3 ஜனவரி, 2011

காலம் மலையேறிவிட்டது !

மாறவே மாறாது என்று நினைத்தவை முற்றிலும் மாறிப் போய் இருப்பதைத்தான் காலம் மலை ஏறிவிட்டதாகச் சொல்லுவார்கள். ஒரு காலத்தில் மலை ஏறுவது என்பது அத்தனை கடினமான செயலாக இருந்திருக்க வேண்டும். தற்காலத்தில் மலை ஏறுதல் மிக எளிதானது, எத்தகைய செங்குத்தான வழியே இல்லாத மலை என்றாலும் உச்சிக்கு ஹெலிக்காப்டரில் சென்று கயிறு கட்டி இறங்கி விட முடியும். ஆனால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை மலை ஏற்றம் அவ்வளவு எளிதான ஒன்றாக இல்லை. கைலாய மலைக்குச் சென்றவர்களில் எத்தனை பேர் திரும்பினார்கள் என்று தெரியாது. தென்னிந்தியர்களுக்கு பழக்கப்படாத கடுங்குளிர், பனி கைலாய மலைக்குச் சென்றவர்களில் எத்தனை பேர் மீண்டு இருப்பார்கள் ? அப்படியும் சென்று திரும்பியவர்கள் உள்ளனர், முடியாது என்று நினைத்தவை அதனை உடைத்துக் காட்டுவதை மலையேற்றத்துடன் தொடர்புபடுத்திப் பேச மலையேற்றம் மிகக் கடினமாக இருந்திருக்க வேண்டும். அதுவும் சாமானியர்களால் சாதிக்கப்பட்டுள்ளது என்பதனைச் சொல்ல மலையேறிவிட்டது என்கிற உவமையாக மலையேறிவிட்ட பழமொழி வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எந்த காலத்தில் இருக்கிங்க, நீங்க நினைப்பது எல்லாம் எப்போதே மலையேறிவிட்டது, மாற்றம் என்கிற ஒன்றைத் தவிர அனைத்தும் மாறக் கூடியது என்பதை இப்படியெல்லாம் கூடச் சொல்லி வைத்துள்ளார்கள்


ஒவ்வொரு ஆண்டும் முடியும் போது தான் அந்த ஆண்டு விரைவாகச் சென்றதாக நினைக்கிறோம். மற்றபடி எந்த ஒரு ஆண்டும் முன்னை விட விரைவாகச் சென்றிருக்க வாய்ப்புகள் இல்லை. கடந்தவை நினைவு என்பதாக சேமிக்கப்படுவதால் அதன் சுருக்கத்தை மட்டும் தான் நம்மால் நினைத்துப் பார்க்க முடியும். ஒராண்டுகளில் நடந்த நல்லது கெடுதல்களில் எவையெல்லாம் நமக்கு முதன்மையாகப் பட்டதோ அது மட்டுமே நினைவில் நிற்கும், அவற்றை நொடிகளில் நினைத்துப் பார்க்க முடியும். அதனால் தான் பின்னோக்கிய காலம் வெகு விரைவாக கடந்து சென்றதாக உணர்கிறோம். மற்றபடி சென்ற ஆண்டின் நாட்களைப் போன்று தான் இந்த ஆண்டின் (ஆங்கில) புத்தாண்டு பிறப்பும் வெகுவிரைவாக கரைந்தது. திருமணம் உறுதிப்பட்டோர்களுக்கு திருமண நாள் வரை வரப்போகும் காலம் மெதுவானது தான். உதவியாளர் தேதிப்படி செயல்படும் தொழில் நடத்துவோர்க்கு எந்த ஆண்டுமே (தனிப்பட்ட) நேரம் என்பதே இருக்காது. (சார் இன்னிக்கு உங்க ப்ரோக்ராம்...... இரவு 8 மணிக்கு பார்க் ஷர்டனில் உங்கள் மனைவி, குழந்தைகளோடு உங்களுக்கு டின்னர்), அன்றாடம் ஒன்று போல் வேலை செய்பவர்களுக்கு, (தன்னுடைய வயது, மனைவி வயது குழந்தைகளின் வயது என்பது தவிர்த்து) புத்தாண்டு என்ன மாற்றம் கொண்டுவரும் ? பொதுவாக நம் வாழ்க்கை முறையில் ஓர் ஆண்டுகான நிகழ்வுகள் இவை என்பதாகத் தான் பெரும்பாலோனர்களின் ஆண்டுகள் ஓடிப் போய்விடுகின்றன. பருவ சுழற்சி இல்லை என்றால் ஆண்டுகள் பற்றிய கணக்கே நாட்களின் தொகுப்பை அறிவிக்கும் ஒரு அளவீடு என்ற அளவில் தான் இருக்கும்.

நினைத்துப் பார்த்தால் வியப்பாகவே உள்ளது, வள்ளுவர் வாக்கின் படி ஒவ்வொரு நாளும் செல்லும் போது நம் வாழ்நாளின் ஒரு நாளும் கூடவே செல்கிறது, புதிதாக ஒரு ஆண்டில் நம் வாழ்நாளில் ஒரு ஆண்டு எண்ணிக்கையும் சேர்ந்தே செல்கிறது, இது பற்றி எண்ணம் சிறிதும் இன்றி புத்தாண்டுகளைக் கொண்டாடத்தான் செய்கிறோம். மலையேறுவது அவ்வளவு எளிதல்ல, அப்படி ஏறினாலும் எதுவும் திரும்பாத காலத்தில் காலம் மலையேறி விட்டது என்பதை உவமையாகக் சொன்னார்கள், அப்படித்தான் 2010 மலையேறிப் போய்விட்டது. 2010 மட்டுமல்ல 2009ம் எனக்கு இனிமையான ஆண்டாகவும் பல நல்வரவுகளை பெற்றுத் தந்த ஆண்டாகவும் இருந்தது, வரும் ஆண்டுகள் இந்த அளவுக்குச் சிறப்பாக இல்லாவிட்டாலும் கிடைத்தவை செழிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து புத்தாண்டில் வேறெதையும் நினைக்க வில்லை.

பிறந்த ஊருக்குச் சென்ற போது நான் சிறுவயதில் பார்த்த போது இளமை துடிப்புடன் வீறு நடை போட்டவர்கள், முதிய தோற்றத்தில் இருக்கிறார்கள். நண்பர்களின் தலையிலும் சிலரின் மீசையிலும் கரு...கரு..மை. மனித தோற்றத்தை ஜீன்களின் படி நிலை முடிவு செய்கின்றன.வாரிசுகளின் நிகழ்கால நிழலில் இளைப்பாறுவதால் நமது நிகழ்காலம் கண்டுகொள்ளப்படாமலேயே கடந்து செல்லுகிறது. கால சுழற்சியும் முதுமையும் மரணமும் இல்லை என்றால் புது உலகம் என்று எதையும் சொல்ல முடியாது, ஒவ்வொரு இழப்பிலும் உலகம் புதுப்பிக்கப்படுகிறது. காலம் மலையேறி முடித்துவிடவில்லை, மலையேறுதலில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

15 கருத்துகள்:

  1. அருள் வந்த பிறகு.......சாமியும் மலை ஏறும்:-))))

    ஆனால் நாம் கேட்டுக்கணும்...
    மலை ஏறுவியா?

    ஏறுவேன்............ கிடைக்கும் வேப்பிலை அடியைப் பொறுத்து சீக்கிரமாகவோ இல்லை தாமதமாகவோ வரும் பதில்.

    அந்தக் காலத்தில் காசிக்குப்போய் திரும்பி வந்தவர்கள் அபூர்வம் என்பதால் அப்படி வந்தவர்களையே வணங்கி காசி போய் வந்த புண்ணியத்தை பெறுவார்களாம் ஊர் மக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //"காலம் மலையேறிவிட்டது !"//

    விரிவான பார்வையுடன் யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் சொல்லிருக்கீங்க சார்....

    பதிலளிநீக்கு
  3. //வரும் ஆண்டுகள் இந்த அளவுக்குச் சிறப்பாக இல்லாவிட்டாலும் கிடைத்தவை செழிக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து புத்தாண்டில் வேறெதையும் நினைக்க வில்லை. //

    சிறந்த எடுத்துகாட்டுடன் விளக்கியுள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  4. //கால சுழற்சியும் முதுமையும் மரணமும் இல்லை என்றால் புது உலகம் என்று எதையும் சொல்ல முடியாது, ஒவ்வொரு இழப்பிலும் உலகம் புதுப்பிக்கப்படுகிறது. காலம் மலையேறி முடித்துவிடவில்லை, மலையேறுதலில் பயணப்பட்டுக் கொண்டே இருக்கிறது//

    அனுபவங்களை உணர்வுகளுடன் சொல்லியிருக்கீங்க சார்,
    தொடர்ந்து இதுபோன்ற தகவல்களை பதிவு செய்யுங்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. காலத்தின் மலையேற்றம், கண்களின் வழி மனதேறியது!

    பதிலளிநீக்கு
  6. புது வருடத்தை பற்றிய வித்தியாசமான பார்வை. கலக்கல்

    பதிலளிநீக்கு
  7. // எம்.எம்.அப்துல்லா said...
    இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க???


    :))//

    இன்றைய மிச்சம் நேற்றைய எச்சம் !
    :)

    பதிலளிநீக்கு
  8. //
    துளசி கோபால் said...
    அருள் வந்த பிறகு.......சாமியும் மலை ஏறும்:-))))
    //

    எங்க ஊர் பக்கதுல கிராமத்துல அந்தோனியார் வந்து மலையேறிய கதையெல்லாம் நடந்து இருக்கு :)

    //ஆனால் நாம் கேட்டுக்கணும்...
    மலை ஏறுவியா? //

    அது கிடைக்கும் இரத்தக்காவையும் சில சாமிகளுக்கு சாராயத்தைப் பொருத்தும் இருக்கு.

    //ஏறுவேன்............ கிடைக்கும் வேப்பிலை அடியைப் பொறுத்து சீக்கிரமாகவோ இல்லை தாமதமாகவோ வரும் பதில்.//

    அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டாங்கன்னு ஆத்தாவுக்கும் தெரிஞ்சு இருக்கு.

    //அந்தக் காலத்தில் காசிக்குப்போய் திரும்பி வந்தவர்கள் அபூர்வம் என்பதால் அப்படி வந்தவர்களையே வணங்கி காசி போய் வந்த புண்ணியத்தை பெறுவார்களாம் ஊர் மக்கள்.

    6:49 PM,//

    இப்பக் கூட மருமகள்கள் மாமியார் காசிக்குப் போவாரான்னு தான் பார்க்கிறாங்க. ஆனா திரும்பினால் எதிரியாகவே பார்ப்பாங்க

    பதிலளிநீக்கு
  9. //
    மாணவன் said...
    //"காலம் மலையேறிவிட்டது !"//

    விரிவான பார்வையுடன் யதார்த்தமாகவும் சுவாரசியமாகவும் சொல்லிருக்கீங்க சார்....

    6:53 PM, January 03, //

    நன்றி சார்

    பதிலளிநீக்கு
  10. //
    சிநேகிதன் அக்பர் said...
    காலம் தொடர்ந்து பயணப்படட்டும் :)

    9:54 PM, January 03, 21//

    கூடவே பயன்படட்டும் :)

    பதிலளிநீக்கு
  11. //ரம்மி said...
    காலத்தின் மலையேற்றம், கண்களின் வழி மனதேறியது!

    10:50 PM, January 03, 2011//

    பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  12. //
    இனியவன் said...
    புது வருடத்தை பற்றிய வித்தியாசமான பார்வை. கலக்கல்

    11:50 PM, Januar//

    இனியவன் ஐயா மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  13. சகோ,கடந்த ஆண்டு எனக்கு கடந்த கால மலை ஏற்றம் போல சற்றே கடினமாகத்தான் இருந்தது..

    இனிவரும் நாட்கள் எளிமைபட இறைவனை நாடுகிறேன்.

    எனது ஓராண்டு குறிப்பினை கவிதையாக வடித்து எனது தளத்தில் வார்த்திருக்கிறேன்.
    நேரம் கிடைக்கும் போது வாருங்கள்..

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !