காலத்தில் தேட...

எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1

Wednesday, June 17, 2009

எழுதுவதற்கு அலுப்பும் நேரமின்னையும் காரணியாக, எழுத நினைத்து எழுதாமல் விடுபடுவது நிறைய இருக்கிறது. அதற்கு மற்றொரு காரணம் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் நடப்புகளை எழுதுவதும், அதை மட்டுமே விரும்பிப் படிப்பதும் எனக்கும் பலருக்கும் விரும்பமான ஒன்று என்பதால் பொதுவானவற்றை எழுதுவதற்கு சற்று சுனக்கம் தான். யார் இதெல்லாம் கேட்டது ? இனி இடுகைக்கு போவோம்.

***

மார்கழிப் பனியை விரட்டி அலுப்பு நீங்கி சுறுசுறுப்பாக அதிகாலை எழும் பழக்கம் ஏற்படுத்த தமிழகத்தின் மார்கழிக் அதிகாலைகள் கோயில் பாட்டுக்களால் புலரும், அழகான வண்ணங் கோலங்கள் இட்டு அதன் மையத்தில் சாணத்தில் பரங்கிப் பூக்களை வைத்து, தெருவையே பளப்பளப்பாகவும், மணமாகவும் வைத்திருப்பார்கள். அது போல் சித்திரை கத்திரி வையிலில் இருந்து மீட்டுக் கொள்ள தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் குறிப்பாக சித்திரா பவுர்ணமி எனப்படும் முழுநிலா நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். எங்கள் ஊரிலும், அதைச் சுற்றியுள்ள முருகன் கோவில்கள், அம்மன் கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் நடப்பது உண்டு. நாகை காயரோகனம் சுவாமி - நீலாயதாட்சி அம்மன் கோவிலில் முன்பு ஆடிப்பூரத் திருவிழா சிறப்பாக நடைபெறும், இப்பொழுதெல்லாம் அவ்வளவு சிறப்பாக நடைபெறுவதில்லை நாகப்பட்டினத்தைப் (நாகை) பொறுத்த அளவில் மிகப் பெரிய சிவன் கோவில்கள், பெருமாள் கோவில்கள் இருந்தாலும் நாகை நெல்லுகடை மாரியம்மன் கோவிலுக்கு சித்திரை திங்களில் ஒரு ஞாயிற்றுக் கிழமை திருவிழா நடைபெறும். திருவிழாவில் அன்பர்கள் (பக்தர்கள்) வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வார்கள். வேண்டுதல்கள் பெரியவர்கள், சிறியவர்கள் என்றால் வேப்பில்லைக் காவடி, மலர் அலங்கார காவடி எடுத்தல், குழந்தைகளை செடில் என்னும் கழுமரத்தில் ஏறி சுற்றிவருதல், பெண்கள் தனிப்பட்ட வேண்டுதல்களாக மாவிளக்கு ஏற்றுதல் ஆகியவை ஆகும்.

திருவிழாவுக்கு 10 நாட்களுக்கு முன் முறைப்படி கொடி ஏற்றப்படும், திருவிழாவுக்கு முதல் நாள் இரவே கோவில் வெளிச் சுற்றுகள் (பிரகாரம்) கடைகளால் களைகட்டிவிடும், பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டு கோவிலுக்குச் செல்லும் அன்பர்கள் மட்டுமே கோயிலை நோக்கிய சாலைகளில் அனுமதிக்கப் படுவர். திருவிழாவுக்கு முதல் நாள் மாலை விழாவின் தொடக்கச் சிறப்பு நிகழ்வாக (உற்சவம்) சிங்க வாகனத்தில் பணிப்பெண்ணுடன் காளி உருவ மாரியம்மன் புறப்பாடு, நடை பெறும்.

அந்த புறப்பாடு பெரிய தெருக்களை (இராச வீதி) சுற்றி வந்ததும், கைலாச வாகனத்தில் மீண்டும் உலாவரும். கைலாசா வாகனப் புறப்பாட்டிற்கு எல்லா ஏற்பாடுகளையும் எங்க அப்பா காலத்தில் இருந்து எங்கள் இல்லத்தினர் செய்து வருவது வழக்கம், அந்த நிகழ்வில் எங்கள் இல்லத்தினர் அனைவரும் கலந்து கொள்வோம்,

மறுநாள் என் தம்பி காவடி எடுக்கும் நிகழ்வு இருப்பதால் கைலாச வாகனம் புறப்படும் முன் காத்தவராயன் பூசை நடைபெறும், காத்தவராயன் காவல் தெய்வ வகையைச் சேர்ந்தவர் என்பதால் சுருட்டு, சாராயம், ரொட்டித் துண்டு இவற்றையெல்லாம் பூசையில் வைப்பது வழக்கம். காத்தவராயன் பூசை ஒரு 10 - 15 நிமிடத்தில் முடிந்துவிடும்,

அதன் பிறகு கைலாச வாகனம் கிளம்ப மணி இரவு 11க்கு மேல் ஆகிவிடும். அப்போதே கோயிலில் அன்பர்கள் கூட்டம் மிகுதியாகி இருக்கும், பகலில் வேண்டுதல்களை நிறைவேற்றுவதைவிட இரவில் வந்து செல்வதால் கூட்டம் குறைவு என்று பலரும் கோயிலுக்கு வரத் தொடங்கி இருப்பார்கள். கையில் வேப்பில்லையுடன் கோயில் உட்சுற்றில் உருளுதல் (அங்கபிரதட்சனம்), மண்டியிட்டு வணங்கி வணங்கிச் செல்லுதல் (கும்பிடு தண்டம் என்பார்கள்) ஆகியவை நடக்கத் தொடங்கிவிடும். வேண்டுதல் நிறைவேற்றும் அன்பர்கள் அனைவரும் மஞ்சள் ஆடை அணிந்து, ஆடையுடன் குளித்துவிட்டு, ஈரம் சொட்டச் சொட்ட வேண்டுதல் நிறைவேற்றிக் கொள்வார்கள்.

அன்பர்கள் கூட்டம் கூடக் கூட கோயிலின் உற்சுற்று வேப்பில்லைகளுடன் சொத சொதவென்று ஈரம் கூட தொடங்கும், உருளுபவர்களுக்கு பக்கத் துணையாக அவர்களின் உறவினர்கள் திருப்பங்களில் உடலை திருப்பிவிட உதவி செய்வார்கள்.


பாடைக் காவடி எனப்படும் வேண்டுதல்கள் உண்டு. பாடைக் காவடி எடுப்பவர்கள் பச்சை பனை ஓலை மட்டையில் பிணம் போல் வாயைக் கட்டிக் கொண்டு கண்ணை மூடிப் படுத்துக் கொள்ள அவர்களது உறவினர்கள் அந்த ஓலையிடன் சேர்த்து வேண்டுதல் அன்பர்களை கோயில் சுற்றைச் சுற்றி மூன்று சுற்று சுற்றி வேண்டுதல்களை முடித்துக் கொள்வார்கள்,

முன்பெல்லாம் தொலைவில் இருந்தே பிணம் எடுத்துவருவது போல் பிண ஊர்த்தி செய்து அதில் வேண்டுதல் அன்பரை வைத்து மேளத்துடன் கோயிலுக்கு வருவதுண்டு. காலப் போக்கில் அவை பிற்போக்கான எண்ணமும் அருவெறுப்பானதால் கோயிலுனுள் சிறிய அளவில் பாடை காவடி எடுப்பதுடன் சரி.

பெண்களின் வேண்டுதல்கள் என மாவிளக்கு ஏற்றும் நிகழ்வு நடைபெறும், பச்சை அரிசியை ஊரவைத்து நன்றாக இடித்துவிட்டு, அல்லது கல் இயந்திரத்தில் அரைத்து மாவை ஆயத்தம் செய்து ஒரு சிரிய எவர்சில்வர் சட்டியில் வைத்து வெள்ளை அல்லது மஞ்சள் துணியால் சுற்றி கோவிலுக்கு எடுத்துவருவார்கள்.

அங்கே கோவில் சுற்றில் அமர்ந்து பொடித்த வெல்லம் சேர்த்து தேங்காய் நீர் அல்லது தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து கையளவு மூன்று அல்லது ஐந்து அல்லது ஒரே பெரிய உருண்டையாக பிடித்து, மாவு உருண்டையின் மேல் பகுதியில் சிறிய பள்ளம் ஏற்படுத்து அதில் நெய்யை இட்டு, திரி சேர்த்து விளக்கு ஏற்றுவார்கள், பிறகு அதற்கு தேங்காய் உடைத்து, வாழைப்பழத்துடன் கற்பூரம் காட்டி, வணங்கிவிட்டு கோயிலைச் சுற்றி வருவார்கள்.

கோயிலின் கொடி மரத்தருகே பூசாரி இருப்பார், அவர் அனைவருக்கும் திருநீறு கொடுப்பார், அத்துடன் கோயிலுனுள் நுழைந்து அம்மனை வணங்கிவிட்டு வீட்டுக்கு திரும்புவார்கள். மாவிளக்கு மாவு தேங்காய் துண்டங்களுடன் சேர்த்து உண்ண, அதில் நெய் மணம் சேர்ந்திருப்பதாலும் தனிச் சுவையாக இருக்கும், முன்பெல்லாம் ஒரு உருண்டையை முழுதாக உண்ணுவேன், இப்பொழுதெல்லாம் சுவைக்காக சிறுது திண்பதுடன் சரி. அந்த மாவிளக்கு உருண்டை மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

கைலாச வாகனம் சுற்றி வந்ததும் கோயில் தேர் புறப்பாடு நடைபெறும், கோயிலின் சுற்று சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு தெருக்களை சுற்றிவருவதாக இருக்கும்.

தேர் புறப்ட்டதும் வீட்டுக்குச் சென்று மறுநாள் காவடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை ஆயத்தம் செய்துவிட்டு உறங்கப் போக பின்னிரவு மணி இரண்டு ஆகி இருக்கும்.

கிட்டதட்ட 6 ஆண்டுகளுக்கு மேல் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பதால் தனிப்பட்ட பயணமாக சென்ற மே மாதம் சென்றுவந்தேன். மறுநாள் காவடி ... ஒரே அளப்பரை தான் !

தொடரும்...

(மேலும் பலர் படிக்க...பிடித்து இருந்தால் வாக்களியுங்கள், )

27 கருத்துக்கள்:

  • அப்பாவி முரு
     

    //நீரோட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் நடப்புகளை எழுதுவதும், அதை மட்டுமே விரும்பிப் படிப்பதும் எனக்கும் பலருக்கும் விரும்பமான ஒன்று என்பதால் பொதுவானவற்றை எழுதுவதற்கு சற்று சுனக்கம் தான்//

    மீ த பர்ஸ்ட்....

    அதான் வலையுலகமே குப்புற கிடக்கிறது.

  • அப்பாவி முரு
     

    //முன்பெல்லாம் தொலைவில் இருந்தே பிணம் எடுத்துவருவது போல் பிண ஊர்த்தி செய்து அதில் வேண்டுதல் அன்பரை வைத்து மேளத்துடன் கோயிலுக்கு வருவதுண்டு. காலப் போக்கில் அவை பிற்போக்கான எண்ணமும் அருவெறுப்பானதால் கோயிலுனுள் சிறிய அளவில் பாடை காவடி எடுப்பதுடன் சரி.//

    யார் உணமையாக காரணமறிந்து மதத் தொண்டு செய்கிறார்கள்.

    யாரோ செய்வதைப் பார்த்து தானும் அதை செய்யத் தொடர்பவர்களே அதிகம்.

  • வடுவூர் குமார்
     

    சில வேண்டுதல்கள் நான் அங்கிருந்த நாட்களில் பார்த்தது கூட இல்லை.

  • திகழ்மிளிர்
     

    சொற்களில்
    சொக்க வைத்துள்ளீர்கள்

    நினைக்க சில
    நினைவுகள்.........


    அருமை

  • ஸ்வாமி ஓம்கார்
     

    //உட்சுற்றில் உருளுதல் (அங்கபிரதட்சனம்), //


    அங்க பிரதட்சனம் செய்ததை இங்க எழுதிருக்கீங்க. ஆனா அதற்கான சரியான தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கிறதாப்படுது..

    ப்ர+தக்‌ஷணினா என்றால் தென்முகமாக வலம் வருதல்.
    கிழக்கை பார்த்திருக்கும் கோவில்களில் முதலில் தென் திசை நோக்கி தான் வலம் வர துவங்குவோம்.
    அனேக கோவில்கள் கிழக்கு முகமாக இருப்பதால் இப்பெயர்.

    அப்படியானா அங்கபிரதக்‌ஷனத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?

    காவடி தமிழ் வார்த்தையா என கூறவும் :)

    நீங்கள் காவடி எடுக்கும் படத்தை கண ஆவலாக உள்ளேன் :)

  • கோவி.கண்ணன்
     

    //மீ த பர்ஸ்ட்....

    அதான் வலையுலகமே குப்புற கிடக்கிறது.//

    முதலில் முரு முரு ! நன்றி நன்றி !

  • கோவி.கண்ணன்
     

    //யார் உணமையாக காரணமறிந்து மதத் தொண்டு செய்கிறார்கள்.

    யாரோ செய்வதைப் பார்த்து தானும் அதை செய்யத் தொடர்பவர்களே அதிகம்.

    11:16 AM, June 17, 2009
    //

    அஃதென்னதோ அஃது உண்மை தான் !
    :)

  • கோவி.கண்ணன்
     

    //வடுவூர் குமார் said...
    சில வேண்டுதல்கள் நான் அங்கிருந்த நாட்களில் பார்த்தது கூட இல்லை.
    //

    வாங்க குமார் அண்ணா, இடுகை உங்கள் கண்ணில் படுமென்று நினைத்தேன். விரைவாக பின்னூட்டமுமிட்டு மெய்பித்துவிட்டீர்கள்.

    அந்த ஊரில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு அங்குள்ள நிகழ்வுகள் தப்பாது.

  • கோவி.கண்ணன்
     

    //வடுவூர் குமார் said...
    சில வேண்டுதல்கள் நான் அங்கிருந்த நாட்களில் பார்த்தது கூட இல்லை.
    //

    வாங்க குமார் அண்ணா, இடுகை உங்கள் கண்ணில் படுமென்று நினைத்தேன். விரைவாக பின்னூட்டமுமிட்டு மெய்பித்துவிட்டீர்கள்.

    அந்த ஊரில் பிறந்து வளர்ந்ததால் எனக்கு அங்குள்ள நிகழ்வுகள் தப்பாது.

  • கோவி.கண்ணன்
     

    //திகழ்மிளிர் said...
    சொற்களில்
    சொக்க வைத்துள்ளீர்கள்

    நினைக்க சில
    நினைவுகள்.........


    அருமை//

    திகழ்மிளிர்,
    தங்களை தமிழும், தமிழ் தங்களையும் பற்றி இருப்பது மிக்க மகிழ்ச்சி ! தங்களின் தமிழ் பற்று வியக்க வைக்கிறது. உங்களைப் போன்றோர்களின் ஊக்கம் நற்றமிழில் எழுத வேண்டும் என்கிற பேராவலை ஏற்படுகிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி !

  • ஆ.ஞானசேகரன்
     

    திருவிழாவை நேரில் பார்ப்பதுபோல எழுத்தும் படமும் இருக்கின்றது. பாராட்டுகள்.

    இப்படிப்பட்ட திருவிழாக்களில் பலியிடுதல் இருக்கும், அப்படி ஏதேனும் இருக்கின்றதா? அப்படியிருந்தால் சொல்லுங்களேன்..

    இப்படிதான் ஒரு திருவிழாவிற்கு சென்றுருந்தேன்(பெரம்பலூர் பகுதியில்) அங்கு பார்த்த கொடுமை இன்னுமும் என்னால் மறக்கமுடியாதைவை....

  • கோவி.கண்ணன்
     

    // ஸ்வாமி ஓம்கார் said...
    //உட்சுற்றில் உருளுதல் (அங்கபிரதட்சனம்), //


    அங்க பிரதட்சனம் செய்ததை இங்க எழுதிருக்கீங்க. ஆனா அதற்கான சரியான தமிழ் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கிறதாப்படுது..

    ப்ர+தக்‌ஷணினா என்றால் தென்முகமாக வலம் வருதல்.
    கிழக்கை பார்த்திருக்கும் கோவில்களில் முதலில் தென் திசை நோக்கி தான் வலம் வர துவங்குவோம்.
    அனேக கோவில்கள் கிழக்கு முகமாக இருப்பதால் இப்பெயர்.

    அப்படியானா அங்கபிரதக்‌ஷனத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?

    காவடி தமிழ் வார்த்தையா என கூறவும் :)

    நீங்கள் காவடி எடுக்கும் படத்தை கண ஆவலாக உள்ளேன் :)
    //

    ஸ்வாமி தக்ஷ்ண என்றால் கிழக்கு என்பது தெரியும். சில சொற்களுக்கு சில மொழிகளில் தனித்து பொருளுண்டு அல்லது அந்த பொருளுக்காக அதைச் சொல்லுவார்கள்.
    சம்சார(ம்) என்பது வடசொல், ஆனால் கன்னடத்தில் இல்லம் என்ற பொருளில் வழங்கப்படும் (சம்சாரம் மாடக்கு ஆகல்ல - குடும்பம் நடத்த முடியவில்லை), தமிழில் அதை மனைவி என்ற சொல்லுக்கு பதில் பயன்படுத்துவார்கள், (அ)உங்க பிரதட்சனமும் அப்படித்தான். கோவிலில் வேண்டுதலுக்காக உருளுவாதை அங்கப் பிரதட்சனம் என்று சொல்வதையே பார்த்திருக்கிறேன். அந்த கோவில் எந்த பக்கம் பார்த்திருந்தாலும் அப்படியே. எனவே எனது மொழிப் பெயர்ப்பில் உங்கள் பழிப்பு செல்லாது. :)

    தமிழர்கள் தவிர்த்து காவடி தூக்குவது வழக்கில் இல்லை. எனவே காவடி தமிழாகவே இருக்க வேண்டும். கா + அடி என்று பிரித்துப் பொருள் உரைத்தால் அடிக்கு நடந்து செல்லுதல் என்ற பொருளுண்டு, கா - விற்கு அல்லது காவடிக்கு முழுப் பொருளும், பகுப்பொருளும் என்னவென்று இராமகி ஐயாவிடம் கேட்டுச் சொல்கிறேன்.

  • கோவி.கண்ணன்
     

    //ஆ.ஞானசேகரன் 11:40 AM, June 17, 2009
    திருவிழாவை நேரில் பார்ப்பதுபோல எழுத்தும் படமும் இருக்கின்றது. பாராட்டுகள்.

    இப்படிப்பட்ட திருவிழாக்களில் பலியிடுதல் இருக்கும், அப்படி ஏதேனும் இருக்கின்றதா? அப்படியிருந்தால் சொல்லுங்களேன்..

    //

    ஞானசேகரன்,

    குலதெய்வக் கோயில்களில் பலி இடுதல் அனைத்து தமிழக ஊர்களிலும் இருக்கிறது. எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் அந்த வழக்கம் இல்லை. மேலும் அந்த மாரியம்மன் கோயில் தனியார் பார்பனருக்கு உடமை.

    //இப்படிதான் ஒரு திருவிழாவிற்கு சென்றுருந்தேன்(பெரம்பலூர் பகுதியில்) அங்கு பார்த்த கொடுமை இன்னுமும் என்னால் மறக்கமுடியாதைவை....
    //

    பல ஊர்களில் பல பழங்கால நடைமுறைகள் உண்டு. தெய்வகுத்தம் ஏற்படும் என இன்னும் அவை தொடர்கின்றன.

    முட்டியில் ரத்தம் சொட்ட சொட்ட மண்டியிட்டு வேண்டுதல் நிறைவேற்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா ? வேளாங்கன்னியில் நடக்கும் கொடுமை !

  • ஆ.ஞானசேகரன்
     

    //முட்டியில் ரத்தம் சொட்ட சொட்ட மண்டியிட்டு வேண்டுதல் நிறைவேற்றுவதைப் பார்த்திருக்கிறீர்களா ? வேளாங்கன்னியில் நடக்கும் கொடுமை !//
    எங்கேயோ முடிச்சு போடுவதுபோல இருக்கு பரவாயில்லை,

    வேளாங்கன்னியில் பல முறைபாடுகள் இந்துமத சார்புடையதாக இருக்கும். உதாரணமாக மொட்டையடித்தல், காதுகுத்துதல்

    முட்டியில் ரத்தம் சொட்ட சொட்ட மண்டியிட்டு வேண்டுதல் எனபது பலியிடுதலில் எப்படி அடங்கும் என்பதும் புரியவில்லை... தன்னை தானே பலியிடுதல் என்பது ஏசுபிரானும் செய்திருக்கின்றார்...

  • கோவி.கண்ணன்
     

    //அப்படியானா அங்கபிரதக்‌ஷனத்திற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?//

    சரியான மொழிப்பெயர்ப்பு என்றால் 'உருண்டு வணங்குதல்', எளிமையாக 'உருளுதல்' என்றேன்

    சுற்றை சுற்றிவருவதையே வலமாக சுற்றிவருவதால் 'வலம்' வருதல் என்று தமிழில் சிறப்பாகச் சொல்வதுண்டு. தமிழின் பெரும் குறையே தமிழர்கள் தமிழை சரியாக அறிந்து வைத்திருக்காமல் தமிழில் குறை இருப்பதாகக் கூறுவது தான்.

  • கோவி.கண்ணன்
     

    //எங்கேயோ முடிச்சு போடுவதுபோல இருக்கு பரவாயில்லை,

    வேளாங்கன்னியில் பல முறைபாடுகள் இந்துமத சார்புடையதாக இருக்கும். உதாரணமாக மொட்டையடித்தல், காதுகுத்துதல்

    முட்டியில் ரத்தம் சொட்ட சொட்ட மண்டியிட்டு வேண்டுதல் எனபது பலியிடுதலில் எப்படி அடங்கும் என்பதும் புரியவில்லை... தன்னை தானே பலியிடுதல் என்பது ஏசுபிரானும் செய்திருக்கின்றார்...
    //

    எங்கேயும் முடிச்சுப் போடவில்லை. எங்க ஊருக்கு பக்கத்தில் இருப்பதால் அதைச் சொன்னேன். நாளைக்கு அலகு குத்தி காவடி எடுப்பது பற்றி எழுதுவேன்.

    பலி இடுதல் கொடுமை என்றால் வெட்டி சாப்பிடுவது மட்டும் எப்படி கொடுமை அற்றதாகும், ஒரு வேளை வெட்டுவதை கண்ணால் பார்க்கதாதாலா ?

  • கோவி.கண்ணன்
     

    //முட்டியில் ரத்தம் சொட்ட சொட்ட மண்டியிட்டு வேண்டுதல் எனபது பலியிடுதலில் எப்படி அடங்கும் என்பதும் புரியவில்லை... தன்னை தானே பலியிடுதல் என்பது ஏசுபிரானும் செய்திருக்கின்றார்...//

    அண்மையில் மதுரை அருகே, இந்து சிறியவர்களும் பெரியவர்களும் கத்தியால் கீறிக் கொண்டு வேண்டுதல் நிறைவேற்றினார்களாம். இஸ்லாமில் ஒரு பிரிவினர் தியாகத் திருநாள் என்ற பெயரில் ப்ளேடால் கிழித்துக் கொள்வார்கள். மதச் சடங்குகள் மடத்தனமானவை.

  • ஆ.ஞானசேகரன்
     

    //மதச் சடங்குகள் மடத்தனமானவை.//
    அதைதான் சொல்கின்றேன்..

  • Bharath
     

    அனுபவிச்சு எழுதியிருக்கீங்க..

    //ஸ்வாமி தக்ஷ்ண என்றால் கிழக்கு என்பது தெரியும். //

    :) :)
    எனக்கு என்னமோ ஒரு படத்தில் தங்கவேலு, ஈ.வி.சரோஜா “அதான் தெரியுமே” ஜோக் நினைவுக்கு வருது..
    :) :)

  • துளசி கோபால்
     

    மக்களுக்குத் தேவை அதிகமாக ஆக வேண்டுதல் வகைகளும் விதவிதமாக் கூடிவந்துக்கிட்டு இருக்கு. சாமி இப்போ புதுவிதமான வேண்டுதலுக்கு முன்னுரிமை கொடுக்குதாம்:-)

  • கோவி.கண்ணன்
     

    // Bharath said...
    அனுபவிச்சு எழுதியிருக்கீங்க..

    //ஸ்வாமி தக்ஷ்ண என்றால் கிழக்கு என்பது தெரியும். //
    //

    பரத், நன்றி !

    தக்ஷ்ண என்றால் தெற்கு ! நான் தவறாக கிழக்கு என்று குறிப்பிட்டுள்ளேன்.

    //:) :)
    எனக்கு என்னமோ ஒரு படத்தில் தங்கவேலு, ஈ.வி.சரோஜா “அதான் தெரியுமே” ஜோக் நினைவுக்கு வருது..
    :) :)
    //

    வரும் வரும் ! பதிவைப் பார்த்தவுடன் ஈவேரா நினைவு வரவில்லையா ? ஈவிசரோஜா தான் நினைவு வந்தார்களா ?
    :)
    1:59 PM
    //

  • கோவி.கண்ணன்
     

    //துளசி கோபால் said...
    மக்களுக்குத் தேவை அதிகமாக ஆக வேண்டுதல் வகைகளும் விதவிதமாக் கூடிவந்துக்கிட்டு இருக்கு. சாமி இப்போ புதுவிதமான வேண்டுதலுக்கு முன்னுரிமை கொடுக்குதாம்:-)
    //

    :)

    புதுவித வேண்டுதல் !!!
    யாருக்காவது மொட்டைப் போடுகிறேன் என்று வேண்டிக் கொள்வது.

  • starjan
     

    இந்த மாதிரி திருவிழா , கோவில்கொடை, வீட்டுவிசெஷம் ,கல்யாணம் ,இதில் தான் மனதுக்கு சந்தோஷமே !!!


    உங்க ஊர் திருவிழாவை நேரில் பார்த்த சந்தோஷம்.....

  • மதிபாலா
     

    எங்க ஏரியாவில் இது போன்ற விழாக்கள் இல்லை. அதனால் புதிதாக அறிந்து கொள்ளூம் ஆர்வம் பெருகுகிறது.

    அருமை. சுவையாக எழுதுகிறீர்கள் நண்பர் கோவியாரே.

  • ராம்.CM
     

    எங்க ஊர் திருவிழா ஞாபகத்திற்கு வந்து சென்றது.

  • ஜோதிபாரதி
     

    அங்க நிக்கிறது கோவியாரா!
    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
    சூப்பர்!

  • T.V.Radhakrishnan
     

    அருமை

பதிவு பார்வைகள்

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP