பின்பற்றுபவர்கள்

14 செப்டம்பர், 2009

ஜெமோவின் ஏழாம் உலகம் !

அண்மையில் நூலகத்தின் வழியாக ஜெயமோகனின் ஏழாம் உலகம் வாசிக்க கிடைத்தது, ஒரு எழுத்தாளனின் பண்முகத் தன்மை எப்படி இருக்க வேண்டும் என்று அடையாளப்படுத்தும் ஒரு ஆக்கம் அதுவென்றால் அது மிகையல்ல. 'நான் கடவுள் படம்' ஏழாம் உலகத்தின் தழுவல் என்றாலும். ஏழாம் உலகம் சுழலும் தளம் நான் கடவுள் படத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.

பிச்சைக்குத் தள்ளப்படும் உடல்குறையுற்றோரின் துயரங்களை அவர்களோடு கோவில் படிக்கட்டுகளில் அமர்ந்து, படுத்து, அவர்கள் உழலும், சாக்கடைகளிலும், அவர்களின் மலக் கழிவுகளிலும் பயணித்தது போன்று மிக நேர்த்தியாக வட்டார வழக்கு சொல்லாடல், காட்சி அனைத்தையும் வாசகனின் மனதிற்குள் காட்சியாக விரிய வைக்கப்பட்டு இருக்கிறது, ஒரு எழுத்தாளனுக்கு பலமொழிப் புலமை எந்த அளவுக்கு அவசியம், அதன் தேவையால் ஒரு இயல்பான ஒரு இலக்கிய நடையைத் தரமுடியும் என்பதை அந்த கதையில் வரும் மலையாளப் பாத்திரங்களின் மூலம் உணர்த்தப்படுகிறது. உடற்குறையுற்றவர்கள் மீது ஆளுமை செலுத்தி அவர்களின் பிச்சையைத் தன் தொழிலாக வைத்திருக்கும் 'பண்டாரம்' பாத்திரம் கதையின் மையம் என்றாலும், கதையில் இடம் பெறும் ஒவ்வொரு பாத்திர படைப்பும் தனித்தனியாக ஒளிர வைத்திருக்கிறார்.

ஆபாசம், அசூசை, வெட்கம், சொரணை இவை எல்லாம் பிழைப்பு வாதத்திற்கு முன் அற்பமே என்பதை கதையைப் படிப்பவர்கள் புரிந்து கொண்டு அதிர்ச்சி அடைவார்கள். உதாரணத்திற்கு பழனி கோவிலுனுள் சிலைக்கு அருகே பண்டிதர்கள் வெற்றிலை எச்சிலைத் துப்புவதையும், சிறுநீர் கழிப்பதையும் எழுதி அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறார். உண்மைகள் புனித பேச்சுக்கும், போர்வைக்கும் முன்பு காவிப் பற்கள் இளிப்பதைப் பார்க்கும் போது, அது புனிதப் பேச்சிலும், புனித போர்வையிலும் மயங்கிக் கிடக்கும் உலகத்தின் மீது அசுத்தங்களை அபிசேகமாக்குகிறது, ஏற்க கடினமாக இருந்தாலும் அவை இயல்பாக நடக்கும் உண்மைகள் என்னும் போது பொதுச் சமூகத்தின் மீதும் அதன் கட்டமைப்புகள் மீது வெறுப்பு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

'யார் வேண்டுமானாலும், நம்மை விற்கலாம், வாங்கலாம்' என்று மனம் வெதும்பும் உடற்குறையுற்ற பிச்சைக்காரர்களின் இயலாமை விளிம்பு நிலை மாந்தர்களின் மெல்லிய முனுகலாக பதியவைக்கப்பட்டு இருக்கிறது. கதையில் ஒழுகும் எச்சிலும், வீசும் மலத்தின் நாற்றமும் நாம் வாழும் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட கழிவுகளாகவும், நாம் நாற்றத்தை மறைக்க வாசனையைப் பூசிக் கொண்டு நடமாடுவதை இயல்பாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதைக் கதையெங்கும் உணர்த்தி இருக்கிறார்.

பிச்சைக்காரர்களை கொடுமைப் படுத்தி அவர்களை 'உருப்படி' என்று அழைத்துவரும் பண்டாரம் 'நான் என்ன பாவம், செய்தேன், கெடுதல் செய்தேன், யாருக்கு துரோகம் செய்தேன்' என்றெல்லாம் முருகன் சன்னதியில் வேண்டிக் கொள்வது, உடற்குறையுற்றோர்களை பண்டாரம் போன்றவர்கள் ஒரு மனித இனமாகவே மதிக்கவில்லை, அவர்களை ஒரு பொருளியலுக்கு மூலதனமாகப் பயன்படும் விலங்கைப் போன்றே நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் நன்கு உணர்த்தி இருக்கிறார்.

சுயநல உலகின் மீது ஒவ்வொரு பக்கத்திலும் செருப்புகளை வீசி காரி உமிழும் ஜெமோவின் 'ஏழாம் உலக நாவல்' தமிழ் சூழலில் மிகவும் போற்றப் படவேண்டிய, பலருக்கும் பரிந்துரைக்கப்பட வேண்டிய நாவல். ஜெமோவின் உழைப்பும், தகவல் சேகரிப்பும் எண்ணும் போதெல்லாம் வியப்பாக இருக்கிறது.

ஜெமோ முன்னுரையில் தன்னடக்கமாக குறிப்பிட்ட வரிகள் ' நான் எழுதியதிலேயே இந்த நாவல் தான் ஜெயகாந்தனின் எழுத்துக்கு அருகே நிற்கும் தகுதியைப் பெற்றிருப்பதாக நினைக்கிறேன்' என்கிற வரியில் அவரது இலக்கிய வேட்கை எந்த அளவுக்கு தாகம் கொண்டதாக இருந்து இப்படி ஒரு சிறப்பான படைப்பை உருவாக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கையில் இலக்கிய வாசகன் என்ற முறையில் ஜெமோவை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

நான் கடவுள் படம் பார்த்த பிறகு, அந்தப் படம் இந்துத்துவாவை முன்னிறுத்துகிறது என்றும் ஜெமோ அவற்றை வலிந்து செய்திருப்பாரோ என்று நான் நினைத்துக் கொண்டிருத்தேன். விளிம்பு நிலை மாந்தர்கள் பற்றி அழுத்தமாக புரிய வைக்க வேண்டிய சூழலில் அகோரியை இடை நுழைத்து மூலக் கதைச் சிதைக்கப்பட்டு இருக்கிறது என்றே தற்போது எனது புரிதலாக இருக்கிறது. பாலாவின் 'நான் கடவுள்' படத்தில் ஜெமோவின் 'ஏழாம் உலகத்திற்கு' உயிர் கொடுத்திருந்தாலும் திரைக்கதைகாக மூலக் கதையில் நடைப் பெற்ற மாற்றங்கள் படைப்பாளி என்ற முறையில் ஜெமோவை வருத்தப்படுத்தி இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

ஜெமோவின் மற்ற எழுத்துக்கள் மீது உங்களுக்கு எப்படிப் பட்ட விமர்சனம் இருந்தாலும் அவை எல்லாமும் 'ஏழாம் உலகம்' ஒரு முறை வாசித்துவிட்டால் மறைந்துவிடும்.

15 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

புத்தகம் பாஸ்.,

(படித்துமுடித்தும் கொடுக்கவும்)

அப்பாவி முரு சொன்னது…

அண்ணே என்ன ஆச்சு?



ஓட்டுப் போட தமிழிஸ் சுட்டியைக் காணோம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
அண்ணே என்ன ஆச்சு?



ஓட்டுப் போட தமிழிஸ் சுட்டியைக் காணோம்?
//

அந்த திரட்டியில் எனது லாகின் முடக்கப்பட்டது, எனக்கும் இணைக்க விருப்பம் இல்லை. தான் தோன்றிகள் ஏன் திரட்டி என்று ஒன்று சுய சொரிதலுக்கு வைத்து அதை பொதுவில் வைக்கிறார்களோ, சொந்த காழ்ப்புகளுக்கு இடம் உண்டு என்று முன்குறிப்பு கொடுத்தால் என் போன்றவர்கள் இணைக்காமல் இருப்போம்.

வாழ்க நடுநெலமை

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்பாவி முரு said...
புத்தகம் பாஸ்.,

(படித்துமுடித்தும் கொடுக்கவும்)
//

2 வாரம் முடிஞ்சு போச்சு, தேம்பனீஸ் நூலகத்தில் போடனும், அங்கிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

ஆங்கில டப்பிங் பட பாணியில் படிக்கவும் :)...



சிங்கையில் ஒரு இலக்கிய சூரியன் உதிக்க தயாராகிவிட்டது....

வாசிப்பு அனுபவமும் பெறுகிறது...

எல்லாரும் ஓடுங்க ஓடுங்க..

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
ஆங்கில டப்பிங் பட பாணியில் படிக்கவும் :)...



சிங்கையில் ஒரு இலக்கிய சூரியன் உதிக்க தயாராகிவிட்டது....

வாசிப்பு அனுபவமும் பெறுகிறது...

எல்லாரும் ஓடுங்க ஓடுங்க..
//

ஓம்கார் ஸ்வாமி,
ஏன் கொல வெறி, பேச்சு வார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்வோம் !
:)

துபாய் ராஜா சொன்னது…

நல்லதொரு பகிர்வு.

துளசி கோபால் சொன்னது…

போன பயணத்தில் வாங்கினேன். படிச்சு முடிச்சதும் மனசுலே இனந்தெரியாத ஒரு துக்கம், சுமை இப்படி.....

இதை வாசிக்குமுன்பே நான் கடவுள் பார்த்துருந்தேன். அப்புறம்தான்......

ஏழாம் உலகத்துக்கு அருகில் வந்து போன படமுன்னு நினைச்சேன்.

இதில் முழுக்க முழுக்க ...... அந்தப் பண்டாரத்தின் வாழ்க்கை, அவர் குடும்பமுன்னுதானே பின்னணியில் ஒடுது.

அப்புறம் இன்னொரு விஷயம்.... இங்கே இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டதாலே கேட்கிறேன்.....

பண்டாரம் என்பது ஒரு சாதியைக் குறிக்குதாம். அதே போல ஆண்டி என்ற சொல்லும் ஒரு சாதியைக் குறிப்பிடுதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
போன பயணத்தில் வாங்கினேன். படிச்சு முடிச்சதும் மனசுலே இனந்தெரியாத ஒரு துக்கம், சுமை இப்படி.....

இதை வாசிக்குமுன்பே நான் கடவுள் பார்த்துருந்தேன். அப்புறம்தான்......

ஏழாம் உலகத்துக்கு அருகில் வந்து போன படமுன்னு நினைச்சேன்.

இதில் முழுக்க முழுக்க ...... அந்தப் பண்டாரத்தின் வாழ்க்கை, அவர் குடும்பமுன்னுதானே பின்னணியில் ஒடுது.

அப்புறம் இன்னொரு விஷயம்.... இங்கே இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டதாலே கேட்கிறேன்.....

பண்டாரம் என்பது ஒரு சாதியைக் குறிக்குதாம். அதே போல ஆண்டி என்ற சொல்லும் ஒரு சாதியைக் குறிப்பிடுதா?
//

பண்டாரம் என்னும் சாதி சில ஊர்களில் வாழ்வதாக நாவலில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நாவலில் பிச்சைக்காரர்கள் குறித்து அவரது ஆராய்ச்சி முழுவதும் அடங்கி இருக்கிறது என்பதால் அவர் சொல்வது சரியாகவே இருக்கும். பண்டாரம் சாதி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களின் தொழில் இதுவென்று தெரியாது.

ஆண்டிகள் என்பது சாதிப் பெயர் கிடையாது, கோவில் வாசலில் அமர்ந்தும், தெருக்களில் திருவோடு ஏந்தி பிச்சை எடுப்பவர்களையும் ஆண்டிகள் என்று சொல்லுவார்கள். ஆண்டிகள் சாமியார் தோற்றத்தில் இருப்பதால் முன்பு அவர்கள் சைவம் தான் சாப்பிடுவார்கள் என்று நினைத்ததுண்டு, பின்பு தான் அவர்கள் பழைய கருவாட்டுக்கு குழம்பையும் சாப்பிடுவார்கள், அவர்கள் காவி உடை போட்ட பிச்சைக்காரர்கள் என்று பிறகு தெரிந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//
துபாய் ராஜா said...
நல்லதொரு பகிர்வு.
//

மிக்க நன்றி !

அப்பாவி முரு சொன்னது…

//பண்டாரம் என்னும் சாதி சில ஊர்களில் வாழ்வதாக நாவலில் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நாவலில் பிச்சைக்காரர்கள் குறித்து அவரது ஆராய்ச்சி முழுவதும் அடங்கி இருக்கிறது என்பதால் அவர் சொல்வது சரியாகவே இருக்கும். பண்டாரம் சாதி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களின் தொழில் இதுவென்று தெரியாது.//

பண்டாரம் என்ற சாதியச் சேர்ந்தவர்கள், கோவிலின் அருகே இருந்து கோவிலுக்கு தேவையான பூக்கட்டுதல், தேங்காய் பழ வியாபாரம் பார்த்து வாழ்ந்துவருகிறார்கள்.

சி தயாளன் சொன்னது…

நான் கடவுள் படம் வருவதற்கு முன்பே நான் இந்த நாவலைப் படித்து விட்டதால், படம் பார்க்கும் போது நாவலுக்கும் கதைக்குமான வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. இந்த நாவலை முற்றாக படமாக்குவது மிக மிக கடினம்...:-)

அறிவிலி சொன்னது…

//’டொன்’ லீ
நான் கடவுள் படம் வருவதற்கு முன்பே நான் இந்த நாவலைப் படித்து விட்டதால், படம் பார்க்கும் போது நாவலுக்கும் கதைக்குமான வித்தியாசம் தெளிவாக தெரிந்தது. இந்த நாவலை முற்றாக படமாக்குவது மிக மிக கடினம்...:-)//

அதே.

Indian சொன்னது…

//பண்டாரம் சாதி நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். அவர்களின் தொழில் இதுவென்று தெரியாது.//

பண்டாரம் என்ற சாதியச் சேர்ந்தவர்கள், கோவிலின் அருகே இருந்து கோவிலுக்கு தேவையான பூக்கட்டுதல், தேங்காய் பழ வியாபாரம் பார்த்து வாழ்ந்துவருகிறார்கள்.//

கோவை பகுதியில் பண்டாரங்கள் கோவில்களில் (அம்மன், விநாயகர்) பூசாரிகளாக இருப்பார்கள்.

Unknown சொன்னது…

அது ஆண்டிப்பண்டாரம். ஒரு காலத்தில் பழனி முருகன் கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ராமநாதபுரம் ராமநாத ஆலயம் முதலிய இடங்களில் கோவில் அர்ச்சகர்களாக இருந்தவர்கள். பின் பிராமணர்களால் சிறுமைப்படுத்த பட்டு வெளியேற்றப்பட்டவர்கள். பண்டாரம் சாதியினர் வீரசைவர் உட்பிரிவில் (அதாவது) வீர சைவர்களின் பூசாரிகள் பண்டாரம் ஜாதியினர் வருவார்கள். இவர்களைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிபீடியாவில் தெரிந்து கொள்ளவும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்