பின்பற்றுபவர்கள்

3 பிப்ரவரி, 2012

ஓரின சேர்க்கையாளர்கள் - சீனாவின் மற்றொரு துயரம் !

திருநங்கைகள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து பேச மறுக்கும் சமூகங்களும் அரசுகளும் மெல்ல மெல்ல அது குறித்த பேச்சும் சேர்க்கைக்கான அனுமதிகளையும் ஒரு சில சட்டக் கட்டுப்பாடுகளுடன் வழங்கிவருகின்றன, மதச்சார்பற்ற அரசுகள் ஓரின சேர்க்கையாளர்களின் பாலியலை அனுமதித்திருப்பது தனிமனித நிலைப்பாடு என்ற அளவில் தான், எந்த ஒரு அரசும் ஊக்குவிப்பதற்காக அதனை செய்யவில்லை என்பதைத் தெளிவாகவே சொல்லுகின்றன. தனிமனிதன் பிறரை துன்பறுத்தாத தற்பாலியல் இச்சைகளுக்கு அரசுகள் குறுக்கே நிற்பது தவறு என்பதாக புரிய வைக்கப்பட்டு அத்தகைய நிலையை மேற்கத்திய நாடுகள் எடுத்ததும் பரவலாக அதே எண்ணங்கள் பிற மதம் சாராத கிழக்கு நாடுகளிலும் கடைபிடிக்கப்பட்டு இருக்கின்றன.

******

நேற்றைய சீன செய்திகளில் மொத்தம் 16 மில்லியன் (1 கோடியே 60 லட்சம்) பெண்கள் ஓரின சேர்க்கையாளர்களை மணந்திருக்கக் கூடும் என்ற செய்தியுடன், அந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சுட்டி செய்தி வெளி இட்டிருக்கிறது, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் 'ஓரின சேர்கையாளரின் மனைவியர்' என்ற பெயரில் இணைய தளம் துவங்கியதிலிருந்து இவை அங்கு பரவலான விழிப்புணர்வை எட்டி இருக்கிறதாம்.

குடும்ப அமைப்பு மற்றும் பண்பாடுகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, சீனர்களின் குடும்பங்களிலும் ஆண் குழந்தையின் தேவை இன்றியமையாதது என்றே கருதுகிறார்கள். மக்கள் தொகை குறித்த கட்டுப்பாடுகளினாலும் குடும்பத்துக்கு ஒரு குழந்தை தான் அனுமதி என்ற அளவில் பெற்றோருக்கு ஆணோ பெண்ணோ ஒரு குழந்தை தான் இருக்கும். இப்படி அனுமதிக்கப்பட்டு பிறந்த ஒரே ஆணும் வளர்ந்ததும் ஓரின சேர்க்கையாளராக மாறினால் அது அவர்களுக்கு அதிர்ச்சி தான், பெரும்பாலும் பெற்றோர்களின் வெறுப்புக்கு ஆளாகக் கூடாது என்கிற எண்ணத்தில் ஓரின நாட்டம் உள்ளவர்கள் முடிந்த அளவுக்கு திருமணங்களை தள்ளிப் போட்டாலும் ஒரு கட்டத்தில் திருமணங்களை செய்து கொள்ளும் போது சிக்கல் ஆகிப் போகிறது.

அவ்வாறு திருமணம் செய்து கொள்ளும் போது நேரிடையாக பாதிப்பது பெற்றோர்களோ, சமூகமோ இல்லை, அவர்களை திருமணம் செய்து கொள்பவர் தான், எந்த ஒரு துணையும் தன் துணை ஒத்த பால் நாட்டமுடையது என்று தெரிந்தால் அதிர்ச்சியே மிஞ்சும், இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும் என்றாலும் ஓரின ஆணை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணுக்கே மிகுந்த இழப்பு, நம்பிக்கைகள் உடைந்து எதிர்கால பாதுகாப்பு என்பது கேள்விக்கு உள்ளாகிவிடும், குறிப்பாக தெரிந்தே அனுமதித்தாலும் எய்ட்ஸ் போன்ற உயிர் கொல்லி நோய்கள் அவர்களுக்கும் தொற்றும் வாய்ப்பு உண்டு, இதனால் தன் துணை ஓரின நாட்டம் கொண்டவர் என்று தெரியவரும் போது மணவிலக்குகள் பெருகிவிடுகின்றன, வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இதன் விபரீதம் தெரியாது என்பதால் இவற்றை முறையான உளவியல் பயிற்சி கொடுத்து திருத்திவிடலாம் என்று நம்புகின்றனர். ஆனால் சூடுகண்ட பூனையாக இருந்து, ருசி கண்ட பூனையாகவும் இருந்தால் அதிலிருந்து மீள்பவர் குறைவே, இவற்றை பெற்றோர்களோ, சமூகமோ புரிந்து கொள்ளாது காரணம் 'நம் குடும்பத்தில் பிறந்த ஒருவரா இப்படி ?' ஏதோ செய்வினை, புத்தி பேதலிப்பு என்றெல்லாம் ஆர்பாட்டம் செய்துவிடுவார்கள்.

உண்மையில் ஓரின சேர்க்கை என்பது மனித இன துவக்க காலம் தொட்டே இருந்திருக்க வேண்டும், இன்றைய ஊடகங்களால் அவை மிகைப்படுத்தப்பட்டு தற்காலத்தில் தோன்றிய புதிய சமூக சீரழிவு போன்று காட்டப்படுகிறது. அலக்சாண்டரும், ஜூலியட் சீசர் போன்றவர்கள் கூட ஓரின சேர்க்கையாளர்களாக மேற்கத்திய வரலாறுகளில் பதியப்பட்டுள்ளனர், பிற நாடுகளில் அவை வெறுக்கத்தக்கது என்ற அளவில் அவை வரலாறுகளில் இடம் பெறவில்லை.

பிறப்பு வழி பிற உடலியல் குறைபாடுகளைப் போன்றதே ஓரின நாட்டமும், அதற்கான உடலியல் காரணங்களை இன்னும் கூட ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் அன்றி அவை உளவியல் ரீதியான குறைபாடுகள் அல்ல என்பதை தெளிவாகவே சொல்லுகிறார்கள். வளர்ந்ததும் எந்த உணவை ஒருவர் விரும்பி சாப்பிடுவார் என்பதை கணிக்க முடியாதது போலவே ஒருவரின் பாலியல் நாட்டம் எத்தகையது என்பதை முன்கூட்டியே சொல்லிவிட முடியாது. முதலில் மதுவை விரும்பி இருக்காத ஒருவர் பிறர் தூண்டுதலால் தாமும் மதுவிற்கு அடிமை ஆகுவது போன்றே ஓரின சேர்க்கையாளர்களின் தூண்டுதலாலும் ஓரின சேர்க்கையாளராக மாறுபவர்களும் உண்டு என்பதும் உண்மை தான்.

சமூக கட்டுப்பாடு ஆகியவை இயற்கைக்கு மாறானது என்று வகைப்படுத்தி அவற்றை மதக் கொள்கையாக்கிக் கொண்டு எதிர்த்து நின்றாலும் அத்தகைய நாட்டத்தில் செல்பவர்களை தடுக்க முடியவில்லை என்பதிலிருந்து ஒருவரின் பாலியல் நாட்டத்தில் சமூகம் நுழைவதை தண்டனைக்கு பயந்து கண்டு நிறுத்திக் கொண்டால் அன்றி தன் விருப்பமாக எவரும் மாற்றிக் கொள்வதும் இல்லை என்றே தெரிகிறது. சமூகம் மற்றும் பெற்றோர்களின் வற்புறுத்தலால் மாறுபவர்கள் திருமணம் செய்து கொண்ட பிறகும் அதைத் தொடராமல் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது, மிகச் சிலர் மாறி இருக்கலாம் அதற்கான காரணம் கூட அவற்றிற்கான மறுசூழல் வாய்க்காமல் போனதாகக் கூட இருக்கும்.

ஓரின சேர்க்கையாளர்கள் குறித்து சமூக பொறுப்புணர்வு என்ன ?

ஒருவர் ஓரின சேர்கையாளர் என்று தெரிந்தால் அவரை புறக்கணிக்காமல் எடுத்துக் கூறி சமூக அமைப்புக்கு நல்லது அல்ல என்று புரிய வைப்பது தான், புரிந்து கொள்ளவில்லை என்றால் அவரை வெறுத்து ஒதுக்கத் தேவை இல்லை, சமூகத்தால் புறக்கணிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர், அல்லது திருநங்கைகளைப் போல் பாலியல் தொழிலில் விழுந்துவிடுவார்கள். வற்புறுத்தலின் மூலம் திருமணம் செய்துவைக்கப்படும் போது மேலும் ஒருவரின் வாழ்வும் சேர்த்தே சீரழிகிறது.

அனாதைகள் கடவுளின் குழந்தைகள் என்றால் கடவுளுக்கு தேவை குடும்பக்கட்டுபபடு என்று கமலஹாசன் கூறியதாகச் சொல்லுகிறார்கள், எல்லாம் இறைவனின் படைப்பு, எல்லாம் அவன் செயல் என்று நம்பும் போது ஒருவரின் பாலியல் நாட்டத்தை மட்டும் கடவுள் தீர்மாணித்திருக்க முடியாது என்பது மட்டும் எந்தவகையான நம்பிக்கையாக இருக்க முடியும் ?

ஓரின சேர்கையாளர்கள் புறக்கணிக்கப்படும் போது என்ன செய்வார்கள் ?

சமூகம் அங்கீகரிக்கவில்லை என்பதைப் பற்றி கவலைப்படாதவர்கள், தன் தேவைக்கு ஏற்ப கூடும் நபர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள், இத்தகைய உறவின் இரகசியங்கள் வெகு நாளைக்கு நீடிக்காது ஏனென்றால் அந்த மற்ற ஒருவரும் இதே சமூகத்தின் ஒருவர் தான், அவரும் ரகசிய வழிகளில் தான் இத்தகைய உறவுகளை நாடுவார். இவ்வாறு பல்வேறு நபர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் போது பாலியல் நோய்களும் சேர்ந்தே தொடர்பில் வந்துவிடும், அதில் ஒருவர் திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அவரை திருமணம் செய்துள்ள மாற்றுப் பாலினருக்கும் அந்த நோய்கள் பரவும். மறைவாக செயல்பட எண்ணி சிறுவர் / சிறுமியரைக் கூட தொல்லைக்குள்ளாக்கி அவர்களை மன ரீதியான பாதிப்பில் கொண்டு சென்றுவிடுவார்கள்.

வயது வந்தவ ஒருவரின் பிறரை துன்புறுத்தாத பாலியல் நாட்டத்தில் இயற்கை செயற்கை என்றெல்லாம் எதுவும் கிடையாது இயற்கையான பாலியல் உறவு என்று எதிர்பாலினர் மீதான நாட்டத்தில் இயற்கை என்று வலியுறுத்தப்படுவதின் விதிமீறல்களாக வாய் வழி, பின்புணர்வு என்பதில் ஈடுபடதாவர்கள் கூட மிகச் சிலரே, அவ்வாறு மிகச் சிலராக இருப்பவர்களுக்கும் கூட அவற்றை வெட்கத்தால் கேட்காமல் இருப்பது அல்லது கேட்டும் மறுக்கப்பட்டதாக இருக்கும், மற்றபடி அவற்றில் விரும்பாமல் தான் அவர்களும் இருந்தனர் என்று சொல்ல எதுவும் இல்லை.

இயற்கை வழி உறவு என்பதில் மிஞ்சிய தேவைகள் என்பதில் பாலியல் தொழில்கள் அங்கீகரிக்கப்படுகிறது, வசதி உள்ளவர்கள் பலரை திருமணம் செய்து கொள்வதும் கூட மதக் கொள்கைகளினால் அங்கீகரிக்கப்படுகிறது, இயற்கையில் எந்த ஒரு துணையும் தன்னுடைய துணை ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன், எதிர்பாலினர் என்றாலும் தொடர்பு வைத்துக் கொள்வதை ஏற்றுக் கொள்வதில்லை என்பதும் இயற்கை தான், ஆனால் பல பெண்களுடன் திருமணம் ரீதியாக உறவு வைத்திருப்பது இயற்கையா என்றெல்லாம் யாரும் விவாதம் செய்வதே இல்லை. அவற்றின் விதிமீறல்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு ஓரின சேர்க்கையாளர்களை மட்டும் சமூகத்தை சீரழிப்பவர்கள் போன்று பரப்புவது எவ்விதமான நாகரீகமாக அல்லது பண்பாடாக இருக்க முடியும்.

இறுதியாக ஓரின சேர்கையை அனுமதித்தால் நாளை மிருகங்களுடன் கூடுவதைக் கூட இயற்கை என்று கேட்டு சிலர் உரிமை பிரச்சனை எழுப்பக் கூடும் என்றெல்லாம் சிலர் ஓரினசேர்கையாளர்களை புறக்கணிக்க வேண்டும் என்ற ரீதியில் கருத்து சொல்கிறார்கள். அசைவ உணவர்கள் மன்னிக்கவும், மிருக வதைகள் உணவுக்கு என்ற அடிப்படையிலும் அவற்றைத் தோலுக்காக மற்றும் அவற்றின் உழைப்பைப் பயன்படுத்துதல் என்ற அளவிலும் அவை அதற்காகத் தான் படைக்கப்பட்டன என்ற சப்பைக் கட்டுகளுடன் பலகாலமாக அவை துண்புறுத்தப்பட்டுத்தான் வருகின்றன. எதுவுமே விலங்குளைக் கேட்டு நடைபெறவில்லை என்னும் போது இவ்வாறு மிருக புணர்சிகள் சமூகக் குற்றம் என்பது போல் காட்டப்படுவதும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

ஓரின நாட்டத்தில் ஒரு சிறுவனை சீரழிப்பவனுக்கும், எதிர்பாலின நாட்டத்தில் ஒரு சிறுமியை சீரழிப்பவனுக்கும் அடிப்படை மன நிலை வேறுபாட்டில் இவன் தேவலை என்று யாரைக் குறிப்பிட முடியும் ? இது போன்றது தான் மிருக புணர்ச்சியின் மீதான நாட்டமும் அது மன நிலை பிரண்டதின் செயல்பாடு அதற்கான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதை பொதுப்படுத்தி ஓரின சேர்கையாளர்கள் தண்டனைக்குரியவர்கள் அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் என்று சொல்வதை நான் எதிர்கிறேன். கைப்பழக்கங்களுக்கும் இயற்கைக்கு எதிரானது அதற்கு தண்டனை என்று தானே மதங்கள் பயமுறுத்துகின்றன அதனைச் செய்யாத ஆண்களில் வெகு சிலர் இருந்தால் அவர்களில் பலர் கையே இல்லாதவர்களாகத்தான் இருப்பார்கள். திரைப்படங்களின் வழியாக மாமனாரின் இன்பவெறிகள் கூட சமூக சந்தையாக்கப்படுகிறது, அவற்றையெல்லாம் கூட இயற்கை என்றே திரைமறைவில் பார்ப்பதும் சமூகம் தான்.

நம் உயர்ந்தப் பண்பாட்டின் வழி வந்தவர்கள் என்று கூறிக் கொண்டாலும் ஒரு 50 ஆண்டுகள் பின்னோக்கி பார்க்க அதிர்ச்சியே மிஞ்சுகிறது, 6 வயதிற்கு 14 வயதிற்கும் உட்பட்ட பெண் சிறுமிகளை திருமணம் என்ற பெயரில் பாலியல் துண்புறுத்தியவர்கள் தான் நம் சமூகம், சிறுவர் திருமணங்களை இன்றும் கூட திருட்டுத்தனமாக பலர் செய்து தான் வருகிறார்கள், நடைமுறைக்கு ஒத்துவராது மற்றும் மனம் வளர்ச்சியடையாத நிலையில் குழந்தைத் திருமணங்கள் முறையானது அல்ல என்பதாகத் தான் அவை சமூகங்களில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன, இவற்றை விலக்கும் போது இது இயற்கையா செயற்கையா என்ற விவாதங்கள் எதுவும் நடந்தேறியது போல் தெரியவில்லை, சமூக மன வளர்ச்சி என்ற அளவில் அவை செயல்பாட்டிற்கு வந்தன. ஆனால் அடிப்படை புரிந்துணர்வு இருந்தும் ஓரின சேர்கையாளர்கள் பல நாடுகளில் எதோ ஒரு காரணத்தைக் காட்டி புறக்கணிக்கப்பட்டே வருகிறார்கள் அது வேறுவிதமான சமூக குற்றங்களுக்கும் சமூக சீரழிவுக்கும் துணை போகிறது என்பதைத் தான் சீனாவின் அந்தச் செய்தி சுட்டுகிறது.

நான் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாளன் இல்லை ஆனால் அவர்களின் தனிப்பட்ட தேவை அல்லது விருப்பு என்ற அளவில் புரிந்து கொள்கிறேன். திருநங்கைளை கேலி செய்து வந்த நம் தமிழ் திரையுலகம் ஒருவாறு தன்னை திருத்திக் கொண்டு அத்தகைய காட்சிகளை தவிர்த்தே வருகின்றன, ஆனால் அடுத்து அவர்களின் கரிசனம் ஓரின சேர்க்கையாளர்கள் மீது விழுந்திருக்கிறது... 'அவனா நீய்யீ ?' நண்பன் படத்தில் மீண்டும் கிண்டல் அடித்துள்ளனர். சமூகத்தில் அவர்களும் இருக்கிறார்கள் என்று இவர்கள் எடுத்துச் சொல்வதாகத் தான் புரிந்து கொண்டேன், திரையுலகில் அவர்களைப் பற்றி பேச துவங்கியுள்ளார்கள் என்றே கருதுகிறேன்.

பாலியல் தொழில் சமூகத்தில் இருந்து மறையும் போது,
கைப்பழக்கம் சமூகத்தில் இருந்து மறையும் போது
வாய்வழி மற்றும் பின்வழி புணர்ச்சிகள் மறையும் போது
ஓரின நாட்டமும் சமூகத்தில் இருந்து ஒழிந்துவிடும் அதுவரையில் அவற்றையெல்லாம் இயற்கை கூறுகளின் மனித மன பரிமாணங்களின் செயல்பாடுகள் என்று புரிந்து கொள்வோம்.

இணைப்பு : Millions of wives wed to gay men: expert

5 கருத்துகள்:

R.Puratchimani சொன்னது…

//ஆனால் அடுத்து அவர்களின் கரிசனம் ஓரின சேர்க்கையாளர்கள் மீது விழுந்திருக்கிறது... 'அவனா நீய்யீ ?' நண்பன் படத்தில் மீண்டும் கிண்டல் அடித்துள்ளனர்//
சார் இதுக்கெல்லாம் முன்னோடி நம்ம மணி சார் தான் உயிரே படம் பாத்தீங்களா?

//நான் ஓரின சேர்க்கைக்கு ஆதரவாளன் இல்லை ஆனால் அவர்களின் தனிப்பட்ட தேவை அல்லது விருப்பு என்ற அளவில் புரிந்து கொள்கிறேன்.//

உங்களுக்கு பின்னாடி வரும் சமூகம் மிருகப்புனர்ச்சிக்கும் இப்படி சொல்வார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

//...........................சமூகத்தில் இருந்து ஒழிந்துவிடும்//

எனக்கென்னவோ இது நடக்குற மாதிரி தெரியலையே...ஒருவேளை நடக்காது என்பதை தான் நீங்கள் சுட்டி காட்டுகிறீர்களோ.

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ அருமையான அலசல்.
ஓரின புணர்ச்சியாளர்கள் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பது தெளிவாக அறியப்படும் வரை மாற்ற முடியாது எனபதுதான் உண்மை.இது குறித்த விவரங்கள் அறியும் போது இது சில விலங்குகளிலும் உள்ளதை குறிப்பிடுகின்றன சில விக்கி பீடியா கட்டுரைகள்.இது உண்மை எனில் இப்பழக்கம் ஓ.பு விரும்பி செய்வதன் வாய்ப்பு குறைவு.இயற்கையின் படைப்பு தவறுகளுள் ஒன்றே!!!!!!!!!

இது நம் சமூகத்திலும் இருப்பது உண்மை.இன்னும் நம் சமூகத்திலும் யாஹூ சாட்,ஃபேஸ் பூக் போன்ற சமூகத் தளங்களில் இவர்கள் துணை தேடுவது கண்கூடு.இவை சமூக கட்டுப்பாடுகளுக்கு பங்கம் விளைக்குமோ,பாலியல் நோய்கள் பரவுமோ என்ற பயம் நியாயமான‌தே என்றாலும் அவர்களை வெறுத்து ஒதுக்காமல் அவர்களுக்கு ஏதேனும் மன நல,மருத்துவ சிகிச்சை அளிக்க முடியுமா என்ற திசையில் யோசிப்பது நலம்.உடல் உறவு மட்டும் முழு வாழ்க்கை அல்லவே,ஒரு பகுதிதானே!!!!!!!!!!!!
நன்றி

kamalakkannan சொன்னது…

நல்ல வேளை சீன வோட நின்னுட்டிங்க , சவூதி ,துபாய் சொன்னிங்கன மறுபடியும் சொம்பு எடுத்துக்கிட்டு பஞ்சாயத்து பண்ண வேண்டி இருக்கும் :).

suvanappiriyan சொன்னது…

ஓரினப் புணர்ச்சியாளர்களை இனம் கண்டு மருத்தவ சிகிச்சை அளிக்க வேண்டும். இவர்களுக்கு சமூக அங்கீகாரம் கொடுத்தால் சமூக அமைப்பே சீர்குலைந்து விடும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுவனப்பிரியன் said...
ஓரினப் புணர்ச்சியாளர்களை இனம் கண்டு மருத்தவ சிகிச்சை அளிக்க வேண்டும். இவர்களுக்கு சமூக அங்கீகாரம் கொடுத்தால் சமூக அமைப்பே சீர்குலைந்து விடும்.//

உங்கள் கருத்து முற்றிலும் நிராகரிக்கக் கூடியது, ஏனெனில் நீங்கள் அவர்களை நோயாளிகள் என்று ஒப்புக் கொள்ளும் போது அவர்களின் மீது பரிதாபமே இருக்க வேண்டும், உங்கள் கருத்து முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது, குணப்படுத்த முடியாத நோய்களை குறை என்றே சொல்லுவார்கள், பிறவியில் பார்வை போனவர்களுக்கு மருத்துவம் இதுவரை தீர்வு சொல்லவில்லை என்பதால் அவற்றை 'படைப்பின் குறை' என்று உங்களுக்கு ஒப்புக் கொள்ள மனம் இருக்காது. அது போன்றதே உங்கள் கருத்துகள்.

படைப்பை வணங்கக் கூடாது படைத்தவனைத்தான் வணங்க வேண்டும் என்று சொல்லும் தாங்கள் பிறப்பு வழி குறைபாடுகளுக்கு படைப்பைத் தூற்றக் கூடாது படைத்தவனையே தூற்றவேண்டும் என்பதை தாங்கள் கிஞ்சித்தும் ஏற்பதில்லை, மருத்துவ தீர்வு இல்லாத ஒன்றிற்கு மருத்துவ தீர்வு கொடுக்கலாம் என்று சொல்வது மதவாத நம்பிக்கையே அன்றி அதனால் ஆகக் கூடியது என்று எதுவும் இல்லை.

உங்களின் மதவாதக் கருத்துகளைத் தவிர்த்து உங்களுக்கு இது குறித்து தனிப்பட்ட கருத்தே இருக்கக் கூடாது என்பது தான் உங்களின் கட்டுப்பாடும், எனவே உங்களின் இந்தக் கருத்தை மதம் தொடர்பில் மட்டுமே பார்த்து நிராகரிக்கிறேன்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்