பின்பற்றுபவர்கள்

13 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 2 !

எதிர்ப்பார்ப்புகளுடன் எங்கு சென்றாலும் அது கொஞ்சமேனும் நிறைவேறாவிட்டால் பிறகு எதையும் ரசிக்க முடியாது, 'பின்டன்' ரிசார்டுகள் அவ்வளவு மோசமில்லை என்றாலும் என் போன்றவர்கள் சுற்றுலாத் தளத்தில் பகல் முழுவதும் சுற்றி சுற்றி வந்து எதாவது செய்து ((Activities) கொண்டு அந்த இடத்தை முற்றிலும் சலிக்கும் வரை இல்லாவிட்டாலும் கால் வலிக்கும் வரை சுற்றிவர விரும்புவர். 

******

இங்கு 'பின்ட'ன் சுற்றுலா வளாகம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே என்பதால் நம் விருப்பப்படி சுற்றிவர எதுவும் இல்லை, அதற்கான வசதி வாய்ப்புகளும் இல்லை என்ற எண்ணம் வர நாளைய பொழுதை எப்படி கழிப்பது ? என்றவாறு நினைத்துத் தூங்கி காலை 7:30 மணிக்கு எழுந்தேன், குழந்தைகளும் எழுந்து கொண்டார்கள், அவர்களை கிளப்பச் சொல்லிவிட்டு ரெடிமேட் காப்பியை சுடுநீரில் கலக்கி குடித்துவிட்டு அறையை விட்டு கடற்கரைக் பகுதிக்கு வந்தேன்.


நேற்று மாலைப் பார்த்த கடலா இது ? கடல் தண்ணீர் 200 மீட்டர் தொலைவு வரை உள் வாங்கி இருந்தது, கடற்கரை பாறைத் திட்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது, ஒரு 100 மீட்டர் தொலைவு வரை உள்ளே சற்று பயத்துடன் தான் நடந்தேன், ஏனெனில் கடல் தரைகளை நம்ப முடியாது, புதை மணலாக இருந்து உள்ளே இழுத்தால் ? அப்படி ஒரு ஆபத்தான அனுபவம் வீட்டருகே இருக்கும் கடற்கரையில் எனக்கு நேர்ந்ததால், நிதானமாக காலடிகளை எடுத்து வைத்தேன், ஈரம் என்பது தவிர்த்து கட்டாந்தரை போல் தான் இருந்தது நேற்று மாலையில் கடல் நீர் இருந்த பகுதிகள். 200 மீட்டர் உள் வாங்க 2 மீட்டர் உயரத் தண்ணீர் கீழே இறங்கி இருக்க வேண்டும், ஆனால் அவை எங்கு சென்றது ? ஒரு வேளை சுனாமி ? அந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் இருந்தாலும் சுற்றிலும் நாடுகள் அரணாக இருப்பதால் பெரிய சுனாமிக்கு வாய்ப்பில்லை. அந்தப் பகுதியில் கடல் நீரோட்டங்கள் அந்தக் கடற்கரைப் பகுதி நீரை உயர்வாகவும் தாழ்வாகவும் ஆக்குகிறது என்பது பிறகு தான் புரிந்தது, நான் சென்று வந்த பிறகு சரியாக ஒரு மணி நேரத்தில் நேற்று மாலைப் பார்த்த அளவுக்கு கடல் நீர் கரை வரை வந்திருந்தது. மறுநாள் காலையும் இதே போன்று தான் கடல் நீர் உள்வாங்கி இருந்தது.



கடற்கரையைச் சுற்றிவிட்டு முந்தைய நாள் சென்ற விலங்குகளின் காட்சிக் குடில் வழியாக திரும்பவம் விடுதியை அடைந்தேன், இது போன்ற 3 - 5 நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதிகளில் காலை உணவு இலவசம் தான், 50க்கும் மேற்பட்ட உணவு வகைகளை விருப்பம் போல் எடுத்து திண்ணும் பபே முறையில் அமைத்திருப்பார்கள், பழச்சாறுகள் மற்றும் காபி, தேனீர் கூட இருக்கும், ரொட்டி வகைகள், நூடுல்ஸ், சோறு, கஞ்சி, ஆம்லேட், ஆப்பாயில், வெட்டிய பழங்கள், சோள மாவில் செய்யப்பட்ட கெல்லாக்ஸ் வகைகள், எல்லாமும் இருக்கும், சைவ உணவு தான் சாப்பிடுவது வழக்கம் என்பதால் எனக்கு ப்ரெட், கெல்லாக்ஸ் மற்றும் கஞ்சி தவிர்த்து வேற எதுவும் ? கொஞ்சம் தள்ளி சூடான இட்லிகள், வடைகள், பில்டர் காபி இருந்தது, அதனருகில் இந்திய முகங்கள் நிறைய பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர், ஆனால் தமிழ் குரல் எதுவும் கேட்கவில்லை,  ஆகா இட்லி என்று நினைத்து அருகே சென்றால் அது தனியாக ஒரு தனியார் நிறுவனம் அவர்கள் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாம்,  விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு அதில் பங்கு இல்லை என்றார்கள், போச்சுடா.....சரி என்று சொல்லிவிட்டு அறைக்கு திரும்பி குளித்துவிட்டு தயாராக இருந்த குழந்தைகளை கூட்டி வந்து அதே உணவகத்திற்கு வந்து, சாப்பிட முடிந்த வகைகளை மட்டும் சாப்பிட்டோம், அடுத்து எங்கு செல்வது என்கிற திட்டம் எதுவும் இல்லாததால் பொறுமையாக சாப்பிட்டு முடிக்க 45 நிமிடம் ஆகியது. அங்கிருந்து கடற்கரைப் பகுதிக்கு வந்தோம் முன்பு சொன்னது போல் கடல் நீர் கரை வரை வந்திருந்தது, சுற்றிப் பார்த்துவிட்டு 15 நிமிடம் நடந்து நேற்று உருட்டு பந்து விளையாண்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

மழைத்தூறல் இருந்தது, விடுதியில் கொடுத்த பொழுது போக்கு விளையாட்டுகளுக்கான கூப்பானில் நடைபெறும் பல்வேறு பொழுது போக்கு நிகழ்வுகளுக்கான இடம் அங்கு தான் இருந்தது, கொஞ்சம் உயரமானப் பகுதி அது கீழே இறங்க கடற்கரையில் முடிந்தது, அதாவது  ஒரு பக்கம் கடற்கரையில் விடுதி மறுபக்க கடற்கரையில் இந்த பொழுது போக்கு திடல். துப்பாக்கி சுடுவது மற்றும் வில் அம்பு ஆகியவற்றை செயல்படுத்த நமக்கு அனுமதி இருந்தது, 30 அம்புகளைக் கொடுத்தார்கள், எதிரே 30 மீட்டர் தொலைவில் இருந்த வட்டக் குறியில் (டார்கெட்) அடிக்க வேண்டும், நானும் மகளும் அம்புகளை எய்தினோம் (இந்த 'எய்' என்கிற தமிழ் வினைச் சொல்லில் இருந்து தான் Aim வந்திருக்குமோ ?) . பயிற்சிகள் இல்லாததால் பாதிக்கு மேல் டார்கெட்டில் விழவில்லை, அதன் பிறகு மழை பொழிந்ததால் அம்பு எய்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கும் சில வட இந்தியர்கள் குழந்தைகளுடன் வந்து கரே முரே என்று பேசிக் கொண்டு வந்துவிட்டார்கள், பின்னர் துப்பாக்கி சுடுதலில் கொஞ்சம் நேரம் சுட்டுவிட்டு வந்தேன், முப்பது குண்டுகள் வரைக் கொடுத்தார்கள், இரண்டு மிமி நீளம் உள்ள மிக சிறிய ஈயக்குண்டு தான், பொருத்துவதும் எளிதாகத்தான் இருந்தது.  குறிப்பார்த்து துப்பாக்கிச் சுடுவது எளிதாகத்தான் இருந்தது. மழை கொஞ்சம் குறைந்திருந்தது, அடுத்து ? யானை ஏற்றம் குதிரை ஏற்றம் எல்லாம் அங்கே நடப்பதாகச் சொனனர்கள், ஆனால் அதெல்லாம் மாலை மூன்று மணிக்கு மேல் தானாம். அங்கிருந்து விடுதி இலவசப் பேருந்திற்கு ஒரு 20 நிமிடம் காத்திருந்து ஏறினோம், நான் முந்தைய நாள் இரவு உணவு வாங்கிய விடுதிக்கு அருகே இறக்கிவிட அங்குள்ள கடற்கரையை ஒட்டி நடந்தோம், சற்று தொலைவில் கடற்கரை படகு விளையாட்டுகளுக்கான பகுதி இருந்தது, அங்கும் வட இந்தியர்கள் தான் கடல் விளையாட்டுகளில் மும்மரமாக இருந்தனர். 


வட இந்தியர்களெல்லாம் பணக்காரர்களா ? பெயருக்குக் கூட தென்னிந்தியர்கள் ஒருவரையும் பார்க்க முடியவில்லை, வட இந்தியர்களைப் பொருத்த அளவில் பணக்காரர்கள் ஏழைகள் என்கிற இரண்டே வர்கம் உண்டு போலும், பணக்காரர்கள் குடும்பமாக வந்து நன்றாக நாடுகளை சுற்றிப் பார்த்து அனுபவிக்கிறார்கள். பணத்தை தண்ணீராக செலவு செய்கிறார்கள். அந்தப் பகுதியில் சற்று நேரம் நின்றுவிட்டு மணியைப் பார்க்க மாலை 2 ஐ நெருங்கியது, அங்கிருந்து பேருந்தை எடுத்து விடுதிக்கு வந்தோம், விடுதி முகப்பில் இந்தோனேசிய பாரம்பரிய சிறிய நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்தது, சற்று நேரம் பார்த்துவிட்டு அறைக்குச் சென்று, ரெடிமேட் நூடுல்ஸ் உள்ளிற்றவற்றை தின்றுவிட்டு ஓய்வெடுத்துவிட்டு விடுதி மையப்பகுதிக்கு வந்தோம்.

மாலை 3 மணி, இந்த விடுதியை விட்டு பிறப் பகுதிகளைப் பார்க்கவே முடியாதா ? பேருந்தில் 10 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு கடைத்தெருவுக்கு கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள், ஆனால் பேருந்திற்கு பெரியவர்களுக்கு 5 வெள்ளியும் குழந்தைகளுக்கு 3 வெள்ளியும் கட்டணமாம், எப்படியாவது இங்கிருந்து சென்றால் சரி தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், அதற்குள் யானை ஏற்றமும் குதிரை ஏற்றமும் நினைவுக்கு வர, மீண்டும் காலையில் சென்ற பொழுது போக்குப் பகுதிக்குச் சென்றால் அங்கு உயரமான கோபுரத்தில் (டவரில்) இருந்து கயிற்றில் தொங்கிவரும் மற்றொரு செயல்பாடுகளும் துவங்கி இருந்தது, எனக்கு உயரம் அச்சமில்லை என்றாலும் மனைவியும் மகளும் விரும்பினார்கள், சிறுவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களை கயிற்றில் தொங்கிவரும் அந்த விளையாட்டுக்கு அனுப்பி வைத்தேன், 70 அடி உயர கோபுரத்தில்  50 அடி உயரத்தில் இருந்து கயிறு 200 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு உயரம் குறைவான பகுதியில் இணைக்கப்பட்டு இருக்கும், அதில் பாதுகாப்பு பட்டிகளைக் மாட்டிவிட்டு தொங்கவிடுகிறார்கள், 20 வினாடிகளில் மறுபக்கம் சறுக்கியபடி வந்துவிடமுடியும், அதில் தொங்கி வரும் போது கைகளை விரித்து வந்தால் பறப்பது போல் ஒரு அனுபவம் கிடைக்கும், அனுபவம் நன்றாக இருந்ததாக மனைவியும் மகளும் தெரிவித்தார்கள்.


அந்தப் பகுதிக்குச் சற்று கீழே யானைச்  ஏற்றத்திற்கான  இடம் இருந்தது, 7 யானைகள் வரை வைந்திருந்தார்கள், அதில் 4 பெண் யானைகளாம், 3 ஆண் யானைகளாம், யானை மீது பயணம் செய்பவர்கள் பாகனின் தொள் பட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், அம்பாரியெல்லாம் கிடையாது, மகளும் மனைவியும் அச்சப்பட நான் மட்டும் தான் யானைச் ஏற்றத்திற்கு சென்றேன், அது இலவசம் தான், ஓட்டல் கட்டணத்துடன் இணைந்தது தனியாக பணம் கொடுக்கத் தேவை இல்லை. யானைகளில் ஏறுபவர்களும் பாகனும் காலணி அணிந்திருந்தனர், எனக்கு யானை கணபதி, வினாயகர் என்கிற எண்ணம் எல்லாம் எதுவும் இல்லை, அது தவிர்த்து உட்காரப் போகும் யானை ஆணா பெண்ணா (பெண் யானையும் பிள்ளையாரா ?) என்றெல்லாம் தெரியாது, இருந்தாலும் காலணியை கழட்டுவது என்றே நான் முடிவு எடுத்து இருந்தேன். காரணம் யானை மனிதர்களுடன் நெருக்கமாக, அன்பாகப் பழகும் ஒரு விலங்கு அதன் மீது காலணியுடன் ஏறுவதற்கு எனக்கு மனதில்லை.  நெல்லு மூட்டை அடுக்கிய மாட்டு வண்டியில் மூட்டை மீது ஏறி உட்கார்ந்திருப்பதைப் போன்று தான் இருந்தது, யானை அசைந்து நடக்க கொஞ்சம் அதன் தசைகள் அசைய, நமக்கு  இருக்கமான மூட்டையில் அமர்ந்திருப்பதைக் காட்டிலும் நொழ நொழ உணர்வு ஏற்படும்,  தொலைவில் பார்க்க பாறை உடம்பு போல் இருக்கும் யானை, மேல் அமர்ந்து பார்க்க முதுகில் கூரான முடிகள் நெருக்கமாக இருந்தது, மேலே துணி இருந்ததால் முடி என் உடலில் குத்தவில்லை. யானைப் பாகன் உற்சாகமாகப் பேசினார். 8 ஆண்டுகளாக பாகனாக இருக்கிறாராம், நாள் தோறும் அவருடைய ஊரில் இருந்து 30 கிமீ பைக்கில் வந்து செல்வாராம், ஊதியமாக சிங்கை வெள்ளி மதிப்பில் 700 வெள்ளிகள் கொடுக்கிறார்களாம். 7 யானைக்கும் சேர்ந்து 10 பேர் பணியில் இருக்கிறார்கள், யானை காடு போன்ற பகுதிகுள் நடந்து சென்றது, அங்கிருந்து சற்று சரிவில் ஏறிச் சென்றது, மேலே உட்கார்ந்திருக்கும் போது சற்று அச்சமாகத்தான் இருந்தது, தமிழில் தானே இருக்கிறது யானைக்கும் அடி சறுக்கும் பழமொழி. பயப்படாதீர்கள், யானை ரொம்பவும் வலிமையான விலங்கு நிதானமாக ஏறும் என்றார், 10 நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து விட்டார், இறங்கி காலணிகளை அணிந்து கொண்டேன், அடுத்து யானைகளை வைத்து (வித்தை) காட்சியாம். துவங்க இருந்தார்கள், ஆனால் அதற்கு கட்டணம் பெரும் தலைக்கு 20 வெள்ளி, சிறியவர்களுக்கு 10 வெள்ளி. 50 வெள்ளி அழ என்னால் முடியாது தவிர யானை வித்தைகளை ஏற்கனவே சிங்கை விலங்கியல் பூங்காவில் பார்த்து 2 திங்கள் கூட ஆகாத நிலையில் அங்கிருந்து கிளம்பிவிட்டோம் ஒரு யானை ஏற்றத்திற்கான மற்ற கூப்பனும் பயன்படுத்தவில்லை.


மணி மாலை 4:30 ஆகி இருந்தது, விடுதிக்குச் சென்று கட்டணப் பேருந்தில் ஏறி அவர்கள் குறிப்பிட்ட விடுதிக்கு வெளியே 10 கிமீ தொலைவில் இருக்கும் கடைத் தெருவைச் சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து அதற்கான பேருந்து வந்ததும் ஏறினோம். விடுதி வளாகத்தைவிட்டு சோதனைச் சாவடி தாண்டி ஒரு சாலையில் பிரிந்து சென்றது வாகனம், அந்த பகுதிகள் உயரம் குறைவான மரங்களாலும், செடிகளாலும் புதர்கள் அடங்கிய காட்டுப் பகுதி நடுவே சாலைகள் அமைத்திருக்கிறார்கள்,  சாலைக்கு அருகே மின் கோபுரங்களும் இருந்தன. அந்தப் பகுதியில் சுற்றுலாத் தளங்கள் தவிர்த்து பொது மக்களுக்கான குடியிருப்போ, நகங்களோ இல்லை, சுமார் 20 கிமீ பரப்பளவில் பல்வேறு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன, 15 நிமிடப் பயணத்திற்கு பிறகு இது தான் அந்த கடைத் தெரு என்று ஒரு இடத்தில் பேருந்து நின்றது.



அந்த கடைத்தெருவின் பெயர் 'பசர் ஒளே ஒளே(Pasar/Bazar Ole Ole)' பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸுகள் இருக்கும் என்று நினைத்து வந்த இடத்தில் 20 மர வீடுகளை அமைத்து அதில் கடைகள் இருந்தன, அவற்றில் மசாஜ் குடில்கள் மற்றும் சுற்றுலா பரிசு பொருள்கள், உணவு பொருள்கள் விற்கும் கடைகள் தவிர்த்து எதுவும் இல்லை, பேருந்து கட்டணமாக 13 வெள்ளிகள் செலுத்தி வந்தது இதைப் பார்க்கத்தானா ?

திரும்பப் போகலாம் என்று பார்த்தால் அடுத்து பேருந்து ஒரு மணி நேரம் சென்று தான் கிளம்புமாம், ஒரு மணி நேரம் அங்கே பொழுதை ஓட்டுவது கடுப்பாகத்தான் இருந்தது, அங்கு தண்ணீர் பாட்டில் விலை குறைவாக இருந்தது 2 வெள்ளிக்கு இரண்டு பாட்டில் கிடைத்தது, இதுவாவது விலைக் குறைவாக இருக்கிறதே என்று நினைத்தே வாங்கினேன், பின்னர் அக்கம் பக்கம் வீடுகளுக்குக் கொடுக்க நினைவுப் பொருள்கள் சில வற்றை வாங்கினோம், இளநீர் கிடைத்தது ஒரு இளநீர் 3 வெள்ளி, பெரிய இளநீர் தான் என்றாலும் அதே இளநீர் ஜோகூரில் 3 ரிங்கிட் அதாவது அந்த விலையில் பாதிக்கும் குறைவே, மலேசியாவை ஒப்பிட இந்தோனேசியா ஏழை நாடு தான். இங்கு விலைகள் எல்லாம் டிமாண்ட் என்ற வகையில் ஏற்றமாகவே விற்கிறார்கள், சுற்றுலாவருபவர்களுக்கு வேறு எங்கேயும் வாங்க வாய்ப்பில்லாத நிலையில் அவர்களிடம் இருந்து கரந்துவிட முடியும் என்றே விலைக் கூடுதலாகவே விற்கிறார்கள். கடைத்தெரு என்று விடுதி காட்டிய இடமும் விடுதியினரால் புறநகரில் அமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர்த்து சிறப்பாக அதில் ஒன்றும் இல்லை, மசாஜ் செய்து கொள்ளாதவர்கள், உணவு விடுதிக்குள் செல்லாதவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு அந்த இடத்தில் 10 நிமிடத்திற்குமேல் வேலை இல்லை. ஒரு மணி நேரத்தை நகர்த்திவிட்டு பேருந்து நின்ற இடத்திற்கு வந்து பேருந்தில் ஏற பேருந்து புறப்படது, மாலை 6:30 ஆக விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

விடுதிக்கு பின்னே இருந்த மாலை நேரக் கடற்கரையில் சற்று நேரம் சுற்றிவிட்டு அலைகளில் கால் நனைத்துவிட்டு விடுதி அறைக்கு வந்தோம், பொடியன் பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் செய்யவில்லை, அவ்வப்போது ஐபோனைக் கேட்டு அடம்பிடித்து வாங்கி விளையாடினான். இரவு உணவு ? நேற்று சாப்பிட்ட நாண் வகை உணவு இன்னிக்கும் சாப்பிட சலிப்பு என்றார்கள் மகளும் மனைவியும், பின்னர் விடுதியில் அமைந்த உணவகத்தில் அறைக்கே உணவு எடுத்து வந்து தரும் ஏற்பாடுகள் இருந்ததால் வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் மற்றும் ப்ரைட் நூடுல்ஸ் பட்டியலில் இருக்க அதைத் தேர்வு செய்து அழைத்துக் கேட்டுக் கொள்ள உணவு வந்து சேர்ந்தது, ஒரு ப்ளேட் 12 வெள்ளி மொத்தம் 24 வெள்ளி அதனுடன் சேவைக்கட்டணம், வரி உள்ளிட்டவைச் சேர்த்து 30 வெள்ளிக்கு கட்டண ரசீதும் வந்தது, பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு போததற்கு ரெடிமேட் நூடுல்ஸ் போட்டு சாப்பிட்டுவிட்டு, தொலைகாட்சியை ஓடவிட்டோம் சிங்கை தொலைகாட்சியின் மணல் கயிறு திரைப்படம் ஓடிக் கொண்டு இருந்தது, படுத்தப்படியே பார்த்துக் கொண்டு இருந்தோம், நான் பாதியில் தூங்கிவிட்டேன். 

அடுத்த நாள் பெரிய திட்டம் ஒன்றும் இல்லை, அதற்கு வாய்ப்புகளும் இங்கு இல்லை, 

மறுநாள் நன்பகல் விடுதி அறையை ஒப்படைக்க வேண்டும், அதுவரை என்ன செய்வது ?

5 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

இன்னிக்குப் பரவாயில்லாம பொழுது நல்லாவே போயிருக்கு போல!

அந்த ஃப்ளையிங் ஃபாக்ஸ்லே பறந்து வரும்போது ஜோரா இருக்கும்.

நானும் யானை மேலே ஏற மாட்டேன். பாவம் புள்ளையார் என்ற நினைப்புதான்:-)

போனவாரம் மணல்கயிறு படம் வலையில் இறக்கி வச்சு தினம் கால்மணி/அரைமணியாப்பார்த்து முடிச்சேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் கூறியது...
இன்னிக்குப் பரவாயில்லாம பொழுது நல்லாவே போயிருக்கு போல!

அந்த ஃப்ளையிங் ஃபாக்ஸ்லே பறந்து வரும்போது ஜோரா இருக்கும்.

நானும் யானை மேலே ஏற மாட்டேன். பாவம் புள்ளையார் என்ற நினைப்புதான்:-)

போனவாரம் மணல்கயிறு படம் வலையில் இறக்கி வச்சு தினம் கால்மணி/அரைமணியாப்பார்த்து முடிச்சேன்.//

ஆமாம், பொழுது ஓரளவு உற்சாகமாகப் போனது, பையனும் பொண்ணும் இருக்காங்களே, நாம சோர்ந்து உட்கார்ந்திருந்தாலும் அவங்க ஓய்வெடுக்க விடமாட்டாங்க, கடைத்தெரு என்று போன இடம் தேறவில்லை, ஒரு மணி நேரம் ரொம்பவே அலுப்பை ஏற்படுத்தியது.

suvanappiriyan சொன்னது…

புதிய இடத்தை தெரிந்து கொண்டோம். இயற்கையோடு அமைந்த இடமாகத் தெரிகிறது.

மாதேவி சொன்னது…

"திரும்பவும்போக விரும்பாத இடமா":)))
கண்டுகொண்டோம்.
படங்கள் நன்றாக இருக்கின்றன.

Yaathoramani.blogspot.com சொன்னது…

அந்த் ஃப்ளியிங் பாக்ஸ் பார்க்க அருமையாக இருந்தது
யானைச் சவாரியும் கூட
பொதுவாக அனைத்து புகைப்படங்களையும் பார்க்கையில்
அந்த சுற்றுலாத் தனம் அனைத்தும் மிக சுத்தமாக இருப்பது போல் பட்டது
படங்களுடன் பதிவும் அருமை.தொடர வாழ்த்துக்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்