பின்பற்றுபவர்கள்

22 ஜனவரி, 2007

மந்திரச் சொற்களும், மந்திர மொழியும் !

"ஸ்ரீராம ஜெயம்" எழுதினால் நல்லா படிப்பு வரும்" என்று படிக்கும் காலத்தில் நண்பர்களும், நண்பிகளும் சொல்வார்கள், எழுதியதை காட்டுவார்கள். நானும் எழுதியதுண்டு உடனடியாக பலன் இருந்தது போல தெரியவில்லை. ஒருவாரம் சென்றதும் 10 ரூபாய் கீழே கிடந்து எடுத்தேன் அதற்கும் ஸ்ரீராம ஜெயம் எழுதியதற்கும் தொடர்பு உண்டா தெரியவில்லை :). அதன் பிறகு திருப்பதி பெருமாளின் அற்புதங்கள் என்ற கடிதம் வீட்டிக்கு வந்திருக்கிறது. எடுத்துப் பார்த்து பயந்ததுண்டு. அந்த கடிதத்தில் நம்பியவர் யார் யரோ லட்சாதிபதி ஆனார்கள், அதே போல நம்பாதவர்கள் நாசமாக போனார்கள் என்ற ரீதியில் எழுதி இருக்கும். கடைசியில் இதனை படித்தவுடன் 15 பேருக்கு இதே போல அனுப்ப வேண்டும் என்று சொல்லி.... தவறினால் ... என்று படிக்கும் போதே பதபதைக்க வைத்திருக்கும்.

இதனால் இரண்டு நன்மைகள் 1. தபால் வியாபரம் நன்றாக போனது. 2. கடிதம் கிடைத்தவருக்கு சொந்தக்காரர்கள், நண்பர்களின் முகவரி வியக்கும் வகையில் உடனே நினைவு வர அக்கரையாக கடிதம் அவர்களுக்கு அனுப்பினார்கள். இன்றும் இது போல் கடிதங்கள் வருகிறது ஊடகமும் கடவுள் பெயரும்தான் மாறி இருக்கிறது.

அதாவது புத்தரின் போதனைகளை எழுதி கீழே தலாய்லாமாவின் ஆசிர்வாதமும் உடனடி சொல்வமும் கிடைக்கும் என்ற தகவல்களுடன் திருப்பதி பெருமாள் பாணி மின் அஞ்சல்கள் கூட சமீபத்தில் எனக்கு வந்திருக்கின்றன. இது போல் நிறைய சொல்லலாம்.

ஒரு ஸ்லோகத்தை லட்சக்கணக்கில் எழுதுவது, அல்லது கடிதங்களை அனுப்பி நம்பிக்கை அல்லது பயத்துடன் அதை செயல் படுத்துதல் மூலம் வாழ்வில் திடீர் மாற்றம் வருமா ? என்றால் நேரிடையாக பதில் சொல்ல ஆத்திகர்களும் தயங்குவர். இது போல மந்திர சொற்கள் இருக்கிறது என்றும் மந்திரத்திற்காக மொழியே இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதெல்லாம் உண்மையா ? சொற்களுக்கு மந்திர சக்தி உண்டா ? என்று கேட்டால், ஆம் ! எங்களது நம்பிக்கை என்பார்கள் ...மந்திர சொற்கள் உண்மை என்ற சொல்ல அனுபவம் இருக்க வேண்டும் எனவே மந்திர சொற்கள் குறித்த இத்தகைய தகவல்களை நம்பிக்கை என்று விட்டுவிடலாம்

எனக்கு தெரிந்த வரை மந்திர சொற்கள் இல்லை. ஆனால் எந்த சொல்லும் ஒரு சமயத்தில் மந்திரமாகிறது. அதாவது சொற்கள் உடனடியாக செயலில் முடிகிறது எங்கென்றால் அதிகாரவர்கத்திடம் தான். ஒரு கொலையைப் பார்த்த நாம் "செய்தவன் தண்டனை அடைய வேண்டும்" என்று நினைக்கிறோம். ஆனால் அதையே நீதிபதி நினைத்து தீர்பில் எழுதிவிட்டால் அந்த சொற்கள் உடனடியாக செயல்பட ஆரம்பித்து தண்டனை என்ற அளவுக்கு அந்த தீர்ப்புச் சொற்கள் அமைந்துவிடுகிறது.

'ஏழைக்கு இலவச வீடு கிடைக்க வேண்டும்' நாம் நினைப்பது வெறும் நல்லெண்ணம் தான். ஆனால் அதையே ஆட்சி அதிகாரத்தில் உள்ள பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் அவை அவர்கள் வாயில் இருந்து வெளிப்படும் மந்திர சொற்கள் ஆகின்றன. சதாம் குறித்த மற்றவர்களின் சொற்கள் வெறும் சொற்கள் தான் ஆனால் அமெரிக்கவின் அதே சொற்கள் ஈராக்கில் மந்திர சொற்கள் உடனடியாக செயல்பாட்டிற்கு வந்தது.

மந்திர சொற்கள், மந்திரமொழி என்றோ தனியாக ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படி இருக்கிறது இது மந்திர மொழி இவற்றை வைத்து மந்திரம் சொன்னால் பலிக்கும் என்று யவரேனும் சொன்னால் அது வெறும் நம்பிக்கைதான். மற்றபடி மந்திர சொற்கள் என்றால் ஆட்சி அதிகாரத்தில் ஆணை (உத்தரவு) களில் இருக்கும் சொற்களே மந்திர சொற்கள்.

அன்பு வழி நடப்பவர் உதிர்க்கும் "நன்றாக இரு" என்ற ஆசிர்வாத மந்திர சொல்லின் செயல்பாட்டைவிட கொலைகாரர்களின் "அவனை வெட்டி சாய்" என்ற மந்திரச் சொல் உடனே செயல்படுகிறது. சக்தியும் அதிகம். இத்தகைய மந்திர சொற்கள் எல்லா மொழிகளும் உண்டு. ஒரு சொல் மந்திரம் ஆவது என்பது எப்போதென்றால் அதைச் செயல்படுத்தக் கூடியவர்களால் சொல்லப்பட்டு அது செயல்பாட்டில் வரும் போதுதான்.

மந்திரம் என்ற சொல் ஆராய்சி குறித்து வளவு இராமகி ஐயா
ஆகமம் என்ற பதிவில் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

33 கருத்துகள்:

வடுவூர் குமார் சொன்னது…

இந்த ஆட்சி வேண்டாம்/மாற்று- இது மட்டும் பல பேர் சேர்ந்து சொல்லவேண்டிய மந்திரச்சொல்லாக இருக்கிறதே?

SP.VR. SUBBIAH சொன்னது…

மாதா, பிதா, குரு ஆகிய மூவரின்
கால்களில் பணிவாக விழுந்து ஆசி பெறும் போது
அவர்கள் 'நன்றாக இரு!' என்று வாழ்த்திச் சொல்லும் சொல்லிற்கு்
மந்திர சக்தி இருக்கிறது நண்பரே!

அந்த மந்திர சக்திதான் நமக்குள் ஒரு புத்துணர்வையும், தன்னம்பிக்கையையும்
ஏற்படுத்தி நம்மை நன்றாகச் செயல்பட
வைக்கிறது!

இந்தக் கூற்றில் உடன்பாடு உண்டா?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
இந்த ஆட்சி வேண்டாம்/மாற்று- இது மட்டும் பல பேர் சேர்ந்து சொல்லவேண்டிய மந்திரச்சொல்லாக இருக்கிறதே?
//

திரு குமார்,

சரியாத் தான் சொல்கிறீர்கள் !!! எந்த ஆட்சிக்கும் எதிரான மக்கள் முழக்கம் தேர்தல் காலங்களில் நன்கு செயல்படுகிறது. இது போல சேர்ந்து சொல்லுவது இதுவரை நன்றாக பலித்து இருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR.சுப்பையா said...
மாதா, பிதா, குரு ஆகிய மூவரின்
கால்களில் பணிவாக விழுந்து ஆசி பெறும் போது
அவர்கள் 'நன்றாக இரு!' என்று வாழ்த்திச் சொல்லும் சொல்லிற்கு்
மந்திர சக்தி இருக்கிறது நண்பரே!

அந்த மந்திர சக்திதான் நமக்குள் ஒரு புத்துணர்வையும், தன்னம்பிக்கையையும்
ஏற்படுத்தி நம்மை நன்றாகச் செயல்பட
வைக்கிறது!

இந்தக் கூற்றில் உடன்பாடு உண்டா?
//
சுப்பையா ஐயா,

அன்பு வழி நடப்பவர் உதிர்க்கும் "நன்றாக இரு" என்ற ஆசிர்வாத மந்திர சொல்லின் செயல்பாட்டைவிட கொலைகாரர்களின் "அவனை வெட்டி சாய்" என்ற மந்திரச் சொல் உடனே செயல்படுகிறது.

என்று சொல்லி இருக்கிறேன் ஐயா. மெதுவாக செயல்படும் என்ற பெருள் கொள்ளவும். மறுக்கவில்லை ஐயா.

குமரன் (Kumaran) சொன்னது…

ஆத்திகர்களின் பதிலே தேவையில்லை என்பது போல் அவர்களிடம் இருந்து பதில் வராது என்று எழுதிவிட்டீர்கள். அப்புறம் என்ன சொல்வது? :-) தொடர் மின்னஞ்சல்களில் வரும் சுலோகத்தை பல பேருக்கு அனுப்புவதால் பலன் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் கையால் எழுதி அனுப்பும் போது பலமுறை எழுதுவதால் பலன் இருக்கலாம். இது என் நம்பிக்கை. செய்திருக்கிறேனா? இல்லை. இராம ஜெயமும் எழுதியதில்லை. ஆனால் கந்தர் சஷ்டி கவசத்தை ஆறுமுறை ஆறுமுறையாக ஆறு நாட்கள் (முப்பத்தாறுரு கொண்டு என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்) சொன்னதுண்டு. பலனைக் கண்டதுண்டு.

உலகமே நம்பிக்கையில் தானே இயங்குகிறது. இவன் தந்தை என்று தாய் சொன்னதை நம்பித் தானே வாழ்கிறோம்?! அதே போன்ற நம்பிக்கைகளில் தான் வாழ்க்கையே ஓடுகிறது. தாய் சொன்னதை நம்பாமல் கேள்வி கேட்க முடியாது.

ஆனால் மற்றபடி கடலின் ஓரத்தில் நின்று கொண்டே இந்தக் கடலில் நுரையும் நீரும் மட்டும் தான் இருக்கிறது; இதில் முத்து கிடைக்கிறதாம் முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன சொல்வது? இறங்கிப் பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள். மின்விளக்கைக் கண்டுபிடிப்பதற்கு முன் எடிசன் பல நூறு முறை தோற்றாராம். அவர் பத்தாவது முறையிலேயே யாராலும் மின்விளக்கிற்கான ஃபிளமெண்டைக் கண்டுபிடிக்க இயலாது என்று விட்டிருந்தால் அவருக்கு அந்தப் புகழ் கிடத்திருக்காது (மின்விளக்கு கிடைத்திருக்காது என்று சொல்ல முடியாது; அவரில்லையேல் வேறு எவராவது கண்டுபிடித்திருப்பார்கள்).

மா சிவகுமார் சொன்னது…

//ஒருவாரம் சென்றதும் 10 ரூபாய் கீழே கிடந்து எடுத்தேன் அதற்கும் ஸ்ரீராம ஜெயம் எழுதியதற்கும் தொடர்பு உண்டா தெரியவில்லை//

:-)

மார்க் ட்வெயினின் Adventures of Huckleberryfinn கதையில் வரும் ஜிம் என்ற கறுப்பு இனத்தவன் இப்படித்தான் நல்ல/கெட்ட குறிகள் பலிப்பதை பல நாட்கள், வாரங்கள் ஏன் ஆண்டுகள் கழித்து சுட்டிக் காட்டுவான்.

அன்புடன்,

மா சிவகுமார்

சிவபாலன் சொன்னது…

GK,

மீன்டும் நல்லதொரு பதிவை கொடுத்துள்ளீர்கள்.

மந்திரமும் மந்திர சொற்களும் ஏனோ நல்லவர்களுக்கு தேவைப் படுவதில்லை..

கோவி.கண்ணன் சொன்னது…

// குமரன் (Kumaran) said...
ஆத்திகர்களின் பதிலே தேவையில்லை என்பது போல் அவர்களிடம் இருந்து பதில் வராது என்று எழுதிவிட்டீர்கள். அப்புறம் என்ன சொல்வது? :-)//

குமரன்,
தவறான புரிதலோ ? தவறாக புரிந்து கொள்பவர் என்று நினைக்கிறேன் என்ற விதத்தில் பொருள் கொள்ள வேண்டாம் !!! :)). புரியும் படி நான் எழுதவில்லை என்று எடுத்துக் கொள்கிறேன் :)

நம்பிக்கை என்ற விதத்தில் விட்டுவிடலாம் என்று சொல்லி இருக்கிறேன். பதிலே வராது என்று சொல்ல வில்லை... தயக்கம் காட்டுவார்கள் என்று சொல்லி இருக்கிறேன்.

//தொடர் மின்னஞ்சல்களில் வரும் சுலோகத்தை பல பேருக்கு அனுப்புவதால் பலன் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் கையால் எழுதி அனுப்பும் போது பலமுறை எழுதுவதால் பலன் இருக்கலாம். இது என் நம்பிக்கை. செய்திருக்கிறேனா? இல்லை. இராம ஜெயமும் எழுதியதில்லை. ஆனால் கந்தர் சஷ்டி கவசத்தை ஆறுமுறை ஆறுமுறையாக ஆறு நாட்கள் (முப்பத்தாறுரு கொண்டு என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்) சொன்னதுண்டு. பலனைக் கண்டதுண்டு. //

நல்லது ... உங்கள் நம்பிக்கை வெற்றி அடைந்ததற்கு வாழ்த்துக்கள்.

//உலகமே நம்பிக்கையில் தானே இயங்குகிறது. இவன் தந்தை என்று தாய் சொன்னதை நம்பித் தானே வாழ்கிறோம்?! அதே போன்ற நம்பிக்கைகளில் தான் வாழ்க்கையே ஓடுகிறது. தாய் சொன்னதை நம்பாமல் கேள்வி கேட்க முடியாது. //

உடன் படுகிறேன். நான் நம்பிக்கையை கேள்விக் குறி ஆக்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

//ஆனால் மற்றபடி கடலின் ஓரத்தில் நின்று கொண்டே இந்தக் கடலில் நுரையும் நீரும் மட்டும் தான் இருக்கிறது; இதில் முத்து கிடைக்கிறதாம் முட்டாள்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் என்ன சொல்வது? இறங்கிப் பாருங்கள். மீண்டும் மீண்டும் செய்து பாருங்கள். மின்விளக்கைக் கண்டுபிடிப்பதற்கு முன் எடிசன் பல நூறு முறை தோற்றாராம். அவர் பத்தாவது முறையிலேயே யாராலும் மின்விளக்கிற்கான ஃபிளமெண்டைக் கண்டுபிடிக்க இயலாது என்று விட்டிருந்தால் அவருக்கு அந்தப் புகழ் கிடத்திருக்காது (மின்விளக்கு கிடைத்திருக்காது என்று சொல்ல முடியாது; அவரில்லையேல் வேறு எவராவது கண்டுபிடித்திருப்பார்கள்).
//
நான் வெறும் சொல் எவ்வாறு மந்திரமாகிறது ... எவர் சொன்னால் செயல் படுகிறது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். மற்றபடி அவரவர் தனிப்பட்ட நம்பிக்கையில் நான் மூக்கு நுழைக்கவில்லை. நாளை இருப்போம் என்பது தூங்கப்போகும் முன் எல்லோருக்கும் இருக்கும் நம்பிக்கை.
:))

கோவி.கண்ணன் சொன்னது…

// மா சிவகுமார் said...
:-)

மார்க் ட்வெயினின் Adventures of Huckleberryfinn கதையில் வரும் ஜிம் என்ற கறுப்பு இனத்தவன் இப்படித்தான் நல்ல/கெட்ட குறிகள் பலிப்பதை பல நாட்கள், வாரங்கள் ஏன் ஆண்டுகள் கழித்து சுட்டிக் காட்டுவான்.
அன்புடன்,

மா சிவகுமார்
//
மாசி,
தை பிறந்ததும் வராதவங்க வந்திருக்கிங்க, வாங்க ! வாங்க !!!
:))

குறும் தகவல் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

G.Ragavan சொன்னது…

நல்ல பதிவு. உளமாரச் சொல்லும் எந்தச் சொல்லும் மந்திரச் சொல்லே.

அந்த மாதிரி போஸ்ட் கார்டுல வந்துக்கிட்டிருந்தது...அப்புறம் இ-மெயில்ல வந்தது. இப்ப மொபைல் குறுஞ்செய்தியா வருது. அப்படி வந்துச்சுன்னா மொதல் வேலையா...அத அழிச்சிட்டுத்தான் மறுவேலை.

ஆறு வருசத்துக்கு முன்னாடி இப்படி ஒன்னு வந்தது. அதை ஆறு பேருக்கு அனுப்புனேன். அப்ப ஒரு நண்பன் கேட்டான்..ஒரே ஒரு கேள்வி..என்ன ராகவா பயந்துட்டியான்னு. அப்பத் தெளிஞ்சவந்தான்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

குமரன், நம்பிக்கைகளுக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் இடையே நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நம்பிக்கைகளை குறை சொல்லக் கூடாது என்று சொல்லி சொல்லி அடக்கி வைத்ததால் தான் இன்று இந்தியாவில் இன்னும் பலர் மலம் மட்டுமே அள்ளித் தகுதியானவர்கள் என்று ஒடுக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள்.

முடியும் என்ற விடா முயற்சி வேறு, மக்களை மூடனாகவே வைத்திருக்கும் நம்பிக்கைகள் என்பது வேறு.

நீங்கள் சொல்லி இருக்கும் எடிசன் உதாரணத்திற்கும், இங்கு சொல்லப் பட்டிருக்கும் மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு.

இருக்கு என்றால் இருக்கிறது இல்லை என்றால் இல்லை என்று சொல்லி விட்டு மக்களின் அமைதியைக் குலைக்கும் மூட நம்பிக்கைகளின் ஊற்றுக் கண்ணாண மதங்கள் எல்லாம் தன்னைத் தானே சீர் தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அழிந்து போக வேண்டும், அப்போது தான் மனிதன் நிம்மதியாக வாழ முடியும்.

அட்றா சக்கை சொன்னது…

சகோதரர் கண்ணன்,

இந்தச்சுட்டி இவ்விடுகைக்குத் தொடர்புள்ளதாக நான் கருதுகிறேன்.

http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=138&Itemid=53

மற்றபடி உங்களின் கட்டுரையைத் தொடர்ந்து படித்து வருபவன் நான் .(பின்னூட்டமிடாவிட்டாலும்)

அநாவசிய விளம்பரம் அல்லது திசை திருப்பல் இருப்பதாக நீங்கள் கருதினால் பின்னூட்டத்தைப் பிரசுரிக்க வேண்டாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

அட்றா சக்கை,
அவர்களே ... படித்தேன் ... நல்ல தகவல்கள். நீங்கள்
சுட்டி கொடுத்ததற்கும் நன்றி !

தொடர்ந்து படித்துவருகிறேன் என்று சொல்வதை படிக்கும் பொழுதும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது

குமரன் (Kumaran) சொன்னது…

//மந்திரமும் மந்திர சொற்களும் ஏனோ நல்லவர்களுக்கு தேவைப் படுவதில்லை..
//

சிவபாலன்.

அப்ப நல்லவங்க நாட்டுல ரொம்ப குறைஞ்சு போயிட்டாங்களோ? :-)

என்னங்க பண்றது? நாட்டு நெலைமை அப்படி இருக்கு.

(கோவி.கண்ணன் அண்ணா. இதுவும் புரிதல் தவறோ? சொல்வதைச் சொல்லிவிட்டு பின்னர் அதற்கு விளக்கம் வந்தால் புரிதல் தவறு என்பது மிக எளிதான பதில் தான்).

குமரன் (Kumaran) சொன்னது…

செந்தில் குமரன்,

நான் நம்பிக்கை என்று நினைப்பதை நீங்கள் விடாமுயற்சி என்று நினைக்கிறீர்கள். இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கைகு ஊற்று என்று என்னளவிலும் என் சுற்றில் உள்ளவர்கள் அளவிலும் கண்டதை நான் சொன்னால் அதனை மூட நம்பிக்கை என்கிறீர்கள். ஏனெனில் இறை நம்பிக்கை தன்னம்பிக்கையைக் கொல்கிறது என்று மேற்கத்தவர் எழுதுவதைப் படித்து அதனையே உண்மை என்று நீங்கள் நம்புவதால். இறை நம்பிக்கை இல்லாமலும் தன்னம்பிக்கை உண்டு. இறை நம்பிக்கையே தன்னம்பிக்கையின் அடிப்படையாக ஆவதும் உண்டு. கண்ணன் அண்ணா சொல்வது போல் எல்லாம் அவரவர் நம்பிக்கையையும் புரிதல்களையும் பொறுத்தது.

குமரன் (Kumaran) சொன்னது…

//அப்ப ஒரு நண்பன் கேட்டான்..ஒரே ஒரு கேள்வி..என்ன ராகவா பயந்துட்டியான்னு. அப்பத் தெளிஞ்சவந்தான்.
//

இராகவன். பயம் 'தெளிந்தது' என்று தானே சொல்லியிருக்கிறீர்கள்?! பயத்தால் அதனைச் செய்யச் சொல்லி வற்புறுத்தும் அந்த மின்னஞ்சல்களுக்கு பயப்படத் தேவையில்லை. நானும் அவற்றை இதுவரை மற்றவர்களுக்கு அனுப்பியதில்லை. ஆனால் அந்த மந்திரச் சொற்களுக்கு பலன் உண்டா என்ற கேள்வி வரும் போது மேலே சொன்னது போல் மின்னஞ்சலை அனுப்புவதால் பலன் இருக்காது என்று நினைக்கிறேன்; ஆனால் கையால் எழுதும் போது பலமுறை எழுதுவது மந்திரத்தை உருவேற்றுவது போல் ஆவதால் பலன் இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டுமே நினைப்பது தான். செய்ததில்லை. சோம்பல் தான் காரணம். நம்பிக்கையின்மை இல்லை. ஆனால் செய்து பலனைப் பார்த்தவர்கள் சொன்னாலும் அதற்கு எத்தனையோ விதண்டா வாத விளக்கங்கள் கொடுக்க முடியும். நானே என் மனத்திற்கு அவ்வப்போது அப்படி கொடுப்பதுண்டு.

G.Ragavan சொன்னது…

// குமரன் (Kumaran) said...
//அப்ப ஒரு நண்பன் கேட்டான்..ஒரே ஒரு கேள்வி..என்ன ராகவா பயந்துட்டியான்னு. அப்பத் தெளிஞ்சவந்தான்.
//

இராகவன். பயம் 'தெளிந்தது' என்று தானே சொல்லியிருக்கிறீர்கள்?! //

அச்சத்தை மட்டுமல்ல..அச்சத்தால் இறைவனை வணங்கக் கூடாது என்ற உண்மையும் தெளிந்தது. மிச்சத்தை அருணகிரி தெளிய வைத்தார். ஆகையால்தான் ஆண்டவன் பேரைச் சொல்லி யாரும் அச்சுறுத்தினால் சிரிப்பு வருகிறது.

// பயத்தால் அதனைச் செய்யச் சொல்லி வற்புறுத்தும் அந்த மின்னஞ்சல்களுக்கு பயப்படத் தேவையில்லை. நானும் அவற்றை இதுவரை மற்றவர்களுக்கு அனுப்பியதில்லை. ஆனால் அந்த மந்திரச் சொற்களுக்கு பலன் உண்டா என்ற கேள்வி வரும் போது மேலே சொன்னது போல் மின்னஞ்சலை அனுப்புவதால் பலன் இருக்காது என்று நினைக்கிறேன்; ஆனால் கையால் எழுதும் போது பலமுறை எழுதுவது மந்திரத்தை உருவேற்றுவது போல் ஆவதால் பலன் இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டுமே நினைப்பது தான். செய்ததில்லை. சோம்பல் தான் காரணம். நம்பிக்கையின்மை இல்லை. ஆனால் செய்து பலனைப் பார்த்தவர்கள் சொன்னாலும் அதற்கு எத்தனையோ விதண்டா வாத விளக்கங்கள் கொடுக்க முடியும். நானே என் மனத்திற்கு அவ்வப்போது அப்படி கொடுப்பதுண்டு. //

கையால் எழுதுவதோ...மனதால் நினைப்பதோ....முழு ஈடுபாட்டோடு சொல்லும் சொல்லும் மந்திரமே. செய்யும் செயலும் தந்திரமே. மாங்கனி என்று சொல்லும் பொழுதே நா இனிப்பதும்...புளியங்காய் என்றத் சொல்கையில் பல் கூசுவதும் கூட....இப்படிச் சொல்லிச் சொல்லி...எழுதி எழுதி மனதிலும் உடலிலும் உருவேற்றியதால்தான். ஆகையால் மந்திரந்திற்கு எந்த மொழியும் ஆகும். அதனால்தான் திருக்கோயில்களிலும் வேறு சில வழிபாட்டு முறைகளிலும் குறிப்பிட்ட மொழிகளைத் தூக்கிப் பிடித்து மற்றவைகளை ஏற்காத பொழுதும் சிரிப்பு வருகிறது.

வல்லிசிம்ஹன் சொன்னது…

மந்திரம்,ஸ்லோகம் எல்லாம் நாம் வளர்க்கப்படும் போதூ ஊட்டப்பட்ட நம்பிக்கைகள்.
ஒரு ஊன்றுகோல்.
சில சோதனைகள் வரும்போது நம்மை இது காப்பாற்றும் என்ற நம்பிக்கையே எனக்கு பலம் கொடுத்து இருக்கிறது.
இது என்னுடைய பலவீனமா, மந்திரத்தின் பலமா என்று ஆராயவில்லை.

மனிதர்கள் சில சமயம் ஏமாற்றலாம்.மந்திரங்கள் மனதுக்கு உரம் அளிக்கும் என்றுதான் என் நம்பிக்கை.
எந்த வார்த்தையாக இருந்தாலும் சரி. மீண்டும் மீண்டும் சொல்லும் போது ,
சப்தங்களுக்கு வலு உண்டு
என்பதும் என்னுடைய எண்ணம்.
நன்றி கண்ணன்.

குமரன் (Kumaran) சொன்னது…

//கையால் எழுதுவதோ...மனதால் நினைப்பதோ....முழு ஈடுபாட்டோடு சொல்லும் சொல்லும் மந்திரமே. செய்யும் செயலும் தந்திரமே. மாங்கனி என்று சொல்லும் பொழுதே நா இனிப்பதும்...புளியங்காய் என்றத் சொல்கையில் பல் கூசுவதும் கூட....இப்படிச் சொல்லிச் சொல்லி...எழுதி எழுதி மனதிலும் உடலிலும் உருவேற்றியதால்தான். ஆகையால் மந்திரந்திற்கு எந்த மொழியும் ஆகும். அதனால்தான் திருக்கோயில்களிலும் வேறு சில வழிபாட்டு முறைகளிலும் குறிப்பிட்ட மொழிகளைத் தூக்கிப் பிடித்து மற்றவைகளை ஏற்காத பொழுதும் சிரிப்பு வருகிறது.
//

இதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

வல்லிசிம்ஹன் சொன்னது…

உங்கள் பதிவில்,
வந்த,கருத்துக்களில் பயமுறுத்தும்
கடிதங்கள் பற்றியதை வரவேற்கிறேன்.

இந்தச் சங்கிலி கடிதங்களால்,
கிலி கொண்ட நாட்களும் உண்டு.
அதனாலேயே வலையில் கூட இப்படி செய்கிறார்களே என்ற வெறுப்பும் வந்துவிட்டது.
இப்போது இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நன்றி கண்ணன்.

கோவி.கண்ணன் [GK] சொன்னது…

//செந்தில் குமரன் said... இருக்கு என்றால் இருக்கிறது இல்லை என்றால் இல்லை என்று சொல்லி விட்டு மக்களின் அமைதியைக் குலைக்கும் மூட நம்பிக்கைகளின் ஊற்றுக் கண்ணாண மதங்கள் எல்லாம் தன்னைத் தானே சீர் தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அழிந்து போக வேண்டும், அப்போது தான் மனிதன் நிம்மதியாக வாழ முடியும். //

செந்தில் குமரன்,

இறைநம்பிக்கை ... மதம் என்று திரியும் போது ... அந்த நம்பிக்கை கேள்விக்கு உரியது... ஏனென்றால் மதங்கள் காட்டும் இறைவனின் குணநலன்கள் வேறுவேறாக இருக்கின்றன.

நீங்கள் சொல்வது சரிதான்.
இப்போது இருக்கும் மதங்களுக்கு வழிநடத்துபவர்கள் இல்லை. எனவே திருந்துவதற்கான வாய்புகள் கொஞ்சமும் இல்லை.
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
செந்தில் குமரன்,

நான் நம்பிக்கை என்று நினைப்பதை நீங்கள் விடாமுயற்சி என்று நினைக்கிறீர்கள். இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கையே தன்னம்பிக்கைகு ஊற்று என்று என்னளவிலும் என் சுற்றில் உள்ளவர்கள் அளவிலும் கண்டதை நான் சொன்னால் அதனை மூட நம்பிக்கை என்கிறீர்கள். ஏனெனில் இறை நம்பிக்கை தன்னம்பிக்கையைக் கொல்கிறது என்று மேற்கத்தவர் எழுதுவதைப் படித்து அதனையே உண்மை என்று நீங்கள் நம்புவதால். இறை நம்பிக்கை இல்லாமலும் தன்னம்பிக்கை உண்டு. இறை நம்பிக்கையே தன்னம்பிக்கையின் அடிப்படையாக ஆவதும் உண்டு. கண்ணன் அண்ணா சொல்வது போல் எல்லாம் அவரவர் நம்பிக்கையையும் புரிதல்களையும் பொறுத்தது.
//

குமரன்,
நல்ல கருத்து. மாற்றுக் கருத்தையும் ஏற்கவேண்டியது அவசியமில்லை. மதிக்கலாம் ... அதைப்பற்றி சிந்திக்கலாம்... தெரிந்து கொண்டால் நாம் குழம்பிவிடுவோமோ, மாறிவிடுவோமோ என்று நினைப்பது நாம் சார்ந்துள்ள நம்பிக்கை நம்மீது செலுத்தும் பலவீனம்.

Sridhar V சொன்னது…

//மார்க் ட்வெயினின் Adventures of Huckleberryfinn கதையில் வரும் ஜிம் என்ற கறுப்பு இனத்தவன் இப்படித்தான் நல்ல/கெட்ட குறிகள் பலிப்பதை பல நாட்கள், வாரங்கள் ஏன் ஆண்டுகள் கழித்து சுட்டிக் காட்டுவான்.
//

இப்படித்தான் இன்றும் பலர் நாஸ்டர்டாம்ஸ்-இன் பல verses-க்கு இன்றைக்கும் புதிது புதிதாக அர்த்தம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்கு வெற்றி கொடுக்கக் கூடிய எந்த வார்த்தையுமே மந்திரம்தான். உதாரணம் - 'நான் எப்பொழுதும் உண்மையே பேசுகிறேன்', 'எல்லாரிடமும் இனிமையாக பேசுகிறேன்'. தினம் 100 முறை சொல்லிப் பாருங்கள். இதைத்தான் 'conditioning of mind' என்று சொல்கிறார்கள். இதனால் உங்கள் attitude மாறுகிறது. வெற்றி உங்களை தேடி வருகிறது.

ஒரு சிலர் முன்னோர்களிடமிருந்து (pioneers) அதைக் கற்று கொள்கிறார்கள். வேறு சிலர் தாங்களே அதை உருவாக்குகிறார்கள்.

Yogi சொன்னது…

வார்த்தைகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஏதோ இருப்பதாகவே தோன்றுகிறது. வீட்டில் அம்மா செய்யும் சமையல் சுவையாய் இருப்பதும், ரூமில் வேலைக்கார அம்மா செய்யும் சமையல் சுவையாய்த் தோன்றாததற்கும்
அவரவர் எண்ணங்களே காரணம் என நினைக்கிறேன். அம்மா எப்போதும் நமக்கு நல்ல சாப்பாடு தர வேண்டும்
என்றும் வேலைக்காரம்மா சீக்கிரம் வேலையை முடித்து வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என எண்ணுவதும் காரணமாக
இருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

///வல்லிசிம்ஹன் said...
உங்கள் பதிவில்,
வந்த,கருத்துக்களில் பயமுறுத்தும்
கடிதங்கள் பற்றியதை வரவேற்கிறேன்.

இந்தச் சங்கிலி கடிதங்களால்,
கிலி கொண்ட நாட்களும் உண்டு.
அதனாலேயே வலையில் கூட இப்படி செய்கிறார்களே என்ற வெறுப்பும் வந்துவிட்டது.
இப்போது இவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
நன்றி கண்ணன்.
//

வல்லியம்மா,
உங்களுக்கும் 'நல்ல' அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன. இதுபோன்ற பயமுறுத்தல்கள் அவ்வப்போது 'தண்டனை கிடைக்கும்' என்ற ஒலித்த படி வேறு வடிவங்களில் வரும். தானும் பயந்து அடுத்தவர்களையும் பயமுறுத்தும் தன்னம்பிக்கை அற்றோரின் செயல் அது. புறந்தள்ள வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொன்வண்டு said...
வார்த்தைகளுக்கும், சிந்தனைகளுக்கும் ஏதோ இருப்பதாகவே தோன்றுகிறது. வீட்டில் அம்மா செய்யும் சமையல் சுவையாய் இருப்பதும், ரூமில் வேலைக்கார அம்மா செய்யும் சமையல் சுவையாய்த் தோன்றாததற்கும்
அவரவர் எண்ணங்களே காரணம் என நினைக்கிறேன். அம்மா எப்போதும் நமக்கு நல்ல சாப்பாடு தர வேண்டும்
என்றும் வேலைக்காரம்மா சீக்கிரம் வேலையை முடித்து வீட்டுக்கு கிளம்ப வேண்டும் என எண்ணுவதும் காரணமாக
இருக்கலாம்.
//

பொன்வண்டு,

சரிதான்,

அம்மாவின் சாப்பாடு அதில் பாசமென்னும் பக்குவம் இருக்கிறது. மான்மிகு வேலைக்காரம்மா கடமைக்குத் தானே செய்வார்கள்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

நல்லதொரு பதிவு...

மந்திரம் என்பது மனோதத்துவம் என்று கூட நினைக்கத் தோன்றுகிறது..நல்ல வார்த்தைகளைப் பேசு..நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை ரீதியிலான மனோதத்துவம்..

(ஒரு காலத்தில் அம்மா சொன்னதற்காக ஸ்ரீராமஜெயம் எழுதியதுண்டு..இன்று என் மகளிடம் நான் சொல்வது இல்லை..)

மற்றபடி மந்திரம் என்பது சிலருக்கு நம்பிக்கை மொழி..சிலருக்கு வெற்று வார்த்தைகள்தான்..

// சொற்கள் உடனடியாக செயலில் முடிகிறது எங்கென்றால் அதிகாரவர்கத்திடம் தான்//

முற்றிலும் உண்மை..

Mahesh சொன்னது…

அட... ஸ்வாமி ஓம்கார் சொன்னதை கிட்டத்தட்ட சொல்லீட்டிங்க. உங்க பேரையும் கொஞ்சம் மாத்திக்கலாமோ என்னவோ? எதுக்கும் ஸ்வாமியோடா "ஜிஞ்சினக்காலஜி" கன்சல்ட் பண்ணிடுங்க :))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//Mahesh said...
அட... ஸ்வாமி ஓம்கார் சொன்னதை கிட்டத்தட்ட சொல்லீட்டிங்க. உங்க பேரையும் கொஞ்சம் மாத்திக்கலாமோ என்னவோ? எதுக்கும் ஸ்வாமியோடா "ஜிஞ்சினக்காலஜி" கன்சல்ட் பண்ணிடுங்க :))))))))
//

மகேஷ்,

ஸ்வாமியெல்லாம் சும்மா, நம்ம ஜெகதிசனை அனுகுங்கள் உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் உங்க ப்ளாக்குக்கு பெயர் வச்சு தருவார், அப்பறம் என்ன அனானி பின்னூட்டமே ஒரு இடுகைக்கு 100 பின்னூட்டம் கிடைக்கும்

YOUNGSUN சொன்னது…

என்னை மூன்று முறை தேள் கடித்துள்ளது. அதில் இரண்டு முறை மந்திரம் போட்டார்ககள். நான் நம்பிக்கையின்றிதான் இருந்தேன். ஆனால், கடுமையாக வலித்தது உடனே குறைந்தது. மூன்றாவது முறை தேள் கடித்த போது மந்திரம் போடுபவர் கிடைக்கவில்லை. ஆதலால், டாக்கடரிடம் சென்று ஊசி போட்டுக்கொண்டேன். அதுவும் வலியை குறைத்தது. மருத்தால் வலி குறைந்ததில் எனக்கு ஆச்ச‌ரியம் ஒன்றுமில்லை. ஆனால், மந்திரத்தால் வலி குறைந்தது எப்படி என்ற கேள்வி இன்னும் என்னுள் கேள்வியாக உள்ளது. மந்திரம் எப்படி வேலை செய்கிறது. திரும்பத் திரும்ப ஒரு எண்ணத்தை மனதில் உறுப்படித்தினால், மனம் அதனை செயல்படுத்த வழிவகுக்கும் என்று மனோதத்துவம் கூறுவதைக்கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், தேள்கடி மந்திரம் நம்பிக்கையின்றி இருந்தும் கூட ஒருமுறை போட்டவுடன் உடனே பலித்தது எவ்வாறு? அதில் உள்ள மனோத்தத்துவம் மற்றும் மருத்துவம் என்ன? மந்திரம் பலிக்கும் என்ற நம்பிக்கை நமது ஆழ்மன‌தில் நமக்கு தெரியாமலே வழிவழியாக வருகிறதா? ஆழ்மனதால் வலியை குறைக்கமுடியுமா? விசத்தை முறிக்கமுடியுமா? மருந்து இல்லாமலும் உடல் குணமடையுமா? எனக்குள் உள்ள கேள்வியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதால் தெளிவு காண விழைகிறேன்.

YOUNGSUN சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
YOUNGSUN சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
YOUNGSUN சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்