தியானம், தவம் !
Monday, September 27, 2010
தன்வயம் என்ற சொல் திரிபின் வடிவமே தவம் என்ற சொல் என்பதாக நினைக்கிறேன். தன் + திறன்(ம்) > தந்திரம், மன்(மனம்) + திறன் > மந்திரம் என்பதாக சொற்பிறப்பியல் அமைந்திருக்கிறது, இவை முழுக்க தூய தமிழ்ச் சொல்லென்றாலும் வடமொழியில் கடன் பெற்றவையோ என்பதான சொல் மயக்கத்தை ஏற்படுத்துவை தந்திரம், மந்திரம் என்ற சொற்கள். த்யான் என்ற சொல் தமிழில் தியானம் என்பதாக வழங்கப்படுகிறது என்றாலும் இவற்றிற்கான மாற்றுப் பொருள் தமிழில் மனப் பயற்சி என்பதாம். அதுபோன்று யோகம் என்பது உடற்பயிற்சியாகும், ஆசனம் என்பது தமிழில் உட்காரும் காலிகள் மற்றும் (உடல்) நிலை அமைப்பு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. சம்மணமிட்டு அமர்தல் என்ற சொல் சம + அணம் அல்லது அணங்கு (கட்டுதல், சேர்த்தல்) என்ற பொருளில் கால்களை ஒன்றாக மடித்து உட்காரும் நிலையைக் குறிப்பதாகும். த்யான் (அ) த்யாணம் என்ற சொல்லின் பின்னொட்டான ஆணம் (பற்றுதல், கட்டுதல்) தமிழ் சொல்லாக இருக்கும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறேன். மனதைக் கட்டுதல், ஒன்றிணைத்தல் என்ற பொருள் கொண்டவையே தியானம் என்ற சொல்லின் பொருள்.
*****
புத்தர் தவமிருந்தார், 'ஆசையே துன்பத்திற்கு காரணம்' என்று கண்டு கொண்டார் என்பதாக புத்தர் பற்றிய வரலாறு மற்றும் சமூகக் கருத்தாக அறிந்து கொண்டிருக்கிறோம். புத்தர் வைதீக சமயவாதியாக இருந்திருந்தால், புத்தர் கடும் தவம் புறிந்த காரணத்தினால் ஈச்வரன் அவரின் முன் தோன்றி அவருடைய அறிவின் கண் திறந்து ஆசி கொடுத்தார் என்பதாக எழுதி இருப்பார். புத்தர் இறை மறுப்பாளரோ, ஏற்பாளரோ இல்லை என்பதால் விஷ்ணுவோ, சிவனோ அவருக்கு அருள்பாலிக்கவில்லை. நேற்று கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்து மதத்தின் எல்லா கடவுளும் ஏன் கனவில் மட்டுமே வந்து தனக்கு கோவில் கட்டச் சொன்னார்கள் ? நேரடியாக ஏன் ஒருவரும் வரவில்லை என்பதாகப் பேசினோம். நேரில் வந்தால் ஒருவேலை சிறைபிடித்து வேண்டிய வரங்களை அவ்வப்போது அடியார்கள் கறந்துவிடுவார்கள் என்கிற இறை அச்சமே காரணமாகக் கூட இருக்கலாம். இதையெல்லாம் விட அனைத்து சக்தியும் மிக்க கடவுள் தனக்கு தானே கோவில் எழுப்பிக் கொள்ள முடியவில்லை என்றும் ஒரு பக்தனை கெஞ்சாமல் தானே பிறந்து வந்து தனக்கு கோவில் கட்டிக் கொள்ள முடியவில்லை என்பதையும் யாரும் எண்ணிப் பார்க்க அங்கே தெய்வ குத்தம் தடுக்கிறது. கடவுள் பற்றிய சிந்தனைகளில் கடவுள் பயத்தின் காரணமாகவே பலர் சிந்திக்க விரும்புவதில்லை, அது ஏன் தொல்லை நாம ஏதாவது நினைக்க அது தவறாகிப் போய் தண்டனை அடைந்துவிட்டால் ? என்கிற அடிப்படை பயமே இவற்றிற்கு காரணம். இவர்களில் ஒருவர் கூட எந்த ஒரு சமய நம்பிக்கைச் சாரந்தவருக்கும் பிற சமயங்களின் நம்பிக்கை கேலியும், கேள்வியும் மட்டுமே என்பதை சிந்திப்பதில்லை. அதாவது பிள்ளையாரைப் பற்றி கேள்வி கேட்க ஒரு இஸ்லாமியருக்கோ, கிறித்துவருக்கோ எந்த கடவுளும் தடைவிதித்து தெய்வக் குற்றம் ஆக்கிவிடவில்லை, கேட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் அது போல் இந்துக்களுக்கும் அல்லாவின் இருப்பில், ஏசுவின் இருப்பில் ஐயம், கேள்வி எழாமல் இருப்பதில்லை. ஆனால் ஒருவருக்கு தத்தமது மத நம்பிக்கைக்குள்ளான கேள்விகள் என்பது மட்டுமே பெரும்பாலும் இறை அச்சத்தை ஏற்படுத்துகிறது என்பதை (எந்த ஒரு) நம்பிக்கையாளர்களும் நினைப்பதே இல்லை. ஒரு கிறித்துவர் இந்து சமய நம்பிக்கையை பலிப்பதை பொறுத்துக் கொள்ளும் (இந்துக்) கடவுள் எல்லாக் கடவுளையும் மறுக்கும் நாத்திகனை தண்டித்துவிடுவார் என்று கூட இன்னும் பலர் நம்புகிறார்கள். இவ்வாறான மதம் சார்ந்த இறை நம்பிக்கைகள் அனைத்துமே மடைமை, அறிவீனம் அல்லது பகுத்தறிவின்மை என்று சொல்வதில் நான் என்றுமே தயங்கியதே இல்லை.
குறிப்பிட்ட சில ஆன்மிகம் சார்ந்த இடங்களை குறிப்பாக பெத்லகேம், மெக்கா, வாடிகன், திருப்பதி, இமய மலை ஆகியவற்றை இறைவனின் இருப்பிடம் என்றே அம்மதத்தைச் சார்ந்தவர்கள் சொல்லிக் கொள்கிறார்கள். இவை வழிப்பாட்டுத்தளங்கள் அதுவும் குறிப்பிட்ட மதத்தை, சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே. கடவுளின் நாடு கேரளா என்பதாக கேரளவாசிக்கள் சொல்லிக் கொள்வதைப் போன்றவையே அவை. உலகின் ஆன்மிக நாடு இந்தியா என்பதாக இந்துக்கள் சொல்வது போல், உலகில் அரசியல்வாதிகளின் நாடு (Country of Politicians) என்று சொன்னாலும் பொருத்தமாகத்தான் இருக்கும் :) அந்த அளவுக்கு இந்தியா பல்வேறு அரசியல் வாதிகளால் (உறிஞ்சப்பட்டு) பயன்படுத்திக் கொள்ளப்பட்டுவருகிறது (எழுத வந்தது வேறு, மன ஓட்டம் எங்கே செல்கிறது மன்னிக்கவும்)
மனம், சிந்தனை இவற்றின் அடைப்படையில் தான் செயல்கள் நடக்கின்றன. தவத்தின் பலனாக கிடைததது என்று சொல்வதெல்லாம் 'நாம் அதையே சிந்தனைசெய்து செயலாற்றியதன்' விளைவால் கிடைத்த நன்மை என்பதே பொருள். முன்னோர்கள் தவம் செய்து அதன் மூலம் வரமாக கிடைத்தவற்றையே 'வேதங்களாக' ஆக்கி வைத்தனர் என்று விளக்கம் (வ்யாக்காணம்) சொல்லுவர். தவம், தியானம் செய்வதால் வரம் எதுவும் கிடைகாது. சிந்தனை வளம் பெருகும், அதன் மூலம் சில ஐயங்களுக்கு விளக்கம் கிடைக்கும். இவைதான் மனப் பயிற்சியின் பலன்கள். எந்த ஒரு எழுத்தாளரும் முழுக்க முழுக்க யாருமே அறியாத தகவல்களை தந்துவிட மாட்டார்கள், பல்வேறு நூல்களின் படித்தவற்றில் மனம் விரும்பும், மார்கெட் (விற்பனைக்கு ஈர்ர்கும் தகவல் என்பதை நம்பி) செய்யக் கூடிய தகவல்களை அவர்கள் தொகுப்பார்கள், அந்நூலை அமைக்கும் வரை அவர்களுடைய மனம் அந்நூலை எப்படி சீராகக் கொண்டு செல்வது பற்றிய சிந்தனைகளில் இருக்கும். இது ஒருவகையான தவம், இது போல் இயக்குனர்கள், ஆராய்சியாளர்கள் ஆகியோரும் மனம் சார்ந்து மன ஒரு நிலையில் இருப்பர். இவற்றைத்தான் தவம் என்கிறார்கள். தவம் என்பது தன்வயத்தில் ஒத்த சிந்தனையில் இருப்பது, தியானம் என்பது அதனை வழிநடத்துவதற்கான செயல். ஒவ்வொரு படைப்பாளியும் தவம், தியானம் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றபடி தியானம், தவம் என்ற சொற்களெல்லாம் சமய நம்பிக்கையில் சம்மணம் மிட்டு அமர்ந்திருக்கும் சாமியார்களின் நிலை பற்றியது மட்டுமே அல்ல. வடமொழி சொற்களாக, அலங்காரமாக நமக்கு படுவதால் அந்தச் சொல்லின் மீது பெருமதிப்பு வைத்திருக்கிறோம், அவையும் செயல்கள் (verb) குறித்தான மற்றொரு சொற்கள் தான். நானும் இந்த இடுகை நிறைவுறும் வரையில் சிறு நினைவு தடங்கல் ஏற்பட்டிருந்தாலும் எழுதி முடிக்கும் வரை தியானமும், தவமும் செய்து கொண்டிருந்தேன் :)
எளிமையாகச் சொல்வதென்றால் ஒன்றைப் பற்றிய சிந்தனையும் செயலும் நல்ல விளைவுகளை தந்திருந்தால் நீங்கள் தவமும் தியானம் செய்து பலன் அடைந்திருக்கிறீர்கள் என்பதே.



















