பின்பற்றுபவர்கள்

20 மே, 2007

இந்துமதம் எப்போதும் மறுமலர்ச்சியை நோக்கியது !

தோற்றுவிக்கப்பட்ட என்பதைவிட 'தானாக தோன்றிய' என்பதில் மாற்றங்கள் என்பதும் இயற்கை. இது மதங்களுக்கு பொருத்தமான உண்மை. இந்துமதம் மாற்றங்களை ஏற்றுக் கொண்டு வளர்ந்துள்ளதாக இந்துமதம் குறித்து ஆன்மிக அன்பர்கள் பல்வேறு மதத்தினர் இந்துமதம் பற்றி குறை கூறும் போது இந்துமத வளர்ச்சி பற்றி கூறி கூறிவருகின்றனர். அதில் உண்மையும் இருக்கிறது.

தோற்றுவிக்கப்பட்ட மதம் என்பதால் மாற்றங்களை ஏற்றுக் கொள்வதில் சிக்கல் என்பதையும் அதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதைத் தோற்றுவிக்கப்பட்ட பிற மதங்கள் அப்படியே இருப்பதைப் பார்த்து தெரிந்து கொள்கிறோம் (புத்தமதம் இவற்றில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது). மதங்களில் வளர்ச்சி என்பது அதைப் பின்பற்றுவர்களின் எண்ணிக்கையைக் குறித்தது அல்ல. அது எந்த அளவுக்கு சமூக கட்டுக் கோப்புகளை, நாகரீக வளர்ச்சியையும் உள்வாங்கிக் கொண்டு மக்கள் வாழ்கைக்கு உறுதுணையாக மாறுகிறது என்பதைப் பொறுத்தது. நாகரீக வளர்சி என்று பார்க்கும் போது மதம் தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ளாமல் இருந்தால் அதை கடைபிடிக்கும் மக்களால் நாகரீக வளர்சியில் மனம் உவந்து பங்கு பெறவோ, அதை பின்பற்றவோ முடியாமல் போய்விடும். இந்த கண்ணுக்கு தெரியாத காரணங்களால் மதங்களுக்கு இடையே சண்டைகள் எப்போதும் இருந்து வருகின்றன.

இந்து மத வளர்ச்சி என்று நான் அறிந்த வகையில் ... பாம்புகள் தன்னைப் புதுபித்துக் கொள்ள தோலை உறித்துக் கொண்டாலும் விசப்பற்களை மாற்றிக் கொள்ளவோ, கொடிய விஷத்தைத் ஒதுக்குவது தற்காப்புக்கு கேடு என்று நினைத்துக் கொள்வதால் பாம்புகளை ஒழிக்கும் காரணமாக அதுவே அமைந்துவிடுவதைப் போல என்னதான் மாற்றங்கள் நடந்தாலும் மாற்றங்கள் மேலும் வேண்டுமென்பதற்கான காரணங்கள் எப்போதும் இருப்பதும் இந்துமதத்தைப் பின்பற்றுபவர்கள் தெளிந்து கொண்ட உண்மை. அதாவது ஆதிக்கங்களை ஒழிக்க வேண்டும், மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும், பழமை வாதங்களை ஒழிக்க வேண்டும் என்று ஒவ்வொன்றாக ஒழிக்கப்பட்டு வருவதும் தான். இந்து மதம் வளர்ச்சியில் செல்கிறது என்றால் இதுபோன்ற வளர்ச்சிதான் அது. இன்றைய இந்துமதம் இப்படியே இருக்கலாமா ? என்று கேட்டால் 90 விழுக்காட்டினர் இன்னும் மாறவேண்டியதற்கான காரணம் இருக்கிறது, பல்வேறு உரிமைக்காக போராட வேண்டியிருப்பதால் "ஆம்" என்றே சொல்லுவார்கள்.

ஒருகாலத்தில் இந்துமதம் பல பிரிவுகளை கொண்டதாக இருந்தது, ஒரு பிரிவினரின் நம்பிக்கைகளை அடுத்த பிரிவினர் சாடி வந்தனர். உதாரணத்துக்கு சைவம் - வைணவம் சண்டைகள். சைவமும் வைணவமும் ஆதிகாலத்தில் இருக்கவில்லை. சனாதன தருமம் என்ற பெயரில் இருந்த மதமே பின்னாளில் புத்த, சமண மதத்தால் பலத்த அடிவாங்கியபோது மத்வாச்சாரியார், ராமானுஜர், சங்கரர் போன்றவர்களால் உணரப்பட்டு மாற்றம் எதுவும் இன்றி அப்படியே இருந்தால் சனாதன தர்மம் வளரவாய்ப்பே இல்லை என்று மாற்றங்கள் காலத்தின் கட்டாயம் என்று உட் புகுத்தினர்.

இதில் குறிப்பிட்டு செல்ல வேண்டியது இருவருடைய சிறப்பான ஆன்மிகப் பணி. ஒன்று ஆதிசங்கரர் மற்றொருவர் ராமானுஜர். ஆதிசங்கரர் அனைத்து மாந்தர்களும் ஆத்மாக்களே என்றும் ஆத்மாக்கள் தன்னை உணர்ந்துவிட்டால் பரம்பிரம்மம் எனப்படும் மீளாத (பிறவியற்ற) உன்னத நிலையை அடைய முடியும் என்றும் அனைத்தும் ஒன்றே அதுவே பிரம்மம், பிரம்மத்தை அடைவதே ஆத்மாக்களின் குறிக்கோள் என்று அத்வைத தத்துவத்தை தோற்றுவித்தார். இந்த தத்துவம் பெளதீக உலகினரால், உணர்வாளர்களால் அவ்வளவு எளிதாக ஏற்றுக் கொள்ள முடியாது, பின்பற்ற முடியாது என்றும் உணர்ந்தே இருந்தார். எனவே அத்வைத தத்துவத்தை அவரால் வலுயுறுத்த அவர் முயல்வதற்கு உருவ வழிபாட்டுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டி இருந்தது. அதற்காகவே அவர் உருவ வழிபாட்டை ஆதரித்து சங்கர மடங்களை இந்தியாவில் ஐந்து இடங்களில் ஏற்படுத்தினார் செளந்தர்ய லகரி போன்ற பக்தி நூல்களையும் எழுதினார். அதாவது மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை அகற்றவேண்டும் என்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் ஒன்றே என்ற அத்வைத தத்துவம் இன்றளவிலும் உயரிய தத்துவம் என்றால் "ஆம்" என்றே ஒப்புக் கொள்வேன். ஆனால் ஆனால் இந்த தத்துவத்தை பரப்பவேண்டிய சங்கரமடாச்சாரிகளின் மக்களிடையே உள்ள உயர்வுதாழ்வுகளை அகற்ற வேண்டும் என்பதைவிட அதை போற்றிவரும் நடவடிக்கைகளால் அத்வைதம் என்பது ஏட்டளவிலான தத்துவம் என்ற அளவில் இருக்கிறது என்பதும் உண்மை. கதாகலேசேபங்களில் கேட்பதற்கு ஏற்ற ஒரு தத்துவம் என்று தான் அதை வைத்து இருக்கிறார்கள். அந்த அளவில் மட்டும் மதாச்சாரியார்கள் அவற்றை பயன்படுத்துகின்றனர்.

அடுத்ததாக இராமனுஜரை சொல்ல வேண்டும் இவர் வேறு சில சிந்தனைகள் மூலம் ஏற்றத் தாழ்வுகளை அகற்ற முடியும் என்று நம்பினார். அதாவது அன்றைய சமூகத்தில் காணப்பட்ட உயர் சாதி - தாழ்ந்த சாதி என்ற ஏற்றத் தாழ்வுகளின் மூலம் இருந்த சமூக சீர்கேடுகளை மாற்ற முயன்றார். இராமனுஜர் உயர்வு - தாழ்வுகளை அகற்ற வேண்டுமானல் தாழ்ந்தவர்கள் எனச் சொல்லப்பட்டவர்களை உயர்ந்தவர்களால் மாற்றினால் ஏற்றத்தாழ்வுகளை களைய முடியும் என்று நம்பினார். அதன்படி அவர் மீனவர்களை வைணவர்களாக தீட்சைக் கொடுத்து மாற்றினார் என்று சமய மற்றும் வரலாற்று அறிஞர்கள் சொல்லுகிறார்கள். அன்றைய அகன்ற பாரதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரையும் இராமனுஜர் நேரிடியாக அவர் வாழ்ந்த காலத்திலேயே வைணவர்கள் ஆக்குவது இயலாத காரியம் ஆகிவிட்டது.


விளைவு ? அவ்வாறு வைணவர்கள் ஆக மாறிய குறிப்பிட்ட அளவிலான முன்னாள் மீனவர்களுக்கும் தாங்கள் உயர்ந்தவர்கள் மனப்பாண்மைக்கு சென்றாலும் அவ்வாறு மாறதவர்களை தாழ்த்தப்பட்டவர்களாகவே பார்த்து வந்ததால் ஏற்றத் தாழ்வுகள் அப்படியே இருந்துவந்தது. இன்றளவில் கூட இதற்கு உதாரணம் சொல்ல முடியும். அதாவது இந்துமதத்தில் இருந்து மற்ற மதங்களுக்கு மாறியவர்களே அந்த மதத்தில் பிறந்தவர்களைவிட இந்துமதத்தை அதிகமாகவே எதிர்பவர்கள் ஆக இருக்கின்றனர் என்பதை பார்க்கிறோம். ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதற்கு இன்றைய மதமாற்றம் என்பது எந்த அளவு தவறோ அந்த அளவுக்கு தவறு என்பது போலவே தாழ்த்தப்பட்டவர்கள் என வைக்கப்பட்டவரை குறிப்பிட்ட அளவில் உயர்ந்தசாதிக்காரர்கள் ஆக்குவதும் தவறாகிப் போய்விட்டது. இது உயர்சாதிக்காரர்களின் எண்ணிக்கையை உயர்த்த மட்டுமே பயன்பட்டது. சமூக மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. திரும்பிப்பார்க்கும் போது ராமானுஜர் சீர்த்திருத்தங்களை செய்தார் என்று கண்டு கொள்ளவே வராலாறாக பார்க்கப்படுகிறது.

உயர்ந்தவர்கள் என்று சொல்லுபவர்களின் செயல்களை ஏற்றுக் கொள்ளும் போதும் அவர்கள் விதித்த கட்டுப்பாடுகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களின் நிலையை அவை என்னாளும் உயர்த்தாது. ஏற்றத் தாழ்வுகளை அகற்ற தாழ்வு மனப்பாண்மையையே அகற்றவேண்டும். தாங்கள் எந்தவிதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லை என்று நினைக்கவேண்டும். இங்கே தான் அம்பேத்கர் மற்றும் நமது பெரியார் போன்றவர்கள் புரிந்து கொண்டு செயல்பட்டனர். இன்றைக்கும் கிராமங்களில் தீண்டாமைகள் இரட்டை டம்ளர் முறைகள் இருந்தாலும் நகரத்தில் அவ்வாறு செய்வதற்கு எவரும் துணிவதில்லை. இறைவழிப்பாட்டில் நம்பிக்கை உடையவர்கள் கோவிலுக்குள் விடப்படவேண்டும். கதவுகள் திறக்கப்படவேண்டும் என்று போராடியதால் இன்றைக்கு அவை சாத்தியம் ஆகியது.

நாத்திகர்கள் கடவுளை எதிர்ப்பதைவிட மூடநம்பிக்கையை எதிர்த்தார்கள் என்று சொல்வதுதான் பொருத்தம். புத்தரும் கூட கடைசிவரை கடவுள் உண்டா ? இல்லையா ? என்ற கேள்விக்கு செல்லவே இல்லை... என்பதை புத்தரின் வாழ்கை வரலாறுகளை படித்தவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். நாத்திகர்களுக்கு எதிராக எல்லா ஆத்திகர்களும் அலறுவதில்லை. தங்களாகவே நினைத்துக்கொண்ட உயரிய நிலையை தாங்கள் இழந்துவிடுவோம் என்ற தேவையற்ற பயத்தின் காரணமாகவே சில அவ்வாறு அலறுகிறார்கள்.


இவர்கள் சமூக மாற்றத்தை என்றைக்குமே விரும்பாதவர்கள் அதற்கு காரணமாக அவர்கள் சொல்லுவது 'வழிவழி வருவது, ஆகமம், பொதுவிதி, நடைமுறை' என்ற காரணங்களைக் கூறி முட்டுக்கட்டைகளை போடுகின்றனர். நாத்திகர்களை இறைமறுப்பாளர்களாக 'ஹைலட்' செய்வதன் மூலம் தங்கள் நிலைக்கு ஆதரவு தேட முயல்கின்றனர். இந்த முட்டுக்கட்டைகள் காலப்போக்கில் உளுத்துப் போகிவிடும் என்று இவர்கள் நினைப்பது இல்லை. அவ்வாறு தான் நடந்துவருகிறது. உயர்வு தாழ்வு தவறு ஆனால் சாதி தவற அல்ல என்ற முரண்பாடான கொள்கையை கொண்டிருக்கும் இவர்களால் சமூக மாற்றம் என்னாளும் ஏற்படாது. இந்துமதத்தில் மாற்றம் ஏற்படுவதற்கு இவர்கள் எப்பொழுதும் உறுதுணை புரியமாட்டார்கள். அவர்களின் பழமைவாதத்தினால் ஏற்றத்தாழ்வுகளின் நிலை என்பது காலத்தின் ஊடே வேறுமுகங்களில் அப்படியே இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு மாறும் ஏற்றத்தாழ்வுகளின் ஒவ்வொருமுகமாக அழிப்பதற்கான அவசியம்... சமுக ஆர்வலர் மற்றும் ஆன்மிக அன்பர்களால் அவ்வப்போது கட்டாயம் என்று உணரப்பட்டு மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்துமத்தில் மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம் என்ற அளவில் ஆன்மிக அன்பர்களால் ஆய்ந்து அறியப்பட்டு ஏற்றுக்கொண்டதைப் போலவே, அடியாத மாடு படியாது என்று பழமொழி போல் வேறு வழியின்றியும் மாற்றங்களை ஏற்றுக் கொண்டுள்ளது.

பின்குறிப்பு : எனது பதிவுகளை படித்துவிட்டு நான் சொல்லும் குறைகளில் பிராமனர்களைப் பொருத்திப் பார்த்துவிட்டு நான் 'பார்பன எதிரி' என்பது போல் பலர் கட்டு கட்டாக இட்டுக்கதைகள் சொல்கிறார்கள். உயர்ந்தசாதி மனப்பான்மை பல்வேறு சாதியினரிடமும் இருக்கிறது என்பது பலரும் அறிந்துள்ளதே. ஏற்றத்தாழ்வுகளை எவர் போற்றினாலும் அவை கண்டிக்கத் தக்கதே என்ற நிலையை கொண்டிருப்பவன் நான். ஆத்திகமோ நாத்திகமோ சமூக சீர்த்திருத்ததிற்கு எவை பாடுபட்டாலும் அவற்றைப் போற்றுவதில் தயக்கம் எனக்கு இல்லை. எனது பதிவில் ஆன்மிக அன்பர்களின் பதிவுகளின் இணைப்பு மட்டுமே இருக்கிறது, எனது நண்பர்களில் ஆத்திக நண்பர்களே மிகுந்தவர்கள், நான் விரும்பிப்படிப்வை பலரின் ஆன்மிகப் பக்கங்கள் என்பதும் பலருக்கு தெரியாமல் போனது என்குறை அல்ல. :)


எழுத்துப் பிழைகளை 'பொருட்படுத்திப்' படித்துக் கொள்ளுங்கள் ! :)))

10 கருத்துகள்:

G.Ragavan சொன்னது…

:) கோவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பல வரலாறுகளும் தத்துவங்களும் அறிந்தவன் அல்லன் நான். ஆனால் இறைநம்பிக்கை உடையவன். அதே நேரத்தில் சமூகநீதியை மறுக்காதவன். தவறு என்று தெரிந்தால் அதைச் சொல்லவும் தயங்க வேண்டியதில்லை. என் நம்பிக்கை சார்ந்துள்ள சமயம் என்பதால் எல்லாவற்றையும் ஆதரித்துச் சப்பைக் கட்டு கட்டவேண்டியதில்லை.

VSK சொன்னது…

எப்படியோ மாற்றங்கள் வந்தே தீரும் என்று சொல்லும் பதிவில் புதுக்கருத்து அதிகமில்லை.

எனினும், கோர்வையாகச் சொல்லியிருப்பது சிறப்பு.

பதிவை விட டிஸ்கி நல்லாயிருக்கு!
:))

எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவது அந்தக் கடைசி வரி.

:))))))))))))

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
எப்படியோ மாற்றங்கள் வந்தே தீரும் என்று சொல்லும் பதிவில் புதுக்கருத்து அதிகமில்லை.

எனினும், கோர்வையாகச் சொல்லியிருப்பது சிறப்பு.

பதிவை விட டிஸ்கி நல்லாயிருக்கு!
:))

எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடுவது அந்தக் கடைசி வரி.

:))))))))))))

11:06 PM, May 20
//

விஎஸ்கே ஐயா,

இந்த பதிவின் பின்குறிப்பு சென்றபதிவைக் காட்டிலும் உங்களுக்கு பிடித்திருப்பதில் வியப்பு இல்லை !
:)

புதுக்கருத்துக்கள் சொல்லி மாற்றம் ஏற்படுத்தும் அளவிற்கெல்லாம் நான் வளர்ந்துவிடவில்லை.

:))))

அந்த கடைசிவரி எனது பஞ்ச் டயலாக் ! சட்டென்று புரிந்து கொண்டு பாராட்டடியதற்கும் பதிவு பற்றிய தங்கள் கருத்துக்கும் நன்றி அன்பு ஐயா !

கோவி.கண்ணன் சொன்னது…

// G.Ragavan said...
:) கோவி, நீங்கள் குறிப்பிட்டுள்ள பல வரலாறுகளும் தத்துவங்களும் அறிந்தவன் அல்லன் நான். ஆனால் இறைநம்பிக்கை உடையவன். அதே நேரத்தில் சமூகநீதியை மறுக்காதவன். தவறு என்று தெரிந்தால் அதைச் சொல்லவும் தயங்க வேண்டியதில்லை. என் நம்பிக்கை சார்ந்துள்ள சமயம் என்பதால் எல்லாவற்றையும் ஆதரித்துச் சப்பைக் கட்டு கட்டவேண்டியதில்லை.
//

ஜிரா,

நானும் அப்படித்தான் இருந்தேன். இன்னும் இருகிறேன். துறந்தது சிலை வழிபாடுகளையும் சமய சடங்குகளை மட்டுமே !

பின்னூட்டத்துக்கும் தங்களைப் பற்றி சொல்லும் கருத்துக்கும் நன்றி மட்டும் பாராட்டுக்கள் !

பெயரில்லா சொன்னது…

பல கோட்பாடுகளிலே மனித நேயம் ஓங்கி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
அமெரிக்கா.தென் ஆப்பிரிக்காவிலே கறுப்பர்கள் ஒதுக்கப் பட்டது சட்ட ரீதியாகவும் வாழ்வு ரீதியாகவும் மாற்றப் பட்டுள்ளது.
பெண்ணடிமைத்தனம் இருந்தாலும் மாற வேண்டிய நிர்பந்தத்தில் இந்து,கிருத்துவ,இசுலாமிய மதங்கள் உள்ளன்.
இந்து மதத்தின் மிகப் பெருங் குறையான சாதி வேறுபாடு ஐக்கிய நாட்டு மனித வளத்துறையின் ஆய்விலே வந்துள்ளது.அது இந்தியாவின் உரிமை ,உள் நாட்டுப் பிரச்சினை என்பதெல்லாம் எடுபடாது.உண்மையான சாதி ஒழிப்புச் சட்டங்கள்,நடைமுறைகள் வந்தே ஆக வேண்டும்.
இந்து மதக் குறைகளை நிவர்த்திக்க நீங்கள் சொல்லியது தவிர ஆரிய சமாஜம்,விவேகானந்தர்,மஹாத்மா காந்தி வரை முயன்றது தொல்விகளைத்தான் தழுவியுள்ளது.அங்கேதான் ஆரிய சூழ்ச்சி உள்ளதை மற்ற இந்துக்கள் புரிந்து கொள்ளாமல் மந்திரத்தின் மகிமையில் மயங்கியுள்ளனர்.இந்த மந்திர மயக்கம் கட்டாயம் நீங்கத்தான் போகிறது,மனிதர்கள் சம உரிமை சட்டமாகவும்,வாழ்க்கையாகவும் வரத்தான் போகிறது.மாற முடியாதவர்கள் தணடனை என்ற் அபயம் வந்ததும் அமெரிக்கா,தென் ஆப்பிரிக்கா போல மாறி விடுவார்கள்.
அதை மறு மலர்ச்சி என்று சொன்னாலும்,சட்ட மலர்ச்சி என்று சொன்னாலும் மாற்றம் நிச்சயம் என்பது கட்டாயம்.
ஆதி சங்கரர் நான்கு திசைகளிலும் நான்கு மடங்களைத்தான் உண்டாக்கினார்.அய்ந்தாவது மடம் கும்பகோண்த்திலிருந்து,காஞ்சிக்குச் சென்றது அதில் அடங்காது என்பது, தாங்கள் அய்ந்து மடங்கள் என்று கூறியுள்ளதை மற்ற நால்வர் ஒத்துக் கொள்ளாதது..

Unknown சொன்னது…

கோவி கண்ணன்,
உங்கள் இடுகையை உங்கள் பெயருக்காக இப்போதுதான் முதன் முறையாகப் படிக்கிறேன். உண்மையில் அடித்து ஆடுகிறீர்கள். இன்று முழுவதும் உங்களுடைய பழைய இடுகைகளை படிக்க நேரம் செலவிடப்போகிறேன். (வேலைக்கு இடையிடையேதான்).

கோவி.கண்ணன் சொன்னது…

//உமையணன்(10278117489250974595) said...
கோவி கண்ணன்,
உங்கள் இடுகையை உங்கள் பெயருக்காக இப்போதுதான் முதன் முறையாகப் படிக்கிறேன். உண்மையில் அடித்து ஆடுகிறீர்கள். இன்று முழுவதும் உங்களுடைய பழைய இடுகைகளை படிக்க நேரம் செலவிடப்போகிறேன். (வேலைக்கு இடையிடையேதான்).
//

வாங்க உமையணன் 'சமீபத்தில்' என்பதிவுகள் படிக்காதவரா ? நீங்கள் !

ம் பலர் செய்யும் அதே 'அடித்து ஆடும்' ஏற்றிவிடுதலை சொல்லி ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பலரும் செய்யும் முயற்சி... நல்லதுக்கு என்று தோன்றவில்லை.

எனக்கு நிதானம் இருக்கிறது... அடித்து ஆடுகிறேனா ? இல்லையா ?என்பதை எவரும் முடிவு செய்துவிட முடியாது.

Unknown சொன்னது…

கோவி கண்ணன்,

அடித்து ஆடுகிறீர்கள் என்ற வாக்கியம் உங்கள் மனத்தை புண்படுத்தியிருக்கிறது போலிருக்கிறது. அதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
"சமீபத்தில்" என்ற வார்த்தைக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது என் மனதையும் புண்படுத்துகிறது.
நான் இந்த பதிவுலகத்துக்குப் புதியவன். நான் லண்டன் வந்து நான்கு மாதங்கள்தான் ஆகின்றன. இந்த நான்கு மாதங்களில்தான் எனக்கு தமிழ்மணம் அறிமுகம். எனவே உங்கள் பதிவுகளை நான் அதிகம் படிக்காதது எனது தவறில்லை என்று நினைக்கிறேன்.
எந்த பிம்பத்திலும் சிக்காமல் தன்னிச்சையாக உங்கள் சிந்தனைகளை பதிய வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தை நான் மதிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

உமையணன்,

புதிய பதிவர்களின் வலைப்பகுதியை கொஞ்சம் மேய்வது உண்டு. உங்கள் பதிவில் கூட 'சமீபத்தில்' என்று ஒரு இடுகையில் யாரோ போட்டு இருந்தார்கள். இப்பொழுது அந்த இடுகையை எடுத்துவிட்டீர்கள் சரிதானே ?

'சமீபத்தில்' என்பது உங்களுக்கு தொடர்புடையது போல என்று நானும் இங்கே சேர்த்தேன். நீங்கள் வருந்துவதைப் பார்த்ததும் அது தவறு என்று நினைக்கிறேன்.

என் பதிவு குறித்து உங்கள் பாராட்டுகளுக்கு மகிழ்ச்சி. நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பெண்ணடிமைத்தனம் இருந்தாலும் மாற வேண்டிய நிர்பந்தத்தில் இந்து,கிருத்துவ,இசுலாமிய மதங்கள் உள்ளன்.
//

நான் ஒரு இந்து என்பதால் மற்ற விவகாரங்கள் குறித்து எதுவும் சொல்வதற்கு எனக்கு எப்போதும் மனம் ஒப்புவதில்லை. சில சமயங்களில் மாற்று மத சகோதரர்கள் கோவித்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் எனது புரிதல்களுடன் சில கருத்துக்களைச் சொல்கிறேன்.

இந்து மதத்தில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு பெண்கள் நிலை உயர்ந்திருப்பதாக நினைக்கிறேன். இன்றைக்கும் தாலி அறுத்தல் போன்ற சடங்குகள் 50 வயதிற்கு மேள் உள்ள பெண்கள் கணவரை இழக்கும் போது அவர்கள் விருப்பத்துடன் தான் தாலி அறுத்தல் நடக்கிறதாக நினைக்கிறேன்.

இளம் வயது இல்லை எனவே மறுமணம் குறித்து யோசித்தும் நடைமுறைப்படுத்தி வருவதும் மாற்றம் என நினைக்கிறேன்.

மற்றபடி சாதிகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிகள் இருக்கும் வரை உயர்வு தாழ்வு வேறுபாடுகள் இருக்கும் என கருதுகிறேன். நான்கு வருண பிரிவில் உள்ள மற்ற மூவர்ணத்தினர் சாதி சாதியாகவே இன்னும் இருந்தாலும். தனது சாதி தாழ்ந்ததல்ல என்ற முன்னேறி இருக்கிறார்கள். இன்னும் இதுபோல் மாற்றங்கள் ஏற்படவேண்டியது கிராம புரங்களில் தான். எல்லோரும் உணர்ந்துவிட்டால் எவர் தன்னை உயர்ந்தவர் என்று சொன்னாலும் மற்றவர்களுக்கு அது கேட்காது.

கும்பகோண மடத்தின் எக்ஸ்டன்சன் தான் காஞ்சி மடம் என்பதை நானும் அறிவேன். அதைச் சொல்வதால் ஒன்றும் இல்லை. காஞ்சி ஆதிசங்கரர் ஏற்படுத்தியதா ? இல்லையா ? என்று நாம் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. சமுகத்தில் வேறுபாடுகள், முரண்பாடுகள் என தெரியும் வெளிப்படையானவற்றை மட்டும் சொல்ல விழைகிறேன்.

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்