பின்பற்றுபவர்கள்

26 மார்ச், 2012

தோழர் செங்கொடி மற்றும் வினவு !

தோழர் செங்கொடியுடன் எனக்கு நேரடியான பழக்கம் எதுவும் இல்லை, தமிழ்மணத்தில் அவரது இடுகைகளைப் படிப்பேன், காரணம் தெளிவான எழுத்து நடை மற்றும் கைதேர்ந்த விவாதம், தரவுகள், படங்கள் சேர்த்து தெள்ளத் தெளிவாக எதையும் எழுதுவதுடன் அது குறித்துவரும் விவாதங்களுக்கு மிகத் தெளிவாக விடை சொல்லுவார், ஆதாரமின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதாமல் பிறகு இவை சர்சையானால் எப்படி பதில் சொல்லுவது உள்ளிட்டவற்றை நன்கு உணர்ந்தே ஊடக பொறுப்புணர்வுடன் எழுதுபவர் என்பதால் அவர் பதிவை மவுனமாக படித்துச் செல்வேன், குறிப்பாக பின்னூட்டங்களையும்.

தோழர் செங்கொடியின் பதிவுகள் கடந்த பிப்ரவரியில் பொதுப்பார்வையில் இருந்து மூடப்பட்டு இருந்தது, உள்ளே நுழைந்து படிக்க கடவுச் சொல்லெல்லாம் கேட்டது, நான் உள்ளே செல்ல முயற்சிக்கவில்லை, காரணம் ஒருவேளை கொள்கை அடிப்படையில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கிறாரோ அப்படிப்பட்டவற்றை படிக்கத் தேவை இல்லை என்று விட்டுவிட்டேன், தமிழ்மணம் தொடுப்பிலும் அவரது இடுகைகளைக் காண முடியவில்லை, இதற்கு இடையே மார்ச் துவக்கத்தில் கூகுள் ப்ளஸ் மூலம் அவரது இடுகைக்கான இணைப்புகள் கொடுக்கபட்டிருந்தது, உள்ளே சென்று படித்த போது அதிர்ச்சியே மிஞ்சியது. மதரீதியிலான விமர்சனங்களை எழுதுபவர்கள் தொடர்ந்து அதனை செய்யமுடியாது, அதற்கான அச்சுறுத்தல்களை சந்தித்தே ஆகவேண்டும் என்பதை உணர்ந்த போது கிட்டதட்ட வியர்த்தே விட்டது.

பொதுவாக மதவாதம் பற்றிய விமர்சனங்களை மதவாதிகள் சகித்துக் கொள்ளமாட்டார்கள் என்பது தெரிந்தவிடயம் என்றாலும் அதனை எதிர்க்கும் செயல்களில் இவ்வளவு தூரம் கீழ் இறங்குவார்கள் என்பது கொஞ்சம் கற்பனைக்கு எட்டாதவை என்றாலும் மதவாதிகளை விமர்சனம் செய்பவர்கள் பின்விளைவுகளை கொஞ்சம் கூடுதலாகவே நினைத்துக் கொண்டு தான் எழுதவேண்டியுள்ளது, சென்ற ஆண்டில் 'கேரளாவில் கை எடுக்கப்பட்ட பேராசிரியர் ஒருவரை நினைவு கொள்க'. தோழர் செங்கொடிக்கு கை எடுக்கப்படவில்லை என்பது ஆறுதல் ஆனது என்றாலும், அவர் பணிபுரிந்த நாட்டில் இருந்து மிரட்டப்பட்டு தமிழகம் துறத்தப்பட்டிருக்கிறார். ஒரு மதவாத நாட்டில் இருந்து அந்த மதத்திற்கு எதிரான கருத்துகளை எழுதியது அவர் செய்த அவரது கொள்கை அளவில் தவறு என்று சொல்லமுடியாது, ஆனால் அதனால் தனக்கு ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே உணர்ந்திருந்து எழுதுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டு இருந்ததை அவரது 'முட்டாள்' தனம் என்றே நினைக்கிறேன். கம்யூனிசம் பேசி முதலாளித்துவத்திற்கு எதிராக பேசுபவர்கள் பலர் பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல ஊதியத்தில் பணி செய்பவர்களாக இருப்பது முரண் என்பது போல் தான் தோழர் செங்கொடி கம்யூனிசம் பேசுபவர் முதலாளித்துவத்திற்கும். மதவாதத்திற்கும் எதிரானவர், அவற்றிற்கு ஊற்றுக் கண்ணாக இருக்கும் ஒரு நாட்டில் அவர்களின் கீழ் வேலைப் பார்ப்பதும், அதை தனிமனித பொருளாதார தோற்றுவாயாக நினைத்திருந்ததும் கொள்கை முரண், கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு வேலைக்குச் சென்றவர் அங்கு அடக்கிக் கொண்டு இருந்தால் பிரச்சனை வந்திருக்காது. ஆனால் அவ்வாறு செய்யாமல் இருந்தது அவருடைய முட்டாள் தனம் என்றே திரும்பச் சொல்கிறேன், இங்கு நான் 'முட்டாள்' என்று குறிப்பிடுவதற்கு நண்பர் செங்கொடி சினந்தாலும் பரவாயில்லை, அவர் இரண்டு குதிரை மீது சவாரி செய்ய முயன்றிருக்கிறார் என்பதால் இவ்வாறு சொல்கிறேன்.

இங்கே ஏன் தலைப்பில் வினவு இடம் பெற்றுள்ளது ? யாரோ துரப்ஷாவுக்கு கட்டுரைகள் எழுதிய வினவு குழு, தோழர் செங்கொடி வேலைப் பறிபோய் உயிருக்கு பயந்து தமிழகம் திரும்பியது பற்றி வினவு பதிவில் எந்தக் கட்டுரையும் இடம் பெறவில்லை, புனைவு எழுதி சீண்டப்பட்டது போல் தனிப்பட்ட ஒரு பதிவர் பிரச்சனையாகவும் தெரியவில்லை. நடந்தது மதவாத விமர்சனம் தொடர்பாக நடந்த அச்சுறுத்தல் மற்றும் வேலை இழப்பு அதன் மூலம் பணிய வைக்க நடந்த முயற்சி, அதில் மதவாதிகள் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதை நேர்மையுடன் ஒப்புக் கொள்ளவே நேரிடுகிறது, இவற்றை அறிந்தும் வினவு குழுவினர் அதுபற்றிப் எழுதாமல் விட்டது, தோழர் செங்கொடியின் இரட்டை நிலைப்பாடோ என்று எண்ண வைக்கிறது, வினவுக்குழு விளக்கினால் நன்று.


மதவாதம் பற்றி எழுதும் போது சொல்ல வந்ததை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் சிந்திக்க மறுக்கும் மதவாதிகள் சினந்து எழுவார்கள் என்பது தெரிந்தவிடயம் தான், எனக்கு அவ்வப்போது 'நீ வேலை செய்யும் நாட்டின் சட்டம் ஒழுங்கு உனக்குத் தெரியுமா ?' என்று மிரட்டல் விடுகின்றனர், இத்தனைக்கும் நான் எந்த மதத்தையும் நேரிடையாக விமர்சனம் செய்வதே கிடையாது, அது எனது கோழைத்தனம் என்றே நான் ஒப்புக் கொண்டாலும், அத்தகைய கோழைத்தனங்களுக்கு மதச் சகிப்புத்தன்மையும், கருத்துரிமையை மதிப்பதையும் சொல்லிக் கொடுக்காத மதங்களே காரணம் என்பதை ஒப்பு நோக்க எனது கோழைத்தனம் எனக்கு அவமான ஒன்று அல்ல, அவை மதவாதிகளுக்கும், அவர்களின் சகிப்புத்தன்மைகளுக்கும் அவர்களே பிறரிடம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அவமானம்.

இருந்தாலும் மதவாத எதிர்ப்பாக எழுதுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டியவை இவை என்பது தோழர் செங்கொடிக்கு நேர்ந்த கொடுமைகளில் இருந்து அறிந்து கொள்ள வேண்டியவை,

1. மதவிமர்சனம் செய்பவர்களுக்கு நேரிடையாக, மறைமுகமாக மிரட்டல் ஏற்படலாம்
2, தோழர் செங்கொடிக்கு நேர்ந்தது போல் வேலை இழப்பும் பொருளாதாரா இழப்பும் ஏற்படலாம்
3. கடுமையான மன உலைச்சல் ஏற்படலாம் (இக்பால் செல்வன் என்பவர் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டது, என்று கூறி பதிவு எழுதுவதை விட்டு, பதிவுகளை மூடிவிட்டார்)
4. அனுமதியில்லாமல் (பதிவர்) புகைப்படங்களைச் சுட்டிக்காட்டி வசைபபடலாம்
5. உயிருக்கு ஆபத்து (?) அந்தளவுக்கு இன்னும் நிலைமை மோசமாகவில்லை என்பது தான் தற்போதைய ஆறுதல்.

*********

நாம் தமிழ் சூழலில் தமிழில் எழுதுகிறோம் என்று தமிழன் என்பதற்காகப் பெருமைபட்டாலும், இதே தமிழ் சூழலில் மதவாதிகளும் அங்கமாக அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது எழுதி மயிரையா புடுங்கப் போகிறோம் ? என்று வெறுப்பாகவும் உள்ளதை நான் இங்கே பதிவு செய்து கொள்கிறேன், தாய்மொழி, இனம் இவற்றையெல்லாம் வெற்றி கொள்ள மதவாத விசச்செடிகள் ஒரு குறிப்பிட்ட இன சமூகத்தில் ஊன்றப்படும் போது நாளடைவில் அச்சமூகம் தனக்குள்ளே சண்டையிட்டுக் கொண்டு சாகும், இதற்கு தமிழ் பேசுபவனும் விதிவிலக்கு இல்லை.

நான் எந்த ஒரு தனிப்பட்ட மதத்திற்கும் எதிரி அல்ல, அதே போல் ஒரு குறிப்பிட்ட மதக் குழுதான் அந்த மதத்தின் அடையாளம் என்று சொல்லப்படுவதையும் நான் புறக்கணிக்கிறேன், ஏனெனில் அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் என்னிடையே நல்லத் தோழமையில் உள்ளனர்.


18 கருத்துகள்:

எல் கே சொன்னது…

எந்தக் கருத்தாக இருந்தாலும், அதை சொல்ல உரிமை அனைவருக்கும் உண்டு. இது மற்றப் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்றே எண்ணுகிறேன்.

வால்பையன் சொன்னது…

மதத்தின் கேவலமான மறுபக்கம்!

நிகழ்காலத்தில்... சொன்னது…

தைரியமாக எழுதியது சரி என்றாலும், இருந்த இடமும், வேலையும் எழுதுவதற்கு நேர் எதிராக அமைந்தை உணர்ந்தே எழுதி இருக்கிறார். பலன் அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்.

ஆயினும் இதிலிருந்து மீண்டு, வேறு வழியில் அவரது பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு அவரது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வாழ்த்துகிறேன்..

priyamudanprabu சொன்னது…

mmm +1...(3 - already..)

சார்வாகன் சொன்னது…

வணக்கம் சகோ கோவி

நல்ல பதிவு. மதங்களின் மீதான விமர்சனம் தமிழர்களுக்கு புதிது அல்ல.இந்து மத்த்தின் மீது திராவிட இயக்கத்தினர் வைத்த‌ வைத்த கடும் விமர்ச்னங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே.

அந்த விமர்சனத்தின் காரண்மாக் சில நல்ல மாற்றங்களும் ஏற்பட்டதாகவே கூறலாம்.யாரும் விமர்சித்த்வர்களை வெட்டு கொல்லு என்று கூக்குரல் இட்டதாக்வும் தெரியவில்லை.

தோழர் செங்கொடியின் பதிவுகள் நான் அறிந்தவரை தமிழ் உலகில் இஸ்லாமின் மீது வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான் ஆய்வுரீதியான விமர்ச்னம் ஆகும்.அவரின் கருத்துகளுக்கு பதில் சொல்ல இயலாமல் பொருளாதரா,சமூக ரீதியான் நஷ்டங்களை ஏற்படுத்தவே மத்வாதிகள் முயன்றனர் என்பதே அவர் கருத்துகளின் ஆழம், உண்மையை கூறுகிறது.

அவர் ஏன் மத்வாத நாட்டில் இருந்து கொண்டு,பாதிப்பு ஏஎற்படும் என அறிந்தும் எழுதினார் என்பதற்கு எனக்கு தோன்றும் காரணம்.

ஒரு 10+ வருடங்களுக்கு முன் இங்கு சூஃபி மார்க்கமே பெரும்பான்மையாஅ இஸ்லாம்.இங்கிருந்து சில மத நாடுகளுக்கு சென்றவர்கள் தீவிர வஹாபிகளாக் மாறி மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு இபோது அவர்களும் குறிபிடத்தக்க அளவு பகுதியினா ஆகி விட்டார்கள்.

ஒரு சூஃபி ஆக இருந்த்வர் தீவிர வஹாபி ஆகி பிரச்சார்ம் செய்வது எப்படி நிகழ்ந்தது என்பது கேள்வியே.மதப் பிடிப்பு அதிகம் இல்லாத ஒருவர் மத நாடு சென்ற போது இந்த தீவிர பிரசாரத்திற்கு உட்படுத்தப்படும் வாய்ய்பில் எதிர்வினையாக‌ மத விமர்சனம் தோன்றி இருக்க்லாம் என்பதுதான். ஒருவேளை வெளிநாடு செல்லாமல் இருந்து இருந்தால் மத விமர்சனம் செய்து இருபாரா என்பதும் சந்தேகமே!

.பாருங்கள் தமிழ் பதிவுலகிலும்
வஹாபிகளை விமர்ச்னம் செய்பவர் முதலில் கருத்துகளை மறுத்து ,பிறகு எதிர்ப்பு ,வெறுப்பு என்னும் நிலைகளுக்கும் வருவதும் இயல்பே.


மத்வாதிகள் இப்படி சவுதி போல் நம் நாட்டை மாற்ற முயல்வதற்குத்தான் சவுதி புகழ் பாடுவதும் இன்னும் என்ன தந்திரங்கள் உண்டோ அனைத்தையும் பின்பற்றுவார்கள்.
இதில் கொடுமையான் நகைச்சுவை என்ன வெனில் ,சில‌ வாஹாபி பிரச்சார்கர்கள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றி விடுவோம் என உறுதியாக் நம்புகிறார்கள்.

நான் இந்த பிரச்சாரங்கள் தமிழ் பதிவுலகில் எதிர்வினைகளையே ஏற்படுத்தும் என கணித்தேன்.அதுதான் நிகழ்ந்தது.வஹாபிகள் செய்யும் பிரசாரம் இந்துத்வவாதிகளுக்கு தாங்கள்சிறுபான்மையினர் பற்றி சொல்லியது அனைத்தையுமே வஹாபிகள் நிரூபித்து வருவது கொண்டாட்டமாக்வே இருக்கும்.பாருங்கள் வஹாபிகளுடன் அதிகம் விவாதிப்பது முரண்படுவது. நாத்திகர்கள்தான்!!!!!.

அடுத்து திரு நரேந்திர மோடி பிரத்மாராகிறார் என்றால் அதற்கு காரணம் வஹாபிகளின் பிரசாரமே.

"நுண்லும் தன்வாயால் கெடும்"

நன்றி

செங்கொடி சொன்னது…

வணக்கம் நண்பர் கோபி,

உங்கள் கட்டுரைக்கு நன்றி.

துராப்ஷா பிரச்சனையும் என்னுடையதும் இருவேறு பிரச்சனைகளல்ல, தொடர்ச்சியானது தான்.

நான் ஒரு கடைநிலை ஊழியன் தான். ஒரு முதலாளியிடம் அல்லது நிறுவனத்திடம் வேலை செய்வது கம்யூனிச கொள்கைக்கு முரணான ஒன்றல்ல. எனவே அதை இரட்டைக்குதிரை சவாரி என கருதவேண்டியதில்லை.

இவைகள் நான் எதிர்பாராதவைகள் அல்ல, எதிர்பார்த்தவைகள் தான் அதனால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் இருந்தேன். எப்போது இவை நிகழும் என்பவை மட்டுமே தெரியாமல் இருந்தது.

மதவெறி எந்த வடிவில் இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியதே. அந்த வகையில் அது தொடர வேண்டியதே, தொடரும்.

தோழமையுடன்,
செங்கொடி

வேகநரி சொன்னது…

தங்களது மதத்தை விமர்சித்தார்ரென்பதற்காக மதவெறியர்களால் செங்கொடி சவ்தியில் இருந்து மிரட்டப்பட்டு தமிழகம் துரத்தப்பட்டது மிகவும் கொடுமையானது.அந்த மதம் எப்படி தொடர்ந்து தனது இருப்பை வைத்திருக்கிறது என்பது தெரிகிறது.
செங்கொடி மதவெறி நாட்டில் வேலைபார்த்தது தவறில்லை.
வினவு நான் ஒழுங்காக படிப்பதில்லை. வினவு செங்கொடிக்கு நடந்த கொடுமை பற்றி எழுதாமல் விட்டது கண்டிக்கதக்கது.

கல்வெட்டு சொன்னது…

சனாதன (இந்து) மதச் சூழலில் வளர்ந்ததால் அதைப் புரிந்து ஒரு கட்டத்தில் அதைத்தாண்டி பயணிக்க முடிந்தது.

பள்ளிப்பருவத்திலேயே பைபிள் படிக்கப்பட்டு விட்டதாலும், பள்ளிச் சூழலில் பல தேவாலயங்களின் நேரடி அனுபவம் மற்றும் மதப் பிரசங்கிகளின் நேரடி அறிமுகம் எல்லாம் சேர்ந்து கிறித்துவத்தைத்தாண்டி தாண்டி பயணிக்க முடிந்தது.

பின்னர் இஸ்லாம் குறித்தான எனது புரிதல்களுக்காகவே குரானை வாசித்தேன். அதையும் தாண்டி பயணிக்க முடிந்தது.

இவை எல்லாம் எனது புரிதலுக்காக மட்டுமே. எல்லாப் புனிதப் புத்தகங்களும் வரலாற்று நாவல்களின் சுவராசியத்தைக் கொடுத்ததேயன்றி அதைத்தாண்டி என்னால் எதையும் காணமுடியவில்லை. குறைபாடு என்னிடம்கூட இருக்கலாம்.
**

இப்படியான சூழலில் பதிவுகளின் அறிமுகம் வந்தபோது ஒரு தெளிவிற்காக நான் அறிந்ததை பதிந்துவைத்தேன் அது பல உரையாடல்களுக்கு வித்திட்டது. பல பதிவர்களிடம் இருந்து பல புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. அதுவே என்னை இயக்கிக் கொண்டே இருந்தது.

ஆனால் அதியும் தாண்டி மதவாதிகளிடம் இருந்து வெறுப்புகளை சம்பாதித்தேன். தவறான புரிதல்களையே ஏற்படுத்தியது. என்னையும் நாத்திகவாதியாக அல்லது மத எதிர்ப்பாளனாக மட்டுமே அடையாளப்படுத்தியது. ஆனால் நான் ஆனால் நான் ஒரு அறிவியல் இரசிகன் அதைச் சொல்லிப் புரியவைப்பது சாத்தியமற்றது.

கடவுளைக் க‌ண்டேன் ‍- விமர்சனம்
http://kalvetu.blogspot.com/2010/03/blog-post_17.html

***

இறுதியாக அறிந்தது:

தமிழ்ப் பதிவுலகில் இஸ்லாம் அல்லது அரபு நாடுகளின் அரசியல் குறித்த உரையாடல்களை முன்னெடுப்பபதற்கு எதையும் இழக்கும் துணிவு இருந்தால் மட்டுமே பேசவேண்டும்.

அப்படி இது தேவையா என்றால், தேவை இல்லை என்றே நினைக்கிறேன்.

***

எதனால் பேச வேண்டி இருந்தது?

உதாரணத்திற்கு மதவாதிகளின் சுவனம் குறித்த நம்பிக்கைகளில் எனக்கு எந்த கருத்தும் இல்லை. அது அவர்கள்பாடு. ஆனால் போகிற போக்கில் "சுவனம் பூமியில் இருந்து 800 கி.மீ தூரத்தில் உள்ளது" போன்ற கருத்துகளைச் சொல்லும்போதுதான் ஆதங்கம்/எரிச்சல்/கவலை என்று ஏதேனும் வந்து சிலவற்றைப்பேச நேர்ந்துவிடுகிறது. :-((((

பலருக்கு நேர்ந்துள்ள நிலமையைப் பார்க்கும்போது அதுவும் தேவையா என்றே நினைக்கிறேன். முழுவதுமாக குறைத்துக்கொளவே விரும்புகிறேன்.

நான் அனுபவத்தில் அறிந்த நீதி:
தமிழ் வலைப்பதிவர்களில் ஏதோ ஒன்றிற்கு நேர்ந்தவர்களிடம் உரையாடல் என்பது சாத்தியமற்றது. என்னளவில் இது நல்ல சூழல் அல்ல.
.

அறிவியலில் முடிவு என்ற‌ ஒன்று இல்லாமல் , கேள்விகளை கேட்டு , ஏற்கனவே உள்ளதை ஒதுக்கி, கலைத்து, புதியதாக அறிந்து, அதையும் கலைத்து நாளை புதியதாக அறியும் எல்லா வாய்ப்புகளையும் திறந்தே வைத்திருப்பதால் அதை இரசிக்க முடிகிறது.

எந்த தியரி அல்லது கண்டுபிடிப்புகளுக்கும் என்னை நேர்ந்துவிட்டு அதுதான் இறுதி என்று தேங்கிவிடுவது இல்லை அறிவியலில்.
**
மனிதம் மற்றும் அறிவியல் பாதிகளில் கவனத்தைச் செலுத்து இதுபோன்றவற்றை தவிர்ப்பதே எனது நோக்கம்.

naren சொன்னது…

//கொள்கை முரண்- கொள்கையை விட்டுகொடுத்துவிட்டு//
தோழர் செங்கொடி போல கொள்கையுடைவர்கள் அவர்களின் கொள்கைக்கு முரணாக ஒன்றும் செய்யக்கூடாது என்றால், அவரை போன்றவர்கள் வாழ்க்கையில் ஒன்றுமே செய்யாமல்தான் இருக்க வேண்டும்.

மதம், அரசியல், பொருளாதாரம் இன்னும் பிற கொள்கையானாலும் அப்படியே பின்பற்றவேண்டும் என்று கூறுவதால் தான் பிரச்சனைகளுக்கு வழி செய்கின்றன.

யார் எங்கே இருந்தாலும் விமர்சனம் மற்றும் கேள்விகேட்கும் உரிமை என்பது ஒரு மனித உரிமை. அது தடை செய்வது தவறு.

TBR. JOSPEH சொன்னது…

நான் சாதாரணமாக இத்தகைய விவாதங்களில் கலந்துக்கொள்வதில்லை. ஆனாலும் பதிவிலும் சரி, பின்னூட்டங்களிலும் சரி எழுதப்பட்ட ஒருசில கருத்துக்கள் என்னை எழுத தூண்டியது.

அடிப்படையில் நம்மில் பலரும் உணர்ந்துக்கொள்ள மறந்துவிடுவது இதுதான். மதம், நம்பிக்கை என்பதெல்லாமே உணர்வுபூர்வமானவை. அவை உணர்ந்து அனுபவிக்க வேண்டுமே தவிர அலசி ஆராய்ந்து பார்க்கலாகாது. இதில் எதுவுமே சரியுமில்லை, தவறுமில்லை. சரியும் தவறும் ஒவ்வொருவர் பார்வையில் மட்டுமே உள்ளது. என் மனதுக்கு சரி என்று படுவது பிறருக்கும் சரி என்று தோன்ற வேண்டிய தேவையேயில்லை. நான் ஒரு மதத்தை என்னுடைய நம்புகிறேன் என்றால் அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அது சரி என்றோ தவறு என்றோ மற்ற எவருக்கும் கூற நிச்சயம் உரிமை இல்லை. விமர்சிக்கவும் உரிமை இல்லை. இதை ஒவ்வொருவரும் புரிந்துக்கொண்டாலே போதும் இத்தகைய சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லை என்பது என் கருத்து.

கோவி.கண்ணன் சொன்னது…

//நான் ஒரு மதத்தை என்னுடைய நம்புகிறேன் என்றால் அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். அது சரி என்றோ தவறு என்றோ மற்ற எவருக்கும் கூற நிச்சயம் உரிமை இல்லை. விமர்சிக்கவும் உரிமை இல்லை. இதை ஒவ்வொருவரும் புரிந்துக்கொண்டாலே போதும் இத்தகைய சர்ச்சைகள் எழ வாய்ப்பில்லை என்பது என் கருத்து.//

தனிப்பட்ட நம்பிக்கை விமர்சனக்குரியது அல்ல என்கிற புரிந்துணர்வு அனைவருக்குமே இருக்கிறது, ஆனால் அவைமட்டுமே சிறந்தது மற்றதெல்லாம் புறக்கணிக்கக் கூடியது என்று கடைவிரிப்பாக விளம்பரம் செய்யும் போது விமர்சனங்கள் எழத்தான் செய்யும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//எந்தக் கருத்தாக இருந்தாலும், அதை சொல்ல உரிமை அனைவருக்கும் உண்டு. இது மற்றப் பதிவர்களுக்கு ஒரு எச்சரிக்கை என்றே எண்ணுகிறேன்.//

பதிவுலகம் இந்த அளவுக்கு கேவலமாகப் போன நிலை முன்பு இருந்தது இல்லை, முன்பு தனிமனித காழ்புணர்வு இருந்தது என்றாலும் நேரடியான பாதிப்புகளை செய்யத் துணிந்தவர்கள் குறைவே, தற்பொழுது குழுவாகவே அவ்வாறு செயல்படுகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
மதத்தின் கேவலமான மறுபக்கம்!//

எல்லாப் பக்கமும் அது தான், பிறகெங்கே முன்பக்கம், பின்பக்கம், பக்கவாட்டெல்லாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆயினும் இதிலிருந்து மீண்டு, வேறு வழியில் அவரது பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு அவரது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த வாழ்த்துகிறேன்..//

சரி ஆகி இருப்பார் என்றே நினைக்கிறேன், யாரும் யாரையும் நம்பிப் பிறக்கவில்லையே

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரியமுடன் பிரபு said...
mmm +1...(3 - already..)//

அதெல்லாம் தீய(யாக) வேலை செய்ய முனைப்போடு இருப்பாங்க

கோவி.கண்ணன் சொன்னது…

//அடுத்து திரு நரேந்திர மோடி பிரத்மாராகிறார் என்றால் அதற்கு காரணம் வஹாபிகளின் பிரசாரமே.

"நுண்லும் தன்வாயால் கெடும்"

நன்றி//

நன்றி சார்வாகன்,

தமிழ்நாட்டில் சாதிசங்கங்கள் பெருகியதும் கூட இவ்வாறு தான், ஒருத்தன் தன் சாதியை உயர்த்தப் போய் மற்றவர்களெல்லாம் சங்கமாக உருவாக்கிக் கொண்டார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//செங்கொடி said...
வணக்கம் நண்பர் கோபி,

உங்கள் கட்டுரைக்கு நன்றி.

துராப்ஷா பிரச்சனையும் என்னுடையதும் இருவேறு பிரச்சனைகளல்ல, தொடர்ச்சியானது தான்.

நான் ஒரு கடைநிலை ஊழியன் தான். ஒரு முதலாளியிடம் அல்லது நிறுவனத்திடம் வேலை செய்வது கம்யூனிச கொள்கைக்கு முரணான ஒன்றல்ல. எனவே அதை இரட்டைக்குதிரை சவாரி என கருதவேண்டியதில்லை.
//

நீங்கள் ஆபத்துகளை உணர்ந்தே செயல்பட்டிருந்தது தேவையற்ற ரிஸ்க் தான், தலைப் போய் இருந்தால் என்ன ஆகி இருக்கும் ? கொஞ்ச நாள் கண்டனப் பதிவு போட்டுவிட்டு பின்னர் எல்லோருமே மறந்துவிடுவார்கள் இல்லையா ?

புதுகை.அப்துல்லா சொன்னது…

// வஹாபிகள் செய்யும் பிரசாரம் இந்துத்வவாதிகளுக்கு தாங்கள்சிறுபான்மையினர் பற்றி சொல்லியது அனைத்தையுமே வஹாபிகள் நிரூபித்து வருவது கொண்டாட்டமாக்வே இருக்கும்.பாருங்கள் வஹாபிகளுடன் அதிகம் விவாதிப்பது முரண்படுவது. நாத்திகர்கள்தான்!!!!!.

அடுத்து திரு நரேந்திர மோடி பிரத்மாராகிறார் என்றால் அதற்கு காரணம் வஹாபிகளின் பிரசாரமே.

"நுண்லும் தன்வாயால் கெடும்"


//


well well said.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்