17 ஜூன், 2010

அருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா ?

தமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்துவர் புருனோ வெளி இட்டு இருந்தார். அதில் இடம் பெற்றிருக்கும் மாணவர்களில் யாருமே பார்பனர்கள் இல்லை. ஆனால் ஒரே ஒருவர் பெயர் 'செல்வ மலை முத்துக்குமரன்' என்ற பெயரைத் தவிர்த்து அனைவரின் பெயர்களும் தமிழ் பெயரே இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குழந்தைகளின் பெயர்களுடன் இல்லப் பெயராகச் சூட்டுவது உலக வழக்கு, இந்தியாவில் இந்த நிலை தொடராமல் போனதற்குக் காரணம் இல்லப் பெயர்கள் என்பவை சாதிப் பெயர்களாகப் போனதால் அது சரியான நடைமுறை இல்லை என்பால் தமிழ்நாட்டு அளவில் மாற்றிக் கொள்ளப்பட்டது. அப்படியும் நரேஷ் ஐய்யர், அனுசா ஐய்யர் போன்ற பெயர்கள் அண்மைகாலமாக தலைதூக்குகின்றன என்பவை கவலைக்கிடமான ஒன்று. சாதிப் பெயர்களை அடைமொழியாகக் கூப்பிட்ட வழக்கம் படிப்படியாக குறைந்துவரும் வேளையில் இவை போன்ற (சாதிய மன நிலையின் தவறான)முன்னெடுப்புகள் பட்டுப் போகும் நிலையில் இருக்கும் சாதிய வேர்களுக்கு வலிந்து சேவை செய்வதாகும். சாதிப் பெயர்கள் என்பது தவிர்த்து குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பெயர்களை, குல தெய்வப் பெயர்களை சூட்டுவது வழக்கமாக இருந்தது, எண்கணித சோதிடம், மற்றும் சோதிடர்களின் பரிந்துரை என்ற பெயரில் தனக்கும், இல்லத்திற்கும் முற்றிலும் தொடர்பில்லாத பெயர்களை பல்வேறு தமிழர்கள் சூட்டுகிறார்கள், அவை பெரும்பாலும் வடமொழிப்பெயர்களாகவே இருக்கின்றன, நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டும் வழக்கம் ஏறக்குறைய நின்றுவிட்டது என்பதைத்தான் அந்த பட்டியல் உறுதிபடுத்தி இருக்கிறது. பார்பனர்கள் தமிழ் சமூகத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்று குற்றச் சாட்டுகளை தொடர்ந்து பலரும் கூறிக் கொண்டு இருந்துவரும் வேளையில் அந்த இடத்தில் பல்வேறு சாதியினர் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையை பெயர்களே பறைசாற்றுகின்றன.

எனக்கு தெரிந்து நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டிம் பார்பனர்களைப் பார்த்திருக்கிறேன். தமிழ்வழித் தகவலாக தெரிந்தது, சூரிய நாராயண சாஸ்திரி என்ற பெற்றோர் வைத்தப் இயற்பெயரையே மாற்றிக் கொண்டு 'பரிதிமாற் கலைஞர்' ஆனவரும் ஒரு பார்பனர் தான். பார்பனர்கள் அல்லாதவர்களும் பார்பனர்களாக வேடம் போட்டு மாறிக் கொண்டு வருகிறார்கள். பார்பனியத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு இருப்பவர்களின் பார்வைகள் இந்த நவீன பார்பனர்களின் மீது திரும்புவது எப்போது ?

அண்மையில் ஒரு நண்பர் ஒருவர் இல்லவிழாவிற்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன், மகன் பெயர் மணீஷ் என்றார்கள், அங்கே இன்னொருவர் 'என் மகன் பெயரைப் பார்த்து தானே நீங்களும் அந்தப் பெயர் வைத்தீர்கள் ?' என்று கூறியதுடன், அவர் தன் மகனுக்கு மணீஷ் என்ற பெயர் வைத்திருப்பது எவ்வளவு பரவலாக எல்லோராலும் பின்பற்றப்படுகிறது என்பதாக பெருமைக் கூறினார். இவர்களெல்லாம் தாத்தாப் பாட்டிகளை முற்றிலும் மறந்து போனது வியப்பே.

தேவநேய பாவாணரின் பற்றாளரான தமிழ் சான்றோர் ஒருவர், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக கோபால கிருஷ்ணன் என்ற தனது இயற்பெயரை வெ.கரு.கோவலங்கண்ணன் என்று மாற்றிக் கொண்டார்.
திரு வெ.கரு.கோவலங்கண்ணன்


குழந்தைகளுக்குச் சூட்டும் பெயர்களில் தமிழ் பெயர்கள் இல்லாவிட்டாலும் மூதாதையர்களை நினைவு கூறும் வண்ணம் அவர்களின் பெயர்களையோ அல்லது பெயரின் பகுதியையோ,குல தெய்வப் பெயரையோ வைப்பது நாம் அவர்களுக்குச் செலுத்தும் நன்றிக்கடன் அதையெல்லாம் விட்டுவிட்டு விளங்காத சோதிடன் உங்க மகன் நாடாள்வான் என்று எதையோ கிளப்பிவிட வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் பெயராக வைத்து அழைப்பது வாழும் சமூகத்தை முற்றிலும் மறந்துவிடும், அவமதிக்கும் செயலாகும்.

தொடர்புடைய சுட்டிகள்:

தமிழர் பெயர்கள் (எழுதியவர் ரவிசங்கர்)

அபித குஜலாம்பாள் !

36 கருத்துகள்:

  1. இதெல்லாம் சுமார் 18 வருடங்களுக்கு முன்னால் வைத்த பெயர்கள்.

    இன்றைய பெயர் பட்டியலை வெளியிட்டால் ஒரு பெயர் கூட தேறாது என்று துணிந்து சொல்லுவேன்.

    பதிலளிநீக்கு
  2. அருக்காணி முதல் அழகுராணி வரை என்று ஒரு நிகழ்ச்சி நடத்துறாங்களாம்..

    சும்மா ஒரு தகவலுக்கு :-)

    பதிலளிநீக்கு
  3. இப்பொழுது எல்லாமெ வடமொழி பெயர்கல் தான் புழக்கத்தில் இருக்கின்றன.தேன்மொழி,கயல்விழி போன்ற இனிமையான பெயர்களை கூட வெறுக்கிறார்கள்

    பதிலளிநீக்கு
  4. யத்தீஷ்

    கிரத்தீஷ்

    மிருதிஷ்கா

    சஸ்வின்

    கிருஷாந்த்

    அஸ்வித்தா

    இதுக்கெல்லாம் என்ன சொல்றீங்க

    இது என்ன பெயர்ன்னு கூட தெரியாம புதுமைன்னு நினைச்சுக்கிட்டு இவங்க அடிக்கிற கூத்து தாங்க முடியல

    ஸ், ஷ், இந்த எழுத்துக்கள் இருந்தாத்தான் மாடர்ன் பெயர் என்ற நினைப்பு வேற.....

    அழகான தமிழ்பெயர் அருகி வருகிறது. இன்னும் 10 வருடம் கழித்து பாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் இப்படி எழுதினால், இது தவறு என்று, 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழ் ஒரு பெரிய கட்டுரையையே எழுதிவிடும்!

    பதிலளிநீக்கு
  6. ஒரு நேரம் தமிழைத் தாய்மொழியாகக்கொண்ட இஸ்லாமியர்கள்கூட தமிழில் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினர்.

    முத்து முகமது
    சீனி
    வெள்ளையப்பா
    ராசா
    கருத்தன் (உத்தம பாளையத்தில் ஹாஜி.கருத்த ராவுத்தர் கல்லூரி என்ற பெயரில் ஒரு கல்லூரி உண்டு)

    ராணி
    ராசாத்தி
    செல்வி போன்ற பல தமிழ் பெயர்கள் தமிழ் இஸ்லாமியக் குடும்பங்களில் புழக்கத்தில் இருந்தன. கடந்து 15 வருடங்களாக இந்தச் சமூகத்திலும் தமிழ் பெயர் சூட்டுவது கிட்டத்தட்ட மறைந்தே போனது. ஒரு தகவலுக்கு... என் உடன் பிறந்த சகோதரியின் பெயர் ரைஜஹான் செல்வி.

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான்.. இப்போது மக்கள் ஷ், ஸ் பேர் வைக்க அலைகிறார்கள்.. இலங்கைத் தமிழர்கள் உட்பட..

    @எம்.எம்.அப்துல்லா - ராணி, ராசாத்தி இரண்டும் தமிழ்ப் பெயர்கள் அல்ல.

    பதிலளிநீக்கு
  8. இதெல்லாம் ஒரு Cycle.. தற்போது யாழினி, கயல்விழி, நிலா எல்லாம் popular ஆகிக் கொண்டு இருக்கிறது..

    BTW எங்கும் தமிழ் எதிலும் தமிழ் மருத்துவர் ராமன் அடிமையின் பேத்திகளின் பெயர்..
    சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா..

    விளங்கிடும்..

    பதிலளிநீக்கு
  9. "புருனோ". இதுவும் தமிழ் பெயரா ?

    வடக்கிலும் பெயர்கள் மாறித்தான் வருகின்றன.

    எதற்காக இந்த மாறுதல் ?. பார்பனீயம், வடமொழி ஆதிக்கம் போன்றவற்றை மட்டும் பார்கக்கூடாது.

    பதிலளிநீக்கு
  10. ஆமாம் ...இப்பொ எல்லாம் நிலை மாறிவிட்டது...என்னுடைய பொன்னுக்கும் அழகிய தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைபட்டாலும் அனைவரும் இது என்ன பெயர் என்று குழந்தையினை கேளி செய்வார்களே என்று நினைத்தே அக்ஷ்தா என்று பெயர் வைத்தோம்...

    பதிலளிநீக்கு
  11. //Matra said...
    "புருனோ". இதுவும் தமிழ் பெயரா ?

    வடக்கிலும் பெயர்கள் மாறித்தான் வருகின்றன.

    எதற்காக இந்த மாறுதல் ?. பார்பனீயம், வடமொழி ஆதிக்கம் போன்றவற்றை மட்டும் பார்கக்கூடாது.
    //

    கத்தோலிக்க கிறித்துவர்கள் நல்ல தமிழ் பெயர்கள் வைத்திருப்பதைப் பார்த்து இருக்கிறேன். ஜூஸஸ் என்ற பெயரை ஏசு என்றும், மேரியை மரிய அன்னை என்றும் பெயர் மாற்றி வைத்து அழைப்பார்கள், புரூனோ கிறித்துவப் பெயர். இஸ்லாமிய கிறித்துவர்கள் மதம் சார்ந்த பெயர்களை வைப்பது பொதுவானது. அதிலும் சிலர் நல்ல தமிழ் பெயரை வைக்கிறார்கள். தமிழ் பாத்திமா, என்ற பெயர் தமிழகத்தில் பொதுவான இஸ்லாமிய பெயர்

    பதிலளிநீக்கு
  12. //GEETHA ACHAL said...
    ஆமாம் ...இப்பொ எல்லாம் நிலை மாறிவிட்டது...என்னுடைய பொன்னுக்கும் அழகிய தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைபட்டாலும் அனைவரும் இது என்ன பெயர் என்று குழந்தையினை கேளி செய்வார்களே என்று நினைத்தே அக்ஷ்தா என்று பெயர் வைத்தோம்...
    //

    அழகிய தமிழ் பெயர்கள் சுறுக்கமாக நிறைய இருக்கிறது, கயல், முல்லை, மீனாள், துளசி, மலர்.....எவ்வளவோ அழகிய பெயர்கள் இருக்கின்றன. இருந்தாலும் செல்லப் பெயராக வைத்துக் கூப்பிடுங்கள் தவறு இல்லை.

    பதிலளிநீக்கு
  13. நல்ல பதிவு !!
    உங்கள் பதிவிலுள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்.
    முக்கியமாகத் தலைப்பினை திருத்தவும்.

    அறுகிவரும் --> அருகிவரும் என்பதே சரியான, நீங்கள் கூற வரும் பொருள்.
    பரிதிமார் கலைஞர்' --> பரிதி + மால் = பரிதிமாற்கலைஞர்'
    -----------
    தரமான உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  14. தூய தமிழ் பெயர்களுக்கு,


    http://web.archive.org/web/20080109115919/www.nithiththurai.com/name/index1.html

    http://babynames.looktamil.com/show_baby.php?gender=F&cat=2

    http://www.thamizhagam.net/thamizhnames.html

    TamilNation.org

    பதிலளிநீக்கு
  15. // 'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

    நல்ல பதிவு !!
    உங்கள் பதிவிலுள்ள எழுத்துப் பிழைகளை சரி செய்யவும்.
    முக்கியமாகத் தலைப்பினை திருத்தவும்.

    அறுகிவரும் --> அருகிவரும் என்பதே சரியான, நீங்கள் கூற வரும் பொருள்.
    பரிதிமார் கலைஞர்' --> பரிதி + மால் = பரிதிமாற்கலைஞர்'
    -----------
    தரமான உங்கள் பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!//

    மிக்க நன்றி அறிவுமணி அவர்களே.

    திருத்தம் செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல சிந்தனை, நல்ல பதிவு.
    வாழ்க வளமுடன் நலமுடன்
    நன்றியுடன்
    ராதா

    பதிலளிநீக்கு
  17. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  18. // Muthu said...

    இந்த ஆதங்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.//

    பகிர்தலுக்கு நன்றி...இருந்தாலும் வீட்டில் நடந்த தனிப்பட்ட வாக்குவாதங்களை பொதுவில் சொல்வதை தவிர்த்திருக்கலாம், அல்லது வேறுமாதிரி சொல்லி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  19. //R. said...

    நல்ல சிந்தனை, நல்ல பதிவு.
    வாழ்க வளமுடன் நலமுடன்
    நன்றியுடன்
    ராதா//

    மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  20. என் பெண்செல்லத்திற்கு நான் இட்ட பெயர் - மின்னிலா.

    விளக்கம் கேட்கும் அனைவருக்கும் (இதன் பொருளை சரியாக சொன்னவர் இதுவரை ஒரே ஒருவர்தான். சிலர் என்ன மின்சார நிலவா என்றனர்) பெருமையாக சொல்வேன் :

    மின்னலைப்போல சக்தி வாய்ந்தவளும் நிலவைப்போல குளிர்ச்சியும் இதமும் ஆனவளும்.

    ஆண் செல்லமென்றால் ஆலயன் - ஆலயத்தில் இருப்பவன் - என்று பெயரிடவேண்டும் என்றிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  21. // Muthu said...

    என் பெண்செல்லத்திற்கு நான் இட்ட பெயர் - மின்னிலா.

    விளக்கம் கேட்கும் அனைவருக்கும் (இதன் பொருளை சரியாக சொன்னவர் இதுவரை ஒரே ஒருவர்தான். சிலர் என்ன மின்சார நிலவா என்றனர்) பெருமையாக சொல்வேன் :

    மின்னலைப்போல சக்தி வாய்ந்தவளும் நிலவைப்போல குளிர்ச்சியும் இதமும் ஆனவளும்.

    ஆண் செல்லமென்றால் ஆலயன் - ஆலயத்தில் இருப்பவன் - என்று பெயரிடவேண்டும் என்றிருந்தேன்.//

    இரண்டு பெயர்களுமே மிக அழகான் தேர்வாக இருக்கின்றன. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  22. மிக நல்ல பதிவு. தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கு தீப்தி, திரிஷா ( கொடுமைடா சாமி ) என்று எனக்கு தெரிந்தவர்களே பேர் வைத்திருக்கிறார்கள்.
    என் நண்பர் ஒருவர் தனக்கு பிறக்க போகும் குழந்தைக்கு நிறைய பெயர் தேடினார்.
    கடைசியில் பிள்ளைக்கு ஒரு பெயர் வைத்தார் ( அது எந்த மொழி என்று எல்லாம் தெரியாது ) - அதற்கு விளக்கம் சொல்லிவிட்டு.
    நண்பரே - இப்போதெல்லாம் இப்படி பெயர் நிறைய வருவது மகிழ்ச்சி தருகிறது என்றார். எல்லாம் பொருள் பொதிந்தது என்றார்.
    எனக்கு எதுவும் புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  23. அழகிய தமிழ் பெயர்களின் தொகுப்பு - தமிழ் வளர்ச்சிக் கழகம்
    http://www.southdreamz.com/tamil-baby-names

    பதிலளிநீக்கு
  24. அமரன் என்பது தமிழ்ப் பெயர் இல்லையா? kumaran

    பதிலளிநீக்கு
  25. //அமரன் என்பது தமிழ்ப் பெயர் இல்லையா? kumaran//

    இல்லை, பெயர் விகுதியில் 'ன்' போட்டால் தமிழ் பெயர் ஆகிவிடாது. அது தமிழ்படுத்தப்பட்ட பெயர் என்று தான் ஆகும்,

    அமர் - நிரந்தரமானவன்
    அமராவதி - வற்றாத ஆற்றின் பெயர்
    அமர காவியம் - காலத்தால் அழியாத காவியம் என்ற பொருள்களிலெல்லாம் 'அமர்' வரும்.

    அதன் தமிழ் பொருள் 'நிலைத்த' என்பதே.

    அமரன் - நிலைத்தவன்

    பதிலளிநீக்கு
  26. அமர் என்ற மூலம் இரு பொருள்களில் பயன்படுகிறது.
    அமர் (உட்கார்) - என்கிற நிலைத்த தன்மை.
    சமர் (போர்) என்பதைத் தமிழ்ப் படுத்திய சொல். [எ-டு] அமர்க்களம் . இதில் இரண்டாம் கருத்தில் பயன் படுத்துவது தமிழ்ப் படுத்தப் பட்டது எனத் தோன்றுகிறது.

    எ- டு: அமரரிடர் தீர (வ)அமரம் புரிந்த குமரன்
    குமார் என்ற சொல் இந்தி நாட்டிலே மிகப் பரவலான பெயர். இதை 'ன்' சேர்த்தது என்று தமிழ்ப் பெயரான 'குமரன்' , எனும் சொல்லை புறம் தள்ள முடியாதோ - அப்படித்தான் அமரன் என்ற சொல்லும் என என் சிறு மூளைக்குத் தோன்றுகிறது.
    அமரர் என்றால் இறந்தவரைக் குறிக்கிறோம்.
    'அயர்வறும் அமரர்கள் அதிபதி எவனவன் துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே ' - ஆழ்வார்கள்
    வண்டமர் சோலை
    [இது சரி என்றால் தமிழ்ச் சொற்களைத் தமிழுக்கு மீட்கலாமே ]

    பதிலளிநீக்கு
  27. //அமர் என்ற மூலம் இரு பொருள்களில் பயன்படுகிறது.
    அமர் (உட்கார்) - என்கிற நிலைத்த தன்மை.
    சமர் (போர்) என்பதைத் தமிழ்ப் படுத்திய சொல். [எ-டு] அமர்க்களம் . இதில் இரண்டாம் கருத்தில் பயன் படுத்துவது தமிழ்ப் படுத்தப் பட்டது எனத் தோன்றுகிறது. //

    குமரன், உங்கள் விளக்கம் சிறப்பு,
    அமை - என்ற மூலச் சொல்லில் இருந்து அமர்வு, அமர் உருவாகி இருக்கலாம், ஆனாலும் காலத்துடன் தொடர்புடைய அமரன், அமரர் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது.

    குமார் என்ற சொல் இந்தியில் இளைஞன், திருமணம் ஆகாதவர் என்ற பொருளில் தான் வழங்கப்படுகிறது.

    திருக்குறள், சங்க இலக்கியங்களில் குமார் பயன்பாடுகள் இல்லை என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. எனக்குத் தெரிந்த ஒருவர் தன் குழந்தைக்கு தூஷனா எனறு பெயர் வைத்துள்ளனர். தூஷனா --தூஷனம்-- என்றால் திட்டுவது தானே பொருள்.

    பதிலளிநீக்கு
  29. சிலர் புதுமைனு நினைத்து வடமொழி பெயரை வைக்கின்றனர். ஆனால் அப்பெயரினை தமிழ்ப்படுத்தினால் மிகவும் வருத்தமளிக்கிறது.... எ.கா. (நந்தி)னி என்றால் மாடு எனப்படும் அதேபோல் அஸ்வினி என்றால் ஒருவகை ஜாதி குதிரை எனப்படும் மகிஷா என்றாலோ எருமை என அர்த்தமும் உண்டு... அப்படி எனில் அவர்கள் குழந்தைகளை வளர்க்கிறார்களா.... அல்லது விலங்குகளை வளர்க்கிறார்களா என தெரியவில்லை....

    பதிலளிநீக்கு
  30. I found the following webpage (pdf) of Devaneya pavanar's BOOK. PAGE 188 OF THE BOOK, 200 in the pdf talks about the etymological derivation of amarar. al, marar (al - negative; mari or madi means die. those who don't die = amarar); browsing up and down the book you can see how many tamil names have been considered even by us as sanskrit derivatives.

    http://www.scribd.com/doc/32595404/devaneyam-1

    பதிலளிநீக்கு
  31. நான் என்னுடைய மகளுக்கு பெயர் சுட்ட போகிறேன்த. தமிழ் பெயர்கள் "கி" அல்லது "கீ" முதல் எழுத்தில் தேடுகிறேன். உங்களுக்கு தெரிந்த பெயர்களை பகிரவும் . நன்றி

    பதிலளிநீக்கு
  32. நண்பர்களுக்கு அன்பு வணக்கம்,எங்கள் பெண் குழந்தைக்கு அழகான அதேசமயம் புதுமையான தமிழ்ப்பெயரிட ஆசை. இணையத்திலும் சில புத்தகங்களிலும் தேடி அலுத்து விட்டது.

    நண்பர்களின் உதவியை நாடி இங்கு பதிவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  33. சம்யுக்தா என்பது தமிழ்ப்பெயர் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  34. வணக்கம்,
    என்னுடைய பெயர் கோபிநாத், எனக்கு 6 மார்ச் 2019 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.

    சதயம் நட்சத்திரம் என்பதால் கோ என்ற எழுத்தில் பெயரை ஆரம்பிக்க வீரும்புகிறேன்.

    அனால் இரண்டு நாட்களாக நான் என் மனதில் ஆசை பட்ட பெயர் ஏதும் நன்றாக இல்லை.தயவு செய்து உங்களுக்கு தெரிந்தால் எனக்கு பகிரவும்.

    1 . வட மொழி சொற்கள் வரக்கூடாது.
    2 . கோ,தோ மற்றும் தௌ என்ற எலுதில் மற்றும் தான் வர வேண்டும்.
    3 . சங்ககால பெயர்களாக இருக்க வேண்டும் மற்றும் இரண்டு அல்லது மூன்று எலுதில் முடியும் பெயரக இருக்க வேண்டும்.. ( உதாரணம் தாரகை , காருண்ய, யாழினி, அமிழ்தினி, மென்மொழி, மகிழன்,)
    4 . வாழ்வில் வெற்றி பெற்றவர்களா இருக்க வேண்டும் ( உதாரணம் . சம்யுத்த,சங்கமித்திரை )
    5 . பெயரை கூப்பிடும் போது இரண்டு உதடுகள் ஓட்ட வேண்டும்.
    6 . என்னுடைய குல தெய்வ கடவுளின் பெயர் வீரமாத்தி அம்மன்.
    7 . மேல உள்ளவை அனைத்தும் பொறுத்தவிட்டாலும், கீழே உள்ள அர்த்தமுள்ள பெயர்கள் (மற்றும் அந்த பெயருக்கான அர்த்தம் ) இருந்தால் தயவு செய்து எனக்கு பகிரவும்.
    (மின்னில ,ஆலயன்)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !