சிங்கையில் இருந்து வெளியாகும் இணைய இதழ்

திருமா அறிமுகப்படுத்திய தமிழ் கொடி !

Wednesday, December 29, 2010

தமிழ் கொடி என்றதும் தமிழ் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளின் இந்திய இறையாண்மையை சிதைக்கும் திட்டமிட்ட சதி என்று தேசியவாதிகள் கிலி பிடித்து உளறுவார்கள். தேசியம் என்கிற பெயரில் மாநில உரிமைகளும்,, மாநில மொழியும் அழிந்து போகாமல் இருக்க மொழி உணர்வை மேம்படுத்த தமிழ் நாட்டிற்கு தனிக் கொடி தேவை என்பதை நான் வழிமொழிகிறேன். தேசியவாதிகள் பயந்து மிரள மாநிலக் கொடிகள் என்பவை ஒரு அடையாளம் என்பது தவிர்த்து எதுவும் இல்லை, அண்டைமாநிலம் கர்நாடகாவில் ஏற்கனவே கர்நாடகா மாநிலத்திற்கான தனிக் கொடி இருந்துவருகிறது, வாட்டாள் நாகராஜ் ஏந்துவது கர்நாடக மாநிலக் கொடியைத்தான்.

தமிழர்களுக்கான அடையாளம் மொழி, மொழி என்பது பண்பாட்டு அடையாளம் மட்டுமே, இவற்றை குறியீடாகக் கொள்ள முடியாது. உலகமெங்கும் குறீயீடுகள் மக்கள் இனக் குழுவை அடையாளப்படுத்த ஏற்படுத்தப்படுவது நடைமுறைதான். நிலம்சார்ந்த வகையில் தமிழ் நாடு என்று சொல்லப்படுவதற்கு வெறும் வரைபடம் தவிர்த்து எந்த அடையாளமும் இல்லை. தற்போது தமிழ் கொடி அமைத்திருப்பது வரவேற்க்கக் கூடிய ஒன்று, இதை என்றோ செய்திருக்க வேண்டும்.

தற்போது திருமாவால் வடிவமைக்கப்பட்டு திக தலைவர் வீரமணி அவர்களால் ஏற்றப்பட்டது. தமிழ் தனிக்கொடிக்கு முதல்வர் கருணாநிதியின் ஒப்புதல் எதுவும் இல்லை. மேலும் இதனை விரும்பவும் இல்லை, காரணம் தேசியவாத காங்கிரசை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதே.

தமிழ் கொடி பற்றிய சிந்தனையும், செயல்படுத்தலும் சரிதான், இருந்தாலும் இதுபற்றி பல்வேறு தரப்புகளிடம் விவரித்து, பல்வேறு வடிவமைப்புகளாக வைத்து ஒன்றை தெரிவு செய்திருக்கலாம், அரசியல் கட்சிகளிடம் ஒற்றுமையான கருத்துகளோ, ஏற்புகளோ கிடைத்திருக்காது. ஆனால் பொதுமக்களிடம் கருத்தும் வாக்கெடுப்பும் நடத்தி இருக்கலாம்.

கொடியில் தமிழ் நாட்டின் சின்னங்கள் எதுவுமே இல்லை. தமிழ் நாடு பஞ்சு உட்பட விவசாயத்திற்கு பெயர் பெற்ற மாநிலம், மீன்பிடித் தொழில் பெயர்பெற்றது, பல்வேறு சமய / மத / மற்றும் பகுத்தறிவு சிந்தனைகள் நிறைந்த மாநிலம். இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு இவற்றை காட்டும் வடிவமைப்பு கொடியில் இருந்தால் நன்றாக இருக்கும்.


அவசர கெதியில் 'நான் தான் பெயர் பெற வேண்டும்' என்று கட்டிய தமிழ்நாட்டு தலைமைச் செயலகத்தைப் பாருங்கள், எனக்கு அது பிடிக்கவே இல்லை. தமிழ் நாட்டின் முகப்பைக் காட்டுவதாக, கட்டிடக் கலையைக் காட்டுவதாக கட்டிடம் அமைந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் எந்த ஒரு சின்னமும் தலைமை செயலக கட்டிடத்தில் இல்லை. எண்ணை தொழிற்சாலையில் இருக்கும் சேமிப்பு தொட்டி ஒன்று பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ, அல்லது நெல் அரவை மில்களின் ஊரல் தொட்டிகள் பெரிதாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது தலைமைச் செயலகம்.

சிற்பகக் கலைக்கும் / கோபுரங்களுக்குப் பெயர் போன தமிழ் நாட்டில், தாம் தமிழர்களின் அடையாளம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரால் கட்டிமுடிக்கப்பட்ட தலைமைச் செயலகம். பாதி வரை ஈயம் பூசப்பட்ட கவிழ்த்து வைத்த கரிபிடித்த அண்டாவைப் போலவே இருக்கிறது என்று காணும் போதெல்லாம் வருத்தம் கொள்கிறேன்.

தமிழ் கொடியும் அவ்வாறில்லாமல் தமிழர் பண்பாட்டைச் சொல்லும் அடையாளங்கள் அதில் இருக்க வேண்டும், கொடி அமைத்தல் நல்லச் செயல், தேவையும் கூட என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. திருமாவின் முன்னெடுப்பும், திக வீரமணியின் ஒப்புதலும் நல்ல துவக்கம். ஆனால் இதுவே இறுதி என்பதை ஏற்கமுடியவில்லை. கொடியை மாற்றி அமைத்து பொதுமக்களின் ஒப்புதல் பெறுவது சரியான நடைமுறையாக இருக்கும்.

சுட்டிகள் :

தமிழர் இறையாண்மை மாநாடு புகைப்படத் தொகுப்பு


கூட்டணியில் இருக்கிறோம்... கூட்டம் போடத் தவிக்கிறோம்!

10 கருத்துக்கள்:

  • கக்கு - மாணிக்கம்
     

    இது போன்ற செயல்களில் பொது மக்களின் விருப்பங்களை மற்றும் தமிழ் அறிஞர்களின் ஆலோசனைகளின் கீழே இவைகள் செயபடவேண்டும். அவைகள் அணைத்து தமிழர்களின் ஒப்புதலை கொண்டிருக்க வேண்டும். அன்றி திருமாவளவன் தனக்கு பிடித்த விதத்தில் கலர் துணிகளை இணைத்து "இதுதான் தமிழர்களின் கொடி" என்று
    நகைப்புக்குரியது. திருமாவளவனும், வீரமணியும் கருணாநிதியும் ஒப்புக்கொண்டால் மட்டும் அது தமிழர் கொடி என்று ஆகி விடுமா? இவர்கள் எல்லாம் தமிழர்களுக்கு அத்தாரிடியா என்ன? இது போன்ற கூத்துக்களை தமிழர்கள் வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள்.

  • D.R.Ashok
     

    உங்களது இரண்டு கருத்துக்களும் ஏற்புடையதே...

  • கக்கு - மாணிக்கம்
     

    திருமாவளவன் சாதிகட்சியின் கொடியினைதான் இங்கு பயன்படுத்தியுள்ளார். நீல நிறமும், அந்த நட்சத்திரமும் அவர் கட்சி கொடியில் உள்ளவையே. இதுபோன்ற நட்சத்திர அமைப்பு தமிழ் கலைகளில் கிடையாது.இங்கு ஆறு கோண அமைப்பை உடைய வடிவமே நட்சத்திரமாக கருதப்பட்டது. இந்த ஐந்து கோண நட்சத்திரம் இடை காலங்களில் வெளி நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டது. அதுசரி இப்போது தமிழர்களுக்கு ஏன்தனிக்கொடி? எத்தனை தமிழர்கள் 'வெளிக்கி' இருக்ககூட இடமில்லாமல் பொதுவிடங்களில், சாலையோரங்களில் மலஜலம் கழிக்கும் தொன்மையான் பழக்கத்தை இன்னமும் கை கொண்டுள்ளனர்.இவர்களின் இந்த "நாகரீகத்தை" மாற்றி,அவர்களுக்கு கழிப்பிட வசதிகள் செய்துதர எவரும் தயாராய் இல்லை இங்கே. இருக்கும் கொடிகள் பத்தாது என்று இன்னொமொரு கொடி எதற்கு?

  • சிநேகிதன் அக்பர்
     

    தேசியப்பற்றோடு மாநிலப் பற்றும் அவசியம்தான். ஆனால் அது ஒரு சிலரின் சுயநலத்துக்காக பயன்பட்டுவிடக்கூடாது

  • கோவி.கண்ணன்
     

    கக்கு மாணிக்கம், கொடியின் அரசியல் எதுவாக இருந்தாலும் கொடி தேவை என்பதே என்கருத்து, மற்றபடி திருமா வடிவமைத்த கொடியில் திருமா கட்சிக் கொடியும், பாமக கட்சியின் கொடியும் சேர்ந்தார் போல் இருக்கு என்பதாகத்தான் நானும் நினைக்கிறேன். இதன் வடிவமைப்பில் உடன்பாடு இல்லை

  • கோவி.கண்ணன்
     

    //சிநேகிதன் அக்பர் said...
    தேசியப்பற்றோடு மாநிலப் பற்றும் அவசியம்தான். ஆனால் அது ஒரு சிலரின் சுயநலத்துக்காக பயன்பட்டுவிடக்கூடாது

    4:26 PM, December 29, 2010//

    பற்றுகள் வெறியாக மாறாதவரை எந்தப் பற்றும் நல்லதே.

  • கோவி.கண்ணன்
     

    //D.R.Ashok said...
    உங்களது இரண்டு கருத்துக்களும் ஏற்புடையதே...

    2:36 PM, December 29, 2010//

    மிக்க நன்றி

  • கும்மி
     

    ஒவ்வொரு முறையும், கருணாநிதி ஏதேனும் ஒன்றைத் தொடங்கி வைத்து அது முடிவுறுவதற்குள்ளாக, ஆட்சி மாற்றம் நிகழ்ந்து அதைத் திறந்து வைத்து, ஜெயலலிதா பெயரைத் தட்டிச் சென்றுகொண்டிருந்தார். (கோயம்பேடு பேருந்து நிலையம்,,,,) தலைமைச் செயலகக் கட்டுமானத்தில் அதுபோல் எதுவும் நடந்துவிடக்கூடாது, தன்னுடைய ஆட்சியிலேயே திறக்கப்படவேண்டும் என்னும் நோக்கில் அவசர அவசரமாகக் கட்டி முடிக்கப்பட்டது. இதில் எப்படி கலை நேர்த்தியும், அழகுணர்ச்சியும் இருக்கும்? அண்டாவை கவிழ்த்து வைத்தது போல் ஒன்றுதான் கட்ட முடியும்.

    ---
    சில ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நெடுமாறன் தமிழர் (தேசிய ?) மாநாடு ஒன்று நடத்தினார். அதில் தமிழர்களுக்கான உடை உட்பட பலவற்றை முன்வைத்தார். அதில் கொடியும் ஒன்றா என்பது நினைவில்லை.(தகவல் தெரிந்தவர்கள் உதவவும்). இதுபோல் ஒவ்வொரு அமைப்பும் தன்னிச்சையாக ஒன்றை வலியுறுத்துவது சற்று விசித்திரமாகத்தான் உள்ளது.

  • நாங்கள் தமிழர்கள்
     

    இப்போது என்ன இவருக்கு தமிழர்கள் மீது திடிர் அக்கரை. இங்கு சீமான் தமிழர் கோசம் போட ஆரம்பித்தாயுடன் அங்கு கூட்டம் கூடுவதை பார்தாயுடன் நம் தானை தலைவன், திருமா மற்றும் வீரமணி போட்ட திட்டம்தான் இந்த கொடி மற்றும் மாநாடு.........

  • துளசி கோபால்
     

    புது சட்டசபைக் கட்டிடம் பார்க்கக் கொஞ்சம்கூட நல்லாவே இல்லை:(

    //புது சட்டசபை(பிரமாண்டமா இருக்கே தவிர பார்க்க அம்சமா இல்லை. தமிழ்நாட்டுப் பாரம்பரியக் கட்டிடக்கலை எங்கே போச்சு?) //

    இது போன முறை சென்னை விஜயத்தின்போது துளசிதளத்தில் குறிப்பிட்ட வரிகள்.

QR Code for this Blog

qrcode

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

- : புலிகளைக் காப்பாற்றுவோம் : -

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP