இந்தத் தேர்தலில் நடக்கப் போகும் உள்ளடி வேலைகள் !
Friday, February 25, 2011
வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதன்மைக் கட்சிகளைடையே கூட்டணி பேரங்கள் களைகட்டியுள்ளன. இல்லாத செல்வாக்கு வளர்ந்துவிட்டதாக இராஜபக்சே ஆதரவு புகழ் காங்கிரசு கட்சி திமுகவுக்கு நெருக்கடிக் கொடுத்துவருகிறது. அந்தப்பக்கம் சென்ற தேர்தலில் ஒரே இடத்தில் வெற்றிபெற்ற விஜய்காந்து கட்சி 48 இடங்களுக்கு அதிமுக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதாகத் தெரிகிறது. ஸ்பெக்டரம் விவகாரத்தில் கருத்து கூறாமல் மவுனம் காத்த பாமக எதிர்பார்த்தபடியே திமுக கூட்டணியின் முதுகில் ஏறிக் கொண்டுள்ளது. மதிமுக அம்மாவின் அரவணைப்பிலேயே தொடர்கிறது, வைகோ சிரஞ்சீவியைப் பின்பற்றி அதிமுகவுடன் கட்சியையே இணைத்துக் கொள்ளலாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் காங்கிரசை எதிர்க்கும் தன்னுடைய தேசிய அரசியல் நிலைப்பாட்டில் அதிமுகவுடன் நெருங்கி பேச்சுவார்த்தையை தொடர்கிறது. ஜெவின் நக்கல்களைப் பொருத்துக் கொண்டு சீட்டுக் கேட்பதில் கம்யூனிஸ்டுகளுக்கு தயக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கம்ப் போல் தேசிய அரசியலில் செல்வாக்கு உள்ள பாஜக ஆதரவற்றக் கட்சியாக தனி ஆளாக தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த அணைத்துக்கட்சிகளும் கொள்கை என்று எதையோ சொல்லிக் கொண்டாலும் தனிச் செல்வாக்கு எந்த்க்கட்சிக்கும் இல்லை, அவை அவை தனித்து நின்றால் வெற்றி வாக்கு வேறுபாடுகள் பெரிதாக ஒன்றும் இருக்காது. அப்படி தனித்து நிற்கும் வாய்ப்பே இல்லாத வண்ணம் கொள்கையிலும் நீர்த்து கொள்ளையிலும் பெருகியதால் கூட்டணியாகத் தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே தமிழகத்தை கூறுபோட்டுப் பிரித்துக் கொள்ளமுடியும் என்கிற புரிந்துணர்வு நிலையில் கூட்டணியாக களம் காணுகின்றன.
முதலில் அதிமுக கூட்டணியில் இணையும் விகாந்து கட்சியைப் எடுத்துக் கொண்டால், தன்னை 'கருப்பு எம்ஜிஆர்' என்று சொல்லிக் கொண்டு அதிமுகவினரிடையே வெறுப்பாகப் பார்க்கப்பட்டவர், மேலும் அதிமுக கட்சி தலைவியால் கடந்தகாலத்தில் 'குடிகாரன்' என்று விமர்சனம் கிடைக்கப் பெற்றவர். விஜயகாந்தின் வாக்குகள் பெரும்பாலும் திரை ரசிகர்களான வாக்காளர்கள் வாக்குகள், அவற்றில் கனிசமானவை எம்ஜிஆருக்கு கிடைத்தவையாக இருந்ததால் மதுரை உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் அதிமுக வாக்குவங்கி பலமாக அடிப்பட்டது. தன்னுடைய வாக்காளர்களை வளைத்த வளர்ந்த விஜயகாந்து 48 சீட்டுகள் கொடுத்தாலும் அவற்றின் வெற்றிக்கு அதிமுக முனையுமா என்பது ஐயமே, தேமுதிகவையோ, பாமகவையோ ஒரு அரசியல் சக்தியாக வளர்வது தங்களுக்கு ஆபத்து என்றே திமுக அதிமுக உணர்ந்தாலும் அவர்கள் எதிரணிக்கு செல்வதைவிட தங்களது கூட்டணியிலேயே தொடர்வதை ஒரு சகிப்புத் தன்மையாக் கொண்டு தான் அவர்களை கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்கிறார்கள். விஜயகாந்து கூட்டணியில் இணைந்தாலும் அதிமுகவினரின் முழு ஆதரவுடன் போட்டியிட்ட இடங்களில் பெரும்பான்மையானவற்றில் வெல்வது ஐயமே. ஆனால் சென்ற முறை கிடைத்த ஒரு இடத்தைவிட இந்த முறை இரண்டு இடங்களில் வென்றாலும் தேமுதிகவிற்கு அது வெற்றி வளர்ச்சியே என்றாலும் அடுத்தகட்ட அரசியல் வளர்ச்சியில் அது வீக்கம் தான்.
அடுத்து அடுத்தவன் இலையில் இருந்து எடுத்து திண்ணும் முடிவுக்கு வந்திருக்கும் காங்கிரசைப் பார்ப்போம், 80 சீட்டுகள் மற்றும் ஆட்சியில் பங்கு என்பதாக கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரசு காய் நகர்த்துவருகிறது. இதைப் பெற்றுக் கொள்ளும் முனைப்பில் ராசா கைது போன்ற நெருக்கடிகளைக் கொடுத்து திமுகவை பணிய வைக்க முயன்று கொண்டிருக்கிறது. பொறியில் அடைபட்ட எலி பொறிகடலையில் பங்குகேட்டால் தரமாட்டேன் என்று சொல்லுமா என்ன ? திமுக காங்கிரசின் வேண்டுகோளை மறுக்காமல் திணறுவதற்கு அவர்கள் அதிமுக பக்கம் சாய்வார்கள் என்கிற ஐயம் என்பதெல்லாம் 2005க்கு முன்பிருந்த திமுகவிற்கு இருந்திருக்கலாம், இப்போது இருப்பது ஸ்பெக்டரம் புகழ் திமுக. சிரஞ்சீவியின் பிராஜராஜ்யம் போல் திமுக கட்சியை தங்களுடன் இணைத்துக் கொள்ள காங்கிரஸ் நெருக்கடி கொடுக்காதவரை திமுகவிற்கு கவுரமே (திமுகவிற்கு லாபம் என்று சொல்லவரவில்லை, லாப / நட்டக் கணக்கிளெல்லாம் தற்போதிய திமுகவின் இலக்கணமே இல்லை). திமுக - காங்கிரஸ் கூட்டணி என்பது ஸ்பெக்டரம் ஊழலில் திமுகவின் குற்ற உணர்வு மற்றும் காங்கிரசின் தமிழக ஆட்சி ஆசை ஆகியவற்றால் ஏற்படும் நிர்பந்தக் கூட்டணி. அதாவது ஒப்பந்தத்துடன் உறவு கொண்டு பின் கர்பமாக்கிவிட்டு ஓடியவனை பிடித்து வந்து கட்டிவைத்து கட்டிக்கச் சொல்வது போன்றது தான். ஊடகங்களுக்கு நீராராடியவுடனான பேரம் குறித்த திமுகவினர் கனிமொழி உள்ளிட்டோரின் பேச்சுகளை மத்திய அரசு நிறுவனங்களின் வழியாக கசிய விட்டு திமுகவிற்கு தலைகுனிவு, ராசா கைது, கலைஞர் தொலைகாட்சி சிபிஐ சோதனை உள்ளிட்ட என நம்பிக்கைத் துரோகங்கள் நிறைந்த கூட்டணி. காங்கிரஸ் கேட்கும் 80 தொகுதிகளை நிர்பந்ததால் திமுக கொடுத்தாலும் திமுவினரின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்குமா என்பது ஐயமே, காங்கிரசார் திமுகவை மேடைகளில் சீண்டியதைப் போல் திமுகவினர் காங்கிரசாரை தாக்கிப் பேசாமல் போனாலும் திமுக - காங்கிரஸ் உறவு சீர்கெட்டால் திமுகவிற்கு அரசியல் ரீதியான ஆபத்து என்பதால் திமுகவினர் அடக்கியே வாசித்தனர். ஆனால் அந்த கடுப்பையும், வெறுப்பையும் கண்டிப்பாக தேர்தலின் போது காங்கிரசுக்கு எதிராக காட்டுவதற்கு திமுகவினர் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. காங்கிரசு நிற்கும் தொகுதிகளில் காங்கிரசு வாக்களிப்பதிவிட சுயேட்சைகளுக்கோ அல்லது அதிமுகவினருக்கோ வாக்களிப்பதையோ திமுகவினர் விரும்புவர்.
அதே போன்று அதிமுக அணியில் இடம் பெறும் விஜயகாந்தின் தேமுதிகவிற்கும் நடக்க வாய்ப்புள்ளது. எந்த முறையும் இவ்வளவு குழப்பங்களுடன் தமிழகம் தேர்தலை சந்தித்தே இல்லை. காரணம் ஒன்றை விட்டால் இன்னொன்று என்ற ஆறுதல் இருந்தது, ஜெயலலிதா ஊழல்வாதி என்ற வெளிப்படையாகத் தெரிந்த பிறகு திமுகவிற்கு வாய்ப்புக் கொடுத்தனர், பின்பு பணப்புழக்கம் இல்லை என்று மறுமுறை அதிமுகவிற்கு வாய்ப்புக் கொடுத்தனர். இந்த முறை தேர்தலை சந்திக்கும் எந்தப் பெரியக்கட்சியும் மக்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கப் போவதில்லை. சசிகலா குடும்பம் தமிழகத்தை பயமுறுத்தியதைவிட பலமடங்கு பயத்தை தமிழக மக்களுக்கு 'நிதி' குடும்பம் ஏற்படுத்திவிட்டிருக்கிறது. தேமுதிக மற்றும் காங்கிரஸ் இந்தத்தேர்தலுடன் காணாமல் போவதற்கான வாய்புகள் நிறைய உள்ளன.
இந்தத் தேர்தலில் கூட்டணிகள் பல்வேறு முரண்பாடுகளுடனும், நம்பிக்கையின்மையுடனும் இணைந்திருக்கின்றன, இவற்றின் வெறுப்புகளின் விகிதம் தேர்தல் முடிவுகளுடன் சேர்ந்தே தெரியவரும்.





