*******
நாய் செல்லுமா சொர்க்கம் ? சென்ற சனிக்கிழமை அழகான நாய் படம் போட்டு 'முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி' என்ற தகவல் விளம்பரம் சிங்கைத் தமிழ் முரசில் வந்தது. நாயை வளர்த்தவர்களுக்கு அந்த நாய் எந்த அளவுக்கு நன்றியாகவும் அன்பாகவும் இருந்தது என்பதை அந்த விளம்பரம் உணர்த்தியது. ஆனாலும் நாய்க்கு சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு இதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான். நல்ல வேளை 'ஆத்ம சாந்தி' வழிபாடு என்று அவர்கள் போடவில்லை. பூனைக்கு கடவுள் இருந்தால் அது ஒரு பெரிய பூனை அந்தப் பூனையால் நினைத்த இடத்தில் பாலோ எலியோ வரவழைக்க முடியும், நாய்க்கு கடவுள் இருந்தால் எழும்புத் துண்டுகள் சதைப்பற்றுடன் வரவழைக்கும், நம்ம மனித கடவுள் கான்செப்ட் கூட அப்படித் தானே, நம்மால் முடியாதவற்றை கடவுள் செய்து கொடுத்துவிடும் என்பது நம்பிக்கைதானே. மனிதப் பண்புகளற்ற கடவுள் எந்த ஒரு மதத்திலும் காட்டப்படுவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கவும்.
*******
இவர்கள் அந்த நாய்களைப் போல் பணக்கார வீட்டில் பிறந்திருகக் கூடாதோ ? என்று நினைக்கும் படி அவலங்களைப் பார்க்க ஆதங்கம், சினம், ஏரிச்சல் ஏற்பட்டது, இவர்களுக்கு மதம் அளித்த கடவுள்கள் நாளொன்றுக்கு கைப்பிடிச் சோறு கூட கொடுக்கமால் போனதை நினைக்க சினம், இவர்களை அடிமைகளாகக் கூட ஏற்றுக் கொண்டு வாழவிடாமல் சாகடிக்கும் எந்திரங்களை நம்பிய இன்றைய முதலாளிகள் உலகத்தின் மீது எரிச்சல். நரக நெருப்பு இன்னும் என்ன என்ன நரகக் கோட்பாடுகள் இருக்குமோ அவற்றையெல்லாம் சோமாலிய மக்கள் நாள்தோறும் அனுபவித்தே வருகிறார்கள், நாம் வீணடிக்கும் உணவில் கூட இவர்களின் பசி போக்கும் பருக்கைகள் இருக்கலாம். பழங்குடி இனருக்கும் ஆதிவாசிக்கும் மதம் வழங்கும் 'ஆண்டவன் அவர்களில் பலருக்கு உண்ண அரிசியே வைத்திருக்கமாட்டான் பின்னே எங்கே அரிசியின் மீது அவர்களின் பெயர்களை எழுதுவது ?

********
செல்பேசி இணையச் சேவை வந்த பிறகு தொலைகாட்சிகளில் செய்தி தவிர்த்து எதையும் விரும்பிப் பார்ப்பது இல்லை. வெளியே செல்லும் இடங்களில் 10 நிமிடத்திற்கும் மிகுதியான பயண நேரம் இருந்தால் யூடியூப் ஓட விடுவேன், அப்படி ஓடவிட்டதில் 'வென்றிடுவேன்........நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்......எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்....' என்ற அகத்தியர் படத்துப் பாடல். அது போன்று போட்டிப் பாடல்கள் இப்பொழுதெல்லாம் படங்களில் மிகக்குறைவு அல்லது இல்லை. டி எம் எஸ் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இருவரும் கர்ஜனை செய்து பாடி கலக்கி இருப்பார்கள், அதில் இரவணனாக நடிக்கும் ஆர் எஸ் மனோகருக்கு டி எம் எஸ் குரல், இராவணனின் கவுரவம், அகந்தை அனைத்தையும் முகத்தில் அப்பட்டமாகக் காட்டி இராவணின் உயிராகவே உட்கார்ந்திருப்பார். யார் இசைப்பதில் மலை உருகும் என்பதே போட்டி, இராவணனுக்கு அகத்தியருக்கும் போட்டி நடக்கும், ஆக்ரோசமான வாசிப்பில் இராவணனுடைய வீணையின் தந்தி அறுந்துவிடும் தொடர்ந்து வாசிக்கும் அகத்தியர் மலையை உருகச் செய்வார், இராவணன் தோற்றுவிடுவார். இப்ப இந்தப் படம் வந்தால் செல்லாது செல்லாது இரவணனுக்கு வேற வீணையை கொடுத்து வாசிக்கச் சொல்லி போட்டியைத் தொடரச் செய்யுங்கள் என்று சொல்லலாம். கடவுள் வாழ்த்தை கணக்கில் கொண்டு அம்பிகாவதி 99 பாடல் தான் பாடினான் என்று தலையறுத்த சமூகம் இது. வீணை தந்தி அறுகாமல் பாடினால் தான் வெற்றி என்ற கட்டுபாடு எதுவும் இன்றி ஆனால் அதை வைத்தே வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுகிறார்களாம் :) முழுப்படமும் இங்கே
யூடியூப் இணையச் சேவை வாழ்க வாழ்க. திரைக்கு வந்து சில நாட்களே ஆன திரைப்படங்களைக் கூட கோடம்பாக்கம் காக்கிறதோ ஆனால் யூடியூப் காக்கும் போல.
********
சிறு கவிதை : சிங்கையில் இந்த வார இலக்கிய விழாவில் கவிமாலைக் கவிதைகள் அடங்கிய நுல்களை வெளியிட்டு இருந்தனர். பொதுவாக கவிமாலைக் கவிதைகள் தலைப்பு கொடுக்கப்பட்டு பின்னர் அவற்றை கவிஞர்கள் தங்கள் சிந்தனையில் எழுதிவந்து கவிமாலை நிகழ்ச்சிகளில் வாசிப்பார்கள், அவற்றில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகளை வழங்குவர், வாசிக்க வந்த கவிதைகள் சிலவற்றை ஆண்டுவிழாவில் கவிதைத் தொகுப்பு நூல்களில் சேர்த்து வெளி இடுவார், ஏணியும் தோணியும் என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாத கவிமாலையில் சேர்க்கப்பட்ட எனது கவிதையும் தொகுப்பு நூலில் வந்திருந்தது, நேரமின்மையால் நான் விழாவிற்குச் செல்லவில்லை
ஏணியும் தோணியும் !
ஏணி ஏறிய பின் எட்டி உதைக்கும் கால்களே !
உங்கள் கால்களின் தன்னம்பிக்கை வலி(மை)யை
உணர்ந்து கொண்ட பெருமையில்
மீண்டும் மீண்டும் பிறருக்காகவும் சாயவே விரும்புகிறேன் !
வறண்ட ஆற்றங்கரையில் ஓய்ந்திருக்கும்
தோணி சொல்லிற்று,
கண்ணீர் பெருக்கில் வீழ்ந்தோரை கரைசேர்க்க
முயல்கிறேன், எடுத்துச் செல்வீர்களா ? இலங்கைக்கு !
2 கருத்துகள்:
ஏணியும் தோணியும் என்ற தலைப்பில் ஆகஸ்ட் மாத கவிமாலையில் சேர்க்கப்பட்ட எனது கவிதையும் தொகுப்பு நூலில் வந்திருந்தது, நேரமின்மையால் நான் விழாவிற்குச் செல்லவில்லை///
வாழ்த்துக்கள்..,
arumai
கருத்துரையிடுக