பின்பற்றுபவர்கள்

6 ஜனவரி, 2011

திருவள்ளுவர் குறித்த சமயச் சர்சைகள் !

திருக்குறளில் இருக்கும் குறள்களுக்கு இட்டுக்கட்டிப் பொருள் சொல்வதில் நம் தமிழக சமயங்கள் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. திருவள்ளுவர் சைவ சமயத்தவர் என்று ஒரு கூட்டமும், இல்லை இல்லை திருவள்ளுவர் 'இலக்குமி' குறித்தெல்லாம் பாடலில் சொல்லி இருக்கிறார் அவர் விஷ்ணுவை வழிபடும் வைணவப் பிரிவைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டமும் சொல்லிக் கொண்டு திருவள்ளுவருக்கு பட்டைப் போடுவதா ? நாமம் போடுவதா ? அப்படிப் போட்டாலும் எந்தக் கலை நாமம் போடுவது என்றெல்லாம் விவாதங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் மறுத்து 'எண்குணத்த்தான், தாமரைக் கண்ணான்' என்ற சொல் சங்க காலம்த் தொட்டே புத்தரைக் குறிக்கிறது, ஐம்பெருங்காப்பியங்களிலும் அந்தச் சொற்கள் புத்தரைத்தான் குறிக்கிறது எனவே திருவள்ளுரும், திருக்குறளும் பவுத்தம் சார்ந்தவை என்கின்றனர் ஒரு கூட்டத்தார்.

மயிலை சீனி வெங்கடசாமி மற்றும் பலர் 'பகவன்' என்ற சொல் சமணர்களின் அருகனைக் குறிப்பதாலும், தவம் செய்தல், வீடுபேறு போன்றவை சமண / பவுத்த சமயங்களுக்கே உரிய கொள்கை என்பதால் திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றும் சொல்லி இருக்கின்றனர். திருவள்ளுவரை பவுத்தராக, சமணராகச் சொல்ல கிடைக்கும் காரணங்களைவிட சைவம் மற்றும் வைணவமாகச் சொல்லக் கிடைக்கும் சொற் தரவுகள் மிகவும் சொற்பமே. இதையெல்லாம் வீட நகைச்சுவையானது என்னவென்றால் கிறித்துவர்கள் சிலர் திருவள்ளுவரும், புனித தோமையரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள், தோமையரின் போதனைகளைத்தான் திருக்குறளில் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் எனவே திருவள்ளுவர் ஒரு கிறித்துவர் என்றும் சொல்கின்றனர். கிறித்துவர்கள் அனைவரும் முகமது நபியை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர்கள் என்பதால் (இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி அல்லா உலகின் முதல் சமயமாக இஸ்லாமைத்தான் படைத்தாராம், முகமது நபியை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் முழுமையான இஸ்லாமியர் ஆகிறார். இந்த நம்பிக்கைபடி கிறித்துவர்கள் அனைவரும் அரைகுறை இஸ்லாமியர்கள்) திருவள்ளுவரை இஸ்லாமியர் என்றும் சொல்லலாம் போல :)


(திருநீறு - என்று ஒன்று புழக்கத்தில் இல்லாத சங்க காலத்தில் திருவள்ளுவர் திருநீற்றுப்பட்டைப் போட்டுக் கொண்டிருப்பதாக சைவ(வெறியர்களால்) திரித்து திருத்தப்பட்டு, திருவள்ளுவர் அவமானப்படுத்தப்பட்டுள்ளப் படம்)

திருவள்ளுவர் வாழ்ந்ததாகச் சொல்லப்பட்ட கிமுவில் சைவ, வைணவ சமயங்கள் தோன்றி வளர்ச்சி பெற்றிருக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவான உண்மை. சங்க இலக்கியங்கள் நாலடியார் ஆகியவற்றில் குலதெய்வ வழிபாடுகளும் (மாயோன், சேயோன்) பற்றிய குறிப்புகளும், சமண, பவுத்த மதக் குறிப்புகள் மட்டுமே காணக்கிடக்கின்றன. தொன்று தொட்டுவந்த மாயோன் சேயோன் வழிபாடு பின்னர் புராணப் புகுத்தலின் வழியாக சைவ வைணவ சமயத்தினுள் இழுத்து கொள்ளப்பட்டுள்ளது என்பதே உண்மை. மதம் மாறியவர் அந்த சமயத்தைச் சேர்ந்தவராகிவிடுவார் என்பது போல் குலசாமிகள் மதமாற்றம் செய்யப்பட்டது போன்றவை தான் பிற்காலத்தில் தமிழ் தெய்வங்கள் வைதீக சமய தெய்வங்கள் ஆனக் கதைகளும். இது கிடக்கட்டும்.

திருவள்ளுவர் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் என்று சொல்ல திருக்குறள் மக்களிடையே பரவலாக புகழ்பெற்றதும் தொன்மை வாய்ந்தது என்பது தவிர்த்து வேறு காரணங்கள் இல்லை. தொன்மை சார்ந்தவை தெய்வீகமானவை என்கிற மூட நம்பிக்கைகள் சார்ந்து இல்லாவிட்டாலும், திருக்குறளின் சமூக கருத்துகளுக்காகவே அது போற்றத்தக்க இலக்கிய நூல் என்ற பெயர் பெற்றது. பெரியார் உள்ளிட்டோர் புறகணித்தாலும் திருக்குறளுக்கு உரை எழுதாதவர்கள் தமிழறிஞர் என்று சொல்லிக் கொள்ளக் கூடாது என்பது போல் கருணாநிதி உள்ளிட்டோர் திருக்குறளுக்கு உரை எழுதித் தள்ளி தங்கள் சார்ந்துள்ள கொள்கையின் வழியாக திருக்குறளுக்கு பொருளும் எழுதினர். கருணாநிதி உள்ளிட்ட பகுத்தறிவாளர்களுக்கு திருவள்ளுவரை சமயம் சார்ந்தவர் இல்லை என்பதாக காட்டக் கூடிய கட்டாயம் அவர்கள் (முன்பு?) சார்ந்திருந்த கொள்கை என்பது தவிர்த்து வெறெதுவும் இல்லை.

திருக்குறளை கருணாநிதி மட்டுமல்ல, ஆத்திகவாதிகளும் கூட சமயம் சார்பற்றது திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் என்பதாகவும் நிறுவுகின்றனர். சைவ, வைணவ, பவுத்த, சமணம் சார்ந்தவர் என திருவள்ளுவருக்கு சமயச் சாயம் பூச திருக்குறள் தொண்மையானது மற்றும் புகழ்பெற்றது ஒரு காரணம் என்ற போதிலும், சமய சார்பற்றவர் என்று காட்ட என்ன சிறப்புக்காரணம் இருக்க முடியும் ? குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் திருவள்ளுவர் என்று சொல்வதன் மூலம் திருக்குறள் புறக்கணிக்கப்படலாம் என்கிற தேவையற்ற அச்சமே. மேலும் சமயசார்பற்றவர் என்று சொல்வதன் மூலம் திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்கிற புதிய பொதுவான புனித சாயம் பூசப்படும். ஏனென்றால் பொதுவானவரைத்தான் பலதரப்பும் விரும்புமாம்.

இவர்களெல்லாம் இப்படி வட்டம் கட்டி திட்டம் போட்டு செயல்படுவார்கள் என்றால் திருவள்ளுவர் திருக்குறளை எழுதி இருக்கவே மாட்டார். கண்ணதாசன் எழுதிய' ஏசு காவியத்தை' 200 ஆண்டுகளுக்குப் பிறகு படித்த ஒருவர் கண்ணதாசன் கிறித்துவ நம்பிக்கையாளர் என்பதுடன் அவர் ஒரு கிறித்துவர் என்று சொன்னால் அப்போது உள்ளவர்கள் நம்பக் கூடும், மாற்றாக கண்ணதாசன் 'அர்தமுள்ள இந்துமத'ம் எழுதியவர் எனவே அவர் ஒரு இந்து என்று மற்றொருவர் சொன்னால் அதையும் சிலர் நம்புவார்கள், கண்ணதாசனின் தத்துவப்பாடல்களை மட்டும் சுட்டிக்காடி கண்ணதாசன் எந்த மதத்தையும் சாராதவர் என்று வேறு சிலர் சொன்னால் அதுவும் நம்பப்படும். ஆனால் கண்ணதாசன் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பது அவர் வாழும் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குத் தானே தெரியும்.

**********

திருவள்ளுவர் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் என்பற்கு ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ, சமய நம்பிக்கைகளான வேள்வி மற்றும் வீடுபேறு, இறைவணக்கம் ஆகியவை திருக்குறளில் இருக்கின்றது. எனவே அவர் எதோ ஒரு சமயம் சார்ந்தவராக இருக்க வேண்டும் அது சமணமாகவோ, பவுத்தமாகவோ அல்லது சாக்கியமாகவோ கூட இருக்கலாம், அல்லது அப்போது நிலவிய அவற்றின் கலவையாகக் கூட இருக்கலாம், தற்போதும் கூட சைவம், வைணவம் இருபிரிவுகள் இருந்தாலும் இரண்டையும் வழிபடும் நம்பிக்கையாளர்கள் இப்பிரிவுகளை மட்டும் பின்பற்றுபவர்களை விடமிகுதி. திருவள்ளுவரை குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் என்று அந்த குறிப்பிட்ட சமயத்தை சார்ந்தவர்கள் கொண்டாடுவதாலும், திருவள்ளுவர் சமயசார்பற்ற பொதுவானவர் என்று புதிய புனித பொதுச சாயம் பூசப்படுவதாலோ தனியாக பெருமை ஒன்றும் சேர்ந்து கொள்ளப் போவதில்லை, திருக்குறளில் இருக்கும் நல்லக் கருத்துகளை விட்டுவிட்டு அவற்றிற்கும் சமய சாயமும், சமயமற்ற பொதுச் சாயம் (வெள்ளை அடிப்பது) பூசுவதால் திருக்குறளுக்கு என்ன நேர்ந்துவிடப் போகிறது, இவையெல்லாம் தற்காலத்தினர் திருக்குறளுக்குத் தேடித்தரும் சிறுமைகள் ஆகும். கண்டிப்பாக ஒப்பிட வில்லை ஒரு உதாரணத்திற்காகச் சொல்கிறேன், ஏஆர் ரகுமான் ஒரு இஸ்லாமியர் என்பதற்காக அவரது இசை ஒரு இந்துவுக்கு கசக்கிறதா என்ன ? திருவள்ளுவர் எந்த சமயம் சார்ந்தவராக இருந்தால் என்ன ? அவரை ஏன் குறிப்பிட்ட சமயம் சார்ந்தவர் என்றும் சமயமே சாரதவர் என்றும் விவாதம் செய்ய வேண்டும் ?

சுட்டிகள் :

1. திருவள்ளுவரும் வைணவமும்
2. திருவள்ளுவரின் திருநெறி மேன்மைமிகு சைவநீதி
3. ஆதிபகவன்
4. (பார்பனர்களின்!) மனுக்குறளே திருக்குறள்
5. புனித தோமா -புனித தோமையர் கட்டுகதைகள்
6. திருவள்ளுவர் சமயம் யாது? - தமிழ்த் தென்றல் திரு.வி.க

12 கருத்துகள்:

சமுத்ரா சொன்னது…

அவ்வளவு எழுதியவர் கடைசியில் தன்னைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு எழுதியிருக்கலாமே? ரொம்ப தன்னடக்கமாக இருந்தார்களா தமிழர்கள்?

துளசி கோபால் சொன்னது…

ஆட்டைக்கடிச்சு....மாட்டைக்கடிச்சு....வரிசையில் வள்ளுவரும் இருக்காரா???

அவரே சொல்லலையோ...... 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்......

TBR. JOSPEH சொன்னது…

மயிலை சீனி வெங்கடசாமி மற்றும் பலர் 'பகவன்' என்ற சொல் சமணர்களின் அருகனைக் குறிப்பதாலும், தவம் செய்தல், வீடுபேறு போன்றவை சமண / பவுத்த சமயங்களுக்கே உரிய கொள்கை என்பதால் திருவள்ளுவர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்றும் சொல்லி இருக்கின்றனர்//

இவங்களுக்கெல்லாம் வேற வேலை இருக்காதுங்க. அதான் இப்படி எதையாச்சும் சொல்லி சர்ச்சைய கிளைப்பறாங்க. திருவள்ளுவர்னு ஒருத்தார் இருந்தாரோ இல்லையோ அது வேற விஷயம். அவரோட குறள்கள் இறவா வரிகள்!!

புதுகை.அப்துல்லா சொன்னது…

// (இஸ்லாமியர்களின் நம்பிக்கைப் படி அல்லா உலகின் முதல் சமயமாக இஸ்லாமைத்தான் படைத்தாராம், முகமது நபியை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஒருவர் முழுமையான இஸ்லாமியர் ஆகிறார். இந்த நம்பிக்கைபடி கிறித்துவர்கள் அனைவரும் அரைகுறை இஸ்லாமியர்கள்) திருவள்ளுவரை இஸ்லாமியர் என்றும் சொல்லலாம் போல

//


சுத்த பேத்தலா இருக்கு உங்க லாஜிக். ஐயாம் சாரி :((

கோவி.கண்ணன் சொன்னது…

//
சுத்த பேத்தலா இருக்கு உங்க லாஜிக். ஐயாம் சாரி :((

6:51 PM, January 06, 2011//

ஐயா, இஸ்லாமிய ஆண்களுக்கு கிறித்துவ பெண்களை திருமணம் செய்ய திருக்குரான் ஒப்பம் கொடுத்திருப்பது எந்த அடிப்படையில் என்று விளக்குங்க, அதுவே ஏன் இஸ்லாமிய பெண்களுக்கு அந்த உரிமை இல்லைன்னு தெளிவுபடுத்துங்க.

ஆப்ரகாம் இப்ராஹிம் நபி, மோஸஸ், மூசா நபி, ஏசு ஈசா நபி என்றால் கிறித்துவம், இஸ்லாம் இதற்கான தொடர்பு என்பது என்ன என்று விளக்குங்க.

Rajasankar சொன்னது…

கடவுளை ஒப்புக்கொண்ட வள்ளுவர் எவ்வாறு சாக்கிய,சமண சமயங்களை சேர்ந்தவராக இருக்கமுடியும்? கடவுள் வாழ்த்தில் தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இலானடி போன்றவை எல்லாம் சமண,சாக்கிய மத கருத்துக்களா? இருள் சேர் இருவினையும் சேராது இறைவன் அடியை சேருபவருக்கு என்று சொன்னவர் சாக்கியரா?

இந்த மாதிரி ஆராய்ச்சியை தமிழர்களால் தான் செய்ய முடியும் என்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. :-)))

கோவி.கண்ணன் சொன்னது…

// rajasankar said...

கடவுளை ஒப்புக்கொண்ட வள்ளுவர் எவ்வாறு சாக்கிய,சமண சமயங்களை சேர்ந்தவராக இருக்கமுடியும்? கடவுள் வாழ்த்தில் தனக்குவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இலானடி போன்றவை எல்லாம் சமண,சாக்கிய மத கருத்துக்களா? இருள் சேர் இருவினையும் சேராது இறைவன் அடியை சேருபவருக்கு என்று சொன்னவர் சாக்கியரா?

இந்த மாதிரி ஆராய்ச்சியை தமிழர்களால் தான் செய்ய முடியும் என்பதே எனக்கு பெருமையாக இருக்கிறது. :-)))//

சமணர்கள் மகாவீரர் உள்ளிட்ட திருத்தங்கர்களை இறைவனாகத்தான் வழிபடுகிறார்கள், அதே போல் பவுத்த மதத்தினர் புத்தரை வழிபடுகிறார்கள். ஏசு நாதர் கிறித்துவர்களுக்கு கடவுள், இஸ்லாமியர்களுக்கு அவர் இறைத் தூதர் மட்டுமே. சமணர்களுக்கு புத்தர்களுக்கு இறைவன் கிடையாது என்பதில் உண்மை இல்லை. புத்தருக்கும் மகாவீரருக்கும் இறைவன் இல்லை என்பது அவர்கள் இருவருடைய கொள்கை, மதத்தை பின்பற்றியவர்கள் அவர்கள் இருவரையும் இறைவனாகத்தான் பார்த்தார்கள்.

உங்கள் கூற்றுப்படி சிவன் கோவிலுக்கு போகிறவன் பெருமாள் கோவிலுக்கு போகவே முடியாதா ? ஆனால் உண்மையில் அப்படி ஒருசிலர் தவிர்த்து பெரும்பாலோர் இல்லையே.

Banukumar சொன்னது…

நல்ல கட்டுரை கோவி.கண்ணன்.

தொடருந்து எழுத வாழ்த்துக்கள்!

இரா.பானுகுமார்,
சென்னை

ஜோதிஜி சொன்னது…

பலமுறை இவரைப்பற்றி யோசித்துப் பார்த்தாலும் உங்க மாதிரி ஒரு முடிவுக்கு வர முடியல.

ராவணன் சொன்னது…

திருவள்ளுவர் என்று கூறப்படும் Wei ye Lu சீன இனத்தவர்.அவர் சீனாவில் இருந்து வந்தவர்.

என்னுடன் முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு Lu sh yang என்று ஒருவன் பணி புரிந்தான், சீன நாட்டவன். அவன் கூறிய தகவல்கள் வள்ளுவரைப் பற்றி நாம் கொண்டுள்ள அனைத்து கருத்துக்களையும் மாற்றும் வண்ணம் உள்ளன.

அவன் Lu பரம்பரையில் வந்தவனாம், அதாவது நம் வள்ளுவர் பரம்பரையில் வந்தவனாம்.அவர்கள் படிப்பில் மிகவும் தேர்ச்சியானவர்களாம்.

ஒரு சீன நாட்டவரை நாம் போற்றுவது அவனுக்குப் பிடித்திருந்தது.

அவன் மதம் பற்றிப் பேசவில்லை, இனம் பற்றி மட்டுமே பேசினான்.
பழநியில் பொங்கல் வைத்த போகரும் ஒரு சீனரே.

பெயரில்லா சொன்னது…

தங்கள் கண்ணதாசன் உவமை அருமை. ஆக பல கேள்விகள், திருவள்ளுவர் சமயம் என்ன ? திருக்குறள் சுட்டும் சமயம் என்ன ? இரண்டும் வேறுபட்டனவா ? திருக்குறள் தொகுப்பு நூலா ? அது எழுதப்பட்ட நோக்கம் என்ன ? நான் சைவ சமயச் சார்புடையவன். சைவத்தை வெளிப்படையாக திருக்குறள் முன்வைக்கவில்லை. ஆனாலும் திருக்குறள் புருஷார்த்தங்கள் என்னும் தர்ம,அர்த்த,காம, மோக்ஷம் பற்றியதாகவே படுகிறது. மேலும் அஹிம்சா பரமோ தர்ம: என்பதும் சொல்லப்பட்டிருக்கையில் மழித்தலையும், நீட்டலையும், ஆவி சொரிந்து ஆயிரம் வேட்டலையும் பிறவற்றோடு ஒப்பிடுவதால் அவை தேவையில்லை என்பது தவறான வாதம். இது மேலைநாட்டு அடிப்படைவாதக் கொள்கையுடயோரின் (கிறிஸ்தவ, இசுலாமிய, மார்க்சிய, திராவிட இனவாதிகள்)எண்ணப்போக்கு. கண்டிப்பாக திருக்குறள் வைதீகத்தை ஒட்டிய கொள்கைகளையே முன்வைக்கிறது. ஆதி சங்கரர் பூர்வமீமாம்சத்தை கண்டித்தால் அவர் வைதீகர் இல்லை என்பது எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தானம் ஓரிரண்டு குரள்களைத் தவறாக அர்த்தப்படுத்துவது.
திருநீறு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம் ?

Unknown சொன்னது…

திருவள்ளூர் இந்து மதத்தை சேர்ந்தவர் அதாவது தமிழர் என்பதற்கு அடையாளமாக இன்றும் தமிழ் நாட்டில் வள்ளுவர் என்ற ஒரு இனம் இருக்கு. அவர்கள் கோவிலில் பூஜை செய்து வந்தவர்கள் தமிழக சாதி பட்டியலில் இன்றும் இடம் பெற்றுள்ளன

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்