29 செப்டம்பர், 2011

அறிந்துக் கொள்ளுங்கள் புங்கை (மரம்) !

நம்மைச்சுற்றி நாம் அன்றாடம் பார்த்துவரும் மரங்களின் பெயர்கள் எத்தனை பேருக்குத் தெரியும் ?. புளி, தென்னை, வாழை, முருங்கை மரங்களை பரவலாக எல்லோரும் அறிந்திருப்பர், நொச்சி (செடி), எருக்கன்(செடி), ஆமணக்கு(செடி), கொடிக்காய் புளி, கருவேலம், நுணா, வாகை, கொன்றை, பின்றை, பூவரசு, ஒதியன், கல்யாண முருங்கை இன்னபிற தென் தமிழ்நாட்டு மரங்களை அறிந்திருந்தாலும் அவற்றை பெயரோடு சேர்த்து அறிந்திருப்பவர்கள் சிலரே. தோட்டக்கலை வளர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், மரங்களின் மீது கொள்ளை காதல் கொண்டோர்களுக்கும் இவை பற்றி ஓரளவேனும் தெரியும்.

அசையா உயிர்த்த தன்மை கொண்டவை அதாவது தானாக இடம் பெயராமை என்பது தவிர்த்து மரங்கள் அனைத்திற்கும் பொதுவான தன்மை கிடையாது, மரங்கள் ஒவ்வொன்றுமே ஒரு சில சுற்றுச் சூழலில் மட்டுமே வளர்பவை, அவற்றை இடம் பெயர்த்து வேறொரு சூழலுக்கு கொண்டு செல்லும் போது அவற்றால் அதன் முழுத்தன்மையை வெளிப்படுத்தி வளர இயலாது. இந்தியாவுக்கு பொதுவான, தமிழ்நாட்டுக்கு பொதுவான சில மரங்கள் உண்டு, அவற்றை நாம் பிற நாடுகளிலோ, பிற மாநிலங்களிலோ பார்க்க முடியாது.

அவற்றின் இன்றைய பயன்பாடு இன்மை அல்லது அவற்றின் மதிப்பை அறியாமை ஆகியவற்றால் அவை கவனிப்பின்றி போய் இருக்கலாம், ஆனாலும் இவ்வகை மரங்கள் நிழல், மரப் பலகை, மழைநீர் பாதுகாப்பு ஆகியவற்றை தரும் வள்ளல்களாகத்தான் இருந்தன. அது தவிர்த்து அவற்றின் பட்டைகள், இலைகள், வேர்கள் முதலியன பல்வேறு நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருந்தன. ஆங்கிலத் தோடு ஆங்கில மருத்துவ மோகம் வளராத காலத்தில் எந்த விதப் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத மருந்து மூலிகைகளாக பல்வேறு செடிகளும், மரப்பட்டைகளும், மர இலைகளும் பயன்பட்டு வந்தன, சிரத்தை எடுத்து வளர்க்காவிட்டாலும் அவற்றின் பரவல் காம்பவுண்ட் சுவர் இல்லாத காலங்களில் வேலிகளாகவும், நிழல் தரம் மரங்களாகவும் வளர்க்கப்பட்டு வந்தன. தாவிர வகைகளில் பயனற்றவை என்பவை மிக மிக அரிதான ஒன்று அல்லது அவற்றின் பயனை நாம் முழுதாக அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

எளிதாக அழியக் கூடிய அல்லது விலங்கினங்கள் தின்று தீர்க்கும் செடி, கொடி, மரவகைகளில் இயற்கையாகவே முட்கள் நிறைந்து காணப்படும், அவற்றில் தூதுவேளைப் போன்ற மூலிகைச் செடிகளும் அடக்கம். பயன் நிறைந்து காணப்படும் செடி கொடி வகைகளில் அவ்வகை முட்கள் பாதுகாப்புகள் எதுவும் இருக்காது ஏனெனில் அவற்றின் விதைப் பரவல்கள் மனிதர்களால் விரும்பியே செய்யப்படுகிறது, குறிப்பாக நல்ல அடர்த்தியான நிழல் தரும் மரங்கள் விரும்பியே வளர்க்கப்படுகிறது என்பதால் அவற்றைப் பரவச் செய்ய இயற்கை வெறெந்த அமைப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும், நல்ல நிழல் தரும் மரங்களில் புங்கை மரமும் ஒன்று.

(படம் நன்றி தினகரன்)
வெயில் காலத்தில் நல்ல குளிர்ச்சியான நிழல் தரும் மரங்களில் புங்கை மரம் சிறந்தது ஏனெனில் அவற்றின் இலைகள் சிறிதானவை, அடர்த்தியானவை, இம்மர இலைகள் ஊடுறுவும் காற்றை தடுக்காமல் நன்றாக அசைத்துவிடுவதால் அதன் சுற்றுச் சூழலை குளிர்த்தன்மையுடன் வைத்துக் கொள்வதுடன், அடர்த்தியான நிழலையும் தருகிறது. மழைகாலத்தில் இலைகள் முற்றிலும் கொட்டிப் போகமல் இருக்கும் போதே துளிர்கள் வந்துவிடும், இம்மரம் பருவகாலத்திற்கு ஏற்றவகையில் தம்மை வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. அதன் கொத்து கொத்தான பூக்கள் தேன்செறிந்து இருப்பதால் அவை பூக்கும் காலங்களில் வண்டுகளுக்கு கொண்டாட்டம் தான். வெள்ளை நிறத்தில் மல்லிகைப் பூப் போன்று காணப்படும். இம்மரப் பூக்கள் மூலிகை மருந்தாகவும் பயனளிக்கிறது, இதன் காய்கள் புருவம் சேர்த்த ஒரு கண் அளவுக்கு வளர்ந்து, உள்ளே ஒன்று அல்லது இரண்டு பருப்புகள் (விதைகள்) அமையப் பெற்றிருக்கும், பச்சை நிறத்தில் இருந்து முதிர்ந்த நிலையில் பொன் மஞ்சள் நிறத்திற்கு மாறி முற்றியதும் தானாகவே கீழே விழுந்துவிடும்.

புங்கை விதைகள் ஆமணக்கு போன்று எண்ணெய் தன்மை கொண்டவை, அவற்றின் எண்ணைகள் எரிசக்தி கொண்டவை, மருந்தாகவும், பயோ டீசலாகவும் பயன்படுத்தலாம், அவற்றின் சக்கை (புண்ணாக்கு) நட்சுத் தன்மையற்ற உர வகையாக பயன்படுத்தப்படுகிறது. புங்கை அடிமரம் ஓரளவு நார்த்தன்மையுடன் உறுதியானவை, அவை பலகைகளாக அறுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இம்மரம் நிறைய ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக் கூடியதாம்.

புங்கை மரம் தமிழ்நாட்டின் பழமையான மரங்களில் ஒன்று, புங்கை மரங்கள் குறித்த பழங்கதைகள் (புராணங்கள்) கூட உள்ளன. திருமுறை பாடல்களில் அவை குறிப்பிடப்பட்டுள்ளது.



இணைப்புகள் :

முந்தி நின்ற வினைக ளவைபோகச்
சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
அந்த மில்லா அடிகள் அவர்போலும்
கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
- திருஞானசம்பந்தர்.



திருப்புன்கூர் திருக்கோயிலின் தலமரமாக விளங்குவது புங்கமரமாகும். பளபளப்பான கரும்பச்சை இலைகளையும், இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்த நெற்பொரி போன்ற பூக்களையும் நீள்சதுரக் காய்களையும் உடைய மரம். இம்மரம் கடற்கரைகளிலும், ஆற்றங்கரைகளிலும் தானே வளரும் தன்மை கொண்டது. நிழலுக்காகவும் இம்மரம் சாலையோரங்களில் வளர்க்கப்படுகிறது. இலை, பூ, காய், விதை, வேர், பால், நெய் ஆகியவை மருத்துவக் குணமுடையவை. இது தோல் நோய் போக்கும் மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. (நன்றி : சைவம்)

பொன் தரும் புங்கை (தட்ஸ் தமிழ் கட்டுரை)

புங்கை

புங்கமரம் - திரு குப்புசாமி

புங்கை இலையின் மகத்துவம்

தாவர எரிபொருள் காடுகள் வளர்ப்புதாவர எரிபொருள் காடுகள் வளர்ப்பு - ஒரு சிறுதொழில்.


பின்குறிப்பு : சென்ற முறை சொந்த ஊருக்குச் சென்ற போது, கடற்கரையை ஒட்டிய ரயில் தண்டவாளம் அருகே காய்த்துக் குலுங்கிய புங்கை மரத்தைக் கண்டவுடன் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது, படம் பிடித்துக் கொண்டேன், புங்கை பற்றி தெரிந்த வரையில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன், அடுத்த சில நாட்களில் புங்கை பற்றிய கட்டுரை ஒன்று தட்ஸ் தமிழில் வந்திருந்தது தற்செயல் என்றாலும் கூட 'நாம் நினைப்பதை மற்ற ஒருவரும் ஏற்கனவே நினைத்துள்ளார் என்ன ஒரு ஒற்றுமையான நிகழ்வு' என்றே வியக்க வைத்தது.

9 கருத்துகள்:

  1. நல்ல பயனுள்ள பதிவு. மேலும் மரங்களைத் தேடவும். நன்றி. எனது பதிவு 'மூலிகைவளம்' புன்னை பற்றி எழுத்தியுள்ளேன்-http://mooligaivazam-kuppusamy.blogspot.com.

    பதிலளிநீக்கு
  2. முன்னர், குழந்தைகளின் அரைஞானிலும் காய்ந்த புங்கை காய்களை கட்டுவார்கள் அல்லவா. இப்பொழுது இப்படி ஒரு காய் இருப்பதை யார் கவனிக்கிறார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டருகே (சென்னையில்) கூட ஒரு மரம் இருந்தது. இப்பொழுது வீடு Flat-ஆகி விட்டது. மரத்தையும் தான் வெட்டி flat ஆக்கிவிட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  3. //வேங்கட ஸ்ரீனிவாசன் said...
    முன்னர், குழந்தைகளின் அரைஞானிலும் காய்ந்த புங்கை காய்களை கட்டுவார்கள் அல்லவா. இப்பொழுது இப்படி ஒரு காய் இருப்பதை யார் கவனிக்கிறார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டருகே (சென்னையில்) கூட ஒரு மரம் இருந்தது. இப்பொழுது வீடு Flat-ஆகி விட்டது. மரத்தையும் தான் வெட்டி flat ஆக்கிவிட்டார்கள்.//

    குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு அரைஞான் கயிற்றில் கட்டிவிடுவார்கள்.
    :)

    பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி ஶ்ரீனிவாசன் சார்.

    பதிலளிநீக்கு
  4. //uppusamy said...
    நல்ல பயனுள்ள பதிவு. மேலும் மரங்களைத் தேடவும். நன்றி. எனது பதிவு 'மூலிகைவளம்' புன்னை பற்றி எழுத்தியுள்ளேன்-http://mooligaivazam-kuppusamy.blogspot.com.//

    உங்களது விரிவான கட்டுரை. இங்கு கட்டுரையிலும் தற்போது இணைத்துள்ளேன், மிக்க நன்றி குப்புசாமி ஐயா.

    பதிலளிநீக்கு
  5. //
    சேக்காளி said...
    தொடர்ந்து மரங்களைப் பற்றி எழுதுங்கள்.//

    அறிந்தவரையில் எழுத முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  6. //இம்மரம் நிறைய ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக் கூடியதாம்.//

    உண்மை....
    அதனால்தான் என் வீட்டின் முன் ஒரு வைத்துள்ளேன்...

    பதிலளிநீக்கு
  7. "இம்மரம் நிறைய ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக் கூடியதாம்."

    உண்மை தான்...
    நல்ல பகிர்வு.பாராட்டுகள்.....

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  8. புங்கம் பட்டையை கஷாயமாக்கி குடித்து வர மூலம் குணமாகும்

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !