பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2011

இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும்.......!

இட ஒதுக்கீடு என்பது எதோ தகுதியற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை போல் அவ்வப்போது பேசப்படுகிறது. இட ஒதுக்கீடு என்ற சொல்லே தவறு மாறாக இடப் பங்கீடு என்று தான் சொல்லவேண்டும். சாதி நம்பிக்கைகளை சிதைக்க விரும்பாத வருணாசிரம நம்பிக்கை கொண்ட இந்தியாவில் அனைவரும் சம அளவில் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட மாற்று ஏற்பாடே இந்த இட ஒதுக்கீடு என்கிற இடப் பங்கீடு.

இட ஒதுக்கீடுகளை யார் யார் பெருகிறார்கள் ?

தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்பட்ட, மிகவும் பிற்பட்ட வகுப்பினரே இட ஒதுக்கீட்டின் தகுதியைப் பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு என்பது அந்த பிரிவின் பெயரிலேயே அடங்கி இருக்கிறது. தாழ்த்தப்பட்ட என்றால் ? பிற சாதி சமூகத்தால் தாழ்த்தி வைக்கப்பட்ட, கீழான சமூகத்தவராக அறிவிக்கப்பட்ட அல்லது தீண்டத்தகாத என்ற நிலையில் வைக்கப்பட்டவர்களே தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆவர், அது போன்ற விளக்கங்களே பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். மேலும் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் சமூக பொருளாதார நிலையில் தாழ்த்தப்பட்டவர்களைவிட சற்று முன்னேறியவர்கள். இவை தனிப்பட்ட மனிதர்களை அவர்கள் பிறந்த சாதி இது என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. சாதிகள் அவர்களுக்குள் குழவாக இயங்குவதால் தனிமனித பொருளாதார நிலையைப் பார்க்காது ஒட்டுமொத்த சாதியின் ஏற்றம் வளர்ச்சியை கொண்டு அவர்களுக்கு பொதுவான சலுகைகள் வழங்கப்படுவது தான் சாதி சமூகங்களை பொருளாதார சமூக அந்தஸ்துகளில் சமத்துவமாக்க முயலுவதன் ஏற்பாடாகும். தனிப்பட்ட மனிதர்களின் பொருளாதாரத்தைப் பார்த்து இட ஒதுக்கீடு அளிப்பது என்பது நடைமுறைக்கே ஒத்துவராத ஒன்று. எடுத்துக்காட்டாக ஒரு மாணவன் பொருளாதரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து 100க்கு 95 எடுத்து இட ஒதுக்கீடு பிரிவிக்குள் அவனுக்கு தகுதியில்லை என்றால் முதலில் அந்த மாணவன் 95 மதிப் பெண் பெற எடுத்த முயற்சிகள் என்ன என்று பார்க்கையில் வெறும் இயற்கை அறிவினால் அவன் 95 மதிப்பெண்கள் பெற்றானா ? என்ற கேள்வி தான் முதலில் வருகிறது. 95 மதிப்பெண் பெற தனியார் பயிற்சி வகுப்பிற்குச் சென்று இருக்க வேண்டும், மற்றும் படிப்பைத் தவிர்த்து அவனுக்கு வேறு வேலைகளே இல்லாமல் இருந்திருக்க வேண்டும். இங்கு பொருளாதார சுமை என்பது அவன் பெற்றோர் சுமக்கும் சுமையே அன்றி அம்மாணவனுக்கு ஏற்பட்ட நேரடியான அழுத்தம் இல்லை. ஒரு கல்லுடைக்கும் தொழிலாளியின் அல்லது கொத்தனார் வேலை செய்யும் தொழிலாளியின் பிற்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மாணவனை எடுத்துக் கொண்டால் அவன் பெற்ற மதிப்பெண் 60 என்றாலும் அவன் தனியார் பயிற்சிக்கு சென்றிருக்காதவனாகவோ, தந்தைக்கு பொருளாதாரம் ஈட்டித்தரும் வேலைக்கு இடையே படித்து அந்த மதிப்பெண்ணைப் பெற்றிருப்பான். பெற்றோர் ஊக்கத்துடன் 95 மதிப்பெண் பெரும் மாணவனும், பெற்றோருக்கு உதவி செய்து கொண்டே படிக்கும் மாணவன் பெரும் 65 மதிப்பெண்களும் போட்டிப் போட்டு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தகுதி பெறவேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதமான சமூக நீதி. எந்த ஒரு ஊக்கமும் இல்லாமல் தன் முயற்சியால் படித்து 95 விழுக்காடு பெரும் மாணவர்கள் எந்த சாதியிலும் உண்டு ஆனால் அவர்களின் விழுக்காடு குறைவே. மாறாக நன்கு படித்து, விழிப்புணர்வு பெற்றவர்களின் பிள்ளைகளும், அத்தகைய விழிப்புணர்வுகளுக்கு வாய்ப்பில்லாதவர்களும் ஒன்று போலவே மதிப்பெண் எடுக்க முடியுமா ? இதில் மாணவரின் தனித்திறமை என்று எதுவும் இல்லை, அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளே அவர்களை உருவாக்குகிறது. வாய்ப்புகளின் சமச்சீரின்மையை சரி செய்யவே இட ஒதுக்கீடுகள் பயன்படுகிறது. மற்றபடி தேராத மாணவன் தகுதியே இல்லாத மாணவன் இட ஒதுக்கீடுகளால் பலன் பெறுவது இல்லை.

சென்ற ஆண்டு மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவர்களில் எவருமே உயர்வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. பின்தங்கிய மற்றும் பிற்பட்ட மாணவர்களை விட உயர்வகுப்பினர் குறைவாகவே மதிப்பெண் எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. என்னைக் கேட்டால் இட ஒதுக்கீடுகள் அரசு பள்ளியில் தமிழ் மொழி வழிக் கல்வி பெற்றவர்கள் அனைவருக்கு பொருளாதார ரீதி அடிப்படையில் வழங்கலாம், எந்த சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் ஆங்கில வகுப்பில் படிப்பதற்கான பொருள் உதவி இருக்கும் மாணவன் தனியார் கல்லூரிகளில் பணம் கொடுத்து இடம் பிடிப்பது ஒன்றும் கடினமான செயலே இல்லை.

*****

இவற்றையெல்லாம் பலமுறை பதிவில் எழுதி இருக்கிறேன். இவை இட ஒதுக்கீடு பற்றிய சமூக ரீதியிலான புரிதல் மட்டுமே. ஆனால் இட ஒதுக்கீட்டை எடுத்துவிட்டால் என்ன ஆகும் என்பதை அனைவரும் தெரிந்தே ஆகவேண்டும், குறிப்பாக இந்து மத இடிதாங்கிகள், இட ஒதுக்கீடு இலவசமாக வழங்கபடவில்லை அது கையூட்டே என்று இந்துத்துவாதிகள் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். தலித்துகளுக்கு, பிற்பட்ட சமூகத்திற்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால் அவர்கள் சென்று சேரும் இடம் மாற்று மதம் தான். ஏனெனில் இந்துமதத்தில் இருப்பதால் இவர்களுக்கு என்ன நன்மை ? சுதந்திர இந்தியாவிற்கு முன்பு மதம்மாறுபவர்களின் விகிதம் ஒப்பிட தற்போதைக்கு மிகவும் கீழே சென்றுள்ளது. அதற்குக்காரணம் இந்துமதத்தைச் சேர்ந்த தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை கிடைப்பது என்பது தான் முக்கிய காரணியாகவும், இதுவும் மறுக்கப்பட்டால் நீங்களே உங்கள் மதங்களைக் கட்டிக் கொண்டு அழுங்கள், எங்களுக்கு பறையன் பள்ளன் என்ற அவப்பெயர் விளிப்புத் தேவை இல்லை என்று ஒட்டு மொத்தமாக இந்துமதத்தைக் கைகழுவிவிட்டு மதம் மாறி இருப்பார்கள், இட ஒதுக்கீடு என்பதே இந்து மக்கள் தொகையை குறிப்பாக தலித் இந்துக்கள் மதம்மாறமல் இருக்கக் கொடுக்கப்படும் கையூட்டு தான். இதைப் புரிந்து கொள்ளாத அதிமேதாவிகள், சமூக நலனை சிந்திப்பதாகவும், ஞாயம் பேசுவதாகக் கூறுவதுடன் தலித்துகளுக்கு இலவசமாக அள்ளிக் கொடுக்கிறார்கள் என்ற பரப்புரையை செய்து காழ்புணர்வை வளர்த்துவருகிறார்கள். இந்த திடீர் சமூக ஆர்வலர்கள் உயர்வகுப்பினர் நடத்தும் கல்லூரியில் ஏன் உயர்வகுப்பு ஏழைமாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்க முன்வருவதில்லை என்பது குறித்து கேள்வி எழுப்பவே மாட்டார்கள்.

இட ஒதுக்கீடு என்பது சமூக சமச்சீருக்கு மாற்று ஏற்பாடு என்றாலும் அது இன்று வரை இந்துமக்கள் தொகையை கட்டிக்காக்கும் ஒரு கேடயமாகவே இருக்கிறது என்பதை திடீர் சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும். இது தெரிந்துள்ளதால் இந்துதுவவாதிகள் நேரடியாக இட ஒதுகீட்டை எதிர்ப்பதில்லை ஆனால் மறைமுகமாக உயர்வகுப்பு மாணவர்களை இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தூண்டிவிட்டு குளிர்காய்வார்கள்.

இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டால் இந்துமதம் சிதையும் என்பதே உண்மை. தேசியவியாதிகளே, திடிர் சமூக ஆர்வளர்களே இப்போது சொல்லுங்கள் இட ஒதுக்கீடு யாருக்கு பயன்படுகிறதோ இல்லையோ வருணாசிரமத்தைக் கட்டிக்காக்கும் ஒரு கேடயமாகவே இருந்துவருகிறதா இல்லையா ? இராமகோபாலன் தலித் கிறித்துவர்களுக்கு இந்து தலித்துகளைப் போல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று எதிர்ப்பது எதற்காக ?

இந்துபறையர்கள் மற்றும் பள்ளர்கள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட சமூகத்தினர் தங்களை அவ்வாறே அழைத்துக் கொள்ள அனுமதிக்கிறோம் என்கிற மறைமுக ஒப்புதலுக்குக் கொடுக்கப்படும் கையூட்டே இட ஒதுக்கீடு. இதை இராமகோபாலன் போன்று இந்துத்துவாக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர், தவறு என்றால் ஒரு கிறித்துவ தலித்துக்கும், இந்து தலித்துக்கும் சமூக மற்றும் பொருளாதார நிலையில் என்ன வேறுபாடு இருக்கிறது என்று சொல்லுஙக்ள் ? இட ஒதுக்கீடு என்பவை மறைமுகமாக உயர்சாதியினர் அல்லாதோர் இந்துவாக தொடரக் கொடுக்க்படும் லஞ்சம்.

2 கருத்துகள்:

Darren சொன்னது…

//மரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) !//

Very nice.

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு ....... இட ஒதுக்கீட்டை ஒதுக்குங்கள் என சொல்பவர்கள் பெரும்பாலானோர் வசதிப் படைத்தவர்களே !!! நான் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் வராதவன்.. இருப்பினும் இட ஒதுக்கீடு எவ்வளவு தேவை என்பதை உணர்ந்தவன் ...

இட ஒதுக்கீட்டில் சில மாற்றங்கள் கொண்டு வரலாம்.. அதாவது நீங்கள் சொன்னது போல தமிழ் வழிப் படித்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தல் வேண்டும் .... அதே போல பிந்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு தரலாம்...

குறிப்பாக சென்னை மாநகரில் வாழும் ஒரு OBC யை விட பட்டுக்கோட்டையிலோ, ஆனைக்கட்டியில் வாழும் OBC
பிரிவைச் சேர்ந்தவர்கள் பின் தங்கிய நிலையில் இருக்கின்றார்கள். இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் ....

அதே போல மதம் மாறுவதால் மட்டுமே தலித்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது என்பது அப்பட்டமான அநியாயம் ஆகும்... மதம் மாறுவது தனிப்பட்ட விருப்பம். மதம் மாறிவிட்டால் அவர்கள் வசதிகள் பெருகிவிடுமா என்ன ???

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்