பின்பற்றுபவர்கள்

15 பிப்ரவரி, 2012

இந்துத் தீவு - பகுதி 2

பரந்து விரிந்த உலகில் நிலப்பரப்பு யாவும் ஒன்றே, அங்குள்ள தட்பவெப்பத்திற்கு ஏற்ப அந்நிலப்பரப்புகளின் மரம் செடி வகைகள் காணப்படும், அப்பகுதிகளில் பண்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடடங்கள் காணப்படும். இயற்கை அமைப்பு செயற்கை அமைப்புத் தவிர்த்து மனிதர்களின் தோற்றங்களில் மாற்றமும் நடை உடை பேச்சு வழக்கு மொழிகளில் மாற்றமிருக்கும், மனித குல இடப் பெயர்ச்சி எப்போதும் இனக் குழுவாகவே நடைபெற்றிருப்பதால் குறிப்பிட்ட நிலப்பரப்புகளில் குறிப்பிட்ட இன மக்கள் வசிப்பதில் வியப்பு இல்லை

எந்த ஒரு ஊர் நகரம் அல்லது நாடுகளில் நாம் முதன் முதலாக நுழையும் போது முதலில் நம் கவனத்திற்கு வருவது அங்கு வசிக்கும் மக்கள் தான். இந்தோனேசியா மற்றும் மலேசிய மக்களின் தோற்றங்களில் பெரிய வேறுபாடுகள் இல்லை. அடிப்படையில் தங்களது பண்பாட்டு சின்னங்களை வெளிப்படுத்த வேண்டிய இடத்தில் அதற்கேற்ற ஆடை அணிந்திருப்பார்கள், பாலினீஸ் என்கிற பாலிவாழ் இந்தோனேசியர்களுக்கும் பிற இந்தோனேசியர்களுக்கும் தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லை, ஆஸ்ட்ரோனேசிய இனத்தினர்,ஆனால் அவர்களின் உடை அமைப்புகள் அவர்களை கொஞ்சம் தனித்து காட்டுகின்றன.

கண்ணில் தென்பட்ட பாலினேசிய பெண்கள் யாரும் தலைக்கு முக்காடு போட்டிருக்கவில்லை, முக்காட்டை தவிர்த்த மலாய் பெண்களின் தோற்றத்தில் இருந்தார்கள். ஆண்களில் சிலர் இஸ்லாமிய தொப்பியின் அளவிளான துண்டால் அமைக்கப்பட்ட சிறிய தலைப்பாகை அணிந்திருந்தனர், கூடவே வேலைப்பாடுகளுடன் ஆனத் துண்டு ஒன்றை பேண்ட் அல்லது கைலிக்கு மேல் சுற்றி இருந்தனர். இது போல் துண்டு சுற்றிக் கொள்வது மலாய்காரர்கள், இந்தோனேசியர் மற்றும் பாலித்தீவினரின் உடைவழக்கத்தில் ஒன்றாக இருக்கிறது. மலாய் காரர்களின் தோற்றத்தில் பிற மதத்தவர் இல்லையா ? என்கிற கேள்விக்கு விடையாக பாலினீஸ் மக்கள் தெரிகிறார்கள்.

*******

எங்களை ஏற்றிக் கொண்டு பேருந்து விடுதியை நோக்கி புறப்பட்டது, ஏற்கனவே கூகுளில் தங்கப் போகும் இடம் பற்றி தெரிந்து வைத்திருந்தேன், திசைகள் குழப்பம் இல்லாமல் இருந்தது, கு(ட்)டா பாலி என்கிற கடற்கரை பகுதியில் அமைந்திருந்து தங்கப் போகும் விடுதி, விமான நிலையைத்தை விட்டு பேருந்து வெளியே வந்ததும் கண்ணில் பட்ட காட்சிகள் குறிப்பாக குறுகிய சாலை கடைகளின் நெருக்கம், ஊர்த்திகள் இந்தியாவை நினைவு படுத்தியது. குதிரை வண்டிகளை பார்க்க முடிந்தது, வழிகாட்டுபவர் குறிப்பிட்டது போல் மேல் சட்டை இல்லாமல் ஆஸ்திரேலிய ஆடவர்கள் நடந்து சுற்றுவதையும் இருசக்கர ஊர்திகளிலும் அப்படியே பயணிப்பதை காண முடிந்தது.

பாலினீஸ் சுற்றுலா முகவர் பேசத்துவங்கி இருந்தார், 'அனைவருக்கும் வணக்கம், என் பெயர் 'நியோமான்' நீங்கள் இங்கே மூன்று நாட்கள் தங்குகிறீர்கள், இன்றும் நாளையும் நீங்கள் செல்லப் போகும் இடங்கள் இவை இவை, இந்த மூன்று நாள் நான் உங்களுடன் இருந்து உங்களுக்கு செல்லும் இடம் பற்றிய தகவல்களை தெரிவிப்பேன், பாலி பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம், இங்கே பாலியில் இந்துக்கள் தான் பெரும்பான்மை, நானும் ஒரு இந்து, 90 விழுக்காடு இந்துக்கள் நிறைந்திருக்கும் இந்துத் தீவு இது, இந்து கலாச்சார சின்னங்களை நீங்கள் இங்கு பார்க்கலாம், ஆனால் எங்களது இந்து மதமும் இந்தியாவில் இருந்து வந்தவை என்றாலும் மதம் தொடர்பான எங்கள் பழக்கவழக்கங்கள், சடங்குகள் இந்தியாவிற்கு முற்றிலும் மாறுபட்டது, இன்றைக்கு எங்களுக்கு பெருநாள்(ஹரி ராயா), இது பாலியில் மட்டும் கொண்டாடப்படும் இந்து பண்டிகை, இதன் பெயர் குனிங்கன் (Kuningan)- களுங்கன்(Galungan)', எங்களுக்கு மிகவும் சிறப்பான நாள், பலர் விடுமுறை எடுத்து இருப்பார்கள்' என்றார், இந்துப் பண்டிகை என்ற அளவில் எங்கும்நான் இதுவரை இப்படி ஒரு பண்டிகை கேள்விப்பட்டது இல்லை.

"பாலி ஆஸ்திரேலியர்களின் இரண்டாம் வீடு, ஒவ்வொரு ஆஸ்திரேலியரும் பாலிக்கு வந்து செல்வதை பொழுது போக்காகக் கொண்டு இருக்கின்றனர், காரணம் இங்குள்ள உணவு, அழகான கடற்கரை பொழுது போக்கு கூடங்கள் மற்றும் விலை குறைவான பொருள்கள்' என்று சொல்லிக் கொண்டு வந்தார், எங்கள் தீவு இந்தோனேசியாவின் பகுதி என்றாலும் எங்களை பாலினீஸ் என்றே அழைத்துக்கொள்வோம், நாங்கள் 4 மில்லியன் இருக்கிறோம், எங்களது நிலப்பரப்பு 5000 சதுர கிலோ மீட்டர்கள், நீங்கள் வசிக்கும் சிங்கப்பூரைக் காட்டிலும் 6 மடங்கு பெரியது' என்றார்.

பேருந்து போக்குவரத்து நெரிசல் காரணமாக ஊர்ந்தே சென்றது, 'மட்டஹரி' என்ற பெருங்கடைப் பகுதியைக் கடக்கும் போது 'உங்களுக்கு தெரியுமா ? 2002 ஆம் ஆண்டு ஜவா தீவின் 'ஜமாயா இஸ்லாமியா' தீவிரவாதிகளினால், பாலியில் நடந்த குண்டு வெடிப்புகளில் ஒன்றாக, தற்கொலை தாக்குதலாக குண்டுவெடிப்பு நடந்த இடம் இது தான்' என்றார். அந்த இடம் மீண்டும் கட்டியெழுப்பப் பட்டு 'மட்டஹரி' மீண்டும் இயங்குகிறது என்றார். அந்த இடத்தை கடந்து பேருந்து வலது பக்கம் திரும்ப, வெளிச்சுவருடன், பாலி கோபுர நுழைவாயில் முகப்புடன் நீலக்கடல் (பாலி ஸ்ரெய்ட் பகுதி) தென்பட்டது, அங்கிருந்து மீண்டும் இடது பக்கம் திரும்பி பேருந்து ஊர்ந்து செல்ல அடுத்த 5 நிமிடத்தில் நாங்கள் தங்கப் போகும் 'ஹார்ரிஸ் - குட்டா ரிசார்ட்' என்னும் நான்கு நட்சத்திர விடுதி வந்துவிட்டது.

காலை மணி 12 ஐ நெருங்க, 35 பேர்களுக்கும் கிட்டதட்ட பகிர்தல் என்ற அடிப்படையில் 20 அறைகள் ஒதுக்கப்பட்டன, இணையாக வந்தவர்களுக்கும் பெரிய கட்டில்களும், தனித்தனியாக வந்தவர்களுக்கு அறைக்கு இருவர் என இரு தனிக் கட்டில்கள் உள்ள அறைகளும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி ஒதுக்கப்பட்டது. சிறிது நேர ஓய்வுக்கு பிறகு அன்றைய சுற்றுலா திட்டத்தின் படி மதிய உணவை முடித்துக் கொண்டுசெல்ல வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்ல பேருந்துகள் நின்று கொண்டிருந்தன.

அனைவரும் அறைகளில் இருந்து திரும்ப காலை மணி 12:30 ஐத் தாண்ட, பேருந்தில் ஏறி மதிய உணவிற்குச் சென்றோம், செல்லப் போகும் அரை நாள் சுற்றுலா எங்களில் 22 பேர் மட்டும் தனியாக ஏற்பாடு செய்திருந்தோம், மதிய உணவு, சுற்றுலா, தேவையான நுழைவுச் சீட்டு மற்றும் பயண வழிகாட்டல் உள்ளிட்டவற்றிற்கு ஒருவருக்கு 18 அமெரிக்க வெள்ளிகள் முன்கூட்டியே பேசப்பட்ட ஏற்பாட்டில் தான் அன்றைய அரை நாள் பயணம், எங்களில் வந்தவர்களில் சிலர் விடுதியில் ஓய்வெடுத்தார்கள், சிலர் தனியாகவே சென்றார்கள். அன்றைய சுற்றுலாவில் பார்க்க வேண்டிய இடங்களில் முதன்மையான ஒன்று 'உலுவாட்(டு) டெம்பிள்' எனப்படும் புகழ்பெற்ற பாலிக் கோவில்.

முதலில் மதிய உணவிற்காக சைனீஸ் உணவு விடுதி ஒன்றில் பேருந்து நின்றது, ஒரே சமயத்தில் 500 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு பெரியது, அங்கு கடல் உணவு எட்டுவகையிலும் சாற்றுடன் (சூப்), சோற்றுடன் எட்டு பேருக்கு ஒரு வட்ட மேசை என்ற அடிப்படையில் உணவு வழங்கப்பட்டது, எனக்கு அதில் உண்ணுவதற்கு எதுவும் இல்லை, என்னால் இவற்றை உண்ண முடியாது, எனக்கு மரக்கறி உணவுதான் வேண்டும் என்று கூறினேன், முன்கூட்டியே சொல்லி இருந்தால் சரியாக செய்திருப்பார்கள், ஏற்கனவே செய்யப்பட்டது என்ற அடைப்படையில் அப்போது சொல்லும் போது கொஞ்சம் தயங்கினாலும் உடனேயே ஒப்புக் கொண்டு கீரைச் சாறு, வதக்கிய கீரை, வேக வைத்த முட்டை கோசு மற்றும் சோயா கேரட் சேர்த்து செய்த ஒரு கொழ கொழ வகை தட்டுகளை கொண்டு வந்து வைத்தனர். இருந்த பசிக்கு இதுவே பெரிசு என்று முடிந்தவரை தின்றேன்.



ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது என்ற முறையில் என்னால் அவர்களுக்கு ஒரு ஆளுக்கான கடல் உணவு நட்டம் தான், அதற்காக தனியாக காசு ஏதும் கேட்கவில்லை, வேற நாடு வேற இடம் என்றால் முன்கூட்டியே ஏன் சொல்லவில்லை என்பதைக் காரணமாகக் கூறி பணம் பறிக்காமல் விட்டு இருக்கமாட்டார்கள். இங்கு (பாலிக்கு) வரும் சுற்றுலாவாசிகள் மனம் நோகும் படி எது நடந்தாலும் அவர்கள் திரும்ப வரத் தயங்குவார்கள் என்பதால் இது போன்ற நீக்கு போக்குகளை அவர்கள் நட்டப்பட்டாலும் கடைபிடிக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. தேவையற்ற தகராறுகள் சுற்றுலாவாசிகளின் வந்த நோக்கத்தை கொன்றுவிட்டு மன அமைதியை கெடுத்துவிடும் நாம் அதற்கு எந்தவிதத்திலும் காரணமாக அமையக் கூடாது என்பதில் பாலியில் சுற்றுலாவை நம்பி தொழில் செய்பவர்கள் எல்லோருமே கடைபிடிக்கிறார்கள் என்பதை பின்னர் நாட்களின் சில நிகழ்வுகளிலும் தெரிந்து கொண்டிருந்தேன். நான் வலுக்கட்டயமாக பணம் கொடுக்க முன் வந்தும் மறுத்துவிட்டார்கள், பணத்துக்காகத் தான் தொழில் என்றாலும் மறுமுறை வாடிக்கையாளர் திரும்ப வேண்டுமென்றால் சில நீக்கு போக்குகளை கடைபிடித்து தான் ஆகவேண்டும் என்று அவர்கள் பாடம் நடத்துவதாக உணர்ந்தேன்.

எங்களின் அன்றைய (சனிக்கிழமை பிற்பகல்) பயணத்திட்டத்தின் படி நாங்கள் செல்ல வேண்டிய இடங்கள் ஒரு கடற்கரை, மற்றும் ஒருகோவில், கோவிலுக்கு வர விருப்பமில்லாத மலாய் ஜோடி வேறொரு அரை நாள் நகரச் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டனர், அதற்கு நான் ஏற்பாடுகளை செய்திருந்தேன், ஆனால் எல்லோருமே அந்த உணவகத்தில் உணவு எடுத்த பிறகே பிரிந்து சென்றோம், எங்களுக்கு இப்போது கிடைத்திருந்தது வேறொரு சுற்றுலா வழிகாட்டி, அவர் தலைத் துண்டு அணியவில்லை. ஏற்கனவே முடி கொட்டிய தலைக்கு அது தான் காரணம் என்று நினைத்து தவிர்த்திருந்தாரோ என்னவோ. தானும் ஹிந்து என்று கூறிக் கொண்டு என்னைப் பற்றிக் கேட்டார், நான் தான் குறிப்பிட்ட சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்தவன் என்று கூறியதால் என்மீது கூடுதலான மரியாதை கூடவே நானும் இந்தியாவின் ஹிந்து மதத்தில் சேர்க்கப்பட்டவன் என்று அவரிடம் கூறியதில் அவருக்கு கூடுதலான மகிழ்ச்சி.

பேருந்து தெற்கு பாலியின் கடற்கரை விளையாட்டுகள் நிறைந்த 'நூசாதுவா' என்ற இடத்தை நோக்கி பயணித்தது, வழியில் கடற்கரைக்கு பிரியும் சாலைப் பகுதியில் ஒரு பெரிய சிலை. 'டிராகனுடம் சண்டையிடும் பீமன்' சிலையாம், கடலில் தூக்கி வீசப்பட்ட பீமனை காப்பற்ற வரும் டிராகன் தன்னை தாக்கவருவதாக நினைத்து பீமன் சண்டை இடுவானாம், பீமன் பலசாலியாக இருந்தாலும் அறிவு குறைவு தான்' என்று கூறி மாகாபாரத் கதையின் ஒரு கிளைக்கதையாக அதனைக் குறிப்பிட்டார், எனக்கு தெரிந்த அளவில் மகாபாரதக் கதையில் டிராகன் எதுவும் வரவில்லை, ஆனால் மகாபாரதக் கதைகள் பலவடிவங்களில் உள்ளது என்று அறிவேன், அதன் ஒரு வடிவத்துனுள் இருக்கும் கதைகளினுள் இவைகள் இருக்கக் கூடும் என்றே நினைக்கிறேன்.

பேருந்து கடற்கரைச் சாலையில் பயணித்தது, குறுகிய சாலை தான் ஒரு பேருந்து செல்ல எதிரே வர போதிய அகலம் உள்ள சாலை, இருபக்கம் சில வகை மரங்களினால் ஆன பசுமைகள் தென்பட்டன. கடற்கரையை அடைந்தோம். தெளிந்த நீல வண்ணத்தில் கடற்கரை, அலைகள் அற்றதாகவும், காண மிகவும் அழகாக இருந்தது. நிறைய வெள்ளைத்தோல் வெளிநாட்டினர் படகு நீர் சறுக்கு, வான்குடை ஆகியவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு இருந்தனர், கடற்கரை எங்கும் அங்கு சட்டையில்லாத கடற்கரை தொழிலாளர்கள், அவர்கள் படகுகளை செலுத்தவும், வான்குடைகளையும் வாடகைக்கு விட்டு அது சார்ந்த தொழிலில் மும்மரமாக இருந்தனர். ஆமைகளையும் அழிவில் இருக்கும் பிற கடல்வாழ் உயிரினங்களையும் பாதுகாக்க இந்தோனேசியா முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும், ஆமைகளை உணவிற்கு கொல்வதற்கு தடை இருப்பதாகவும் வழிகாட்டி குறிப்பிட்டு இருந்தார்.


எங்களில் சிலர் அங்கு தொலைவில் இருக்கும் மற்றொரு தீவிற்கு கடல் ஆமைகளின் காட்சி கூடத்திற்கு செல்ல படகு ஏறினார்கள், கடலில் படகு பயணம், பாலி ஆமை என்பது தவிர ஆமையில் வேறென்ன சிறப்பு ? சிங்கப்பூரில் அதற்கு என்றே ஒரு குட்டித் தீவு உண்டு, எனவே ஆமை பார்கச் செல்லாமல் நானும் சிலரும் கடற்கரையின் ஓய்வுப் பகுதியில் காத்திருந்தோம்' ஒரு மணி நேரம் கழித்து மாலை 4 மணிக்கு அங்கிருந்து 'உலுவாட் கோவில்' நோக்கி பயணித்தோம்.

4 கருத்துகள்:

priyamudanprabu சொன்னது…

Ok...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நாங்களே பயணம் செய்ததுபோல் இருக்கிறது.

துளசி கோபால் சொன்னது…

//நானும் இந்தியாவின் ஹிந்து மதத்தில் சேர்க்கப்பட்டவன் //

இதென்ன சேர்க்கப்பட்டவன்?????

பிறக்கும்போதே ஹிந்து இல்லையோ?

சரி..... அட்து இருக்கட்டும்.....

பதிவும் விவரங்களும் படங்களும் அருமை! இங்கே எங்க நாட்டில் இருந்து பாலிக்குச் சுற்றுலா போகும் எண்ணிக்கை அதிகம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இதென்ன சேர்க்கப்பட்டவன்?????

பிறக்கும்போதே ஹிந்து இல்லையோ?//

:)

நாமாக தேர்ந்தெடுக்காதது என்ற பொருளில் சொல்லி இருக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்