கடவுள் அனைத்தையும் படைத்ததாக மதங்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றன, கடவுள் 7 நாளில் உலகைப் படைத்ததாக ஆப்ரகாமிய மதங்களின் அடிப்படை நம்பிக்கை, அதன் பிறகு ஓய்வெடுக்கச் சென்றவர் தூதர்களை அடையாளம் காட்டுவதுடன் நிறுத்திக் கொண்டார் என்பதுடன், இவர் தான் இறுதித் தூதர் என்பது முறையே ஏசு மற்றும் முகமது ஆகியோர் பற்றி ஆப்ரகாமிய மதங்களின் கோட்பாடு, இறுதித் தூதர் யார் என்பதன் நம்பிக்கை தான் அம்மதங்களின் பெயர்களாக முறையே யூத மதம் (மோஸஸ்) கிறித்துவ மதம்(ஏசு), இஸ்லாம் (அ) முகமதிய மதம் (முகமது) என்று வழங்கப்படுகிறது, இஸ்லாம் மற்றும் கிறித்துவ நம்பிக்கைகளையும் அந்த இறைத்தூதர்களை ஏற்றுக் கொண்ட பார்சி மற்றும் அகமதியா மதங்களும் உள்ளன ஆனால் இவற்றின் அடிப்படை கடவுள் கொள்ளை மற்றும் படைப்பு சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் ஒன்று தான், அதாவது கடவுள் ஏழு நாளில் உலகைப் படைத்தார். இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளும் இவை போன்று தான் என்றாலும் கூட ஏழு என்றநாள் எண்ணிக்கைக்கு பதில் ஆண்டுக்கணக்கில் சொல்லபடுகிறது மற்றபடி அவை உயர்ந்ததொரு நம்பிக்கை என்று கொள்ள முடியாது. மதங்கள் அனைத்தின் அடிப்படை நம்பிக்கைகளும் கடவுள் உலகை படைத்தார் அல்லது சிருஷ்டித்தார் என்பதான நம்பிக்கை. படைத்தல் அல்லது சிருஷ்டித்தல் என்பது இல்லாத ஒன்றை உருவாக்குவது என்பதாம். இவற்றை ஏன் படைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு மதமும் தெளிவான ஒரு விடையைத் தந்ததுவிடவில்லை, அது கடவுளின் விருப்பம் என்கிற எளிய விடையைக் கூறி கேள்விகள் எழாது என்று நினைத்துக் கொள்வர்.
மனித அறிவின் படி கடந்த கால வரலாற்றில் புதிதாக எந்த ஒரு உலோகமும் தோன்றி இருக்கவில்லை, இவை அனைத்தும் அறியும் போது இவை இருக்கிறது என்பதாக தெரிந்து கொண்டனர். சிந்துவெளியில் இரும்பைப்பற்றிய அறிவில்லை என்பதால் சிந்துவெளிக்கு பிறகே இரும்பு தோன்றியது என்பது பொருளல்ல, இரும்பு கண்டுபிடிக்கப்படாமல் அல்லது பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கிறது என்பது தான் பொருள். இன்று நாம் பயன்படுத்தும் அனைத்துவிதாமான பொருள்களும் நாம் அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்திலும் இருந்தவையே, அவற்றில்கலவை செய்து பெயரிட்டு புதிய பெருள்கள் என்கிறோம், மற்றபடி முற்றிலும் முன்பு மூலங்கள் எதுவுமே இல்லாத பொருள் என்று எதுவுமே கிடையாது. இவைகள் நோய்கிருமிகளுக்கும் பொருந்தும், உயிர்கொள்ளி நோய் கிருமிகள் கூட இருந்திருக்கலாம், அல்லது புதிய பரிணாமாக அவை பிரிதொரு கிரிமியின் வளர்ச்சியாக மாறி இருக்கலாமே அன்றி அவை மூலங்கள் எதுவும் இல்லாமல் தான் தோன்றியாக தோன்றி இருக்க வாய்புகள் இல்லை, மேலும் அவை பரவும் சூழல் போதிய தட்பவெட்பம் ஆகியவை அவை எளிதில் பரவுவதற்கு வழி செய்திருக்கின்றன. அதாவது நாம் பெயர் வைத்திருக்கும் புதிய நோய்கள் கிருமிகள் அனைத்துமே முன்பு பெயரில்லாமல் இருந்தவை அல்லது பரவாமல் இருந்தவை. அறிவியலாளர்கள் புதிதாக ஒரு கோள் அல்லது நட்சத்திரம் பற்றிய அறிமுகம் கொடுக்கிறார்கள் என்றால் அவை முன்பு இல்லாமல் இருந்தது கிடையாது, அவை அறிவியல் புலனுக்குள் அறியப்பெற்றிருக்கிறது என்பதே பொருள், கருங்குழிகள், பெருவெளிகள் அனைத்துமே இல்லாத எந்த ஒரு பொருளையும் உருவாக்கிவிடாது அவற்றில் இருக்கும் வாயு மண்டல மூலக் கூறுகள் ஒன்றிணைந்து அல்லது சிதைந்து திடப் பொருள் உருவாக்கத்தை நடத்துகின்றன என்பது தான் அறிவியல் உண்மை.
அடிப்படையில் உயிரினங்கள் அனைத்தும் உற்பத்தி (இனப்பெருக்கம்) வளர்ச்சி, முதிர்ச்சி எனபதனுள்ளும், ஒன்றை ஒன்றும் உண்ணும் சுழற்சியில் இருக்கின்றன. இவற்றில் நீண்ட வாழ்நாள் கொண்டவற்றின் உற்பத்தி குறைவாகவும், குறுகிய வாழ்நாள் கொண்டவை மிகுதியான உற்பத்தித் திறனையும் பெற்றிருக்கின்றன. வேட்டையாடி அழிக்கப்பட்ட உயிரனங்களைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும், இயற்கைச் சீற்றங்களினால் முற்றிலும் அழிந்த உயிரினங்களின் மறு உற்பத்திக்கு கடவுள் என்ன செய்திருக்கிறார் என்கிற கேள்விக்கு மதங்கள் விடை சொல்லுவது இல்லை. படைப்பிற்கான காரணம் இறை விருப்பம் என்றாலும் அவை முற்றிலும் அழிந்து போனதற்கு என்ன காரணமாக இருக்கும் ?
அவற்றை படைத்ததின் நோக்கத்தை அப்படைப்புகளும் தோன்றியதன் நோக்கத்தை நிறைவு செய்துவிட்டனவா என்பதற்கு தெளிவான எந்த ஒரு பதிலையும் இறைவனின் படைப்பு என்கிற நம்பிக்கையாளர்கள் விடை தேடியதில்லை. இத்தகைய கேள்வியில் படைப்பு என்று எதுவும் கிடையாது, உயிரினத் தோற்றம் சூழலால் அமையப் பெற்றது என்பதையும் பரிணாமம் அல்லது ஏதோ ஒன்றினால் நம்ப வேண்டி இருக்கிறது. நன்னீரில் உற்பத்தியாகாத புழுக்கள், பூச்சிகள், கொசுக்கள் தேங்கிய குட்டையில் (தோன்றி) வளர்வதற்கு சுற்றுச் சூழல் என்பது தானே வேறுபாடு.
தாவிர வகைகள் உட்பட, உயிர்களின் நோக்கம் உணவு தேடுதல் (தன்னைப் பாதுகாத்தல்), இனப்பெருக்கம் இவை தவிர்த்து எதுவும் கிடையாது. வாழுதல் அதில் கிடைக்கும் இன்பம் எனப்படுபவை தாவிர வகைக்கள் தவிர்த்து உயிரினங்களுக்கு இருந்தாலும், தாவிர வகைக்களுக்கு வாழும் இன்பம் என்னும் மனம் சார்ந்த உணர்வுகள் கூட கிடையாது, வாழும் இன்பம் தவிர்த்து எந்த ஒரு உயிரனத்திற்கும் வாழுதலுக்கான வேறு எந்த தனிப்பட்ட பலனும் கிடையாது, நாம் ஏன் வாழனும் என்கிற கேள்வியே எழாமல் உடல் சார்ந்த, இச்சை, பாசம் என்பதை வளர்த்துக் கொண்டு மனித இனம் வாழுதலை நேசித்தாலும், பிற உயிரனங்களுக்கு தாம் ஏன் வாழனும் என்கிற எண்ணம் எதுவுமே இல்லாமல் தன்னிச்சை எனப்படும் தூண்டலில் தோன்றி, வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து மறைகின்றன. உயிரினம் வாழுதலுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்கிற தேடலில் மறைந்த (இறந்த) பிறகான நிரந்தர மற்றும் தற்காலிக சுவர்கங்களையும் மதங்கள் காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய கற்பனையில் சிக்காத மனித இனம் மதங்கள் தோன்றுவதற்கு முன் வாழ்ந்து மறைந்தும் இருக்கின்றன. படைப்பு அதற்கான நோக்கம் இவற்றின் தெளிவுகள் எதுவுமே வரையறுக்கப்படாத சூழலிலும் கூட மனிதன் உட்பட உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன எனும் போது அதற்கு காரண கருத்தா என நம்பப்படும் கடவுள் அவர்களுக்கு மட்டும் ஏன் எதையும் (தெளிவாக, மறைமுகமாகக் கூடச்) சொல்லி வைக்க வில்லை என்ற கேள்வியில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்கிற கொள்கைகள் என்னால் எப்போதும் நிராகரிக்கப்படுகிறது.
எந்த ஒரு தானியங்கி (சுழற்) விசையும் தொடந்து செயல்பட புற விசையின் எப்போதுமான தூண்டல் என்பது தேவை. எடுத்துக்காட்டிற்கு பூமியின் பருவகாலம் மாறி மாறி ஆண்டுக்கு ஒரு முறை வருவதற்கு (அதன் வழி தொடர்சியான தானிய பொருள் உற்பத்திக்கு, உயிர் தோற்றங்களுக்கு) பூமி சுற்றுவதும் சூரியனும் புறக்காரணிகள், இந்த வெளிப்புற தூண்டல் இல்லை என்றால் பூமியில் பருவகாலம் என்பதே ஏற்படாது. பரவெளியெங்கும் இது போல் கோள்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன, இதைத் தவிர்த்து புறத்தூண்டல்கள் எதுவுமே இல்லாத சூழலில் படைப்புகள் என்று நம்புவை அனைத்தும் வெறும் நம்பிக்கை மட்டுமே என்று நான் கருதுகிறேன். இவை அனைத்தையும் இறைவனின் சித்தம்/விருப்பம் செயல்படவைக்கிறது என்று பூசி மொழிகினாலும், இவை எல்லாம் செயல்பட வைப்பதில் இருக்கும் இறைவனின் விருப்பம் என்ன ? என்று கேட்டால் விடை கிடைப்பது இல்லை. இறைவனுக்கு விருப்பம் நோக்கம் எதுவுமே கிடையாது என்று வைத்துக் கொண்டாலும், மனிதன் நல்லவனாக வாழனும் அதன் பிறகு சொர்கம் கிடைக்கும் என்பதும் மதங்கள் காட்டும் இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?
விருப்பம் எதுவும் இல்லாத கடவுள் விரும்பிய படி உலகையும் ஏனையவற்றையும் படைத்தார் என்பது முரணனான கூற்றுகள். அப்படியே கடவுளுக்கு விருப்பம் இருந்து படைத்திருந்தாலும் படைப்பின் பிழைகளுக்கு இறைவன் தான் பொறுப்பு என்று குற்றம் சொல்லுபவர்களை நாம் புறந்தள்ளவும் முடியாது. படைப்பில் பிழையே இல்லை என்பவர்களும் எல்லாவற்றையும் சரியாக படைத்த கடவுள், மனிதனுக்குள் இத்தனை பிரிவினைகளை ஏற்படுத்தாத சூழலை மட்டும் படைக்கவில்லை என்று சொன்னாலும் அது முரண் தானே. இறைவன் நாடினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதும் கெட்டவை நடந்ததில் இறைவனின் பங்கு இல்லை என்பது போன்ற முரணான கூற்றுகளை எப்போதும் நிராகரிக்கிறேன், அந்தக் கூற்று உண்மை என்றால் படைப்பில் பாராபட்சம் என்பதும் உண்மையாகத்தானே இருக்க முடியும் ?
நான் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று எங்கும் விவாதிப்பது இல்லை, ஆனால் இறைவனின் செயல்கள் இவை இவை என்று சொல்லப்படுவற்றை என்னால் கேள்வி எழுப்பாமல் இருக்கவே முடியாது, அந்த வகையில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் நான் நிராகரித்தே வருகிறேன்.
முந்தைய பகுதிகள் 1, 2 மற்றும் இறைவன் படைக்கிறானா ?
(என்றாவது) மீண்டும் தொடரும்......
Read more...