உங்கள் எழுத்து வளம் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நல் வாய்ப்பு

உங்கள் எழுத்து வளம் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நல் வாய்ப்பு
மணற்கேணி - 2009

காலத்தில் தேட...

மொழி, கடவுள், அடிமைத்தனம்

Wednesday, May 02, 2007

மொழிகள் என்பது வெறும் தொடர்பு சாதனாமா ? இல்லை. அது ஒரு இனத்தின் அடையாளம். தனக்கென்று மொழிகள் உள்ள இனங்களே போற்றப்படுகின்றன. தனது மொழியைப் பரப்புவதன் மூலம் அந்த இனம் மற்ற இனங்களைவிட உயர்வானவர்கள், நாகரீகத்தில் முன்னேறியவர்கள் என்று நினைக்க வைத்துவிட முடியும். நமது ஆங்கில மோகமும் அப்படித்தான் வெள்ளைக் காரர்கள் உயர்வானவர்கள், உயர்ந்த பண்பாடுகள் உள்ளவர்கள் என்று நினைக்கிறோம். உலகம் முழுதும் ஆதிக்கம் செலுத்த வெள்ளையர்கள் செய்தது ஆங்கில மொழியைப் பரப்பியது. ஒரு மொழி நன்கு வேகமாக வேறு ஒரு மொழி பேசும் இடத்தில் வளரும் போது அவ்வின மக்கள் தங்கள் மொழியைக் குறைத்துமதிப்பிடுவர். எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்வது தவறே இல்லை. ஆனால் தன் மொழியின் பயன்பாட்டைக் குறைக்கும் அளவுக்கு வேற்று மொழியானது ஒரு இன மக்களிடம் புழங்கும் போது பெரும் ஆபத்தை நோக்கியே செல்கிறது, பண்பாடு அழிகிறது முடிவில் தேவையற்றது பயனற்றது என்று தாய்மொழியே அழிகிறது. அடுத்த நூற்றாண்டில் தனக்கென ஒரு மொழி இல்லாத இனம் என்று ஏளனம் செய்யப்படுகிறது.

இதேதான் கடவுள், இறைவன், இறைநம்பிக்கை என்ற விசயங்களிலும் நடக்கிறது. நான் இங்கு மதம் என்று பொதுவாக குறிப்ப்பிட வில்லை. சர்சைகளுக்குள் செல்ல விருப்பம் இல்லை. உலகில் ஆதி காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனமும் தத்தம் கடவுளைக் வழிபட்டுக் கொண்டிருக்கின்றன, அது பின்னால் மதம் என ஒருங்கினைக்கப்பட்டு மதநூல்கள் ஏற்படுத்தப்பட்டன. தன்னுடைய நம்பிக்கை சார்ந்த அல்லது கடவுள், இறைநம்பிக்கைகளை மாற்று இனத்தாருக்கு பரப்புவதன் மூலம் தங்கள் இனமே உயர்ந்தது என்று நிறுவமுடியும். ஓரளவு கூர்ந்து பார்த்தால் இது உண்மைதான் என நினைக்க வைக்கிறது. இந்திய மதங்களைவிட மேலை நாட்டு மதங்கள் எல்லாவிததிலும் உயர்ந்தது என்று நினைக்கிறோம், நம்ப வைக்கப் படுகிறோம், அது உண்மையாகக் கூட இருக்கலாம். இந்தியர்கள் மீது ஆசிய நாடுகள் அன்பு வைத்திருப்பதற்குக் காரணம் புத்தர் இந்தியாவில் பிறந்தவர். புத்தம் இந்தியாவில் பரவி இருந்ததல் நாம் உயர்ந்தவர்கள் என்று ஒரு வேளை ஆசிய நாடுகளால் போற்றப்பட்டிருக்கும்

இந்தியாவில் நாட்டார் தெய்வ வழிபாடுகள் காணமல் போனதும், தங்கள் பேசும் மொழியே 'தீண்டத்தகாதவர் பாசை' என்று சொல்லும் போதும் யாருக்கும் சுரனை இல்லாமல் போனதற்கும் தங்கள் தெய்வம், மொழி ஆகியவற்றைவிட மற்றொன்று உயர்ந்தது என்று நினைக்க வைத்து இதுவே தேவ பாசை, நாங்கள் வணங்கும் கடவுள்களே உயர்ந்தது என்று சொல்லியதை நம்பியதால் தான். நீங்கள் தீண்டத்தகாதவர்கள் ஊருக்குள் வரக்கூடாது...உங்கள் சாமிகளும் தீண்டத்தகாதவை ஊருக்கு வெளியில் எல்லையில் நின்று கொண்டு எங்கள் தெய்வங்களுக்கு 'எல்லை சாமிகளாக' காவல், ஏவல் செய்யட்டும் என்று நடந்தேறி இருக்கிறது. ஒரு இனம் அடிமைப் பட இரண்டு விசயங்கள் அழிய வேண்டும் ஒன்று மொழி, இரண்டு வணங்கும் தெய்வங்கள்... இதை இழந்த இனங்களே அடிமையாக ஆகி இருக்கின்றன. இந்தியாவில் வருண அமைப்புகள் தோன்றி மக்கள் பிளவானதற்கும் காரணம் மொழி, தெய்வம் போன்றவற்றை உள்வாங்கிக் கொண்டு அவைகளில் சொல்லப்பட்டது உண்மை, அவை எல்லாம் உயர்ந்தது என்று நினைத்து அவைகளை பின்பற்ற ஆரம்பித்தது தான்.

இதுபற்றி ஆழமாக எவரேனும் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.


மாற்றுக் கருத்துடையோர் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

18 கருத்துக்கள்:

விடாதுகருப்பு 11:57 AM, May 02, 2007  

நல்ல பதிவு கோவி.கண்ணன்.

ஆராய்ச்சிப் பதிவு என்றால் நம் குமரி மைந்தன் அவர்கள் நிறைய எழுதி இருக்கிறார்.

இன்னும் எழுதச் சொல்லலாம் அன்னாரை.

நற்கீரன் 4:14 PM, May 02, 2007  

நீங்கள் மொழியையும் சமயத்தையும் நிலையான அம்சங்களாக கணிக்கின்றீர்கள். ஒரு மக்கள் குழுவுக்கு இதுதான் மொழி, இதுதான் சமயம் என்று வரையறை செய்கின்றீர்கள். நடைமுறையில் நிலைமை சற்று சிக்கலானது.

மொழியும் சமயமும் பண்பாடும் மாறும் தன்மை உடையவை. அந்த மாற்றங்கள் நனமையானவையாவா அல்லது கேடுதல் தருபவையா என்பது குறித்த சந்தர்பங்களைப் பொறுத்தது.

அடிமைத்தனத்தை குழுவாக எப்பொழுதும் நோக்க முடியாது. ஒரு குழுவுக்குள்ளும் அடிமைத்தனம் இருக்கும், அப்பொழுது அந்த அடிமைத்தனத்தில் இருந்து விடுபட ஒரு தனிமனிதன் வேறு ஒரு குழுவின் மொழியையோ அல்லது சமயத்தையோ தேடலாம், அல்லது அவை அவனுக்கு உதவலாம். எனவே தனிமனித குழு நோக்கிய ஆய்வும் இங்கு தேவை.

நாம் மொழியை இழப்பதால் குழு என்ற ரீதியில் இழப்பதை தனிமனித ரீதியில் ஈடு செய்யக்கூடியதாக் இருக்க முடியும். அமெரிக்க ஆபிரிக்கர் யாரும் தமது ஆபிரிக்க மொழியை இழந்து விட்டோமே என்று பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை. அவர்கள் பெறுமானம் மிக்க ஒன்றை இழந்தார்களா...இருக்கலாம்.

தமிழர்களைப் பொறுத்த வரை தமிழ் ஒரு பெரிய சொத்து. அது பெறுமானம் மிக்கது. அதை புரிந்து கொள்ளாதவர்களுக்கு இழப்பு அனேகமாக அவர்களுக்குத்தான். தமிழுக்கும் அதன் தாக்கம் இருக்கும், ஆனால் அதன் உயிர்துடிப்பு அதைப் புரிந்து கொண்டவர்களால் என்றும் வீச்சுடன் இருக்கும்.

கோவி.கண்ணன் 6:49 PM, May 02, 2007  

மொழியையும், கடவுள்களையும் இழப்பதால் ஒரு எந்த ஒரு இனமும் அடிமைப்படும் என்பது உலக அளவில் கண்கூடு. கருப்பின மக்கள் தங்கள் மொழியை மறந்து, சொந்த தெய்வங்களை இழந்ததால் தான் அவர்கள் மேலை நாடுகளில் இருந்தாலும் இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றன.

ஆப்ரிக்கர்கள் அலட்டிக் கொள்ளவில்லை என்றால் அவர்கள் விழிப்புணர்வு பெறவில்லை என்று தான் கருத வேண்டும், அதை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது...சீனர்களும், ஜப்பானியர்களும் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு காரணமே மொழி, கடவுள் இரண்டையும் விட்டுவிடாததால் தான். இது பற்றி நிறைய சொல்லலாம்.

நமது தமிழ்நாட்டில் எடுத்துக் கொள்ளுங்கள் தமிழர்களால் கோவிலுக்குள் நுழைந்து தமிழில் வழிபாடு நடத்த முடிகிறதா ? மறைமுகமாக உரிமை பிரச்சனை எழுகிறதல்லவா ?

கடவுளும் நம்மைச் சேர்ந்தது, மொழியும் நம்மைச் சேர்ந்தது நமக்கு உரியது என்று இருந்தால் நாம் ஏன் 'தமிழில் அர்சனைக்காக' போராடப் போகிறோம்.

என்னதான் ஆங்கிலம் சரளமாக பேசினாலும், ஐரோப்பிய மதங்களை ஏற்றுக் கொண்டாலும் 'ஆசியனாகப்' பார்க்கப்பட்டு இரண்டாம் தரக் குடிமகனாகக் தான் பார்க்கப்படுவர், இந்தியானும் நாயும் உள்ளே வரக் கூடாது என்று நம் நாட்டிலேயே வெள்ளையர்கள் எழுதி வைத்தனர். கருப்பர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லாமல் வெள்ளையர்கள் மட்டும் என்று நாகரீகமாக அனுமதி மறுக்கிறார்களே இதற்கெல்லாம் மூலகாரணமே இனம் மட்டும் அல்ல, மொழி, தெய்வம் எல்லாவற்றிலும் உரிமை இருப்பதால் தான்.

தனிமனிதர்கள் சேர்ந்தது தானே குழு..தனிமனிதனுக்கு அவன் வாழும் காலத்தில் இழப்பில்லை என்று கருதலாம்... ஆனால் சந்ததிகளுக்கு என்ன நடக்கும் என்று எவருக்கு தெரியும்?

இந்தியாவில் மட்டும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒரு இனம் தோன்றியதா என்ன ? எல்லாவற்றையும் இழந்ததால் வந்த வினைதான் அது.

Thamizhan 8:23 AM, May 03, 2007  

நன்றாக எழுதியுள்ளீர்கள்,பாராட்டுக்கள்.உயர்திரு.
அறவாணன் அவர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளாரகள்.
மூளைச் சலவை பல இனங்களில் நட்ந்துள்ளது.ஒரு சிறுவன் ஒரு பெரியவரைப் பார்த்து வாடா,போடா என்று பேசும் அள்விற்கு மூளைச் சல்வை வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை.
அதுவும் ஒரு இனம் மற்றொரு இனத்தில் இருந்த நல்லவற்றையெல்லாம் தனதாகத் திருடிக்கொண்டு,அந்த இனத்தையே அடிமைப்படுத்தியதாக எங்கும் காணவியலாது.
மனிதனின் அடிப்டைப் பயத்தை வைத்து
அதன் மேலே ஒவ்வொன்றாக பயப்பட வைத்து,அதற்கென்று கட்டுக்கதைகளும்,பொய்களும் எழுதிப்,
படிப்படியாக மொழி அழிவு,தன்மான அழிவை உண்டாக்கிவிட்டார்கள்.மன்னர்களும் மய்க்கப் பட்டுவிட்டதால் மக்கள் எளிதில் ஏமாந்து விட்டனர்.
மூளைச் சலவை எவ்வளவு ஆழ்மாக என்றால்,பல படித்த அறிவாளிகள் கூட மந்திரத்திற்கு,கொஞ்சமும் புரிய வில்லை என்றாலும் மயங்கி நிற்பதுதான்.
அடிப்படைக் காரணம் ஒரு ஆழ்ந்த பயத்தை உண்டாக்கி அதை மேலும் மேலும் வலுப்படுத்தி வருவதுதான்.

ஜீவா (Jeeva Venkataraman) 12:05 PM, May 04, 2007  

மாற்றுக் கருத்துண்டு.
இழக்காமல் காத்தல் வேண்டும். அதே சமயத்தில் மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும் மணமற்றது என்று கண்மூடித்தனமாக நினைப்பதும் தவறு.
மற்றவைகளால் நம் மொழியோ, சமயமோ, சங்கீதமோ என்றும் குறைந்து போகவில்லை.
கட்டுரையின் பதிவிலும் பார்வையிலும் குறுகிய பார்வையைத்தான் காண்கிறேன் :-(

கோவி.கண்ணன் 12:18 AM, May 05, 2007  

//விடாதுகருப்பு said...
நல்ல பதிவு கோவி.கண்ணன்.

ஆராய்ச்சிப் பதிவு என்றால் நம் குமரி மைந்தன் அவர்கள் நிறைய எழுதி இருக்கிறார்.

//
நல்லது வி.க அவர்களே,

அவர் உங்கள் நண்பராக இருந்தால் அவசியமாக எழுதச்சொல்லுங்கள்.

நன்றி.

கோவி.கண்ணன் 12:21 AM, May 05, 2007  

//Thamizhan said...
நன்றாக எழுதியுள்ளீர்கள்,பாராட்டுக்கள்.உயர்திரு.
அறவாணன் அவர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளாரகள்.
//

தமிழன்,

அவர்களே...! நன்றாக சொல்லி இருக்கிறீர்கள் மாற்றுக் கருத்து இல்லை.
நன்றி மற்றும் கருத்துக்கு பாராட்டுக்கள்

கோவி.கண்ணன் 12:26 AM, May 05, 2007  

//ஜீவா (Jeeva Venkataraman) said...
மாற்றுக் கருத்துண்டு.
இழக்காமல் காத்தல் வேண்டும். அதே சமயத்தில் மாற்றான் தோட்டத்து மல்லிகை மட்டும் மணமற்றது என்று கண்மூடித்தனமாக நினைப்பதும் தவறு.
மற்றவைகளால் நம் மொழியோ, சமயமோ, சங்கீதமோ என்றும் குறைந்து போகவில்லை.
கட்டுரையின் பதிவிலும் பார்வையிலும் குறுகிய பார்வையைத்தான் காண்கிறேன் :-(
//

ஜீவா,

விசாலப் பார்வை எல்லோருக்குமே இருந்தால் இந்த கட்டுரையே தேவையற்றது. மாற்றான் தோட்டத்துக் காரன் நமது தோட்டத்தில் உள்ளவை ஊமத்தம்பூ என்று பழித்துச் சொன்னால் சிரித்துக் கொண்டு சொல்லவேண்டும் என்ற அளவுக்கு எனக்கு விசாலப் பார்வை இல்லை. நாம் மட்டும் அவங்க தோட்டத்து மல்லிகை மணக்குது என்று சொல்ல வேண்டுமோ ?
:)
நம்ம தமிழர்களுக்குள்ளேயும் தாழ்வு மனப்பான்மை உள்ளது அதாவது எதையுமே ஆராயாமல் தேவ பாசை அதுதானோ என்று அப்படியே நம்பிவிடுகிறார்கள். நீங்கள் இழக்காமல் காப்பவரென்றால் உங்களுக்கு இந்த கட்டுரை பொருந்தாதுதான். கருத்துக்களுக்கு நன்றி...மாற்றுக் கருத்துகளுக்கு என் பதி(வி)ல் வெற்றிலைப் பாக்கு உண்டு !
:)

தருமி 2:08 AM, May 05, 2007  

பதிவு எழுப்பும் கேள்விகள் நல்ல கேள்விகள்; தொடரும் பின்னூட்டங்களும் நல்ல கருத்துக்களோடு வருகின்றன். வெளியில் இருந்து பார்க்க மட்டும்தான் முடிகிறது; ஆகவே அதைச் செய்கிறேன்....

ஜீவா (Jeeva Venkataraman) 7:10 AM, May 05, 2007  

விசாலப் பார்வை சிலருக்கோ பலருக்கோ இல்லாமல் போகலாம்...அது அவர்களில் குறுகிய மனப்பான்மையை சரி செய்யாது.
அதுவேதான் ஒவ்வொருவருக்கும்...
உங்களிடமும் அதைத்தான் எதிர்பார்த்தேன்.
நியாயங்கள் யார்க்கும் பொதுவானது...ஆனால் புரியாமல் போனது, பழிவாங்கும் எண்ணமே ஊறிப்போனதால்.

கோவி.கண்ணன் 11:32 AM, May 05, 2007  

//ஜீவா (Jeeva Venkataraman) said...
விசாலப் பார்வை சிலருக்கோ பலருக்கோ இல்லாமல் போகலாம்...அது அவர்களில் குறுகிய மனப்பான்மையை சரி செய்யாது.
அதுவேதான் ஒவ்வொருவருக்கும்...
உங்களிடமும் அதைத்தான் எதிர்பார்த்தேன்.
நியாயங்கள் யார்க்கும் பொதுவானது...ஆனால் புரியாமல் போனது, பழிவாங்கும் எண்ணமே ஊறிப்போனதால்.
//

ஜீவா,

பாதிக்கப்படாதவர்கள், பாதிப்பே நடக்கவில்லை என்று நம்புவர்களுக்கு உங்களைப் போல் விசாலப் பார்வை இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.

தடித்ததோல் தமிழர்கள் ஆகிவிட்டார்களே என்பது தான் என் ஆதங்கம். அது குறிகிய பார்வை மூலம் நான் கண்டுகொண்டாலும் உண்மையைத் தான் கண்டுகொண்டு இருக்கிறேன் என நம்புகிறேன். உள்ளதை மறந்து உதறிவிட்டுவிட்டு...வீன்பிடிவாதக் காரர்களிடம் வீனாக போராடுவதும் வீன் என்கிறேன்.

உயர்ந்தது எது என்று தீர்மாணிக்க வேண்டியது மனித மனங்கள்... ஆனால் இதுவே உயர்ந்தது என்று எவரும் திணிக்க முயன்றால்,நம்பவைக்க முயன்றால் என்பதிலாக சொல்வது தான் இந்த கட்டுரை ..இது மதங்களுக்கும் பொருந்தும்.

கோவி.கண்ணன் 11:34 AM, May 05, 2007  

// தருமி said...
பதிவு எழுப்பும் கேள்விகள் நல்ல கேள்விகள்; தொடரும் பின்னூட்டங்களும் நல்ல கருத்துக்களோடு வருகின்றன். வெளியில் இருந்து பார்க்க மட்டும்தான் முடிகிறது; ஆகவே அதைச் செய்கிறேன்....
//

தருமி ஐயா,

மதங்களை ஆராய்ந்தவர் என்ற முறையுல் இது பற்றி உங்களுக்கு மேலும் நன்கு தெரியும்... இன்னும் மிகுந்த தகவல்கள் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஜீவா (Jeeva Venkataraman) 11:08 AM, May 06, 2007  

//பாதிக்கப்படாதவர்கள், பாதிப்பே நடக்கவில்லை என்று நம்புவர்களுக்கு உங்களைப் போல் விசாலப் பார்வை இருக்கும் என்று நிச்சயம் நம்புகிறேன்.
//
பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாலப்பார்வை இருக்கவே கூடாது என்கிறீர்களா?

நாளைய இளைய சமுதாயம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மாற்றி மாற்றி பழிவாங்கிக் கொண்டிருந்த சமுதாயம் என்றா?

கோவி.கண்ணன் 2:50 PM, May 06, 2007  

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாலப்பார்வை இருக்கவே கூடாது என்கிறீர்களா?

நாளைய இளைய சமுதாயம் நம்மை எப்படிப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

மாற்றி மாற்றி பழிவாங்கிக் கொண்டிருந்த சமுதாயம் என்றா?
//

ஜீவா, வாங்க !

'இவன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான்' என்று சொல்லும் அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு விசாலப்பார்வை வேண்டுமோ ?
:)))

மாற்றி மாற்றி இல்லைங்க...இன்றைய தேதிக்கும் தமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு தமிழுக்கு எதிராக பேசுபவர்களும் உள்ளனர். ஒன்றுமே தெரியாமல் குருட்டாம் போக்கில் விமர்சிப்பவர்களும் உள்ளனர் அவர்களுக்கு தக்க நேரத்தில் விழிப்புணர்வை புரிய வைப்பது எப்படி பழிவாங்கள் ஆகும் ?

மாறிக் கொண்டிருக்கும் சமூகத்தைப் பற்றி பேசவில்லை அன்பரே. போக்கை என்றுமே மாற்றிக் கொள்ளாமல் துவேசிப்பவர்களிடம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கிறேன்.

நீங்க மாறிக் கொண்டிருப்பவர்களின் சார்பில் மறுமொழிக்கிறீர்களா ? இல்லை துவேசிப்பவர்கள் சார்பாக மறுமொழிக்கிறீர்களா ? அப்படியெல்லாம் யாருமே இல்லை என்று சொல்லாதிங்க... பதிவுகளிலேயே நிறைய சான்றுகள் உள்ளன.
:)

TBCD 4:40 PM, August 06, 2007  

இப்ப என்னா மேட்டருன்னா...ஒரு சமுகத்தயே..அந்த காலத்தில் எவனோ செஞ்ச தப்புக்கு துவைச்சு எடுக்கனும்மா.. இது தான் அவனுங்க வைக்கிற வாதம்...

இன்னைக்கும் கொடுமை நடந்து கிட்டு தானே இருக்கு...கோவில் உள்ள நிக்க அவனுக்கு மட்டும் தான் உரிமை இருக்கு அப்படின்னு சொல்லுறான்..இதை..இன்னைக்கு அவன் சமுகத்தில் இருக்கிறவன் யாருமே...மனமுவந்து..வரலாமே என்று சொல்ல மாட்டான்...

கொடுக்கப்படுவதில்லை உரிமை... எடுத்துக் கொள்வதே உரிமை...

கோவில் உள்ள வராதே அப்படின்னா ஒன்னு கோவில் இருக்க கூடாது..இல்ல சொன்னவன் இருக்ககூடாது...

எங்களுக்கு கோவில் வேனும்... ஏன்னா அதை கட்டினவன்....தமிழன்..

கோவி.கண்ணன் 11:00 PM, August 06, 2007  

//TBCD said... எங்களுக்கு கோவில் வேனும்... ஏன்னா அதை கட்டினவன்....தமிழன்..//

சும்மா அதிருதுல்லே.......

:)))

செ.பொன்னுதுரை 12:31 AM, August 07, 2007  

//எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்வது தவறே இல்லை. ஆனால் தன் மொழியின் பயன்பாட்டைக் குறைக்கும் அளவுக்கு வேற்று மொழியானது ஒரு இன மக்களிடம் புழங்கும் போது பெரும் ஆபத்தை நோக்கியே செல்கிறது, பண்பாடு அழிகிறது முடிவில் தேவையற்றது பயனற்றது என்று தாய்மொழியே அழிகிறது. அடுத்த நூற்றாண்டில் தனக்கென ஒரு மொழி இல்லாத இனம் என்று ஏளனம் செய்யப்படுகிறது.//


மிக அருமையாக சொன்னீர்கள்

bala 11:27 AM, August 07, 2007  

//எங்களுக்கு கோவில் வேனும்... ஏன்னா அதை கட்டினவன்....தமிழன்//

டிபிஸீடி அய்யா,
அய்யா அய்யா எனக்கும் ஒரு கோவில் கொடுங்கய்யா.

பாலா

tamilers.com - சிறப்பிக்கும் இந்த வாரத் தமிழர் !

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP