கோவியார் கூற்று !

தமக்கு தேவையற்றதும் அங்கே இருக்கிறது என்பதற்காக பல்பொருள் கடைகளில் குப்பைகளும் நிறைந்துள்ளதாகக் கூற முடியாது.

மதவெறி, இனவெறி !

Friday, June 05, 2009

மதவெறி, இனவெறி இவை இரண்டும் மனித சமூகத்தின் முன்னே எதிர்த்து நிற்கும் பெரிய அரைகூவல்கள். இவற்றிற்கு ஆன்மீகம் தீர்வு சொல்கிறது என்போர் அனைவருமே மதக் கொள்கைகள் அவற்றை சரி செய்துவிடும் என்று நம்புகிறார்கள். ஆனால் இனவெறிக்கு உரமாக இருப்பதே மதங்கள் தான். மதங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே அவை என்றைக்கும் இனவெறிக்கு தீர்வாக அமைந்தது இல்லை. மாறாக அந்தப்பகுதியின் இன அரசியலைப் புசித்து தன்னை வளர்த்துக் கொள்ளவே முற்பட்டு இருக்கின்றன. நாம் அனைவரும் இந்தியர் இனம் என்று நினைத்தாலும் மதக்கலவரங்களின் போது நம்மை இன்னொருவன் கொல்வதற்கு வேறு வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே சின்ன காரணம் இருந்தால் போதும் என்பது மறுக்க முடியாத உண்மை. மதங்களின் நோக்கம் இனவேறுபாடுகளைக் களைவதாக என்றைக்கும் கட்டமைக்கப்படவில்லை. எங்கள் மதம் உயர்ந்தது நாங்கள் அனைவரையுமே நேசிக்கிறோம் என்பது வெறும் வேதக் கொள்கைகள் தான், அவை செயல்பாட்டுக்கு வந்ததே கிடையாது, அப்படியும் ஒரு சிலர் தன்மையோடு நடந்து கொண்டால் அது அவருடைய தனிப்பட்ட குணத்தினாலன்றி மதத்தைப் பின்பற்றுவதால் அல்ல.

கண்டங்களைக் கடந்து வாழ்ந்தாலும் மனிதனின் 'நிறம்/இனம்' என்றைக்கும் ஒன்றிணைந்துவிட தடையாகவே தான் இருக்கும். அப்படி இல்லாத இடங்களில் சாதிப் பிரிவுகள் இருந்து வேற்றுமை வளர்த்துக் கொண்டு இருக்கும். மனிதன் தன் இனத்தை மட்டும் உயர்வாக நினைப்பது அடிப்படை மனநிலை கோளாறு மற்றும் மிதமிஞ்சிய உயர்வு மனப்பான்மையுமே காரணம், வெறும் பயல்கள் கூட தன்னை உயர்த்திக்காட்ட தன்னை இனம்/சாதிகளுக்குள் அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான். இந்த மிகச் சிறிய குறுகிய காரணத்தினால் இனவெறி நெருப்புகள் தலைமுறை தலைமுறையாக அணையாமல் பாதுகாக்கப்படுகிறது. படிப்பும் அறிவும் எல்லாவற்றையும் மாற்றும் என்பது வெறும் நம்பிக்கைதான், ஆனால் சாதி/மத/இன வேறுபாடுகளை வளர்பவர்களில் படிக்காதவர்கள் யாருமே முனைப்புடன் செயல்படுவதில்லை, அப்படி செயல்படுபவர்கள் படித்தவர்கள் தான் என்பதே உண்மை. கலப்பு இன சமூகம் வாழும் நாடுகளில் வேலை வாய்ப்புச் செய்திகளில் 'குறிப்பிட்ட இனம் / மொழி பேசுபவர்களுக்கு' முன்னுரை உண்டு என்று வெளிப்படையாகவே அறிவிப்பார்கள். இயல்பான சிலவேலைகள் ஒரு சில மொழி பேசுபவர்களால் தான் செய்ய முடியும் என்பதும் உண்டு, ஆனால் அவை மிகக் குறைந்த அளவே. மற்றபடி தன் இனத்தை வளர்க்க வேண்டும், அரவணைக்க வேண்டும் என்பதை எல்லா இனத்துக்காரர்களும் செய்கிறார்கள். அதுவே அவர்களின் மக்கள் விழுக்காடு மிகும் போது பதவி ஏவல்கள் (அதிகாரம்) கைபெற்ற முயற்சிப்பார்கள், அதில் வெற்றிபெற்றால் அதன் பிறகு அதனை தக்கவைத்துக் கொள்ள எல்லா சட்டதிட்டங்களையும் வரைந்துவிடுவார்கள். பெரும்பான்மையாக ஒரு சமூகம் வளரும் போது பொதுவாக நடப்பது இதுதான். அதையும் மீறி பிற இனத்தை நசுக்க முற்படும் போது தான் அங்கே மோதல் வெடிக்கிறது.

இனம் / நிறம் இவை எல்லாம் வெறும் 1000 ஆண்டுகளாக ஓர் இடத்தில் வாழ்ந்தன் அடையாளமாக உடலில் ஏற்பட்ட தோற்ற வேறுபாடுதான். உண்மையிலேயே இவற்றில் ஏதும் பொருள் இருக்கிறதா ? குளிர்பகுதியில் வாழ்ந்த இனங்களில் தோல் நிறமும், வெப்ப பகுதியில் வாழ்ந்தவர்களின் தோல் நிறமும் வெறும் சூழலால் ஏற்பட்ட மாற்றம், குளிரின் / வெப்பத்தின் தன்மைக்கு ஏற்ப காதுகள், மூக்கு அமைப்பு அனைத்துமே மாறி அமைந்திருக்கிறது. மற்றபடி உடலியல் அமைப்பில் ஒரு இனத்திற்கும் மற்ற இனத்திற்கும் சிறு சிறு மரபு கூறுகள் தவிர்த்து பெரிய வேறுபாடு இல்லை. அதாவது ஒரு கருப்பின ஆணும், வெள்ளை இன பெண்ணும், (இருவருக்கும் உடலியலில் எந்த குறைபாடுகளும் அற்றவர் என்றால்) திருமணம் செய்து கொண்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும். இது அனைத்து இனங்களுக்கும் பொருந்தும், பிறகு எதை வைத்து இனவெறுப்புகள் தோன்றுகிறது ? உடலின் தோற்றம் மற்றும் நிறத்தில் உள்ள இச்சை, பாரம்பரியம் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை இவையே இனவெறுப்புகளை போற்றிப் பாதுகாக்கின்றன. அதாவது உடல்சார்ந்த இச்சையே இனவேறுபாடுகளின் முதன்மைக் காரணி.

எல்லோரும் மனிதர்கள் தான், எல்லோருக்கும் இரத்தமும் சதையும், கீறினால் வலியும், விபத்து, நோயால் இறப்பும் உறுதி என்று நம்ப மறுக்கிறார்கள். இறந்து போகாத இனம் என்று எதுவுமே இல்லை. கண் முன்பே இறப்புகளைப் பார்த்தும் இனவெறிக்கு கொடிபிடிப்பவர்களாக விலங்குக்கு ஒப்பானவர்களாக அறியாமையில் மூழ்க்கிக் கிடக்கிறார்கள். இனம்/சாதி/மதப் பெருமைகள் அனைத்தும் வரட்டு கவுரம், தனிமனிதனுக்கு எந்த ஒரு பெருமையையும் தராது, இறந்தால் எதையுமே கொண்டு செல்ல முடியாது.

இயற்கை சீற்றங்களில் கொல்லப்படும் போதும் மனிதர்கள் பாடம் படிப்பதே இல்லை. கண்டங்கள் அழிந்தால் திருந்துவார்களோ ? இனவெறியும், மதவெறியும் அதை எளிதாக செய்துவிடும். உலக அழிவுக்கு சுற்றுச்சூழல் காரணமாகும் முன்பே, மனிதனின் வெறித்தனமே காரணமாக அமைந்துவிடும்

10 கருத்துக்கள்:

  • ஸ்வாமி ஓம்கார்
     

    கோவி ரிட்டன்ஸ்...

    அண்ணே கோவி வந்துட்டாரு...

    எல்லாரும் அடுத்த பதிவு வழியா தப்பிச்சு போயிருங்க :)))

    குறிப்பு :
    இன்னும் மதியம் எழுதிய பதிவின் தாக்கம் எனக்கு இருக்கு ;)

  • உடன்பிறப்பு
     

    உலகம் தோன்றிய நாள் முதல் இதுவரை நிகழ்ந்த பேரழிவுகளைவிட மதவெறியினால் மாண்டவர்கள் தான் அதிகம். மதம் ஒழிப்போம் மனிதம் காப்போம்

  • பித்தன்
     

    //இறந்து போகாத இனம் என்று எதுவுமே இல்லை. கண் முன்பே இறப்புகளைப் பார்த்தும் இனவெறிக்கு கொடிபிடிப்பவர்களாக விலங்குக்கு ஒப்பானவர்களாக அறியாமையில் மூழ்க்கிக் கிடக்கிறார்கள்//

    முழுவதும் ஏற்றுக்கொள்ள கூடியதே...

    இந்த உலகத்தில் மதங்களின் பெயரால் எடுக்கப்பட்ட உயிர்களே அதிகம் :(

    //குறிப்பு :
    இன்னும் மதியம் எழுதிய பதிவின் தாக்கம் எனக்கு இருக்கு ;)//

    இறுதி சில வரிகளில் நானும் உணர்ந்தேன் :)

  • வேடிக்கை மனிதன்
     

    //மதங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே அவை என்றைக்கும் இனவெறிக்கு தீர்வாக அமைந்தது இல்லை. மாறாக அந்தப்பகுதியின் இன அரசியலைப் புசித்து தன்னை வளர்த்துக் கொள்ளவே முற்பட்டு இருக்கின்றன.//

    மதங்கள் மனிதனுக்கு மதம் பிடிக்கவைத்ததைத் தவிர்த்து ஒரு மண்ணையும் அது கிள்ளிப் போடவில்லை.

  • பித்தன்
     

    //வேடிக்கை மனிதன் said...
    //மதங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே அவை என்றைக்கும் இனவெறிக்கு தீர்வாக அமைந்தது இல்லை. மாறாக அந்தப்பகுதியின் இன அரசியலைப் புசித்து தன்னை வளர்த்துக் கொள்ளவே முற்பட்டு இருக்கின்றன.//

    மதங்கள் மனிதனுக்கு மதம் பிடிக்கவைத்ததைத் தவிர்த்து ஒரு மண்ணையும் அது கிள்ளிப் போடவில்லை.
    //

    கண்டிப்பா

  • வேடிக்கை மனிதன்
     

    //ஆனால் சாதி/மத/இன வேறுபாடுகளை வளர்பவர்களில் படிக்காதவர்கள் யாருமே முனைப்புடன் செயல்படுவதில்லை, அப்படி செயல்படுபவர்கள் படித்தவர்கள் தான் என்பதே உண்மை.//


    போவான் போவான் படித்தவன் சூதும் பாவமும் பண்ணினால் ஐயோவென்று போவான் என்ற பாரதியின் பாடல் தான் ஞாபகத்துக்கு வருகிறது.

  • மணிநரேன்
     

    நல்லதொரு பதிவு கோவியாரே.
    பல கருத்துக்கள் குறிப்பிடும்படி உள்ளது.

    //அப்படியும் ஒரு சிலர் தன்மையோடு நடந்து கொண்டால் அது அவருடைய தனிப்பட்ட குணத்தினாலன்றி மதத்தைப் பின்பற்றுவதால் அல்ல.//

    மதத்தை தாண்டிய பார்வை இருந்தால்தான் உண்மையான மனிதத்தை வளர்க்க முடியும்.

  • அக்னி பார்வை
     

    கோவி கொஞ்ச நாளா காணோம்..

    நல்ல பதிவு

  • குடுகுடுப்பை
     

    ஒரு சிலர் தன்மையோடு நடந்து கொண்டால் அது அவருடைய தனிப்பட்ட குணத்தினாலன்றி மதத்தைப் பின்பற்றுவதால் அல்ல.//

    இத ஒத்துக்கொள்ளும் நேர்மைக்கு தனிப்பட்ட குணம் வேண்டும்

  • ஆ.ஞானசேகரன்
     

    //உலக அழிவுக்கு சுற்றுச்சூழல் காரணமாகும் முன்பே, மனிதனின் வெறித்தனமே காரணமாக அமைந்துவிடும்//

    சுற்றுச்சூழல் அழிவுக்கே மனிதன் காரணமாக இருக்கின்றானே!

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP