உங்கள் எழுத்து வளம் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நல் வாய்ப்பு

உங்கள் எழுத்து வளம் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நல் வாய்ப்பு
மணற்கேணி - 2009

காலத்தில் தேட...

இப்படிக்கு ரோஸ் - ஒருவனுக்கு ஒருத்தி எனும் கிறித்துவ கலாச்சாரம் !

Tuesday, May 13, 2008

சென்றவாரம் விஜய் டிவியில் 'இப்படிக்கு ரோஸ்' நிகழ்ச்சியைக் கண்டேன். பாலியல் பற்றிய சுவையார்வமான கலந்துரையாடல்கள் (விவாதம்), அதில் கலந்து கொண்டவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தும் திருநங்கை, சாரு, முன்பு பாலியல் தொழிலாளியாக இருந்த கேரளாவைச் சேர்ந்த ஜமிலா மற்றும் இன்னொரு பெண் பெயரைக் கவனிக்க வில்லை.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை நம்புகிறீர்களா ? என திருநங்கை கேட்க, சாரு அதனை மறுத்தார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் ஆண் அளவில் ஏமாற்றவது தான். ஆண்களில் பலர் ஒரு மனைவியுடன் திருப்திப் பட்டுக் கொள்வதில்லை. நமது இந்தியாவில் மூன்று தலைமுறைக்கு முன்பு வரை ஒரு ஆண் பலரை திருமணம் செய்துக் கொண்டிருந்தார்கள், தற்பொழுது சமூக சூழலில் பல திருமணங்கள் செய்து கொள்ளாவிட்டாலும், திருமணம் ஆன ஆண்கள் பலர் வேறு பெண்களை நாடிச் செல்பவர்களாகவே இருக்கிறார்கள் என்றார்.

அதையே ஜெமீலாவும் ஆமோதித்து, இந்தியாவில் ஒரு காலத்தில் தேவதாசிகள் என (கும்பகோணம்) கோவில்களில் பெண்களை வைத்து பாலியல் தேவைக்காக பயன்படுத்திக் கொண்டனர். இந்த பெண்களை பெரும்பாலும் (பாழாக்கியது) அரசர்கள், அவர்களின் கைக்கூலிகள், கோவில் தர்மகர்த்தாக்கள், கோவிலைச் சேர்ந்தவர்களே. அவர் மேலும் சொன்னார் 'எனது அனுபவ்தில் திருமணம் ஆன ஆண்களின் பெரும்பகுதியினர் வேற்று பெண்களை நாடுபவர்களாகவே இருக்கின்றன. சுகத்துக்காக அவர்களை நாடுபவர்கள் பலர், ஒரு சிலரே அதிலேயே விழுந்து கிடந்து குடும்பத்தையே மறந்துவிடுவார்கள்' என்றார்

மேலும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி கலாச்சாரமெல்லாம் வெள்ளைக்காரர்கள் நம்மீது திணித்தது, கிறித்துவ சமயத்தில் மட்டுமே ஒருவர் ஒரு சமயத்தில் ஒரு மனைவியைக் கொண்டிருப்பார், அவர்களுக்குள் ஒத்துப் போகவில்லை என்றால் விவகாரத்து செய்துவிட்டு அடுத்து திருமணம் செய்து கொள்வார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை ஒரே நேரத்தில் கிறித்துவர்கள் மணந்து கொள்ள அவர்களின் சட்டத்தில் இடமில்லை. மேலும் அதை அந்த பெண்களும் சகித்துக் கொண்டு அனுமதிப்பதில்லை. இந்தியாவில் சுதந்திர போராட்டத்துக்கு முன் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரமெல்லாம் இருந்ததே இல்லை. நம் இந்து கடவுள்களுக்கு இருக்கும் மனைவிகளே நமது இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகத்தானே இருக்கிறது. என்றெல்லாம் சொன்னார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நம்மீது திணிக்கப்பட்ட கலாச்சாரம் ஆகும், அந்த திணிப்பை ஏற்றுக் கொள்ளாதவனாக மன அளவில் இருப்பதாலேயே ஆண் வேலி தாண்டுபவனாக இருக்கிறான் என்று ஒரே போடாக போட்டார்.

சாரு மற்றும் ஜமீலா சொல்வதில் உண்மை இருக்கலாம், பலரின் தாத்தாக்கள் அந்த காலத்தில் வைப்பாட்டிகள் வைத்துக் கொண்டவர்களாகவும், பலதாரமணம் புரிந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

********

தென்னகத்தில் இராமயணமும், இராமரும் போற்றப்பட்டதற்கு காரணமே, வடமொழி இராமயணங்களில் இல்லாத ஒன்றாக, 'ஒருவனுக்கு ஒருத்தி' எனற மையக்கருத்தாக கம்ப ராமயணத்தை கம்பர் ஆக்கி காவியம் படைத்திருந்ததால் தான். அந்த மையக்கருத்து இல்லை என்றால் கம்பராமயணம், வில்லி பாரதம் போல் மற்றொமொரு மொழிப்பெயர் கதையாகவே இருந்திருக்கும். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவிகள், அவன் மகனுக்கு ஒண்ணே ஒன்ணு என்றாலும், தசரதனுக்கு இருந்த மனைவிகள் வெறும் செய்தி அளவிலும், இராமர் - சீதை பாத்திரம் கதையின் ஓட்டமாக இருப்பதால் தசரதனின் பலதாரம் பேசப்படாமல் இராமனின் ஒரே மனைவியுடன் நின்றான் என்பது உயர்வாகப் பேசப்படுகிறது. அப்படி வாழ்ந்ததாகச் சொல்லப்படும் கதைப் பாத்திரமே உயர்வென்றால் உண்மையில்யே ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்துவந்த கிறித்துவ சமூகமே போற்றத்தக்கது தானே ?

இந்திய கலாச்சாரத்தில் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை. தற்போதைய இந்திய திருமண கட்டுக்கோப்பு கிறித்துவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொண்டவையே. பண்டைய காலத்தில் இந்திய ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தியாக வாழ்ந்திருந்தது இல்லை. ஆனால் பெண்கள் கணவனே கண்டண்ட தெய்வமாக வாழ்ந்துவந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இந்தியாவில் குடும்பம் என்ற அமைப்பே பெண்களால் கட்டிக்காக்கப்பட்டு வந்தது, ஆண் வெறும் பொருளியல் உதவி செய்பவனாகவும், பாதுகாவலனாகவும் இருந்துவந்தான். இது தெரிந்தாலும், இந்திய பெருமை, இந்து பெருமை பறைசாற்றும் நமது இந்துத்துவாக்கள், பல மனைவிகளை உடைய தெய்வங்களை போற்றிக் கொண்டே முகமது நபிக்கு 11 மனைவிகள் இருந்ததைப் பெரிய குறையாகவாகவும் இழிவாகவும் சொல்லி இஸ்லாமியர்களை பழித்துவருகின்றன.

ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அது இந்தியர்களுக்கு கிறித்துவர்கள் (வெள்ளைக்காரர்கள்) கொடுத்த கொடையே !

30 கருத்துக்கள்:

ஜோ / Joe 3:01 PM, May 13, 2008  

//கிறித்துவர்கள் (வெள்ளைக்காரர்கள்) //

கோவியாரே,
இங்கே வெள்ளைக்காரர்கள் என்று நீங்கள் ஆங்கிலேயர்களை குறிப்பிடுகிறீர்களா ? இந்தியாவில் கிறிஸ்தவர்களில் பெரும்பான்மையோர் கத்தோலிக்கர்கள் .அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் என்ன சம்பந்த்தம் .ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னரே போர்ச்சுகீசியர்கள் ,டச்சுக்காரர்களால் மதம் மாறிய கத்தோலிக்கர்களே இங்கு அதிகம் . குமரி மாவட்ட மீனவர்கள் கத்தோலிக்கராகி 450 வருடங்கள் தாண்டி விட்டது.

கோவி.கண்ணன் 3:10 PM, May 13, 2008  

ஜோ,

இங்கே இந்திய கலாச்சாரம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் இந்தியர்களை, இந்து - முஸ்லிம் -கிறித்துவர் என்று பிரித்துப்பார்க்காமல ஒரே கலாச்சாரம் என்றே சொல்லி இருக்கிறேன். இந்திய கிறித்துவர்கள் ஐரோப்பாவில் இருந்து வரவில்லை, அவர்களும் இந்தியர்கள் தான். எப்போதோ இருந்த இந்திய கலாச்சாரத்தில் வாழ்ந்தவர்கள். இன்று மதவேறுபாடு இல்லாது அனைத்து மதத்தினருமே தனிமனித அளவில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தில் தான் இந்தியாவில் வாழ்கிறார்கள். இந்த மாற்றம் இந்தியாவில் பரவிய கிறித்துவமதத்தினாலேயே ஏற்பட்டது என்று சொல்லி இருக்கிறேன். நான் இந்தியாவில் கிறித்துவத்தின் தொன்மை பற்றி பேசவில்லை.

நையாண்டி நைனா 4:04 PM, May 13, 2008  

ஹையா...ஜாலி...இனி நானும் நெரையா கல்யாணம் பண்ணலாம்.....

கிரி 4:05 PM, May 13, 2008  

//ஆனால் பெண்கள் கணவனே கண்டண்ட தெய்வமாக வாழ்ந்துவந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்//

அது உண்மைதாங்க, அதே மாதிரி ஆண்களும் இருக்காங்க. இப்ப செய்திகளில் வருவதை பார்த்தால் பெண்களும் இந்த விசயத்தில் மாறி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. தற்போது சதவீதம் வேண்டும் என்றால் குறைவாக இருக்கலாம். இந்த மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பதே கசப்பான உண்மை.

கோவி.கண்ணன் 4:05 PM, May 13, 2008  

//நையாண்டி நைனா said...
ஹையா...ஜாலி...இனி நானும் நெரையா கல்யாணம் பண்ணலாம்.....
//
நைனா,

சாரு வுக்கு நீங்கள் நண்பரா ? உங்களை மனதில் வைத்துதான் சொன்னாரோ ?
:)

கோவி.கண்ணன் 4:09 PM, May 13, 2008  

//கிரி said...

அது உண்மைதாங்க, அதே மாதிரி ஆண்களும் இருக்காங்க. இப்ப செய்திகளில் வருவதை பார்த்தால் பெண்களும் இந்த விசயத்தில் மாறி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. தற்போது சதவீதம் வேண்டும் என்றால் குறைவாக இருக்கலாம். இந்த மாற்றத்தை தவிர்க்க முடியாது என்பதே கசப்பான உண்மை.
//

கிரி,

ஆண் / பெண் சமத்துவம் என்பது தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு கெட்டுப் போவதிலும் பெண் சமத்துவம் காணமுயன்றால் அது சரியா என்பதை பெண்கள் சமுதாயம் தான் முடிவு செய்யவேண்டும். அப்படிச் சென்றால் பாதிப்படைவதும் பெண்களே.

நையாண்டி நைனா 4:13 PM, May 13, 2008  

*****//நையாண்டி நைனா said...
ஹையா...ஜாலி...இனி நானும் நெரையா கல்யாணம் பண்ணலாம்.....
//
நைனா,

சாரு வுக்கு நீங்கள் நண்பரா ? உங்களை மனதில் வைத்துதான் சொன்னாரோ ?
:)*****

என் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக சொன்னால், இப்படியா கேட்பது?
மேலும் சாருவிற்க்கு நண்பராய் இருப்பதில் எனக்கு ஒண்ணும் கௌரவ குறைச்சல் இல்லை.

நையாண்டி நைனா 4:19 PM, May 13, 2008  

/*சாரு வுக்கு நீங்கள் நண்பரா ? உங்களை மனதில் வைத்துதான் சொன்னாரோ ?
:)*/
சாருவிற்கு நண்பராய் இருக்கலாம் தப்பில்லை, வாடிக்கையாளராய் தான் இருக்க கூடாது.

ranga 4:36 PM, May 13, 2008  

பழைய ஏற்பாடில் மோசஸ் விலை மாதிடம் சென்றதையும்,
லெவிடிகஸ் என்பவரின் புத்தகத்தில் ஓரினச் சேர்க்கயயைக்
கண்டித்து எழுதியுள்ளதையும் படித்திருக்கிறேன். எனவே
இந்த மதம் நல்லது, அந்த மதம் கெட்டது என்று கூறுவது
சரியாகாது. இதனால் ஆண் - பெண் மண வாழ்க்கையில் பெண் எப்படியும்
பாதிக்கப் படுகிறாள். பிரான்சு நாட்டில் மனைவியைத் தவிர
வப்பாட்டியர் வைத்துக் கொள்ள சட்டப்படி இடமுண்டு.
அமெரிக்காவில், எல்லோரும் சமம்.
ஒரு சந்தேகம். 60 வயது ஆணால் ஒரு இளம் பெண்ணை
திருப்தி செய்ய முடியும். அதே போல் ஒரு 60 வயது
பெண்னால் ஒரு இளம் ஆணை திருப்தி செய்ய
முடியுமா?

கோவி.கண்ணன் 5:00 PM, May 13, 2008  

//என் உள்ளத்தில் உள்ளதை வெளிப்படையாக சொன்னால், இப்படியா கேட்பது?
மேலும் சாருவிற்க்கு நண்பராய் இருப்பதில் எனக்கு ஒண்ணும் கௌரவ குறைச்சல் இல்லை.

4:13 PM, May 13, 2008
//

நைனா,

கிழே சிரிப்பான் போட்டு இருக்கிறேன். அப்பறம் ஏன் கண்டுக் கொள்கிறீர்கள் ?

கோவி.கண்ணன் 5:01 PM, May 13, 2008  

//நையாண்டி நைனா said...
சாருவிற்கு நண்பராய் இருக்கலாம் தப்பில்லை, வாடிக்கையாளராய் தான் இருக்க கூடாது.

4:19 PM, May 13, 2008
//

நைனா,

சாரு சார் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. உங்க பின்னூட்டத்திற்கு என்கிட்ட மறுமொழி இல்லை.

கோவி.கண்ணன் 5:05 PM, May 13, 2008  

//ranga said...
பழைய ஏற்பாடில் மோசஸ் விலை மாதிடம் சென்றதையும்,
லெவிடிகஸ் என்பவரின் புத்தகத்தில் ஓரினச் சேர்க்கயயைக்
கண்டித்து எழுதியுள்ளதையும் படித்திருக்கிறேன். எனவே
இந்த மதம் நல்லது, அந்த மதம் கெட்டது என்று கூறுவது
சரியாகாது. இதனால் ஆண் - பெண் மண வாழ்க்கையில் பெண் எப்படியும்
பாதிக்கப் படுகிறாள். பிரான்சு நாட்டில் மனைவியைத் தவிர
வப்பாட்டியர் வைத்துக் கொள்ள சட்டப்படி இடமுண்டு.
அமெரிக்காவில், எல்லோரும் சமம்.
ஒரு சந்தேகம். 60 வயது ஆணால் ஒரு இளம் பெண்ணை
திருப்தி செய்ய முடியும். அதே போல் ஒரு 60 வயது
பெண்னால் ஒரு இளம் ஆணை திருப்தி செய்ய
முடியுமா?

4:36 PM, May 13, 2008
//

ranga,

நான் கிறித்துவர்கள் உலகத்தில் ஒழுக்கமாக வாழுகிறார்கள் என்று சொல்லவில்லை. ஒரு ஆணுக்கு ஒரு பெண் என்ற திருமணக்கட்டுப்பாடு அவர்களிடம் இருந்தே நமக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்கிறேன். வைப்பாட்டி வைத்துக் கொள்வதெல்லாம் கணக்கில் வராது. சட்டபூர்வமான திருமணம் பற்றிதான் குறிப்பிட்டேன்.

எந்த மதமும் உயர்ந்தது என்று சொல்லவில்லை. திரும்ப படிச்சு பாருங்க, சில பழக்க வழக்கங்கள் சில மதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அப்படி எடுத்துக்கொள்வதைப் போற்றலாம். ஒட்டுமொத்தமாக எந்த மதத்தையும் போற்றுகிறேன் என்று எங்கும் சொல்லவில்லை.

சுரேகா.. 9:16 PM, May 13, 2008  

அட...ஆமா நீங்க சொன்னப்புறம்தான் விளங்குது!

உடன்பிறப்பு 10:06 PM, May 13, 2008  

இந்துத்வாக்களின் தனித்தன்மையே எங்கே எதை பார்த்தாலும் அதுவும் நம்மளது தான் என்று பறைசாற்றிக் கொள்வது. புத்த மதம், சீக்கிய மதம் ஆகியவையும் இந்து மதம் தான் என்பது அவர்களின் கூற்று. அதற்கு பௌத்தர்களும், சீக்கியர்களும் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இப்படி எதையும் அவர்கள் வசதிக்காக மாற்றிக் கொள்வது அவர்களுக்கு கைவந்த கலை

கையேடு 11:25 PM, May 13, 2008  

கலாச்சாரம், என்றவுடன் அதை மதத்தின் கூறுகளுக்குள் தேடுவதே ஒரு கலாச்சார அடக்குமுறையாகக் காண்கிறேன் அல்லது கலாச்சாரம் என்பதை மதத்தினுள் மட்டுமே தேடவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் வேதனையான ஒன்றுதான்.

திருமண முறைகள் பற்றி கொஞ்சம் வரலாற்றுக்கு முந்தய காலங்களிலும்(prehistoric), மதம் மற்றும் இலக்கியம் தாண்டி ஆழ்ந்து நோக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

மத அடிப்படையிலான மணவாழ்க்கையில் கூட, சமூகக்குழுக்களிலுள்ள ஆண், பெண் விகிதங்கள், பெரும்பங்காற்றியிருக்கலாம்.

குமரன் (Kumaran) 11:31 PM, May 13, 2008  

//தென்னகத்தில் இராமயணமும், இராமரும் போற்றப்பட்டதற்கு காரணமே, வடமொழி இராமயணங்களில் இல்லாத ஒன்றாக, 'ஒருவனுக்கு ஒருத்தி' எனற மையக்கருத்தாக கம்ப ராமயணத்தை கம்பர் ஆக்கி காவியம் படைத்திருந்ததால் தான். //

இந்த வரிகளைப் படித்த போது தோன்றிய எண்ணங்களை இங்கே வைக்கிறேன் கோவி.கண்ணன். விவாதத்திற்காக இல்லை.

1. கம்பருக்கு முன்னர் தென்னாட்டில் இராமனின் கதை பேசப்படவில்லை; உயர்வாகக் கருதப்படவில்லை என்பது தங்கள் எண்ணம் என்றால் சங்க இலக்கியங்களையும் மதுரைத் திட்டத்தில் இருக்கும் 'பழைய இராமாயணங்களை'ப் பற்றிய கட்டுரையையும் வாசிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன்.

2. வடமொழி இராமாயணத்தில் (வால்மீகியின் காவியத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்) ஏகபத்தினி விரதன் என்ற கருத்து அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.

3. இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மையக்கருத்து இருப்பதால் தான் கம்பராமாயணம் புகழ் பெற்றதா? அப்படியென்றால் இரசிகமணி டி.கே.சி போன்ற தமிழறிஞர்கள் சுவைத்த இலக்கியச் சுவையெல்லாம் வெறும் வெற்றுப்பேச்சா? கம்பனிடம் வேறு சுவையே இல்லையா? அப்படிச் சுவையிருந்தால் அந்தச் சுவையால் கம்பரின் காவியம் புகழ் பெற்றதாகாதா?

4. கம்பருக்கு முன்னரே தென்னாட்டில் இராமகதை புகழ் பெற்றிருந்தது என்பது என் துணிபு. கம்பராமாயணம் இவ்வளவு புகழ் பெற்றதற்குக் காரணம் கம்பரின் இலக்கியச் சுவையா இராமனின் கதை என்பதாலா என்று பட்டிமண்டபமே வைக்கலாம். கம்பரின் இலக்கியச்சுவையும் இராமனின் கதை என்பதும் சேர்ந்தே கம்பராமாயணம் புகழ் பெற்றது என்பது என் எண்ணம். இலக்கியச்சுவை மட்டும் என்றால் கம்பரின் மற்ற இலக்கியங்களான உழவர்களைப் போற்றும் 'ஏர் எழுபது', நம்மாழ்வாரைப் போற்றும் 'சடகோபர் அந்தாதி' போன்றவை இவ்வளவு புகழ் பெற்றிருக்கவேண்டும். அப்படி நடக்கவில்லை.

ILA 6:09 AM, May 14, 2008  

//ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அது இந்தியர்களுக்கு கிறித்துவர்கள் (வெள்ளைக்காரர்கள்) கொடுத்த கொடையே !//
Super comedy!
English invasion started during 17-18th century, ramayan mahabarath(so called before 13th century). Wht is the logic behind these? And english people ONLY taught the family value to us? Hats off to Charu!

கோவி.கண்ணன் 8:56 AM, May 14, 2008  

//சுரேகா.. said...
அட...ஆமா நீங்க சொன்னப்புறம்தான் விளங்குது!

9:16 PM, May 13, 2008
//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் 8:57 AM, May 14, 2008  

//உடன்பிறப்பு said...
இந்துத்வாக்களின் தனித்தன்மையே எங்கே எதை பார்த்தாலும் அதுவும் நம்மளது தான் என்று பறைசாற்றிக் கொள்வது. புத்த மதம், சீக்கிய மதம் ஆகியவையும் இந்து மதம் தான் என்பது அவர்களின் கூற்று. அதற்கு பௌத்தர்களும், சீக்கியர்களும் என்ன சொல்கிறார்கள் என்பது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இப்படி எதையும் அவர்கள் வசதிக்காக மாற்றிக் கொள்வது அவர்களுக்கு கைவந்த கலை

10:06 PM, May 13, 2008
//

உடன்பிறப்பு,

எதையும் அளந்துவிடுவதில் வாய்வந்த கலையே அவர்களின் தனிச் சிறப்பு(?)
:)

கோவி.கண்ணன் 9:00 AM, May 14, 2008  

//கையேடு said...
கலாச்சாரம், என்றவுடன் அதை மதத்தின் கூறுகளுக்குள் தேடுவதே ஒரு கலாச்சார அடக்குமுறையாகக் காண்கிறேன் அல்லது கலாச்சாரம் என்பதை மதத்தினுள் மட்டுமே தேடவேண்டிய அவசியம் ஏற்பட்டதும் வேதனையான ஒன்றுதான்.

திருமண முறைகள் பற்றி கொஞ்சம் வரலாற்றுக்கு முந்தய காலங்களிலும்(prehistoric), மதம் மற்றும் இலக்கியம் தாண்டி ஆழ்ந்து நோக்கவேண்டும் என்று கருதுகிறேன்.

மத அடிப்படையிலான மணவாழ்க்கையில் கூட, சமூகக்குழுக்களிலுள்ள ஆண், பெண் விகிதங்கள், பெரும்பங்காற்றியிருக்கலாம்.

11:25 PM, May 13, 2008
//

கையேடு,

நீங்கள் சொல்வது சரிதான், உண்பது உறங்குவது எல்லாம் மதம் சொல்லிக் கொடுத்திருப்பதாகவே மதவாதிகள் சொல்லுகிறார்கள். எல்லா மதங்களுமே ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாகவே இருக்கின்றன

கோவி.கண்ணன் 9:34 AM, May 14, 2008  

//குமரன் (Kumaran) said...


இந்த வரிகளைப் படித்த போது தோன்றிய எண்ணங்களை இங்கே வைக்கிறேன் கோவி.கண்ணன். விவாதத்திற்காக இல்லை. //

குமரன்,
வருகைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி !

//1. கம்பருக்கு முன்னர் தென்னாட்டில் இராமனின் கதை பேசப்படவில்லை; உயர்வாகக் கருதப்படவில்லை என்பது தங்கள் எண்ணம் என்றால் சங்க இலக்கியங்களையும் மதுரைத் திட்டத்தில் இருக்கும் 'பழைய இராமாயணங்களை'ப் பற்றிய கட்டுரையையும் வாசிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன். //

புறநானுறு காலத்தில் இராமாயணம் பற்றி நீங்களும் எழுதி இருக்கிறீர்கள், அண்ணன் ரத்னேஷ் கூட எழுதி இருந்தார்.

//2. வடமொழி இராமாயணத்தில் (வால்மீகியின் காவியத்தைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்) ஏகபத்தினி விரதன் என்ற கருத்து அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.//

வடமொழி இராமயணத்தைப் பொருத்து அது ஒரு அவதாரக்கதைதான். 'ஏகப்பத்தினி விரதன்' என்பது அந்த இராமயணத்தின் மையக் கருத்தே அல்ல, கம்பன் சொன்னது போல் "இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன்" என்ற புகழ்பெற்ற வாசகம், சுலோகம் வடமொழி இராமயணத்தில் இருக்கிறாதா என்று அதைப்படித்திருந்தால் சொல்லுங்கள், தெரிந்து கொள்கிறேன்.

//3. இந்த 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மையக்கருத்து இருப்பதால் தான் கம்பராமாயணம் புகழ் பெற்றதா? அப்படியென்றால் இரசிகமணி டி.கே.சி போன்ற தமிழறிஞர்கள் சுவைத்த இலக்கியச் சுவையெல்லாம் வெறும் வெற்றுப்பேச்சா? கம்பனிடம் வேறு சுவையே இல்லையா? அப்படிச் சுவையிருந்தால் அந்தச் சுவையால் கம்பரின் காவியம் புகழ் பெற்றதாகாதா?

4. கம்பருக்கு முன்னரே தென்னாட்டில் இராமகதை புகழ் பெற்றிருந்தது என்பது என் துணிபு. கம்பராமாயணம் இவ்வளவு புகழ் பெற்றதற்குக் காரணம் கம்பரின் இலக்கியச் சுவையா இராமனின் கதை என்பதாலா என்று பட்டிமண்டபமே வைக்கலாம். கம்பரின் இலக்கியச்சுவையும் இராமனின் கதை என்பதும் சேர்ந்தே கம்பராமாயணம் புகழ் பெற்றது என்பது என் எண்ணம். இலக்கியச்சுவை மட்டும் என்றால் கம்பரின் மற்ற இலக்கியங்களான உழவர்களைப் போற்றும் 'ஏர் எழுபது', நம்மாழ்வாரைப் போற்றும் 'சடகோபர் அந்தாதி' போன்றவை இவ்வளவு புகழ் பெற்றிருக்கவேண்டும். அப்படி நடக்கவில்லை.

//
கம்பர் ஏன் அந்த கதையை தேர்ந்தெடுத்து மொழிப் பெயர்த்தார் என்பதற்காக (ஊகமாகச்) சொன்னேன். மற்றபடி இங்கே கம்பனின் இலக்கிய ஆளுமைப் பற்றியோ, கவிச்சுவை பற்றியோ நான் எதுவும் குறிப்பிடவில்லை. கம்பனை மதிப்பிடவோ / புகழவோ என் இலக்கிய அறிவு போதாது. அதனால் அதுபற்றி பேசவில்லை. கம்பனின் கவிச்சுவையால் தான் தமிழ்நாட்டில் இராமயணம் புகழ்பெற்றதோ என்றும் நினைக்கவேண்டி இருக்கிறது. வடமொழி இராமயணக் கதையில் இராமன் - சீதை திருமணத்தின் போது இராமனுக்கு வயது 8, சீதைக்கு6. கம்பராமாயணத்தில் 12, 8 என்று கொஞ்சம் கூடுதலாக இராமனுக்கு வயதாக்கி இருந்ததாகச் சொல்கிறார்கள்.

எனக்கு இன்னும் கூட ஐயம் இருக்கிறது, திருக்குறளில் பலதார மணம் குறித்து கண்டிப்பதாக குறள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாற்றான் மனைவியை அடைவதைப் பற்றி மட்டுமே பல இலக்கியங்கள் கண்டித்து இருக்கிறது. அதில் இராமாயணமும் ஒன்று.

பட்டத்து இளவரசிகளான மூன்று அன்னையர்களை, 60000 ஆயிரம் சிற்றன்னைகளை உடைய இராமன் பாத்திரம் ஒரே மனைவியைக் கொண்டதாக அமைக்கப்பட்டது கூட ஒரு புனைவுக்காக என்றும் கொள்ளவேண்டி இருக்கிறது. இராமனின் மற்ற தம்பியர்களுக்கும் ஒரே மனைவி என்றால் இராமனுக்கு மட்டுமான தனிச்சிறப்பு என்று அதையும் சொல்ல முடியாது. வடமொழி இராமயணக் கதையின் நோக்கம் முற்றிலும் அவதாரம் பற்றியது என்றே நினைக்கிறேன். கம்ப இராமயண 'ஒருவனுக்கு ஒருத்தி' பேசப்பட்டதைத் தொடர்ந்தே, 'ஏகப்பத்தினி விரதன்' இராமன் என்ற தனிச்சிறப்பு இருப்பதாக வடமொழியாளர்களும் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

இந்த இடுகை ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டிற்கு இந்திய சமுதாயம் எப்படி மாறியது என்பதற்காக எழுதினேன். மற்றபடி இதில் இராமயணத்தை எடுத்துக் கொண்டு விவாதிப்பதற்கு ஒன்றும் இல்லை. இராமயணத்தில் அந்த வலியுறுத்தல் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அது பக்திக்கதையாக இலக்கியமாக இருந்தது அது ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டிற்கான எந்த மாற்றத்தையும் இந்திய சூழலில் கொண்டுவரவில்லை. பண்டைய காலத்தில் பணம் படைத்தவர்களெல்லாம் பலதார மணம் புரிபவர்களே.

கோவி.கண்ணன் 9:40 AM, May 14, 2008  

//ILA said...

Super comedy!
English invasion started during 17-18th century, ramayan mahabarath(so called before 13th century). Wht is the logic behind these? And english people ONLY taught the family value to us? Hats off to Charu!

6:09 AM, May 14, 2008
//

இளா,

எல்லா நாட்டிலும் எல்லா இலக்கியத்திலும் எல்லா செய்திகளுமே உண்டு. சீனர்களை எடுத்துக் கொண்டால், கன்ப்பூயூசியஸ் தான் உலகின் மிகச் சிறந்த அறிவாளி என்பார்கள். இலக்கியங்களில் கதைகளில் பேசப்பட்டு இருந்தால் மட்டுமே அப்படி இருந்தார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது. ஒரு சமூகமே அப்படி மாறி இருக்கிறதென்றால் அதைத்தான் சிறப்பாகச் சொல்ல முடியும். இந்திய இலக்கியங்களில் ஒருவனுக்கு ஒருத்தி இருந்திருந்தாலும், அதைப் போல் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்துவந்தவர்கள் வெள்ளைக்காரர்களே.

நையாண்டி நைனா 6:36 PM, May 14, 2008  

/*இந்திய இலக்கியங்களில் ஒருவனுக்கு ஒருத்தி இருந்திருந்தாலும், அதைப் போல் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்துவந்தவர்கள் வெள்ளைக்காரர்களே.*/

அதனால் தான் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில்
கிளின்டனே ஆடிப் போனார். தட்டி கேட்க அந்த ஊர் மக்களுக்கும் தைரியம் இருந்தது அரசியல்வாதிகளுக்கும் யோக்கியதை இருந்தது

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) 5:00 AM, May 15, 2008  

கோவி கண்ணன்,

// இந்திய கலாச்சாரத்தில் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை. //

இந்து திருமண சட்டம் வருவதற்கு முன்பு ஒருவனுக்கு ஒருத்தி என்பது பெரிய அளவில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை' என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? ஆண் பெண் விகிதத்தில் பெண் அதிகமாக இருந்தார்களா அந்த காலத்தில்? இல்லை என்றால் இதனால் பல ஆண்கள் பெண் கிடைக்காமல் திருமணமே செய்யாமல் வாழ்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமே? பெரிய அளவில் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், சிறிய அளவில் ஒருவனுக்கு பலர் என்றும் இருந்திருப்பார்கள்
என்பது தான் என் ஊகம்.

// ஒருவனுக்கு ஒருத்தி இந்தியாவின் போற்றத்தக்க கலாச்சாரமாக மாறி இருக்கிறது என்றால் அது இந்தியர்களுக்கு கிறித்துவர்கள் (வெள்ளைக்காரர்கள்) கொடுத்த கொடையே ! //

கிறித்துவ மதம் இதை வலியுறுத்தி இருக்கிறது என்பதும் உண்மை தான். ஐரோப்பிய நாகரீகத்தில் இது வந்திருப்பது கிறித்துவ மதத்தின் மூலமாகத் தான். ஆனால் இது அவர்கள் நமக்கு தந்த கொடை என்று சொல்ல முடியுமா என்று தெரியவில்லை. சற்று அதிக விழிப்புணர்வும், ஆணாதிக்கத்துக்கு
எதிராக ஆரம்பித்த (பெண்ணிய) சிந்தனைகளின் ஆரம்பமும் கூட (பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் போன்றவை) இதற்கு வழி செய்திருக்கலாம் இல்லையா? அவர்கள் நம்மை ஆண்டிரா விட்டால் ((வேறு எவ்வாறு அவர்கள் நம்மை பாதித்திருக்க முடியும்? ) நம்மில் பலர் இன்னமும் அதிக அளவில் இரண்டு (அதற்கு மேற்பட்டோ) மனைவிகள் வைத்திருப்போம் என்பது நினைத்துப் பார்க்க கசப்பாக இருக்கிறது. ஆனால் கசப்பானவை எல்லாம் உண்மையானவை ஆகி விடாதல்லவா ? :)

எப்பவும் போல் சிந்திக்க வைத்த பதிவு. வாழ்த்துக்கள்!

கோவி.கண்ணன் 8:48 AM, May 15, 2008  

// வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...
கோவி கண்ணன்,

// இந்திய கலாச்சாரத்தில் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை. //

இந்து திருமண சட்டம் வருவதற்கு முன்பு ஒருவனுக்கு ஒருத்தி என்பது பெரிய அளவில் வலியுறுத்தப்பட்டிருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் பெரும அளவில், ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்ததே இல்லை' என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? ஆண் பெண் விகிதத்தில் பெண் அதிகமாக இருந்தார்களா அந்த காலத்தில்? இல்லை என்றால் இதனால் பல ஆண்கள் பெண் கிடைக்காமல் திருமணமே செய்யாமல் வாழ்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்குமே? பெரிய அளவில் ஒருவனுக்கு ஒருத்தி என்றும், சிறிய அளவில் ஒருவனுக்கு பலர் என்றும் இருந்திருப்பார்கள்
என்பது தான் என் ஊகம்.
//

வந்தியத்தேவன் அவர்களே,

நீண்ட நாள்கள் கழித்துவந்து மேலும் சில பதிவுகளில் கருத்துக் கூறி சென்று இருக்கிறீர்கள், முதற்கண் அதற்கு நன்றி !

ஒரே ஆண் பல பெண்களை திருமணம் செய்து கொண்டதால் பெண்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததா என்று கேட்டு இருக்கிறீர்கள். நிலம் உடையவர்கள், வியாபாரிகள் அப்படித்தான் செய்தார்கள், அதற்கு எடுத்துகாட்டாக சிலப்பதிகார்க்கதையே இருக்கிறது. அந்த கால தாசிகள் பெண் குழந்தைகளை பெற்றுக் கொள்வதையே விரும்பினார்களாம், ஆண் குழந்தைகளை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. பலபெண்களை திருமணம் செய்வது ஒழுங்கீனமாகவே சமூகம் கருதவில்லை. மாற்றான் மனைவியை அடைவது, பரத்தையர் தொடர்பு மட்டுமே சமூகம் கவலைப்பட்டு இருக்கிறது.

திருமணம் என்றால் சொந்த சாதியில் பெண் எடுக்கும் ஆண்கள் சென்று வருவதற்கு மட்டும் எந்த சாதியையும் பார்க்க மாட்டார்கள்.

பணம் படைத்தவர்கள் அதனை கொண்டாடுவதற்கு பலதிருமணங்களைச் செய்து கொண்டார்கள். சாதாரண ஏழை ஆண்கள் 'சென்று' வருவதுடன் திருப்திப் பட்டுக் கொண்டார்கள். எந்த நாட்டிலும் ஆண்கள் யாரும் யோக்கியனாக இருந்தது இல்லை.

// சற்று அதிக விழிப்புணர்வும், ஆணாதிக்கத்துக்கு
எதிராக ஆரம்பித்த (பெண்ணிய) சிந்தனைகளின் ஆரம்பமும் கூட (பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் போன்றவை) இதற்கு வழி செய்திருக்கலாம் இல்லையா?//

நான் தமிழ்நாட்டை மட்டும் குறிப்பிட்டு மாறி இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இந்தியா முழுவதும் தான். இந்தியர்களில் எத்தனை விழுக்காட்டினருக்கு பாரதியையும், தாசனையும் தெரியும் ?

//அவர்கள் நம்மை ஆண்டிரா விட்டால் ((வேறு எவ்வாறு அவர்கள் நம்மை பாதித்திருக்க முடியும்? ) நம்மில் பலர் இன்னமும் அதிக அளவில் இரண்டு (அதற்கு மேற்பட்டோ) மனைவிகள் வைத்திருப்போம் என்பது நினைத்துப் பார்க்க கசப்பாக இருக்கிறது. ஆனால் கசப்பானவை எல்லாம் உண்மையானவை ஆகி விடாதல்லவா ? :)//

அப்பாடா,

சாருவும், ஜமீலாவும் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார்கள் என்றே நினைக்கவைத்துவிட்டது இல்லையா ?
:)

//எப்பவும் போல் சிந்திக்க வைத்த பதிவு. வாழ்த்துக்கள்!//

மிக்க மிக்க நன்றி !

கோவி.கண்ணன் 8:51 AM, May 15, 2008  

//நையாண்டி நைனா said...

அதனால் தான் மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தில்
கிளின்டனே ஆடிப் போனார். தட்டி கேட்க அந்த ஊர் மக்களுக்கும் தைரியம் இருந்தது அரசியல்வாதிகளுக்கும் யோக்கியதை இருந்தது

6:36 PM, May 14, 2008
//

நைனா,

மக்கள் எங்கே தட்டிக் கேட்டார்கள், அந்த விவாகாரத்தை ரசித்தார்கள், செய்தி தாள்களுக்கு தீனியாக இருந்தது.

ஹிலாரி அதைப் பெரிசு படுத்தி இருந்தால் இன்றைக்கு அவர் செனட் தேர்த்தலில் நிற்க முடியாது. கணவரை மன்னித்தாரா ? அல்லது சுயநலமாக நடந்து கொண்டாரா என்பது அவருக்கே வெளிச்சம். எப்படியோ அவர்கள் குடும்பம் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சிதான். தவறு செய்பவன் மனிதன், அதை மன்னிப்பவன் மாமனிதன் !

ரூபஸ் 2:11 PM, May 17, 2008  

நானும் பார்த்தேன். ஆனா இங்க போனமாசமே ஒளிபரப்பு ஆனது. இப்படிக்கு ரொஸில் வரும் தலைப்புகளுமே நன்றாக உள்ளன.

ஜமாலன் 3:33 PM, May 18, 2008  

நண்பரே!

பதிவின் உள்ளோட்டத்தில் நான் எதுவும் கருத்து சொல்லவில்லை. இப்பரச்சனை விாிவாக பேசப்பட வேண்டிய ஒன்று. இது கறித்து நிங்களும் நானும் எலவே உரையாடி உள்ளோம். பார்க்க சுட்டி http://tamilbodypolitics.blogspot.com/2007/09/blog-post.html

என்றாலும்.. ”ஒருவனுக்கு ஒருத்தி” என்று சொல்வதே அடிப்படையில் தவறு.. ”ஒருத்திக்கு ஒருவன்“ எனபதுதான் இன்று காப்பாற்றுப்பட்டு வரும் விடயம். “ஒருவனுக்கு வாய்ப்புள்ள ஒருவள்” என்பது எழுதப்படாத விதியாக உள்ளது.

இப்பதிவையும் பாருங்கள்.

http://tamilbodypolitics.blogspot.com/2008/04/blog-post.html

நன்றி.

சந்திரமௌளீஸ்வரன் 5:04 PM, May 20, 2008  

Please visit my blog
www.chandramowlee.blogspot.com

I have posted an article in my blog on this

சுவனப்பிரியன் 9:40 AM, September 20, 2008  

சிந்திக்க வைத்த பதிவு!

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP