

சென்னையில் வீடுகட்ட பொருள் உதவி !

இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், சென்னையில் விற்கும் விலைவாசியில் இடம் வாங்கிப் போட்ட கோடிஸ்வரர்களுக்கு... 'இடம் தான் வாங்கிப் போட்டிங்க, வீடுகட்டுவதற்கு என்ன செய்வீர்கள் ?

யாருக்காவது வீடுகட்ட கல்வேண்டுமென்றால் குசும்பனை அனுகவும்.

மேட் டர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுதான்... குசும்பன் வயித்துல கல் உருவாகி இருக்கிறதாம், 'அது வைரக்கல்லாக இருக்கும் யாரிடமும் சொல்லவேண்டாம், இப்போதைக்கு ரகசியமாக வைத்துக் கொள்' என்று அண்ணாச்சி ஆசிப் மீரான் சொல்லி இருக்கிறார்.

இதைக் ஒட்டுக்கேட்ட அபி அப்பா, குசும்பனை தள்ளிக் கொண்டு ஆப்பரேசனுக்கு சேர்த்ததாக கேள்வி, 'வைரக்கல் முட்டையிடும் குசும்பனை அறுத்து பார்த்து மொத்தத்தையும் கெடுத்துவிடாதே' என்று ஐய்யனார் அபிஅப்பாவுக்கு அட்வைஸ் செய்தாரம்.

இதையெல்லாம் பார்த்து ரொம்ப குழம்பிய குசும்பன், அந்த கல்லை யாராவது சென்னையில் இடம் வாங்கிப் போட்ட ஏழைகளுக்கு வீடுகட்ட தரப்போவதாக என்னிடம் சாட்டில் சொன்னான்.

கல்லு வேண்டுவோர் குசும்பனுக்கு ரகசியமாக போன் செய்து காதும் காதும் வைத்தது போல் பேசி முடித்துக் கொள்ளலாம். முதலில் அழைத்துப் பேசுபவருக்கு முன் உரிமை உண்டாம்.

பின்குறிப்பு : குசும்பனுக்கு மட்டும், என்னிய லேபிள் போட்டு வம்பு வளர்த்தே இல்லே ? இது எப்படி இருக்கு......?

மற்றவர்களுக்கு : குசும்பனை கும்முவதற்கு மாடுரேசன் நீக்கப்பட்டுள்ளது. :)

15 ஜூலை, 2008

'நியூ இந்தியா 2051' - அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக !

கிபி 2051 ஜனவரி 18, இந்திய அறிவியல் துறையின் தலைமையகக் வட்ட மேசை அறையில் பிரதமர் மற்றும் அறிவியல் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள் கூடி இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி அனுமந்தராவ் தனது கண்டுபிடிப்பை விளக்கிக் கொண்டு இருந்தார்.

"பிரதமர் மற்றும் அமைச்சர் அவர்களே, முன்னாள் குடியரசு தலைவர் சொல்லியது போல் 2020ல் இந்தியா வல்லரசு ஆகவில்லை, அதற்கு காரணம் என்று பார்தோமேயானால், இந்தியாவில் புரையோடி இருக்கும் சாதிப்பிரச்சனை தான். அவரவர் தத்தம் சாதி பற்றில் மூழ்கி இருப்பதால், இந்தியன் என்று சொல்லிக் கொண்டாலும், பிரிந்தே கிடக்கிறார்கள், 150 ஆண்டுகளாக இடஒதுக்கீடு வழங்கி அனைத்து சமூகங்களும் முன்னேறி இருந்தாலும், இடஒதுக்கீட்டை எடுத்துவிட அரசு முடிவெடுத்தால் அது கூடாது என்றே முழங்கி அங்காங்கே கலவரங்களை உண்டு பண்ணுகிறார்கள், உயர்சாதிக்காரர்களும் தங்களுக்கு சொந்தமான நிறுவனங்களில் தன்னுடைய சாதிக்காரர்களையே உயர்பதவியில் அமர்த்துகிறார்கள்"

"நாட்டில் கல்விக்கோ, வேலைவாய்ப்புக்கோ குறைவு இல்லை. இருந்தாலும் இதைப் பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கு முயற்சிக்காமல் எப்போதும் எதாவது போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது, நமது ஒற்றுமை இன்மையைப் பயன்படுத்தி பாகிஸ்தானும், சீனாவும் தங்கள் நில எல்லைகளை விரிவுபடுத்துக் கொண்டு பஞ்சாப் வரை வந்துவிட்டார்கள்..."

"இந்த நிலை நீடித்தால் நம் இந்தியாவையே தொலைத்துவிடும் ஆபத்து வெகுவிரைவில் நெருங்கிவிடும்...இதனைத் தடுக்க அனைவரையும் தாம் இந்தியர் என்று உணரவைக்க வேண்டும். அவரவர் மனதில் குடியேறி இருக்கும், ஜீன்களில் கலந்து இருக்கும் சாதிப்பேயை ஓட்டவேண்டும்....அதை விஞ்ஞான ரீதியாக செய்ய முடியும், இன்று நான் அதைப் பற்றிதான் சொல்லப் போகிறேன்"

"கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பே ஜீன்களை அடையாளம் கண்டுபிடித்து அறிவியல் துறை சாதித்து இருக்கிறது, அதை மேலும் நான் 30 ஆண்டுகாலம் எடுத்துக் கொண்டு ஜீன்களை ஆராய்ந்த போது சாதியல் கூறுகளை மனதில் விதைக்கும் ஜீன்களை தனித்து அடையாளம் கண்டேன். அதனை அகற்றிவிட்டால், வருங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் கூட சாதி உணர்வற்றே பிறப்பார்கள், கலப்பு திருமணம் என்ற சொல் கூட வெளியே தெரியாமல் பல்வேறு சமூகமாக முன்பு இருந்தவர்களிடையே விருப்பத் திருமணங்கள் நடந்தேறும், எதிர்காலத்தில் சாதி என்ற ஒன்றே இருக்காது"

"இந்த சோதனையை நான் மேற்கொள்ள வேறு வேறு இரண்டு ஆண் தெருநாய்களை எடுத்துக் கொண்டேன். இரண்டு ஆண் நாய்களுமே வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவை, அவற்றிற்கு சாதி மரபுகளை அழிக்கும் எனது 'நியூ இந்தியா 2051' பார்முலா ஊசியைச் செலுத்திய ஒருவாரத்திற்கு பிறகு, முன்பு எப்போதும் ஒன்றை ஒன்று 'உர்... உர்...' என்று பார்த்து உறுமும் நாய்கள், தற்போது ஒன்றை ஒன்று நக்கிக் கொடுக்கின்றன, இரண்டு வேறுபாடுகளை மறந்து நண்பர்கள் ஆகிவிட்டன... இதன் மூலம் எனது சாதி நீக்கும் ஜீன் ஆராய்ச்சி வெற்றி அடைந்திருக்கிறது"

மருந்து கொடுப்பதற்கு முன்பும், அதன் பின்பும் இரு வீடியோக்களைப் போட்டுக் காட்டுகிறார். அக்ரோசமாக கடித்துக் குதறிக் கொண்ட நாய்கள், ஒன்றை ஒன்று பசு கன்றை வருடுவதைப் போல் நக்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தன

எல்லோரும் கைத்தட்டி பாராட்ட, பிரதமர் பேச ஆரம்பித்தார்

"முதலில் இந்த சிறப்பான ஆராய்ச்சி மேற்கண்ட விஞ்ஞானி அனுமந்தராவைப் பாராட்டுகிறேன்....'நியூ இந்தியா 2051' பார்முலா நமது நாட்டுக்கு மிக மிகத் தேவையான ஒன்று...ஒரே நாளில் இந்தியர் அனைவருக்கும் 'நியூ இந்திய 2051' பார்முலா மருந்தை போலியோ சொட்டு மருந்து போல செலுத்துவதற்கு வரும் பாராளுமன்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்"

அதற்குகிடையில் இந்த ஆராய்ச்சியைப் பாராட்டி நோபல் குழு அனுமந்தராவுக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கப் போவதாக அறிவித்தது.

அமெரிக்கா போன்று வெள்ளையர், கருப்பர் இருக்கும் நாடுகளில் இந்த மருந்தில் மாற்றம் செய்து இனவேறுபாடுகளை களைவதற்கு உதவவேண்டும் என்றும் அதற்கு இந்தியாவுக்கு 100 பில்லியன் டாலர் நன்கொடை அளிப்பதாகவும் கூட்டாக அறிவித்தன

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி பிறந்த நாளில் இந்தியர் அனைவருக்கும் 'நியூ இந்தியா 2051' பார்முலா மருந்து கொடுக்கப்படும் என்றும், மறுப்பவர்கள் அரசு உத்தரவை மீறுபவர்கள் என்று கருதி சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கபடும் என்றும் நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது

********

2051 ஜூலை 31, காலை 9 மணியளவில் அன்றைய இந்திய செய்தி ஊடகங்கள் அனைத்திலும், ப்ரேக்கிங் நியூஸ் என அதிர்ச்சி செய்தியாக...

"இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் தற்கொலைப் படைத்தாக்குதலால் முற்றிலும் அழிந்தது என்றும் அங்கு ஆராய்சியில் ஈடுபட்டிருந்த அனுமந்தராவ் மற்றும் அவரது உதவியாளர்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள்" என்ற பரபரப்புத் தகவல்கள் எலோக்ட்ரோ மேக்னெட் அலைகள் முலம் பரவ...பரவ... அந்த செய்தி அடுத்த வினாடியே உலகம் முழுவதும் பரவியது.

அன்று மாலையே,

வடநாட்டில் இயங்கிய தடைசெய்யப்பட்ட இந்துவெறி அமைப்பு ஒன்று, செய்தி ஊடகங்களுக்கு செய்தி அனுப்பிய தகவலில்... "இந்தியா இந்துவிற்கே சொந்தம், இந்து மதத்தின் சிறப்புத் தன்மை சாதி...சாதிகளை ஒழித்துவிட்டால் இந்துமதம் அழிந்துவிடும்....உலகில் தோன்றிய முதல் மதமான இந்துமதம் அழிவை சந்திக்க ஒருகாலமும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்... இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் மீது நடந்த தாக்குதலுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்" என்று அறிவித்தது.

********

பின்குறிப்பு : இது பதிவர் சிறில் அலெக்ஸ் அறிவித்த அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

14 ஜூலை, 2008

***மக் கதை !

"பொண்ணுக்கு 100 சவரன், பையனுக்கு சின்னதாக டாடா நானோ காரும், வெயிட்டு கம்மியாக 10 சவரனுக்கு செயின் மோதிரம் போட்டால் போதும்"

தரகர் தங்கசாமி பெண்ணின் அப்பாவின் காதைக் கடித்தார்.

"என்ன யோசனை பண்ணுறிங்க...சரியான சம்பந்தம்...இப்படி பட்ட இடம் கிடைக்கிறதுக்கு கொடுத்து வைக்கனும்..."

"ம்..அதுக்கு இல்லே.....எதாவது செய்யணுமே......என் பொண்ணு கல்யாணத்தை எப்படி நடத்துவேன்......ஈஸ்வரா..."

"100 சவரனுக்கு எங்கே போவது...ஈஸ்வரா நீ எங்கே போவே... நீ போட்டு இருப்பதெல்லாம் பாம்பு நகைகள்...." தலையில் கைவைத்தபடி நின்று கொண்டிருந்தார்......அப்போது....அப்போது....அதிசயம் பயமுறுத்திக் கொண்டு நிகழ்ந்தது.

பலமான காற்று அடித்தது, மின்னல் மின்னியது. பீரோ திறந்து கொண்டது....கதவெல்லாம் படபடவென்று அடித்தது...

பீரோவிலிருந்து ஒரு ஃபைல் காற்றின் வேகத்தில் தாக்கு பிடிக்காமல் கீழே நழுவ.....

அதிலிருந்து ஒரு பேப்பர் மேலும் கீழுமாக அசைந்து அசைந்து ... பாபா படத்தில் ரஜினி கையில் பட்டம் வந்து விழுவதைப் போல்...

பெண்ணின் தந்தையின் கைகளில் விழ, "Marriage Endowment Policy - LIC" 10 லட்சத்திற்கு 15 ஆண்டுக்கு முன்பு எடுத்தது அன்று தான் மெச்சூர் ஆகி இருப்பதாக அதிலிருந்த தேதி காட்டியது

அப்பறம் என்ன திருமணத்தை ஜாம் ஜாம் என்று மில்கா ப்ரட்டோடு நடத்தினார்கள். :)
(சின்ன பொண்ணுக்கா கல்யாணம் ? கேட்டுடாதிங்க...படத்தில் இருப்பது பொண்ணோட யங்கர் சிஸ்டர்)

********

பின்குறிப்பு : மர்மக் கதை என்று தலைப்பிட்டேன். தலைப்பும் கொஞ்சம் மர்மமாக இருக்கட்டுமேன்னு... *** போட்டேன். சரியாப் பாருங்க *** (மூன்று ஸ்டார்) இருக்கும் ** (இரண்டு ஸ்டார்) அல்ல. ஹலோ மொக்கை இல்லிங்க. வளரும் குழந்தைகளுக்கு காம்ப்ளான் மட்டுமல்ல, காப்பீடு மிக மிகத் தேவை. வரதட்சணைக்கு இல்லாவிட்டாலும், மேற்படிப்பு, உயர்கல்விக்கு மிகவும் பயன்படும். சத்தியமாக நான் எல்ஐசி ஏஜெண்ட் கிடையாது. :))))))))))

உங்கள் பதிவு ஹிட் / ஹீட் ஆகனுமா ? ஒரே உத்திதான் !

இந்திய நேரத்தில் எழுதினால் பதிவு சூடாகுமா ? அமெரிக்க நேரத்தில் எழுதினால் சூடாகுமா ? எப்போது பதிவிட்டால் மிகுந்த ஹிட் கிடைத்து, உடனே சூடாகும் ? நேற்று இரவு தூக்கம் வராமல் சிந்தனை செய்ததில் மூளையில் மின்னல் வெட்டியது (ஸ்ட்ரோக் வந்ததான்னு கேட்கப்படாது, அப்படி வந்தால் பதிவு எழுதுவேனா ?), பதிவுகள் ஹிட் ஆவதற்கும், ஆகாமல் போவதற்கும் பதிவர்களோ, பதிவில் என்ன எழுதி இருக்கிறார்கள் என்பதோ காரணமில்லை. சரியான ஒரே காரணம், சரியான நேரத்தில் பதிவை எழுத தொடங்கி, சரியான நேரத்திற்குள் முடிக்காததும், பதிவை நல்ல நேரம் / அல்லாத நேரங்களில் இடாததும் / இட்டதுமே தான் காரணம்.

பதிவர்களின் நலன் கருதி ராகு காலம், எமகண்டம் மற்றும் குளிகை சஞ்சாரம் செய்யும். நேரங்களைத் தொகுத்துள்ளேன். இந்த மூன்று துர்(கெட்ட)நேரங்களிலும் பதிவை எழுதுவதோ, முடிப்பதோ, வெளியிடுவது கூடாது.

கிழமைராகுகாலம்எமகண்டம்குளிகை
திங்கள்07:30 -09:00 10:30 - 12:0003:00 - 04:30
செவ்வாய்03:00 - 04:3009:00 - 10:3001:30 - 03:00
புதன்12:00 - 01:3007:30 -09:00 12:00 - 01:30
வியாழன்01:30 - 03:0006.00 - 07:3010:30 - 12:00
வெள்ளி10:30 - 12:0003:00 - 04:3009:00 - 10:30
சனி09:00 - 10:3001:30 - 03:0007:30 -09:00
ஞாயிறு04:30 - 06:0012:00 - 01:3006.00 - 07:30


நீங்கள் ராகு காலத்தில் பிறந்தவரா ?

ராகுகாலம், எமகண்டத்தில் பிறக்கும் குழந்தைகள் பற்றி?

ராகுகாலம், எமகண்டத்தில் பிறப்பது நல்லது. ஏனென்றால் அவர்களுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கும். படைப்பாற்றல் அதிகமாக இருக்கும். யார் எதைச் சொன்னாலும் அதை எக்காரணத்திற்காகவும் ஒப்புக்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பார்கள்.

அதிகமாக சிந்திப்பார்கள். எப்போதும் ஒரு சிந்தனையில் இருப்பார்கள். மேலும், எமகண்டத்தை விட ராகு காலத்தில் பிறக்கும் குழந்தைகள் அதிக சிந்தனையுடையவைகளாக விளங்குகின்றன. விளையாட்டிலும் சிறப்பாக இருப்பார்கள்.

ஆனால் இவர்கள் நண்பர்களால் கெடுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு. எதிர்காலத்தில் மது, மாது, சூது போன்றவைகளுக்கு அடிமையாக வாய்ப்பு உண்டு. அந்த வகையில் மட்டும்தான் ராகு காலம், எமகண்டத்திலும் பிறக்கும் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமே தவிர, மற்றப் பிள்ளைகளை விட ராகுகாலம், எமகண்டத்தில் பிறக்கும் பிள்ளைகள் எல்லா விதத்திலும் சிறப்பாகவே இருப்பார்கள்.

படிப்பிலும், விளையாட்டிலும் மற்றவர்களை விட சிறந்த மாணவர்களாகவே திகழ்வார்கள்.

ஏதாவது ஒரு கெட்டப் பழக்கத்திற்கு (ஓ 'அந்த' மேட்டர் ? நீங்கள் 'அந்த' மேட்டர் பற்றியே ஸிந்தித்தால் நீங்கள் ராகுகாலத்தில் / எமகண்டத்தில் பிறந்தவர்) அடிமையாக இருப்பதற்கு வாய்ப்புண்டு. அதை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

--ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்

நன்றி : வெப்துனியா

பின்குறிப்பு : இந்த பதிவு ராகுகாலம் முடிந்ததும் வெளியிடப்பட்டது. லக்கி லுக்கின் அனைத்து பதிவுகள் எப்படி ஹிட் ஆகின்றன என்பதைக் குறித்து ஆராய்ந்த போது, அவருக்கு தெரிந்தோ, தெரியாமலோ அவர் நல்ல நேரத்தில் வெளி இடுவதே காரணம் என்று தெரிந்தது. அவரே ராகுகாலத்தில் தான் பிறந்திருப்பார் என்று நினைக்கிறேன் இந்த இடுகையில் தனிப்பட்ட பதிவர்கள் யாரையும், ஒரு எழுத்தைக் கொண்டு, புள்ளியைக் கொண்டு கூட புண்படுத்தவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மொக்கைப் போட மேட்டர் கிடைக்கவில்லை. அல்லாரும் மன்னித்துக் கொள்ளுங்கள். பயனுள்ள தகவல்கள் தான் அளித்துள்ளேன் என்று நம்புகிறேன்

13 ஜூலை, 2008

திருமணம் ஆன ஆண்களுக்கு மட்டும்...

"காப்பியைக் குடிச்சிட்டு...அப்படியே வச்சிருக்கிங்களே...டம்ளர் காஞ்சிடும்...அடுப்பில் வேலையாக இருக்கேன் சிங்க்ல கொண்டு வந்து போடக் கூடாதா ?...நியூஸ் பேப்பரில் காலை 8 மணி வரை படிக்க என்ன தான் போட்டு இருப்பானோ... தண்ணி ஆறிடும்...சீக்கிரமாக குளிச்சிட்டு வாங்க"

***

"அடடே...என்ன இது காக்கா குளியல்...முதுகுபக்கம் சோப்பாக இருக்கு...குளியல் அறைக்கு போங்க...வந்து தேய்ச்சிவுடுறேன்"

"ஆ....சுடுது..."

"தண்ணி ஆறிப்போய் ஜில்லுன்னு இருக்கு...சுடுதா ?"

"உன் கை பட்டு இருக்கே...சுடாதா ?"

"காலங்காத்தால ரொமான்சா...சூடுதானே...குறைச்சிடுறேன்..ஞாயித்து கிழமை ஆகட்டம் நல்லண்ணை தேய்க்கும் போது கொஞ்சம் கண்ணுலையும் ஊத்தி விடுறேன்...எல்லாம் சரியாப்போகும்"

"நாளைக்கே ஞாயித்து கிழமை வராதா ?"

"ஆசைதான்...உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கனும்...சீக்கிரமாக துவட்டிக் கொண்டு வந்து சேருங்க...உங்களுக்கு பிடிச்ச பொங்கல் சாம்பார் செஞ்சு வச்சிருக்கேன்"

*****

"டெய்லி அப்படி என்ன தான் இந்த ஷூவை பண்ணுவிங்களோ...ஒரே நாளில் தூசி அடைஞ்ச கிடக்கு...சீக்கிரமாக காரு வாங்குங்க...வண்டில போவதால் தான் ஷூவெல்லாம் டஸ்ட் ஆகிடுது" ஷூவை பாலிஸ் போட்டுக் கொண்டே சொன்னாள்

"அங்க என்ன தேடுறிங்க ... சட்டை அயர்ன் பண்ணி இங்கே எடுத்து வச்சிருக்கேன்..."

"சாக்ஸ் லூசாகிவிட்டது...இந்த வாரம் வேற வாங்கனும்..."
காலில் மாட்டிவிட்டுக் கொண்டே சொன்னாள்

"மதிய சாப்பட்டுக்கு...சின்ன டப்பாவுல தனியாக தயிர்சாதமும் வச்சிருக்கேன்...நீங்க பாட்டுக்கு திறந்து கூட பார்க்கமல் அப்படியே திருப்பி எடுத்து வந்திடாதிங்க...தயிர் கொஞ்சமாவது தினமும் சேர்த்துக் கொள்ளனும்...அப்பதான் நல்லதாம்"

*********

திருப்தியாக சாப்பிட்டத்தில் மதியம் 10 நிமிடம் அலுவலகத்தில் சிறு குட்டி தூக்கம்

இடையில் போன் செய்து

"என்னங்க...சாப்பாடு பத்துச்சா ? குறைச்சி கிறைச்சி வச்சிட்டேனோன்னு..."

"சும்மா தொல்லை பண்ணாதே...சரியாக இருந்தது..."

"உப்பு காரமெல்லாம் சரியாக இருந்ததா ?"

"நீ போனை வைக்கிறியா ? இல்லையா ?"

***********

மாலை 6:30, வீட்டில் ஷூ ராக்கினில் ஷூவை கழட்டி வைத்துவிட்டு...
உள்ளே சென்று ஷோபாவில் உட்கார

"சுண்டல் செஞ்சு வச்சிருக்கேன்...இஞ்சி டீ இருக்கு......"

சாக்சை கழட்டி விட்டுக் கொண்டே சொல்லிக் கொண்டு இருந்தாள்

*******

"என்னங்க நாய்குட்டி காலில் இருக்கும் சாக்சை கடிச்சு இழுப்பது கூட தெரியாமல் அப்படி என்ன டிவியை பார்த்துக் கொண்டே யோசனை ?"

திடுக்கிட்டேன்...என்னை நினைவுக்கு திருப்பிய வேலைக்குச் சென்ற திரும்பிய மனைவியின் குரல் தான் அது.

'வயிறெரிச்சலை கொட்டிக் கிளறிக் கொண்டிருந்த டிவியை அணைத்து விட்டு...ஹூம்' பெருமூச்சுடன் மனைவியைப் பார்க்க...

"சீக்கிரம் தான் வந்துட்டிங்களே...ஒரு காப்பியாவது போட்டு வச்சிருக்கக் கூடாதா ?"

"சரி சரி ...பையனுக்கு டூயசன் முடிஞ்சிருக்கும்...போய் கூட்டிட்டு வாங்க"

"போகும் போது வீட்டில என்ன இருக்கு இல்லைன்னு பாத்துட்டு கடையில அப்படியே வாங்கிட்டு வந்துடுங்க...சொல்ல மறந்துட்டேன்...இட்லி பொடிக்கு நல்லண்ணை இல்லை.... தீர்ந்துட்டு அதையும் வாங்கிட்டு வந்துடுங்க..."

"சீக்கிரமாக வந்துடுங்க...நீங்க வந்து காய்கறி வெட்டிக் கொடுத்தால் தான் நான் சமைக்கவே ஆரம்பிக்கனும்...குளிச்சிட்டு நான் ரெடியாவதற்குள் வந்துடுங்க"

***

சிறிது நேரத்தில் கைப்பேசியில் அழைத்து.....

"எனக்கு தலைவலிக்கிற மாதிரி இருக்கு...வந்து சமைச்சிடுங்க"

"சரி"

'தாத்தாக்கள்...அப்பா.....புண்ணியம் செஞ்சவங்க....வீட்டுக்குள்ள எந்த வேலையும் செய்யல....இப்ப இருக்கிற பொருளாதார நிலமையை சமாளிக்க...படிச்ச பொண்ணை வீட்டில சமைக்க விடுவதா ? முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் மனைவியை வேலைக்கு அனுப்பும்.. என்னை மாதிரி கணவன் மார்கள் நிலமை ?... ஹூம்... மறந்து இருந்ததலும்...வயித்தெரிச்சலைக் கிளப்பவே... குளிப்பாட்டிவிட்டு...சட்டைக்கு பட்டன் போட்டுவிட்டு, டை கட்டிவிடும் மனைவி... இதையெல்லாம் அவ்வப்போது டிவியில் போடுறானுங்களே...ஹூம்....வைப் இருந்தாலும்...லைப்புல மெனிதிங்க் மிஸ்ஸிங் மிஸ்ஸிங்......'

நினைத்துக் கொண்டே மளிகை சாமன்களை, ஒரு கையிலும், மகனை மறுகையிலும் பிடித்துக் கொண்டு வீட்டை நோக்கி விரைவாக நடந்து வீட்டை அடைந்ததும்,

"அப்பா...ஹூவை கழட்டிவிடு..." மகனின் குறலால் மீண்டும் நினைவிலிருந்து மீண்டேன்

**********
பின்குறிப்பு : இது...சிறுகதை...! தலைப்பு கதைக்கு பொருத்தமானது...பரபரப்புக்காக வைக்கவில்லை. :)

11 ஜூலை, 2008

ஜ்யோவ்ராம் சுந்தருக்கு டிப்ஸ் !

அன்பு நண்பர் சுந்தர்,

மறுமொழி திரட்டி, சூடான இடுகைப் பட்டியலில் செய்திருக்கும் (ஒழுங்குமுறை) மாற்றம் குறித்து தமிழ்மணம் நிர்வாகம் பட்டியல் இட்டிருக்கும் காரணங்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்கிறது. அதாவது தலைப்பு புதிய வாசகர்களுக்கும், இணைய வழி தேடுபவர்களுக்கும் தவறான புரிதலை ஏற்படுத்திவிடும் என்று சொல்லி இருக்கிறார்கள். இடுகையின் உள்ளிடு (Content) பற்றி அவர்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.

உங்களுடைய அந்த கதைகளை ஏற்கனவே எழுதப்பட்டு இருந்தால் அடுத்த பகுதியை அதே தலைப்பில் எப்படி வெளி இடுவது என்ற தயக்கம் இருக்கும், ஒரிஜினல் தலைப்பில் வெட்டு விழுவதால், இனி இப்படி வைக்கலாம்,

மகா கதைகள் - 45(14)
மகா கதைகள் - 45(16)
.
.
.

மகா கதைகள் - 45(99)



:)))))))))))))))

அன்புடன்
கோவி.கண்ணன்

**************

பொழுது போகாமல் உற்சாகம் குன்றியவர்களுக்கு, உற்சாகம் ஏற்படுத்த பதிவின் கீழ் பகுதியில் (Footer Section) ல் 'வாத்து வேட்டை' விளையாட்டை இணைத்திருக்கிறேன். விளையாடிப்பாருங்கள் ! அது குறித்த நான் விடுத்துள்ள எச்சரிக்கையை கவனமாக பின்பற்றுங்கள் :)

10 ஜூலை, 2008

காமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆட்சி !

அடிக்கடி மாறும் தமிழக காங்கிரசின் தலைமை கிரிடம் தற்றோது தங்கபாலுவுக்கு சென்று இருக்கிறது. இவர் ஏற்கனவே இருந்தவர் தான். அப்போது ஏற்படுத்த முடியாத ஒன்றை, தற்போது தலைமை ஏற்றதும் மற்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் அடிகளைப் பின்பற்றி அதே "காமராஜர் ஆட்சி அமைப்போம்" என்ற சூளுரையை மேற்கொண்டு இருக்கிறார்.

தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கனவாக போன பிறகு இவர்கள் அந்த காலக்கனவிலேயே தான் இன்னும் இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் மானில அரசியலுக்குச் சொல்வது போல் தேசிய அரசியலில் தேர்தல் நேரத்தில் நேரு ஆட்சி, இந்திரா ஆட்சி, ராஜீவ் காந்தி ஆட்சி என்றெல்லாம் சொல்லுவதில்லை. தமிழகத்தைப் பொருத்து மறந்தும் கூட ராஜாஜி ஆட்சியை ஏற்படுத்துவோம் என்று சொல்லிவிடமாட்டார்கள். தமிழக காங்கிரசில் ஒரே தலைமையை ஏற்கும் அரசியல் இருந்ததே இல்லை. கோஷ்டி மோதல்கள் வெளிப்படையாக தெரிவதால் இவர்களை ஒன்றுபடுத்திக் காட்டுவதற்காக அவ்வப்போது காமராஜர் பெயர் பயன்படுகிறது மற்றபடி காமராஜர் ஆட்சி அமைப்போம் என்பது தமிழக பாஜக தனித்து நின்று 'ஒரே ஒரு பாரளுமன்ற உறுப்பினரையாவது பெற்றுவிடுவோம்' என்ற நினைப்பிற்கு ஒப்பானது.

எம்ஜிஆர் இருந்த காலம் வரை எம்ஜிஆரும், கலைஞரும் அண்ணாவின் ஆட்சி என்று இருவருமே சொல்லிக் கொண்டு வாக்குக் கேட்டது கூட இதே போன்றது தான். முதல் முறை என்றால் பரவாயில்லை. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிறகும் 'அண்ணாவின்' பெயரைச் சொன்னால் தான் வாக்கு கிடைக்கும் என்று நினைக்கும் அளவுக்கு இவர்களின் ஆட்சியின் கோலத்தை இவர்களே மறைப்பதற்கு பயன்பட்டது. 5 - 6 முறை முதல்வராக இருந்த கலைஞரும் ஒவ்வொரு முறை தேர்தலின் போது 'என்னுடைய பொற்கால ஆட்சி மீண்டும் மலர வாக்கு அளியுங்கள்' என்று சொன்னதே கிடையாது :). இருமுறை முதல்வராக இருந்த ஜெயலலிதா அண்ணா ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அண்ணா நாமம், எம்ஜிஆர்(ருக்கு) நாமம் என்றே சொல்லிவருகிறார். ஜெயலலிதா ஒருமுறையேனும் எனது சொர்கலோக ஆட்சி தமிழகத்தில் மலர வாக்களியுங்கள் என்று சொன்னதே கிடையாது.

இவர்கள் யாவருக்கும் தாம் பரதனைப் போலவும், காமராஜர் அண்ணா ஆகியோர் இராமனைப் போலவும் அவர்களின் செருப்பை அரியணை ஏற்றிவிட்டு ஓரமாக அமர்ந்து கொண்டது ஆட்சிக் கடமையை கண்ணியத்துடன், கட்டுப்பாட்டுடன் செய்தது போல பேசிவருகிறார்கள்.

தம்பேரைச் சொன்னால் விழும் ஓட்டும் விழாது என்ற எண்ணம் தானே ? கேவலமாக ஆட்சி நடத்தி இருக்கிறோம் என்ற எண்ணம் அவர்களுக்கே இருக்கும் போது ஆசை வெட்கம் அறியாமல் அடுத்த முறை தேர்தலுக்கும் ஆசைவருவது நியாமானதா ?

ஒருவேளை ஸ்டாலின் அடுத்த முறை முதல்வர் வேட்பாளராக நின்றால் 'கலைஞரின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர..திமுகவிற்கு வாக்களியுங்கள்' என்பாரோ ?

இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகுத்தான் செத்துப் போன தலைவர்களின் பெயரைச் சொல்லி சொல்லி வாக்கு கேட்பது நிற்குமோ ?

9 ஜூலை, 2008

எனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய மின்னஞ்சல் !

அப்பாவும், மகனும் என்ற தலைப்பில் மே 25, 2006ல் ஒரு கிறுக்கல் கவிதை எழுதி இருந்தேன். அதில் சேர்ப்பதற்கு பொருத்தமான படம் இணையத்தில் தேடிய போது ஒரு படம் அகப்பட்டது. தரவிரக்கம் (Download) செய்யாமல் படத்தை நேரடியாக இணைத்திருந்தேன். இரண்டு ஆண்டுகள் கழித்து அந்த படத்திற்கு உடையவரின் (சொந்தக்காரர்) மனைவி திருமதி லிசா என்பவர் ஒரு மின் அஞ்சல் அனுப்பி இருந்தார். மின் அஞ்சலின் விபரம்,

2008/7/6, LisaBdot :
LisaBdot has left a new comment on your post "அப்பாவும் மகனும் !":

Hi!
I'm hoping someone will be willing to tell me what this page says (and what is that pretty alphabet?).
The image that appears is my work, "Father and Son," a portrait sculpture of my husband reading to our son. It belongs to Youngsville Elementary School in Youngsville, NC. The photographer was Seth Tice-Lewis of Pittsboro, NC.
Thanks,
Lisa B.

அந்த படம் (Father_Son_2.jpg )எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அவர்கள் இணையத்தில் தேடிய போது எனது அந்த பதிவு அவர்களிடம் சிக்கி இருக்கும் என நினைக்கிறேன்.

அவருக்கு அவருடைய படத்தை வைத்து என்ன எழுதி இருக்கிறேன் என்று தெரிந்து கொள்ள ஆவல் மற்றபடி காப்புரிமை பிரச்சனையை அவர் எழுப்பவில்லை என்று புரிந்தது.

அந்த கவிதையை எளிமையான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும், அவரது படத்தைப் பாராட்டியும் மின் அஞ்சல் அனுப்பினேன். திருமதி லிசாவுக்கு தற்பொழுது உடல்நிலை சரியில்லாததால் அவரது கணவர் திரு ஜோயல் எனக்கு அனுப்பிய பதில் மின் அஞ்சலில், எனது கவிதையின் பொருள் அவர்களை கவர்ந்ததாகவும், அவர்களின் பெருமை படுத்துவதாகவும் உணர்வதாக எழுதி இருந்தார்.

Dear Kannan,

I am Lisa's husband, Joel. I am writing because Lisa had surgery on her foot and can sit at the computer only for a short time.

The little boy is our son Ian. He is now 23 years old.

I read your poem and was quite moved. The poem says what I feel with my son.

Lisa and I were honored by your choice of her sculpture for your blog.

You are absolutely correct. It is very suitable.

Please continue to use it and tell your bloggers.

Lisa will write you soon and tell you the history of the sculpture.

Joel & Lisa Wolf

In a message dated 7/6/2008 11:13:54 A.M. Eastern Daylight


*****

அந்த தம்பதிகளின் அனுப்பிய மின் அஞ்சலைப் படிக்கும் போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனை பதிவர்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மேலும் மகிழ்ச்சியடைகிறேன்.



-கோவி.கண்ணன்

7 ஜூலை, 2008

தமிழகத்தில் கோட்சே பேரவை - அத்வானி, இல.கனேசன் ஆசியுடன் !

தேசபக்திக்கு பெயர் 'போன' பாஜக அமைப்பினரின் நல்லாசியுடன் பழனியில் கோட்சே பேரவை தொடங்கப்பட்டுள்ளது. பேரவையின் நோக்கம் நாது'ராம்' கோட்சேவை தேசபக்தராக இந்துக்களுக்கு (திரித்து) புரியவைப்பதாம். இதற்காக நாதுராம் கோட்சே தேச ப(க்)தரா ? அல்லது தேசவிரோதியா ? (அடைப்புக் குறி எனது உபயம்) என்ற தலைப்பில் பேசுவதற்கு தமிழ்நாடு முழுவது இந்து அபிமானிகளை திரட்டுவதற்காக திண்டுக்கல் நகரமெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டு இருப்பதாக நக்கீரனில் சுவரட்டியின் படம் வெளியிட்டு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்கள்.

மகாத்மா காந்தி பாகிஸ்தான் பிரிவினைக்கு அடிகோலியவராம். கோட்சே ஒன்றுபட்ட பரந்த இந்தியாவை (அகண்ட பாரதம்) உருவாக்க முயன்றவராம். இந்த பேரவை நேதாஜியின் பிறந்தநாள் ஜன 23ஆம் தேதி அதை ஒட்டி(க்கொண்டு) ஏற்படுத்தப்பட்டதாக தெரிகிறது. கோட்சே பற்றிய கருத்தரங்கை நவ 15 ஆம் தேதி நடத்தியே தீருவோம் என்று பாஜக அமைப்பினர் தற்கால தேசப்பிதா (காந்தி நகரில் வேட்பாளராக இருக்கிறாரே) அத்வானி மற்றும் இல.கனேசன் ஆகியோரின் ஆசியுடன் கங்கனம் கட்டிக் கொண்டு இருப்பதாக தெரிகிறது.

*****

இதுபோன்ற புதிய தலைவலிகள், இந்து - முஸ்லிம் பதட்டம் ஏற்படுவதற்கான சாத்திய கூறுகளும் கோவை குண்டுவெடிப்பு போன்ற அசம்பாவிதங்களுக்கும் நடைபெறுவதற்கான பிள்ளையார் (ஊர்வல) சுழியாக அமைந்துவிடும். குற்றவாளி என்று நிருபணம் ஆகி தூக்குதண்டனைப் பெற்ற ஒரு தேச துரோகிக்கு தமிழ்நாட்டில் பழனியில் காவடி எடுப்பது தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய விசயம். கோட்சேவுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் ? இதையெல்லாம் இங்கே அரங்கேற்றுவதற்கான அவசியம் என்ன ? எதாவது இந்து -முஸ்லிம் கலவரத்தை உருவாக்கினால் மக்களை இந்து முஸ்லிமாக பிரித்து அரசியல் ஆதயம் காணலாம் என்ற கொடும் பேராசைத் தவிர இதற்கான நோக்கம் எதுவுமில்லை. கோட்சே தேசதுரோகியா, தேச அ(சி)ங்கமா என்று தெரிந்து கொண்டு இனி என்ன ஆகப்போகிறது. 'இந்து' அரசியலால் நாட்டின் பிரிவினை வாதமும் ஒற்றுமை இன்மையும் ஏற்படுமேயன்றி யாதொரு நன்மையும் ஏற்படப் போவதில்லை. இவர்களின் எல்லைக் கடந்த இந்து அரசியலால் ஏற்கனவே நேபாளத்தில் புரட்சி ஏற்பட்டு ஆட்சிமாற்றம் அமைந்தது.

இந்து என்ற உணர்வுக்கு பதிலாக வெறியை ஏற்படுத்தும் இந்த இந்து அமைப்புகளினால் இந்து மதத்திற்கு சிறுமையும், வீழ்ச்சியும் ஏற்படுமேயன்றி பெருமையோ, மேன்மையோ எந்தகாலத்திலும் ஏற்படப் போவதில்லை.

இதுபோன்ற தவறான அமைப்புகள் கொடுக்கும் தைரியத்தால் எதிர்காலத்தில் ஆட்டோ சங்கருக்கும், மணல்மேடு சங்கருக்கும் கூட பேரவை ஏற்படலாம்.

மகாத்மா காந்திக்கு (என்றுமே) வெற்றி (ஜெ) .........!

பரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் !

//இனி கோவி.கண்ணனுக்கு நான் கேட்கும் அறிவியல் பூர்வமான/ அறிவுப் பூர்வமான கேள்வி:

காக்காவை நாம காக்கான்னு கூப்பிடுவதால், காக்கா "கா கா" ன்னு கத்துதா இல்லை, காக்கா "கா கா" ன்னு கத்துறதால, நாம காக்காவை காக்கா ன்னு கூப்பிடுறோமா?

பாக்கியராஜ் பதில் சொல்லமுடியாத இந்தக் கேள்விக்கு அண்ணன் என்ன பதில் சொல்றாருன்னு பார்ப்போம்...

கோவியாரே, விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த கேள்வியைக் கேளுங்கள்..//

என்னை சவாலுக்கு இழுத்திருக்கும் ஜெகதீசன் தம்பி, இதெல்லலம் ஜிஞ்சுபி கேள்வி. இதுக்கு பின்னூட்டம் போடத்தெரியாத அனானிகளே கூட பதில் சொல்லிவிடுவார்கள்.

காக்கா - தமிழில் ஒரு காக்காவுக்கான பெயர்ச் சொல். கன்னடம், தெலுங்கு மொழிகளில் 'காகி' ன்னு சொல்லுவாங்க. உலகத்தில் எந்த நாட்டில் காக்காகளாக இருந்தாலும் (தலையில் விழும் 'அந்த கக்கா'... 'இருந்தாலும்' இல்லை) கா...கா ன்னு தான் கரையும். மத்த நாடுகளிலும் காகா வைக் காக்கா என்று பெயர் வைத்துக் கூப்பிடவில்லை என்பதால் காக்கா 'கா...கா' என்று கரையாமல் இல்லை.

காக்கை மட்டுமல்ல... அனைத்து பறவை இனங்களும், மழலைகளின் அழுகுரலும் மொழிக்கு அப்பாற்பட்டது.

இங்கே விடையை நேரடியாகாவே சொல்லிவிடுகிறேன். காகத்திற்கு தமிழ் உட்பட எந்த மொழியும் தெரியாது. அதற்கு தெரிந்த ஒரே மொழி......'கா...கா' தான். தமிழில் பொருளின் தன்மைக்கு (எடுத்துக்காட்டு நான்கு கால்கள் இருப்பதால் நாற்காலி) ஏற்ப பெயர் சொல் வழங்கி வருவதால் நாம் 'காக்கா' என்கிறோம். உறுதியாக சொல்கிறேன், நாம் காக்கா என்பதால் அது 'கா...கா' என்று கரையவில்லை.

அடுத்து நான் கேள்வி எழுப்ப விரும்பும் பதிவர் பரிசல்காரன் (கே.கிருஷ்ண குமார்). எளிமையான கேள்வி, ஆனால் இதுவரை யாரும் விடை சொல்லவில்லை. இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி பார்த்து இருந்தால் உங்களுக்கே தெரியும். இது பற்றிய நிபந்தனைகளை சின்னத் தம்பி ஜெகதீசன் (பெரிய தம்பி டிபிசிடி) பதிவில் படித்துக் கொள்ளுங்கள்

ஒரே கேள்வி :

தட்டானுக்கு சட்டைப் போட்டால் குட்டைப்பையன் கட்டையால் அடிப்பான் அது என்ன ?

பரிசலாரே...! விரைவில் பதில் சொல்லிவிட்டு யாரிடமாவது அடுத்த (மொக்கை) உடனே கேள்வியைக் கேளுங்கள்.

வயது++ இத்துடன் போதும் - அழகியுடன் நான் !

சிங்கையில், ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் - ஜனவரியில் வெளிநாட்டு கலைக்குழுவினர்கள் பல்வேறு சுற்றுலா தளங்களுக்கு வந்து கலைநிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்து இருப்பார்கள். 2007 ஜெனவரியில் அர்ஜெண்டினா, ப்ரேசில் கலைகுழுவினர் இணைந்து வந்து நிகழ்ச்சி நடத்தினர். பேண்ட் வாத்திய நிகழ்ச்சிகளில் ப்ரேசில் மற்றும் அர்ஜெண்டினா இடுப்பாட்ட அழகிகள் (Belly Dancer) சுழன்று ஆடினார்கள். கண்கள் இமைக்காமல் பார்த்து மயங்கும் அளவுக்கு நடன அசைவுகள். முடிந்ததும் அனைவரும் அவர்களுடன் புகைப்படம் எடுத்தனர். எனக்கும் எடுத்துக் கொள்ள ஆசை. தயக்கம் விட்டு, இடுப்பாட்ட(ம்) அழகியின் அருகில் சென்று நின்றேன். கொஞ்சம் கூச்சமாகத்தான் இருந்தது. பெருமிதமான சிரிப்புடன் அருகில் மிகவும் நெருக்கமாக அந்த அழகி என்னுடன் ஒட்டி நிற்க, நான் கொண்டு சென்றிருந்த நிழல்படக் கருவியின் விசையைத் என் மனைவி தட்ட இந்த நிழற்படம் கிடைத்தது.

உலகெங்கிலும் சிறந்த கலைஞர்கள் கலையை பல்வேறு விதங்களில் வெளிப்படுத்துகிறார்கள். அத்தகைய கலைகள் முதலில் அவர்களது தொழில் பிறகு அவர்களது பண்பாடுகளை சார்ந்தது. நம் ஊரில் குறவன் - குறத்தி நடனத்தின் போது குறத்தியாக ஆடும் பெண்களின் ஜாக்கெட்டில் ரூபாய் நோட்டுகளை குத்தும் பெருசுகளையும், அதை விழிக்கொட்டாமல் பார்த்து ரசிக்கும் இளசுகள், ரெக்கார்ட் டான்ஸ் என்ற பெயரில் சேலம் பகுதி ஊர்களில் அரங்கில் ஆபாசமே முதன்மையாக் இடம்பெறும், நடைபெறும் பண்பாடு உடைய நமக்கு, ப்ரேசில் நடன கலைஞர்களின்ன் இடுப்பு நடனமோ, அந்த கலைஞர்களின் இடுப்பு அசைவுகளோ, அவர்களின் மேடை பண்பாடோ ஒப்பு நோக்க எந்தவிதத்திலும் தரக்குறைவானது அல்ல என்பது என் எண்ணம்.

மேலே உள்ள படத்தைப் பார்த்து உங்களில் யாருக்கும் காதில் புகைவந்தால் நான் பொறுப்பு அல்ல. :)))))))

கீழே உள்ள அசை படம் அவர்கள் அங்கே மேடையில் ஆடியது. அசைபட உதவி உதவி யூடியூப்


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்