பின்பற்றுபவர்கள்

1 மே, 2023

நித்தி என்பது வெறும் சாமியார் அல்ல

சாமியார் என்றால் ஏதோ காவியோ கோமணமோ கட்டிய பஞ்ச பரதேசி என்று மக்களுக்கு காலம் காலமாக திணித்திருந்த எண்ணத்தை உடைத்தவர் யார் ?

பட்டும் பீதாம்பரமும் தங்க மகுடமும் அரசர்க்கும் பெரும் செல்வந்தர்களுக்கே உடையது என்ற மாயையை உடைத்தது யார் ?

சாமியார் என்றாலே சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டு ஆன்மீக உபதேசம் செய்பவர் என்ற பிற்போக்கு எண்ணத்தை உடைத்து பெண்கள் புடை சூழ ‘கல கல’ சிரிப்பில் கூத்தும் கும்பாளமாகவும் சத்சங்கம் நடத்த முடியும் என்று செய்து காட்டியது யார் ?

யார் ? யார் ? யார் ? சாமியார்களின் சாமியார் ராஜ ரிஷி நம்ம நித்யானந்த பரமஹம்சர் தான் அந்த பெருமைக்குறிய மஹான்

நேத்திக்கு சொல்வதெல்லாம் உண்மையில் குந்தி இருந்து இன்னிக்கு சொல்வதெல்லாம் அருள் வாக்கு என்று உருமாறி இருக்கும் அன்ன பூரணி அரசு அம்மா தங்க மகுடம் சூட்டி ஆத்தாவாக அவதரித்துள்ளது என்றால், ‘வெத போட்டது யாரு ?’

நம்ம பரமஹம்சர் தான். 

ஓம் நித்யானந்த பரமசிவம். A trendsetter, ஒரு புரட்சியாளர்


- கோவி 

23 ஏப்ரல், 2023

Legend - யாரை வைத்து செய்துள்ளது ?

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடித்த அந்த படத்தை ஓடிடியில் வெளியான நிலையிலும் பார்க்க விரும்பியதில்லை.

நம்மைப் போல் எளிய மனிதனாக வயதானவன் நடித்த ஒரு படத்தை பார்க்க நமக்கு என்ன மனத்தடை ? மனதளவில் ஏன் ஏற்க முடியவில்லை, அது வெறும் ‘இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்’ என்ற பொறாமை உணர்வு தானா ? என்று யோசித்துப் பார்த்தேன்.

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த பிறகு கூட பலர் ‘இவனெல்லாம் பெரிய திரைக்கு வந்துட்டான், இவனெல்லாம் ஹீரோவாக ஆகனும்னு தமிழ் சினிமா தலையெழத்து இருக்கு’ என்று பலர் குமைந்தனர்

சிவகார்த்திகேயன் நடிக்க வந்து அவர் தன்னை வளர்த்துக் கொண்டு நிற்கும் இன்றைய நிலைக்கும் சரவணா ஸ்டோர் அதிபர் நடிக்க வந்ததும் ஒன்றா ? கண்டிப்பாக இல்லை.

ஒரு நடிகனாக அந்த துறையில் நுழைவது வாரிசு நடிகர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு எளிதன்று, சிறு சிறு வேடங்கள் நடித்து பல இயக்குனர்கள் அறிமுகம் கிடைத்து, தனக்கு கிடைத்த சிறு வேடங்களிலும் தனித்துவம் காட்டி, பின்னர் நாயகனாக நடிக்கும் தகுதி வாய்ந்தவன் என்ற நம்பிக்கையை இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் ஏற்படுத்தி வாய்ப்புக் கிடைத்த முதல் படத்தில் முத்திரை படைத்து அடுத்த அடுத்த படங்களில் வெற்றியை தக்க வைக்க தேர்ந்தெடுத்த படங்களை நடித்து மக்கள் மத்தியில் மற்றொரு கதை நாயகனாக மனதில் நிற்க வைக்க ஒரு நடிகனுக்கு அந்த துறையில் குறைந்த பட்சமாக பத்தாண்டு உழைப்புத் தேவைப்படுகிறது, சிவ கார்த்திகேயன் மற்றும் விஜய சேதுபதி இவ்வாறு தான் வளர்ந்து தனக்கான இடத்தை பிடித்தனர், அதன் பின்னரே 50 கோடிகளுக்கு மேல் செலவு பிடிக்கும் பெரிய பட்ஜட் படங்களில் அவர்களால் நடிக்கவே முடிந்தது.

ஒரு மனிதன் கடுமையாக உழைத்து ஒரு துறையில் தனக்கான இடத்தை அடையும் பத்தாண்டு கால உழைப்பையும் அலட்சியப்படுத்தி அந்த இடத்தை பணம் படைத்தவன் அடைய முடியும் என்று நினைப்பதே பணத் திமிர் என்று மட்டுமே சொல்ல முடியும், பெரும்பாலும் பணத்தில் உச்சமடைந்த என்ன செலவு செய்யலாம் என்ற நிலையில் பெரும்பாலான இந்திய பணக்கார ஆசை நடிகைகளுடன் ஒருமுறை படுக்க அவர்களை சம்மதிக்க வைக்க பெரிய விலை கொடுப்பது, அதைத் தாண்டி யோசித்துள்ளார் அண்ணாச்சி. நாமே பெரிய பட்ஜெட் படம் எடுத்து நாயகனாக நடித்தால் என்ன ? இந்த பணக் கொழுப்பு தனக்குத் தானே படம் எடுத்து எளிய மக்கள் வைத்துக் கொள்ளும் ஒருநாள் திருமண கட்அவுட் போல அவரும் அவரைச் சார்ந்தோரும் பார்க்க எடுத்துக் கொண்டால் நமக்கு அதில் எந்த விமர்சனமும் இல்லை, திரை சார்ந்த திரைப்பட சந்தையில் எந்த நம்பிக்கையில் தரமற்ற ஒரு பொருளை தயாரித்து நடித்து அதை ஐந்து மொழிகளில் வெளியிட்டது ஏற்கனவே அந்த துறையில் உள்ளவர்களின் உழைப்பை கொச்சைப்படுத்தும் செயலாகத் தான் நான் பார்த்தேன்

எப்படி நினைத்துப் பார்த்தாலும் இதை பணத்திமிர் என்பது தாண்டி ஞாயப்படுத்த எந்த சிறு துரும்பு கூட படத்திலோ செயலிலோ உள்ளது என்று யாராலும் கூற இயலுமா ?

ஒரு பணக்காரன் தன் பணத்தினால் ஒரு கலைஞன் அடையும் உயரத்திற்கு விலைவைத்திருப்பது ஒட்டுமொத்த கலைத்துறையையும் கேவலப்படுத்தும் செயல்

பணத்தினால் எல்லாம் செய்ய முடியும் என்றால் இது போன்ற அசிங்கத்தையும் தான் செய்ய முடியும் என்றே இதைப் பார்க்கிறேன்

போட்டி நிறைந்த கல்லூரிகளில் பணத்தை கொடுத்து சீட் வாங்ஙி அதை வீணடித்துவிட்டு “படிப்பெல்லாம் என் பணத்துக்கு முன் மயிர்” என்று மார்த்தட்டுவது போன்ற பணத்திமிராகத் தான் இதைப் பார்க்கிறேன். பணத்தினால் கல்வித் தகுதியையும் கலையையும் கேவலப்படுத்துவதை பணத்திமிர் என்று தான் சொல்ல முடியும்



பணத்தின் பக்க விளைவுகள் பெருங்கொடுமை

17 ஆகஸ்ட், 2022

FeTNA வாங்கிய குட்டு

FeTNA எனப்படும் வட அமெரிக்க தமிழ் சங்கம் பல ஆண்டுகளாக செயல்படுகிறது, இந்த அமைப்பு அங்குள்ள தமிழர்களுடன் இணக்கமாக இருக்கவும் தாய் தமிழ்நாட்டுடன் தொடர்பை காக்கவும் உருவாக்கப்பட்டது, தொண்டு நிறுவனமாகவும் செயல்படுகிறது, அங்கு நடைபெறும் ஆண்டுவிழாக்களில் தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு தமிழறிஞர்களை, திறனாளர்களை அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் பயணத்திற்கான அவர்களது முழுச் செலவையும் ஏற்று, அழைத்து பேச வைப்பது, நிகழ்ச்சி படைப்பது வழக்கம். இது அங்கு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும், இணைய தளமும் செயல்படுகிறது.

அங்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் கல்வெட்டு என்கிற பலூன் மாமா என்ற நண்பர் அண்மையில் அந்த இணைய தளத்தை பார்வையிட்ட போது அதிர்ச்சி அடைந்தார். நண்பர் முற்போக்கானவர், தமிழ் அறிவியல் என்ற பெயரில் அந்த அமைப்பு வெளியிட்ட நூல் இணைய பக்கத்தில் இருக்க, அதைப் படித்தும் மிகுந்த கவலைக்குள்ளானார். 

வாட்சப் பார்வேர்டுகளாக வரும் இந்து புராணக் கதைகளை அறிவியலுடன் தொடர்புபடுத்தும் கற்பனையாக எழுத்தப்பட்டவை தமிழ் அறிவியல் என்ற பெயரில் புத்தகமாக்கி வெளியிட்டுள்ளனர். இதனை படிக்கும் அங்குள்ள இளையர்களுக்கு எந்த ஒரு ஆய்வும், அறிவியில் அமைப்புகளில் சான்றிதழோ பெற்றிருக்காத வெறும் கற்பனையாக எழுதப்பட்ட இந்த சோடிப்புகள் இளையோர் மூளையை மழுங்கடிக்கவோ செய்யும். அதை விரும்பியவர்கள் படிக்கட்டுமே உங்களுக்கென்ன ? என்று கேட்டால், ‘இந்து அறிவியல்’ என்ற பெயரில் எதையாவது கடை விரித்தால் யாரும் கேட்கப் போவதில்லை, ஆனால் ‘தமிழ் அறிவியல்’ என்ற பெயரில் இந்து புராணக் கதைகளுக்கு அறிவியல் முலாம் பூசி கடைவிரிப்பது கண்டனத்துக்கு உரியதே. இதே போல நாங்களும் தமிழர்கள் தமிழில் மொழியில் எழுதப்பட்ட சீறாப் புராணத்திலும் (இஸ்லாமிய நூல்), தேம்பாவனியிலும்  (கிறித்துவ நூல்) அறிவியல் உள்ளது, அதையும் ‘தமிழ் அறிவியல்’ என்றே கருத வேண்டும் என்று கூறினால், அந்த நூலை எழுதியவர்கள் ஏற்பார்களா ? தமிழமைப்புகள் மதச் சார்பு அற்ற அமைப்புகள் அதில் கள்ளத் தனமாக ஒரு மதம் சார்நத நம்பிக்கையை நுழைப்பது ஏற்கத் தக்கதல்ல.

நண்பர் கல்வெட்டு அதை கவனத்திற்கு கொண்டுவர, நண்பர் கண்ணபிரான் இரவிசங்கர் அந்த அமைப்புத் தலைமைகளில் ஒருவரான பாலா சுவாமிநாதனைத் தொடர்பு கொண்டு தெரிவிக்க, அந்த நூலை இணையத் தளத்தில் இருந்து உடனடியாக நீக்க நடவெடிக்கை எடுக்கப் போவதாக குறிப்பிட்டுள்ளார். 


தாய்த் தமிழ் ஒன்று, தமிழர்கள் பின்பற்றும் மதங்கள் வேறு வேறு. இந்த புரிதல் இல்லாமல் தமிழுடன் மதம் சார்ந்த (சொந்த) வாட்சப் குப்பையை தமிழ் மீது கொட்டுவது கண்டிக்கத் தக்கதே. விரைந்து செயல்பட்டோருக்கு பாராட்டுகள்



7 ஜூலை, 2017

பதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்

நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்போதும் நம்மை துறத்திக் கொண்டு தான் இருக்கிறது. ஒரு சிலரை விரைவாக பிடித்துவிடுகிறது, ஒரு சிலருடன் பல ஆண்டுகள் பின் தொடர்கிறது, பலருடன் நடந்தே சென்று ஒரு நாள் கை கொடுத்து அணைத்துக் கொள்கிறது. மரணத்திற்கு பிடிக்காதவர்கள் எவரும் இல்லை, அதற்கு எவ்வளவு நம்மை பிடிக்கிறது, பிடிக்கவில்லை என்பதைப் பொருத்து நம் வாழ்நாள், இந்த ஓட்டத்தினூடாகத் தான் நாம் பல்வேறு உணர்ச்சிகள், குற்ற உணர்ச்சிகளோடு, ஆணவம், எல்லாவற்றையும் சுமந்து கொண்டு ஓடுகிறோம், நம்மோடு சேர்ந்து அவைகளும் மறைந்து போகின்றன, பின்னர் வேறு பலரின் நினைவுக்குள் மட்டும் அவர்கள் இருக்கும் வரை வாழ்வோம், அதுவும் நமக்கு தெரியாத ஒரு வாழ்க்கை, நம்மால் உணரமுடியாத வாழ்க்கை.

*****

பித்தனின் வாக்கு என்ற பெயரில் பதிவு எழுதும் சுதாகர் சிங்கையில் இருந்து அவற்றை எழுதினார், பதிவர் சந்திகளில் நேரடி அறிமுகம் கிடைத்தது, அவரது சமூகம் சார்ந்த கருத்துகளில் எனக்கு ஏற்பு இல்லை என்றாலும், நகைச்சுவை பதிவுகள், துணுக்குகள், சமையல் பற்றி அவர் எழுதியவை சுவையானவை. நேரில் பழகுவதற்கும் இனியவர், சிங்கையில் ஈராண்டுகள் (2008-2010) பணிபுரிந்தார், பின்னர் சென்னைக்கு திரும்பி கல்பாக்கத்தில் தங்கி, நாள் தோறும் பைக் பயணமாக சென்னையில் வேலை பார்த்து வந்தார், நான் சென்னை வரும் போது அழைத்துப் பேசுவார், எப்போதும் முக நூலில் தொடர்பில் இருப்பார்,  உடன் பிறந்த உறவுகள் தவிர்த்து அவருக்கு தனிக்குடும்பம் இல்லை. ஒண்டிக்கட்டைத்தான் 

3 மாதம் முன்பு பணித் தொடர்பில் சிங்கை வந்திருந்தார், தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தேன், இரண்டு நாட்கள் இருந்தார், முதல் நாள் மாலையும் அடுத்த நாள் மாலையும் சந்தித்துப் பேசினேன், ஒத்தையாளாக இருக்கிங்க சேமிப்பு கையிருப்பு வைத்துக் கொள்ளுங்கள், முடிந்தால் சொந்தமாக சிறிய வீடு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்றேன், கொஞ்சம் சேமிப்பு இருக்கு ஆனா வீடு வாங்கும் அளவுக்கு இல்லை, முயற்சிக்கிறேன் என்றார்.

நாள் தோறும் கல்பாக்கத்தில் இருந்து 40 நிமிட பைக் பயணம் செய்து வேலை செய்கிறேன் என்றார், இந்த வயதில் 40 நிமிட பயணம் நல்லது அல்ல, முடிஞ்ச அளவு சென்னையில் தங்கி வேலை பார்க்கலாமே என்றேன், தனிமையில் இருப்பதைவிட அண்ணன் வீட்டில் வசிப்பது மன நிறைவாக உள்ளது, அண்ணன் மகளுடன் பொழுது போகிறது என்றார்

புறப்பட்ட நாளில் விமான நிலையத்திற்கு டாக்சி பிடித்து அனுப்பினேன் போகும் போது மொபைலை தவறவிட்டுச் சென்றார், ஒருவழியாக டாக்சி ஓட்டுனரை தொடர்ப்பு கொண்டு திரும்ப போனைப் பெற்று அடுத்து சிங்கை வந்த வேறு நண்பர் மூலமாக சென்னைக்கு அனுப்பி வைத்தேன், பெற்று கொண்டு நன்றி தெரிவித்தார் 

அவர் சிங்கையில் இருந்து போன பிறகு ஒருமுறையாவது திரும்ப வரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருந்ததை நிறைவேற்றிக் கொண்டது போல் தெரிகிறது கடந்த அந்த இருநாள் பயணம், சிங்கையில் முன்பு பார்த்து, பார்க்க விரும்பிய கோயில்களை பார்த்து , சாப்பிட விரும்பிய உணவு கடைகளில் சாப்பிட்டு வந்ததாக சொன்னார் வேறு/மாறுபட்ட கருத்துகள் எனக்கும் அவருக்கும் இருந்தாலும் ஒரு வயது தான் வேறுபாடு என்றாலும் என்னை மரியாதையுடன் அழைத்து பேசுவார் 

நேற்று (06/ஜூலை/2017)அவரது உறவினர் அவர் மறைவு குறித்து முகநூலில் பகிர்ந்தது என் பார்வைக்கு டைம்லைனில் வந்தது, மாரடைப்பில் உயிர் பிரிந்ததாக குறிப்பிட்டு இருந்தனர், மேற்கொண்டு தகவல்கள் எதுவும் இல்லை

அவர் தற்போது இல்லை என்பது நம்புவதற்கு கடினமாக உள்ளது. பதிவுலகம் மூலமாக அவரை அறிந்தவர்கள் தொடர்பு கொண்டவர்களுக்கு தகவலாக இதனை இங்கு பதித்துள்ளேன்

நண்பரின் ஆன்மா அமைதியடையட்டும்
மார்ச் 2017ல் சிங்கை வந்திருந்த போது எடுத்தப்படம்

22 அக்டோபர், 2016

மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பற்றி !

பொதுவாக பாலியல் என்றாலே நம் சமுகம் முகம் சுளிப்பதால், உடல் உறுப்புகள் நூறு விழுக்காடு சரியுள்ளவர்களாலும் முழுதாக புரிந்து கொள்ள இயலாதவை பாலியல் தேவை, அவைபற்றி பருவ வயது ஆண்களுக்கு சொல்லித் தரத்தேவையில்லை, பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டியதே இல்லை என்பதே நமது சமூக நிலைப்பாடு, மாற்றுத்திறனாளிகளை மன அளவில் ஏனையோரைப் போல் தான் நடத்தவேண்டும் என்பதையே நாம் கற்றுக் கொண்டு அவர்களுக்காகக்கான தேவைகளை அமைத்துதருவது தான் அவர்களுக்கு செய்யவேண்டியவை என்று புரிந்து கொள்ளவே நமக்கு இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆகுமோ ?

ஆனால் மாற்றுத்திறனாளுக்கும் பாலுறவு வேட்கை உண்டு, அவற்றைப்பற்றிய தெளிந்த அறிவு, அவைகளுக்கான வடிகால் ஏற்படுத்தித்தருவது, அதற்கான பயிற்சிவகுப்புகள் (Sexuality for Disabilities) என்று ஐரோப்பியர்கள் எங்கேயோ சென்றுவிட்டார்கள், இன்னும் நாம் 'உன்னால முடியாத ஒன்றிற்கு ஆசைபடுவதே தவறு, விதி, முன்பிறவி வினை' என்றெல்லாம் கூறிக் கொண்டு அதற்கான சிந்தனைகளையே மறுக்கிறோம், நம்மைப் பொறுத்த அளவில் மாற்றுத்திறனாளியை விரும்பி மணம் செய்து கொள்பவர்களை தியாகி என்ற அளவில் உயர்த்தி வைப்பதுடன் மாற்றுத்திறனாளிகள் குறித்த சிந்தனையை வளர்க்க விரும்பவே மாட்டோம், எனது கல்லூரிக்கால நண்பர் ஒருவர், இளம்பிள்ளை வாதத்தில் கால்களில் ஒன்றில் திறனும் போதிய வளர்ச்சியும் இல்லாமல் வளர்ந்தவர், திருமணம் ஆகும் முன் 26 வயதில் அவரிடம் பேசும் போது 'எனக்கெல்லாம் எங்கேருந்து திருமணம் ? யாராவது உறவுக்காரர்கள் மனது வைத்து பெண் கொடுத்தால் உண்டு, அதற்கு நல்ல வேலையில் இருந்து கை நிறைய சம்பாதிக்க வேண்டும்...' என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார், பின்னர் அவருடைய உறவுக்காரர்கள் பெண் கொடுத்து அவருக்கு நல்ல உடல் நலத்துடன் ஆண்குழந்தை பிறந்து வளர்ந்துவருகிறது.

எதற்காக அவரைப்பற்றிக் குறிப்பிடுகிறேன் என்றால், யாராவது மனது வைத்தால் என்ற அளவில் தான் உடல்குறையுற்றோரின் குடும்ப வாழ்கையும் பாலியல் தேவைக்கான தீர்வும் கிடைக்கும், அனைவருக்கும் உடலில் இரத்தம் ஓடுவது போன்றே அவர்களுக்கும் பாலியல் தேவைகள், வேட்கைகள் இருக்கும், தயக்கங்கள் காரணமாக பெற்றோர்களால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில் அவர்களுக்கான அமைப்புகள் ஏற்பட்டால், அதன் மூலம் பாலியல் வேட்கையை தனித்துக் கொள்வது (தன்னின்ப வழி) அல்லது கட்டுபடுத்திக் கொள்வதற்கான பயிற்சி, உடலை வருத்திக் கொள்ளாமல் எளிய முறையில் எந்த கோணத்தில் (Positions) அவர்களுடைய வாழ்கை துணையுடன் உறவில் ஈடுபடலாம் என்பற்கான விளக்கங்கள் அல்லது செயற்கை பாலியல்கருவிகள் பற்றி அறிதல் , கூச்சத்தை ஒழித்து குறிப்பாக நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் அவர்களை அதுபோன்ற அமைப்புகளுக்கு அழைத்துச் செல்வதன் மூலம்  தான் அவர்கள் ஏனையோரைப் போல் மனத்தடை இன்றி வாழமுடியும்.

15 ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில யாகூ குழுமங்களில் (Yahoo Groups / Geo cities) Disabilities and Sexuality பற்றி நிறைய தகவல்கள், இணையப்பக்கங்கள் பேசின, ஆனால் அவைபற்றி இன்னமும் கூட நமது சமூகம் பெரிதாக அக்கறை கொண்டது போலவே தெரியவில்லை. நம்மிடம் இருக்கும் பெரிய மூட நம்பிக்கைகளில் ஒன்று எதையும் விதி என்று நம்பி அவற்றைப் பற்றி சிந்திக்க மறுப்பது தான், உடல்குறையுற்றோர்களுக்கு கண்டிப்பாக தனியறையும் தனிமையும் ஏனையோரை விடத் தேவையானதே. உடற்குறையுற்றோர் ஆணோ பெண்ணோ  திருமணமே அவர்களுக்கு கிட்டாத போது அல்லது அவர்கள் விரும்பாதபோது செயற்கை பாலியல் கருவிகள் (Sex Toys) அவர்களுக்கு கிடைக்கும் படி கடைகள் உருவாகவேண்டும், தற்காலத்தில் இணையம் வழி வாங்கிக் கொள்ள வசதிகள் வந்துவிட்டன ஆனாலும் இந்தியாவில் அவற்றை வாங்கிப்பயன்படுத்துவதற்கான தயக்கங்கள் நீங்குவதற்கு மாற்றுத்திறானிகள் அல்லாத பிறர் ஊக்கப்படுத்தினால், கூச்சங்களை கடந்து அவர்கள் வாங்கிப்பயன்படுத்திக் கொள்ள முடியும், இன்னும் கூட மணமாகாத விதவைகள் என்ற அளவில் மாற்றுத்திறானிகளை வைத்திருப்பதற்கும் நாம் தான் வெட்கப்பட வேண்டும்.

ஓரின சேர்கையாளர்களை அங்கீகரிக்காததால் அவர்கள் பேருந்து நிலைய கழிவறையில் அவர்களுகான ஆட்களைப் பிடிப்பது போல் மாற்றுத்திறானிகளின் பாலியல் தேவைபற்றி நாம் நினைக்க மறுத்தால் தவறான நபர்களை அவர்கள் நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்

தைவானில் தன்னார்வ குழுவொன்று கைகள் அற்றவர்களுக்கு சுய இன்பம் செய்துவிடுவதை தொண்டாகக் கொண்டுள்ளனராம், நம்மைப் பொறுத்த அளவில் அது முகம் சுளிக்கக் கூடிய செயல், ஆனால் அந்த சேவைகிடைக்கும் மாற்றுத்திறனாளிகளை பொருத்த அளவில் அந்த தொண்டூழியர்களின் கைகள் கடவுளின் கைகள், பாலியல் வேட்கை தீர்வு என்பதைவிட எல்லைக்கு அப்பாற்பட்ட அன்பை உணர்கிறார்கள், மனித மலத்தை அள்ள வைப்பதை முகம் சுளிக்காமல் அதுவும் ஒரு தொழிலாக ஏற்றுக் கொண்ட நம் சமூகம் இவற்றையெல்லாம்  அருவெறுப்பாக பார்ப்பதே நகைமுரண் தானே ?

வட இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாலியல் பயிற்சி வகுப்புகள், அமைப்புகள் உண்டு, தென்னிந்தியாவில் ஏற்பட்டது போல் தெரியவில்லை, தெரிந்தால் சொல்லுங்கள்

இணைப்புகள்:



http://workshop.sexualityanddisability.org/category/workshops/
http://www.sexualityanddisability.org/
https://en.wikipedia.org/wiki/Sexuality_and_disability
http://marius.sucan.ro/propaganda/sex-without-prejudice/

11 செப்டம்பர், 2016

முடவனும் கொம்புத் தேனும்...!

சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எண்ணிப் பாருங்கள், நான் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன், மனிதாபிமானம் / மனிதர் மீதான அன்பு என்ற கோட்டைத் தொட இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிகுதி, ஒரு சில தனிநபர்கள் மனிதாபிமான மிக்கவர்கள், அவர்கள் நாட்டின் பின்புலத்தால் வழிகாட்டலால் அவ்வாறு இல்லை, இயல்பிலேயே அவ்வாறு உள்ளவர்களாக இருக்கக் கூடும். எதோ ஒரு தனிமனித மனிதாபிமானச் செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதை நாட்டிற்கு பொதுவானதாக காட்டுவதற்கு / எடுத்துக் கொள்வது இயலாத ஒன்று, இதே கூற்றைத் தான் சாதி / மத ஆர்வமிக்கவர்கள் குறித்தும் நான் கூறிவருகிறேன், அதாவது ஒரு சாதியில் / மதத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் அது அந்த சாதி / மதத்தின் அடையாளமன்று, அது அவனின் தனித்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ அவனோ / அவனைச் சார்ந்தவர்களோ அதை சாதி மதப் பெருமையாக அடகு வைத்து அவனை முன்னிறுத்தி சாதி / மதத்தின் பிழைகளை மறைக்க முயல்கிறார்கள்.

*****

பொதுவாகவே இந்திய மனநிலையில் / மதவாதிகளின் மனநிலையில் ஊனம் என்பது கடவுளின் தண்டனை / முற்பிறவியில் செய்தவினை என்று பார்க்கப்படுவதால் குறிப்பிட்ட உடற்குறையுற்ற நபரின் இல்லத்தினர் தவிர்த்து உறவினர் உள்ளிட்ட ஏனையோர் ஏளனமாக பார்ப்பதும், பிணக்குகளின் போதும் 'அதான் உனக்கு/உன் குடும்பத்திற்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கானே, தெரிந்துமா ஆடுறே...?' ஒற்றை கேள்வியில் கூனிக்க்குறுக வைப்பர்.

உடைந்த பொருள்கள் என்றாலே அபசகுணம் என்று உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதைப்புடன் அதனை வீட்டில் இருந்து வெளியேற்றுவர், கடவுள் சிலை என்றாலும் உடைந்த்தால் அது குப்பைத் தொட்டிக்குத் தான், உடற்குறையுற்றோர் / திருநங்கைகள் எந்த இனக்குழுவிலும் / சமூகங்களிலும் உண்டு, ஆனால் இவர்களை பெருமைப்படுத்தும் புராணக் கதைகளோ, கடவுள் உருவங்களோ, மதரீதியான கதைகளோ சொல்லப்பட்டதே கிடையாது, இவர்களைப் பொருத்த அளவில் உடற்குறை என்றாலே அவமானம், அதனால் தான் குருடர்களை பார்க்க வைப்போம், முடவர்களை நடக்க வைப்போம் என்ற அற்புதங்கள் இங்குண்டு என்ற ரீதியிலெல்லாம் மதங்களை வளர்க்கிறார்கள், முடவர்களை பாதிரி ஆக்குவோம், முடவர்களை புரோகிதர் ஆக்குவோம், பார்வையற்றவரை இமாம் ஆக்குவோம் என்றெல்லாம் இவர்கள் என்றுமே கூற மாட்டார்கள், அவர்களைப் பொருத்த அளவில் 'ஊனம்' இறைவனின் தண்டனை, ஒருவேளை இறைநாடி இருந்தால் அவன் ஊனமில்லாது பிறந்திருக்கக் கூடும் என்றே அவர்கள் நினைக்கின்றனர்கள். மதங்கள் உடற்குறையுற்றோரையும் உங்களைப் போன்ற மனிதர்களாவே கண்ணியமாக நடத்துங்கள் என்று கூறவில்லை. ஒருவேளை கூறி இருந்ததால் அவர்கள் சமூகத்தில் தனித்து நடத்தபடமால் இருந்திருக்கக் கூடும்.

கைவிடப் பெற்றோர் தவிர்த்து உடற்குறையுற்றோர்கள் அனைவரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தங்களுக்கான வசதிகள் இல்லை, தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று தான் கூறிவருகின்றனர், ஊனமுற்றோர் தங்களின் மீது பரிதாபம் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதில்லை, எங்களால் என்னவெல்லாம் முடியும் என்று புரிந்து கொண்டு எங்களுக்கான வழிவகைகள் செய்துதரவேண்டும் என்று தான் கேட்கிறார்கள், அது உரிமை அல்ல, அரசுகள் பொது நிறுவனங்கள் செய்ய மறந்ததைத் தான் கேட்கிறார்கள்.

******

நான் சென்று வந்த நாடுகளில் உடற்குறையுற்றோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதில்லை, அவர்கள் வெளியே சென்றுவரும் வகையில் அரசுகள் பேருந்து வசதிகளில் அவர்கள் ஏறுவதற்கும், அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து தருகிறது, அனைத்து பேருந்துகளிலும் சர்கரநாற்காலி ஏறக்கூடிய வசதி உண்டு, ஓட்டுநர் சாய்தளம் அமைத்து அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருவார். உடற்குறையுற்றோருக்கான கைப்பிடிகளுடன் கூடிய மின்தூக்கி வசதிகள் உண்டு, பார்வையற்றவர்கள் மின்தூக்கி மற்றும் தொடருந்துகளை பயன்படுத்த அவர்கள் பாதங்கள் உணரக்கூடிய தனிப்பட்ட ஒற்றையடி பாதைகளை அமைத்திருப்பார்கள், யாருடைய உதவியுமின்றி அவற்றின் தடத்தை மிதித்துக் கொண்டே மின் தூக்கி அல்லது ரயில் கதவுகள் இருக்கும் இடத்தின் அருகே வந்துவிட முடியும், குறிப்பாக கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைகள் உள்ளது போலவே உடற்குறையுற்றோருக்கு தனி கைப்பிடிகளுடன் கூடிய கழிவறைவசதிகள், அதனுள் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அழைப்பு பொத்தான்களும் இருக்கும்.

ஆனால் இந்திய மனநிலையில் உடற்குறையுற்ற ஒருவர் வீட்டில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாலும், 'உன்னால தான் முடியலையே, நீ எல்லாம் எதுக்கு இப்படி ஆசைப்படுறே, எங்களையும் ஏன்படுத்துறே...'ன்னு பட்டென்று சொல்லிவிடுவார்கள், இதுக்கு காரணம் நாம காலம் காலமாக உடற்குறையுற்றோர் குறித்து கேட்டுவந்த பழமொழிகள் தான், உடல்குறையுற்றோர்கள் என்றால் மற்றவர்கள் போல் அவர்கள் ஆசைகள் வைத்திருக்கக் கூடாது, இதுதான் தலைப்பு 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ?' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ?' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா ? எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு ? தேன் சாப்பிடுவது நாக்கு தானே...?

கண்ணு தெரியாத கபோதி... கவனக்குறைவாக உள்ளவரை திட்டுவதற்கு அவருக்கு இல்லாத ஒரு உடல் குறையை ஏளனாமாக பயன்படுத்துகிறோம், செவிடன் காதில் ஊதிய சங்கு > காதுகேளாதவர் என்று தெரிந்தும் சங்கு ஊதிப்பார்ப்பவன் தானே மடையன், காதுகேளாதவருக்கு சங்கின் ஒலி ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ? சொன்னதை செய்யாதவர்களை இழிக்க செவிடன் காதில் ஊதியது / ஓதியது என்று சொல்வது என்று ஊனமுற்றோர்களை ஒழிங்கினக் குறியீடுகளாகவே நாம் கேட்டுவந்திருக்கிறோம், அதனால் நம் மனநிலையில் அவர்களை நம்மில் ஒருவராக பொதுவானவர்களாக பார்க்கவே முடியவில்லை.

வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சாதிப்போம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே தாண்டலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தங்கவேலு, தங்கவேலுவின் சாதனை மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதுடன், அவர்கள் யார் உதவியுமின்றி வெளி இடங்களுக்கும் சென்றுவரும் வசதி வாய்ப்புகளை பெருக்கித்தரும் என்று நம்புகிறேன். 

உடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழிகளையும் ஒழித்து அவர்களை தலை நிமிர செய்வோம்.

5 செப்டம்பர், 2016

வலைப்பதிவுகள் குறைந்து வருவது ஏன் ?

வலைப்பதிவுகள் வளர்ச்சி குறைந்ததற்கு முகநூல் மற்றும் வாட்ஸப் உள்ளிட்டவற்றின் வளர்ச்சி என்பது மேம்போக்கான கருத்து மட்டுமே

உண்மையில் மொபைல் இயங்குதளம் வந்தபிறகு ஒவ்வொருவரின் மடிக்கணிணி மற்றும் மேசை கணிணி பயன்பாடு குறைந்துவிட்டது, என்னேரமும் மொபைல் மற்றும் ஆப்சுகள் கையில் இருப்பதால் முகநூல் மற்றும் வாட்ஸப் பயன்பாடுகள் எளிதானது, பொதுவாகவே நாம எல்லோருமே சோம்பேரிகளே, எது வசதியோ, எளிதானதோ அதைத்தான் பயன்படுத்துவோம்

வலைப்பதில் எழுத மொபைல் பயன்படுத்துவதும் அதன் ஒருவிரல் தட்டச்சும் போதுமானதாக இல்லை, ஒரு வலை இடுகை எழுத 5-10 நிமிடம் பிடிக்கும், ஒற்றைவிரலால் அதை தட்டச்சுவது அயற்சி (boring) ஏற்படுத்தும், இந்த காரணங்களினால் வலைப்பதிவில் எழுதுவது வதைதான்

மற்றபடி முகநூல் வலைப்பதிவுகளுக்கு ஆப்பு வைக்கவில்லை, வைத்தது ஆப்பிள் மற்றும் ஆண்டராய்ட் செயலிகளே, கூடவே நம் சோம்பேறித்தனமும், தற்போது வலைப்பதிவில் எழுவதை சூழல் என்னும் காரணி பங்குவகிக்கிறது, முதலில் விசைப்பலகையுடன் கூடிய கணிணி மற்றும் ஒரு இடத்தில் அமர்வதற்காக நேரம் ஒதுக்குவது, இதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டது

வலைப்பதிவுகள் மொபைல் ஆப்சுகளால் எளிமைபடுத்தபட்டால் மீண்டும் எழும், பிரபலங்களைத்தவிர என்னதான் எழுதினாலும் வலைப்பதிவின் வீச்சுகளை முகநூல் தந்துவிடாது

வலைபதிவுகள் திரட்டிகள் ஆப்சுகளுக்கு மாறி சரிசெய்து கொண்டால் வலைபதிவுகள் வளர்ச்சியுறும், இல்லை என்றால் ஜெமோ சொன்னது போல் வலைப்பதிவர்கள் வெறும் புற்றீசல்கள் தான் அவர்களால் தொடர்ந்து எழுத முடியாது என்ற கூற்று உண்மையாகிவிடும், நாம எழுத தற்போதைய கட்டுப்பாட்டில் முதன்மையானது மொபைல் தொழில் நுட்பமே

வலை எழுத்தை கைவிட்ட பின் தலைக்கு பின்னால் இருந்த ஒளிவட்டங்கள் மங்கி வருவதை பிரபலபதிவர்கள் உணர்ந்துவருகிறார்கள்,

உண்மை தானே ?

இதை ஒருவிரலால் தட்டச்சவே தாவு தீர்ந்துவிட்டது, இந்த அளவு தட்டச்ச விசைபலகையில் ஐந்து நிமிடம் என்றால் இதை மொபைலில் நான் 25 நிமிடம் தட்டச்சினேன் :(

இன்னமும் வலைப்பதிவில் எழுதுபவர்களில் 90 விழுக்காட்டினர் தங்கள் பதிவுகளை விசைப்பலகை வழியாக தட்டச்சிப் போடுவதினால் தான் அவர்களால் தொடர முடிகிறது. விசைப்பலகையை பயன் குறைந்து பற்பயன் (ஸ்மார்ட் ஃபோன்) பேசிக்கு அனைவருமே மாறிவிட்டால் நீண்ட பதிவுகளை எழுதுவது இயலாததாக ஆகிவிடும், தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்.

*****

பழைய வலைப்பதிவர்கள் எழுதுவதற்கு ஆர்வமாக உள்ளனர், ஆனால் எழுதும் சூழல் மாறிவிட்டதால், இரண்டு வரி டிவிட்டர், கூகுள் + மற்றும் முகநூல்களில் படங்கள் மற்றும் ஐந்துவரிகளுக்கு மிகாமல் இரண்டு மார்க் கேள்விக்கான விடைகள் போன்று சுருக்கிக் கொண்டனர், நான் வலைபதிவில் எழுதவில்லை ஆனால் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 10K டிவிட்டுகளை எழுதிவந்துள்ளேன். நான் மடிக்கணிணியை தொட்டே இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.

வலைப்பதிவு திரட்டிகள் போன்று முகநூல் பதிவு திரட்டிகள் வந்தால் தமிழ் சமூக எழுத்து ஆர்வலர்களை ஒன்று திரட்ட முடியும், அப்படி இருந்தாலும் நீளமான கட்டுரைகளை கண்டிப்பாக மொபைலில் தட்டச்ச முடியாது.

வலைப்பதிவை இன்னார் தான் படிக்க வேண்டும் என்று மறைக்க முடியாது. வலைப்பதிவு கட்டற்ற ஊடகம், முகநூல், கூகுள் + இவற்றிற்கு மாற்றாக வரமுடியாது, தொழில் நுட்பங்கள் நம் வசிதிக்காக மாறிக் கொண்டே இருக்கும், ஒருவிரலால் தட்டச்ச முடிவதில்லை என்ற சூழல் வரும் போது அதற்கும் மாற்றுவரும், நம் சோம்பேறித்தனத்தை கைவிட்டால் வலைப்பதிவில் நின்று ஆடலாம், ஏனெனில் வலைப்பதிவுகள் போன்று முகநூல் பலதரப்பு நண்பர்களை பெற்றுத் தராது.


4 செப்டம்பர், 2016

தெரியாமல் போய் இருக்கலாம்...

முன்பெல்லாம் அலைபேசிகள் இல்லாத காலத்தில் அலுவலகம் வழியாக பழகிய நண்பர்களை அந்த அலவலகத்தின்  தொடர்பு முடியும் போது கிட்டதட்ட முடிந்துவிடும், நெருக்கமான நண்பர்கள் ஒருவருக்கொருவர் இல்லம் வரையிலான அறிமுகம் கிடைக்கப்பெற்றவர்கள் என்றாவது ஒரு நாள் மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்.  பேச்சிலராக இருந்த காலகட்டத்தில் நம்முடன் பழகிய நண்பர்கள் எத்தனையோ அதில் ஒரு சிலரை என்றாவது பார்ப்போம் என்று நம்பிக்கைகள் மட்டும் இருக்கும், தற்போது போன்று முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்கள் சாராத காலத்தில் தொடர்பறுந்த நட்பை தொடர்வதற்கான வாய்ப்புகள்  மிக அறிது, அப்படியும் பார்க்க நினைக்கும் நண்பர்கள் முகநூல் கணக்கு துவங்கி இருப்பார்களோ என்ற ஊகத்தில் எதிர்ப்பார்ப்பில் அவ்வப்போது ஊர் பெயர், இனிசியல், தந்தை பெயர் மற்றும் நண்பர் பெயர், பள்ளி கல்லூரி, முடித்த ஆண்டு, வேலை பார்த்த இடம் என்ற குறிச் சொற்களாக தேடித் தேடி சிலரை கண்டுபிடித்து 15-20 ஆண்டுகள் கழித்து மீண்டும் அவர்களைத் தேடிச் சென்று கட்டிப்பிடித்து மகிழ்ந்ததுண்டு.

என்னுடன் வேலை பார்த்த நண்பர் ஒருவர் பெயர் சவுரி ராஜன்,  1989 வாக்கில் ஒன்றாக வேலை செய்திருந்தோம், சென்னையில் பல இடங்களில் ஒன்றாக சுற்றி வந்திருக்கிறோம்,  பிறகு 1989 - 97 வரையில் அவர் வேலை செய்த இடத்திற்கு நானோ அல்லது நான் வேலை செய்யும் இடத்திற்கு அவரோ சென்று ஆண்டுக்கு ஒருமுறையேனும் சந்தித்துக் கொள்வோம், நான் சிங்கை வந்த பிறகு அவருடன் முற்றிலும் தொடர்பு அறுந்து போனது, அதற்கு முன்பே அவருக்கு திருமணம் ஆகிவிட்டது, என்னுடைய அன்றைய சூழலில் என்னால் அவரின் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை, அதற்கும் முன் ஒருமுறை அவர் அரும்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது அவர் தங்குமிடம் இருக்கிறேன், அவரே அப்போது அழைத்துச் சென்றதால் எனக்கு முகவரியும் தெரியாது, 97 க்கு பிறகு முற்றிலும் தொடர்பு அறுந்துவிட 2013 வாக்கில், பதினைந்து ஆண்டுகள் கழித்து எதற்கும் பழைய அலுவலகம் இணைய தளம் (http://kores.in/) துவங்கி இருந்தால் ஒருவேளை அதில் தொடர்பு எண்கள் எதேனும் இருக்கும், முயற்சித்துப் பார்ப்போம் என்று முடிவு செய்து அலைத்தால் நண்பர் தற்போதும் அதே நிறுவனத்தில் மதுரையில் பணிபுரிவதாக சொல்லி அலைபேசி எண்ணைக் கொடுத்தார்கள்,  அலைபேசியில் பேசிவிட்டு, தமிழகம் சென்ற போது அவரைப் பார்க்க வேண்டும் என்றே மதுரைக்குச் சென்றேன், என்னை இரயில் நிலையத்திற்கு வந்து அழைத்துச் சென்றார்.

15 ஆண்டுகள் ஆகிவிட்டதே நான் இன்னும் பழைய நண்பராகவே நினைக்க, 'சிங்கப்பூர்' பின்புலத்தில் இருந்து வந்ததால் என்னை பழைய படி டா போட்டு அழைத்துப் பேச நண்பர் தயங்கி 'ங்க' போட, நாய செருப்பால் அடி என்று நான் கடிந்து கொண்டு உரிமையில் ஒருமைக்கு மாறி இயல்பாக பேச அன்றைய பொழுது இருவரும் விடுபட்ட கதைகளை பேசிக் கொண்டோம், நான் மதுரையில் இருக்கேன், குடும்பம் சென்னையில் இருக்கிறது சென்னைக்கு வரும் போது சொல்லு நான் உன்னை வீட்டுக்கு கூட்டிச் செல்கிறேன் என்றார், பிறகு பிரியா விடைபெற்றோம்,  அதன் பிறகு ஒரு சில முறை நான் சென்னை செல்லும் போதெல்லாம் அழைத்துப் பேசுவேன், ஒரு முறை சென்னையில் இருந்தார், வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார், ஆனால் அன்றைக்கு அடைமழை சாலைகள் போக்குவரத்து இடையூறு என்று அவரது குடும்பத்துடன் எனது சந்திப்பு இயலாமல் போய்விட்டது

பிறகு சென்ற ஆண்டு மே மாதம் மும்பை சென்றிருந்த போது அங்கிருந்தே அவருக்கு அலைபேசினேன், மும்பையில் பணிபுரிந்த அனுபவம் அவருக்கு இருந்தபடியால் எனக்கு உணவு மற்று சுற்றிப் பார்க்கும் இடம் குறித்து நிறைய தகவல்கள் சொன்னார், இப்ப சென்னைக்கே மாற்றலாகி வந்துவிட்டேன், சென்னை வரும் போது சொல்லுடா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன் என்றார்.   

பிறகு ஜூன் மாதம் திரும்பவும் மும்பை சென்றிருந்தேன், அங்கிருந்தே அவரது அலைபேசிக்கு அலைத்தேன், எதிர் முனையில் வயதான பெண்குரல், நீங்க யார் பேசுகிறீர்கள் ? அவரை எப்படித் தெரியும் போன்ற அனைத்துவிவரங்களையும் கேட்டுவிட்டு 'அவர் (சவுரிராஜன்) சென்ற வாரம் மாரடைப்பால் இறந்துவிட்டார்' நான் அவங்க மாமியார் தான் பேசுகிறேன், என் பொண்ணு (நண்பரின் மனைவி) அழுதுகிட்டே இருக்கா ஒருவாரமாக சரியாக சாப்பிடவில்லை... அவர் பையன் +12 படிக்கிறான், சரியாகவே படிக்கமாட்டேன்கிறான், என்ன செய்றது என்றே தெரியவில்லை என்று கலங்கிய குரலில் கூறினார். சென்னை வந்தால் வீட்டுக்கு வருகிறேன் என்று கூறி  மற்றொரு அலைபேசி எண்ணையும் கேட்டு வாங்கினேன்

கேட்க கேட்க நாம் ஒருவேளை அவரை சந்திக்காமலே இருந்திருக்கலாமோ? இ(ப்ப)டியான தகவலைக் கேட்கவா 15 ஆண்டுகள் கழித்து அவரை தேடிக் கண்டுபிடித்தேன், ஒருவேலை தொடர்பு கொள்ளாமல் இருந்திருந்தால் இன்னும் என் நினைவில் எங்கு வாழ்ந்து கொண்டிருப்பாரோ ? 

நண்பர் குடும்பத்தை இதுவரை சந்தித்தே இல்லை, அலைபேசி எண்ணை அழைத்து அவர் வீட்டுக்கு சென்று அவர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி அவரைப் பற்றி கேட்டு ஆறி இருக்கும் புண்ணை கிளறிவிடுவது என்பது தவிர்த்து என் அறிமுகம் அவர்களுக்கு எந்த பயனும் அளிக்காது என்பதால் நான் அவர் விட்டுச் சென்ற குடும்பத்தை சந்திக்க செல்லவே இல்லை

நான் என்ன செய்திருக்க வேண்டும் ?

நேற்று எழுதிய பதிவின் பின்னூட்டத்தில் பதிவர் இராஜ நடராஜன் மறைவு குறித்து வரூண் குறிப்பிட்டு இருந்தார்,  இராஜ நடராஜன் மறைவு கூட எனக்கு தெரியாமலே போய் இருக்கலாம், என்றாவது சந்திக்க முடியும் என்ற எண்ணிக் கொண்டிருந்த பதிவர்களில் அவரும் ஒருவர், என்னைப் போல் பலருக்கும் பிடித்தவர், காற்றுக் குமிழி போல் வண்ணங்களை காட்டி மறைந்துவிட்டார் :(



2 செப்டம்பர், 2016

உள்ளேன் ஐயா

2012 வரை ஓடிக் கொண்டிருந்த வலைப்பதிவு வண்டி பிறகு சுணக்கம், எனக்கு அதன் பிறகு வேலை மாற்றம், முன்பு போல் பணியிடையில் ஊதியத்துடன் வலைப்பதியும் நல்வாய்ப்பு பிறகு ஏற்படவில்லை, கிட்டதட்ட அதே காலகட்டத்தில் வாட்ஸப், முகநூல் என்று சமூக ஊடக பதிவர்கள், வாசிப்பவர்கள் பயணத்தை விரிவுபடுத்திக் கொள்ள, வலைப்பதிவில் பதிவுகள் எழுதி திரட்டிகளில் சேர்ப்பது குறைய, திரட்டிகளின் வளர்ச்சிகளும் நின்றுவிட்டதற்கு தமிழ்மணமும், பிற திரட்டிகளுமே சாட்சியாக நிற்கின்றன

என்னுடைய முக நூல் பக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பே கணக்கு துவக்கப்பட்டாலும் 2010க்கு பிறகு அவ்வப்போது பயன்படுத்திவர அதில் நண்பர்களாக இணைந்து / இணைத்து இருப்பவர்கள் 80 விழுக்காடு வலைப்பதிவில் நான் முழுமூச்சாக இயங்கி வந்த காலத்தில் இயங்கியவர்கள் தான். வலைப்பதிவின் வழி எனக்கு கிடைத்த நண்பர்கள் வட்டம் மிகப் பெரியது, நாட்டு எல்லைகளை கடந்தது.

வலைப்பதிவர் அல்லாத முகநூல் நண்பர்களின் வட்டத்தில் பெரும்பாலும் உடன் வேலை செய்பவர்கள், அவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என்ற அளவிலும் விருப்ப அடைப்படையில் சில குழுக்களில் இணைந்து இருப்பவர்களாக உள்ளனர், ஆனால் என்னைப் போன்ற பதிவர்களின் முகநூல் பலதரப்பட்ட நண்பர் வட்டம் கிடைக்கப்பெற்றவர்களால் முக நூலிலும் நல்ல விவாதப் பதிவுகளையும், வாசிப்பு அனுபவம் தரும் கட்டுரைகளை படைக்கின்றனர்.

அறிமுகமில்லாதவர்களை முகநூலில் இணைத்து அவர்களுக்கும் பிடிக்கும் படி எழுதுவது என்பது நடைமுறையில் வாய்ப்பற்றது, முக நூல் பிரபலங்களுக்கு ஏற்ற ஒரு சமூக வலைதளம், முக நூல் திரட்டி போன்ற அமைப்பில் திரட்டித் தரப்படாததால் யாராவது அறிமுகப்படுத்தினால் அல்லது விருப்பக் குறி(லைக்) இட்டிருந்தால் மட்டுமே அது நம்முடைய நேரவரிசை( டைம்லைன்)க்கு வரும், மற்றபடி ஒரு கட்டுரையை எழுதிவிட்டு வலைப்பதிவு போல் எல்லோரையும் அடையும்படி செய்வது இயலாது என்பதால், இன்னமும் நான் வலைப்பதிவுகளில் எழுதுவதை வரவேற்கிறேன்.

வலைப்பதிவில் எழுதும் போது எழுத்து சமரசம் (யார் என்ன நினைபபார்கள்) தேவையில்லை,  நமது எண்ண ஓட்டம் எழுத்துகளில் வெளிப்படும் என்பதால் குறிப்பிட்ட காலம் எழுதிவந்தாலே ஒத்த சிந்தனை உள்ள நண்பர்களால் புதிய நட்புகள் உருவாகுவது மிகவும் நேர்த்தியாக இயற்கையாக வலைப்பதிவுகளால் ஏற்பட்டுவிடும்.

என்னைப் பொருத்த அளவில் நான் எழுதுவதை எழுத விரும்பி கோர்வை வராதவர்கள், சொல்லத் தயங்குபவர்கள் தனிப்பட்ட முறையில் என்னை பாராட்டுவதுண்டு,  என்னுடைய மதவாத எதிர்ப்பு மூட நம்பிக்கை பதிவுகளை பாராட்டியவர்கள் 99 விழுக்காடு எதாவது ஒரு மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களே, அவர்கள் சொல்லத் தயங்குவதை மென்று விழுங்குவதை, தொண்டையில் நிற்பதை சிலர் எழுதும் போது அவர்கள் அதை பாராட்டவே செய்வார்கள்.

கொஞ்ச நாள் முகநூல் மற்றும் வாட்சப்புகளில் சிக்கிக் கொண்டுள்ளவர்கள் ஓவர் டோஸ் அல்லது திகட்டியதும் வலைப்பதிவு போன்ற கட்டுபாடுகளற்ற ஊடகத்தை திரும்பவும் நாடுவார்கள் என்றே நம்புகிறேன்

முடிந்த அளவிற்கு வலைப்பதிவுகளில் நானும் அவ்வப்போது தலைகாட்டலாம் என்றே உள்ளேன். ஆனால் அது 'திரும்பி வந்துட்டேன்னு சொல்லு' என்ற அளவுக்கெல்லாம் முழுமூச்சாக இருக்காது :)



Once Again

6 அக்டோபர், 2015

மும்பையின் வியப்புகள் !

மும்பைக்கு அலுவலக பயணமாக மும்முறை கிட்ட தட்ட 60 நாட்கள் நாரிமன் பகுதியில் உள்ள ட்ரைடென்ட் விடுதியில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தி தெரியாமல் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன் என்று சொல்லும் திராவிட எதிர்ப்பு மற்றும் இந்தி ஆதரவு தூற்றிகள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. 

60 நாட்கள் தங்கியதில் முதல் 15 நாட்களுக்கு வாடகை உந்துகளில் தனித்து சொல்ல நேரிடிகையில் செல்லும் இடம் குறித்தும் இறங்கும் இடம் குறித்தும் 
விளக்கிச் சொல்ல கடினமாக இருந்தது, அது நமக்கு ஆங்கிலம் தெரியாத வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏற்படும் அனுபவம் போன்றது தான், ஆனால் அடுத்த 15 நாட்களில் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து ஓரளவு இந்தியில் தெரியும், தெரியாது, இங்கே அங்கே, அதற்கு பக்கத்தில் (ஏர் இண்டியாகா பில்டிங்கே பாஸ்) என்ற அளவுக்கு இந்தி புலமை வந்துவிட்டதால் பிறகு வாடகை உந்திகளில் எங்கும் செல்லவும் தயக்கமின்றி சென்று வந்தேன். எந்த மொழியையும் ஊட்டவேன்றுமென்ற தேவையில்லை, அந்த மொழியை மதித்து அவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலே குறிப்பிட்ட மொழி பேசும் நகரத்தில் தங்க நேறும் பொழுது 6 மாதங்களுக்குள் நன்றாகவே பேச முடியும். இந்த திறமை யற்றவர் எவ்வளவு தான் ஒரு மொழியை படிப்பின் வழி திணித்தாலும் பேச கற்றுக் கொள்ளாவே முடியாது. ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஆங்கில வழி கல்வி கற்பவர்களாலும் கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன் சரளமாக ஆங்கிலத்தால் பேசமுடியும் ? தயக்கமின்றி பேசி பயிற்சி எடுத்தால் மட்டுமே கல்வியாக கற்ற எந்த மொழியையும் பேச முடியும், 


இந்தி கற்றுக் கொடுத்திருந்தால் நாங்கள் வடநாட்டுக்காரனிடம் அசிங்கப்பட்டிருக்கமாட்டோம் என்று மொழியியில் அறிவின்றி கூறுவோரைக் கண்டால் திராவிட இயக்கங்களைத் திட்டும் பாவம் பைத்தியம் என்றே எனக்கு நினைக்கத் தோன்றும். கொத்து வேலைக்கு வடநாட்டுக்கு செல்லும் தமிழக கூலிகள் எந்த பள்ளியில் படித்து அங்கே இந்தி பேசக் கற்றுக் கொள்கிறார்கள், பிழைக்கும் வழிக்கு அங்குள்ள மொழியின் முக்கிய தேவை என அறிந்தோர் ஆர்வத்தினால் கற்றுக்கொள்வர், 

மலேசியாவில் முடித்திருத்தும் வேலைக்கு வருபவர்கள், மூன்று மாதங்களில் மலாய் பேசுகிறார்கள், எந்த பள்ளியில் படித்து கற்றுக் கொண்டார்கள் ? 

**********

மும்பை என்றதும் இரயில் வெடிகுண்டு வெடிப்புகளும், அண்மையை ஆண்டில் நிகழ்ந்த தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு நிகழ்வுகளும் தவிர்க்க முடியாதவை, மும்பையை பொறுத்த அளவில் இந்த நிகழ்வுகளால் இந்திய இந்து இஸ்லாமிய சமயத்தினரிடையே கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை பிரித்துள்ளதை உணர முடிகிறது, அங்குள்ள இந்துக்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது இஸ்லாமியர்கள் குறித்து அவர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் இருப்பதாக நினைக்கவே முடியவில்லை, ஒரு 7 விழுக்காட்டு மக்கள் அவர்களால் தான் இங்கே பிரச்சனை என்பதாக குறிப்பிடுகிறார்கள், பெருகும் பிள்ளையார் ஊர்வலங்கள் அவர்கள் சொல்வதை மெய்ப்பிப்பதாகவே காணமுடிகிறது. இந்துக்களின் பலம் என்பது இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பினால் கட்டப்பட்டுள்ளது. 


வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மாநில ரீதியான எதிர்ப்புகளை சமாளிக்க இந்துப் போர்வை அவர்களுக்கு தேவைப்படுவதால் அவர்களின் ஆதரவுகளினால் அவை அணையாத நெருப்பாக காக்கப்படுவதை யாகூப் மோனன் தூக்கில் இடப்பட்ட நிகழ்வுகளினால் உறுதி செய்யமுடியும், எந்த ஒரு ஊடகமும் யாகூப் மோமனின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்ப முன்வரவில்லை, மாறாக புறக்கணித்தன.


இவற்றை அரசியல் சமூக ரீதியில் நான் பார்த்தாலும் மும்பையின் மாறுபட்ட முகமாக வேறு சிலவும் என் கவனத்தை ஈர்த்தது, இந்திய நகரங்களில் பொதுக்கழிவறைகள் நிறைந்த நகரம், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களை காண்பது அரிது. பொதுக்கழிவறைகளில் சிறுநீர் கழிப்பதற்கு கட்டணங்கள் கிடையாது, ஒரு பொதுக்கழிவறை இருந்தால் அங்கு அருகே நடைபாதை வாசிகளின் கூடாரங்களை காணமுடியும். அவர்களுக்கு கழிப்பறை, குளியல் அறை எல்லாமே பொதுக்கழிப்பிடம் தான். 

வேறெந்த நகரங்களைவிட கொசுக்கள் மும்பையில் குறைவே, மாலை ஏழுமணிக்கு மேல் திறந்த வெளியில் நின்றாலும் கொசுத் தொல்லைகளை உணரமுடியவில்லை, அவ்வளவு பெரிய நகராட்சியில் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மும்பையின் சிறப்பு, மீட்டருக்கு மேல் பணம் கேட்கும் வாடகை உந்திகளின் நச்சுக்கள் மிகக் குறைவு.

வெறெந்த நகரங்களைவிட சிலெம் எனப்படும் சேரிப்பகுதிகள் மும்பையில் மிக மிக அதிகம், மும்பையில் மொத்த மாக 50 சேரிகளுக்கு மேல் உண்டு, சேரிகளின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத ஒன்று, காரணம் மும்பைக்கு தேவைப்படும் கூலியாட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுவதால் சேரிகளின் எண்ணிக்கையும் மிகும், மும்பையின் வீட்டுமனைகளின் விலைக்கு குறைந்த கூலி வாங்குபவர்களால் வாடகைக்கு வீட்டின் ஒரு அறைகூட எடுக்க முடியாது, கூலியாட்களை அல்லது வேலைக்கு ஆள் எடுக்கும் எந்த நிறுவனமும் தங்குமிட வசதி எதுவும் செய்து தராததால் அவர்களின் புகலிடம் சேரிதான், அதற்குள்ளும் இடம் கிடைக்காத நிலையில் நடைபாதையில் டெண்ட் அடித்து தங்கிவிடுவார்கள், குடும்பம் குடும்பமாக மும்பையின் வணிக தளமான நாரிமன் பகுதியிலும் கூடாரங்களை பார்க்க முடிகிறது, அவர்களை அப்புறப்படுத்தவும் முடியாது, அவ்வாறு செய்தால் அந்த பகுதியில் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காது.

மும்பை போன்ற மாநகரங்களில் சேரிகளும் கூடாரங்களும் தவிர்க்க முடியாதவை, என்னைக் கேட்டால் அவைகள் நகரத்தின் ஒரு அங்கம் அதற்காக முகம் சுளிக்கத் தேவை இல்லை. சேரிகளை பார்த்து முகம் சுளிப்பவர்கள் நகரங்களில் சேரிகளுக்கான தேவை ஏன் வந்ததது என்று நினைத்தால் சேரிகளில் வசிப்பவர்களின் இன்னல்களுக்காக பரிதாபப்படுவார்கள்.

மும்பை வெடிகுண்டு வெடிப்பினால் பல உயிர்கள் பலியாகி இருந்தாலும் பல கோடிகள் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் எந்த நகரத்தையும் விட பாதுகாவலர் பணிக்கு மிகுந்த அளவில் ஆட்களை வைத்திருக்கும் நகரம் மும்பை தான், எந்த ஒரு கட்டிடங்களில் பாதுகாவலர்களின் சோதனைகளை கடக்காமல் நுழைந்துவிட முடியாது, கிட்டதட்ட 25 லட்சத்திற்கும் மிகுதியானவர்கள் குறைந்த படிப்பு படித்தவர்கள் பாதுகாவலர் உடையணிந்து ஆண் பெண் இருபாலரும் பணியில் இருக்கின்றனர், எந்த ஒருநிறுவனமும் லாபத்தில் 5 - 10 விழுக்காடு பாதுகாப்புகளுக்காக செலவிடுகிறது. மும்பையில் வெடிகுண்டே வெடிக்காமல் அமைதியாக இருந்திருந்தால் படிக்காத அல்லது குறைந்த படிப்பு படித்த 25 லட்சம் பேருக்கு மிகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் என்பதை அரசாங்கமோ தனியாரோ ஏற்படுத்தி கொடுத்திருக்க முடியுமா ? 


நான் மும்பை வெடிகுண்டு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் ஆக்கப்பூர்வமான பின் விளைவுகளைப் பார்த்து உண்மையில் வியந்தேன், லாபத்தில் முழுவதையும் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் நிறுவனங்களி 5 - 10 விழுக்காட்டை பாதுகாப்புக்கு கட்டாயமாக செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, நகரத்தில் வேலை வாய்ப்பை கூட்டும் ஒரு கூறுகாக அமைந்துள்ளதை முற்போக்கான மனநிலையில் தான் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்கிறது என்பதால் அங்கு சமூகம் சார்ந்த திருட்டு குற்றங்கள் குறைவு தான்,  இரயில் பிதுங்கி பயணம் செய்தாலும் பிக்பாக்கெட் திருட்டுகள் அரிது தான், சிக்கியவன் செத்துவிடுவான் அது வேற ஆனாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் திருட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் சோம்பேரிகளாகவும் உழைக்க விரும்பாதவர்களாகவும் தான் இருக்கக் கூடுமே தவிர வேலை கிடைக்காதவர்கள் என்ற வாய்ப்பு மும்பையில் இல்லை.

வெங்காயமும் உருளை கிழங்கும் உற்பத்தி நின்றால் மிகுதியாக பாதிக்கப்படுவது மும்பை வாசிகளாக இருக்கக் கூடும், அவர்களின் அன்றாட உணவுகளில் அவை இல்லாத நாட்களே இல்லை, வெறெந்த நகரங்களைவிட மும்பை பெண்கள் ஆண்கள் குறித்து அச்சப்படுவதில்லை, பொது இடங்களில் அவர்கள் புகைப்பதை பார்க்க முடிகிறது, ஆடைகளும் விரும்பிய அளவிற்கு அணிகிறார்கள், பெரிதாக யாரும் அவற்றை வெறித்துப் பார்ப்பதும் இல்லை, குடியகத்திற்கு (பப்) வருகிறார்கள், சேர்ந்தும் குடிக்கிறார்கள், ஆண் பெண் சமநிலை மும்பையில் பேணப்படுகிறது.

மும்பை அனைத்துலக விமான நிலையம்  உள்கட்டமைப்பும் சேவைகளும் சர்வதேசத் தரத்துடன் உள்ளது.


மும்பையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிக்க நேரிடுபவர்களால் மும்பையை விட்டுச் செல்ல முடியாது, அவர்களை எல்லா விதத்திலும் மும்பை ஈர்த்துவிடும் அம்சம் மும்பையில் உண்டு. வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் தவிர்த்து மும்பையில் இயல்பு வாழ்க்கைக்கான தனிமனித பாதிப்புகள் வெறெந்த இந்திய நகரங்களைவிட குறைவே.

29 மார்ச், 2015

சிங்கப்பூர், திரு லீ குவான் யூ அவர்களின் இறுதி நிகழ்வு !

உலகத்தில் எந்த ஒரு மக்கள் தலைவருக்கும் இல்லாத நற்பெயரும் புகழும் திரு லீ குவான் யூ விற்கு மட்டும் எப்படி ? மற்றவர்களைவிட இவர் எந்தவிதத்தில் மாறுபட்டவர் ? என்று கேள்விக்கு சிங்கப்பூரின் மேம்பட்ட பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்க்கைத் தரம், தனிமனித உரிமை விடையாக கூறிவிட முடியும். எத்தனையோ உலக தலைவர்கள் தங்கள் மக்களின் விடுதலைக்காக போராடி பெற்று தந்திருக்கிறார்கள், சேகுவாரா, லெனின், மாசேதுங், மார்டின் லூதர்கிங், அண்ணல் காந்தி மற்றும் மண்டேலா போன்றோரை எடுத்துக்காட்ட முடியும், ஆனால் அவர்களுக்கெல்லாம் இல்லாத தனிச் சிறப்பு திரு லீ குவான் யூவிற்கு இருக்கிறது, அவர்களெல்லாம் போராளிகள், இவர் போராளி மட்டுமின்றி பொருளாதார மேதையும் கூட.

1963-1965 காலகட்டத்தில் மலேசியாவின் மாநிலமாக இணைந்திருந்து, பின்னர் மலேசிய அரசிடம் தங்களுக்கு கூடுதல் முதன்மைத்துவம் அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டு, அவை நிராகரிக்கப்பட்டு தனித்தே இருந்து கொள்ளுங்கள் என்று 1965 ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 ஆம் நாள் தள்ளிவிடப்பட்டது தான் சிங்கப்பூர்,  அன்றைய நாளின் நினைவில் தான் ஆண்டுதோறும் சிங்கப்பூர் தன்னுடைய தேசிய நாள் என்று கொண்டாடிவருகிறது. இனி என்ன செய்யப் போகிறோம் ? என்ற கேள்வியை மக்கள் முன் வைத்து அதற்கு விடையாக பல திட்டங்களைக் கூறி மக்களை வழிநடத்திச் சென்றதுடன் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடத் தக்கவகையிலும், ஆசியாவிலேயே மிகச் சிறந்த, பொருளாதார வளர்ச்சியில் சிறந்த நாடாக உருவாக்கிக் காட்டினார் திரு லீ குவான் யூ, அவருடைய முப்பதாண்டு காலத்திற்கும் மேலான ஆட்சியில் கல்வித்தரம், அடிப்படைவசதிகள், சொந்தவீடு, வேலைவாய்பு, வெளிநாட்டு முதலீடு, உள்நாட்டு வர்தகம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் சிங்கப்பூர் குடிமக்கள் வளர்ந்தனர், இணைப்பு மொழியாக ஆங்கிலத்தை முதல் மொழியாக்கியும், அவரவர் தத்தம் தாய்மொழியை இரண்டாம் மொழியாக கற்பித்தும், அனைத்து மக்களும் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் வாய்ப்பை ஒரு 20 ஆண்டுகளுக்குள்ளேயே ஏற்படுத்தித்தந்து வழிகாட்டினார், பல இன / மத நல்லிணக்க சமூகத்தை எப்படி பேணுவது என்பதற்கு சிங்கப்பூர் ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு. 

தமிழர் என்று நாம் பெருமைபடும் வகையில் உலக அரங்கில் நம்முடைய தமிழும் அதன் வளர்ச்சியும், தமிழர்களும் போற்றப்படும் ஒரே நாடு சிங்கப்பூர் மட்டுமே, மாநிலத்தைத் தாண்டினால் இந்தியாவில் கூட தமிழுக்கான அங்கீகாரம் சொற்பமே, அந்தவகையில் திரு லீ குவான் யூவை தலைவராக பெற்றதற்கு சிங்கப்பூர் தமிழர்கள் பெருமைப்படவும், நன்றிக்கடன்படவும் கடமைபட்டவர்கள்.

உலக அரங்கில் மக்களை ஒன்றுபடுத்திய தலைவர்கள் எல்லோரும் செய்யாமுடியமல் விட்டதை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டு விடைபெற்றுக் கொண்டுள்ளார் திரு லீ, பெண்களுக்கான சம உரிமையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களைத் தாண்டி, நமது பண்பாடு, கடமை மற்றும் பொறுப்பு என்ற அள்வில் சிங்கப்பூரார்களை உணரவைத்து அதை நடைமுறைக்கும் கொண்டுவந்துள்ளார், வெறெந்த நாட்டைவிட சிங்கப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழுபாதுகாப்பு உண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. 1900 க்கு பிறகு விடுதலை பெற்ற நாடுகளை ஒப்பிட சிங்கப்பூரின் பொருளாதர வளர்ச்சியும் மக்கள் வாழ்வியல் தர மேம்பாடும் திரு லீ யின் வழிகாட்டுதலில் உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ளனர், விடுதலை அடைந்த ஏனைய நாடுகளில் நிலைமை இவ்வாறு இல்லை, திரு லீ அவர்களின் தொலை நோக்கு பார்வையும், அவரது நீண்ட வாழ்வும் சிங்கப்பூர் மக்களுக்கு கொடையாக அமைந்ததும் சிங்கப்பூர் பல்வேறு வளர்ச்சிகளில் மேம்பட முடிந்தது. சிங்கப்பூரின் கடவு சீட்டு (பாஸ்போர்ட்) ஐரோப்பிய நாடுகளின் கடவு சீட்டுகளைப் போன்று மதிப்பு வாய்ந்தது, குடிநுழைவு அனுமதியின்றி 160+ நாடுகளுக்கு சென்றுவர முடியும், 

சிங்கப்பூரின் சட்டதிட்டங்கள் கடுமை என்றும் திரு லீ கண்டிப்பானவர் முதலாளிகளுக்கு ஆதரவானவர் என்றெல்லாம் உலக அரங்கில் திரு லீ க்கு எதிராக பல்வேறு கருத்துக்களை பலர் முன்வைத்தாலும் சிங்கப்பூரர்கள் அதைப் புறந்தள்ளுவார்க்கள், காரணம் மக்கள் தலைவர்கள் எந்த கொள்கையை (இசம்) பின்பற்றினாலும் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுதான் அதன் நோக்கமாக இருக்கவேண்டும் என்பதற்கு உலக அரங்கில் சிங்கப்பூர் நல்லதொரு எடுத்துக்காட்டாக இருக்கிறது என்பதை சிங்கப்பூர் மக்கள் உணர்ந்துள்ளனர்.

*****

திரு லீயின் மறைவு பேரிழப்பு என்றாலும் 91 அகவை கடந்த அவரது உடலுக்கான ஓய்வு என்ற அளவிலேயே அவரது மறைவு பார்க்கப்படுக்கிறது, ஆகச்சிறந்த சுற்றுலா நகரம், வானூர்தி நிலையங்கள், கப்பல் கட்டுமானங்கள், உலக வங்கிகள் (பைனாஸ் செண்டர்),  மற்றும் கட்டுமானத்துறை, சிங்கப்பூருக்கு சிறந்ததொரு அடித்தளங்களை திரு லீ அமைத்துக் கொடுத்துள்ளார், ஒரு மாபெரும்  தலைவரின் மறைவும் அதன் பின்னான நிகழ்வுகளும் கூட உலக அரங்கில் வியப்பாக பார்க்கும்படி அமைந்துவிட்டது.

ஆம், திரு லீயின் மறைவு குறித்து அறிவிக்கப்பட்ட நாள் சோகமான நாள் என்பதைத் தாண்டி மக்களின் இயல்பு வாழ்க்கை நலிவடையவில்லை, பொது போக்குவரத்து நிறுத்தப்படவில்லை, பள்ளிகள், கல்லூரிகள் அலுவலகங்கள், அரசு செயல்பாடுகளுக்கு விடுமுறைவிடப்படவில்லை, கடையடைப்போ, சாலைமறியலோ, முன்னறிவிப்பற்ற பொதுமக்களுக்கு இடையூறான ஊர்வலங்கள் இல்லை.

திரு லீயின் உடல் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மூன்று நாட்களில் முதல் நாள் மட்டும், இதுபோன்ற நிகழ்வுகளின் முன்னனுபவம் இல்லாததால் பொதுமக்கள் தாங்களே நீள் வரிசையை அமைத்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர், முதல் நாள் வரிசையில் ஊர்ந்து செல்லும் நேரம் 10 மணிநேரமாகவும், அடுத்தடுத்த நாட்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட ஏற்பாடுகளுடன் மக்களுக்கான தண்ணீர், குளிர்பானம், ரொட்டிகள் மற்றும் வெயிலுகான குடைகள் என அனைத்து வசதிகளையும் 24 மணிநேரமும் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்திருந்ததனர், கடந்த வியாழன் மற்றும் வெள்ளி இறுதி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் 8 மணிநேர வரிசையில் சென்று அஞ்சலி செலுத்தினர், எந்தவித விரும்பத்தகாத நிகழ்வோ, உணர்ச்சிவசப்படலோ நடக்கவில்லை, ஒருவொருக்கொருவர் தேவையான உதவிகளை செய்து கொண்டு சென்று அஞ்சலி செலுத்தினர், மாற்றுத் திறனாளிகள், முதியோர், குழந்தைகளுடன் வருவோருக்கு விரைவில் அஞ்சலி செலுத்தும் தனி வரிசை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது, நானும் வலையுலக நண்பர்கள் சிலரும், அலுவலக நண்பர் ஒருவருடன் மாலை 5 மணிக்கு வரிசையில் சேர்ந்து இரவு 12 மணிக்கு அஞ்சலி செலுத்தி வீடுதிரும்பினோம், இரவு திரும்ப பொது போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. தமிழகத்தில் பல்வேறு சிற்றூர்களில் திரு லீயின் மறைவின் இரங்களுக்காக தட்டி வைக்கப்பட்டிருந்ததை சிங்கப்பூர் மக்கள் அறிந்து தமிழ்நாட்டு தமிழர்களின் நன்றி உணர்வை வெகுவாக நெகிழ்ந்து பாராட்டினர்

(முக நூலில் இருந்து)

திரு லீயின் இறுதிப் பயண நிகழ்வான இன்று வானம் காலை முதலே அழுதது, கடந்த 10 நாட்களாக இல்லாத மழை சிங்கப்பூரில் இன்று பெய்ததும், திரு லீயின் இறுதி பயண 10 கிமி தொலைவு நெடுவிலும் மிதமான மழை இருந்து கொண்டே இருந்தது மக்களால் உணர்வுபூர்வமாகவே பார்க்கப்பட்டது, சாலைகளின் இருபுறமும் கொட்டும் மழையை பொருட்படுத்தாது பள்ளிக் குழந்தைகளுடன் நின்று கொண்டு திரு லீயின் இறுதிப் பயணத்திற்கு மரியாதை செலுத்தினர், இன்றும் கூட இறுதிப்பயண சாலைகளில் போக்குவரத்து முடங்கவில்லை ஒருபக்கம் இறுதிப்பயணம் செல்ல மறுபுறம் போக்குவரத்து சென்று கொண்டிருந்தது, ரயில்களும் ஓடின.










உலக நாடுகளின் தலைவர்களின் இறுதி மரியாதைக்காக திரு லீயின் உடல் கிட்டதட்ட 3 மணிநேரம் வைக்கப்பட்டு, அப்போது திரு லீயின் சிங்கப்பூர் வளர்ச்சி மற்றும் உலக நாடுகளுடான உறவுகள் குறித்தெல்லாம் சிங்கப்பூர் பிரதமர், ஆளுனர் மற்றும் பல்வேறு இனமேம்பாடுகளுக்கு லீ செய்த ஏற்பாடுகளைப் பற்றி அந்தந்த இன சார்ப்பில் ஒருவரும் பேசினர், அரங்கில் தமிழில் திரு லீ குறித்து கருத்தும் பகிர்ந்து கொள்ளப்பட்டது, துக்கமான ஒரு நிகழ்வு, இறுதி நிகழ்வு என்றாலும் திரு லீ குறித்து பேசியவர்களில் பிரதமர் திரு லீ சியான் லூங்க் (மறைந்த திரு லீயின் மூத்த மகன்) நகைச்சுவை தகவல்களையும் கூறி அரங்கின் இறுக்கத்தை தளர்த்தி ஒரு இயல்பான நிகழ்வாக மாற்றி இருந்ததனர். இதெல்லாம் சிங்கப்பூர் தவிர்த்து வெறெங்குமே பார்க்க முடியாத காட்சிகள். அதன் பிறகு திரு லீ யின் உடல் இல்லத்தினர் மற்றும் உறவினர்களுடன் பொது மின்மாயனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று அறிவித்து இறுதி அஞ்சலி நிகழ்வை முடித்துக் கொண்டனர்



*****


முதல்முறை நடைபெறும் ஒரு மாபெரும் தலைவரின் இறுதி நிகழ்வு கூட சிங்கப்பூரில் அவருக்கான மரியாதையை சற்றும் குறைக்காமல் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் நடத்தப்பட்டதும் கூட திரு லீயின் வழிகாட்டுதலாகவே இருக்கக் கூடும். உலக அரங்கில் பொருளாதாரத்தில் உயர்ந்து, ஊழல் மற்றும் லஞ்சமற்ற சிங்கப்பூர் பற்றி திரு லீயின் வழிகாட்டுதல் தலைவர்களை உருவாக்கவும் தனிமனிதர்களை மேம்படுத்தவும் உதவும் என்பதை திரு லீயின் இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த தலைவர்கள் கண்டிப்பாக உணர்திருக்கக் கூடும்.

14 பிப்ரவரி, 2015

Onsen - ஜப்பானிய வெந்நீருற்று குளியல் !

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கன் களைவதாம் நட்பு - 

இந்த குறளுக்கு பொருள் உடலில் ஒட்டுத் துணி கூட இல்லாத போது அம்மணத்தை மறைக்க உதவும் கை போன்றதே தக்க சமயத்தில் உதவக் கூடியது நட்பும்.  பருவ அகவையை கடந்தவர்களின் உட‌லில் பலர் முன்பு ஆடைய‌ற்ற‌ நிலை என்ப‌து ஒரு இக்க‌ட்டான சூழ‌ல், வெட்க‌த்தையும் கூச்ச‌த்தையும் ஏற்ப‌ட‌த்தும் நிலை, அப்ப‌டியான‌ நிலையை திருவள்ளுவர் மற்றும் ச‌ங்க‌ கால‌த்திலும் யாரும் விரும்பிய‌தில்லை, சபை முன்னிலையில் ஆடை அவிழ்ப‌து ஒருவ‌ரை அவ‌மான‌ப்ப‌டுத்தும் முய‌ற்சி என்றெல்லாம் ம‌காபார‌தக் க‌தைக‌ளில் ப‌திய‌ வைக்க‌ப்ப‌ட்டுள்ள ஆடையின் தேவை குறித்த த‌னிம‌னித‌ த‌ன்மான‌ம் ப‌ற்றிய‌ குறிப்புக‌ள்.

ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ வெட்க்க‌ம் கொள்ள‌த் தேவை இல்லை என்ப‌து பொதுவான‌ ப‌ரிந்துரைகள் மற்றும் புரிந்துணர்வு தான், இந்தியாவிலும் த‌மிழ‌க‌த்தில் இவை ஓர‌ள‌வு ஏற்றுக் கொள்ள‌ப்ப‌ட்டாலும், ந‌ம‌து ஆடைய‌ற்ற‌ உட‌லை ஒரு சில நிமிடங்கள் ம‌ருத்துவ‌ர்க‌ள் த‌விர்த்து வேறு எவ‌ருக்கும் காட்டுவ‌து வழக்கம் இல்லை, பெண்க‌ளுக்கு ம‌க‌ப்பேற்றின் போது அந்த சூழலில் உத‌வி செய்ப‌வ‌ர்க‌ள் முன்னிலை த‌விர்த்து எந்த‌ பெண்ணும் த‌ன‌து ஆடைய‌ற்ற‌ உட‌லை தனது துணை தவிர்த்து எவ‌ருக்கும் காட்ட‌ மாட்டார்கள்.

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுக் குளத்தில் குளியல் இருந்தது, இன்னும் கூட கிராமங்களில் படித்துறைகளுடன் சேர்ந்த குளத்தில் குளிக்கிறார்கள், இன்னும் குற்றலாம், மலை அருவிகள், கடற்கரை தவிர்த்து வெறெங்கும் பொதுக் குளியல்களுக்கு வாய்ப்பற்ற நிலை உள்ளது. எனக்கு தெரிந்து ஆசிய நாடுகளில் நான் பயணம் செய்தவரையில் குளியல் என்பது பொழுது போக்கு, அதற்காகவே சீனா, தைவான், ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் பலவித வசதிகளுடன் கூடிய பொதுக் குளியல் அறைகள் உண்டு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன தலைநகரில் Beijing Bath Houses மிகவும் புகழ்பெற்றவையாக இருந்தது, தற்பொழுது அவைகள் மூடப்பட்டு, முற்றிலும் புதிய வடிவமாக SPA எனப்படும் பல்வேறு குளியல் வசதிகளுடன், சூட்டு அறை (Sauna) மற்றும் நீராவி அறைகள் (Steam Room) கூடிய பொழுது போக்கு இடங்கள் உண்டு. ஐரோப்பிய நாடுகளில் Russian Banya மற்றும் Turky Hammam புகழ்பெற்றவை. SPA இதைத் தமிழில் பொருளுடன் 'புத்துணர்வு கூடம்' என்று வேண்டுமானால் சொல்லலாம், 
 (Pic Courtesy : China Daily)
வார இறுதிகளில் நண்பர்களுடன் அல்லது இல்லத்தினருடன் சென்று ஒரு மூன்று மணி நேரம் செலவு செய்துவிட்டு உடலை மனதையும் புத்துணர்வு செய்து திரும்பும் ஒரு பொழுது போக்கிடமாக அவற்றை அமைத்துள்ளனர். முழுவதுமாக உள்ளுக்குள் (Indoor) சுடுநீர் த‌ண்ணீர் குள‌ங்க‌ள், குளிர் நீர் குள‌ங்க‌ள் ம‌ற்றும் சுடுக‌ல் சூட்டு அறை (Sauna) உட‌ல் விய‌ர்க்க‌, நீராவி அறை இவ‌ற்றை முடித்துவிட்டு, ஓய்வெடுக்க‌ தொலைகாட்சி அறை, அங்கு அருகே பாண‌ங்க‌ள் சிற்றுண்டிக‌ள், மென்மது (Beer) எல்லாம் கிடைக்க‌க் கூடிய‌ Bar வ‌ச‌தி ம‌ற்றும் விரும்பிய‌வ‌ர்க‌ளுக்கு க‌ட்ட‌ண‌ம் செலுத்தினால் தசைப்பிடித்துவிடுவ‌து (Massage) ஆகிய‌ வ‌ச‌திக‌ள் இருக்கும். சிங்க‌ப்பூர் ம‌லேசிய‌ நாடுக‌ளில் பெண்க‌ளுக்கான‌ SPA குறைவு, ஆனால் ஆண்க‌ளுக்கு நிறைய‌வே உள்ள‌து. இவ‌ற்றிற்கும் சீனா, தைவான்,கொரியா ம‌ற்றும் ஜ‌ப்பான் SPA க்குளுக்கும் பெரிய‌ வேறுபாடு அங்கு ஆடை தான். சிங்க‌ப்பூர் ம‌லேசிய ஆண்களுக்கான SPA க்க‌ளில் சிறிய‌ வகை நீச்சல் கால்ச‌ட்டைக‌ அணிந்திருப்பார்க‌ள். ம‌ற்ற‌ ஆசிய‌ நாடுக‌ளில் ஏதும‌ற்ற‌ (Nude/Naked) ஏகாந்த‌ ஜென் (ஜைன‌) நிலை தான்.

40ஐ கடந்த எனது அகவை மற்றும் துய்ப்புகளை கருத்தில் கொண்டு கீழ்கண்டவற்றை எழுதுவதற்கு எனக்கு சற்றும் கூச்சம் எதுவுமில்லை.

******

ஏகாந்த நிலையை துய்க்கும் வாய்ப்பு முதன் முதலில் மூன்றாண்டுக்கு (2012) முந்தைய சீனப் பயணத்தில் தான் கிட்டியது, தங்கியிருந்த 4 நட்சத்திர விடுதியில் இருந்தது SPA, அங்குள்ளே எப்படி இருக்கும் என்று ஆர்வத்தில் சென்றேன், முதலில் உடமைகளை பூட்டி வைக்கும் அறைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு சென்றதும் உடமைகளை வைத்துவிட்டு, உடைகளை களையச் சொன்னார்கள், கழட்டிவிட்டு உள் ஆடையில் நின்றேன், அதையும் கழட்டுமாறு அங்கு உதவி செய்யும் சீனர் சொன்னதும் கண்கள் சுறுக்கி இமைத்து 'திக்' ஒரு கூச்சம், திரும்பிவிடலாமா என்கிற எண்ணம், பிறகு இங்கு தான் நமக்கு தெரிந்தவரோ, இந்தியரோ தமிழரோ இல்லையே என்று தேற்றிக் கொண்டு முற்றிலும் களைந்தவுடன் உள்ளுக்குள் கூட்டிச் சென்றார். மஞ்சள் நிற ஆண் குழந்தைகள் அப்படியே 5 - 6 அடிக்கு வளர்ந்தது போல் பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வயது சீன‌ ஆண்கள் ஜென் நிலையில் குளித்துக் கொண்டும், படுத்து ஓய்வெடுத்துக் கொண்டும் இருந்தனர், அங்கு கருநிறத்தில் நுழைந்த என்னை ஒரு முறை வியப்பாக பார்த்ததுடன் சரி, பின்னர் பார்வையை மீட்டுக் கொண்டனர், ஒட்டுத் துணி கூட இல்லாத நிலையில், அருகே ஷவரில் நின்று குளித்துவிட்டு விரைவாக சென்று  சுடுநீர் உள் நீச்சல் குளத்தில் (Indoor Hot spring Pool) தண்ணீரில் இறங்கி, தண்ணீரையே ஆடை ஆக்கிய ஒரு சில நிமிடங்கள் நானும் கூச்சம் மறக்க, மனதிற்கு இதமான சுதந்திர உணர்வுடன் உற்சாகம் தொற்றிக் கொள்ள, கூட்டில் இருந்து விடுதலை அடைந்த ஒரு பறவையின் மன நிலைக்கு மாறி அதனுள் அங்கும் மிங்கும் நீந்தி மகிழ்ந்தேன். அந்த‌ சூழ‌ல் மறக்க இயலாததாகவும், பின்னர் நினைக்க அது போன்ற வாய்ப்பு இனி எப்போதோ என்ற ஏக்கமாகவும் இருந்தது.


*****

சென்ற‌ வார‌ம் ஜ‌ப்பான் செல்லும் வாய்ப்பு, மூன்று மாத‌ம் முன்பு திட்ட‌மிட்ட‌ ஒன்று தான், அங்கு வேறு சில‌ வேலைக‌ள் இருந்தாலும், ஏற்க‌ன‌வே ஜ‌ப்பான் SPAக்கள் புகழ்பெற்றவை என்று அறிந்திருந்ததால், அங்கு சென்று வரவிரும்பி சிறந்த SPAக்களில் ஒன்றான SPA World அதன் மிகச் சிறந்த வசதிகளுக்காக தேர்ந்தெடுத்து சென்றேன்.

ஒரு நாள் முழுவதுமே அங்கிருக்க கட்டணம் குறைவு தான் இந்திய ரூபாய்க்கு 1200 என்ற அளவில் தான், உள்ளே நுழைந்தது, ஷூவை கழட்டி பூட்டி வைத்துவிட்டால், எண்ணுடன் கூடிய கையில் அணிந்து கொள்ளும் Strap Tag உடன் ஆண்களுக்கான 4 ஆம் தளத்திற்கு செல்ல வேண்டும். பெண்களுக்கு 6 ஆம் தளம் (Asian Zone), ஒவ்வொரு மாதமும் ஆண்கள் தளமும் பெண்கள் தளமும் மாறும், நான் சென்ற பிப்ரவரியின் பொழுது 4 ஆம் தளம் ஐரோப்பிய அமைப்பு (European Zone) ஆண்களுக்கானது,  ஆறுவயதுக்குட்பட்ட ஆண் பெண் குழந்தைகள் எந்த தளத்திற்கும் பெற்றோர் ஒருவருடன் செல்லலாம். ஆண்களுக்கான 4 ஆம் தளத்தில் நுழைவாயிலை தாண்டியதும் அங்கு உடைமாற்றும் பகுதி, அங்கு நுழையும் போதே ஒரு சில அம்மணர்கள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர், கிட்டதட்ட 500 பேர் உடமைகளை பூட்டி வைக்கும் வைக்கும் Locker Room அமைந்த பகுதி, அந்த தளமும் மிகப் பெரியது, பல்வேறு குளிப்பு வகை வசதிகளை உள்ளடக்கியது, கீழ்தளத்தில் வழங்கிய‌ த‌னிப்ப‌ட்ட‌ ஆடையை மூன்றாம் தளத்திற்கு செல்ல வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும். அணிந்து கொண்டு முதலில் மூன்றாம் தளம் செல்ல முடிவெடுத்து சென்றேன்.
Ganban Yoku

மூன்றாம் தளத்தில் ஆண்கள் பெண்களுக்கு பொதுவான சுடுகல் Stone SPA அதனை Ganban's Yoku என்ற ஜப்பானிய பெயரில் அழைக்கிறார்கள், அதற்கான தனிப்பட்ட ஆடையை அணிந்து அங்கு செல்ல வேண்டும், அதில் பல நாடுகளில் உள்ள  சுடுகல் SPA அமைப்பும் அதற்கான‌ தனித் தனி அறைகளும் அதற்கான வெப்ப நிலைகள் மற்றும் அலங்கார அமைப்புகளுடன் உள்ளது, ஒரு அறையில் 20 பேர் வரை ஓய்வெடுக்கும் அளவில் உள்ளது, மெல்லிய இசையும், இதமான மணமும், படுத்துக் கொள்ள அல்லது அமர்ந்து கொள்ளும் வசதியுடன் அமைக்கப்பட்டிருந்தது, மையப்பகுதியில் படுத்துக் கொண்டு ஒய்வெடுக்கும் மிக அற்புதமான வான் கூறையில் நட்சத்திரங்கள் அமைக்கப்பட்ட நடுக்கூடமும் இருந்தது, அருகில் உணவு மற்றும் குளிர்பான கடைகள் இருந்தன. அந்த பகுதியில் ஒவ்வொரு அறைக்கும் 5  - 10 நிமிடங்கள் ஓய்வெடுத்துவிட்டு ஒரு மணி நேரம் களி(ழி)த்து நான்காம் தளத்தில் இருக்கும் ஆண்களுக்கான Onsen - japan hotspring spa பகுதிக்குள் மீண்டும் வந்தேன். Onsen என்றால் ஜப்பானிய மொழியில் வெந்நீர் ஊற்று அல்லது ஆங்கிலத்தில் Hot Springs எனப்படும்.

அங்கு உடைகளையும் களைந்து அங்கு பூட்டி வைத்து விட்டு, அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததில் இருந்து இரண்டு கைக்குட்டையை சேர்த்தால் இருக்கும் நீளத்தில் இருக்கும் ஒரு மஞ்சள் துண்டு அதை எடுத்துக் கொண்டு குளியல் பகுதிக்குச் செல்லவேண்டும், அந்த துண்டு இடுப்பு சுற்றளவுக்குக் கூட வராது, உடுக்கை இழந்தவன் கை அளவுக்கு வேண்டுமென்றால் மறைத்துக் கொள்ளலாம், வெப்ப அறையில் இருக்கும் பொழுது தண்ணீரில் நனைத்து அந்த துண்டை போட்டுக் கொள்ளலாம், தலையில் சூடு ஏறாது. மற்றபடி அந்த துண்டு சுருட்டினால் அம்மண உடலை மறைக்கும் கை அளவு கூட இல்லை,

Onsen - Hotspring பகுதிக்கு செல்லும் முன் உடலும் தலையும் நனைய குளித்துவிட்டு செல்ல வேண்டும், பொதுவாகவே ஆசிய நாடுகளின் நீச்சல் குளத்திற்கு இறங்கும் முன் குளித்துவிட்டு செல்ல வேண்டும் என்பது அறிவுறுத்தல், உடலில் உள்ள வியர்வை மற்றும் அழுக்குகளை போக்கிவிட்டு பொதுக் குளத்தில் இறங்கினால் அங்கு குளிக்கும் மற்றவர்களுக்கு அருவெறுப்பு வராது என்பதால் இந்த ஏற்பாடு.

முதலில் சென்ற குளம் பழங்கால ரோமா புரி அமைப்பில் அமைக்கப்பட்ட பகுதியின் Hotspring, அங்கு இடுப்பளவு சுடுநீர் அதில் 15 பேர் வரை அமர்ந்திருந்தனர், அதில் சில அப்பாக்களும் அவர்களுடைய மகன்களும் ஆறுவயதிற்கு குட்பட்ட பெண் குழந்தைகளும் அடக்கம், ஆறுவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆடையற்ற பருவ வயதினரின் உடல் எந்த கவர்ச்சியையும் ஏற்படுத்தாது என்பதால் ஆசிய நாடுகளின் குளியல் அறைகளில் ஆண்கள் பெண்கள் பகுதிக்கு அவர்களால் கட்டுபாடின்றி சென்றுவர முடியும். ஆசிய நாடுகளில் குழந்தைகள் பெற்றோருடன் சேர்ந்து குளிப்பது வழக்கம். ஒரு சில விடுமுறை நாட்களில் மகனுடன் சேர்ந்து நானும் குளிப்பது உண்டு. குழந்தைகள் கள்ளம் கபடம் அறியாதவர் மட்டுமின்றி, அவர்கள் வளர்ந்தாலும் பெற்றோரின் நிர்வாண உடல் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை, படுத்த படுக்கையாக பெற்றோர் இருக்கும் பொழுது அவர்களுக்கு உடைமாற்றிவிட எந்த கூச்சமும் இல்லாமல், முகம் சுளிக்காமல், அருவெறுப்பு இல்லாமல் அன்புடன் செய்ய முடியும், பாலியல் உறுப்பு அனைவருக்கும் இருக்கும் என்று குழந்தை பருவத்திலேயே தெரியவருவதாலும் பார்த்து வருவதாலும் வளர்ந்த பிறகும் ஆண் - ஆண் அல்லது பெண் - பெண் ஓரின இனக்கவர்ச்சி அக்குழந்தைகளுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் அவை குறைக்கிறது.
SPA World - Onsen European Zone

ஒருமுறை நீரில் மூழ்கிவிட்டு இடுப்பளவு தண்ணீரில் அமர்ந்து கொண்டேன், ஆடைகளுக்கு மாற்றாக நீந்தும் செதில் முளைத்த மீனின் புத்துணர்வை உணர்ந்தேன். யாரும் யாரையும் இடுப்புக் கீழ் வெறித்துப் பார்க்கவும் இல்லை, அளவு ஆய்வும் செய்யவில்லை, அம்மணமே என்றாலும் எல்லோரும் வெகு இயல்பாகவே இருந்தனர். இந்தியாவில் ஏன் இது போன்ற இடங்கள் இல்லை, அம்மணம் என்பதே துறவிகளுக்கானது என்று மட்டுமே நம்புகிறார்களோ ? என்றெல்லாம் நினைத்தேன், அங்கு பல்வேறு குளங்களில் கிட்டதட்ட 150 ஆண்கள் அதில் குழந்தைகளும் அடக்கம். வெப்பம் 40 Deg, Hotspring குளியல் பரிந்துரைபடி 10 நிமிடம் வரையில் அந்த தண்ணீரில் இருக்கலாம், பின்னர் வெப்ப அறையிலோ, நீராவி அறையிலோ ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வேறு ஒரு  Hotspring பகுதிக்குச் செல்லலாம். ஒவ்வொரு பகுதியிலும் பல்வேறு நாடுகளின் Hotspring குளியல் முறைபடி அமைக்கபட்டிருக்கும் குளங்களும், மிகவும் குளிர்ந்த நீர் (19 Deg) குளங்களும் உண்டு.

Hotspring த‌ண்ணீரில் உட்கார்ந்து ஓய்வெடுப்ப‌து, ப‌டுத்து ஓய்வெடுப்ப‌து, த‌னிப்ப‌ட்ட‌ சிறிய‌ தொட்டியில் அம‌ர்ந்திருப்ப‌து உள்ளிட்ட‌ ப‌ல்வேறு அளவும் உயரமும் உள்ள அமைப்புக‌ள் அங்கிருந்த‌ன. ஒவ்வொன்றிலும் உப்புத் த‌ண்ணீர், க‌ந்த‌க‌ த‌ண்ணீர் ம‌ருந்து த‌ண்ணீர் உள்ளிட்ட‌ பல வகை குளங்கள், அவ‌ற்றில் வ‌ழியும் நீராக‌ (Flowing / Over Flow Water) வ‌ந்து கொண்டே இருக்கும், என‌வே யாரும் சிறுநீர் க‌ழித்து இருப்பார்க‌ளா த‌ண்ணீர் கெட்டு இருக்குமோ என்று ஐய‌ப்ப‌ட‌த் தேவை இல்லை. Hotspring க்கு செல்ல‌ உட‌ல் நிலை ப‌ரிந்துரைக‌ள் உண்டு, என‌வே நோயாளிக‌ள் வ‌ந்திருப்பார்க‌ள், தொற்று நோய் ஏற்ப‌டும் என்கிற‌ அச்ச‌மும் தேவை இல்லை.

விருப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு கட்டண உட‌ல் பிடிப்பு சேவைக‌ளும் இருந்த‌ன‌, அனைத்து சேவையாள‌ர்க‌ளும் பெண்க‌ள் அவ‌ர்க‌ள் ஆண்க‌ளின் அம்மண உட‌லுட‌ன் அப்ப‌குதிக்குச் செல்வ‌தை பொருட்ப‌டுத்துவ‌தும் இல்லை, ம‌ருத்துவ‌ சேவை போன்று இதையும் செய்கிறார்க‌ள். உள்ளுக்குள் செய‌ற்கை சுடுநீர் அருவி உண்டு, அங்கு சுற்றிலும் சுவ‌ர் அமைப்பு வான‌த்தைப் பார்க்க‌லாம், வெளியில் இருந்து பார்ப‌வ‌ர்க‌ளுக்கு தெரியாத‌ப‌டி சுவ‌ர் அமைப்பு, ஆனால் வெளி உல‌கில் (Open / outdoor)  இருப்ப‌து போன்று ந‌ம‌க்கு உண‌ர்வை ஏற்ப‌டுத்தும். சுடுநீர் கொட்டும் அருவியில் நின்றால் அத‌ன் விழும் வேக‌த்தில் உட‌ல் வ‌லி போய்விடும், அங்கும் 10 நிமிட‌ம் வ‌ரை குளிக்க‌லாம். தளத்தின் நடுவே குளிர்பான‌ங்க‌ள் ம‌ற்றும் பிய‌ர் விற்கும் க‌டை, மேசைக‌ள் போட்டு இருப்பார்க‌ள், மேசைக்குக் கீழே கால் ந‌னையும் அள‌வுக்கு வெது வெதுப்பான‌ த‌ண்ணீர், ந‌னைத்துக் கொண்டே குளிர்பான‌த்தை ர‌சித்து குடித்து ஓய்வெடுக்க‌லாம், எல்லாம் அம்மண நிலையில் தான். உள்ளே எதுவும் வாங்குவதற்கு பணம் தேவை இல்லை, எல்லாம் கையில் அணிந்துள்ள Locker Tag Scan வழியாகத்தான், வெளியேறும் போதனது காட்டும் செலவை கட்டிச் செல்லவேண்டும், தனிமனித உணர்வு (ப்ரைவசி) மதிக்கப்படுவதால் உள்ளுக்குள் படம் எடுக்கவும் அனுமதி கிடையாது

வெப்ப அறையிலோ (Sauna), நீராவி (Steam) அறையிலோ ஓய்வெடுக்க அமரக்கூடிய நீள‌ ம‌ர‌மேசை அமைத்திருந்தார்க‌ள், அதில் வெள்ளை பூ ட‌வ‌ல் (ட்ர்கி டவல்) போட‌ப்ப‌ட்டிருந்த‌து, அத‌ன் மீது நேர‌டியாக‌ அமராம‌ல் உட்காருவ‌த‌ற்கு மெல்லிய‌ ர‌ப்ப‌ர் சீட்டுக‌ளை (Silicon Seat) ப‌ய‌ன்ப‌டுத்திக் கொள்ள‌ வேண்டும், Hygenic அல்ல‌து தூய்மை பேன‌ அத்த‌கைய‌ ஏற்பாடு. தலை
Sauna
முடியும், தலையும் மிகுந்த சூடாகமல் இருக்க கையில் இருக்கும் மஞ்சள் துண்டை நனைத்து தலையில் சுற்றிக் கொள்ள வேண்டும், Sauna அறையில் இருக்கும் போது தேமே...என்று ஓய்வெடுக்கும் கை.. 'உடுக்கை இழந்தவன் கை' எடுத்துக்காட்டு இந்த இடத்தில் நட்புக்கு பொருந்தாதே என்றெல்லாம் நினைத்தேன்.

அந்த‌  Onsen - Hotspring இர‌ண்டு மூன்று ம‌ணி நேர‌ம் செல‌விட்டாலும் நேர‌ம் செல்வ‌து தெரியாது, இறுதியாக‌ ஜ‌ப்பானிய‌ பாணி குளிய‌ல், அதில் சிறிய‌ ஸ்டூலில் உட்கார்ந்து த‌ண்ணீர் பிடித்து, சோப்பு தேய்த்து குளித்துவிட்டு, சில‌ர் அங்கேயே முக‌ச் ச‌வ‌ர‌ம் செய்து கொள்கிறார்க‌ள், நான் அங்கிருந்த மூன்று மணிநேரம் இந்திய ஆண்கள் எவரையும் காணவில்லை, (ஒசாகா சென்று திரும்பும் வரையில் கூட வெளியேயும் இந்தியர் எவரையும் பார்க்கவில்லை) பின்னர் அப்படியே ஒப்ப‌னை அறைக்கு வ‌ந்து ந‌ன்றாக‌ துவ‌ட்டிவிட்டு, த‌லைவாரிக் கொண்டு, உட‌ல் எடையை பார்த்துவிட்டு, ஆடைக‌ள் இருக்கும் இட‌த்திற்கு சென்று ஆடைக்குள் சிறைப்படுத்திக் கொண்டு வெளியே வ‌ந்தேன். அப்பாடா....என்ன புத்துணர்வு...என்ன சுகம். எந்த செயற்கையும் சுற்றாத அம்மண உடல்களும் அழகானது, புனிதமானது தான்.

*****

நாட்டுக்கு நாடு உடலில் ஆடையின்மை குறித்து பல்வேறு நிலைப்பாடுகள் உண்டு, குடிகாரன் விழுந்து கிடக்கும் பொழுதும், தன் நினைவற்று  சுருண்டு கிடக்கும் மனவளர்ச்சி குன்றியவர்களிடம் துணி விலகி இருக்கிறதா என்று ஒருமுறையேனும் பார்க்கும் மனநிலை நம்மில் பலருக்கும் உண்டு, பொதுவாகவே வீட்டுக்குள்ளோ, விடுதியிலோ தனியாக இருக்கும் பொழுது ஆடையின்றி இருக்க விரும்பும் ஆண்களின் மனநிலை. இதை வெளிப்படையாக ஒப்புக் கொள்பவர்கள் குறைவே. நீலப்படங்களையும் நிர்வாண உடல்களையும், ஆடையையும் ஊடுறுவி பார்த்து மிகுதியாக ரசிப்பதெல்லாம் உடைக்காட்டுப்பாடு மிக்கதாகவும் கூறிக் கொண்டே, உடை நாகரீகம் பற்றி வாய்கிழிய பேசி பேசியும், பண்பாடுகள் பாரம்பரியம் பற்றி பெருமையாக பேசும் நாடுகளில் உள்ளோரே மிகுதி. 

 *******

ஜப்பானிய Hotspring குளியல் எனக்கு ஒரு மாறுபட்ட அனுபவம், . ஒரு சில மணித்துளிகள் அங்கே அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்து பறந்து செல்லும் மன நிலையில் இருந்தேன், வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய ஒன்று, எனக்கு அந்த‌ நல்லூழ் வாய்த்தது.

இணைப்பு : ஸ்பா (தமிழில்) - தமிழ் விக்கிபீடியா

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்