பின்பற்றுபவர்கள்

22 ஜூலை, 2008

மரணத்தை வென்றவர்கள் !

அந்த ஆய்வுக்கூட அறையில் உரையாற்றிக் கொண்டு இருந்தார் 125 வயது விஞ்ஞானி வெள்ளையன்.

"அறிவியல் வளர்ச்சியின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இதனைக் கருதுகிறோம்..." 120 வயதிலும் சற்றும் பிசிறு இல்லாத கணீர் குறல்.

"மரணம் என்பது இயற்கையே... இன்றைக்கு செவ்வாயில் கோளில் உழுது பயிர்விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் மனித ஆற்றல் அளவிட முடியாது என்பது உறுதியாகிவிட்டது, நாட்டில் சாதாரண மக்களை விடுவோம், அறிவியல் அறிஞர்களை நீண்ட நாள் உயிர் வாழவைத்தால் அது ஒட்டு மொத்த மனித இனத்துகே நன்மை அளிக்கும்...எங்கள் ஆய்வுக்கூடத்து 70 ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக நான் இங்கே 120 ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கூடத்தில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்த இளமை மாறாத வாழ்கைக்கு ஆதாரமாக இருப்பது உடல் செல்கள்...உடல் செல்களை எப்போதும் புதுப்பித்துக் கொண்டிருக்க உதவுவது ஆன்டி ஆக்சிடென்ட் உணவு வகைகளே, காய்கறிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து அதிகம் ஆன்டி ஆக்சிடென்ட் உற்பத்தி செய்யும் உணவு பயர்களை விளைவித்துள்ளோம்...அதனையே உண்டும் வருகிறோம்...ஆனால் ஒன்று இரத்தம், செல்கள் புதுபிக்கப்பட்டாலும், உடலில் உள்ள எலும்புத் தேய்மானத்தின் காரணமாக இங்கு நான் உட்பட யாரும் எழுந்து நடமாடாத நிலையிலேயே இருக்கிறோம். சிந்திக்கும் ஆற்றலில் எங்களுக்கு குறைவில்லை.

வருங்காலத்தில் மனித இனத்தை 150 ஆண்டுகள் வரை வாழவைக்க எங்களது ஆராய்ச்சி உதவும் என்றே நினைக்கிறோம்"

மற்றொரு விஞ்ஞானி பழனியாண்டி உட்கார்ந்தே பேசினார்.

"எல்லாம் சரி...140 வயது ஆகும் எனக்கு சிந்தித்து செயல்படுவதில் குறைபாடு எதுவும் இல்லை...ஒரு இயந்திரத்தைப் போல் செயல்படுகிறேன். எனது கொள்ளுப் பேரனுக்கு பேரன் கூட மடிந்துவிட்டான், இவ்வளவு நாள் வாழ்வதால் எனக்கு தனிப்பட்ட பயன் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்கை என்பது நீண்ட நாள் வாழ்வது என்றே பலரும் நினைக்கிறார்கள். நீண்ட நாள் வாழ்வதைவிட இறந்து போவதே மேல். எனக்கான பொழுது போக்கு என்றால் கணணி திரையில் அமர்ந்து விளையாட்டுக்களைப் பார்ப்பது, உலக செய்திகளை அறிந்து கொள்வது தான், விளையாடும் அளவுக்கு உடலில் இருக்கும் எலும்புகள் அசைந்து கொடுத்து ஒத்துழைப்பது இல்லை. காவலாளி ஒருவன் அசையாது ஒரே இடத்தில் நின்று கொண்டு வருவேர் போவோரைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலவே உணர்கிறோம். கண்ணுக்கு முன்பு இளைஞர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனதிற்குள் அது போன்று நாமும் வாழவேண்டும் என்று நினைத்தாலும், அதனைச் செயல்படுத்தும் ஆற்றல் உடலுக்குள் இல்லை. மொத்தத்தில் 80 வயதுக்குபிறகு நான் வாழ்ந்து கொண்டிருக்கும் 60 ஆண்டுகளில் எந்த சுவையும் இல்லை. உலகத்தில் அறிஞர்கள், அறிவியாளர்கள் மடிவது போலவே அங்கங்கே பிறப்பார்கள், ஒட்டுமொத்த அறிவியல் கண்டு பிடிப்பென்பது தனிப்பட்ட ஒருவரின் முயற்சி அல்ல, பல்வேறு காலங்களில் தோன்றியவர்களின் பங்களிப்பே. என்னைப் போன்ற விஞ்ஞானிகளின் மூளையை வாழவைக்கிறேன் என்ற பெயரில் நாங்கள் உயிரோடு இருப்பதைத் தான் இந்த ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. இவை தேவையற்றது. இந்த வாழ்கை என் வயதை ஒத்த எவருக்குமே பிடிக்கவில்லை. வாழ்க்கை என்பது இயக்கத்துடன் இருந்து இயங்கும் போதே மடிவதுதான். அப்படி இல்லை என்றால் இயந்திரத்திற்கும் மனிதனுக்கும் வேறுபாடே இல்லை...இன்னும் எத்தனைக் காலம் இந்த ஆராய்ச்சிக் கூடத்திலேயே காலம் தள்ளப் போகிறோம் என்று நினைத்தால் வெறுப்பாகவே இருக்கிறது" என்றார்

அடுத்து ஒருவர் பேச ஆயத்தமாகும் போதே.....

இந்த நிகழ்ச்சியின் இடர்பாடாக அங்கே உள்ள பெரிய திரையில்.... "இன்னும் 10 வினாடிகளில் 10 ரிக்டர் அளவுகோளில் இங்கு பூகம்பம் நிகழ வாய்ப்புள்ளது.....உடனடியாக பாதுகாப்பான இடங்க..." என்று ஓடிக் கொண்டிருந்த போதே அங்கு ஏற்பட்ட வெறும் 10 வினாடி நேரமே நீடித்த பயங்கர நில அதிர்வில் அந்த நிலப்பகுதியே தரைமட்டமாகி இருந்தது.

**********

பின்குறிப்பு : சிறில் அலெக்சின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய மற்றொரு சிறுகதை.

கருப்பொருள் : மனிதன் எதிர்காலத்தில்... தன் வாழ்வை 150 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும், ஆனால் பெரிதாக பயனில்லை என்பது என் எண்ணம்... மருத்துவ கண்டுபிடிப்புகள் தவிர்த்து ... இயற்கைக்கு மாறனவற்றில் மனிதன் எவ்வளவுதான் போராடி வெற்றிப் பெற்றாலும்... எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளுக்கு முன்னால் அவை தூசு.

15 கருத்துகள்:

Sivaram சொன்னது…

வாழும் முறையைப் பொறுத்தே, அதன் பயன் அமைகிறது.. ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமல், 1000 ஆண்டுகள் வாழ்வதை விட, மற்றவர்க்கு உபயோகமாக குறுகிய காலம் வாழ்வதே மேல்..

வடுவூர் குமார் சொன்னது…

யோசிக்க வச்சிட்டீங்களே!!

சித்தன் சொன்னது…

//1000 ஆண்டுகள் வாழ்வதை விட, மற்றவர்க்கு உபயோகமாக குறுகிய காலம் வாழ்வதே மேல்..//

ரிப்பீட்டேய்ய்ய்ய்..

பரிசல்காரன் சொன்னது…

//இயற்கைக்கு மாறனவற்றில் மனிதன் எவ்வளவுதான் போராடி வெற்றிப் பெற்றாலும்... எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளுக்கு முன்னால் அவை தூசு.//


உண்மை!

மிக நல்ல கரு!

வாழ்த்துக்கள்!!

துளசி கோபால் சொன்னது…

கதைக்கரு அருமை.

குவாலிட்டி ஆஃப் லைஃப்ன்னு சொல்லி அருமை பெருமையாக உடல்நலத்தைப் பாதுகாத்த பல பெரியவர்கள் 'சாவு வராதா'ன்னு ஏங்கிக்கிட்டு முதியோர் இல்லத்தில் நிறையபேர் இங்கிருக்காங்க.

கைகால் நல்லா இருக்கும்போதே போவதைப்போல் ஒரு நற்பேறு இவ்வுலகில் வேறு உண்டோ?

வெண்பூ சொன்னது…

நல்ல கதைக் கரு.. எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி மற்றவர்களுக்கு உபயோகப்படும்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். சரியான கருத்து..

யோசிப்பவர் சொன்னது…

இப்பவும் ஒரு கேள்வி : கதையின் கருப்பொருளை தனியாக சொல்வதென்றால் எதற்காக கதை எழுத வேண்டும்.

பின்னூட்டத்தின் கருப்பொருள் : அதுதான் கதையிலேயே புரிகிறதே?! கருப்பொருள் தனியாக எழுத வேண்டிய அவசியமென்ன?

ஜெகதீசன் சொன்னது…

//
அதுதான் கதையிலேயே புரிகிறதே?! கருப்பொருள் தனியாக எழுத வேண்டிய அவசியமென்ன?
//
அதான?
:P

ஜெகதீசன் சொன்னது…

//
இப்பவும் ஒரு கேள்வி : கதையின் கருப்பொருளை தனியாக சொல்வதென்றால் எதற்காக கதை எழுத வேண்டும்.

பின்னூட்டத்தின் கருப்பொருள் : அதுதான் கதையிலேயே புரிகிறதே?! கருப்பொருள் தனியாக எழுத வேண்டிய அவசியமென்ன?
//
ஒரு வேளை என்னை மாதிரி அதிபுத்திசாலிகளுக்காக எழுதீருப்பீங்களோ?

கோவி.கண்ணன் சொன்னது…

//யோசிப்பவர் said...
இப்பவும் ஒரு கேள்வி : கதையின் கருப்பொருளை தனியாக சொல்வதென்றால் எதற்காக கதை எழுத வேண்டும்.

பின்னூட்டத்தின் கருப்பொருள் : அதுதான் கதையிலேயே புரிகிறதே?! கருப்பொருள் தனியாக எழுத வேண்டிய அவசியமென்ன?
//

மீண்டும் மீண்டும் சிரிப்பில் கடைசியில் சொல்லுவது போல் மெசேஜ்.
:)

Unknown சொன்னது…

ஏதுமில்லாத சத்தற்ற ஒரு வாழ்க்கையை அறிவியலுக்காகவும் உலகுக்காகவும் நம்மால் வாழ ஏலுமா?
யோசிக்க வேண்டிய விடயம்தான்.

Nimal சொன்னது…

மிக நல்ல கருப்பொருள்...
போட்டிக்கு வாழ்த்துகள்!!!

இரா. வசந்த குமார். சொன்னது…

ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமல், நம்மால் வாழவே முடியாது. நம்மை நம்பி, நாம் உண்ணும் உணவை நம்பி கோடிக்கணக்கான பாக்டீரியாக்களும், ஆயிரக்கணக்கான நுண் புழுக்களும் நம் உடலில் வாழ்கின்றன. நாம் தான் அவற்றுக்கு ஒரே உணவாதாரம்.

கருப்பொருளைக் கருதுகையில் 'வாழ்க்கை எதற்கு' என்று சிந்தித்துக் கொண்டே போனால், அது ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே வரும். எனவே கதையை ரசிப்போம், கருப்பொருளை ருசிப்போம்...;-)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

கதைக்கரு நல்லாத் தான் இருந்துச்சி கோவி அண்ணா!
ஆனா சொன்ன விதம் தான் கொஞ்சம் சொதப்பல்! சாரி!

இரு விஞ்ஞானிகள் எழுந்து presentation செய்வது போல் இருந்ததே தவிர, கதை போல் பின்னப்படவில்லை!

Unknown சொன்னது…

நல்ல சிந்தனை,

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அறிவியலால் ஒன்றை கண்டுபிடிக்கும் போது, அதன் கூட இயத்துக்குமனவற்றை கண்டுபிடிக்கும்.

வயதை அதிகபடுத்தும் அறிவியலால் எலும்புத் தேய்மானத்தை சரிபடுத்தவும், சிறந்த முறையில் எழுந்து நடமாடும் நிலையே அறிவியல் உருவக்கும்.

நாளை இவை நடந்தாலும் நடக்கலாம்.

காலம்
எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் !


நட்புடன்
--மஸ்தான்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்