பின்பற்றுபவர்கள்

16 நவம்பர், 2010

மதச்சார்பின்மையும் மண்ணாங்கட்டியும் !

நேற்று ஒரு இடுகையைப் படித்ததும் பெருவாரியான இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டுவைக்கும் திரியாக இருந்தது. மதச்சார்பின்மை என்பது பல்வேறு மத நம்பிக்கையினர் வாழும் நாட்டில் மிக மிகத் தேவையானது. மதச்சார்பின்மை என்பது சகிப்புத்தன்மை அல்லது புரிந்துணர்வு. மதத்தினரிடையே சகிப்புத் தன்மை குறைவு என்பதால் புரிந்துணர்வு என்பதே பொருத்தம், அதாவது நீ உன்னுடையதை கழுவிக் கொள், நான் என்னுடையதைக் கழுவிக் கொள்கிறேன் யாருக்கும் புறத் தொல்லைகள் இல்லை, மாறாக நான் மட்டும் தான் கழுவவில்லை என்று சுட்டிக் காட்டாதே என்பதே மதங்களுக்கிடையேயான புரிந்துணர்வு. மற்றபடி அவங்க மதம் சார்ந்த விழாவுக்கு இவங்க வருகிறார்களா ? புறக்கணிக்கிறார்களா போன்றவை அனைத்தும் மத நல்லிணக்கம் என்பவையாக சொல்லப்படுகிறது. தற்போதைக்கு மதங்களுக்கிடையே முற்றிலும் நல்லிணகம் என்பதே கிடையாது, அவ்வாறு இணங்குபவர்கள் மதங்களை மறுக்கும் நாத்திகர்கள் மட்டுமே, மத நல்லிணக்கவாதிகள் என்று நாத்திகர்களைச் சொல்லலாம் அவர்களுக்கு எல்லா மதமும் ஒண்ணு தான். சகிப்புத்தன்மையே இல்லாத மதவாதிகளிடம் நல்லிணக்கம் எதிர்பார்க்க முடியுமா ? எனவே தற்போதைய சூழலில் பல்வேறு மதத்தினர் இருக்கும் நாட்டில் இருப்பவை வெறும் புரிந்துணர்வுகள் மட்டுமே, அதற்கும் வேட்டுவைக்க அவ்வப்போது இந்தியா இந்து நாடு, இந்து மதம் தமிழர்களின் தாய் (தந்தை மதம் என்ன ?) போன்ற மதவாத முன்னெடுப்புகள் நூற்றாண்டுகளாக நடந்தேறிவருகிறது.

இன்றைய வாழ்வியல் மற்றும் சமூக அமைப்புகள், அரசுகள் பெருவாரியான நடைமுறைகள் (சிஸ்டம்) ஐரோப்பிய வழிகாட்டலின் வழியாக நடந்தேறிவருகிறது, உதாரணத்திற்குச் சொல்லப் போனால் நாட்காட்டி இவை உலகினருக்கு பொதுவானது, அது போன்றே நேரம் இவையும் பொது, இவை கிரிக்கேரியன் முறையைப் பின்பற்றி ஆங்கிலத்தில் உள்வாங்கி அதையே உலகினருக்கு பொதுவானதாகப் பயன்படுத்திவருகிறோம். குறிப்பாக வெள்ளைக்காரன் உடை. இதையெலலாம் வைத்து உலக நாடுகள் அனைத்தும் கிறித்துவத்திற்கு மாறிவிட்டன என்று சொல்ல முடியுமா ? அல்லது உலகமே ஒரு பெரிய கிறித்துவ நாடு என்று சொல்லிவிட முடியுமா ? இந்தப் பதிவைப் படித்ததும் உண்மையிலேயே வெறுப்பே மிஞ்சியது, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறதாம், அல்லா கைகாட்டியுள்ளான், நாம் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு முயற்சி செய்வோம் இதுவே சரியான சமயம் என்பதாக இந்தியா இஸ்லாமிய நாடு - ஏன் என்பதற்கான காரணங்களைச் சொல்லி இருக்கிறார்கள்.

என்ன கொடுமைசார், இந்துக்களுடன் சேர்ந்துவாழ எங்களுக்கு விருப்பம் இல்லை, ஒத்துவராது நாங்கள் செல்கிறோம் என்று தானே பாகிஸ்தான், பங்களதேஷாக பிரிந்து சென்றார்கள். பிரிந்தவர்களின் நிலையோ படு மோசம், இதில் பங்களாதேசாவது பரவாயில்லை பாகிஸ்தான் பண மதிப்பு இந்திய நாணய மதிப்பைவிட மிகக் குறைவு. மொத்த நாடும் சர்வாதிகாரிகள் கையில் மாறி மாறி சிக்கி அந்த நாட்டை வறுமை கோட்டிற்கு கீழே வைத்திருக்கிறது, மேலும் அரபு நாடுகளில் பணிபுரிந்தால் மட்டுமே பாகிஸ்தானில் குடும்பத்தை காப்பாற்ற முடியும் என்கிற நிலை, இது தான் இந்தியா பிரிவினையால் முழுக்க இஸ்லாமிய நாடாக மாறிய பாகிஸ்தான் பெற்ற பலன். பங்களாதேஷ் நிலையும் அதே என்றாலும் பொருளாதார வாழ்வியலில் பாகிஸ்தான் மக்களைவிட இவர்கள் பரவாயில்லை காரணம் இராணுவத்திற்கு பாகிஸ்தான் அளவுக்கு செலவு செய்வதில்லை. பாகிஸ்தானோ, பங்களாதேஷோ இஸ்லாமிய நாடாக மாறியதால் அங்கு தேன் மாரி பொழிகிறதா ? கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றது தொடர்பாக குற்றவாளிகளைத் தண்டிக்க அரபு நாடுகளின் சட்டங்களை பின்பற்ற வேண்டும் பொதுமக்கள் சொன்னது இவர்களுக்கு இஸ்லாமிய ஆட்சி முறை இந்தியாவில் நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கான அழைப்பாக இருக்கிறதாம்.

குறிப்பிட்ட அந்த இடுகையை கூகுள் பஸ்ஸில் போட்ட போது சில நண்பர்கள் வருத்தம் தெரிவித்தார்கள், ஏன் இவர்களுக்கு விளம்பரம் கொடுக்கிறீர்கள், நீங்கள் விளம்பரம் கொடுப்பதால் நல்லவர்கள் கூட அதைப் படித்து கெட்டுப் போகலாம் இல்லையா ? ஞாயம் தான். தடுப்பு ஊசிப் போட்டுக் கொள்ள நோய் தாக்கி இருக்கத் தேவை இல்லை. இது போன்ற கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இது சரிதான் என்பதாக கருத்தாக்கத்தை உருவாக்குபவர்கள் மேலும் மேலும் முயலமாட்டார்களா ?

இந்தியா இந்து நாடாக மாறுதா ? இஸ்லாமிய நாடாக மாறுதா ? என்பது பிரச்சனையில் சுடுகாடு ஆகிவிடாமல் இருந்தால் சரி. இங்கு மதவாதிகள் எவருக்கும் வெட்கமே இல்லை, இதற்கு எந்த மதத்தின்வாதிகளுக்கும் விலக்கு இல்லை. மதச்சார்பின்மைதான் இந்தியர்களின் சிறப்பு என்பதற்கு வேட்டுவைக்க எல்லா மத அமைப்புகளுமே தன்னால் ஆன கெடுதலை செய்தே வருகின்றன. பெரும்பான்மை மக்கள் தொகையை கணக்கில் கொண்டாலும் இந்தியா ஒரு இந்து நாடு அல்ல பலமாகவே முழங்கி மதச்சார்பின்மை போற்றிவரும் வேளையில் இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருதாக புழகாங்கிதப்படுகிறார்கள் ? இந்துக்களிடையே மதச்சார்பின்மை பேசும் பகுத்தறிவாளர்கள் என்போல் ஆயிரம் பேர் உண்டு, இந்தியா இஸ்லாமிய நாடாக மாறிவருகிறது என்று மகிழும் இவர்களை வெளிப்படையாக கண்டிக்க இஸ்லாமியர்கள் முன்வரவேண்டும்.

18 கருத்துகள்:

jothi சொன்னது…

//மதச்சார்பின்மைதான் இந்தியர்களின் சிறப்பு என்பதற்கு வேட்டுவைக்க எல்லா மத அமைப்புகளுமே தன்னால் ஆன கெடுதலை செய்தே வருகின்றன//

மிக சரியாக சொல்றீங்க

பொன் மாலை பொழுது சொன்னது…

ஆமோதிக்கிறேன், இஸ்லாமிய சட்டங்களே குற்றங்களை நடக்கவிடாமல் செய்யும் ஒரு கருவி. சரிதான். ஆனால் இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் ,ஏன் பிற அரபு நாடுகளில் இதுபோன்ற குற்றநிகழ்வுகள் நடக்கவில்லை என்று எடுதுக்கொள்ளமுடியுமா? இது இவர்களின் அல்பமான மன குதூகலம் அன்றி வேறு இல்லை. இது வேலைக்கு ஆகாது. வேண்டுமென்றால் கலக்கம் மூட்டவே உதவும் வழக்கம் போல.

பொன் மாலை பொழுது சொன்னது…

நட்சத்திர விடுதியில் தன் உடன் இருந்த " நண்பரை " அடித்தே கொன்றாரே அவர் இஸ்லாமியர் இல்லையா? அவருக்கு அச்சட்டம் பொருந்தாதா? அவரும் இஸ்லாமிய சட்டம் தெரியாதவரா?

ஜோதிஜி சொன்னது…

இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையில் உள்ள பாகிஸ்தான், பங்களாதேஷ் ,ஏன் பிற அரபு நாடுகளில் இதுபோன்ற குற்றநிகழ்வுகள் நடக்கவில்லை என்று எடுதுக்கொள்ளமுடியுமா? இது இவர்களின் அல்பமான மன குதூகலம் அன்றி வேறு இல்லை.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

மதச் சார்பின்மை என்பது எப்படி எல்லாம் இங்கே தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது, இஷ்டம் போலத் திரித்து வியாக்கியானம் செய்யப்பட்டிருக்கிறது என்பதையோசித்துப்பார்த்தால், இந்தப் பதிவிற்குக் கொஞ்சம் நேர்மையான விடை எழுதியவருக்கும்/படிப்பவருக்கும் கிடைத்து விடும்.

மதச் சார்பின்மை என்பது, ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் தனிச் சலுகை அந்தஸ்து இல்லாத நிலை என்பது ஒரு வியாக்கியானம். இது இந்திய வரலாற்றில் மிகவும் கறாராகவும், நேர்மையாகவும் கடைப்பிடிக்கப்பட்டதாகச் சொல்ல வேண்டுமானால், நாயக்கர் ஆட்சிக் காலத்தை மட்டுமே சொல்லமுடியும். நாயக்கவமிசத்தவர்கள் தன்னளவில் வைணவர்களாக இருந்தபோதிலும், அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் சைவ-வைணவச்சண்டைகள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எல்லோருடைய மத நம்பிக்கைகளையும் மதித்திருக்கிறார்கள், திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இஸ்லாமியருடனும் கூட நல்ல உறவுகளுடன் இருந்திருக்கிறார்கள்.அரசனின் மதம், அரசின் மதமாகவோ, அரசியல் மதமாகவோ திணிக்கப்படாத நிலை! இப்படி பாரபட்சமில்லாத மதச் சார்பின்மை என்பது மிக அபூர்வம். மத நம்பிக்கை என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம், சமூகம் சார்ந்தது இல்லை என்று பரந்த கண்ணோட்டத்தில் வருவது.

இன்னொரு கண்ணோட்டத்தில், அரசு என்பது மதம், மத நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கு நூறு விலகி இருப்பதான மதச் சார்பின்மை. இதுவும் கூட ஒரு கற்பனாவாதம் தான், நடைமுறையில் எப்போதுமே இருந்ததில்லை, சாத்தியமும் இல்லை.இங்கே மதச் சார்பின்மை அஸ்திரம் பிரயோகிக்கப்படுவது பெரும்பான்மை மக்களுடைய மத நம்பிக்கைகளுக்கு, உணர்வுகளுக்கு எதிராகவே. உதாரணமாக, எனக்குத் தெரிந்த ஒரு அரசு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், ஆயுத பூஜையை மற்ற எல்லா ஊழியர்களும் சேர்ந்து கொண்டாடியபோது, தன்னுடைய மேசைப் பக்கம், பூசைப் பொருட்களோ குங்குமம் சந்தனம் தீட்டுவதோ கூடாது; மீரிச்செய்தால், தானே மேசையைக் கொளுத்திவிட்டு, பூசையில் கற்பூரம் ஏற்றி தீவிபத்து நடந்துவிட்டதாகப் புகார் செய்வேன் என்று முழங்கியதை நேரடியாகவே பார்த்தேன். ஹிந்து மதப்படங்கள் என்று வந்தால் செக்குலரிசம் பேசி புகார் செய்து விட்டு, அலுவலகத்திலேயே மதப் பிரச்சாரம், மத மாற்றம் செய்து வரும் கிறித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். இப்படி மதச் சார்பின்மை என்பது பெரும்பான்மையினரைக் குறிவைத்து நடத்தப்படும் குதர்க்கமாகிப் போனது எப்படி?

தற்காலத்திய அரசியல்வாதிகளுடைய வியாக்கியானத்தின் படி, மதச் சார்பின்மை என்பது, சிறுபான்மையினருக்குப் பாதுகாவலராகத் தங்களைக் காட்டிக் கொள்வதற்காக, பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளை ஏளனம் செய்வது, இழிவு படுத்துவது, குங்குமம் இட்டுக் கொண்ட அமைச்சரை ரத்தத் திலகமாக வர்ணித்துவிட்டு, எஸ்ரா மாதிரியானவர்களுடன் சேர்ந்து திருவள்ளுவரைக் கிறித்தவராக்கிவிட்டு, சமதுகளுடன்சேர்ந்து நோன்புக் கஞ்சி குடிக்கிற சாக்கில் மைனாரிட்டி ஓட்டுக்களை உத்தரவாதப்படுத்திக் கொள்வது என்று வரிசையாகப் போய்க் கொண்டே இருப்பது தான்!

இந்த அரசியல்வியாதிகளுக்கு ஆப்பு வைத்தாலேயே முக்கால்வாசி கோளாறுகள் ஓடிவிடும்!

குடுகுடுப்பை சொன்னது…

எனக்கு இந்த மாதிரி பதிவுகள் படிப்பது பிடிக்கும், பரிணாமம் தவறு, இன்னைக்கு இத்தனை பேரு எங்க மதத்திக்கு மாறிட்டாங்க இன்னும் நிறைய படிச்சு நல்லா சிரிப்பு வரும், அதற்கு மேல் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

smart சொன்னது…

பார்த்தீர்களா? இப்படி யார் சொன்னார்கள் என்று நீங்கள் கூட கடைசிவரை "சில முஸ்லீம்கள் தளங்கள் இப்படி சொல்கிறது" என்று சொல்லாமல் மழுங்கடிக்கிறீர்கள் இதுவே ஒரு ஹிந்து சின்ன எழுத்து சீர்திருத்தம் வேண்டும் என்றாலே அவன் சாதியிலிருந்து மதம் வரை முதலில் விவாதிப்பீர்கள்.

நல்ல சந்தர்ப்பவாத மதச்சார்பின்மை.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ம்ம்ம்... ஆமாங்க

vinthaimanithan சொன்னது…

கடவுள் இல்லை என்பவர்கள் வழிபாட்டுத்தலங்களை சிதைப்பதில்லை! கடவுள் உண்டு என்பவர்கள்தான் கடவுளின் இல்லங்களைச் சிதைக்கிறார்கள்.

Robin சொன்னது…

//கடவுள் இல்லை என்பவர்கள் வழிபாட்டுத்தலங்களை சிதைப்பதில்லை! கடவுள் உண்டு என்பவர்கள்தான் கடவுளின் இல்லங்களைச் சிதைக்கிறார்கள்.//

தவறான தகவல். கம்யூநிச நாடுகளில் நாத்திகர்களால் உடைத்தெறியப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் ஏராளம்.

கோவி.கண்ணன் சொன்னது…

////கடவுள் இல்லை என்பவர்கள் வழிபாட்டுத்தலங்களை சிதைப்பதில்லை! கடவுள் உண்டு என்பவர்கள்தான் கடவுளின் இல்லங்களைச் சிதைக்கிறார்கள்.//

தவறான தகவல். கம்யூநிச நாடுகளில் நாத்திகர்களால் உடைத்தெறியப்பட்ட வழிபாட்டுத்தலங்கள் ஏராளம்.

11:32 AM, November 19, 2010//

நாத்திகர்கள் அனைவரும் கம்யூனிஸ்டுகள் இல்லை, மதவாதிகள் அனைவரும் ஆத்திகர்கள் இல்லை

தருமி சொன்னது…

//படைத்தவனுக்கு தெரியும் எது மனிதகுலத்திற்கு சிறந்தது என்று!. //

சொன்னா கேளுங்க'ப்பா!

தருமி சொன்னது…

//குடுகுடுப்பை said...

எனக்கு இந்த மாதிரி பதிவுகள் படிப்பது பிடிக்கும், பரிணாமம் தவறு, இன்னைக்கு இத்தனை பேரு எங்க மதத்திக்கு மாறிட்டாங்க இன்னும் நிறைய படிச்சு நல்லா சிரிப்பு வரும், அதற்கு மேல் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது...//

கடைசி வரி தவிர மற்றவை சரி.. அதனால்தான் இப்பதிவு

அதிரை முஜீப் சொன்னது…

என் அருமை சகோதரருக்கு உங்கல் மீது சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டுமாக! உங‌க‌ளின் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் ந‌லத்துட‌ன் வாழ உங‌க‌ளையும் என்னையும் ப‌டைத்து பாதுகாக்கும் இறைவ‌னிட‌ம் பிறார்திக்கின்றேன்.

இந்தியா இஸ்லாமிய‌ நாடாக‌ப்போகின்ற்து என்ற‌ ப‌திவிற்கு தாங்க‌ல் ஆட்சேப‌ம் தெரிவித்து ஒரு ப‌திவு வெளியிட்டு உள்ளீர்க‌ள். இப்ப‌திவின் நோக்க‌ம் குற்றங்க‌ள் செய்ப‌வ‌ர்க‌ள் பார‌ப‌ட்ஷ‌மின்றி உட‌னுக்குட‌ன் த‌ன்டிக்க‌ப்ப‌டவேன்டும் என்ற‌ நோக்கிலும், வ‌ர‌த‌ட்ஷ‌னை என்ற‌ பெய‌ரில் பென்னின‌ம் த‌ன்ட‌னை அனுப‌விப்ப‌தை த‌டுக்க‌ வேன்டும் என்ற‌ நோக்கிலும், வ‌ட்டியின் கொடுமையில் ஏழைக‌ள் வ‌தைக்க‌ப்ப‌டுவ‌தையும் சாடிதான் நாம் ப‌திவை வெளியிட்டோம். மாறாக‌ அனைவ‌ரும் முஸ்லிம்க‌லாக‌ மாறவேன்டும் என்றோ அனைத்து இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ளையும் இந்தியாவில் தினிக்கவேன்டும் என்ற‌ நோக்கிலோ அல்ல‌ என்ப‌தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதிரை முஜீப்.

கோவி.கண்ணன் சொன்னது…

//என் அருமை சகோதரருக்கு உங்கல் மீது சாந்தியும் சமாதானமும் உன்டாகட்டுமாக! உங‌க‌ளின் குடும்ப‌த்தின‌ர் அனைவ‌ரும் ந‌லத்துட‌ன் வாழ உங‌க‌ளையும் என்னையும் ப‌டைத்து பாதுகாக்கும் இறைவ‌னிட‌ம் பிறார்திக்கின்றேன்.//

ஜஸ்ட் ஒரு சின்ன, ஒப்பீடுதான்... குஜராத் மோடி உங்களுக்காக பிரார்திக்கிறேன் என்றால் சரி என்பீர்களா ?

priyamudanprabu சொன்னது…

இந்தியா இந்து நாடாக மாறுதா ? இஸ்லாமிய நாடாக மாறுதா ? என்பது பிரச்சனையில் சுடுகாடு ஆகிவிடாமல் இருந்தால் சரி

priyamudanprabu சொன்னது…

இந்தியா இந்து நாடாக மாறுதா ? இஸ்லாமிய நாடாக மாறுதா ? என்பது பிரச்சனையில் சுடுகாடு ஆகிவிடாமல் இருந்தால் சரி
////

ha ha

அதிரை முஜீப் சொன்னது…

அருமை சகோதரர் கோவிக்கண்ணன் அவர்களே! நீங்களும் உங்கள் குடும்பமும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்வதைகூட நீங்கள் விமர்சனம் செய்வதில் இருந்து தங்களைப் பற்றி அறிய முடிகின்றது! இருந்தாலும் என் பதில் : மோடி மட்டுமல்ல எந்த விதமான தன்மையை உடையவர்களும் கூட அவர்களை படைத்த இறைவனிடம் மட்டும் பிரார்தனை செய்தால் நிச்சயம் நான் ஏற்றுக்கொள்வேன் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது!. அது சரி, மோடியின் மீது உங்களுக்கு அப்படி என்ன கோபம?. ஆமாம்! உங்களைப் போன்ற நடுநிலையாளர் கூட அவரின் செயலை, இது போன்ற கருத்துக்களால் மறைமுகமாவது தனிமைப்படுத்திக் கான்பித்ததற்கும் உங்களுக்கு என் நன்றி!.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்