பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2011

திரட்டிக்காக திரள்வோம் !

வலைப்பதிவில் எழுதுவதற்கு என்ன என்ன காரணங்கள் உண்டோ அது போல் தொடர்ந்து எழுதாமல் இருக்கவும் காரணங்கள் இருக்கின்றன. முன்பு போன்று ஏன் மிகுதியாக எழுதுவதில்லை என்று கேட்பவர்களுக்கு இதைத்தான் சொல்லிவருகிறேன், போதக் குறைக்கு கூகுள் பஸ்ஸ், கூகுள் + அதன் பக்கம் கவனம் சென்றதால் பகிர்வதை நம் வட்டத்திற்குள் பகிர்ந்து கொள்ளலாம் என்கிற எண்ணம் ஒரு காரணம், என்ன இருந்தாலும் வலைப்பதிவு திரட்டிகள் வழியாக கிடைக்கும் இணைய நட்பின் ஈர்ப்புகள் பஸ்ஸ் உள்ளிட்ட பிற சமூகத் தளங்களில் இல்லை என்றே சொல்லுவேன். இது என் தனிப்பட்ட கருத்து தான்.

வலைப்பதிவே வைத்திருக்காதவர்கள் கூட வலைப்பதிவினருடன் நட்பில் இணைகிறார்கள், அதன் காரணம் ஒருவரது எண்ணங்கள் வலைப்பதிவின் வழியாக முழுமையாக உள்வாங்கப்பட்டு அதன் தொடர்பில் அவை ஏற்பட்டுவிடுகின்றன. பிற சமூக தளங்களில் ஒருவரது முழுமையான சிந்தனைகள் இவ்வாறென்பதை தெரிந்து கொள்வது கடினமாகத் தான் இருக்கிறது எனக்கு. மற்றபடி அவர்களுடன் அதே சமூகத் தளம் வழியாக மட்டுமே தொடர்பில் இருப்பது ஒன்றும் கடினமாகத் தெரியவில்லை, மேலும் அதன் எல்லை அதை தாண்டியும் வளர்வது சற்று கடினம் தான் என்றே நினைக்கிறேன். எழுத்துகளை வாசிப்பது, கருத்துரைப்பது என்பது தாண்டி நல்லதொரு தொடர்புகளை நட்புகளை உருவாக்கித் தருவதில் எனக்கு வலைப்பதிவுகளே முதன்மையாகத் தெரிகிறது. இருந்தாலும் துவக்கத்தில் சேர்ந்த நட்புக் கூட்ட எண்ணிக்கை ஆண்டுகள் செல்லச் செல்ல புதிய நட்புகளின் சேர்க்கை எண்ணிக்கை குறைவு தான். இப்போதெல்லாம் ஆண்டுக்கு 10 பதிய நண்பர்கள் கிடைப்பது அரிது, அதுவும் அவர்களாக தொடர்பு கொண்டு கேட்கும் போது மட்டுமே கூடிவருகிறது. புதியவர்களின் நட்புகளைத் தேடிப் பெருவதில் இருக்கும் சிக்கல், ஏற்கனவே போதுமானதாக நட்பு வட்டம் பெருகியுள்ளதே காரணம் என்றே நினைக்கிறேன். மற்றபடி ஒரு புதிய வலைப்பதிவரை நட்பாக்கிக் கொள்ள சாதி மத மற்றும் பிற அரசியல் நிலைப்பாடுகள் அல்லது எழுத்து அனுபவம் என எதுவும் காரணமே இல்லை. இதுவும் என்னைப் பொருத்த அளவில் தான்.

இன்றைய தேதிக்கு தனித் தனி குழுமங்களாகவும் (பெரும்பாலும் வாழும் நாடு அல்லது நகரம், ஊர் பெயரில்), மொத்தமாகவும் தமிழ் பதிவர்களின் வட்டம் பெருகியுள்ளது. ஒரளவு நன்கு அறிமுகமான பதிவர் தனது இல்லவிழாவிற்கோ, திருமணம் ஆகாத பதிவர்கள் திருமணத்திற்கு அழைக்கும் பொழுது (குறிப்பாக சஞ்செய், ஆயில்யன் இன்னும் பிறர்) திரளாக வலைப்பதிவர்கள் தம் தம் வீட்டு விழாக்களைப் போல் சென்று வாழ்த்தி வருகிறார்கள், அதைத் தாண்டி ஒருவருக்கொருவர் தனிப்பட்ட முறையிலும் உதவி வருகிறார்கள், அவர்களில் சிலர் தன்னலத்துடன் நடந்து கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்தமாக தமிழ் பதிவர் குழுமம் தமக்குள் நல்லொதொரு புரிந்துணர்வையும் நட்புணர்வையும் பெருக்கிக் கொண்டே வளர்ந்து கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் தமிழகம் சென்றால் நாம் போவதும் வருவதும் கூட உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து யாருக்கும் தெரியாது, இப்போதெல்லாம் சென்னை அல்லது திருச்சி, மதுரை வழியாக செல்லும் போது அந்த பகுதி வலைப்பதிவர்களை சந்திக்காமல் செல்ல முடிவதே இல்லை, அப்படியும் யாருக்கும் சொல்லிக் கொள்ளாமல் சென்று வந்தால் பின் தெரிந்ததும் அன்புடன் கடிந்து கொள்கிறார்கள், சென்னையில் எங்கு தங்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கெல்லாம் இல்லாமல் எங்களுடன் தங்குங்கள் என்று அழைப்பவர்கள் நிறைய பேர், எந்த ஒரு நகருக்குச் சென்றாலும் நமக்கு தெரிந்தவரில் ஒருவர் அங்கு உண்டு என்பதை வலைபதிவர் வட்டம் உறுதி செய்துவருகிறது, இதெல்லாம் நன்கு பிறருடன் பழக நினைப்பவர்களுக்கும் அவர்களுடன் பழகுபவர்களுக்கும் ஏற்படும் தனிப்பட்ட அனுபவம் ஆகும்.

வலைப்பதிவில் எழுதுவதன் மூலம் இவை வாய்ப்பாக அமைந்தது என்றாலும் அந்த வலைப்பதிவுகளின், வலைப்பதிவர்களின் முகவரிகளை நமக்கு அறிமுகப்படுத்திக் கொடுத்தததில் முதன்மைத் திரட்டியாக நான் நினைப்பது தமிழ்மணம் தான். எந்த ஒரு விளம்பரம் இல்லாமல் திரட்டி சேவையை வழங்கி வந்தவர்கள் வலைப்பதிவர்களின் எண்ணிக்கை மற்றும் பிற மேம்பட்ட வசதிகளை சேர்த்துக் கொள்ள ஆகிய பொருள் செலவை ஈடுகட்ட விளம்பர பதிவுகளை இணைத்துக் கொண்டுள்ளனர், தற்பொழுது வலைப்பதிவர்களின் எண்ணிக்கை உயர உயர திரட்டி சேவை திணறி வருகிறது, இதனை சரி செய்ய இணையத் தளத்தை முற்றிலும் மாற்றி வேறொரு இணைய வழங்கியாளர் (வெப் ஹோஸ்டிங்) வழியாக செய்ய முடிவெடுத்திருப்பதாகவும், அதற்கான செலவுகளை கருத்தில் கொண்டு வலைப்பதிவர்கள் இயன்றவரை பொருளுதவி செய்யச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். துவக்க காலம் முதலே வலைப்பதிவர்களிடம் நெருக்கமான உறவு கொண்டு இருந்தாலும் தமிழ்மண நிர்வாகம் இது போன்று வெளிப்படையாக உதவி கோரியதில்லை என்பதை நாம் கருத்தில் கொண்டு இயன்றவரை உதவுவோம். இது ஹிந்திகாரர்களுக்கோ, கன்னட, தெலுங்குகாரர்களோகோ நடத்தப்படும் திரட்டியல்ல, முழுக்க முழுக்க நமக்காக நடத்தபடும் திரட்டி. நான் பிர திரட்டிகளை இங்கு ஒப்பிடவில்லை, சொல்லவருவது முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சியாக தயாரிக்கப்படும் ஒரு நிகழ்ச்சியை தமிழர்கள் பார்க்காவிட்டால் வீணாகிவிடும் அல்லவா அது போன்றதே.

நாங்கள் அதாவது சிங்கைப் பதிவர்கள் ஒவ்வொரும் இயன்றத் தொகையை சேர்த்து சிங்கைப் பதிவர் குழுமமாக தமிழ்மணம் நிர்வாகத்திற்கு அனுப்ப உள்ளோம், அதே போன்று உங்கள் பகுதிகளில் 'பொறுப்பான' ஒருவர் மூலம் சேகரித்து அனுப்பலாம் அல்லது தனித்தனியாகக் கூட அனுப்பலாம். பெற்றோர்கள் பிள்ளைகளிடம் கேட்டுப் பெரும் நிலையில் இருக்கும் சங்கடங்களைப் போன்று தான் தமிழ்மணத்தின் அறிவிப்பு என்பதை நான் உணர்ந்து கொண்டுள்ளேன்.

இதை ஏன் நான் எழுதுகிறேன் என்றால் தமிழ்மணம் திரட்டியின் வழியாக அறிமுகமான நட்புகளின் மூலம் பயனும் மகிழ்ச்சியும் அடைந்தேன் என்கிற முறையில் இதை நான் ஒரு கடமையாகவே நினைக்கிறேன். தமிழ்மணம் நன்கொடை தொடர்பாக நண்பர் ஜாக்கி சேகர் கூட இதுபற்றி எழுதியுள்ளார். எதிர்காலத்தில் நல்ல சேவைகளைத் தொடரும் பிற திரட்டிகளையும் கவனத்தில் கொள்ளுவோம் அவர்களும் உதவி தேவை என அறிவிக்கும் போது.

5 கருத்துகள்:

suvanappiriyan சொன்னது…

வழி மொழிகிறேன்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

இதே தான் எனது எண்ணமும்.

கணினியை திறந்தவுடன் கை தானாகவே தமிழ்மணம் என்று டைப் செய்யும் அளவுக்கு தமிழ்மணம் மனதில் பதிந்து விட்டது.

நம்மாளான உதவிகளை செய்வோம்.

துளசி கோபால் சொன்னது…

ஆஹா... அப்ப நான் நியூஸி நாடு முழுசும் உள்ள தமிழ்ப் பதிவர்களை (!!)கேட்கலாம். அவுங்க உடனே சரின்னுதான் சொல்வாங்க.

செஞ்சுருவோம்.

Make Money Online Forum சொன்னது…

நல்லப்பதிவு ‍ வலைப்பதிவு நட்பு வட்டம் பெருக எனது வாழ்த்துக்கள்.




Make Money Online

ILA (a) இளா சொன்னது…

நன்று! செய்வோமே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்