பின்பற்றுபவர்கள்

31 மே, 2011

உலகின் மிக விரைவான ரயில் பயணம் !

எந்த ஒரு வளரும் நாட்டின் முதன்மையான வளர்ச்சிக்கு அதன் சுற்றுலாத் துறை மேம்படுவது மிகத் தேவை. சீனர்கள் முந்துகிறார்கள், சீனா முந்துகிறது, இந்தியா சீனாவை எட்டிப் பிடிக்க 20 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகலாம். இதில் பொறுமை, பொறாமை என்பதையெல்லாம் மீறி சமூக நலன்களும் இருக்கின்றது, 1000 கிராமங்களை அழித்துவிட்டு அங்கு ஒரு தொழில் நகரை உருவாக்க நினைத்தால் அதை சீனாவால், சீனாவில் செய்யமுடியும். சீனாவின் நகர வளர்ச்சிகள் அப்படியானது தான். அந்த வகையான விரைவான வளர்ச்சிகள் இந்தியாவிற்கு தேவை இல்லை, ஏனெனில் தொலைந்த கிராமங்களும், அதன் அமைதி சூழலான வாழ்க்கை முறையும் மீண்டும் உருவாக்கப்படுவதில்லை. சீனாவின் தற்போதைய கணக்கெடுக்கின் படி கிராமப்புறங்களில் சுமார் 5 1/2 கோடி குழந்தைகள் (நாட்டு மக்கள் தொகையில் 5 விழுக்காடு) பெற்றோர்கள் நகரை நோக்கி வேலை தேடி சென்றதால் கைவிடப்பட்டு அல்லது உறவினர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள், நாட்டின் எதிர்கால வளர்ச்சியில் பல இடர்களை தோற்றுவிக்கும் வீக்கமாகும் இவை என்பது மனித உரிமை அமைப்பினரின் கருத்து ஆகும்.

*******

சென்ற முறை அலுவல் தொடர்பில் சீனா சென்ற போது தட்டிச் சென்ற அதிவிரைவு தொடர்வண்டி பயண ஆசை இந்த முறை (27 மே 2011) நிறைவேறியது, ஷாங்காய் புத்தொங் விமான நிலையத்திலிருந்து சுற்றுலாவாசிகளை கவருவதற்காகவே மெக்லெவ் எனப்படும் உலகின் அதிவிரைவு மின்காந்த புல்லெட் தொடர்வண்டியை இயக்கி வருகிறார்கள். நேர அட்டவணைப்படி மணிக்கு 431 கிமி விரைவு மற்றும் 301 கிமி விரைவு என இரு வேறுபட்ட விரைவுகளில் ரயில் பயணம் ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றனர். அந்த அட்டவணைப்படி காலை வேலைகளிலும், மாலை வேலைகளிலும் மணிக்கு 431 கிமி விரைவிலும், நண்பகலுக்கு சற்று முன்னும் பின்னும் 301 கிமி விரைவிலும் பயணிக்க முடியும். நான் சென்ற நேரம் நன்பகல் நெருங்கி இருக்க, எனக்கு 301 கிமி விரைவில் பயணம் செய்ய மட்டும் தான் வாய்ப்புக் கிடைத்தது.


மெக்லெவ் எனப்படும் அந்த ரயில் ஷாங்காய் விமான நிலையத்தில் இருந்து ஷாங்காய் நகரின் மையப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள லோங்யாங் சாலை வரை சுமார் 40 கிமி வரை சென்று திரும்புகிறது. போக வர ரயில் கட்டணம் (80 யுவான், சிங்கை வெள்ளிக்கு 15.38, இந்திய ரூ 538), மறு பகுதியை அடைய சுமார் 8 நிமிடங்கள் தான். இருக்கை வசதிகள் மிகவும் நேர்தியாக வசதியாக இருந்தன, விஐபிகளுக்கு தனிப்பகுதி பெட்டியும் மேலும் சிறப்பான இருக்கைகளும் வைத்திருக்கிறார்கள், கொஞ்சம் கூடுதல் கட்டணம் அவ்வளவு தான். நான் பொதுப் பெட்டியிலேயே பயணித்தேன். நேரம் மற்றும் ரயிலின் வேகம் காட்டுவதற்கு பெட்டியினுள் இருபுறமும் மின்னனு காட்சி (டிஸ்ப்ளே) உள்ளது.

குறித்த நேரத்தில் புறப்படும் ரயில் 20 வினாடிக்குள் உச்ச வேகத்தை எட்டிவிடுகிறது. அந்த வேகத்தில் உள்ளே அமர்ந்திருக்கும் போது உடல் எடை குறைந்து போன்றும் பறப்பது போன்றும் உணர்வுகள் வருகின்றன, கண்ணாடி வழியாகப் பார்க்க இரயிலின் வேகம் உணரப்படும், கிட்டதட்ட ஓடுதளத்தில் விமானம் மேலெழும்ப விரைவாக ஓடும் போது (ஓடு தள விமான வேகம் மணிக்கு 200 - 250 கிமி) உள்ளுக்குள் இருக்கும் நமக்கு இருக்கும் உணர்வுகள் போன்றது தான்.
வளைவுகளில் சற்று 15 டிகிரி வரை சாய்ந்தே செல்கிறது, அதன் படியே தளமும் அமைக்கப்பட்டு இருக்கிறது, மைய விலக்கு விசைக் காரணமாக அந்த வேகத்தில் வளைவுகளில் நேராகச் செல்ல முடியாது என்பதால் அவ்வாறு அமைத்திருக்கிறார்கள்.
சுமார் 5 நிமிடங்கள் 301 கிமி விரைவில் சென்றதும், வேகம் குறைத்து அடுத்த நிலையத்தில் நிறுத்திவிடுகிறார்கள். அங்கிருந்து நகரின் மையப்பகுதிக்கு வேறு வாகனங்களில் 5 நிமிடத்தில் செல்ல முடியும். நானும் அலுவலக நண்பரும் புறப்படும் விமானத்திற்கு திரும்ப வேண்டி இருந்ததால், அங்கே லோங்யாங் சாலை நிலையத்தில் இறங்கி சிறிது நேரம் சுற்றிவிட்டு அடுத்து புறப்படும் ரயிலில் திரும்பினோம், திரும்பும் போது எதிரே மற்றொரு ரயில் கடக்கும் போது லேசாக அதிர்ந்தது, எதிர் வண்டி மின்னல் வேகத்தில் கடந்து சென்று கொண்டிருந்தது. 301 கிமி விரைவிலும் பெரிதாக சத்தங்கள் இல்லை, வண்டி விரைவு தாலாட்டுவது போன்றிருந்தது, அடுத்தும் அதே நேரம் சுமார் எட்டு நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்தது.











வண்டிக்குச் செல்ல பயணச் சீட்டு வாங்கியதும், உள்ளே செல்லும் முன் கைப்பைகளையும், உடைமைகளையும் எக்ஸ்ரே சோதனை செய்தே அனுப்புகிறார்கள்.
தொழில் நுட்பத்தின் படி அந்த விரைவில் தடம் புறளும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. வழக்கமான ரயில் பாதையாக இல்லாமல் தட்டையான பாதையாக உள்ளது. வேகம் எடுக்கும் போது மிதந்து தான் செல்லும் என்றே நினைக்கிறேன், ஏனெனில் உராய்வு சத்தங்கள் எதுவும் பயணம் செய்யும் போது கேட்கவே இல்லை.










ஷாங்காய் வழியாகவோ அல்லது ஷாங்காய் நகருக்கோ செல்பவர்கள் மோக்னெட்டிக் ரயில் பயண வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொண்டால் நல்லதொரு பயணத் துய்ப்புக் கிடைப்பது திண்ணம். இதற்கு முன் ஐரோப்பாவின் ஈரோ ஸ்டார் விரைவு ரயிலில் பயணித்திருக்கிறேன், ஆனால் அதன் வேகம் 200 கிமி தான். உலகின் பிற பகுதிகளிலும் மின்காந்த இரயில்கள் இருந்தாலும் ஷாங்காய் ரயிலின் வேகத்தில் அவை பயணிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் மெக்லெவ் பற்றிய ஆங்கில விக்கிக் குறிப்பு இங்கே.


இதெல்லாம் எப்போது இந்தியாவிலும் நடக்கும் என்ற ஏக்கமா ? மேலே முதற்பத்தியை திரும்ப படிக்கவும்.

16 மே, 2011

எண்ணைத் தொட்டியை புறக்கணித்த ஜெ !

ஜெ ஆட்சியின் துவக்கமே, ஜெ தன் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ளாமல் அதன் போக்கிலேயே செல்வதாக அமைந்திருக்கிறது, அதாவது தமிழக அரசின் அமைச்சரவை பழைய ஜார்ஜ் கோட்டையில் தான் செயல்படும் என்கிற ஜெ வின் முடிவு. முன்னதாக அவர் புதிதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்திற்கு காலடி வைக்கம்மாட்டேன் என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக் கூறத்தக்கது.
po
*****

மேலே எண்ணைத் தொட்டி என்று நான் குறிப்பிட்டது வேறொன்றும் இல்லை, மு.மு.மு.கருணாநிதி (முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி) அவர்களால் கட்டவுட்டாகவும், கட்டி முடிக்கப்பட்டதாகவும் சுமார் 1000 கோடி செலவில் திறக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகம் தான் அது. அது ஏன் எண்ணைத் தொட்டி ?

பண்டைய காலம் தொட்டே தமிழர்களுக்கு என்றே தனிப்பட்ட கட்டிடக் கலையின் வரலாறுகள் உண்டு, மாளிகைகள் காலத்தால் அழிந்துவிட்டாலும், என்றும் அழியாக்காட்சியாக நிற்கும் கல்லணை, மற்றும் கோவில் கோபுரங்கள் எண்ணற்றவை, பவுத்த, சமண விகாரங்கள் அதன் பிறகு எழுந்த சைவ வைணவக் கோவில்கள் அனைத்தும் தமிழகத்தில் மட்டுமே காணக் கிடைக்கும் தமிழகக் கட்டிடக் கலையின் காட்சிகள். பாறைகளை சிற்பமாக வடித்து காட்சிக் கூடங்களாக ஆக்கி அமைத்த மாமல்லபுரச் சிற்பக் கலைக் கோவில்கள், பல்வேறு கோட்டைகள் என தமிழகமெங்கும் தமிழகக் கட்டிடக் கலையின் வரலாறுகள் நினைவுச் சின்னங்களாக இருக்க, இவற்றில் ஒன்றைக் கூட நினைவு படுத்தாத மாபெரும் கச்சா எண்ணைத் தொட்டி போன்ற ஒரு கட்டிடத்தை 1000 கோடி செலவில் கட்டத் துவங்கி, திறப்பு நாளுக்குள் முடிவுக்கு வராமல் போக கட் அவுட் வைத்து திறந்து காட்டி, பின்னர் மீண்டும் முறைப்படி திறந்தார் கருணாநிதி.

தமிழக மன்னர்களைப் பற்றிய காவியங்கள் எழுதிக் குவித்த கருணாநிதி, தமிழகத்தின் முதற்சின்னமாக தொலைகாட்சிகளின் அடிக்கடிக்கடிக் காட்ட வேண்டிய தலைமைச் செயலகத்தின் வடிவமைப்பில் சிறுதும் கவனம் செலுத்தாமல் போனதுடன், அதைத் திறக்க விரைவு காட்டியதைத் தவிர்த்து வேறெந்த அக்கரையும் இருந்திருக்கவில்லை.

பெங்களூரின் தோற்றப் பெருமையே அதில் அமைந்திருக்கும் 'விதான் சவுதா' எனப்படும் தலைமைச் செயலகத்தின் தோற்றப் பொலிவுதான், உண்மையாகச் சொல்லுங்கள் கருணாநிதி கட்டிய எண்ணைத் தொட்டி அப்படியான ஒரு தோற்றப் பொலிவை சென்னைக்குத் தந்திருக்கிறதா ?

1000 கோடிகளை ஏப்பம் விட்டு விழுங்கி அமர்ந்திருக்கும் புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியின் அவலாமாகவும் நினைவுச் சின்னமுமாக இருப்பதைத் தவிர்த்து வேறொன்றும் உருப்படியாகச் செய்ய முடியாதா ? முடியும், உள்ளமைப்புக் கட்டுமானத்தில் மாறுதல் செய்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு வாடகைக்கு விடலாம்.


கருணாநிதி இந்த எண்ணைத் தொட்டியைக் கட்டும் முன் எதிர்கட்சிகளை கலந்தாலோசிக்கவில்லை என்பதே எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டு, அதனைச் சாக்கிட்டே ஜெவும் புறக்கணித்துள்ளார், மற்றபடி ஜெவின் ஈகோ அதாவது கருணாநிதி கட்டியதில் தான் அமரவிரும்பவில்லை என்பதும் அடங்கும்.

1000 கோடிகளை ஏப்பம் விட்டு விழுங்கி இருக்கும் தலைமைச் செயலகம் பற்றி எதுவும் கருத்து தெரிவிக்காத நக்கீரன், பழைய தலைமைச் செயலகம் புதுப்பிக்கப்படுவதற்கு 50 கோடி செலவாகி வருவதாகக் கட்டுரை எழுதியுள்ளது. 1000த் தில் 50 கோடி என்பது 5 விழுக்காடு தானே. 1000 கோடி புதிய தலைமைச் செயலகம் ஈராண்டுக்கு மட்டுமே செயல்பட்டது, அடுத்து 5 ஆண்டுக்கு செயல்படும் பழைய தலைமைச் செயலகத்தில் 50 கோடி செலவு என்பது ஒப்பிடுகையில் பெரிய நட்டமில்லை :)

நான் ஜெவின் செயலை ஞாயப்படுத்தவில்லை, 'நான் தான் திறந்தேன்' வராலாற்றை எழுதிக் கொள்பவர்களின் தான் தோன்றித்தனத்தையும் வரலாறுகள் தானாகவே எழுதிக் கொள்கின்றன என்பதைக் குறிக்கவே இதனை எழுதியுள்ளேன், மற்றபடி கருணாநிதியின் நினைவு தடங்களை ஜெ அழிப்பதும், ஜெவின் நினைவுத்தடங்களை கருணாநிதி அழிப்பதும் ஆட்சி மாற்றத்தின் போது நடப்பவைதான், பாவம் தமிழக பேருந்து ஊழியர்கள், எத்தனை பேருந்துகளின் 'நாம் என்றால் உதடு ஒட்டும், நான் என்றால் உதடு ஒட்டாது' என்கிற கருணாநிதியின் பொன்மொழியை இரவோடு இரவாக அழிக்க கடினமாக உழைத்தார்களோ !

*******


15 மே, 2011

மிகத் தெளிவான மக்கள் தீர்ப்பு !

சென்ற பாராளுமன்ற தேர்தலின் பிறகான முடிவில் மக்கள் மனநிலை எப்படி என்று கணிப்பது கடினமாகவே இருந்தது, மக்கள் வாக்களிக்க ஊடகங்களின் பங்கு மிக அவசியம் என்று பின்னர் தெரியவந்தது, இப்பவும் அதே ஊடகம் தான் என்றாலும் கூட, ஆளும் கட்சி ஆளும் கட்சியாகவே இருந்து நடத்தும் இடைத்தேர்தல் போன்று தான் நடந்து முடிந்தது பாராளுமன்றத் தேர்தல், ஈழத்தமிழர் குரல் கிஞ்சித்தும் தமிழக வாக்களர்கள் காதில் விழுந்துவிடக் கூடாது என்பதில் வெற்றியும் பெற்றன ஆளும் கட்சி உறவுகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் நடத்தும் செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள்.

இந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உண்மையிலேயே இலவசத் திட்டங்களுக்கும், ஒரு ரூபாய் அரிசிக்கும் அடிமையானதுடன் ஒட்டுகளை காசுக்கு விற்கும் அளவுக்கு போய்விட்டார்களோ என்று நினைக்க வைத்தது. பணம் அடிப்படைத் தேவை என்ற நிலையில் வாழ்வாதரம், பொருளாதாரப் பற்றாக் குறை உடையவர்கள் தவிர்த்து பெருவாரியான வாக்களர்கள் எதற்கும் அடிமை இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டி இருப்பது, மக்கள் ஆட்சி தத்துவத்தின் மீதான நம்பிக்கை பட்டுப் போகாமல் துளிர்க்கவைத்துள்ளது.

முதல்வர் பதவி தனக்கே உரியது போன்றும், அரசியல் பொறுப்புகள் குடும்பச் சொத்து போலவும் நினைத்து, மக்கள் நலனை நினைக்காது தான்தோன்றியாக நடந்து கொண்டால் தக்கப் பாடம் புகட்டுவோம், என்று தமிழக மக்கள் ஏற்கனவே பலமுறை நிருபனம் செய்தும், அதிகார போதையில் இதை எப்போதும் உணராத அரசியல் கட்சி ஒன்று ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது, எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லது என்று முடிவு செய்வதைவிட எந்த கொள்ளியை உடனடியாக அணைத்தால் கொஞ்சமாவது தப்ப முடியும் என்று முடிவுரை எழுதியதே இந்த சட்டமன்ற தேர்தலின் தீர்ப்பு. மீதம் இருப்பதும் கொள்ளி தான் என்றாலும் தமிழக வாக்களர்களுக்கு முடிவெடுக்கக் கிடைத்த வாய்ப்பும் இவ்வளவு தான் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்து கொண்டார்கள், நடுநிலையாளர்களின் தேர்தல் பரப்புரையும் அவ்வாறே அமைந்தது.

வழக்கமாக ஜெயலிதாவிற்கு வாக்களிக்கவே விரும்பாத பலரும் கூட இந்த முறை ஜெயலலிதாவிற்கு வாக்களித்துள்ளனர். அந்த அளவிற்கு திமுக அரசு தான்தோன்றியாகவும், ஆளுமையாகவும் செயல்பட்டு மக்களின் வெறுப்பை பெற்றிந்தது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளது.

* ஈகோ போரில் தினகரன் அலுவலர்கள் அப்பாவிகள் மூன்று பேரை கொன்ற பிறகு சந்தித்துக் கொண்ட குடும்ப உறுப்பினர்களை ஒன்றாகக் கண்டதும் கருணாநிதி அனுப்பிய ஊடக அறிக்கையில் ''நெஞ்சம் இனித்தது, கண்கள் பனித்தன' என்பதைப் படித்த பிறகு இவர் மீது இருந்த நல்ல மனிதர் என்ற நம்பிக்கையை என்போன்றோர் இழந்தனர். குடும்ப உறுப்பினர்களை கண்டிக்கவோ, கட்டுபடுத்தவோ முடியாத அளவுக்கு இருக்கும் இவர், கட்சியையும் பதவியையும் அவர்கள் நலனுக்காவே பயன்படுத்துகிறார் என்பது அழுத்தமாக்வே பதிந்தது.

* ஈழத்தமிழர்களுக்கு எதிராக இராசபக்சேவுடன் கைகோர்த்து காங்கிரசும் - திமுகவும் நடந்து கொண்டவிதம், ஈழத்தமிழர்கள் நாதியற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது, இதன் பிறகு திமுகவிற்கும் இன உணர்வுக்கும் ஏதும் தொடர்பில்லை என்று உறுதியாகியது

* எவ்வளவோ நலத்திட்ட அமைச்சர் பதவிகள் இருக்க, தமிழகத்திற்கு என்று தனிப்பட்ட பயன் எதுவும் தராத ஊழல் செய்யவே தேர்ந்தெடுத்தது போல் தகவல் தொழில் நுட்பத் துறையைக் கேட்டும், மிரட்டியும் பெற்றும் அதில் ஊழல் சாதனை புரிந்ததும் திமுகவிற்கும் மக்கள் விரோததிற்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது என்று வெட்ட வெளிச்சமாகியது.

ஒரு மக்கள் ஆட்சி நாட்டில் ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்களிப்பது தான் மக்களின் அரசு குறித்தான அக்கரையாக இருக்க வேண்டும், ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை அரசியல் ஆட்சியாளர்களின் நடவடிக்கையால் பாதிக்கப்படும் போது ஆட்சியாளர்களை எப்போது ஒழிப்போம் என்பதே நாள் தோறும் சிந்தனையாகும் படியும், தேர்தல் நாளான தீர்ப்பு நாளுக்கு மக்கள் ஏங்கும் படியும் செய்துவிடுகிறார்கள்.

எது எப்படியோ பொதுவாழ்க்கைக்கு வருகின்ற தலைவர்கள் தங்கள் கட்சியிலும், அரசு அதிகாரத்திலும் தன்னுடைய வாரிசுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தால் கட்சியும் சேர்ந்தே அழியும் என்ற நிலை மீண்டும் நிருபனம் செய்யப்பட்டுள்ளது.

கருணாநிதி ஆட்சி அவலத்தின் எதிர்ப்பு வாக்குகள் தான் தமக்கு மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்துள்ளது என்பதை வெளியில் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் ஜெ உணர்ந்திருப்பார். 2001 - 2006 வரையிலான ஜெயின் ஆட்சியில் பெரும் முறைகேடுகள் எதுவும் நடைபெற்றதாக சென்ற கருணாநிதி ஆட்சியில் புதிய வழக்குகள் எதுவும் பதியவில்லை. சென்ற முறை ஜெ அரசு ஊழியர்களை வீட்டுக் அனுப்பியதை எம்போன்றோர் வரவேற்றோம், காரணம் அரசு ஊழியர்களுக்கு பொதுமக்கள் மீதான மரியாதை சிரிதும் இல்லாமல் இருந்தது.

பழைய ஆளும் கட்சியின் தோல்வி புதிய ஆளும்கட்சிக்கான பாடம் !

பதிவுலகில் கூட தேர்தல் பரப்புரையின் போது உபி சிலரும், பாமக பதிவர் ஒருவரும் நடந்து கொண்டது மிகவும் அருவெறுப்பானது, விரக்தியின், கோபத்தின் உச்சிக்கே சென்ற உடன்பிறப்பு ஒருவர் போலிப் பதிவு தொடங்கி திமுகவை விமர்சனம் செய்த பதிவர்களை ஒருமையில் திட்டிப் பதிவுகள் எழுதினார். திரும்பவும் அவர்களுக்கு இந்த சூழலில் பதில் சொல்ல நினைக்க 'செத்த பாம்புகளை எத்தனை முறை எத்தனை பேர் அடிப்பிங்க' என்பது நினைவுக்கு வருவதால் முற்றுப் புள்ளி வைத்துவிடுகிறேன்.

'சீமானுக்கு ஆதரவானப் பதிவொன்றின் முடிவில் கருணாநிதிக்கு தேர்தல் முடிவு இப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்' என்று சக பதிவர் திரு மோகன்தாஸ் எழுதி இருந்ததை என்னால் மறக்க இயலவில்லை, அதில் முழுதாக ஒப்புதல் இல்லாவிடிலும் கருணாநிதியை நம்பியவர்களின் வெம்பிய மனது அப்படித்தான் நினைக்க வைக்கும் என்பதை படிக்கும் போதே உணர்ந்தேன்.

*******

நல்ல மாற்று ஊடகமாக செயல்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டிய ஜூனியர் விகடன் குழுமத்தின் பணி சிறப்பானது.

பதிவர் சவுக்கின் ஆளும் கட்சிக்கு எதிரான இணைய விமர்சனம் ஆயிரக்கணக்கானோரையும் அவர்கள் மூலம் லட்சக்கணகானவர்களை சிந்திக்க வைத்தது

தேர்தல் தேதிக்கு முன்பிருந்த வைகோவின் பேச்சுகளும், தமிழருவி மணியனின் கட்டுரைகளும், சீமானின் சிம்மக் குரலும் கட்சி சாராத கருணாநிதி ஆதரவாளர்களை விழிக்க வைத்தது.

குறிப்பாக தேர்தல் ஆணையம் வாக்களர்களை உற்சாகம் ஊட்டி வாக்களிக்க அழைத்தது சிறப்பாகவும் செயல்பட்டது.

இவர்களையெல்லாம் பாராட்டுகிறேன்.

வியப்பான, சிறப்பான, தீர்ப்பு எழுதிய தமிழக வாக்களப் பெருமக்களுக்கு தலைதாழ்த்திய வணக்கங்கள்.

7 மே, 2011

திமுகவின் அருவெறுப்பான முகம் !

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன் கதை தான் நினைவுக்கு வந்தது, ஒருவேளை கற்பனைக் கதை என்றாலும் கூட ஒரு விலங்கிற்கு வேண்டுமென்று அநீதி அளித்தது கூட தண்டனைக்குரியதே என்கிற தகவலுடன் அரசன் உறவுகள் பார்க்காது நீதியை நிலைநாட்டவேண்டும் என்கிற நீதிக்கதை, இன்றளவும் தமிழகத்தில் நிலைத்து நிற்கிறது.

*****

ராசா தலித் என்பதால் பார்ப்பன ஊடகங்கள் ஸ்பெக்டரம் ஒதுக்கீடை வைத்து ஊழல் கதை எழுதி ஊதிப் பெருக்கிவிட்டன, ராசா குற்றமற்றவர் என்று தெரிவித்துவந்ததுடன், வீரமணி உள்ளிட்ட தனது நலவிரும்பிகள் மூலம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊடகத்திற்கு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார் கருணாநிதி.

மகளுக்கு சிபிஐ சம்மன் என்றதும் பிரபல 'கிரிமினல்' வழக்கறிஞர் பார்பனர் ராம்ஜெத்மலானியின் கையைப் பிடித்து கொஞ்ச......ஸ்பெக்ட்ரம் ஊழல்: ராசா தான் முழுப் பொறுப்பு கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும் என்று மலானி நீதிமன்றத்தில் தெர்விக்கிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் நீதிமன்றத் தலையீட்டால் வேறு வழியின்றி காங்கிரஸ் - திமுகவினால் பலியிடப்படும் ராசா இன்றும் அதே தலித்துதான். ஜெத்மலானி 'ராசா தான் முழுப் பொறுப்பு' என நீதிமன்றத்தில் தெரிவிக்கப் போவதாக திமுகவினரிடமோ, கருணாநிதியிடமோ சொல்லி இருக்கமாட்டார் என்று நம்புவதற்கு இல்லை. ராசா பகிரசங்கமாகவே காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்.



இவர்களிடம் என்ன எதிர்ப்பார்க்க முடியும் ? அழகிரியும் - மாறன் சகோதர்களும் மீண்டும் இணைந்த போது முன்பு தினகரன் அலுவலகத்தில் கொல்லப்பட்ட மூவரை முற்றிலுமாக மறந்து இனித்த இதயமும் பனித்த கண்களும் தானே இவர்களது. மனைவியைக் காப்பாற்ற தொலைகாட்சி இயக்குனர் சரத்குமார், மகளைக் காப்பாற்ற ராசா பொறுப்பேற்கிறார்கள்,

திமுகவை திராவிடக் கட்சி என்றும், திமுகத் தலைவரை தமிழினத் தலைவர் என்றும் ஒருகாலத்தில் நான் கொண்டாடியதை நினைத்தால் மிகவும் அருவெறுப்பாக இருக்கிறது. பாவம் ராசா !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்