மணிப்பவள எச்சங்கள் வாழும் இடங்கள் !
Thursday, December 30, 2010
இன்றைய தமிழின் தூய்மை ஒரே நாளில் வந்தவை அல்ல, தமிழார்வளர்கள் கதைகள், கட்டுரைகள், செய்திகள் ஆகியவற்றிலும், திங்கள், கிழமை, நாள் இதழ்களில் எழுதியதை திரும்பத் திரும்பப் படித்து ஓரளவு தமிழை தூய்மைப்படுத்திக் கொண்டுள்ளோம், தனித் தமிழ் முன்னோடிகளாகக் கருதப்படுவர் மறைமலை அடிகளாரும், பரிதிமார் கலைஞரும் ஆவர்கள் இவர்கள் தான் தம் பெயரில் வேதாச்சலம் மற்றும் சூரிய நாராயண சாஸ்திரி தமிழில் இல்லை என்பதால் பெயரையே மாற்றிக் கொண்டார்கள், வடசொல் சாஸ்திரிக்கு தமிழில் கலைஞர் என்று பொருளாம், கருணாநிதியை சாஸ்திரி என்று வடமொழிக்காரர்கள் சொன்னால் அது சரிதான் :)
தனித் தமிழ் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் காலம் ஆகிவிட்டாலும் இன்னும் வழிபாட்டுத்தளங்களில் வசதியாகத் தூங்கிக் கொண்டு இருக்கின்றன வடமொழிக் கலந்து எழுதப்பட்ட எச்சச் சொற்கள். கோவில்களில் கேட்டிருக்கக் கூடும், 'பிரசாதம் வினியோகித்தார்கள்' இதைக் கேட்க தெய்வீகமாக இருப்பதாக பலர் நம்புகிறார்கள், பிரசாதம் என்பது தமிழில் அழகாக 'திருவமுது' என்றும் விநியோகம் என்பதை 'வழங்கள்' என்றும் சொல்லலாம். இந்த தமிழ் சொற்கள் நமக்கு புதியவையும் அன்று. ஆனாலும் வரட்டுகளினால் இவற்றை மாற்றிக் கொள்ள கோயில் பணியாளர்களோ, தேவமொழி மற்றும் உயர்மொழி என்பதாக அறியாமையில் இருக்கும் அன்பர்களோ நினைப்பதில்லை.
அதுபோல் உபயம் என்ற சொல் 40 ரூபாய்க்கு வாங்கி கோவிலுக்குக் கொடுக்கும் குழல் விளக்கில் இன்னார் உபயம் என்று வெளிச்சத்தை மறைக்கும் அளவுக்கு எழுதி இருப்பார்கள். உபயத்திற்கு நமக்கு பொருள் தெரியும் என்றாலும் அது போல் சொல் தமிழில் இல்லையா என்று பல்ர் நினைப்பதே இல்லை, திருப்பணி என்றச் சொல் பலகாலமாக புழக்கத்தில் உள்ளது, அதை உபயத்திற்கு மாற்றாக பயன்படுத்தலாமே
கோயில் தொடர்பிலேயே பலத் தமிழ் சொற்கள் நமக்கு தெரிந்தவையே, அவற்றை பயன்படுத்தலாமே
பிரகாரம் > சுற்று (வலஞ்சுழி, வலம்)
அங்கப்பிரதட்சனம் > உருளுதல்
தட்சனை > காணிக்கை
நைவேத்யம் > படையல் அல்லது படைத்தல்
ஹோமம் > வேள்வி
தரிசனம் > திருக்காட்சி
தீ(ப) ஆராதனை > (தீ) அல்லது விளக்கு ஆராட்டு
வாத்தியம் > இசைக்கருவி
பூஜை > பூ(வீனால்)செய் > பூசை
ஷேவி > வணக்கு அல்லது வழிபடு
அர்சனை > துதி செய்தல் அல்லது போற்று
ஆபரணம் > நகை
ஒட்டியாணம் > இடுப்பை ஒட்டிய ஆணம் > ஆணம், அணங்கு இவற்றிற்கு கட்டுதல் என்று பழந்தமிழில் பொருள் > இடுப்பணி என்று சொல்லலாம்
காட்சி > காணுதல் > காட்டுதல் என்ற தமிழ் திரிபே காட்சி, தோன்றுதல் என்றும் சொல்லலாம்
உபநயணம் > பூணு(ம் நூ)ல்
விபூதி > திருநீறு
நாமம் > திருமண்
சன்னதி > கோ....இல் > கோயில்
கற்பகிரகம் > (மூலவர்) உறைவிடம்
இந்துக் கோவில் மட்டுமல்ல அல்லேலோயா மற்றும் கிறித்து வழிபாட்டுத்தளங்களிலும் வடசொற்களே மிகவும் புழக்கத்தில் இருக்கின்றன.
ஆண்டவராகிய ஏசு கிறித்து ஜீவித்து இருக்கிறார் என்று சொல்லுவார்கள், ஜீவித்தல் என்றால் உயிரோடு இருத்தல் என்றே பொருள்.
பரிசுத்த ஆவி > அதி தூய ஆவி
ஆண்டவர் உங்களை ரட்சிக்கிறார் > ஆண்டவர் உங்களை அருளாசிக்கிறார்
தேவனுடைய கிருபையினாலும் > கடவுளுடைய அன்பினாலும்
தேவனுடைய மகிமையினாலும் > கடவுளுடைய சிறப்பினாலும்
வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
-இதன் பொருள்
உயிர்மரத்தின்மேல் உரிமையுள்ளவராவதற்கும், வாசல்வழியாக நரகத்திற்குள் நுழைவதற்கும், அவருடைய கற்பனைகளின் படி செய்பவர்கள் கொடுப்பனையாளர்கள்
என்று இருக்க வேண்டும், நான் படித்த வரையில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு மணிபவளத்திலேயே எழுதப்பட்டுள்ளது, இவற்றை செந்தமிழுக்கு மாற்றி எழுத இன்னும் கிறித்துவ அன்பர்கள் முயற்சி மேற்கொள்ளவில்லை. மேலும் திருப்பலி வழிபாண்டின் போது வடமொழி கலந்த மணிப்பவளத்தைத் தான் பயன்படுத்துகிறார்கள். இஸ்லாமியர்கள் வடமொழிக்கு மாற்றாக (பாங்கு,துவா இன்னும் பல) அரபுச் சொற்களை வைத்துள்ளார்கள்.
******
வழிபாட்டுத்தளங்களில் புழங்கும் சொற்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு தமிழ் சொற்களையே பயன்படுத்துவது தமிழை மேலும் தூய்மையாக்கும்.
நேரம் கிடைக்கும் போது மேலும் சில இதுபோல் எழுதுகிறேன்






