பின்பற்றுபவர்கள்

20 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா φ

தமிழக இந்துக்கள் (சைவ / வைணவர் / நாட்டார் தெய்வங்களை வணங்குபவர்/ வைதீக மரபினர் என) அனைவரும் ஏற்றுக் கொள்ளும் ஒரே ஒரு பொது கடவுள் முருகன். சங்காலத்திற்கு முற்பட்டே தமிழகத்தில் முருகன் வழிபாடு வழக்கத்தில் இருக்கிறது என்பதற்கு இலக்கியங்களில் ஏராளமான குறிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. தமிழகத்தில் குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று போற்றப்பட்டது என்பதில் இருந்து முருகன் வழிபாடு தமிழகம் முழுவதும் பரவிக் கிடந்தன என்பது நமக்கு தெரிய வருகிறது. மலைகள் அற்ற தஞ்சை மாவட்டத்தை அடக்கிய கும்பகோணம் சுவாமி மலை, நாகையை ஒட்டிய எட்டுக்குடி, திருவாரூரை ஒட்டிய என்கண், சிக்கல் சிங்காரவேலர் கோவில்கள் போன்று பெரிய ஆலயங்களும், சிறிய ஆலயங்களும் எண்ணற்ற அளவில் முருகனுக்கு ஆலயங்கள் இருக்கின்றன.

தமிழர்கள் சாதி வேறுபாட்டில் விழுந்திருக்காத காலம் தொட்டே முருக வழிபாடு இருப்பதால், பின்னாளில் வருணத் தாக்குதலால் சாதியம் வளர்ந்த போதும் முருகன் இந்த சாதிக்கு மட்டுமே உரிமையுடைய கடவுள் என்று பிரிந்து போய்விடவில்லை. அதைவிட எங்களைச் சேர்ந்தவர் என்று காட்ட பல்வேறு தமிழக சாதிகளும் முருகனை வைத்து புனைவு கதைகளைப் புகுத்தி சேர்த்துக் கொள்ளவே செய்திருக்கின்றனர். வேடுவன் முருகன் எனவே குறவரும் மறவரும் முருகனை தங்களைச் சேர்ந்தவர் என்று சொல்லுகிறார்கள். முருகன் தங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்று காட்டுவதற்காக எழுதப்பட்ட 'செட்டி மகனே திலக கட்டிமணியே' என்ற ஒற்றையடி காவடி சிந்து பாட்டுக்கள் செட்டியார்களால் இயற்றப்பட்டது. தமிழகத்தில் முருகன் வழிபாடே முதன்மையானது என்று பின்னாளில் தமிழகத்தில் குடியேறிய போது அறிந்து கொண்டு முருகன் வேதக்கடவுள் என்று சொல்ல முயன்ற வைதிக மதம், வேதகடவுளான இந்திரனின் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்தும், தங்களின் முதல் கடவுளான வேதம் போற்றிய பிரம்மனை பிரணவ மந்திரத்தை மறந்ததற்காக சிறையில் அடைத்தாக புராணம் எழுதி (முதலில் தாழ்த்திக் கொண்டு) பிறகு தமதாக்கிக் கொள்ள முனைந்ததும் கூட நடந்திருக்கிறது. மேலும் குமரகுருபரரே குமரன் முருகன் என்றும், மேலும் கந்தபுராண பாடல்கள் முழுவதுமே முருகனை ஷண்முகனாக்கி, சுப்ரமணியனாக்கி, வேதக்கடவுளாக்கிப் போற்றிப் பார்த்தனர். வைணவர்களைக் முருகன் பக்கம் இழுப்பதற்காக திருமாலுக்கு இருப்பது போலவே அவதாரக் கதைகளும் சூரனை அழித்த கதைகள் மற்றும் திருமால் முருகனுக்குத் தாய்மாமன் என்ற உறவாகவும் சொல்லப்பட்டது. முருகனை உறவாகக் கொண்ட பின்பு சைவமும் வைணவும் கைகோர்க்க ஆரம்பித்தது.

சிறுதெய்வ வழிபாடாக இருந்தாலும் அது சிறப்படைந்திருந்தால் கொள்ளப்பட்டிருந்தால் அவற்றிற்கு
புராணம் ஏற்றி வைதிகவழி வந்ததாக காட்டுவது பின்னால் ஏற்பட்ட வழக்கு, இன்றும் கூட கிராமக் கோவில்களில் திருவிளக்கு பூஜை என்ற பெயரில் நாட்டார் தெய்வங்களை வேதகால தெய்வங்களின் 'அம்சம்' என்பது போன்று கதைகளைச் சொல்லியும், சமஸ்கிரத மந்திரங்களைச் சொல்லியும்
வேதகால தெய்வம் என்ற 'புரோமசன்' கொடுத்துக் கொண்டி ருப்பதைப் தற்காலத்திலும் பார்க்கலாம். இந்த வகையில் தான் காளியம்மன், மாரியம்மன் போன்ற நாட்டார் தெய்வங்கள் கூட சக்தியின் அவதாரமாக உருமாறின.

இவற்றிற்கான தேவைதான் என்ன என்று பார்த்தால் குறிப்பிட்ட உருவ தெய்வ நம்பிக்கைகள் அந்த மண்ணில் செலுத்தி வந்த ஆதிக்கமே காரணம் என்று தெரிகிறது. அவற்றில் புகுவதின் மூலம் அந்த மக்களுடன் உறவாட முடிந்தது. இதுபோன்றே முருகன் வழிபாடு பலசமயத்தினராலும் உரிமையுடன் போற்றப்பட்டது. அதாவது அபகரித்தல் என்று சொல்வதைவிட உரிமை இருக்கிறது என்று காட்டவே முதன்மையாக கையாளப்பட்டது. பிற்கால சமுக அரசியலில் 'தெய்வத்தை அபகரித்தல்' என்பதாக மாறியதற்கு காரணம். கதைகள் உண்மை என்று பக்தியாளர்கள் நம்பிவிட்டதால் அதையே காரணமாக வைத்து பிறருக்கும் இருக்கும் உரிமையை மறுத்ததாலேயே என்பதும் தெளிவாகிறது.

முருகன் வழிபாடு மட்டுமே இருந்த காலத்தில் சிவனுக்கு மைந்தனாக இருந்தது இல்லை. திருமாலுக்கு மருமகனாகவும் இருந்தது இல்லை. இவையெல்லாம் பின்னால் புனைவுடன் எழுதப்பட்டு வாரிசாக்கப்பட்ட கதைகள். முருகனுடன் இணைத்து எழுதும் போதும் தங்கள் நம்பும் கடவுளையும் முருக வழிபாடு செய்பவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பி செய்ததும் அது நடந்தேறியதும் அறிந்ததே. அதற்காக நான் சைவ கடவுள் சிவனையும், வைணவ கடவுள் திருமாலையும் வைதீக கடவுள் என்று சொல்லவில்லை. அவைகள் வைதீக மயமாக்கப்பட்டது வேறொரு நிகழ்வில் அது புத்தர் காலத்துக்கு பிந்தியது.

14 ஆம் நூற்றாண்டிற்கு பிறகே அதாவது சைவசமயம் ஓங்கி வளர்ந்த பக்தி இலக்கிய காலகட்டத்திலேயே பிள்ளையார் முருகனுக்கு அண்ணன் ஆக்கப்பட்டார். அதற்கு முன்பு எந்த சங்க இலக்கியங்களிலும் பிள்ளையார் வணக்கம் செய்து பாடல்கள் இல்லை. ஐயப்பன் முருகனுக்கு தம்பியானது இயற்கையாக நிகழ்ந்த ஒரு நிகழ்வு அதற்கு என்று தனியாக புனைவு தேவைப்படவில்லை. எனென்றால் ஐயப்பன் சிவனுக்கு மைந்தனாகிய போது முருகனுக்கும் தம்பியானவது பிறப்பின் அடிப்படையில் (இன்ஹெரிட்டன்ஸ்) ஏற்பட்ட இயல்பு நிகழ்வு.

இந்து பக்தி இலக்கியத்தின் வழியாகவோ அல்லது வேறுவழியாகவோ எதுவாக
இருந்ததலும் அதில் முருகனுடன் உறவை புனைவதைத் தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டுக்குள் எந்த கடவுளையும் இந்துமதம் சார்பாக புகுத்த முடியாது என்பதற்கு இவைகள் ஆதாரமாக இருக்கின்றன.

இவை மட்டும் தான முருகன் தமிழர்களுக்கு உறவானவன் என்று காட்டுவதற்கு ? இல்லை இல்லை. தமிழர்கள் எங்கு குழவாக குடிபெயர்ந்தாலும் குழுக்களாக இணைந்து கொண்டாலும் தவறாமல் உடன் எடுத்துச் செல்வது
முதன்மையாக முருகனைத்தான். கண்டி கதிர்காமம், மலேசியா பத்துமலை, சிங்கை தண்டாயுதபானி சுவாமி,
அட்லாண்டா முருகன் என தமிழர் இருக்கும் இடம் என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு முருகன் வழிபாடு தனிச் செல்வாக்கு படைத்தது.

பிள்ளையார் மற்றும் இராமனை எப்போதும் விமர்சித்த பெரியார் கூட முருக வழிபாட்டை அவ்வளவாக எதிர்க்கவில்லை. என்னதான் மூட நம்பிக்கை மற்றும் உருவ வழிபாடுகளை பெரியார் எதிர்த்திருந்தாலும் தமிழர்களின் 'ஓம்'கார முருகனை பெரியார் அவ்வளவாக தொடவே இல்லை. முருகன் மேல் இருந்த 'ஸ்கந்தன்' என்ற வைதீக பெயரையும், அதன் பெயரை வைத்து புனைந்த புராணங்களை மட்டுமே இகழ்ந்தார். முருகன் படங்களை தீயிட்டு கொளுத்தியதாகவோ, சிலைகளை உடைத்ததாகவே தெரியவில்லை. கலைஞர் முக அவர்கள் கூட அண்மையில் எட்டுக்குடியில் பெரியார் பாடலை பாடிக்கொண்டே பெரியார் தொண்டர்கள் முருகனுக்கு காவடி எடுத்தது சென்றதை நினைவில் இருந்து குறிப்பிட்டுள்ளார் என்பது இங்கு நினைவுறத்தக்கது.

தமிழருக்கு முழுமுதல் கடவுள் முருகன் என்று தமிழ் மக்கள் மனதில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பதிந்துவிட்ட நிலையில், முருகனையும் தமிழையும் என்றுமே தனித்துப் பார்க்க முடியாது. 12 கைகளும் உயிர் எழுத்துக்களாகவும் , தலைக்கு முன்று என 18 கண்கள் மெய் எழுத்துக்களாகவும் வேல் என்ற ஆயுதம் ஆய்த எழுத்தாகவும் முருகனின் உருவம் ஒரு 'தமிழ் குறீயீடு' என்கிறார்கள். வல்லின, மெல்லின, இடையின எழுத்துக்கள் சேர்ந்து 'தமிழ்' என்பது போல் தான் 'முருகு' என்ற சொல்லும் அழகாக அமைந்திருக்கிறது. தமிழும் முருகனும் வேறில்லை. தமிழ் நீசபாசை என்று பழித்துச் சொல்லும் போது அந்த அசுரர்களின் தலையை கொய்ய முதலில் எரியப்படுவது முருகனின் 'ஆய்த எழுத்தாக இருக்கும் கூர் வெற்றி வேல் தமிழ். அந்த வேல் கொண்டு , வீறுகொண்டு எறிபவர் யாவரும் முருகனின் உயர்ந்த திருவுருவில் (விஷ்வ ரூபம்) இருந்து எழும் முருகன்(பக்தர்)கள் தாம்.

முருகனும் தமிழும் வேறல்ல.

முருகன் தான் தமிழ், தமிழ் தான் முருகன் ! அறி'ஓம்' !!!

உரக்க சத்தமிடு'ஓம்' !

வெற்றிவேல் முருகனுக்கு ... அரோகரா
!

:)))

சென்ற பதிவில் குறிப்பிட்டு இருந்த தாடி வைத்த தமிழ்க் கடவுள் ? மேலே பாருங்கள் வள்ளியை ஏமாற்றும் முருகன் வேடத்தை, தாடி இருக்கும். :))


--
அன்புடன்,

கோவி.கண்ணன்

38 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

இந்த பதிவை முருகன் அடியார் விஎஸ்கே ஐயாவுக்கும், ஆத்திக நண்பர்களுக்கும் காணிக்கை ஆக்குகிறேன் !

சிவபாலன் சொன்னது…

ஜிகே,

நல்ல கட்டுரை!

பல விடயங்களை தந்துள்ளீர்கள்! நன்றி!

ஜெகதீசன் சொன்னது…

Gk,
நல்ல பதிவு..
முருகன் ஒரு தமிழ் மன்னன் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்..

மாசிலா சொன்னது…

நல்ல கட்டுரை கோவி.கண்ணன். நிறைய விடயங்களை தெரிந்துகொண்டேன்.

முருகனின் உருவப்படங்கள் வெள்ளைத்தோல் உடையவராக சித்தரிக்கப்படுவது ஏன்?

உண்மையில் அவர் வெள்ளையாக இருந்தாரா?

முருகன் என்பவர் ஒரு கடவுளா அல்லது மக்களின் நம்பிக்கை பாத்திரமா?

வடுவூர் குமார் சொன்னது…

படிக்கும் வரை "நல்ல ஆய்வுக்கட்டுரையோ?" என்ற எண்ணம் வந்தது,கடைசியில் உள்ள பத்தி இது மொக்கை பதிவோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.
:-)

இராம்/Raam சொன்னது…

கண்ணன்,

அற்புதம்.......

பல விசயங்களை அறிந்துக் கொண்டேன்... நன்றி.... :)

மங்கை சொன்னது…

நட்சத்திர வாழ்த்துக்கள் ஜி கே

நல்ல கட்டுரை...

வெற்றி சொன்னது…

கோ.க,
நல்ல கட்டுரை. பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

பண்டைய தமிழர்கள் இயற்கையையும், காவல் தெய்வங்கள் எனக் கருதப்படும் முருகன், வைரவர், முனியப்பர், அய்யனார், காளி போன்ற தெய்வங்களைத்தான் ஆதிகாலத்தில் வணங்கியதாக அறிந்தேன்.

ஆக அப்போது மதம் ஒன்று இருக்கவில்லை. தாம் வாழும் இடங்களுக்கு ஏற்ப தமது குல தெய்வங்கள் எனக் கருதப்படும் இக் காவல் தெய்வங்களையே வணங்கினர் என அறிந்தேன்.

ஈழத்தில் எனது ஊரும் பழைமை வாய்ந்த ஊர். அங்கே முருகன், வைரவர், காளி, முனியப்பர், அய்யனார் ஆகிய வழிபாடுகள் இன்றும் உண்டு.

எமது ஊரில் உள்ள முருகன் ஆலய்த்தைத் தவிர மற்றைய ஆலயங்களில் பூசை நடப்பதில்லை.

ஊர் மக்கள் இச் சிறு கொட்டில் கோயில்களுக்குச் சென்று தாமாகவே விளக்கேற்றி வணங்குவர்.

ஈழத்தில் ஆதிகாலத்தில் இருந்தே இருக்கும் முருகன் ஆலயங்கள் என நம்பப்படும் கதிர்காம முருகன் ஆலயம், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் போன்றவற்றில் பிராமணர்கள் அல்லாதோர்தான் பூசை செய்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். அவ் வழக்கம்தான் இன்றும் அங்கு நிலவுகிறது. ஆக இந்த ஆலயங்களில் சமஸ்கிருதத்திலும் பூசை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

ஓ...இது தான் தாடி வைத்த தமிழ்க் கடவுளின் இரகசியமா?
"வெண்தாடி வேந்தன்" முருகப் பெருமான் வாழ்க வாழ்க!! :-))

நல்ல கட்டுரை GK!

ILA (a) இளா சொன்னது…

பல நல்ல விஷயங்களை தந்து இருக்கீங்க ஜி.கே. முருகக்கடவுள் பத்தி ஒரு ஆன்மீக சொற்பொழிவே பண்ணிட்டீங்க. எம் பெருமான் முருகனே போற்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அதற்காக நான் சைவ கடவுள் சிவனையும், வைணவ கடவுள் திருமாலையும் வைதீக கடவுள் என்று சொல்லவில்லை.//

:-)))

//வைணவர்களைக் முருகன் பக்கம் இழுப்பதற்காக திருமாலுக்கு இருப்பது போலவே அவதாரக் கதைகளும் சூரனை அழித்த கதைகள் மற்றும் திருமால் முருகனுக்குத் தாய்மாமன் என்ற உறவாகவும் சொல்லப்பட்டது//

இங்கு மட்டும் மறைமலை அடிகள் மற்றும் தேவநேயப் பாவாணர், பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் கட்டுரைகளைச் சற்று படிக்க வேண்டும்.

முருகனுக்கு மாலவன் மாமன் ஆனது நில அடிப்படையில் எப்படிச் சாத்தியம், மலையும் காடும் ஒன்றொக்கொன்று கொடுக்கல் வாங்கல், சேயோன்-மாயோன் தொடர்புகள், பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் பற்றித் தேடும் ஆவலை மீண்டும் தூண்டிவிட்டீர்கள்.

G.Ragavan சொன்னது…

நல்லதொரு ஆய்வு கோவி. முருக வழிபாட்டில் இன்னொரு சிறப்பும் சொல்கிறேன். எல்லாத் தெய்வங்களும் அப்படி இப்பிடி மருவி உருவி கலந்தாச்சு. ஆனாலும் முருகனை மட்டுந்தான் இன்னும் முருகன்ன்னு தமிழ்ல சொல்றோம். கொற்றவை விரிசடையன் எல்லாரும் கெஜட்டுல பேர மாத்திக்கிட்டாங்க. இந்தாளு மட்டும் நூறு பேரு புதுப்பேரு வெச்சிக்கிட்டாலும் இன்னும் பழைய பேர விட மாட்டேங்குறாரு. :))))))))))

பழைய இலக்கியங்கள்ள பாத்தா முருகனைக் கொற்றவையின் மகன்னு சொல்வாங்க. விரிசடையன் மகன்னு சொல்வாங்க. சூர் தடித்தது மா அறுத்தது வள்ளியின் காதல் வரும். இதையே திரும்பத் திரும்பச் சொல்வாங்க.

// மாசிலா said...
முருகனின் உருவப்படங்கள் வெள்ளைத்தோல் உடையவராக சித்தரிக்கப்படுவது ஏன்?

உண்மையில் அவர் வெள்ளையாக இருந்தாரா?

முருகன் என்பவர் ஒரு கடவுளா அல்லது மக்களின் நம்பிக்கை பாத்திரமா? //

மாசிலா, உங்களது இரண்டு கேள்விகளையும் இணைத்தே எனக்குத் தெரிந்த விடை சொல்கிறேன்.

முருகன் என்பது இன்றைய நம்பிக்கையில் பலருக்கு பல கடவுள்களில் ஒரு கடவுள். ஆனால் பழைய சமுதாயத்தில் ஒரு இனத்தினர் இதுதான் கடவுள் என்று வழிபட்ட கடவுள்.

பொதுவாகவே கடவுள் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் என்று பெரும்பாலான இலக்கியங்கள் ஒத்துக்கொண்டாலும்...ஆனையைப் புரிந்த குருடர் போல தாம் எப்படியெல்லாம் உணர்ந்தனரோ அப்படியெல்லாம் இறைவனை வழிபடத் தொடங்கினர்.

தமிழில் கூட முருகக் கடவுளை சொற்களுக்குள் முடிக்க முடியாது. சொல்லி விளக்க முடியாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனாலும் சாமீன்னா இப்பிடித்தான்னு ஒரு நம்பிக்கை. அப்படி உருவகப் படுத்தும் போது செம்மைப் பண்பை வைத்தும் அறிவை வைத்தும் உருவகப் படுத்துகிறார்கள் தமிழர்கள். செம்மை செஞ்சுட்டு வான்னு தூத்துக்குடி திருநவேலி மாவட்டங்கள்ள இன்னமும் சொல்வாங்க. அந்தச் செம்மையை உருவகப் படுத்தும் போது சிவப்பு நிறம் வந்திருக்கிறது. வெள்ளை அல்ல. இன்னும் சொல்லப் போனால் முருகனின் ஆடை செம்மையானது என்று இலக்கியங்கள் சொல்வதுண்டு. அது இன்றைக்குக் காலப்போக்கில் வெள்ளையாகியிருக்கிறது. பழநி தண்டாயுதபாணி கருப்பாகத்தானே இருக்கிறார். திருச்செங்கோட்டில் வெள்ளையாக வைக்கத் தெரிந்தவர்களுக்கு எல்லாக் கோயில்களிலும் வெளுப்பாக வைக்கத் தெரியாமல் போயிருக்குமா. இன்றைய நிலையில் சினிமா நாயக நாயகிகள் வெளுப்பாக இருப்பது போல காலண்டர் படங்களில் முருகனும் வெளுப்பாகியிருக்கிறார். இயல்பாகவே நம்மவர் உள்ளிருக்கும் ஒரு தாழ்வு மனப்பாங்கின் வெளிப்பாடு அது. மாற வேண்டும். நிச்சயம் மாற வேண்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//என்னதான் மூட நம்பிக்கை மற்றும் உருவ வழிபாடுகளை பெரியார் எதிர்த்திருந்தாலும் தமிழர்களின் 'ஓம்'கார முருகனை பெரியார் அவ்வளவாக தொடவே இல்லை//

அலகு குத்திக் கொள்ளல், காவடி, பால்குடம் போன்ற நாட்டார் வழக்கங்களிலும் பூசனைகளிலும் பெரியாரின் நிலை என்ன GK? எதிர்த்தாரா இல்லை அமைதி காத்தாரா? அறிந்தவர் சொல்லுங்களேன்!

காளி, மாரியம்மன், கண்ணன், சிவன் போன்ற கடவுளரையும் தந்தை பெரியார் அவ்வளவாகத் தொட்டுச் செல்லவில்லை என்றே நினைக்கிறேன்! (பிள்ளையாரையும், இராமனையும் தொட்டுச் சென்ற அளவுக்கு)

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

தாடி வைத்த தமிழ்க்கடவுள்!
அருமை
நல்ல பல செய்திகள் அடங்கிய கட்டுரை

VSK சொன்னது…

எம்மான் முருகனைப் பற்றிய ஆய்வுப் பதிவு.

ஆய்வுப் பதிவுகளின் சிறப்பே, தான் எடுத்துக் கொண்ட ஆய்வுக்குத் தக்கதான செய்திகளை மட்டுமே தாங்கி வருவது.

அவ்வகையில் சிறப்பான தகவல்களை இதில் சொல்லியிருக்கிறீர்கள்.

நம்ப விரும்புவோர் நம்பட்டும்.

இதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் முழுக்கவும் உண்மையானவை அல்ல என மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இவை அத்தனையையும் மறுக்க நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.

தமிழின் முதல் இறைநூலாம் திருமுருகாற்றுப்படையைப் புரட்டினால், சிவன், பிள்ளையார், திருமால், பிரம்மன், இந்திரன், பார்வதி, இலக்குமி, கலைவாணி,தெய்வானை, வள்ளி, சூரன், அவன் சேவலும் மயிலுமானது, அந்தணர், இன்னும் பல அரிய தகவல்கள் புரியவரும்.

இங்கு அதையெல்லாம் சொல்லி நட்சத்திரத்தின் பாதையை மாற்ற விரும்பாததால், முருகன் புகழ் பாடும் இப்பதிவைப் போற்றி அனைவர்க்கும் முருகனருள் முன்னிற்கட்டும் என வேண்டுகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

// VSK said...
எம்மான் முருகனைப் பற்றிய ஆய்வுப் பதிவு.

ஆய்வுப் பதிவுகளின் சிறப்பே, தான் எடுத்துக் கொண்ட ஆய்வுக்குத் தக்கதான செய்திகளை மட்டுமே தாங்கி வருவது.

அவ்வகையில் சிறப்பான தகவல்களை இதில் சொல்லியிருக்கிறீர்கள்.

நம்ப விரும்புவோர் நம்பட்டும்.

இதில் சொல்லப்பட்டிருக்கும் செய்திகள் முழுக்கவும் உண்மையானவை அல்ல என மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

இவை அத்தனையையும் மறுக்க நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.

தமிழின் முதல் இறைநூலாம் திருமுருகாற்றுப்படையைப் புரட்டினால், சிவன், பிள்ளையார், திருமால், பிரம்மன், இந்திரன், பார்வதி, இலக்குமி, கலைவாணி,தெய்வானை, வள்ளி, சூரன், அவன் சேவலும் மயிலுமானது, அந்தணர், இன்னும் பல அரிய தகவல்கள் புரியவரும்.

இங்கு அதையெல்லாம் சொல்லி நட்சத்திரத்தின் பாதையை மாற்ற விரும்பாததால், முருகன் புகழ் பாடும் இப்பதிவைப் போற்றி அனைவர்க்கும் முருகனருள் முன்னிற்கட்டும் என வேண்டுகிறேன்!
//


வீஎஸ்கே ஐயா, பதிவை பாராட்டியமைக்கு நன்றி,

திருமுருகாற்றுப்படை ? இதில் தெய்வயானைப் பற்றி நேரடியாக எந்தக் குறிப்பும் இல்லை என்பதை ஏற்கனவே பேசி இருக்கிறோம். நீங்கள் மறுத்தும் இருக்கிறீர்கள் என்று நினைவு படுத்திக் கொள்கிறேன்.

மற்ற விசயங்கள் எல்லாம் பக்தி புனைவுகளின் பரிணாமம் என்பதை இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பக்தியாளர்கள் நன்கு அறிவார்கள், அதை தொட்டுச் செல்வதே இந்த கட்டுரை.

Unknown சொன்னது…

Wishes for the star week.
Good Post.

My colleague is a malayalee. I was very surprised to see in his brother's wedding invitation (which is next month) a Murugan photo printed (Only Murugan Photo). when asked, he says they worship Murugan. He is from Payyannur (Kannur Dist.)

This is just for information.

Alien

கோவி.கண்ணன் சொன்னது…

//alien_sl said...
Wishes for the star week.
Good Post.

My colleague is a malayalee. I was very surprised to see in his brother's wedding invitation (which is next month) a Murugan photo printed (Only Murugan Photo). when asked, he says they worship Murugan. He is from Payyannur (Kannur Dist.)

This is just for information.

Alien
//

வியப்புதான், தகவலுக்கு நன்றி,

மலையாளிகள் பூர்விக தமிழர்கள்தானே. அவர்களுக்கும் முருகன் கடவுளாக இருப்பதில் வியப்பு இல்லை என்றாலும் சிலர் இன்னும் நடைமுறை வைத்திருக்கிறார்கள்

துளசி கோபால் சொன்னது…

கோயில் படங்கள் அருமை. அதிலும் அந்த பத்துமலை முருகன் சூப்பர்.

நம்ம 'யானை'யும் தாடிப்படத்துலே இருக்கு:-)))))

நிறைய மலையாளிகள் பழனி கோயிலுக்கு யாத்திரை செய்யறாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//அந்தணர், இன்னும் பல அரிய தகவல்கள் புரியவரும்.//

வீஎஸ்கே ஐயா,

அந்தணர் என்பது தொழில் பெயர் அது பார்பனர் என்ற குலத்தைக் குறித்தது அல்ல என்று வாதிட எவ்வளவோ ஆதார்ர்ம் இருக்கிறது. இருந்தாலும் அது அவசியமற்றது என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால் இப்பொழுதெல்லாம் சாதிப் பெயர்களுக்கு என தனி மரியாதையே, தனிச்'சிறப்போ' இல்லை என்பதால் அது குறித்து ஆராய்ந்து எதுவும் ஆகப் போவதில்லை. அப்படியும் கிடைக்கிறது என்று எவரும் பெருமை பட்டுக் கொண்ட்டால், அது தானாக கிடைப்பது அல்ல கேட்டு வாங்குவதே.

கோவி.கண்ணன் சொன்னது…

//சிவபாலன் said...
ஜிகே,

நல்ல கட்டுரை!

பல விடயங்களை தந்துள்ளீர்கள்! நன்றி!
//

சிபா,

சிவபாலன் (முருகன்) பற்றிய சில உண்மைகள் அவை. பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ஜெகதீசன் said...
Gk,
நல்ல பதிவு..
முருகன் ஒரு தமிழ் மன்னன் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்..
//

ஜெகதீசன்,

மறக்காமல் எல்லா பதிவுகளுக்கும் வந்து பின்னூட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மாசிலா said...
நல்ல கட்டுரை கோவி.கண்ணன். நிறைய விடயங்களை தெரிந்துகொண்டேன்.

முருகனின் உருவப்படங்கள் வெள்ளைத்தோல் உடையவராக சித்தரிக்கப்படுவது ஏன்?

உண்மையில் அவர் வெள்ளையாக இருந்தாரா?

முருகன் என்பவர் ஒரு கடவுளா அல்லது மக்களின் நம்பிக்கை பாத்திரமா?
//

மாசிலா,

பாராட்டுக்கு முதல் நன்றி,
முருகன் என்பது ஒரு கடவுளா ? என்றால் முருகன் மட்டும் அல்ல, எல்லா கடவுளுமே 'நம்பிக்கை என்ற அளவில் கடவுள்' தான் என்று என்பது என்கருத்து.

முருகன் என்பது ஆன்மிக குறியீடு என்றும் சொல்கிறார்கள், அதாவது எதோ இச்சா சக்தி, துரியா சக்தி அப்பறம் இன்னும் ஒரு சக்தியின் குறியீடாம். உருவ வழிபாட்டைப் பற்றி ரொம்ப தோண்டி தோண்டி கேட்டால் முடிவில். 'இறைவன் ஒருவன் இருக்கிறான் - நம்புகிறேன்' என்று முடிப்பார்கள்.

அப்பறம் முருகன் சிகப்பா ? என்று கேட்டீர்கள் ? அவருக்கு முன்பெல்லாம் பூனூல் இருந்ததா ? என்று கேட்கவில்லையே.

உங்கள் கேள்விக்கு நண்பர் ஜிரா, விளக்கங்களுடன் பதில் கொடுத்துள்ளார். அவருக்கும் எனது நன்றிகள் !

கோவி.கண்ணன் சொன்னது…

// வடுவூர் குமார் said...
படிக்கும் வரை "நல்ல ஆய்வுக்கட்டுரையோ?" என்ற எண்ணம் வந்தது,கடைசியில் உள்ள பத்தி இது மொக்கை பதிவோ என்ற சந்தேகம் வந்துவிட்டது.
:-)
//

குமார்,
பின்னே, கடைசியில் காமடி பண்ணவில்லை என்றால் எல்லோரும் பதிவை சீரியஸ் ஆக்கிடுவாங்களே.

கோவி.கண்ணன் சொன்னது…

// இராம் said...
கண்ணன்,

அற்புதம்.......

பல விசயங்களை அறிந்துக் கொண்டேன்... நன்றி.... :)
//

பாராட்டுக்கு நன்றி இராம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்கை said...
நட்சத்திர வாழ்த்துக்கள் ஜி கே

நல்ல கட்டுரை...
//

நன்றி மங்கை அவர்களே !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெற்றி said...
கோ.க,
நல்ல கட்டுரை. பல தகவல்களை அறிந்து கொண்டேன்.

பண்டைய தமிழர்கள் இயற்கையையும், காவல் தெய்வங்கள் எனக் கருதப்படும் முருகன், வைரவர், முனியப்பர், அய்யனார், காளி போன்ற தெய்வங்களைத்தான் ஆதிகாலத்தில் வணங்கியதாக அறிந்தேன்.

ஆக அப்போது மதம் ஒன்று இருக்கவில்லை. தாம் வாழும் இடங்களுக்கு ஏற்ப தமது குல தெய்வங்கள் எனக் கருதப்படும் இக் காவல் தெய்வங்களையே வணங்கினர் என அறிந்தேன்.

ஈழத்தில் எனது ஊரும் பழைமை வாய்ந்த ஊர். அங்கே முருகன், வைரவர், காளி, முனியப்பர், அய்யனார் ஆகிய வழிபாடுகள் இன்றும் உண்டு.

எமது ஊரில் உள்ள முருகன் ஆலய்த்தைத் தவிர மற்றைய ஆலயங்களில் பூசை நடப்பதில்லை.

ஊர் மக்கள் இச் சிறு கொட்டில் கோயில்களுக்குச் சென்று தாமாகவே விளக்கேற்றி வணங்குவர்.

ஈழத்தில் ஆதிகாலத்தில் இருந்தே இருக்கும் முருகன் ஆலயங்கள் என நம்பப்படும் கதிர்காம முருகன் ஆலயம், செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் போன்றவற்றில் பிராமணர்கள் அல்லாதோர்தான் பூசை செய்வது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். அவ் வழக்கம்தான் இன்றும் அங்கு நிலவுகிறது. ஆக இந்த ஆலயங்களில் சமஸ்கிருதத்திலும் பூசை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
//

நீங்கள் சொல்வது முற்றிலும் நான் அறிந்த இலக்கியங்களின் வழி சரி என்று சொல்லிக் கொள்கிறேன். சங்கத்தமிழரிடையே தீண்டாமை இருந்ததில்லை. திருவள்ளுவருக்கு தீண்டாமை அதிகாரம் தேவையாக இருக்கவில்லை. அதன் பிறகு பல நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த ஒளவையார்கள் வரிசையில் ஒரு ஒளவையார் வாழ்ந்த போது தேவையாக இருந்திருக்கிறது,

சாதி இரண்டொழிய வேறில்லை...சாற்றுங்கால்...இதெல்லாம் அதியமான் காலத்து செய்யுள். திருவள்ளுவர் காலத்தில் சாதிவேறுபாடு தீண்டாமை இல்லை.

இலங்கைக் குறித்து தாங்கள் அளித்த தகவல்வழி நானும் பலவற்றை தெரிந்து கொண்டேன். நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அலகு குத்திக் கொள்ளல், காவடி, பால்குடம் போன்ற நாட்டார் வழக்கங்களிலும் பூசனைகளிலும் பெரியாரின் நிலை என்ன GK? எதிர்த்தாரா இல்லை அமைதி காத்தாரா? அறிந்தவர் சொல்லுங்களேன்!

காளி, மாரியம்மன், கண்ணன், சிவன் போன்ற கடவுளரையும் தந்தை பெரியார் அவ்வளவாகத் தொட்டுச் செல்லவில்லை என்றே நினைக்கிறேன்! (பிள்ளையாரையும், இராமனையும் தொட்டுச் சென்ற அளவுக்கு)
//
KRS,

உடலை வறுத்திக் கொண்டு செய்யும் நேர்த்திக்கடன்களை பெரியார் இயக்கத்தினர் எதிர்த்தே வந்திருக்கின்றனர். மற்றபடி சிறு தெய்வ வழிபாடுகளை பெரியார் இயக்கத்தினர் பெரியவிமர்சனம் எதுவும் செய்யவில்லை.

தாங்கள் மேலே குறிப்பிட்ட கடவுள்களையும் பெரியார் இயக்கத்தினர் அதிகம் விமர்சனம் செய்ததில்லை. அவர்கள் எதிர்த்தது வைதீக புராணாங்களையும், அந்த புராணங்களில் காட்டப்பட்ட வைதீக கடவுள்களையும் தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
தாடி வைத்த தமிழ்க்கடவுள்!
அருமை
நல்ல பல செய்திகள் அடங்கிய கட்டுரை
//

யோகன்,

நேற்று சொன்னது போலவே தாடி வைத்த தமிழ்கடவுள் சூப்பர் தானே.
:)

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
கோயில் படங்கள் அருமை. அதிலும் அந்த பத்துமலை முருகன் சூப்பர்.

நம்ம 'யானை'யும் தாடிப்படத்துலே இருக்கு:-)))))

நிறைய மலையாளிகள் பழனி கோயிலுக்கு யாத்திரை செய்யறாங்க.
//

துளசி அம்மா,

எல்லாம் இணையத்தில் சுட்டதுதான்.
ஒங்க யானையில் ஒண்ணுதான் ஓடிவந்தது இங்கே என்று நினைக்கிறேன்.

சிங்கப்பூரில் சீனர்கள் கூட முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள்.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said...
நல்லதொரு ஆய்வு கோவி. முருக வழிபாட்டில் .../

உங்களைப் போன்ற முருகபக்தர்கள் ஆய்வு கட்டுரைகள் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும். எனக்கு அரிய தகவல்கள் பல அறிய தந்திருக்கிறீர்கள். வியப்பாக இருக்கிறது. முருகனைப்பற்றி நீங்கள் அறிந்த அளவுக்கு எனக்கு தெரியாது. நான் எழுத முயன்றது புனைவுகளின் பரிணாமத்தையும் தாண்டி முருகன் எப்படி தமிழர்களுடன் ஒன்றினான் என்பதைச் சொல்ல முயன்றேன்.

உங்கள் தகவல்களுக்கும், விளக்கங்களுக்கும் மீண்டும் நன்றி !

உண்மைத்தமிழன் சொன்னது…

கோவியாரே..

முருகன் என்றென்றைக்கும் சாமான்ய மக்களின் கடவுள்தான். அதனால்தான் குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமானது..

யோசித்துப் பாருங்கள். பண்டைய காலத்தில் குன்றுகள் இல்லாத இடம் எங்காவது இருந்திருக்குமா? இருக்காது.. தமிழனின் முழு முதற் கடவுளாக முருகனே இருந்திருப்பான் என்றே நான் நம்புகிறேன்..

கோவணத்துடன் அவன் தன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதுகூட இதைத்தான் காட்டுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

முருகனுக்கு வேல் வேல்.. கந்தனுக்கு வேல்.. வேல்..

வெட்டிப்பயல் சொன்னது…

நல்ல பதிவு...

தமிழென்றால் முருகன்.. முருகனென்றால் தமிழ்...

ஜி.ரா. சரிதானே???

கருப்பு சொன்னது…

ஆதிகாலத்து தமிழ் கடவுளைப் பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்.

முருகன் என்ற அழகான தூய தமிழ் பெயர் இருக்க அவருக்கே "சுப்ரமண்யன்" என வடமொழிப் பெயரைச் சூட்டி அழகு பார்த்தது ஒரு இழிந்த குலம்!

பிச்சை எடுப்பது மட்டும் தமிழில் பேசி. ஆனால் வளர்க்க நினைப்பதோ தேவ பாடையை!

கோவி.கண்ணன் சொன்னது…

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கோவியாரே..

முருகன் என்றென்றைக்கும் சாமான்ய மக்களின் கடவுள்தான். அதனால்தான் குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்குமிடமானது..

யோசித்துப் பாருங்கள். பண்டைய காலத்தில் குன்றுகள் இல்லாத இடம் எங்காவது இருந்திருக்குமா? இருக்காது.. தமிழனின் முழு முதற் கடவுளாக முருகனே இருந்திருப்பான் என்றே நான் நம்புகிறேன்..

கோவணத்துடன் அவன் தன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதுகூட இதைத்தான் காட்டுகிறது என்றே நான் நினைக்கிறேன்.

முருகனுக்கு வேல் வேல்.. கந்தனுக்கு வேல்.. வேல்..//

கோவணத்துடன் காட்சியளிப்பதா ?
அது நம் பழம்தமிழர் சின்னமாயிற்றே அது இல்லை என்றால் எப்படி ?

முருகன் ஏழைப் பணக்காரர் என்று பாகுபாடு இல்லாமல் அனைவரும் வணங்கும் கடவுள் தான். ஏழைகளுக்கு முருகன் பக்தி அதிகம் அதை காவடி எடுத்து காணிக்கை செலுத்திக் காட்டுகிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//வெட்டிப்பயல் said...
நல்ல பதிவு...

தமிழென்றால் முருகன்.. முருகனென்றால் தமிழ்...

ஜி.ரா. சரிதானே???
//

பாராட்டுக்கு நன்றி பாலாஜி,

ஜிராவிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்வதுதான் முறை. சொல்லுவார்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
ஆதிகாலத்து தமிழ் கடவுளைப் பற்றி அழகாக எழுதி இருக்கிறீர்.

முருகன் என்ற அழகான தூய தமிழ் பெயர் இருக்க அவருக்கே "சுப்ரமண்யன்" என வடமொழிப் பெயரைச் சூட்டி அழகு பார்த்தது ஒரு இழிந்த குலம்!

பிச்சை எடுப்பது மட்டும் தமிழில் பேசி. ஆனால் வளர்க்க நினைப்பதோ தேவ பாடையை!
//

வி.க ஐயா,

பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//அருகன் என்பதே சங்காலத்தில் முருகனாக மருகி இருக்கும் என்று தமிழ்சமணர்கள் கூட தங்கள் கடவுள் முருகன் என்று சொல்லுக்கிறார்கள்.//

இந்த வரியை இடுகையில் இருந்து நீக்கிவிட்டேன். இதைப்படித்த நூலில் பெயர் மறந்துவிட்டதால் ஆதாரம் எதுவும் தற்போதைக்கு ஸ்கேன் செய்து போட முடியாது. அது கிடைக்கும் போது மேற்கண்ட வரிகளை இடுகையில் சேர்ப்பேன். காரணம் எனது இந்த விளக்கத்தை வேறு எவரும் மேற்கோளுக்காக தவறாக சுட்டிவிடக் கூடாது என்று நினைப்பதால்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்