5 மார்ச், 2007

சுத்திச் சுத்தி வந்தேங்க - கோவை 1

திண்டுக்கல்லை விட்டு கோவை செல்ல வேண்டும் ... நேர்வழிச் சாலைத் தடம் எதுவென்று தெரியாததால் ... ஏற்கனவே தொலைபேசி வழி சந்திக்க விருப்பம் தெரிவித்து என் வருகையைத் தெரிவித்து இருந்த இரு நண்பர்களுடன் ஒருவரான நாமக்கல் சிபியைத் தொடர்பு கொண்டேன் ... நேரடி பேருந்து திண்டுக்கல்லில் இருந்து கோவைக்கு குறைவு ... எனவே பல்லடம் வழியாக வாருங்கள் என்றார்.

யோசித்துக் கொண்டு இருக்கும் போது பொள்ளாச்சி செல்லும் பேருந்தைப் பார்த்தேன் ... நடத்துனரிடம் விசாரித்தேன் ... பொள்ளாச்சி வழி கோவை செல்வதும் நேரான வழி என்று சொன்னார். ஏறி உட்கார்ந்தேன். பேருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டது. பொள்ளாச்சி சென்று அடைய இரவு 9 மணி ஆகும் என்றார்கள். படக்காட்சியில் (வீடியோ) எம்ஜிஆர் படம் ஓடியது. பேருந்து பழனி வழியாக செல்லும் என்பதை அறிந்தேன்.

அந்தி வானத்தை மிகவும் மஞ்சள் குளிக்க வைத்து தானும் மிகவும் (அதிகம்) சிவந்ததால் வெட்கப்பட்ட சூரியன் மெல்ல மலைகளுக்கு பின்னால் முகம் மறைத்துக் கொள்ளச் சென்றதும் இரவின் விழிப்பு தொடங்க ஆரம்பித்தது. ஒட்டன் சத்திரம் தாண்டியதும் பழனி செல்லும் வழியில் கேரளாவுக்கு வெட்டுவதற்காக லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லப்படும் எருமை மாடுகளின் இறுதிப் பயணத்தை பார்த்ததும் மவுன அஞ்சலி செலுத்தினேன். தொலைவில் பொன்மலையாக ஒளிர்ந்த ஒரு மலையைக் கண்டதும் பேருந்து பழனியை நெருங்குவதாக உணர்ந்தேன். முன்பு பெற்றோருடன் பழனிமலைக்குப் படியேறியது நினைவு வந்தது. அங்கு முருகன் ஒப்பனையில் (வேஷம்) கையேந்தும் சிறுவர்களும் ... காலால் மிதிக்கப்பட்ட முற்காலத்து பஞ்சாமிர்த்தங்களும், பெண்களுக்கும் நெற்றிக் கண் உண்டாக்கும் கலப்பட குங்குமம் ... ஆண்களுக்கு நிரந்தர பட்டைத் தழும்புகளை உருவாக்கும் தரமற்ற திருநீரு ... ஏனோ மனத்துக்கு வந்து தொலைத்தது ... இவை ஏதும் அறியா சிறுவனாகவே இருந்திருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருக்கும் போது பழனி மலை அடிவாரத்தின் அருகில் இருக்கும் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்தது 10 நிமிடம் நின்று புறப்பட்டது.

பழனியைப் பற்றிய பழைய எண்ணங்கள் தானாகவே விடைபெற ... பொள்ளாச்சியை நோக்கி பேருந்து பயணத்தில் இடை இடையே நாமக்கல்லாரும் சுப்பையா வாத்தியார் ஐயாவும் தொலை பேசி வழி தொடர்பு கொண்டு நான் கோவை சென்று அடையும் நேரத்தை பற்றி அக்கரையுடன் வினவினார்கள். உடுமலைப் பேட்டையில் 5 நிமிடம் நின்றது. அதன் பிறகு இரவு 9 மணிக்கு பொள்ளாச்சியை அடைந்தேன் ... உடனடியாக கோவை செல்லும் பேருந்து கிடைத்தது... அரை மணி நேரப் பயணத்தில் கோவையின் நகர எல்லையை பேருந்து அடைந்தது.... இடையே நாமக்கல்லார் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு பேருந்து உக்கடம் பேருந்து நிலையத்திற்கு செல்கிறதா ? அல்லது காந்திபுரம் பேருந்து நிலையமா ? என்றார் ... பேருந்து நடத்துனரிடம் கேட்டேன் 'உக்கடம்' என்றார் ... எனவே சிபியாரை உக்கடம் வரச் சொன்னேன். இரவு 10:15 இருக்கும் போது உக்கடம் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்ததும் கூடவே வந்த பிறைநிலவும் விடை பெற்றது.

இறங்கியதும் தொலைபேசி வழி தொடர்பு கொள்ள அருகில் ஆட்டோ நிலையம் பக்கம் இருப்பதாகவும் உடனே வருவதாகவும் சொல்லிவிட்டு ... அப்படியே வெளியில் வாருங்கள் என்றார் ... வெளியில் சென்று பார்த்தேன் ... ஆளைக் காணவில்லை... திரும்பவும் தொடர்பு கொள்ளும் முன்பு மீண்டும் பேருந்து நிலையத்திற்குள் வந்தேன் ... தொலைபேசி வந்தது ... உடனே தொடர்பு துண்டானது ... எதிர் பக்கத்தின் வழியே அருகில் ஒருவர் நெருங்கி வந்தார் ... நல்ல உயரம் ... நெருங்கும் முன்பே புரிந்து கொண்டேன்...
வாங்க கோவி என்று வரவேற்று தழுவிக் கொண்டார் ... வாத்தியார் ஐயா காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக சொன்னார்... சிபியாரின் பைக்கில் ஏறி வாத்தியாரைப் பார்க்க காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றோம்....

தொடரும் ...

ஞானவெட்டியான் ஐயாவை சந்தித்தது குறித்து எழுதப்பட்ட இடுகைகள்,
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2

9 கருத்துகள்:

  1. GK,

    இனிமையாக பயனத்தை பற்றி எழுதியுள்ளீர்கள்... படிக்க படிக்க சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது.

    எனது தாய் மண்ணான கோவை தாங்கள் வந்திருந்தும் தாங்களை அருகில் இருந்து கவணிக்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உண்டு.

    அடுத்த முறை நிச்சயம் கோவை/சிங்கையில் சந்திப்போம்.

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. ஸ்வாரஸ்யமான பதிவு!

    மிகவும் கோர்வையாகவும், வர்ணனைகளின் மூலமாகவும், சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பழனி சென்றதும் உங்கள் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்ததும், நாம் இருவரும் அடிக்கடி உரையாடிய பேச்சுகள் மனதில் ஓடியது!

    யத் [b]பாவம் தத் பவதி!

    பதிலளிநீக்கு
  3. //TISK said...
    ஸ்வாரஸ்யமான பதிவு!

    மிகவும் கோர்வையாகவும், வர்ணனைகளின் மூலமாகவும், சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பழனி சென்றதும் உங்கள் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்ததும், நாம் இருவரும் அடிக்கடி உரையாடிய பேச்சுகள் மனதில் ஓடியது!

    யத் [b]பாவம் தத் பவதி!
    //

    TISK - இந்த பெயர் புதிதாக இருக்கிறதே ! நான் தங்களுடன் உரையாடினேனா ? எனக்கு அறிமுகம் இல்லாதவர்களுடன் உரையாடினேன் ?

    கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி !

    யத் [b]பாவம் தத் பவதி! - நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் ... என்ற பாட்டுக் கூட தத்துவ பாட்டுதானே ... இந்த கூற்றை மறுக்கிறதே !
    :)))

    பதிலளிநீக்கு
  4. ///உக்கடம் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்ததும் கூடவே வந்த பிறைநிலவும் விடை பெற்றது.///

    நாமக்கல்லாரைப் பார்த்து வெட்கத்துடன் ஒளிந்து கொண்டிருக்கும் - நீங்கள் சொலவது போல போயிருக்காது!

    பதிலளிநீக்கு
  5. ஸ்வாரஸ்யமான பதிவு!

    மிகவும் கோர்வையாகவும், வர்ணனைகளின் மூலமாகவும், சுவைபடச் சொல்லியிருக்கிறீர்கள்!

    பழனி சென்றதும் உங்கள் மனதில் ஓடிய எண்ணங்களைப் படித்ததும், நாம் இருவரும் அடிக்கடி உரையாடிய பேச்சுகள் மனதில் ஓடியது!

    யத் [b]பாவம் தத் பவதி!

    இது நான்தான் கோவியாரே!

    எப்படி அப்படி வந்தது எனத் தெரியவில்லை.

    நான் தான் என்பதற்காக மீண்டும் பதிகிறேன்.
    :))

    பதிலளிநீக்கு
  6. //இது நான்தான் கோவியாரே!

    எப்படி அப்படி வந்தது எனத் தெரியவில்லை.

    நான் தான் என்பதற்காக மீண்டும் பதிகிறேன்.
    :)) //

    எஸ்கே ஐயா,
    உங்களுக்கு ஒரு நாமமின்றி வேறு திருநாமம் [T(h)I(ru) SK] இருப்பதை சற்றேனும் எண்ணிலேன். எனவே *கற்பனை* க்குக்கூட எண்ணாமுடியாததால் தங்கள் பின்னூட்டம் என்று சிறிதேனும் அறிந்திலேன். மன்னிக்க.

    ஆம் ஐயா,
    உள்ளே இருப்பதுதானே சொல்லிலும் வரும் அதுதான் பழனி பற்றிய என் எண்ணங்கள்.

    எப்படி நினைக்கிறோமோ அப்படி ஆகுகிறோம் என்று தானே சொல்கிறீர்கள். நானும் நாள் தோறும் உங்களை நினைத்தாலும் எண்ணளவில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று தான் தெரிகிறது.

    இந்த நேரத்தில் ஹமாம் விளம்பரம் ஞாபகத்துக்கு வருது...
    நல்ல விசயம் என்றால் மாறித்தானே ஆகனும் !

    :)))))))
    சும்மா கலாய்த்தல் மட்டுமே ... உவர்த்தல் இல்லை !

    பதிலளிநீக்கு
  7. சிவபாலன் said...
    //GK,

    இனிமையாக பயனத்தை பற்றி எழுதியுள்ளீர்கள்... படிக்க படிக்க சுவாரசியம் கூடிக் கொண்டே போகிறது.

    எனது தாய் மண்ணான கோவை தாங்கள் வந்திருந்தும் தாங்களை அருகில் இருந்து கவணிக்க முடியவில்லை என்ற ஏக்கம் எனக்கு உண்டு.

    அடுத்த முறை நிச்சயம் கோவை/சிங்கையில் சந்திப்போம்.

    தொடருங்கள்
    //

    சிபா,

    கோவி கோவையில் செலவிட்ட நேரம் வெறும் 2 மணி நேரம் தான். பகலில் சுற்றிப் பார்க்கவும், கோவையின் குளுமையை உணரவும் ஆசை இருந்தது. நேரமின்மையால் அடுத்த முறை பார்க்கலாம் என்று வந்துவிட்டேன்.

    உங்கள் கனிவான கவனிப்பு மொழிக்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

    பதிலளிநீக்கு
  8. //SP.VR.சுப்பையா said...
    ///உக்கடம் பேருந்து நிலையத்தை பேருந்து அடைந்ததும் கூடவே வந்த பிறைநிலவும் விடை பெற்றது.///

    நாமக்கல்லாரைப் பார்த்து வெட்கத்துடன் ஒளிந்து கொண்டிருக்கும் - நீங்கள் சொலவது போல போயிருக்காது!
    //

    ஆமாங்க ஐயா,

    சிபியார் வந்ததும் மல்லிக்கைப் பூ மணம் கமழ்ந்தது... அதைப் பற்றி எழுதுவேன்.
    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !