பின்பற்றுபவர்கள்

30 ஏப்ரல், 2009

இறை நம்பிக்கை முற்றிலும் தவறா ?

நாத்திக கோட்பாடுகளில் இறைமறுப்பு சேர்ந்ததற்கான காரணம், மதங்கள் காட்டும் இறையின் (செயல்கள் என கட்டமைக்கப்பட்ட) பொய்த் தன்மையும், சடங்குகளின் வழி மனித சமூகத்தைப் பிளவு படுத்தி, ஒன்று சேரவிடாமல் தடுத்து வைத்திருப்பதும் ஆகும், அவை மதங்களில் இருக்கும் பழக்க வழக்கங்கள் என்றும் அதை மதத்தின் தனித்தன்மை அல்லது சிறப்புத்தன்மையாகவே ஆத்திக நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். சிறப்புத்தன்மை என்றால் அது பலராலும் போற்றப்படுவதாக அமைந்திருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக யாகங்கள் செய்வது, இதில் விலை உயர்ந்த பொருள்களை தீயிலிட்டு எரிக்கிறார்கள். பிற மதத்தினருக்கு இவை பொருள்களை வீணாக்குகிறார்கள், அந்தப் பொருள்களையோ அந்த பொருளுக்கு உரிய பணத்தை ஏழை எளியவர்களிடம் கொடுத்தால் அவர்களின் வாழ்க்கைக்கு உதவுமே என்பதாக அவர்களின் எண்ணம் இருக்கும். அதே போல் பிற மதங்களில் புலால் உண்ணுவதும் அவற்றிற்கு காரணாமாக விலங்குகள் படைக்கப்பட்டதே அவை மனிதனுக்கு உணவாகுவதற்குத்தான் என்பார்கள். சைவ வாதிகளைப் பொருத்தவரையில் விலங்கை உண்ணுவது சக உயிர்களுக்குச் செய்யும் தீங்கு என்பது அவர்களின் சித்தாந்தம், ஒரு விலங்கை உருவாக்க முடியாத மனிதனுக்கு கொல்லும் உரிமையை மட்டும் கடவுள் கொடுக்கிறாரா ? என்று கேட்பார்கள். ஏற்றுக் கொள்ளக் கூடியதே.

மனிதன் உணவுக்காக வேட்டையாடியதில் பல பறவைகளின், விலங்குகளின் இனம் முற்றிலுமே அழிந்து போய் இருக்கிறது. (இறைவன் அனுமதித்தி இருந்தால் இவை மீண்டும் உண்டாகி இருக்குமே ?) ஆக சடங்கு வழக்கங்கள் எதுவுமே உயர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. சடங்குகள் அனைத்தும் மதம் தொடர்புடையது, அதை இறை நம்பிக்கையுடன் தொடர்வு படுத்துவது மதங்கள். மற்றபடி சடங்குகளுக்கும் இறை நம்பிக்கைக்கும் யாதொரு நேரடி தொடர்பும் இல்லை என்றே நினைக்கிறேன். உணவு நம்பிக்கையை ஒரு உதாரணத்திற்கு மட்டுமே எடுத்துக் கொண்டேன். மற்றபடி மத நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் பிற மதத்தினரால் போற்றப்பட்டது என்று கொள்ளமுடியாது. அப்படி போற்றி இருந்தால் அதை தத்தமது மதங்களிலும் கொண்டு வந்திருப்பார்கள். ஒராளவு ஒன்றை ஒன்று போற்றிக் கொள்ளாமல் உள்வாங்கிக் கொண்ட விதத்தில் இன்றைய இந்து மதமும், புத்தமதமும் உண்டு. உயிர்பலி, மாற்றுமதக் காழ்ப்பு (மதங்களுக்கிடையே இருப்பது) இவற்றை எதிர்த்து தோன்றிய சித்தாந்தங்களே நாத்திக சித்தாந்தங்கள், ஆத்திகக் கொள்கையை முற்றிலும் மறுக்க வேண்டுமெனில் அவர்களது அடிப்படை அல்லது அதற்கு பாதுகாப்பாக இருக்கும் இறைநம்பிக்கையையும் சேர்த்தே அழித்தால் முடியும் என்கிற வழியில் நாத்திகர்கள் இறை மறுப்பு என்பதை கையில் எடுத்துக் கொண்டார்கள். மற்றபடி தனிமனித இறைநம்பிகையை கொச்சைப்படுத்த வேண்டும், மறுக்க வேண்டும் என்கிற வரட்டுவாதமாகவே நாத்திகம் வலுப்பெற்றதாக நான் கருதவில்லை.

இன்றைய நாத்திகர்கள் இறைமறுப்பையே முதன்மைக் கொள்கையாக நினைக்கிறார்கள், காரணம் புரிதலில் இருக்கும் குழப்பமே. ஆத்திகர்கள் எப்படி இறைநம்பிகையையும் மதத்தையும் பிரித்துப் பார்க்காது குழம்புகிறார்களோ அது போலவே நாத்திகர்கள் எது மதக் கொள்கை எது இறை நம்பிக்கை என்று தெரியாமல், மதநம்பிக்கையையே இறை என்பதாக நினைத்து இறை நம்பிக்கைகளைக் குறைச் சொல்வதை முன்னெடுத்துச் செல்கிறார்கள். ஒரு ஆத்திகரை நோண்டி நோண்டி இறை நம்பிக்கைக் குறித்துக் கேட்டால், கடைசியில் இறைவன் 'ஒருவன்' உண்டு, நான் நம்புகிறேன் என்றே முடித்துக் கொள்வார். ஆனால் நாத்திகர்களுக்கு அந்த பதில் திருப்தி அளிப்பதே இல்லை. நிருபணம் செய்யச் சொல்வார்கள். மனம் தொடர்புடையதை நிருபனம் செய்வது மிகவும் கடினம். பொய் சொல்வதை உண்மை அறியும் கருவி கொண்டு ஓரளவு கண்டு பிடிக்கலாம், ஆனால் ஒருவர் மீது நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பது அவரவர் மனதில் இருக்கும் உணர்வு, அதை நிரூபனம் செய்ய முடியுமா ? இறை நம்பிக்கையை உள் உணர்வு. மன உணர்வு என்று சொன்னால் நாத்திகர்கள் ஏற்க மறுக்கிறார்கள். ஏற்க வேண்டும் என்பது கூட தேவை இல்லை, ஆனால் அதை மதிக்கலாம், தூற்றக் கூடாது. உள் உணர்வு / மன உணர்வு இல்லவே இல்லை என்ற பிடிவாதத்திலேயே இருக்கிறார்கள். கடவுளைக் காட்டு நம்புகிறேன் என்பார்கள்.

பொதுவாக இறைவன் குறித்து மதங்கள் சொல்வதை விட்டுப்பார்த்தால் பல்வேறு இறையறிஞர்கள் இறைவன் குறித்த சித்தாந்தங்களில் இறைவன் குணங்களின் கடல் அல்லது பெருங்கடல் என்றே சொல்லுவார்கள், எண்குணத்தான், முப்பத்திரண்டு குணத்தான், பதினாறு குணத்தான் என்று ஒவ்வொருவரும் சிலவற்றைச் சொல்லி இருக்கிறார்கள். அன்பு, பரிவு, கருணை, வீரம், மகிழ்ச்சி, கொடை, ஒத்துழைப்பு, பாசம் போன்ற நல்லெண்ணங்கள் குறைவின்றி நிறைந்தே இருப்பதே இறைவன், புலன்களால் பார்க்க முடியாத பேரொளி, என்றே சொல்லுவார்கள். முற்றிலும் மன உளைச்சலில் இருக்கும் இறை நம்பிக்கையாளர் இறைவன் பால் மனதைத் செலுத்துவதால் இறைவனுக்கு இருக்கும் குணங்களின் சக்தியை அவரும் பெறுகிறார். மன உளைச்சலில் இருந்து விடுபடுகிறார், இவை இறைவழிபாட்டுத் தளங்களுக்குச் செல்வதால் கிடைக்கும் பயன் என்கிறார்கள். கோவிலில் இறைவன் இல்லாவிட்டாலும் மன எண்ணங்களை ஒரிடத்தே செலுத்தி குவிப்பதற்கு வாய்பான, ஏதுவான இடம் (place for getting or filling inner energy) என்று சொல்கிறார்கள்.

ஆத்திகன் நல்லவனா ? கெட்டவனா ? இறை நம்பிக்கையால் ஆத்திகன் குறைவாக தவறு செய்கிறானா ? அல்லது தவறே செய்யவில்லையா ? என்ற கேள்விக்கு எப்போதும் நான் சொல்லும் பதில் தனிமனித தவறுகள், செயல்கள் உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்படும் முடிவு, எனவே அதை ஆத்திகன், நாத்திகன் என்று பார்க்க முடியாது. தனிப்பட்ட ஒரு மனிதனின் குணம் ஆத்திகம் / நாத்திகத்தால் தீர்மாணிக்கப்படுவதும் இல்லை. மனித நேயம் இருசாரருக்குமே உண்டு. நாத்திகனுக்கு மதவெறி இல்லாததால் மனித நேயம் கூடுதலாகவே உண்டு. ஆனால் மற்ற குணங்களில் இரு சாரரும் ஒன்று போலத்தான் இருக்கிறார்கள்.

நாத்திகன் மன உளைச்சலுக்கு நேரிட்டால் அதிலிருந்து விடுபட உளவியல் தேவைப்படுகிறது, அமைதியான இடம் தேடி உட்கார்ந்து, அல்லது தன்னிடம் பரிவு காட்டுபவர்களிம் பேசி அதன் பிறகே மன உளைச்சல் குறைந்து பழைய நிலையை அடைகிறான். ஆனால் ஒரு ஆத்திகன் மன உளைச்சல் அடைந்தால் இறை நம்பிக்கை மூலம் அதை உடனேயே பெற்றிவிட முடியும். அப்படியும் முடியாமல் போனால், கடவுள் செயல், நடப்பது நடந்துவிட்டது என்று தேற்றிக் கொள்வான். ஒரு நாத்திகனால் இவ்வளவு விரைவாக மன உளைச்சலில் இருந்து விடுபட முடியாது. இந்த ஒரு காரணத்தினால் இறை நம்பிக்கை என்பது தனிமனித மன வீழ்ச்சியை விரைவில் சரி செய்யக் கூடியது என்று உயர்வாகவே சொல்ல முடியும். மற்றபடி இறைக் கொள்கைகள் எதையும் போற்றவேண்டியதோ, இறைவனை என்றும் வணங்குங்கள், துதிபாடுங்கள், அவனருள் பெறுங்கள் ஆகிய ஆத்திக நம்பிக்கைகள் வெறும் மதப்பிரச்சாரம், இறை அச்சமாகவே தான் எடுத்துக் கொள்ள முடியும். நாத்திகர்கள் ஆத்திகர்களின் இறை நம்பிக்கைக் குறித்து குறைச் சொல்லும் முன் குறைச் சொல்வது மத நம்பிக்கையையா, இறை நம்பிக்கையையா என்கிற தெளிவு இருக்க வேண்டும், மத நம்பிக்கை என்றால் சரிதான், எப்போதும் எதிர்க்கக் கூடியதே. உதாரணத்திற்கு இராமர் பெயரைச் சொல்லி இராம் பாலம் என்று உளறுவது, இராமர் பிறந்து நகரம், மசூடி இடிப்பு ஆகியவை மதம் தொடர்புடையது. நல்ல தெளிந்த இறை நம்பிக்கை உடையோர் வழிபாட்டு இடங்களுக்குக் கூட செல்வது கிடையாது. இந்த தெளிவு இல்லாமல் 'வழிபாட்டுத் தளங்களுக்குச் செல்வதும், இறை நம்பிக்கையும் முட்டாள் தனம்' என்பது நாத்திக முட்டாள் தனம்.

****

மீண்டும் பத்து நாட்கள் சென்று சந்திப்போம் ! தற்காலிக விடை பெறுகிறேன்

29 ஏப்ரல், 2009

சுத்தம், சுகாதாரம், சுகம், சிந்தனை !

'சுத்த' தமிழில் பேசிப் பழகுவோம், அது தான் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் என்று சிலர் சொல்லுவார்கள், எழுதுவார்கள். அவர்களின் தமிழ் பற்று பற்றி பாராட்டினாலும் அடிப்படையே கோணலாக இருக்கிறதே என்று உடனே எண்ணுவேன். ஏனெனில் சுத்தம் என்பது தமிழ் சொல்லே அல்ல, புழக்கத்தினால் மிகுதியாக புழங்கும் 'சுத்த' என்கிற வடமொழிச் சொல்லின் தமிழ்வடிவம் அது. 'சுத்த சங்கல்பம்' என்று வடமொழியில் இருக்கும் சொல் வழக்கிற்குப் பொருள் 'தூய எண்ணங்கள்' என்று பொருள். தூய என்ற தமிழ்ச் சொல்லை மறந்துவிட்டு அங்கெல்லாம் சுத்தம் என்று எழுதி வருகிறோம். சுத்தம் ! :)

ஆரம்ப சுகாதர நிலையம் - என்று அரசாங்கத்தில் மருத்துவம் சார்ந்த ஒரு அலுவலகத்தின் பெயர் உண்டு. தமிழ் படுத்துகிறேன் என்கிற பேரில் பிற மொழிச் சொற்களுக்கு தமிழ்ச் சொல் வழக்கில் இருக்கிறதா என்று பார்க்காமலும், சோம்பலினாலும் பிற மொழிச் சொற்கள் பலவற்றை அப்படியே தமிழ் எழுத்தில் எழுதி தமிழ் சொல்லாக வழங்கினர். ஆரம்பம் என்பது தமிழ் சொல் அல்ல. தொடக்கம் என்பதே மிகச் சரியான தமிழ்ச் சொல், ஆரம்ப கல்வி என்பதை தொடக்கக் கல்வி எனலாம், அதே போல் சுகாதாரம் என்பதற்கு உடல் நலம் அல்லது எளிமையாக நலம் என்று சொல்வதால் யாதொரு குறையும் இல்லை. ஆரம்ப சுகாதார நிலையம் என்பதை தொடக்க நல வாரியம் அல்லது தொடக்க/முதல்நிலை நல நிலையம் என்று சொல்லலாம்.

சுகம் - சுஹ் என்கிற வடச் சொல்லின் தமிழ்வடிவம், சுகமாக இருக்கிறீர்களா ? என்று நலம் கேட்பது நம் வழக்கம், சிலர் நலம் விசாரிப்பது, விஜாரிப்பது என்றும் சொல்லுவார்கள், விசாரணை, விசாரி, விஜாரி ஆகியவை வட சொற்கள் தான், விசாரணை என்றால் அது பற்றிக் கேட்பது அல்லது கேட்பது என்று சொல்லலாம். 'வழக்கு விசாராணை நடைபெறுகிறது' என்பதை வழக்கு கேட்டல்/ கேட்பது நடைபெருகிறது என்று சொல்லலாம். சுகம் இருக்கும் இடத்தில் நலம் இருப்பதே நலம். சில இடங்களில் சுகம் என்கிற சொல்லை இனிமைக்காகவும் பயன்படுவது வழக்கம், சிலர் சுகமான தூக்கம், சுகமான குளியல், சுகமான பாட்டு என்பார்கள், இனிமை / நல் / நல்ல வரும் இடத்தில் சுகத்தைப் பயன்படுத்தி வருகிறோம். நல்தூக்கம், நல்லகுளியல், நல்ல பாட்டு என்று சொல்வதில் பொருளேதும் மாறாது

மொழிக் கலப்பில் பெயர் சொற்கள் சேருவதும் குறைதான் என்றாலும் அதை எளிதில் களையலாம், ஏனெனில் பெயர்ச் சொற்கள் எங்கிருந்து வந்தது என்பதை ஓரளவேனும் அறிந்து களைய முடியும், ஆனால் வினைச் சொற்களில் பிறமொழி கலந்தால் அது பேச்சு வழக்காகிவிடும், 'என்ன ஒரே சிந்தனையாக இருக்கிறீர்கள் ?', 'சிந்தித்து பதில் சொல்லுங்க', அப்படி 'என்ன தான் யோசனையோ ?' பார்பதற்கு தூய தமிழ் போல் இருந்தாலும், எண்ணங்களில் பிற மொழிச் சொற்கள் கலந்தால் அவை தமிழ் போலவே தோன்று மென்பதற்கான காட்டு அவைகள். 'என்ன எதையோ எண்ணிக் கொண்டே இருக்கிறீர்கள் ?', 'நன்றாக எண்ணி பதில் சொல்லுங்கள்', 'அப்படி என்ன தான் எண்ணங்களோ ?' என்று 'எண்ணங்கள் இருக்க வேண்டிய இடத்தில் 'சிந்தனையைப்' புதைத்துவிட்டோம். சிந்தை, சிந்தனை ஆகிவை வட சொற்கள், அவை நம் எண்ணத்திலும் கலந்ததால் எண்ணி இருக்க வேண்டிய இடத்தில் 'சிந்தனை' இருக்கிறது.

அப்படி 'எண்ணி'யிருக்காமல் வள்ளுவரும் 'சிந்தனை' செய்திருந்தால்

சிந்தித்து துணிக கருமம், சிந்தித்தபின்
சிந்திப்போம் என்பது இழுக்கு - என்றிருப்பார்.

:)

தமிழ்மணத்துக்கு நன்றி !



முன்பு எடுத்ததற்கு தெளிவான காரணம் தெரியவில்லை, மீண்டும் வந்ததற்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி !

28 ஏப்ரல், 2009

கலைமாமணி விருதை வீசினார் கவிஞர் இன்குலாப் !

ஈழ விவாகரத்தில் ஈழத் தமிழர்கள் பற்றிய கருத்தில் இஸ்லாமியர்களில் சிலர், விடுதலைப் புலிகளுக்கும் - இலங்கை இஸ்லாமியர்களுக்கும் இருந்த கருத்து வேறுபாடுகளைக் குறிப்பிட்டு, விடுதலைப் புலிகளால், இலங்கை இஸ்லாமியர்கள் இடம் பெயர நேரிட்டதாகவும், இன்னல்கள் அடைந்ததாகவும் சொல்லி காங்கிரஸ் நிலைப்பாட்டுடன் இருந்தனர், அதாவது ஈழத்தமிழ்ர்கள் மீது இரக்கப்படுகிறோம், விடுதலைப் புலிகள் அழிவதைப் பற்றி கவலை இல்லை என்பதாக கருத்து தெரிவித்திருந்தனர்.

இஸ்லாமியர்களான இயக்குனர் அமீர் போன்றவர்கள் மிகவும் உரக்க குரல் கொடுத்து சிறை வரை சென்றனர். மேலும் ஒரு இஸ்லாமியர், கவிஞர் திரு இன்குலாப் தனக்குக் கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதை ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு ஆதரவான காங்கிரசையும் கூட்டணியில் இருந்து கொண்டே அதை தடுக்கும்படி வலியுறுத்தாமல் இருந்த திமுகவிற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் திருப்பி அனுப்பி இருக்கிறார்.

தமிழருவி மணியன் போன்ற தமிழுணர்வு மிக்கவர்கள் கட்சிக்காரன் என்கிற அடையாளத்தை விட எப்போதும் நிலையான தமிழன் / தமிழின உணர்வே மேலானது, உண்மையானது, உணர்வு பூர்வமானது என்று வெளிக்காட்டி தமிழின உணர்வாளர்களால் போற்றப்படுகிறார்கள்.

அந்த வரிசையில் கவிஞர் இன்குலாப் ஐயாவின் செயலும் மிகவும் போற்றத் தக்கது.

***
இனப் படுகொலை: கலைமாமணியை திருப்பி அனுப்பினார் இன்குலாப்!

சென்னை: ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து அது தனக்கு அளித்த கலைமாமணி விருதை கவிஞர் இன்குலாப் திருப்பி அனுப்பி விட்டார்.

கடந்த 2006ம் ஆண்டு இன்குலாப்புக்கு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.

இந்த விருதை தற்போது தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் இன்குலாப். இதுகுறித்து அவர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகின்றேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கின்றது.

வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக்கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற்கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணாநோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான்.

1965 இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி இரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான்.

இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ். மண்ணில் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத் தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர் நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணாநோன்பை மேற்கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும்.

தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான்.

இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன.

இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த் தியாகங்களைப் பொருட்படுத்தாத போது, ராஜபக்சே அளவிலான சிங்கள பாசிச அரசு, கலைஞரின் உண்ணாநோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா?

கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும்.

இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது.

இந்த வகையில் 2006 ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட 'கலைமாமணி' விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.

அதனால் இம்மடலுடன் எனக்கு அளிக்கப்பட்ட 'கலைமாமணி' விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் திருப்பி அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்குலாப்.

தகவல் : நன்றி தட்ஸ்தமிழ்

தேசிய பாது'காப்பு' சட்டமும், ஆட்சியாளர்களின் குறுமதியும் !

இறையாண்மையைக் காக்கிறோம் என்கிற பெயரில் கடுமையான சட்டங்களை இயற்றுகிறார்கள். ஆனால் அந்த சட்டங்களை பயன்படுத்தும் தேர்தெடுக்கப்படும் அரசியில் கட்சிகளின் அரசு, அதைத் தங்களின் அரசியல் நோக்கிலேயே தன்னலத்திற்காக பயன்படுத்துகின்றன.

பொடா சட்டம், தடா சட்டம் போன்றவை இந்த வகைதான். தடா சட்டம் என்ற ஒரு சட்டம் முன்பு இருந்தது, அதைக் கொச்சைப் படுத்தியவர் ஜெ. முன்பு சு.சாமிக்கும் ஜெ-வுக்கும் இடையிலான கடுமையான முட்டல் மோதல்கள் இருந்த நேரம் தடா சட்டம் என்கிற ஒரு சட்டம் இருந்தது, அதில் தீவிரவாதிகள் என்று ஐயப்படுபவர்களை விசாரணையின்றி எவ்வளவு காலம் வேண்டுமானாலும் வைக்கலாம். அதில் சிக்கிய கைதி ஒருவரின் புகைப்படத்தை சு.சுவாமியுடன் இணைத்து, 'இதோ பாருங்கள், சு.ஸ்வாமி தடா இராவியுடன் போஸ் கொடுக்கிறார், எனவே சு.ஸ்வாமியை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். தடா இரவி - சு.ஸ்வாமி புகைப்பட இணைப்புக்கு தி.க ஐயாவே அறிவுறுத்தல் கொடுத்தார் என்று அப்போது பரவாலாகப் பேசப்பட்டது. பிறகு தடா புகைப்படம் தடவியல் ஆய்வாளர்களால் போலியானது என்று சொல்லப் பட்ட பிறகு அடங்கியது. இணையப் பக்கங்களில் தேடிப்பார்த்தால் தடா ரவி - சு.ஸ்வாமி இணைந்த போலி புகைப்படம் கிடைக்கலாம். சு.ஸ்வாமி நல்லவர் வல்லவர் என்பதற்காக இதைச் சொல்லவில்லை. தடா சட்டத்தை எப்படி பயன்படுத்த முயன்றார்கள் என்பதற்காகச் சுட்டினேன்.

அடுத்து பொடா சட்டம் அதில் வைகோ விடுதலைப் புலிகளை ஆதரித்தார் என்ற குற்றச் சாட்டில் ஓராண்டுக்கும் மேலாக வைக்கப்பட்டார், பிறகு வழக்கு போதிய ஆதராமின்றியும், தீவிரவாதத்திற்கு இந்தியாவில் இடம் கொடுக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பேசவில்லை என்பதால் பிசுபிசுத்தது, வைகோவும் வெளியே வந்தார். அதே காலகட்டத்தில் வைகோ மட்டுமல்ல நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீதும், 17 வயது சிறுவன் மீதும் கூட பொடா சட்டம் பாய்ச்சப்பட்டது. சிறுவன் மீது பாய்ச்சப்பட்ட பொடாவிற்கு நீதிமன்றத்தால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு சாதாரண சிறுவர் குற்ற வழக்காக மாற்றப்பட்டது. நக்கீரன் கோபால் செய்த குற்றம் ? வீரப்பனைப் பேட்டியெடுத்ததும், அதில் ஜெ பற்றிய கடுமையான விமர்சனங்கள் இருந்ததும், தொடர்ந்து அதிமுக, ஜெ, சசிகலா பற்றி நக்கீரனில் எழுதி வந்ததும் தான் காரணம். மற்றபடி நக்கீரனை பொடாவில் போட எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. நக்கீரன் கோபால் தனது வாதங்களை வைத்துவிட்டு எளிதாக வெளியே வந்தார்.

தற்பொழுது சீமான், கொளத்தூர் மணி போன்றவர்கள் விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் என்ற அதே குற்றச் சாட்டில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்கள். சீமான் வெற்றிகரமாக வைகோ பாணியில் வெளியே வந்துவிட்டார். கொளத்தூர் மணியும் வெளியே வருவார்.

ஆட்சியாளர்களுக்கு இது நிற்கும் வழக்கு இல்லை என்று தெரியாதா ? தெரியும். ஆனால் இந்த வழக்கில் சிக்க வைப்பதன் மூலம் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தொடர்புடையவர்கள் என்று குற்றம் சுமத்தப்படுபவர்களை உள்ளே வைத்து காழ்புணர்வை தீர்த்துக் கொள்கிறார்கள். சீமான் போன்றோரை உள்ளே வைப்பதன் மூலம் அவர் மூலம் எடுத்துச் சொல்லப்படும் விழிப்புணர்வை குறுகிய காலத்திற்கு தடுக்க முடியும் என்று நம்புகிறார்கள், அதன் படியே நடக்கிறார்கள். மற்றபடி இது செல்லாத வழக்கு என்பது அவர்களுக்கும் தெரியும். ஆனால் இதில் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்த வித இழப்பீடும் கிடைக்கவில்லை என்பதையும் சட்ட இயற்றுபவர்கள் பார்ப்பது இல்லை. இது போன்ற சட்டங்களினால் ஒருவர் பாதிக்கப்பட்டு அது அரசியல் காழ்புணர்வினால் எடுத்த பழிவாங்கள் நடவடிக்கை என்று குற்றவாளி உறுதிப்படுத்தும் (நிரூபணம்) போது அந்த சட்டத்தில் முகாந்திரமின்றி அரசியல் நோக்கிற்காக கைது செய்யப்பட்டதற்கு தக்கதொரு இழப்பீடு கொடுக்கப் படவேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் சட்ட அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்ற ஒரு பிரிவுகளும் இருந்தால், இது போன்று பழிவாங்கும் கைது நடவெடிக்கைகள் குறையும்.

ஒரு சில சட்டங்களை இயற்றும் போது பலர் அதற்கு எதிராக திரும்பப் பெறும் படி போராடுவது எதற்கென்றே தற்பொழுது தான் புரிகிறது. நேர்மையற்ற அரசியல் ஆட்சியாளர்களின் கையில் சட்டம் அவர்களது எதிரிகளைப் பழிவாங்கும் இன்னொரு ஆயுதமாகவே செயல்படுகிறது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கூட்டணி வெற்றிப் பாதுகாப்புக்காக முறைகேடாக பயன்படுத்துவது அரசியலில் மாபெரும் அசிங்கம், அதை மக்கள் ஆட்சி (ஜெனநாயக) படுகொலை என்றும் வகைப்படுத்தலாம்.

27 ஏப்ரல், 2009

சோ இராமஸ்வாமியின் ஹிந்து மஹா சமுத்திரம் - 'நூல் விமர்சனம்' !

அண்மையில் சிங்கை நூலகத்தில் சோ இராமஸ்வாமி எழுதிய ஹிந்து மஹா சமுத்திரம் என்னும் நூல் வாசிக்கக் கிடைத்தது. ஹிந்துமதம் பற்றி எதேனும் புதிய செய்திகளைச் சொல்லுவாரோ என்று எதிர்பார்ப்பில் படித்த எனக்கு ஏமாற்றமே. வேதகாலத்தில் தொடங்கி இன்று வரை நடக்கும் வருணாசிரம (அ)தருமத்தை தேவைப்படும் இடங்களில் தாங்கிப் பிடித்து இருக்கிறார். இதற்கு ஆதரவாக அதிலிருக்கும் ஸ்லோகங்களுக்கு இவரே கண்டிபிடித்த கற்பனைகளை சேர்த்து மொழுகி இருக்கிறார். ஒரு பகுதியில் வேதகாலத்தில் விலங்குகள் எதையும் பலி இடவில்லை, ஸ்லோகங்களில் உள்ள பலியிட்டதாக சொல்லி இருக்கும் பெயர் சொற்களான ஆஜ என்றால் ஆடு இல்லை, கோ என்றால் பசு இல்லை, அஸ்வம் என்றால் குதிரை இல்லை என்கிறார். அவை பலியிடப் பட்டதாகச் சொல்வது ஒரு குறியீடுதான் என்கிறார். இன்னொரு பக்கத்தில் ஒருவன் தனக்கு விருப்பமானவற்றை இறைவனுக்குக் கொடுப்பான் எனவே மிருகங்களை உண்பவர்கள் மிருகங்களை பலி இட்டத்தில் தவறு ஒன்று இருப்பதாக தெரியவில்லை என்று முன்னுக்கு பின் முரணாக எழுதி இருக்கிறார்.

ஏகத்துவம் அதாவது பிற மதங்களில் இருக்கும் ஒற்றை இறை நம்பிக்கையே இந்து மதத்தில் இருப்பதாகவும் அதைத்தான் அத்வைதம் வழியுறுத்துவதாகவும், ஆதிஷங்கரர் வழியுறுத்திய அத்வைதம் ஒற்றை இறைத்தன்மையைப் போற்றுவதாகவும் கூறுகிறார். எனக்குத் தெரிந்த்து அத்வைதம் ஒற்றைக் கடவுள் கொள்கையெல்லாம் கொண்டிருக்கவில்லை, நீங்களும் நானும், பாம்பும், பல்லியும், மலமும், மூத்திரமும் ஒன்றே என்கிறது. இதுதான் அந்த ஒற்றைத் தன்மை, இது இறைவன் என்கிற தனித்தன்மையை போற்றுவதாக எப்படிக் கொள்வது ? ஆதிசங்கரின் அத்வைதம் என்பது பெளத்தக் கொள்கையில் சற்று ஒட்டுப் போட்டு புதிய கொள்கைகளாக காட்ட முயன்றது மட்டுமே, புத்தர் கடவுள் எதையும் காட்டவில்லை, அவர் சொன்னது அனைத்தும் சூனியமே சூனியத்தைத் தவிர எதுவுமே இல்லை, சூனியத்தில் சூனியமாக ஒடுங்குவதே பரிநிர்வாண நிலை என்றார், அதன் பிறகு பிறப்புக் கிடையாது என்றார். ஆதிசங்கரர் அதைச் சற்று மாற்றி அனைத்தும் பிரம்மமே, பிரம்மத்தில் ஒடுங்குவதே லட்சியம் என்றும் அதன் பிறகு பிறவி கிடையாது என்றார். இரண்டிற்கும் உள்ள வேற்றுமைகளை எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் வெற்று குடுவை ஒன்றில் எதுவும் இல்லை என்பது புத்த தத்துவும், அதில் காற்று இருக்கிறது என்பது ஆதிசங்கரரின் தத்துவம் அவ்வளவுதான் வேறுபாடு.



உலகத்தின் ஆதிமதம் ஹிந்து என்பதை அழுத்தம் கொடுத்து சொல்ல முயல்கிறார் சோ. ஆதிமதம் என்று எதுவும் கிடையாது, அந்தந்த நாடுகளில் வழங்கப்பட்ட மதம் என்று தான் சொல்ல முடியும். ஆதிமதம் என்றால் பிற மதத்திற்கு இடையில் இருக்கும் தொடர்பைச் சொல்ல வேண்டும். சோ இராமஸ்வாமியின் நூலில் அதுபோல் எதுவும் சொல்லப்படவில்லை. எனக்குத் தெரிந்து பெளத்தம், சமணம் மதங்களுக்கு மட்டுமே ஹிந்து மதத்துடன் ஓரளவு தொடர்பு இருக்கிறது மற்றபடி உலக மதங்கள் பலவற்றுடனான ஹிந்துமதத் தொடர்பு என்பது தேடினாலும் கிடைக்காது.

உருவ வழிபாடு ஆகியவை கிழானவை என்று அவர் கூறினாலும் வைதீகர்களின் பிழைப்பைப் கெடுக்கக் கூடாது அதே சமயம் ஆதிசங்கரரின் அத்வைதத்தையும் போற்ற வேண்டும் என்கிற இரட்டை சிந்தனையில் உருவ வழிபாடு கிழானது தான் என்றாலும் நம்மைப் போல் சாதாரணவர்களுக்கு அது தான் எளியவழி ஞானிகளுக்குத் தான் அத்வைதம் சிறந்த வழி, அதுவே நேரான வழியும் என்கிறார். சோ இராமஸ்வாமியின் 'ஹிந்து மஹா சமுத்திரத்தில்' நாட்டார் தெய்வ வழிபாடு, அதாவது மதுரை வீரன், முனி, இருளன், ஐயனார், மாரியம்மன் குறித்து எந்த ஒரு பத்தியையும் பார்க்க முடியவில்லை. அதையெல்லாம் ஹிந்து மதத்தில் இருந்து நீக்கிவிட்டாரா என்று தெரியவில்லை.

நாத்திகம் என்பது ஈரோட்டு இராமஸ்வாமியால் முன்னெடுக்கப்பட்டது அல்ல, வேதகாலத்திலேயே சார்வாகம் என்ற பெயரில் ஹிந்து மதத்தில் ஓர் அங்கமாக நாத்திகம் இருந்தது தான் என்கிறார், பிறகு ஏன் நாத்திகம் பற்றி அங்கங்கே தூற்றுகிறார் என்றும் தெரியவில்லை. இவர் சொல்வது என்ன வென்றால் நாத்திகம் உயர்ந்தது என்றாலும் ஈரோட்டு இராமஸ்வாமிக்கு அந்த பெருமை கூடாது என்பதே. ஸோம பானம் மதுபானம் இல்லை ஆனால் சுரா பானம் தான் மது பானம் என்கிறார். சுரர் என்றால் தேவர்கள். அவர்கள் குடிக்கும் பானம் மதுபானம் என்பதை மறைமுகமாக தயக்கத்துடன் சொல்கிறார் என்பதாக எடுத்துக் கொண்டேன்.

ஹிந்து மதம் சிறந்த மதம் அதை வெளிநாட்டினர் ஆய்ந்து ஆய்ந்து தவறான தகவல்களைப் பரப்பிவிட்டார்கள் என்கிறார். தீண்டாமை பாவச் செயல் என்று ஒரு வரியைக் கூட எழுதி இருக்கவில்லை அவர். பிராமணன் என்பது நிலை, அது சாதித் தொடர்புடையது கிடையாது, சூத்திரன் பிராமணன் நிலைக்குத் உயர்வதும், பிரமணன் சூத்திர நிலைக்கு உயர்வதும் அவரவர் செயல்களால் தீர்மாணிக்கப்படுவதே அன்றி அவை சாதி குறித்த அடையாளம் இல்லை என்கிறார். சரி தான். ஆனால் இன்றைய பார்பனர்களின் செயலை வைத்துப் பார்த்தால் ஒருவரும் தன்னை பிராமணர் என்று கூற தகுதியற்றவர் என்பதை சோ மறந்தும் கூட அந்த புத்தகத்தில் பதிக்கவில்லை. இன்றைய பார்பனர்களிலும் கருப்பு நிறத்தினர் இருப்பதற்கு அன்றை சூத்திரனில் சிலர் பிரமணராக உயர்ந்து அவர்களுடைய வாரிசுகளாக தன்னை பிராமணர்களாகக் கூறிக் கொள்ளும் பார்பனர்களும் இருக்கிறார்கள் என்றாவது சொல்லி இருக்கலாம். அதாவது பிராமணர்களில் பார்பனர் உண்டு, பார்பனர் அனைவருமே பிராமணர் இல்லை என்று சொல்லி இருக்கலாம்.

மொத்தத்தில் சோ இராமஸ்வாமியின் இந்த நூள் ஒற்றைத் தன்மை உள்ள இறைவழிபாடு ஹிந்துமதத்தில் இருக்கிறது என்பதை நிறுவும் ஒரு முயற்சியாகப் பார்த்தேன். நல்லது தான் கடைசியில் ஒரே ஒரு வரி, ஈஸ்வரன், அல்லா ஜெஹோவை ஆகிய பெயர்களை ஹிந்து ஒரே இறைவனாகத்தான் பார்க்கிறான் என்று சொல்லி இருக்கலாம், சோ இராமஸ்வாமி சார்ந்திருக்கும் இயக்கம், அவரது பார்பனிய ஆதரவு அதைச் சொல்லுமா ? கண்டிப்பாக சொல்ல முடியாது. இந்த நூல் ஹிந்து மதம் புனிதமானது என்ற அளவில் ஹிந்து ஆதரவாளர்களுக்கு அளித்தால் அவர்களை அதைப் படித்துவிட்டு, ஹிந்து மதத்தில் இருக்கும் அபத்தங்களை தெய்வீகம் என்று ஒருவேளை போற்றினாலும் போற்றலாம். மற்றபடி ஒரு நாத்திகன் படித்தால் வரிக்கு வரி கண்டனம் தெரிவிக்கும் படி பழமைவாத சிந்தனைகள் நிறைந்து காணப்படுகிறது.

வேதம், உபநிடதம், ஸ்மிருதி இதுபற்றிய சொல்லாடல்களை அறிந்து கொள்ள விரும்போவர் படிக்கலாம். ஹிந்து மதத்தில் விழுந்திருக்கும் குப்பைகளை மறுசுழற்ச்சி செய்து தந்திருக்கிறார். ஹிந்து மஹாசமுத்திரம் உப்பு நீர், பழமைவாத உவர்ப்பு ! கண்ணதாசனின் அர்தமுள்ள இந்து மதத்தின் மற்றுமொறு வைதீக வெர்சன் (பதிப்பு, பாதிப்பு) !

நூலை முழுமையாக வாசித்ததும், பழமை வாதங்களுக்கு புதிய முலாம் பூசி, இது போன்று பழைய புராண ஸ்லோகங்களுக்கு கற்பனை பொருள் கூறியும், இட்டுக்கதைகளையும் கூறியே இந்திய சமய நம்பிக்கைகளை பார்பனிய சித்தாந்தங்களிலும், வேதமயமாக்க முயன்றும் சோ இராமஸ்வாமி போன்றவர்கள் கெடுத்துவிட்டார்கள் என்ற பெருமூச்சே வந்தது.

Book Title : ஹிந்து மஹா சமுத்திரம்
Author : சோ
Price : RS 175 /-

என் ஓட்டும் ஜெ-வுக்கே !

தேர்தல் நெருங்க யாருக்கு ஓட்டு என்கிற முடிவை எடுக்க வேண்டிய காலகட்டத்திற்குள் வந்தாச்சு. காங்கிரசுதான் தமிழர் எதிரி (கர்நாடகம் - தமிழகம் காவேரிப் பிணக்குகள், ஒக்கனேக்கல் பிணக்குகள், இராமேஸ்வரம் மீனவர் கொல்லப்படுவது ஆகியவற்றை இதுவரை காங்கிரசுவாதிகள் கண்டுகொண்டதில்லை, கூடுதலாக ஈழவிடுதலையை இராசீவ் காந்தி கொலையை சாக்கிட்டு நசுக்குவது) எனவே காங்கிரசை தேர்தலில் வீழ்த்துவதே சரியான முடிவு என்கின்றனர். கூடவே கருணாநிதியின் மீது இருக்கும் பழைய பாசம் காரணமாக திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்கின்றனர். எது லாஜிக் படி எப்படி சரி என்று கேட்டால், தேர்தலுக்குப் பிறகு ஜெ எப்படி வேண்டுமானாலும் மாறுவாராம், காங்கிரசுக்கே ஆதரவு கொடுப்பாராம். இதே நிலையை திமுகவும் எடுத்திருக்கிறது, மதவாதக் கட்சி மதவாதக் கட்சி என்று பாஜக பற்றி கருத்துக் கூறி வந்த திமுக, பாஜக தமிழகம் தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் வளர்ந்து ஏற்கனவே பிரதமர் பதவியில் அமர்ந்த பிறகு ஜெவினால் கவிழ்க்கப்பட்ட பாஜக அரசை காப்பாற்றி பதவி பெற வேண்டும் என்ற நோக்கில் திமுகவும் கொள்கைக்கு எதிராக, தொண்டர்களின் எதிர்ப்புக்கு எதிராக, திகவின் எதிர்ப்புக்கும் எதிராக பாஜகவுடன் கூட்டணி அமைத்தது.

ஐந்தாண்டு ஆட்சிக்கு பிறகு இந்திய அளவில் பாஜக செல்வாக்கு இழக்கவே காங்கிரசுடன் கைகோர்த்தது திமுக, அப்போதும் எப்போதும் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி ஏற்படாததற்குக் காரணம் ஜெ சோனியாவை பதிபத்தி இல்லாதவர், வெளிநாட்டைச் சேர்ந்தவர், ஆண்டனோ மொய்னோ என்ற தனிப்பட்ட விமர்சனங்கள் செய்தது தான், மேலும் 1992 தேர்தலில் இராசீவ் மரணத்தால் நான் வெற்றிபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்தார், அதையும் மீறி காங்கிரசார் சிலர் அதிமுகவுடன் கூட்டணி தொடர முயன்ற போது மூப்பனார் தலைமையில் தமாக உருவாக திமுகவும் அதனை ஆதரிக்க சட்டமன்றத்தில் திமுக ஆட்சி தொடர்ந்தது, மீண்டும் தமாக, காங்கிரசு இணைந்தது. அந்த தேர்தலில் அதிமுக - காங்கிரசு கூட்டணி வெற்றிபெறவில்லை, ஜெ திடிரென்று பாஜகவை 13 மாதங்களுக்கு ஆதரித்தார், பிறகு கவிழ்த்தார். மேலே குறிப்பிட்ட படி பாஜகவை திமுக ஆதரித்தது. மற்றபடி தமிழக காங்கிரசு தலைவர்களும், மற்ற காங்கிரசு புள்ளிகளும் ஜெவுடன் கூட்டணி வைக்கவே விரும்பினர். அந்த கூட்டணி ஏற்படாமல் போனதற்கு சோனியா - ஜெவுக்கு இடையே நடந்த நீயா நானா போட்டிதான். மீண்டும் காங்கிரசு ஆட்சிக்கு ஜெவின் தயவு தேவைப்பட்டால் சோனியா இறங்கிவருவார். எந்த ஒரு நிபந்தனையுமின்றி ஜெ காங்கிரசுக்கு ஆதரவளிப்பார் என்பதெல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

*****

ஈழ விடுதலையை விடுதலை புலிகளைக் காரணம் காட்டி பேச மறுத்த காங்கிரசார், 'நான் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, ஈழ விடுதலையை ஆதரிக்கிறேன்' என்று கூறிய ஜெ வை தேச தூரோகம், இறையாண்மைக்கு எதிரானவர் என்று விமர்சிக்கின்றனர். இதன் மூலம் ஈழத்தமிழர்களின் நலனில் காங்கிரசு அக்கரை கொண்டிருக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஈழ விடுதலைக்கு எதிராக இலங்கை அரசுடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தமும் அதன் தொடர்பில் ஈழத்தில் இந்திய இராணுவம் அமைதி என்ற பெயரில் செய்த அட்டூழியங்களினால் இராசீவ் காந்தி படுகொலை வரை சென்ற பிறகு ஈழ விடுதலையே கேள்விக் குறியானது, காங்கிரசார் தமிழர்கள் விடுதலைப் பெற்றுவிடக் கூடாது என்கிற இராசீவின் நிலைப்பாட்டையே இன்றும் தொடர்கிறார்கள் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிந்துவிட்டது. காங்கிரசுவுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக 'ஈழ விடுதலை கிடைத்தால் மகிழ்வோம்' என்று ஒரு செய்தி விமர்சனம் என்ற அளவில் ஈழம் பற்றி பேசுகிறது. ஈழத்தின் உண்மை நிலை அனைவருக்கும் தெரியாமல் இல்லை, ஆனால் அதற்காக குரல் கொடுப்பவர் என்பதைப் பார்த்தால் ஜெ-வின் குரலே ஓங்கி ஒலிக்கிறது. ஜெ - செய்வாரா ? இல்லையா ? கூட்டணி மாறுவாரா ? என்ற கேள்விகளையும், ஊகங்களையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால் அப்படி ஒரு (ஆறுதல்) குரலை ஈழ ஆதரவாளர்கள் எதிர்நோக்கி இருந்தனர் என்பதே உண்மை.

ஒரு வேளை இது அரசியல் நாடகமென்றாலும் அதையும் செய்யத் துணியாத திமுகவிற்கு, தமிழர் நலனில் மெத்தனம் காட்டும் காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு , ஈழவிடுதலைக்கு எதிரான காங்கிசாருடன் கூட்டணி வைத்திருக்கும் திமுகவிற்கு எதன் அடிப்படையில் இந்த தேர்தலில் ஆதரவு கொடுக்க முடியும் ? திமுக தமிழகத்தில் இலவசங்களை வழங்கி சிறப்பாக(?) செயல்பட்டது என்பதற்காக ? அப்படிப் பார்த்தால் ஜெவின் ஆட்சிக்கு பிறகு ஜெ மீது இதுவரை எந்த ஊழல் வழக்குகளும் பதியப்படவில்லை. ஐயா இது சட்டமன்ற தேர்தல் இல்லை என்றாலும் கூட, மத்திய ஆட்சியில் அமைச்சர் பதவியை அடைபவர்களில் தமிழர்களும் இருக்கிறார்களே. ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு அதிமுக காங்கிரசை ஆதரித்தாலும் காங்கிரசு சவாரி செய்யும் குதிரையாக இருக்காது, காங்கிரசு என்னும் குதிரையை இழுத்துப் பிடிக்கும் கடிவாளமாகவே இருக்கும், என்பதால் என் ஓட்டு ஜெ-கூட்டணிக்கே.

26 ஏப்ரல், 2009

தமிழகத்தில் நடக்கும் காங்கிரசு ஆட்சி !

காமராஜர் மறைவுக்கு பின்னர் தமிழக காங்கிரசு குழுமங்களின் தேர்தல் கால கோஷமான 'மீண்டும் தமிழகத்தில் காங்கிரசு ஆட்சி' தற்பொழுது வெற்றிகரமாக நடந்து வருவதாக பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள், இலங்கை - இந்திய அரச தந்திர உறவுக்கு முழுமையாக ஆதரவு கொடுப்பதை இன்றைய தமிழக தலைமையிலான ஆட்சி செய்து வருவதைப் பற்றித்தான் மக்கள் அப்படிப் பேசிக் கொள்கிறார்கள்.

மேலும் காங்கிரசு ஆட்சிகாலத்தில் இருந்ததைப் போல் பல தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பதவி பெற்று சிறப்பாக தமிழகத்தை வழி நடத்தியது போலவே தற்பொழுதும் நடைபெறுவதாக நினைக்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு நன்மை என்றாலும் கோஷ்டிகளில் புதிய வரவாக மேலும் ஒரு கோஷ்டி சேர்ந்திருப்பது தமிழக காங்கிரசின் மூத்த அரசியல் வாதிகளை அதிர்ச்சிக்குள்ளாகியதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

தமிழகத்தில் ஒருகாலத்தில் திராவிடக் கட்சிகள் இருந்ததாகவும், தற்பொழுது அவை காங்கிரசு மற்றும் பாரதிய ஜெனதா கட்சியுடன் இணைந்து தேசியவாதிகள் ஆகிவிட்டனர் என்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கவும் அவை சபதம் செய்து திராவிடக் கட்சிகளைக் களைத்துக் கொண்டதாகவும் ஒலக அரசியல் பார்வையாளர்கள் கருத்துரைக்கின்றனர்.

செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தமது நிருபர் இதனை தெரிவித்தார் என்று நாவாலந்தீவு செய்தி நிருவனம் ஒன்று இந்த தகவலை தெரிவித்தது

கருணாநிதியின் கையாலாகத்தனத்திற்கு வைகோவும் காரணம் !

கலைஞர், தமிழின தலைவர் என்று சொல்வதற்கு கூசுவதால் கருணாநிதியென்றே சொல்கிறேன். நான் கட்சித்தொண்டோனோ திமுக அனுதாபியோ கிடையாது, திராவிட சித்தாந்தங்களின் மீது இருந்த ஈர்ப்பால் அண்ணாவழி வந்த இயக்கம் என்பதாலும் திமுகவின் மூத்த தலைவர், தமிழ் பற்றாளர் என்பதால் பலரைப் போல் 'கலைஞர்' என்றே நானும் எழுதி வந்தேன். இப்போதைய சூழலில் அந்த பெயரெல்லாம் கட்சித்தொண்டர்கள் கட்டாயத்தின் பேரில் அழைக்கிறார்கள் என்பதைத் தவிர ஒரு தமிழன் என்ற முறையில் அவர்களும் அப்படி அழைப்பார்களா என்பதே ஐயம்தான்.

***

சென்ற சட்டமன்ற தேர்தலில் ஒரே ஒரு இடம் மிகுதியாக வைகோ கேட்க, கருணாநிதி முடியாது என்று சொல்ல, சிறையில் தின்ற களி செறிப்பதற்குள் அம்மாவிற்கு கொடுத்த பூச்செண்டில் தனது தன்மானத்தையும் சேர்த்தே முடிந்து கொடுத்தார் வைகோ. அதற்கு வைகோ கூறிய காரணங்கள் ஆயிரம் என்றாலும், பலரும் முகம் சுளித்தனர். ஈழவிடுதலையை ஆதரித்தவர் என்பதை சாக்காக வைத்து எதிர்தரப்பில் இருந்த ஒருவரை வெறும் அரசியல் பழிவாங்களால் அவரை பொடா சட்டத்தில் தூக்கி உள்ளே போட்டார் ஜெ. மற்றபடி பொடோவை பயன்படுத்தி வைகோவை உள்ளே போட ஈழவிடுதலையை ஆதரித்தார் என்று சொல்லியது அதை ஒரு சட்ட பூர்வ நடவெடிக்கையாக காட்ட மட்டுமே. அந்த வழக்கில் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக எதுவுமே இல்லை என்பதால் வைகோ வெளியே வரமுடிந்தது. வைகோ மட்டுமல்ல நக்கீரன் கோபால் போன்றவர்கள் மீதும் பொடா பாய்ச்சப்பட்டு சிறை செல்ல நேர்ந்ததை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஜெ வின் இந்திய இறையாண்மை காப்பில் இருந்த அக்கரையின் தன்மையை அரசியல் அறிவே இல்லாதவர்கள் கூட அதை பழிவாங்கும் நடவெடிக்கை என்றே விமர்சித்தார்கள், அதையே திமுக அரசும் இன்று சீமான் போன்றவர்களிடம் தோற்றுப் போகும் வழக்கு என்று தெரிந்தே செய்துவருவதையும் கவனிக்க வேண்டும். இவை வைகோவிற்குத் தெரியாதா ?

தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கி வாழ்வில் ஓர் ஆண்டுகளுக்கும் மேலான நாட்களை சிறையில் கழிக்க வேண்டி இருந்ததை, உணர்ச்சி உள்ள ஒருவன் வாழ்நாள் முழுவதுமே இதனை மறக்கமாட்டான். ஆனால் ஜெவுக்கு பூச்செண்டு கொடுக்க முனைந்த அந்த நொடியே வைகோ உணர்ச்சியற்றவராக மாறிவிட்டார். தன்னைப் பலரும் தூற்றுவார்கள், இனி எப்படி பொதுமக்கள் முகத்தில் விழிப்பேன் என்ற உணர்வு / வெட்கம் சிறிதும் இல்லாமல், திருடி மாட்டிக் கொண்டவன் விழிப்பதைப் போன்ற பூச்செண்டு கொடுத்துக் கொண்டு விழித்தார். புலியாக சீறிக் கொண்டு இருந்தவர் தான் வெறும் பூனை என்பதாக தனக்கு தானே அடையாளப்படுத்திக் கொண்டு, அதுவரை கட்டிக் காத்த இயக்கத்தையும், தொண்டர்களையும் தன்னை மிதித்தவர் கால்களில் வைத்தார், அதன் தொடக்கமே தமிழர்களுக்கான கெட்டகாலம் தொடங்கிவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

வைகோ அல்லது கருணாநிதி பிடிவாதத்தை விட்டுவிட்டு சென்ற சட்டமன்ற தேர்தலில் இணைந்திருந்தால் திமுக போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் வென்று தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியைப் பிடித்து இருக்கும், ஆனால் அது நடக்காமல் போக வைகோவின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்குச் செல்ல, பல இடங்களில் திமுக மண்ணை கவ்வியதற்கு அதுவே காரணம், திமுகவிற்கு பெரும்பாண்மை இடம் கிடைக்காமல் போகவே காங்கிரசின் தயவிலும், பாமக தயவிலும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டது. பாமக உறுப்பினர்கள் சொற்ப அளவே, ஆனால் காங்கிரசின் துணை இன்றி திமுக அரசை அமைக்க முடியாத நிலையும், அமைத்த அரசை தொடர முடியாத நிலையும் அன்றிலிருந்தே தொடர்ந்து வருகிறது. காங்கிரசின் ஆதரவே திமுக அரசின் கடிவாளமாகிப் போனதால் காங்கிரசை மீறி ஈழத்தமிழர்களுக்காக எந்த வித அழுத்ததையும் கொடுக்க முடியாத நிலைக்கு திமுக சென்றுவிட்டது. இல்லை என்றால் பெருசாக புடிங்கி இருக்குமா என்றெல்லாம் கேட்காதிங்க.

தனிபலம் இருந்திருந்தால் சட்டசபை கவிழும் மோசமான நிலை இருந்திருக்காது. மத்திய அமைச்சர்களை திரும்பப் பெற்று இருப்பார்கள், ஏனென்றால் தமிழர்கள் நலனில் தொடர்ந்து பாடுபடுகிறோம் என்று காட்டவதற்காகக் கூட அவ்வாறு செய்து 'தமிழின தலைவர்' பதவியை தொடர்ந்து காப்பாற்ற முயன்றிருப்பார்கள், ஆனால் இன்றைய சூழலில் அந்த பதவியை காக்க முயன்றால் முதலமைச்சர் பதவி பறிபோய்விடும். மேலும் ஸ்பெக்டரம் ரகசியங்கள் சோனியாவுக்கு தெரிந்திருக்கலாம், அதன் மிரட்டலில் வேறுவழியின்றி காங்கிரசு நிலைப்பாட்டையே அவர்களும் தொடர்வதுடன், நாங்களும் போராடுகிறோம் என்று காட்ட மனித சங்கிலி, வேலை நிறுத்தம் போன்ற நாடகங்களை நடத்திக் கொண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.வேலை நிறுத்த போராட்டம் என்பது அரசுக்கு எதிராக பொதுமக்களோ, எதிர்கட்சிகளோ நடத்துவதே வழக்கம். மக்களால் அரசு அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கட்சி, மக்கள் இயல்பு வாழ்க்கை நலிவடையும் வேலை நிறுத்தங்களை நடத்துவதும் அது வெற்றிகரமாக நடந்ததாக பீற்றிக் கொள்வதும் மக்களாட்சியின் கேலிக் கூத்துகள்.

இன்றைய சூழலில் திமுக அரசு தற்காப்பு தன் நலநோக்கில் செயல்படுவது மறைமுகமாக அன்றைய நாளில் வைகோ எடுத்த தவறான முடிவினால் தான். ஒண்ணால நான் கெட்டேன், என்னால நீ கெட்டாய். நம்மால் ஈழத்தமிழர்கள் நம்பிக் கெட்டார்கள் என்பது இருவருக்குமே தெரியும்.

***

கேடுகெட்ட அரசியல் வியாதிகள். இனி வருங்காலத்தில் கொள்கைகளில் தெளிவும், நடத்தையில் தூய்மையும், வாக்கில் நேர்மையும் உள்ள அரசியல்வாதிகள் எவரையுமே பார்க்க முடியாது, ஏனென்றால் அரசியல் கட்சிகள் அனைத்துமே வாரிசு அரசியல் நிறுவனங்கள் ஆகிப் போய்விட்டன, அதன் நோக்கு மக்கள் நலன் அல்ல. முடிந்தவரையும் அதன் மூலம் பதவி சுகங்களை அனுபவித்து, பணக் குவியல் திரட்டுவது தான் நோக்கமே. தமிழ், தமிழர், கொள்கை போன்ற இனிய சொற்களை அரசியல் வாதிகள் பேசும் போது அவற்றைக் கண்டு கொள்ளாமல், உணர்ச்சி வசப்படாமல் சொற்பொழிவாகக் கேட்டுக் கொண்டு தன்னுடைய முடிவில் தெளிவாக இருக்க வேண்டும் என்பதை அரசியல் வாதிகளின் செயல்களில் இருந்து மக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

24 ஏப்ரல், 2009

யார் வைத்த ஒப்பாரி இனிமையாக இருந்தது ?

ஈழத்தமிழர்களின் வாழ்வாதரத்தில் தலையிட்டு இந்திய அரசு செய்தது மன்னிக்க முடியாது வரலாற்று பிழை. இந்தியா இதில் தலை இடாமல் இருந்தால் அவர்கள் வழியில் அவர்கள் போராடிக் கொண்டு இருப்பார்கள், இருந்த கொஞ்சம் நிலப்பகுதியையும் இலங்கை அரசிடம் இழந்து, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் தவிக்கிறார்கள் தமிழர்கள். ஈழத்தில் இருக்கும் ஒவ்வொரு தமிழனின் உடலில் இருப்பது சிவப்பு ரத்தமா, உயிர் வலி இருக்கிறதா என்று பார்க்காமல் ஓயாது சிங்களவெறி, இதற்கு வயிற்றில் வளரும் கருவும் விதி விலக்கு இல்லை.

கொலையில் வீழும் பிணங்களுக்கு சிறப்பாக ஒப்பாறி வைப்பவர் யார் ?

ஜெ- இராமதாஸ் கூட்டணியின் உண்ணாவிரதமா ? கருணாநிதியின் தந்தி,தபால், மனித சங்கிலி, பந்த் ?


நீதி இன்னும் கிடைக்கவில்லை என்று அழுதுக் கொண்டு அவிழ்ந்த கூந்தலை முடிக்க கணவர் உயிருக்காக தமிழர்கள் உயிரெடுக்கப் போவதாக சபதம் செய்த இத்தாலி அம்மையாரா ?




*****



இத்தாலி பெண்ணுக்கு தமிழர் உயிர்பற்றி என்ன கவலை வந்துவிடும் ? மன்மோகன் தான் ஆளுறாரு அந்த அம்மா வெறும் காங்கிரசு தலைவலி தான்னு மூச்சுக்கு முன்னூறு தடவை கூவுறானுங்க ? பிறகு எதற்கு அரசை விட்டுவிட்டு தலைவலியிடம் போய் முறையிடனும் ?

உரிமைகளை எடுத்துக் கொள்ளாமல் போய் கெஞ்சுவதும், பாதங்களில் விழுந்து கொண்டு பிச்சை எடுப்பதும் தமிழினத்துக்கே இழுக்கு. இதற்கு பதிலாக செத்து தொலையலாம்.



அடிபட்ட பாம்பு சும்மா இருக்காது, இன்றைய தமிழ் சிறுவர்கள் இந்தக் கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு நாளைக்கு இதில் தொடர்புடையவர்கள் அனைவரையுமே பலிவாங்க தொடங்கினால் அப்போதும் ஞாயம் தருமம் பேச ஒருத்தனுக்கும் அருகதையே இல்லாமல் போய்விடும். ஈழத்தில் உள்ள தமிழர்களை அழித்துவிடலாம், ஆனால் இன்று உலகமெங்கும் பரவி இருக்கும் அவர்களது சொந்த பந்தம் இவற்றை உன்னிப்புடன் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. புஷ்சுக்கு நாடுவிட்டு நாடு வந்த போது கிடைத்த செருப்படிகள் முன்னுதாரணமாக இருக்கிறது என்பதை இந்திய அரசியல் தலைவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 25 ஆண்டுகளுக்குப் பிறகும் சிங் செருபால் அடித்தான் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

23 ஏப்ரல், 2009

உறுப்புதானமும், பாவ புண்ணியங்களும் !

தற்காலப் பழமொழிகளாக வந்துள்ள 'தானத்தில் சிறந்தது இரத்த தானம்', 'உடல் உறுப்பு தானம்' என்பது வழங்கப்பட்டு உயிர்காத்தல் பற்றி வழியுறுத்துகிறது. தான் நலிவுறாமல்(பாதிப்பு அடையாமல்) பிறருக்கு நன்மை செய்யமுடியுமென்றால் அதுவே பிறர் மீது செலுத்தும் அன்பிற்கான அடையாளம், அந்த வகையில் உதிர தானம் மனிதர்களிடையே அன்பை வளர்க்கத் தூண்டுகிறது. உதிரத்தில் வகைகள் உண்டு, ஆனால் அந்த வகைகள் சாதி மதம் கடந்து அனைத்து இன மக்களிலும் அந்த வகைகள் இருக்கிறது. எந்த ஒரு சாதிக்காரன், மதத்துக்காரனுக்கும் தனிப்பட்ட பிரிவு வகை உதிரங்கள் கிடையாது. (விந்தனுவும், கருமுட்டையும் கூட அப்படித்தான், இணைந்தால், இணைத்தால், அவை இணையும்) பல இன மக்களுக்கும் பலவகை உதிரங்கள் பொதுவானவையே. வெள்ளயன் ஒருவருக்கு ஏ+ உதிரம் தேவைப்பட்டால் கருப்பர் இனத்தில் உள்ளவருக்கு அதுவே இருந்து கொடுக்க முன்வந்தால் அந்த உதிரம் வெள்ளையர் உடலில் கண்டிப்பாக சேரும். நிறவேறுபாடுகள் தோலுக்கு மட்டுமே உடலில் இருக்கும் உறுப்பின் தன்மைக்கும், உதிரத்திற்கும் கிடையாது. உறுப்புதானம், உதிரதானம் பல்வேறு இனமக்கள் அனைவரும் மனிதர்களே என்று உணர்த்தவும், உயிர்காக்கவும் செய்யப்படும் நற்கொடை.

*****

பிறப்பற்ற நிலையை அடைவதே வாழ்வின் நோக்கம் எனவே பாவ புண்ணியங்களை முடிந்த அளவுக்கு நேர் செய்வது அல்லது இல்லாமல் செய்வதன் மூலம் அந்த நிலையை அடைய முடியும் என்பதாக பல்வேறு மத நம்பிக்கைகள் வலியுறுத்துகின்றன. இன்னும் சில மதங்கள் வெளிப்படையாகவே அனைத்தும் இறைவன் செயல்தான், துன்பப்படுபவர்களை துன்பம் அடைந்தவராகப் பார்க்காதீர்கள், அவரின் முற்பிறவி (கரும )வினையைத்தான் துய்கிறார், இறைவனாகிய நீதிபதி கொடுக்கும் தண்டனை, எனவே அவர்களுக்கு உதவி இறைவனின் கோபத்துக்கு ஆளாகதீர்கள் என்கிறார்கள். குறிப்பாக சுனாமி சாவுகளின் போது வெட்கம் சிறுதுமின்றி இத்தகைய கருத்தாங்கங்கள் இறை நம்பிக்கை என்ற பெயரில் எழுந்தன.

ஒருவருக்கு உதவுவது என்பது புண்ணிய கர்மமாம், அதனால் ஆன்மாவில் கர்மம் சேர்ந்துவிடுமாம், மீண்டும் பிறவிப் பெருங்கடலில் அந்த புண்ணிய கர்மம் பிடித்து தள்ளிவிடுமாம். புண்ணியம் செய்தவர்கள் அதன் பலனான மகிழ்வான வாழ்வை அனுபவிக்க மீண்டும் பிறப்பார்களாம், அப்படி மீண்டும் பிறந்துவிட்டு சூழல் தவறு செய்தால் பாவம் ஏற்பட்டு அதன் பிறகான மற்றொரு மறுபிறவி எடுப்பார்களாம், இப்படியாக பிறவிச் சக்கரத்தில் இருந்து விடுபடாமல் உழல்வார்களாம். இப்படியான நம்பிக்கை சாதரணவர்களிடம் கூட இல்லை, பல 'வேதாந்திகள்' இத்தகைய நம்பிக்கை கொண்டுள்ளார்கள். இவர்கள் அறிவுறுத்துவது உடல் உறுப்பு தானமோ, உதிரதானமோ தனிமனித ஆன்மாவுக்கு தீமையையே அதாவது தனக்குத்தானே தீமையையே கொடுக்கும் என்கிறார்கள். இவர்களெல்லாம் இறை நம்பிக்கை என்று எதை நினைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. 'அன்பு' இந்த சொல்லுக்குத்தான் இறைவனும் கட்டுப்படுவதாக பலரது நம்பிக்கை, இறைவனிடம் அன்பு செலுத்துவது இயல்பானதாக எப்பொழுது ஏற்படுகிறதென்றால் சக மனிதரை நேசிக்க தெரிந்தால் மட்டுமே கண்ணுக்கு தென்படாத இறைவனை நேசிப்பதற்கு அது பயிற்சியாக அமைகிறது.

சகமனிதர் மீது அன்பு செலுத்தாதவன் தன்னலமாக பிறவி அறுக்கிறேன், பேரின்பம் காணப் போகிறேன் என்ற பெயரில் முட்டாள் தனமாக உயிர்காப்புக் கொடைகளை எதிர்ப்பது உண்மையிலே பலன் அளிக்குமா ? வின்னுலகம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை என்றாலும் மன்னுலகில் மனிதனை நேசிக்கத் தெரியதவன் ஆன்மிகம் என்ற பெயரில் இவற்றையெல்லாம் வழியுறுத்துவது எந்த வகை உயர்ந்த கொள்கை என்று தெரியவில்லை. பிறவி என்பது அவ்வளவு கசப்பா ? துன்பமா ? வின்னுலக அறிவைத் தறுவது பிறவியின்றி வேறென்ன என்று அவர்கள் கிஞ்சித்தும் நினைப்பதே இல்லை.

அன்பிற்கு கல்லும் கரையும் என்பதாக அன்பைப் பற்றிய மென்மையை மேன்மையை பேசுவது நல்லோர் மாண்பு, அதை மறுத்துவிட்டு காணப்போவதாக நம்பம்படும் பரப்பிரம்மம், பரமானந்தம், பேரிண்பம் வேறு என்ன எழவாவது இருக்கட்டும் அது அவ்வளவு உயர்ந்ததா ?

*****

என்னைக் கேட்டால் இறைவன் இருந்தால் அவனும் நாத்திகனே ஏனெனில்

1. இறைமறுப்பு - இறைவன் யாரையும் வணங்குவதாக, வணக்கத்துக்குரியதாக நினைப்பதில்லை
2. எல்லோரையும் சமமாகவே நினைக்கிறான் (மனிதர்களால் நடத்தப்படும் வழிபாட்டு தளங்கள் தான் அவற்றில் கட்டுப்பாடு வைத்திருக்கிறது)
3. எந்த மதத்திற்கும் உடையவன் அல்ல ( ஆனால் மதவாதிகள் மதத்தை இறைவன் தோற்றுவித்தான் என்பர், அப்படி என்றால் ஒன்றுக்கும் மேற்பட்ட மதங்களை முரணான கொள்கையுடன் தோற்றுவிக்க முடியுமா ?)
4. பால்(ஆண்/பெண்) ஆதிக்கம் செலுத்தாதவன்

இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கையாலும் அதன் கொள்கைகளாலும் ஆத்திகன் என்ற பெயரில் சக மனிதனுக்கும் உதவும் மனப்பாண்மையை துறந்து, அதாவது புண்ணியம் பெற்று பிறவி அடைந்துவிடுவோ என்று நினைப்பதைவிட, கொள்கை, குப்பை பற்றி எதுவும் நினைக்காமல் நாத்திகனாக இருந்து பலருக்கும் உதவுபவனே என்றும் மேலானவன், மேலானவனுக்கும் நெருக்கமானவன், ஏனென்றால் இருவரும் ஒரே கொள்கையுடையோர்.

22 ஏப்ரல், 2009

ஞானிகள், மெய்ஞானிகள், விஞ்ஞானிகள் !

ஒரு மொழியில் ஒரு பொருளைக் குறித்த ஒரு சொல் வேறு மொழி(யில்)களில் வேறொரு சொல் அதையே குறித்தால் மொழி வேறுபாட்டின் ஒலிப்பு முறை அல்லது தன்மை அல்லது மொழிக் குறியீடு என்பதைத் தவிற வேறொரு சிறப்பு அந்தச் சொல்லுக்கு கிடையாது. பண்பாட்டுக் கூறுகளுடன் இணைந்த ஒரு சில சொற்களுக்கு மட்டுமே வேறொரு மொழியில் பொருள் கூற முற்படும் பொழுது அதைச் சரியாக எடுத்துச் சொல்லமுடியாமல் போய்விடும், மொழியியலில் ஒவ்வொரு மொழியிலும் புழங்கும் தனித்தன்மை வாய்ந்த இத்தகைய சொற்கள் மிகவும் குறைவுதான். எடுத்துக்காட்டு 'எத்தனையாவது' என்ற தமிழ் சொல்லுக்கு ஆங்கிலத்தில் ஒரே சொல்லில் அடக்கும் படி சொல்கிடையாது. கறி என்ற தமிழ் சொல் இதற்கு நேரடி சொல் கிடைக்கததால் ஆங்கிலத்தில் Curry என்று அப்படியே வைத்திருக்கிறார்கள், அதே போல் கறிவேப்பில்லையை Curry Leves என்பதாக வைத்திருக்கிறார்கள். ஆங்கில மொழிப்பெயர்ப்பு படி கறி இலை என்பதாகவே அதைப் படிக்கும் தமிழர் அல்லாதவர்கள் நினைப்பார்கள். நமது 'கறி வேப்பில்லை' சொல்லின் பொருளில் அந்த மரத்தின் வகையும் சேர்ந்தே இருக்கும். தனித்தன்மை வாய்க்கப் பெற்றச் சொற்கள் இவ்வகையானது தான், அவை அந்த மொழிக்கே உரியன.

வேறு பொதுவான சொற்களுக்கு பொருள் ஒன்றாக இருந்தாலும் ஒரு மொழியில் சொல்லப்படும் சொல் பிற மொழிகளில் குறைவான / பொருத்தமில்லாத சொல் எனக் கட்டமைப்பது வெறும் மொழி அரசியல் தான். சில மொழிகளின் குறிப்பாக வடமொழி வாய்ப்பாடுகளைச் சொல்வதன் மூலம் அதிர்வு ஏற்படுகிறது என்பது காலம் தோறும் பரப்பப்படும் மோசடி. மொழியை பாதுகாக்க அதன் மீது புனிதத் தன்மை ஏற்றுவது நீண்டகாலப் பயணாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகைய அறிவுக்கு ஒவ்வாத கட்டமைப்புகள் கட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டு 'ஞானம்' இது வடமொழிச் சொல் தான் வடமொழியில் 'ஞான்' என்று சொல்லுவார்கள். ஆங்கிலத்தில் 'Know' என்ற சொல்லின் பொருளை ஒட்டியது,

Etymology:
Middle English, from Old English cnāwan; akin to Old High German bichnāan to recognize, Latin gnoscere, noscere to come to know, Greek gignōskein
Date: before 12th century



உறுதியற்ற தகவலாக வடமொழியாளர்கள் 'ஞான்' (ஞானம்)என்ற சொல் வடமொழியில் இருந்து பிறமொழிகளுக்குச் சென்றிருக்க வேண்டும் என்பர். வடமொழி என்று சொல்லப்படும் சமஸ்கிரதத்திற்கும் கிரேக்கம், லத்தீன் ஆகியவற்றிற்கு பொதுவான நூற்றுக் கணக்கான சொற்கள் உண்டு, எது எதன் மூலம் என்பது இன்னும் கூட தெளிவற்ற ஆராய்ச்சியாக தொடரும் நிலையில், மூன்று மொழிகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பது உறுதியான தகவல் தான்.

ஞானம் என்ற வடசொல்லுக்கு தமிழில் நேரடியான பொருள் 'அறிவு', ஞானி என்றால் அறிவாளி, வடமொழிக்கு புனிதம் கற்பிக்கப் பட்டதாலேயே ஞானம் என்ற சொல் மிகச் சிறந்த பொருளைத் தருவதாக நினைப்பது நமது மடைமைதான். 'ஞானிகள் சொன்னார்கள், எழுதினார்கள்' என்று எழுதப்பட்டதை படிக்கும் போது உண்மையிலேயே அது மிகப் பெரிய தத்துவம் போன்றது, புனித மானது என்றே நினைக்கிறோம். ஆனால் அதையே 'அறிவாளிகள் சொன்னார்கள், எழுதினார்கள்' என்று படித்தால் எதோ படித்தவர், சிந்தனை செய்பவர் எழுதி இருக்கிறார் என்ற பொருள் தருவது போல் தோன்றும். உண்மையிலேயே ஞானி என்றாலும் அறிவாளி என்றாலும் ஒரே பொருள் தான். ஞானிகள் என்பதற்கு மற்றொரு பொருள் அறிஞர்கள், ஞானியர் அண்ணா என்றாலும் அறிஞர் அண்ணா என்று சொன்னாலும் ஒரே பொருள்தான். அறிவாளிகளாக தங்களை உயர்த்திக் காட்டிக் கொள்ள பலர் 'ஞானிகள்' ஆகி இருப்பதும் வெறும் உளவியல் படி உயர்வாக எண்ண வைக்கும் உத்தி மட்டுமே, அதை வைத்துப் பார்க்கும் போது அவர்கள் அறிவாளிகளே :)

ஞானிகள் என்பவர்கள் வேற்றுகோளில் இருந்து வந்தவர்கள் இல்லை, அறிவாளிகளைத்தான் அப்படி வடமொழியில் சொல்லுகிறார்கள். வடமொழியை தேவபாடையாக ஆக்கியதால் அந்தச் சொல் உயர்ந்த பொருளை உள்ளடக்கியது போல் தோற்றம் தருகிறது. வடமொழி தேவபாடை என்று பழைய இலக்கியங்கள் (புராணம்) எதிலும் சொல்லப்படவில்லை. பின்னாளில் அப்படி வலிந்து சொல்லப்பட்டது வெறும் மொழி அரசியல்தான்.

யார் யாரெல்லாம் அறிவாளியோ அவர்களெல்லோரும் 'ஞானிகள்' தான் ஏனெனில் இரண்டிற்கும் பொருள் ஒன்றே. மெய்ஞானிகள், பகுத்தறிவாளர்கள் ஆகியவை ஒரே பொருளில் வரும் வேறு சொற்கள், ஒன்றையே குறிப்பவை, இரண்டுமே உண்மையைப் பற்றிய தெளிதலைப் பற்றியது, மெய் ஞானிகள் - இதிலிருக்கும் 'மெய்'தமிழ் சொல்தான், அதற்கான பொருள் அனைவருக்குமே தெரியும். மெய் என்பதை வடமொழியில் 'ஸத்ய' அதாவது சத்(தி)யம் என்பார்கள், மெய்ஞானிகள் என்பதை துய தமிழில் மெய்யறிவாளர்கள், மெய்யறிஞர்கள் என்று சொல்லலாம். அதே போல் விஞ்ஞானிகள் என்பதற்கு பதிலாக அறிவியலாளர் என்று எழுதுவதே தமிழ்சொல்லாகும்.

21 ஏப்ரல், 2009

11 ஆவது நாள் ஆனதும்...

இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தில் பெண்கள் தொடர்ந்து எட்டாவது நாளாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே. உண்ணாவிரத பெண்களுடம் அமர்ந்து கனிமொழி கண்ணீர் வடித்தாராம். தன் தந்தை தமிழர்களுக்காக வாழ்நாளை அற்பணித்து யோகியாகி அமர்ந்திருக்கிறார் என்று அந்த பெண்களிடம் தெரிவித்தாராம். அங்கே அந்த பெண்களைப் பார்த்து பேச வந்த காங்கிரசு சுதர்சனம் நாட்சியப்பன், இன்னும் மூன்று நாட்களுக்குள் உண்ணாவிரதம் பற்றி சோனியாவிடம் எடுத்து சொல்லப் போவதாக தெரிவித்தாராம். அன்னை சோனியா தற்பொழுது பிரச்சார பயணத்தில் இருப்பதால் அவரை தொடர்ப்பு கொள்வது கடினமாம். 8 நாள் தொடரும் உண்ணாவிரதம் 11 நாள் வரையில் சோனியாவிடம் எடுத்துரைப்பதற்காக நீடிக்கப்படுமா ? இல்லை அவர்களுக்கு பால் ஊற்றியதும் தான் சோனியாவின் காதுக்கு பெண்கள் இப்படி உண்ணாவிரதம் இருக்கும் செய்தி போய் சேருமா என்பது தெரியவில்லை :(

உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் இதை உடனடியாக கைவிடாவிட்டால் அவர்கள் நிலமை மோசமாகி எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இன்னும் கூட திமுக - காங்கிரஸ் கூட்டணி ஈழப் பிரச்சனை தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது என்று கூறிவருவது கவனிக்கத் தக்கது. இராமேஷ்வர மீனவன் குண்டடிப்பட்டு மாள்வதையே கண்டு கொள்ளாதவர்கள் ஈழத்தமிழர்களுக்காக மனம் இறங்குவார்கள் என்று நினைப்பது வீண் என்றே சமூக நோக்காளர்கள் கருதுகிறார்கள்

கல்மனதுக்காரர்கள் கரைவார்கள் என்று நினைத்து இதில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் உடனடியாக உண்ணாவிரத்தை முடித்துக் கொள்ளவது நல்லது. இல்லை என்றால் நானும் அந்த உண்ணாவிரத பந்தலில் 'கடைசி' வரையில் உட்கார்ந்திருந்தேன் என்று கூறி அங்கு வந்தவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டி அதைத் தேர்தலுக்கு பயன்படுத்தி வாக்குக் கேட்கவும் முயல்வார்கள்.

20 ஏப்ரல், 2009

')) said...' பொறை ஏறிட்டா இந்த மருந்து தான் !

பல பதிவுகளில் பின்னூட்டங்களில் பின்னூட்டம் இட்டவர்களில் பெயருக்கு பதிலாக இரு பிறைகள் தெரியும் '))'said... ன்னு வரும், சில பதிவுகளில் பிறை கூட இல்லாமல் 'said...' மட்டுமே வரும். இதனால் என்ன குறை என்றால் யார் போட்ட பின்னூட்டம் என்று அறிய பின்னூட்டமிடும் பக்கத்திற்கு (Post Comments Page) சென்றால் மட்டுமே அவர்களது பெயரை தெரிந்து கொள்ள முடியும், அதைத் தவிர்க்க சில பதிவர்கள் பின்னூட்டத்துடன் சேர்ந்து 'அன்புடன், நட்புடன், நலமுடன் அல்லது எதோ உடன் சேர்த்து பெயரைப் போடுவார்கள் (நன்றி பரிசல்). மற்றவர்களுடைய பின்னூட்டங்களை பின்னூட்ட பக்கம் வழியாகத்தான் பார்க்க முடியும்.

பதிவுல பொறை தெரிவது யாரோடு குத்தம் ? சாமிப் பேரைச் சொல்லாதிங்க சாமி கண்ணைக் குத்திடும், இதுக்கு காரணம் தமிழ் மணம் தான் என்றே கருதுகிறேன். தமிழ் மணத்தின் கருவிபட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு, தமிழ்மணம் வேண்டு மென்று இதைச் செய்கிறார்களா ? இல்லை,கவனக்குறைவாக இந்த குறையை சரி செய்யாமல் வைத்திருக்கிறார்கள். வரலாறு என்னன்னா ?...முன்பு சுமார் 2.5 ஆண்டுகளுக்கு முன்பு ப்ளாக்கர் தனது வடிவத்தையும், வர்சனையும் மாற்றியது, அப்போது ஒருங்குறியில் (யூனிக் கோட்) பதிவர் பெயர்கள் வைத்திருந்தவர்களை கண்டு கொள்ளாமல் அந்த மாற்றத்தை கூகுள் புதிய வலைப்பக்க வடிவத்தை அமைத்துவிட்டது. அதனால் பழைய பதிவுகளை திறந்தால் பின்னூட்ட மிட்டவரின் பெயருக்கு பதிலாக வசையாடல் சொற்கள்போல் '@3#fslksd%&' என்பதாக தெரியும், அதை ஜாவா ஸ்கிரிப்ட் வழியாக் சரி செய்ய முடியும் என்று பதிவர் ஜெகத் ஸ்கிரிப்ட் அமைத்துத் தந்தார். அதையும் சேர்த்தெ தமிழ்மணம் கருவிப் பட்டையில் இணைத்திருந்தது தமிழ்மணம். எனவே முன்பு தமிழ்மணம் ஸ்கிரிப்டை தமிழ்மணம் வழியாகவே இணைப்பவர்களுக்கு கூகுள் யூனிக் கோட் பிரச்சனை சரியாகியது. ஆனால் விரைவிலேயே கூகுள் யூனிக் கோட் பிரச்சனையை சரி செய்தது, புதிய ப்ளாக்கரில் அந்த பிரச்சனை தற்பொழுது இல்லை. புதிதாக தமிழ்மணத்தில் இணைபவர்களுக்கும் தமிழ்மணம் பதிவு பட்டை ஸ்கிரிப்டுடன் ஜெகத் தின் ஸ்கிரிப்டும் சேர்ந்து வலைப்பக்க கருவிப்பட்டையில் (Blogger Template) இணைந்து இருப்பதால் தான் அந்த '))' பிறை தெரிகிறது.

மிகவும் எளிதாக அதை அகற்ற முடியும்.

Logon to blogger, Select Layout , Edit HTML , then
Click on 'Expand Widget Templates'



(படத்தை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.)

Search for the word 'to_unicode'

Select the lines as marked as green square, in above picture,
Replace with below lines (select, copy and paste over your template)


இந்த பகுதியில் பெட்டியில் இருக்கும் ஸ்கிரிப்டை, உங்கள் பதிவின் டெம்ப்ளேட் பகுதியில் மேலே பச்சை வண்ணத்தில் குறித்துள்ள ஸ்கிரிப்டுக்கு பதிலாக மாற்றி அமையுங்கள், பிறகு டெம்ப்ளேட்டை சேமித்துவிட்டு பதிவை திறந்து பார்த்தால் 'பிறைகள்' காணாமல் போய் இருக்கும், அதற்கு பதிலாக பதிவர்களின் பெயர் தெரியும்.

பின்குறிப்பு : டெம்ப்ளேட்டில் கை வைக்கும் முன் தனியாக சேமித்து வைத்துக் கொள்ளவும், ஒரு வேளை சரியாக திருத்தவில்லை என்றால் சொதப்பல் ஆகிவிடும், சேமித்து வைத்திருந்தால் பழையபடி சேர்த்து மீண்டும் சரி செய்ய முயற்சிக்க முடியும்

படைப்புக் கொள்கை ...2

முந்தைய பகுதியை இங்கே வாசிக்கவும். விலங்குகளுக்கும் நமக்கும் உள்ள அறிவின் வேறுபாடு ஒப்பிட்டு நமக்கு தேவையானவற்றை, விருப்பத்திற்கு ஏற்ப நம் செயல்களை அமைத்துக் கொள்ளும் திறன். விலங்குகளுக்கும் ஒப்பீட்டு அறிவு உண்டு, நண்பர் வீட்டுக்கு முதல் நாள் சென்றால் நம்மைப் பார்த்து குறைக்கும் நாய், இரண்டொரு நாளில் நம்மிடம் வால் ஆட்டுவதும் கூட ஒப்பீட்டு அறிவின் வழியாகத்தான். நாயைப் பொறுத்த அளவில் ஒப்பீட்டு அறிவு என்பது தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் என்ற அறிதலை ஒப்பீடு செய்வதுடன் முடிகிறது. விலங்கு காட்சி சாலைகளில் விலங்குகள் செய்யும் திறன்மிக்க செயல்கள், அவற்றை அவ்வாறு பழக்குவதுன் மூலம் அவற்றை ஒரு செயலாக கற்றுக் கொண்டு செய்கிறது.

கிளிகள் எண்களை எண்ணுவதாகச் சொல்லி சட்டங்களில் எண்கள் பலகையை மாட்டிவிட்டு கிளி கூட்டல் கணக்கு செய்வதாக நம்மிடம் சொல்லுவார்கள், இரண்டு எண்களைப் (3,5) பற்றி நம்மிடம் சொல்லிவிட்டு அதன் கூட்டுத் தொகையை தற்பொழுது கிளி காட்டப்போவதாக நம்மிடம் சொல்லுவார்கள் அதே போல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகையான ஒரு எண்ணை வரிசையாக (9,8,6,7) மாட்டப்பட்டிருக்கும் எண்ணில்(8) ஒன்றை தேர்வு செய்து கிளி காண்பிக்கும். கிளிக்கு கூட்டல் தெரிந்திருக்கிறது, சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்றே நாம் வியப்போம். ஆனால் கூட்டல் தொகையாக வரும் எண்ணை எப்போதும் ஒரே இடத்தில் தான் மாட்டி வைப்பார்கள். மற்றொரு முறை அதே நிகழ்ச்சிக்குப் போகும் போது வேறு வேறு (4,2) எண்ணைச் சொல்லி கிளியைக் கூட்டச் சொல்லிவிட்டு அதன் கூட்டுத்தொகைப் பலகையை (9,6,8,7) முன்பு கிளி எங்கே தொட்டுக் காட்டியதோ(8 இருந்த இடத்தில்) அதை இடத்தில் (6 ஐ) வைத்திருப்பார்கள்.

விலங்குகளுக்கான அறிவு எல்லைக் குட்பட்டது தான், உணவு தேடுவது, இனப்பெருக்கம் செய்து இனத்தைப் பெருக்கிக் கொள்வது, ஆபத்துகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வது இவைதான் அவற்றின் அறிவில் அடங்கி இருக்கும். அவற்றின் மரபு காரணிகளின் படி சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அப்படியே நடந்து கொள்ளும், உதாரணத்திற்கு கோழி தன் கால்களால் குப்பையைக் கிளறுகிறது என்பது நமக்கு தெரியும், ஒரே ஒரு கோழிக்குஞ்சாக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சும் வளர்ந்ததும் சொல்லிக் கொடுக்காமலேயே குப்பையைக் கால்களால் கிளறும். தாய்கோழியுடன் வளரும் கோழிக்குஞ்சு அதை விரைவாக கற்றுக் கொள்ளும் அவ்வளவுதான் வேறுபாடு. மிகச் சில விலங்குகளே காணமால் போன தனது கூட்டத்தில் இருந்த விலங்கு பற்றி நினைவு வைத்திருக்கும். யானைக் கூட்டத்தில் உள்ள யானை ஓர் இடத்தில் இறந்தால் அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் இறந்த யானை (எலும்புகள்) கிடந்த இடத்தில் யானைக் கூட்டம் சிறிது நேரம் நின்றுவிட்டுப் போகுமாம். மற்றபடி விலங்குகளுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் இறப்பும், இறப்பிற்கு பிறகு என்ன ஆவோம் என்கிற எண்ணங்களோ, 'இறைவன்' இருக்கிறான் என்ற சிந்தனைகளெல்லாம் இருக்காது.

படைப்புக் கொள்கை எதுவாக இருந்தாலும் கோழி முதலில் படைக்கப்பட்டதா ? முட்டை முதலில் படைக்கப்பட்டதா ? என்று கேட்டால் கோழியைத்தான் சொல்லுவார்கள். கோழியும் சரி முட்டையும் சரி உயிர்த்தன்மை உள்ள ஒரு உயிரின வடிவத்தின் இருநிலைகள் என்று சொல்வது தான் சரி என்றே நான் நினைக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகள், முட்டை, புழு, பூச்சி என மூன்று நிலைகளைக் கொண்டு இருக்கிறது. மற்றவையெல்லாம் உயிரனு, அது சூழலில் முட்டையுடன் இணையும் போது கருவளர்ச்சி / முட்டையாக உருப்பெருதல் என்பதாக இருக்கிறது, வளர்ந்த உயிரினம் (adult) பல உயிரனுக்களைத் தோற்றுவிக்கும் நிலையைப் பெருகிறது, அதாவது இனம் பெருக்குதல் அல்லது இனப்பெருக்கம்.

உயிரனங்களில் வளர்ச்சி மற்றும் இறப்பு தவிர்த்துப் பார்த்தால் அவற்றின் தொடர்ச்சி என்றென்றும் இருப்பதாக கொள்வதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன். பொதுவாக மனித மனம் பொருள்கள் எதற்குமே மூலம் என்று ஒன்று இருப்பதாகவே நம்பும். அப்படி எண்ணித்தான் இன்றைய அறிவியல் என்பது பிரபஞ்ச தோற்றம் பெருவெடிப்பில் தொடங்குவதாக நம்புகிறது. இதற்குக் மாற்றாக மத நம்பிக்கையாளர்கள் இறைவன் தன் சித்தத்தில் அனைத்தையும் தோன்ற வைத்ததாக நம்புகிறார்கள். விருப்பு வெறுப்பு அற்றவன் என்று சொல்லப்படும் இறைவன் உலகையும், உயிரனங்களையும் தோன்றச் செவதற்கான அவன் விருப்பம் எத்தகையது ? அது விருப்பத்தில் வராதா என்று கேட்டால் நேரடியாக பதில் வருவதே இல்லை. ஒரு சிலர் இறைவன் தான் தோன்றி என்கிறார்கள். இங்கே தோன்றி என்று சொல்வதன் மூலம் எதோ ஒரு நாள் இறைவன் வெளிப்பட்டதாகவும், அதன் பிறகு அனைத்தையும் படைத்ததாக நம்புகிறார்கள், அப்படி என்றால் இறைவன் தான் தோன்றுவதற்கு முன் எதுவுமே இல்லையா என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்பவர்களாகவும் அவர்கள் இல்லை.

இன்னும் சிலர் இறைவன் என்றென்றும் இருப்பவன், அழிவற்றவன் அவனே அனைத்தையும் தோன்றச் செய்தான் என்கிறார்கள். தோன்றச் செய்தல் என்ற செயல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு முன் எவ்வளவு காலம் இறைவன் அப்படியே இருந்தான் ? என்ற கேள்விக்கு இவர்கள் சரியான விளக்கம் அளிப்பது இல்லை. இறைவன் தான் தோன்றி என்றால் படைப்புகள் என்று சொல்லப்படுபவைகள் ஏன் தான் தோன்றியாக இருக்கக் கூடாது, இறைவன் என்றென்றும் இருப்பவன் என்றால் பொருள்கள், உயிரினங்கள் அனைத்தும் என்றென்றும் இருப்பவை என்று ஏன் சொல்லக் கூடாது என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாது தவிர்பர்.

தங்கம் என்கிற உலோகப் பொருளை எடுத்துக் கொள்வோம், பூமியில் இருக்கும் பல்வேறு கனிம பொருள்களில் அதுவும் ஒன்று. அதன் பயனையும், மதிப்பையும் மனிதர்கள் தான் முடிவு செய்து பயன்படுத்துகிறார்கள். மதம் தொடர்பான எந்த நூலிலும் பூமியில் இன்னின்ன கனிம வளங்களை புதைத்து வைத்திருப்பதாக சொல்லி இருக்கவில்லை. அப்படி சொல்லி இருந்திருதால் அறிவியலாளர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி நடத்தி அவற்றை பிரித்தெடுக்கும் வழிகளைக் கண்டு கொள்வதற்கு எளிமையாக இருந்திருக்கும், எந்தந்த இடத்தில் திரவ எரிபொருள் கிடைக்கிறது என்பதும் எந்த ஒரு மதத்திலும் சொல்லப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும், குறைந்த அளவாக திரவ எரிபொருள்கள் பற்றி மதங்களில் எதுவும் கூறப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. வானத்திற்கு எல்லை இல்லை என்பதை நம்பினாலும்...கண்டிப்பாக வானம் / அல்லது பரவெளிக்கு எல்லை இருக்கும், அதற்கும் பின்னாலும் எதோ இருக்கும் என்பதையும் அதே மனம் நம்பும். பொருள்களும், உயிரினங்களும் படைக்கப்பட்டதாக நம்புவதும் அப்படித்தான்.

படைப்புக் கொள்கை தொடரும்...

19 ஏப்ரல், 2009

அழகுணர்வும் செயற்கைத் தன்மையும் - Bowerbirds

சில / பல சொற்களுக்கான சமூகப் புரிந்துணர்வின் மூலமாக பொருள் சொல்வது மிகவும் சிக்கலான ஒன்று. எடுத்துக்காட்டு 'அழகு' என்றச் சொல். நாம் ஒன்றை அழகு என்று நினைத்தால் ஏனையோருக்கும் அதுவே அழகு என்று சொல்வது தவறானது ஏனெனில் எது அழகு என்பதை முடிவு செய்வது அவரவர் மனம் தான். பெரும்பாலும் திரைப்பட நடிகையர்களை மட்டும் எடுத்துக் கொண்டு பார்தாலும் அவரவர்களுக்கு சில நடிகைகளைப் பிடிக்கும், அதற்கு தனிப்பட்ட காரணங்களாக அவர்கள் எண்ணங்களுக்கு ஏற்றவண்ணம் அவர்களின் உடல் அமைப்புகள் இருப்பதாகவும், அவற்றில் இருக்கும் கவர்ச்சி (பால் உணர்வு தூண்டுதல்களைப் பற்றிச் சொல்லவில்லை) அவர்களின் மீதான ஈர்ப்பு.
ஆக அழகு என்பதற்கான அளவு கோல் அவரவர் மனங்களே, அழகு என்பது மனம் தொடர்புடையது என்று சொல்வது உண்மையிலேயே சரியான கூற்றுதானா ?

மனித மனம் தவிர்த்துப் பார்த்தால், அழகும், அழகு உணர்வும் இயற்கையில் இயைந்து, இணைந்திருக்கிறது என்பதே உண்மை. வண்ணங்களையும், பல்வேறு மணங்களையும் பூக்களில் பார்க்கும் போது அவை சரியான கூற்று என்றே உணர்த்துகின்றன. பூக்களுக்கு வண்ணங்களாலும், மணத்தினாலும் நேரடி பலன் இல்லை என்றாலும், அவற்றின் இனப்பெருக்கத்திற்கு அவை மறைமுகமாக உதவுகின்றன. வண்ணமும் மணமும் அதை நாடி வரும் போது அங்கே சுவையான தேனும் இல்லை என்றால் எந்தப் பூக்களையும் வண்டுகள் நாடாது. வண்ணமும் மணமும் அதைப் பெற்றிருக்கும் மென்மையான தோற்றமும் அழகு என்பதை எடுத்துரைக்கும் விதமாக பூக்கள் எங்கும் மலர்ந்திருக்கின்றன.

குறிப்பாக ஆண் இனம் பறவைகள், விலங்குகள் இவைகள் பெண் இனங்களைக் காட்டிலும் அழகுத்தன்மையுடன் இருப்பதால் அதனை வெளிப்படுத்தி பெண் இனங்களுடன் கூடி வாழ்ந்து இனப்பெருக்கம் செய்கின்றனர். பெண் இனம் அழகின் மீது கவனம் செலுத்துகின்றன, ஈர்க்கப்படுகின்றனர் என்பது இதன் மூலம் தெரிய வரும் மற்றொரு உண்மை:) (வளர்ந்த நாகரீக மனித சமூகத்தில் ஆண்கள் ஆணாக இல்லாததால், பெண்கள் ஈர்ப்பு திசை மாறி அழகுசாதனங்களின் மீது ஈடுபாடு கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்கிறார்கள் போலும், ஆனால் அப்படிச் சொல்வதும் சிக்கலானது, ஏனென்றால் மனித அழகு உணர்வுகளை முடிவு செய்வதில் பலவித சமூக காரணிகளும் பங்கு வகுக்கின்றனர்) , மிகச் சில விலங்குகளில் வீரம் அழகாக ஏற்க்கபபடுகிறது, எடுத்துக்காட்டு சிங்கம்.
பல ஆண் சிங்கங்கள் பெண் சிங்கத்தை நெருங்க முற்படும் போது ஒன்றுக்கொன்று சண்டை இட்டுக் கொண்டு, வெற்றிப் பெற்றதே பெண் சிங்கத்தை அடைகிறது. நீங்களாக அடித்துக் கொண்டு முடிவு செய்யுங்க, அதுவரை நான் காத்திருக்கின்றேன், என்று சண்டை நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கூட கண்டு கொள்ளாமல் இருக்கும் பெண் சிங்கம். இருந்தாலும் ஆண் சிங்கத்திற்கும் இருக்கும் பிடறியும், வலிமையான பார்வையும் பெண் சிங்கத்திற்கு கவர்சியானவை தான்.

இவையெல்லாம் ஒருவகையான இயற்கையான கவர்ச்சி தான் என்றாலும், என்னை வியப்படைய செய்த தகவல் ஒன்று, பெண் பறவையைக் கூடுவதற்கு விருப்பம் தெரிவிக்க ஆண் பறவை செயற்கையான சில அலங்காரங்களை செய்கிறது என்ற தகவல் , பவர்பேர்ட் (BowerBird) என்கிற அந்த பறவை இனத்தில் கவர்ச்சி மற்றும் ஈர்ப்புக்கு ஆண் பறவைகள் செயற்கைக் கவர்ச்சி அலங்காரங்களை கூட்டிற்கு (Nest) முன்பு உருவாக்குகின்றன. என்பது அவற்றின் இயற்கைத் தன்மை. This complex mating behaviour, with highly valued types and colors of decorations that, has led some researchers[who?] to regard the bowerbirds as among the most behaviorally complex species of bird. It also provides some of the most compelling evidence that the extended phenotype of a species can play a role in sexual selection and indeed act as a powerful mechanism to shape its evolution, as seems to be the case for humans.

அசை படம் :



அந்த இனப்பிரிவின் உட்பிரிவில் சில பறவைகள் பூக்களைக் கூட செயற்கை அலங்காரங்களுக்கு பயன்படுத்துன்றன மேலும் படங்களுக்கு இங்கே சொடுக்குங்கள்


அழகுணர்வில் மனித மனத்தின் ஒப்பீடு தவிர்த்துப் பார்த்தாலும் அழகுணர்வில் செயற்கைத் தன்மை இருக்கலாம் என்பதும் இயற்கைதான். பெண்கள் செயற்கையாக அலங்காரம் செய்துக் கொள்கிறார்கள், அது செயற்கையான அழகு, அது தேவையற்றது என்பவர்கள், இயற்கையில் கூட செயற்கைத் தன்மையில் இடமிருக்கிறது என்பதை கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்தால் நல்லது. :)

17 ஏப்ரல், 2009

முன்முடிவு !

வலைப்பதிவின் தற்போதைய வளர்ச்சியை வைத்துப் பார்த்தாலும், வலைப்பதிவு ஊடகம் இன்றைய சூழலில் சமூகத்தில் பெரிய மாற்றம் ஏற்படுத்திவிடாது. இருந்தாலும் கருத்துப் பரிமாற்றம் என்ற வகையிலும், நம்மிடையே இருக்கும் எழுத்துத் திறமையை மேம்படுத்தவும், எழுத்துப் பயிற்சி மேற்கொள்ளவும், குறிப்பாக தமிழில் எழுதுவது மகிழ்வளிக்கிறது என்பதாலும், சமூக அவலங்களைக் கண்டு மனம் புழுங்கி மன அழுத்ததைக் குறைத்துக் கொள்ள எழுதுகிறோம் என்பதாலும், தமிழ் சூழலில் ஒன்றிணைந்து இருக்கிறோம் என்கிற உணர்வு கிடைப்பதாலும் வேறு காரணங்கள் இருந்தால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்... என்பதாலும் எழுதுகிறோம்.

இதில் பலதரப்பட்ட சூழலிகளில் வளர்ந்தவர்கள், தற்பொழுது வாழும் சூழல், வயது, பால் ஆகியவை காரணிகளை உள்ளடக்கி அவரவரின் கருத்துக்கள் எழுதப்படுகின்றன. பதிவென்றாலும், பின்னூட்டமென்றாலும் மறுமொழி என்றாலும் ஒருவரின் கருத்துகள் மேற்கண்டவற்றை ஒட்டியே எழுதப்படுகின்றன. வெகுசிலர் மட்டுமே தன் கருத்தாக பொதுப் பார்வையிலிருந்து பார்த்து எழுதுவார்கள். பதிவுலகில் கருத்தொற்றுமை என்றெல்லாம் பார்பதைவிட எதிர்மறைக் கருத்துக் கூறுபவர் என்றாலும் என்னுடைய எழுத்தைப் படித்த பிறகு தான் ஒருவர் அதுபற்றி கருத்துரைக்கிறார் என்ற தெளிவிருந்தால், எதிர்கருத்தை தன்மானத்துடன் அல்லது தன்னுடைய கொள்கையுடன் பொருத்திப் பார்த்து எதிர்பதாக நினைக்கும் தாழ்வுணர்வுகள் வெகுவாக குறையும். இது எழுதுவர் மற்றும் அவருக்கு எதிர்கருத்துக் கூறுவர் இருவருக்கும் பொதுவான ஒன்றுதான்.

ஒரு சில பதிவுகளைப் படித்துவிட்டு பின்னுட்டம் போடுபவர்களை தனக்கு எதிரியாகவே சிலர் கற்பனை செய்துக் கொண்டு தனிமனித வெறுப்பாக மறுமொழியில் பதில் சொல்லுகிறார்கள். ஒரு பதிவை எழுதிவிட்டு வெறும் பாராட்டுகளும், ஒத்தக் கருத்து மட்டுமே வேண்டும் என்று விரும்புவோர் பின்குறிப்பாக 'எதிர்கருத்துக்களை நான் விரும்பவில்லை, இது எனக்கு ஜால்ரா போடுபவர்களுக்காக மட்டுமே எழுதி இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டால், அதன் பிறகு அவர் தேவையற்றதாக கருதும் கருத்துகளை எவரும் தெரிவிக்கப் போவதே இல்லை. பொதுவில் வாசிப்பதற்கு எழுதி கடை விறித்துவிட்டு 'நீ எனக்கு எதிர்கருத்துக் கூறத்தேவை இல்லை' என்பதும் அங்கு மறைமுகமாகச் சொல்லப்பட்டு இருப்பதாக படிப்பவர்களே புரிந்து கொள்வார்களா ? எழுதுவது என்னுடைய மன அரிப்புதான், அதைத் தீர்த்துக் கொள்ளவே எழுதுகிறேன், மற்றபடி எனக்கு எதிர்கருத்துகள் எதுவும் தேவை இல்லை என்போர் அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டல் எதிர்கருத்துச் சொல்பவரின் நேரம் வீணாகமல் இருக்கும். எதிர்கருத்து விரும்பாதோர் 'எனக்கு எதிர்கருத்துத் தேவை இல்லை' என்பதை வெளிப்படையாகச் சொல்லி பெருந்தன்மையாக நடந்து கொள்ளலாமே.

மிக அண்மையில் ஈழம் தொடர்பில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிரான கருத்துகளை எழுதுகிறேன், என்பதற்காக கொள்கை பிடிப்பு உள்ளப் பதிவர் எனக்கு பதிலடிக் கொடுப்பதாக நினைத்து மறுமொழியில் எனக்கு 'சாதி' ஒட்டவைக்க முயன்றார். இத்தனைக்கும் நான் இன்ன சாதி என்று வலைப்பதிவில் விளம்பரப் படுத்திக் கொண்டதோ, பெருமையாகவோ / தாழ்வாகவோ / உயர்வாகவோ பேசியதோ கிடையாது, அவர் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்று நான் அறிந்து கொள்ள விரும்பியதும் இல்லை. நன்றாக பழகுபவர்களும் கூட எதிர்கருத்தை தன் ஈகோவைத் தாக்குவதாக நினைப்பது, எவர் மீதும் தனிப்பட்ட நம்பிக்கை வைக்கக் கூடாது, எழுத்ததைத் தாண்டி தனிப் பட்ட நட்புகளாக நெருங்கக் கூடாது என்பதை பாடமாகவே கொடுக்கிறது.

இதுபோன்ற கசப்பான பட்டறிவுகளை ஏற்படுத்துவதற்கு பதிலாக தன் எழுத்துக்களுக்கு எதிராக கருத்துரைக்க தேவை இல்லை என்போர், முன்முடிவாக தான் சொல்வதே சரி என்ற முடிவுடன் எழுதுபவர்கள் அன்பு கூர்ந்து, என்னுடைய இடுகைக்கு மாற்றுக் கருத்து எதிர்கருத்தை நான் விரும்பவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டால் நல்லது, முற்றிலுமே தேவை இன்றி ஏற்படும் மனக்காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்

16 ஏப்ரல், 2009

சித்திரைப் புத்தாண்டுக்கு முழு ஆதரவு இல்லை !

ஏப்ரல் 14ல் பல்வேறு (எதிர்)தரப்பில் இருந்து சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தினமலர் உட்பட பார்பன ஊடகங்கள் கூட அதைக் கண்டு கொள்ளவில்லை என்பதால் சித்திரை புத்தாண்டை மாற்றியது தவறு என்று எண்ணம் கொண்டோர் பலர் மனம் புண்பட்டுள்ளனர்.

இதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், பார்பன ஊடகங்கள் பலவும் தை ஒன்றில் பொங்கல் வாழ்த்துகளுடன் முடித்துக் கொண்டனர். எனவே அவர்களெல்லோரும் சித்திரை 1ல் புத்தாண்டு வாழ்த்துச் சொல்லப் போவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் சொல்லி வைத்தார் போல் இந்துத்துவாதி இல.கனேசன் உட்பட பாஜக தலைகள் கூட சித்திரைக்கு 'புத்தாண்டு' வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இதன் தொடர்பான புலம்பல்களை இங்கு இட்லிவடையார்(?) பதிவில் காணலாம் :)

ஆனால் நான் அறிந்த வகையில் பொதுமக்களில் பலர் சித்திரை ஒன்றில் வழக்கம் போல் கோவிலுக்குச் சென்று வந்து, புத்தாண்டுக்கு செய்ய வேண்டியதைத் செய்து, அதுபற்றி பெரிதாக பேசிக் கொள்ளாமல் கொண்டாடினர். தை திங்களில் பொங்கலுடன், புத்தாண்டு வாழ்த்துகள் கூறி பல குறுந்தகவல்கள் வந்தன. ஆனால் சித்திரை 1க்கு ஒரே ஒரு குறுந்தகவல் வாழ்த்து மட்டுமே வந்தது. சிங்கையில் தமிழர் அமைப்புகள் பஞ்சகச்ச பஞ்சாங்கங்களின் பிடியில் இருப்பதால் சித்திரை 1 தான் புத்தாண்டு என்பதில் பிடிவாதம் நீடிக்கிறது. மலேசியாவில் தை க்கு மாறி, நாள்காட்டிகளையும் மாற்றிக் கொண்டு விட்டார்கள். பிற நாடுகளில் விருப்பம் போல் கொண்டாடுகிறார்கள்.

சித்திரை திருநாளை தமிழ் புத்தாண்டாகவே நினைத்து வாழ்த்துச் சொல்ல தமிழ் ஊடகங்களும், அரசியல்வாதிகளும் முன்வரவில்லை. மாற்றத்தை (வேறு வழியின்றி) ஏற்றுக் கொண்டதாக கொள்ள முடிகிறது. விதிகள் காலத்தால் மாறும் :)

தமிழ் புத்தாண்டை தை 1க்கு மாற்றியும், சீனப் புத்தாண்டை அனைத்து மதச் சீனர்களும் கொண்டாடுவது போல் தமிழ்சூழலில் அனைத்து மத தமிழர்களும் தமிழ் புத்தாண்டு கொண்டாடியது போல் தெரியவில்லை :(

வழக்கம் போல் இந்துமத தமிழ் பொதுமக்களுக்கு இதையும் கொண்டாட வில்லை என்றால் சாமி குத்தம் வந்துடுமோ என்ற அச்சத்தில் இரண்டு கொண்டாட்டம், ஆண்டுக்கு கூடுதலாக இருமுறை புத்தாண்டு என்ற பெயரில் விற்பனை கலைகட்டுகிறது என்பதால் சிறு விற்பனையாளர்களுக்கும் கொண்டாட்டம் தான்.

14 ஏப்ரல், 2009

அலுத் அவுரு(த்)து !

ஏப்ரல் 14 ல் சிங்களப் புத்தாண்டும் கொண்டாடப் படுகிறதாம், சிங்கள ஆண்டு ஹிந்து நாட்காட்டி சக ஆண்டை ஒட்டியே அமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 12 ராசி மண்டல அளவிடுகளில் மீன ராசியில் இருந்து மேச ராசிக்கு இடம் பெயரும் காலம் சக ஆண்டு புத்தாண்டு எனச் சொல்லப்படுகிறது. அறுவடை காலம் முடிந்ததும் வருமாம். தமிழர் - சிங்களர் என்றாலும் கொண்டாடும் முறைகள் வேறென்றாலும் ஒரே நாளில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையாக இருந்திருக்கிறது. தனிப்பட்ட சிங்களர்களுக்கு தமிழர்கள் மீதான பகை இருந்திருக்காது. ஒட்டுமொத்த இனமாகவும் பெரும்பாண்மை இனமாகவும் போனதால் இயல்பாகவே அடக்குமுறையை செலுத்த வேண்டும், அதன் மூலம் சீரழித்து, சீரழியவேண்டும் என்பது உலகெங்கிலும் பெரும்பாண்மையாக சமூகம் மாறும் பொழுது நடை பெரும் நடைமுறை போலும். இன அரசியலைத் தவிர்த்து...தள்ளி வைத்துவிட்டு...



சிங்களப் புத்தாண்டின் போது சூரியன் சரியான சம அளவில் மேலே இலங்கைக்கு இருக்குமாம். பொங்கலைப் போல் வீடுகளில் பழையதை பயனற்றத்தை விலக்கிவிட்டு, விளக்கேற்றி, அடுப்பு மூட்டி பால் பொங்கல் வைத்து கொண்டாடுவதுடன் பெண்கள் கும்மி அடித்து சிங்கள புத்தாண்டை கொண்டாடும் முறையாம். சிங்களர்கள் புத்தாண்டை Aluth Avurudhu (in Sinhala) என்கிறார்கள்

மற்றவைகளை இங்கே படிங்க

(யாரோ சிங்களர் தான் அந்த கட்டுரையை தொகுத்திருக்க வேண்டும், தலைப்பில் சிங்களர் - தமிழர் புத்தாண்டு என்று போட்டிருந்தாலும் அங்கு இலங்கையில் உள்ள இருந்த தமிழர்கள் எப்படி கொண்டாடி வந்தார்கள் என்பதை தெரிவிக்கவில்லை.)

ஏப்ரல் 13 - 15 ல் புத்தாண்டு கொண்டாடும் பிற மொழி / நாடுகள்

தாய்லாந்து :
The Thai New Year (Thai: สงกรานต์ Songkran, from Sanskrit sankrānti "astrological passage"; Chinese: 潑水節) is celebrated every year from April 13 to April 15. It coincides with the New Year of many calendars of South and Southeast Asia.

லாவோஸ் :
The Lao New Year called "Bpee Mai" or "Songkan" (Lao: ປີໃໝ່) is celebrated every year from April 13 to April 15.

மியான்மர்(பர்மா) : Thingyan (Burmese: ; MLCTS: sangkran, from Pali sankanta, which translates 'transit [of the Sun from Pisces to Aries ]'[1]) is the Burmese New Year Water Festival and usually falls around mid-April (the Burmese month of Tagu).

வங்காளர் : (Bengali: নববর্ষ Nôbobôrsho) or Pohela Boishakh (পহেলা বৈশাখ Pôhela Boishakh or পয়লা বৈশাখ Pôela Boishakh or Poila Boishakh) is the first day of the Bengali calendar, celebrated in both Bangladesh and West Bengal, and in Bengali communities in Assam and Tripura. Pohela Boishakh connects all ethnic Bengalis irrespective of religious and regional differences. It falls on April 14 or April 15 of the Gregorian calendar depending on the use of the new amended or the old Bengali calendar respectively.

மொத்தமாக வேறு யார் யாரெல்லாம் இதே நாளில் கொண்டாடுகிறார்கள் :

Songkran is also celebrated in Laos (called pi mai lao), Cambodia (called Chaul Chnam Thmey, Cambodian New Year), Myanmar (called Thingyan), and by the Dai people in Yunnan, China. The same day is celebrated in South Asian calendars as well: the Assamese (called Rongali Bihu), Bengali (called Pohela Boishakh), Oriya (called Maha Visuba Sangkranti), Malayali, Punjabi, Sinhalese, and Tamil New Years fall on the same dates, based on the astrological event of the sun beginning its northward journey. It occurs at the same time as that given by Bede for festivals of Eostre—and Easter weekend occasionally coincides with Songkran (most recently 1979, 1990, and 2001, but not again until 2085). [2] ... விக்கிப் பீடியா தகவல்

இந்த நாளை புத்தாண்டாகக் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள் !

பின்குறிப்பு : இது வெறும் தகவலுக்காக எழுதப்பட்டது வேறெந்த அரசியலும் கிடையாது.

எழுதப்பட்ட வரலாற்றுத் தொடக்கம் முதலே தமிழர்களுக்கென தனித்தன்மையும், பண்டிகை விழக்கள் இருந்திருக்கின்றன. தீபாவளியை இந்துக்களுக்கான பொதுப் பண்டிகையா(க்)கியது போல், சித்திரை 1 ஐ தமிழ் புத்தாண்டு ஆக்கி இருக்க வேண்டும். ஏனெனில் தமிழர்கள் அறுவடை நாளான தைத் திங்களைத்தான் சிறப்பாக கொண்டாடியதாக சங்க இலக்கியங்கள் அனைத்தும் கூறுகின்றன.

13 ஏப்ரல், 2009

வாக்காள பெருங்குடி மக்களே ... 1

ஸ்டாலின் : மத்திய சென்னை வாக்காளர்கள் மீண்டும் தயாநிதி மாறன் அவர்களை மத்திய அமைச்சர் ஆக்க உதவ வேண்டும்.
பொது மக்கள் : சன் டிவியிடம் இனி அழகிரி அண்ணன் பற்றி கருத்து கணிப்பு நடத்தமாட்டோம் என்பதை கைப்பட எழுதி வாங்கிட்டிங்களா ?

அத்வானி : பாஜக கூட்டணியில் அதிமுகவை சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அதற்கான வேலைகள் நடைபெறுகின்றன. தேர்தலுக்குப் பிறகு பாஜக தனிப்பெரும் கட்சியாக இருக்கும் என்றார்.
பொது மக்கள் : அதுக்கும் முன்பு 'டீ' பார்டிகள் நடத்தும் ஓட்டல்களை விலை கொடுத்து வாங்கிவிடுவோம் என்பதை எப்போது அறிவிப்பீர்கள் ?

ஜெ: எந்த அரசியல் கட்சியுடனும் தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்துக் கொள்வதற்கான எந்தவித பேச்சுவார்த்தையும் அதிமுக சார்பில் நடத்தவில்லை.
பொது மக்கள் : தேர்தல் முடிந்ததும் தானே முழு செலவுக் கணக்கும் தெரியும். முன்பே பேச்சு வார்த்தை நடத்தி நட்டப்பட அம்மாவுக்கு அரசியல் அனுபவம் போதாதுன்னு நாங்களும் நினைக்கலையே

இல.கணேசன் : தமிழகத்தில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை. ஆனால் கடந்த 10 நாட்களாக அவர்களிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை.
பொது மக்கள் : அரசி சூட்டிங்க்கு சித்தி அவுட்டோர் போய் இருப்பாங்க, எதுக்கும் ஒருவாரம் வெயிட் பண்ணிப் பார்க்கலாம்


திருமாவளவன் :நான் காங்கிரசுக்கு எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஜிகே மூப்பனார் தான் என்னை தேர்தல் களத்துக்கு கொண்டு வந்தவர்
பொது மக்கள் : யாரோ விசமிகள் சத்திய மூர்த்தி பவனில் கல் எரிந்ததை விசமிகள் விடுதலை சிறுத்தைகள் செய்ததாக கிளப்பிவிட்டனர் என்பதை விட்டுவிட்டீர்களே.

விஜயகாந்த்: கருமவீரர் காமராஜரின் மணி மண்டபத்தைக் கூட பராமரிக்க முடியாத காங்கிரசார் காமராஜர் ஆட்சி அமைப்பதாக கூறுவது ஏமாற்று வேலை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் : கேப்டன் ...கேப்டன் நீங்க தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்க தலைவராக இருந்த போது சிவாஜிக்கு மணி மண்டபம் அமைத்த வேகத்துக்கு தமிழக காங்கிரஸ் ஈடு கொடுக்க முடியாது

இராமதாஸ் : தமிழகத்தில் திமுக அரசு 3 மாதத்தில் கவிழும், சட்டசபைக்கு மீண்டும் தேர்தல் வரும்.
பொது மக்கள் : அப்போதைய அரசியல் சூழலில் பாமக எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை முடிவு செய்வார் குடிதாங்கி ஐயா

கொஞ்சம் புலம்பல் !

விடுதலைப் புலிகள் வைகோவிடம் அதிமுக கூட்டணியில் தொடரும் படிக் கேட்டுக் கொண்டதாலேயே வைகோ நான்கு இடங்களுக்கு உடன்பட்டு அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக சிங்கை தமிழ் முரசு நாளிதழில் தகவல் வெளி ஆகி இருந்தது. ஏன் அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு விடுதலைத் தரப்பு சொல்லி இருந்த காரணம்,

1. ஜெ, ஈழத்தில் தமிழர்களுக்கான சுய ஆட்சி முறை வேண்டும் என்று வழியுறுத்துகிறார்
2. போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும், தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்று கருத்துரைக்கிறார், உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

என்றும் மேலும் சில காரணங்களும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இலங்கை அரசுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி வரும் காங்கிரசு அரசு, ஈழத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிக்கிறோம் என்பதை இரட்டை வேடம் என்பதாகத்தானே எடுத்துக் கொள்ள முடியும், மேலும் இந்த தேர்தலில் தமிழகத்தைப் பொருத்த அளவில் ஈழத்தமிழர்களின் நலனை முன்னிறுத்தி வாக்கு கேட்பவர்களுக்கே மிகுதியாக வாக்கு கிடைக்கும் போல் தெரிகிறது. ஆனால் யார் உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதை அனைத்துக் கட்சிகளும் அறிக்கைப் போர்களாக அடித்துக் கொள்ளும் வேளையில், யாருடைய கூட்டணி வெற்றி ஈழத்தமிழர்களுக்கு நன்மைசெய்ய முடியும் என்று முடிவு செய்யும் ஈழத்தமிழர்களின் குரலாக போராளிகளின் எண்ணம் வெளிப்பட்டதாகவே கருத முடிகிறது.

விடுதலைப் புலிகளால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதிமுக ஜெ கூட்டணி வெல்வதன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்கிறதா இல்லையா என்பதெல்லாம் தற்போதைய அரசியல் வாதிகளின் மன நிலையை வைத்து எவரும் சரியாக சொல்ல முடியாது. இருந்தாலும்

தமிழின மக்களுக்கு எதிராக இலங்கை அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் காங்கிரசு கூட்டணிக்கு எதிராக தமிழக மக்களின் எதிர்ப்பை பதிய வைத்ததாக அமையும். ஒருவேளை அதிமுக தேர்தல் வெற்றிக்கு பிறகு காங்கிரசை ஆதரித்தால் ? அப்போது திமுக எதிர்கட்சி தானே, அவர்களே அதிமுக - காங்கிரசு கூட்டணியின் சந்தர்பவாதம் பற்றிப் பேசுவார்கள். எப்படியும் எந்த கூட்டணியும் எந்த நன்மையும் செய்யப் போவதில்லை, வெறும் அரசியல் ஸ்டண்ட் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும் 'காங்கிரசுக்கு எதிராக' என வாக்குகளைப் அளிப்பதன் மூலம் எதிர்ப்பு பதிய வைக்கப்படுகிறது. இதைத்தான் ஈழத்தமிழர்கள் விரும்புகிறார்கள், அதைத்தான் வைகோவிடம் போராளிகள் சொல்லி வைகோவை அதிமுகவில் தொடர கேட்டுக் கொண்டுள்ளார்கள் என்பதாக நினைக்க முடிகிறது.

காங்கிரசை அதிமுக கூட்டணிக்கு மறைமுகமாக அழைத்துப் பார்த்ததில் ஒன்றும் பலனில்லை என்பதால் மாற்று வழிகளில் செல்ல வேண்டிய முடிவுக்கு வந்தவராக ஜெ ஈழ அரசியலை கையில் எடுத்தார் என்பது அரசியல் நோக்கர்கள் அறிந்த ஒன்றுதான். ஈழத்தமிழர்களின், தமிழக மீனவர்களின் நலனைவிட காங்கிரஸ் - திமுக கூட்டணியும், நட்பும் உறுதியானதா ? இந்த உறுதிக்கு பெவிக்கால் ஆனவை இரண்டு

1. சிறுபாண்மை உறுப்பினர்களுடன் தொடரும் திமுக அரசின் ஆட்சி கவிழ்க்கப்படும் என்கிற தொடர் மிரட்டல்
2. திமுகவின் ஸ்பெக்ட்ரம் ரகசியம் அறிந்துள்ள காங்கிரசு மே(லி)டம்

ஒரு வேளை ஜெ வென்றால் அதன் பிறகு திமுக - காங்கிரசு கூட்டணியை உடைக்க, காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய அரசு அமைந்ததும், திமுக அரசை கவிழ்த்துவிட்டு விட்டு, டெல்லியில் ஒரு தேனீர் விருந்தில் கலந்து கொண்டு காங்கிரசையும் கவிழ்பார், அதன் பிறகு என்ன ? அதிமுக, காங்கிரசு, திமுக தனித்தனியாக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கும், இதன் மூலம் இமேஜை உயர்த்திக் கொண்டு, சில்லரைக் கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு மீண்டும் தமிழக அரியணை ஏறலாம் என்பதே அதிமுகவின் அரச தந்திர திட்டம் என்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்

யாரும் காப்பாற்ற முடியாது, அறிவும், ஆள் பலமும், பணமும் கூடவே ஏமாற்றும் வழிகளும் தெரிந்தவனே பிழைப்பான்

12 ஏப்ரல், 2009

தமிழ் 'விரோதி' குறித்து ...

இந்த வேளையில் இந்தத் தலைப்பு ஈழத்துடன் தொடர்பு படித்தி கலைஞரையோ, காங்கிரசாரையோ நினைக்க வைக்கலாம், ஆனால் அது பற்றியல்ல ( 'அது பற்றி' என்பதை பொதுவாக விஷயம், விசயம், விடயம் என்று எழுதுவர், விஷயம் என்பது வடச் சொல் ஆகையால் தமிழில் அதை விடயம். விசயம் ஆக்கிப் பயன்படுத்துவர், ஒன்றைப் பற்றிப் பேசுவது விசயம் என்று பொருள் படும் ஆதலால், அவற்றை முறையாக 'பற்றியம்' என்று சொல்வாதே பொருத்தமானது, தூய தமிழ்ச் சொல்லாகும் என்பது பாவணர் வழக்கு, இங்கு பற்றியம் 'விஷ'யம் பற்றியதல்ல, சொற் புழக்கத்திற்காக 'பற்றியம்' பற்றினேன்)

தமிழாண்டுகள் என நம்பவைக்கப் பட்டவற்றில் சாலிவாகன அல்லது சக ஆண்டாக அறுபது ஆண்டுகள் சொல்லப்படுகிறது, அவற்றில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை என்பது பழைய தகவல், ஆனால் தமிழரைத் தவிர வேறொ எவரும் அந்த அறுபது ஆண்டு முறைகளைப் பயன்படுத்துவதில்லை என்பது தெரியுமா ? இந்த ஆண்டு 'விரோதி' ஆண்டாமே ? ஒரு தெலுங்கரிடமோ, கன்னடரிடமோ கேட்டால், எழுத்தாளர் இராஜேந்திர குமாரின் 'ங்கே' என விழிப்பார்கள். பாம்பு பஞ்சாங்கங்கள் பயன்படுத்தி சோதிடம் சொல்லுவது / கேட்பது (இன்னும்) தமிழர்களிடத்தே தான் இருக்கிறது என்பதை உணர்த்துவதாக தமிழ் ஆண்டு என்ற பெயரில் 60 ஆண்டுகளில் வடமொழிப் பெயர்கள் புழங்கி வருகின்றன. அறுபது ஆண்டுகள் எப்படி தோன்றின என்கிற 'ஆய்' கதைகள் பலரும் அறிந்திருப்பதால் சொல்லத் தேவை இல்லை, அழுக்கில் தோன்றியதாக சொல்லப்படும் பிள்ளையார் கதை போன்றதே. இதற்கெல்லாம் யாரு கவலைப்படப் போகிறார்கள் ? பிள்ளையார் அழுக்கில் தோன்றி இருந்தாலும் பிள்ளையாருக்கு வைக்கப்படும் கொழுக்கட்டை சுவையானது தான், எனவே கவலை இல்லைதான்.

இதோ இங்கே தினமலரின் நாற்றத்தில் ( மணம் என்ற பொருளும் உண்டு) நான் கண்டது, தமிழ் பற்றில் பணம் செலவு செய்து தமிழ் நாட்காட்டி அச்சடித்தவர் ஓட்டாண்டி யானாராம். இதை தனக்கே உரிய கேலியும், கிண்டலும் மற்றும் தமிழ் வெறுப்பு மூலம் தினமலர் சொல்ல வருவது, தமிழ் பற்று என்ற பெயரில் ஒருவர் நட்டப்பட்டுவிட்டார், மற்றவர்களும் தமிழ் பற்றி அது இது என்றெல்லாம் இருக்காதிர்கள் என்பதை மறைமுகமாக அறிவுறுத்துகிறது. தினமலர் மற்றும் ஏனைய பார்பன ஊடகங்களைப் பார்த்து நாம் பரிதாபப் படாமல் இருக்கவே முடியவில்லை. பெரியாரின் சீர்திருத்த எழுத்துகளை எம்ஜிஆர் அரசு, அரசு ஆணையாக வெளியிட்டப் பிறகும் கூட அவற்றை ஏற்காமல், கொம்பு வைத்த 'லை, ளை' யும், பழைய சுழித்த றா, னா போன்றவற்றையே பயன்படுத்தி வந்தனர். காரணம் தமிழுக்கு சீர்த்திருத்தம் என்றால் அதை பார்பன ஊடகங்கள் தான் முடிவு செய்ய முடியும், இராமசாமி நாயகர் அல்ல என்பது இவர்களின் எண்ணம். ஆனால் அப்படி அவர்களால் தொடர்ந்து இருக்க முடியவில்லை. பெரியாரின் சீர்த்திருத்த எழுத்துக்களுக்கு விரைவாகவே மாறினார்கள். அதற்கு முன்பு இவர்களின் வாதம் வழி வழி வந்த தமிழ் எழுத்தை மாற்றக் கூடாது என்னும் வரட்டு வாதமே. மாற்றியதும் தமிழ் தட்டச்சுப் பொறியில் பல எழுத்துக்கள் குறைக்கப்பட்டு விரைவாக தட்டச்சுவதற்கு பெரும் பயனாக அமைந்தது. மற்ற இந்திய மொழிக்காரர்கள் இன்னும் கூட்டெழுத்துக்களை வைத்திருக்கிறார்கள். ஏனைய இந்திய மொழிகளைக் காட்டிலும் தமிழ் மொழி அனைத்து இலக்கிய வளங்களையும் மிகுதியாகவே பெற்றுள்ளது என்பதற்கு எண்ணிக்கையில் மிகுதியாக இருக்கும் இணைய தளங்களே சான்று.

எந்த ஒரு சீர்திருத்தத்தின் போதும் நலிவடைகிறோம் (பாதிப்பு) என்று நம்புபவர்கள் அல்லது அவ்வாறு எண்ணிக் கொள்வோர் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்புதான். அவர்களின் கருத்துக்களை எண்ணங்களை மதிக்கலாம், அதற்காக தமிழருக்கும், தமிழுக்கும் நன்மை அளிப்பவற்றை நிறுத்தி வைக்கத் தேவையில்லை. அதே போல் இவையெல்லாம் அவர்களுக்கு புரியாமல் இல்லை, ஆனாலும் முத்தாய்ப்பாக அவர்கள் கூறுவது, இந்த சீர்த்திருத்ததின் மூலம் கருணாநிதி வரலாற்றில் இடம் பெறத் துடிக்கிறார்' என்கிற குற்றச் சாட்டு. இந்த குற்றச் சாட்டில் இருக்கும் ஒப்புதல் என்ன என்றால் 'தமிழ் சீர்த்திருத்தம் அடைவதை ஒப்புக் கொள்கிறோம், ஆனால் அதன் பெருமை கருணாநிதிக்குச் செல்வதைத் தான் எங்களால் ஏற்க முடியவில்லை' என்பவை தான்.

இப்போதும் கூட ஆவணி அவிட்டம் போன்றவை நாள்காட்டியில் இருந்தாலும், அந்த நாளில் பூணூல் அணிந்து கொள்பவர்கள், அதனைக் கொண்டாடுபவர்கள் ஆசாரி, பத்தர் மற்றும் பார்பனர் மட்டுமே அனைவரும் அல்ல. அது போல் சித்திரையை முதல் தேதியை விருப்பப் பட்டவர்கள் கொண்டாட யார் தடையாக இருக்கப் போகிறார்கள் ? பிறகு எதற்கு தேவையற்ற ஓலம் ? அரசு அறிவிப்பு தமிழ் புத்தாண்டின் தேதி மாற்றம் குறித்து மட்டுமே. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு அறியப்படதா 'அட்சய திரிதியை' என்ற நுடபமாக நுழைக்கப்பட்ட நகை நம்பிக்கைளை எல்லாம், பழங்காலத்தை ஒப்பிட்டு 'அட்சய திரிதியை போன்ற பரபரப்பு' நம்மிடையே தேவையே இல்லாத பரபரப்பு, இவற்றை தமிழர்கள் தவிர்க்கலாம் அல்லது புறக்கணிக்கலாம் என்று சொல்லத் துணிவு கொள்ளாதோர், தமிழ் புத்தாண்டின் தேதி குறித்து எதிர்ப்பு தெரிவிப்பது வெறும் வீம்பு அரசியல் மட்டும்தான்.

11 ஏப்ரல், 2009

எலவச வெளம்பரம் - NO NO... Mr NO

பதிவர்களின் பதிவுகளுக்கு இலவச மதிப்பீடு வேண்டுமென்றால் 'Mr No' விடம் விண்ணப்பம் வையுங்கள்.

இதுவரை பயன்பெற்றவர்கள்

தருமி,
விக்னேஷ்வரன்,
மணிகண்டன் மற்றும்
டிபிசிடி

மிஸ்டர் No யார் ?

பொழுது போகாத ஆங்கில அறிவாளி ( ஆங்கில மொழி அறிந்தவர், மற்றபடி அறிவாளி ? No No) , உங்கள் பதிவில் நொள்ளை சொத்தை கண்டுபிடித்துச் சொல்லுவார்.

ப்ளாக் எழுதுகிறவர்கள் பைத்தியமாம், தெளிவில்லாமல் எழுதுறாங்களாம் அண்ணார் ரொம்ப குறைபட்டுக் கொள்கிறார். அவர் மெச்சும் அளவுக்கு எந்த ப்ளாக்கும் இல்லையாம். உங்கள் ப்ளாக் மெச்சும் படி இருக்கிறதா ? ன்னு அறிய அண்ணாருக்கு விண்ணப்பம் வையுங்க.

அண்ணாரின் பின்னூட்டுங்கள் தொகுப்பு :

No 7:51 PM, April 07, 2009
Thiru Kovi Kannan,

Apologize for not being able to write in Tamil. I move around quite often and its difficult to set myself to Tamil fonts. If I resort to typing Tamil through English, it would be too tiresome for you to read.

மேலும் படிக்க...

இது மணிகண்டனுக்கு,

No 9:35 PM, April 08, 2009
Manikandan Dear,

I agree dear that I had to close with a parting shot. I should have stopped. But dear, something inspired me to look into what might come out of the holy brain and mouth that gets inspiration from Kuruvi.

Dear Oh dear, if you do not know, Kuruvi lovers are known to have a very limited cognitive capacity. In the event of not being able to impart significant verbiage on Kuruvi annan directly, atleast during my life time, the best I could do is to train my guns on one of those that professes great love for the Ogre that is now dishing toxic waste into Tamilnadu, in the name of cinema heroism. So dear, if I do not let go of this opportunity, then I am missing something. Hence the parting shot got a bit extended!

மேலும் படிக்க...


இது தருமிக்கு,

I hope you would have figured out whom I am talking about. This is about the venerable Mr. Tharumi, who I accept, is an extraordinary character that seeks salvation in life by blogging, blogging and more blogging which is of course is done without a slightest concern for the kind of E-waste and server clogging that he creates by dishing out reams and reams of electronic bits and bytes day in and day out!

I was truly shocked when I noted that he has atleast four or five blogs which he keeps filling up with such inanity and such regularity. In fact I almost started crying when I saw in one of his blogs about meeting with a co-blogger and discussing many things that otherwise would not interest even a bit to anyone in this world including his own shadow மேலும் படிக்க...

விக்னேஷ்வரனுக்கு...

Here comes Mr. Vikhneswaran!

Vanga Sir Vanga!

I saw what you like to read. Mu VA, Sandilyan, Kalki, Vairamuthu. That’s all OK but you have ended this with "Kandathai padippen". Does this means you read all trash or you read whatever you see? I feel the former is true as you are now attempting to read Kovi Sir’s blog!

But I do respect your sentiments about keeping it short. But unfortunately nonsense can be condensed (Kovi Sir does this sometimes) but explaining that something is a nonsense certainly needs elaboration!

Thanks
Bye!


டிபிசிடிக்கு,

No 2:48 PM, April 09, 2009
Dear TBCD Annan, Vanga Sir Vanga,

Hope the weather in Bangalore is cool and comfortable.

Remember, you invited me to see your blog and asked for an analysis, psychiatric or otherwise. I swear that I would not have returned back to the web for the next three days but for what Iam seeing currently as your profile.

மேலும் படிக்க...




Mr No எதோ சிகிச்சையில் இருக்கிறார் போல, உங்களால் முடிந்த அளவுக்கு அவருக்கு உதவி செய்து குணப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

8 ஏப்ரல், 2009

செருப்பை வைத்து சர்தாஜி ஜோக் சொல்ல முடியுமா ?

இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு சீக்கியர் கொலை தொடர்பில் ஜக்தீஸ் டைட்லர் குற்றமற்றவர் என்று சிபிஐ அறிவித்ததாம். சிபிஐ அறிவிப்பு, உச்ச நீதிமன்ற சர்ட்டிபிகேட் இவையெல்லாம் விசாரணைகளின் அறிக்கை வழியாகப் பெறப்படுவது மட்டுமே. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோம் என்பது கண்டிப்பாக தெரியும், நீதியின் கண்கள் கட்டப்பட்டு இருந்தாலும் உண்மை ஒருபோதும் உறங்காது. - என்கிற ரீதியில் சீக்கியர்கள் ஜக்தீஷ் டைட்லரை காங்கிரஸ் தீவிரவாதியாகவே பார்க்கிறார்கள். தேர்தல் நேரத்தில் சிபிஐ அறிக்கையான ஜெக்தீஷ் குற்றமற்றவர் என்ற நகலை செய்தியாளர்கள் கூட்டத்தில் வாசிப்பது காங்கிரசின் ஏமாற்று அரசியல் என்பதை சீக்கியர்கள் தெரிந்து கொண்டு, அதை வாசித்த ப.சிதம்பரத்தின் மீது செருப்பு வீசி தங்களது எதிர்ப்பை நன்றாக பதிவை வைத்திருக்கின்றன.

வழக்கம் போல் ஜென நாயக ஓனாய்கள் இது முறையற்ற, மூளையற்ற செயல் என்றெல்லாம் ஓலமிடக் கூடும். சீக்கயர்களுக்கு இன உணர்வு இருக்கிறது, ஒரு சீக்கியனுக்கு இருக்கும் தன்மானம் கூட தமிழனுக்குக் கிடையாது. ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுத்து, இறையாண்மையை இழிவு படுத்தினார் என்ற பெயரில் சீமான் சிறைபட்டு மாதம் ஆகிறது, பரிதாபமாக அஹிம்சாவாதியாக சிலர் தீக்குளித்து மாய்த்துக் கொள்கிறார்கள் ஆனால் இதுவரை அரசியல் தலைவர்களை நோக்கி ஒரு செருப்பும் பறக்கக் காணும் என்று பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

சீக்கியர் தன்மானம் உள்ளவர்கள், அவர்களைப் போற்றுவோம். சர்தாஜி ஜோக்குக்கு சிரிக்கும் நாம் தான் மானம் கெட்டவர்கள்

7 ஏப்ரல், 2009

தமிழ் பால் மற்றும் இந்தி குசுபு !

தமிழ் மேம்பாட்டுச் சிந்தனைவாதிகளில் இரு குழுக்கள் உண்டு. ஒரு குழு பிறமொழிச் சொற்களை தமிழில் அப்படியே எழுத வேண்டும் என்றும் எடுத்துக்காட்டு 'ஆஸ்திரேலியா, ஜப்பான்... குஷ்பு, ஸ்ரேயா'
மற்றொரு குழு தமிழில் வடசொல் தவிர்த்தும், மெய்யெழுத்து முதலில் வராமல் எழுதவேண்டும் என்றும் எடுத்துக்காட்டு 'ஆசுதிரேலியா, சப்பான், குசுபு, சிரேயா' இதில் எவர் சொல்வது தமிழை வளர்க்கும் அல்லது காக்கும் என்பது பல்வேறு காலகட்டங்களில் விவாதமாக நடைபெற்று வருகிறது.

வட எழுத்து வேண்டுமென்போர் சங்க காலத்திலேயே வடமொழிப் புணர்ச்சிக்கு இலக்கணம் எல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள், எனவே புறக்கணிப்பது தவறு என்கிறார்கள். எனக்குத் தெரிந்து திருகுறள் உட்பட எந்த சங்க இலக்கியத்திலும் வட எழுத்துக்கள் இல்லை. வட சொற்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் வடசொற்களாக வட எழுத்துக் கொண்டு அதை எழுதுவது தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது, சிலப்பதிகாரம், கம்ப இராமாயணம் ஆகியவற்றில் வட எழுத்துக்களின் (ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ் போன்ற) ஒலிகளைக் குறிக்கும் ஒரு எழுத்தைக் கூட காணவியலாது. ல்க்ஷ்மன் என்பதை இலக்குவன் என்றும் விபிஷனன் என்ற விபிடனன் மாற்றியே எழுதினான் கம்பன். தசம் என்பது தமிழ்சொல் இல்லை என்றாலும் வடஎழுத்துக்கள் இல்லாமல் எழுத முடியும் என்பதால் பத்து இரதங்களைக் கொண்டவன் என்ற பொருள் படும் தசரதன் என்ற பெயரை அப்படியே வைத்துக் கொண்டான். இது போன்றே சிலப்பதிகாரத்தில் அறியப்படும் அளவுக்கு வடசொற்கள் கலந்திருந்தலும் வட எழுத்துக்களைக் காணவே முடியாது. 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தேம்பாவணி மற்றும் சீறாப் புராணம் என்னும் தமிழ் கிறித்துவ, இசுலாமியர் இலக்கியத்திலும் வட எழுத்துக்களே கிடையாது

வட எழுத்துக்களில் இருக்கும் உயிர், மெய் என 51 எழுத்துக்களில் தமிழுக்கும் பொதுவாக இருக்கும் எழுத்துக்கள் தவிர்த்து ஒலி பொருந்தி வராமல் இருக்கும் ij,sh, ssh, ksha, ikh ஒலியை உடைய எழுதுக்களை தமிழில் எழுதுவதற்க்கக ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ் ஆகிய மெய் எழுத்துக்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்படது, இவை வட ஒலியை குறிக்க பயன்படும் எழுத்து என்றாலும் இவை தமிழிருவில் ஆக்கிப் பயன்படுத்திய (கிருந்த) எழுத்துக்கள், இந்த வடிவத்தில் (ஜ்,ஸ்,ஷ்,க்ஷ்,ஹ்) பிற மொழிகளில் இதே எழுத்துகள் எங்கும் பயன்படுத்தபடவில்லை. எனவே இவை வட சொற்களை எழுதப்பயன்படும் தமிழ் உருவ எழுத்துக்கள் என்றே புரிந்து கொள்வது நலம், சரி. இவற்றை வட எழுத்துக்கள் என்று சொல்வதைவிட திசைச் சொற்களை எழுதப் பயன்படும் தமிழ் திசை எழுத்துக்கள் என்று சொல்வதே சிறப்பு.

இதை பயன்படுத்தலாமா ? கூடாதா ?

உலகில் வேறெங்கிலும் அந்தந்த மொழிகளில் உள்ள மொத்த எழுத்துக்களை கூட்டுவதோ குறைப்பதோ வழக்கில் இல்லை. அப்படி கூட்டும் பொழுது மொழியின் தன்மையில் பெரிய இழப்பும், கலப்பும் ஏற்படும். சீனம் தவிர்த்து சீனப் பெயர்களை அதே உச்சரிப்பில் எழுதும் மொழிகள் எதுவுமே கிடையாது, ஏனெனில் மொழி என்பது நாவசை, தொண்டை, உள் நாக்கு, அடிநாக்கு ஆகியவற்றில் ஒலி தொடர்புடன் இயல்பாக அமைந்து, அம்மொழி சொற்களால் பேசப்பட்டு எழுத்து வழக்காகிறது. இதுவே உலக மொழிகள் அனைத்திலும் நடைமுறை. சுட்டுப் போட்டாலும் ஒரு சீனக்காரனை 'R' என்ற ஒலிக்குறிப்பை அவனைச் சொல்ல வைக்கவே முடியாது, அவர்கள் மொழியிலும் 'R' ஐக்குறிக்கும் எழுத்துகள் கிடையாது, இது போன்றே ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. அந்த தனித்தன்மை பிற மொழிகளில் இல்லாதது என்பது அம்மொழியின் குறைபாடுகள் அல்ல. தமிழின் சிறப்பான 'ழ' மலையாளம் தவிர்த்து உலகில் எந்த மொழிகளிலும் கிடையாது, அனைத்து மொழிகளுமே டமில் என்றே தமிழைக் குறிக்கும் இடங்களில் எழுதி வருகின்றன.

தமிழ் இலக்கண முறைப்படி மெய்யெழுத்துக்கள் சொல்லின் முதலில் வருவதென்பது ஒப்பில்லாத ஒன்று. ப்ரேமா > பிரேமா என்றே எழுதுவது வழக்கம், ஜீஸஸ் என்பதை ஏசு என்று கிறித்துவ தமிழார்வளர்கள் தமிழ் மொழி ஒலிக்கு ஏற்றவாரே பெயர் மாற்றி பயன்படுத்தினர். 'ஏசு' என்று பிற மொழிக்காரர்களிடம் சொல்லிப் பாருங்கள், அந்த பெயர் யாருடையது என்று எவருக்கும் தெரியாது. மொஹமட் என்ற நபிப் பெயரை தமிழர்கள் முகமது என்றே மாற்றி எழுதி பயன்படுத்தினார்கள்.

வட எழுத்துக்கள் மிகுதியாக பயன்படும் இடங்கள் என்றால் அது பெயர் சொற்களில் தான். முடிந்த அளவு அதைத் தவிர்ப்பதால் தமிழுக்கு நலமே.
எதோ ஒரு பதிவில் (ரத்னேஷ் அண்ணன் பதிவில் என்றே நினைக்கிறேன்) சரியாக நினைவு இல்லை, குஷ்பு என்பதை குசுபு என்று எழுதினால் அபத்தமாக இருக்காதா ? என்பது போல் எழுதி இருந்தார். குசும்பன் என்று எழுதிப் படிக்கும் போது குசுபு என்பதில் என்ன அபத்தம் என்பது எனக்குப் புரியவில்லை. தஞ்சை என்று தமிழில் எழுதிய சொல்லை ஆங்கிலத்தில் எழுதும் போது Thanjai என்றே எழுதுகிறோம், அதில் ஒலிப்பும் மாறவில்லை. தமிழில் இல்லாத 'ஜ' உட்சரிப்பு அந்த சொல்லில் இருக்கிறது அல்லவா ? 'ங்''ஞ்' போன்ற சொற்கள் அத்தகைய பலுக்குதலை (உச்சரிப்பை) தரவல்லது. இன்னொரு பதிவில் ஜானி என்பதை தமிழில் எழுதினால் சானி என்று தானே வரும் அபத்தமாக இல்லையா என்று கேட்கப்பட்டு இருந்தது. சாணி குறித்து எழுதும் போது தானே சாணியைப் பற்றி எழுதி இருப்பார்கள், சானியை சாணியாக்கிப் பார்ப்பது நம்முடைய பிழைதானே. சானி என்று எழுத்தளவில் எழுதிவிட்டு படிக்கும் போது 'ஜானி' என்று படித்தால் எந்த தவறும் இல்லை. இவை ஆங்கிலத்திலும் உள்ள முறைதான், pseudo என்பதில் முன்னே 'P' படிக்கப்படாமல் இருக்கும் 'சியோடோ' ஓசைதானே
இருக்கும். World என்று R சேர்த்து எழுதிவிட்டு வேல்ட் என்று தானே படிக்கிறோம், இன்னும் சொல்லப் போனால் ஆங்கிலத்தில் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ போன்ற நெடிலோசைகளே கிடையாது

எழுதுவது போலவே படிக்கப் படவேண்டும் என்ற இலக்கண விதிக்கு மாறாக சில சொற்களை இப்படித்தான் படிக்க வேண்டும் என்று விதி வைத்திருக்கிறார்கள். தமிழில் அம்முறையை நாம் பழக்கபடுத்திக் கொள்ளவில்லை என்பது தமிழர்களின் குறையே அன்றி தமிழின் குறை அல்ல. அது மட்டுமல்ல ஒரு மொழியின் குறிப்பிட்ட சில சொற்கள் பிற மொழிகளில் தரக்குறைவான (ஆபாசச்) சொல்லின் ஓசையை போன்று இருக்கும், அதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் தரமுடியும். தமிழில் பால், இந்தியில் பால் என்றால் முடி/மயிர். ஜான் பால் (இந்தி பொருளில் ஜான் மயிர்) என்ற பெயரை இந்தியில் எழுதாதீர்கள் என்று எவரும் சொன்னால் அது அறிவீனம் தானே. குசுபு, சானி என்று எழுதும் போது எழுதிவிட்டு படிக்கும் போது 'குஷ்பு', 'ஜானி' என்று படித்தால் என்ன தவறு. என்ன தான் வடசொற்களில் எழுதினாலும் படித்தவர்கள் தவிர்த்து கிரமப் புரங்களில் குசுபு, எம்சிஆர்,சிவாசி, ரசினி, பிரபு என்று தானே சொல்லுவார்கள்.

'சாலி சம்பர்' என்று எழுதும் போது எழுதிவிட்டு ஜாலி ஜம்பர் என்று படித்தால் எந்த தவறும் இல்லை :)

*****

தமிழில் பிற மொழி ஒலிவடிவை அப்படியே தரவேண்டும் எனவே அவற்றை வட எழுத்துக்களில் தான் எழுதவேண்டும் என்று சொல்லுபவர்கள் அதன் மூலம் எந்த புரட்சியையும் செய்யவில்லை
அதே போன்றே வட எழுத்துக்களை தவிர்த்து விட்டு தமிழ் எழுத வேண்டும் என்று சொல்பவர்களை பிற்போக்கு வாதிகளாக கருதத் தேவையும் இல்லை. உண்மையில் வட எழுத்துக்கள் தவிர்க்கப்பட்டு தமிழைப் பயன்படுத்தி வந்தால், பெயர்ச் சொல் தவிர்த்து வினைச் சொற்களிலும் மிகுதியாக (இங்க த்ரி கேர்ள்ஸ் வந்திருக்காங்க, வெரிகுட் டான்ஸ் ஆடினாங்க...விஜய் டிவி காம்பெயரிங்) கலந்த பிற மொழிச் சொற்களின் தாக்கம் குறைந்திருக்கும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்