4 ஜனவரி, 2010

பொருளதிகாரம் !

வாழ்வியல் என்பதன் பொருள் பற்றி இன்றைய காலகட்டத்தில் ஆய்ந்து பார்த்தால் உண்பது உறங்குவது இதைத் தவிர்த்து பொருளீட்டலுக்கான உழைப்பே முன்னிலை வகிக்கிறது. ஒருவரின் தனிப்புகழுக்குக் காரணமாக அவரது கலைகள், இலக்கியங்கள், அறிவுத் தன்மை என தனித் திறமைப் பேசைப்படுவது போலவே ஒருவர் செல்வந்தராக இருந்தாலும் பலரால் அறியப்படுவர். பெரும் பொருளீட்டுவதும் கூட ஒருவரது தனித் திறமையே. பணம் ஈட்டுபவர்களின் நாள் ஊதியம் மாத ஊதியம் இவர்களை விட்டு விட்டு பார்த்தால் தொழில் அதிபர்களே மிகுதியாக பொருளீட்டுவார்கள். அவர்களில் இருவகை தேவை உள்ள இடத்தில் மிகுதியான விலை வைத்து அதன் மூலம் பெரும் பணம் ஈட்டுபவர்கள், குறைந்த விலைக்கு தரமான பொருள்களை விற்று அதன் மூலம் பல வாடிக்கையாளர்களைப் பெற்று பெரும் பணம் ஈட்டுவார்கள், இது நேர்மையான வழியும் கூட. பெரும்பாலும் நேர்மையான வழியில் பணம் ஈட்டுபவர்களே வரியவர்களுக்கும் உதவுவார்கள். மற்றபடி கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்பவர்கள் மன சாட்சிக்கு தப்ப வழிபாட்டுத்தளங்களுக்கு மிகுதியாக செய்பவர்களாக ஒரு சிலர் இருப்பார்கள். எப்படியாக செல்வம் சேர்த்தாலும் அவை தன் தேவைக்கு எஞ்சிய உபரியாக சேர்க்கும் செல்வம் என்பது பிறருக்கும் சேர வேண்டியதையும் சேர்த்தே குவிப்பது ஆகும்.

எங்கள் அலுவலகத்தில் இருக்கும் இரு சீன பாஸ்களுள் ஒருவருடன் ஒருமுறை அவருடைய காரில் பயணிக்க வேண்டி இருந்தது, வழிபாட்டுக்கு செல்லும் அவர் போகும் வழியில் என்னை இறக்கிவிட்டுச் செல்வதாக அழைத்துச் சென்றார். பேச்சு கடவுள் நம்பிக்கை பற்றி வந்தது, அவரது நம்பிக்கைகளை பற்றிக் கூறிக் கொண்டு வந்தார், இறை நம்பிக்கைகளைப் பற்றி வழக்கம் போல் மழுப்பலாக பேசிக் கொண்டு வந்தேன். என்ன என்றாலும் இந்திய நம்பிக்கைகள் பற்றி அவரிடம் என்னால் முற்றிலும் விட்டுத்தந்துவிட முடியாது இல்லையா ? அதன் பிறகு நான் அவரிடம் கேட்டேன். வழிபாட்டுக்குச் செல்கிறீர்கள் ? ஏதேனும் இன்னும் பணக்காரராக ஆக வேண்டும் என்று வேண்டிக் கொள்வீர்களா ? என்று கேட்டேன். வேண்டுதலில் பணம் கேட்டால் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும், இருந்தாலும் நான் அவ்வாறு கேட்பதில்லை என்றார். ஏன் ? என்று ஆவலுடன் கேட்டேன். கடவுளே ஆனாலும் நாம வாங்குவதைத் திருப்பிக் கொடுக்கனும் அது தான் நேர்மை, எனக்கு போதுமானது இருக்கிறது, என் நிலை இறங்கிவிடக் கூடாது என்று வேண்டிக் கொள்வேன், பிறரிடம் எப்படி நாம தேவைக்கு கடன் வாங்கினால் எப்படி திருப்பிச் செலுத்த வேண்டியதும் நம் கடமையோ, அதே தான் கடவுளிடமும் என்று கூறினார். அதுவரை அது போல் எவர் சொல்லியும் நான் கேள்விப்பட்டதே இல்லை. சொல்லிக் கொண்டே வந்தார்.

"எனக்கெல்லாம் மறுபிறவியில் நம்பிக்கை இருக்கு, எல்லோருக்கும் சமமான வாய்ப்பையும், அவர்களுக்குத் தேவையானதையும் இறைவன் கொடுக்கிறான். நாம பிறருக்கும் சேர வேண்டியதையும் சேர்த்துக் கொள்வதுடன், நமக்கு பல பிறவிகளுக்குத் தேவையானதை இப்போதே ஒன்றாக குவித்துவிட்டால், பிறருக்கு பாவம் செய்து பாவம் நமக்கு சேர்வதுடன், நமக்கு அடுத்த பிறவிக்கு தேவையானது அப்போது நமக்கு கிடைக்காமல் போய்விடும், ஒருவேளை இப்போது பணக்காரனாக அடுத்தப் பிறவிக்கும் தேவையானதை உபரியாக வைத்திருந்தால், அடுத்த பிறவியில் அதன் காரணமாக பிச்சைக்காரணாகக் கூட பிறக்க நேரிடும்" என்றார்

*********

எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இருக்கிறதோ, இல்லையோ அவர் தனக்கு ஏன் பணம் வேண்டும் என்று கடவுளை வேண்டுவதில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு பிடித்து இருந்தது. உண்மை தானே ! உயிரினங்களின் தொடர்ச்சிக்காக சுழன்று இயங்கும் இயற்கை ஒருவருக்கே என்று எதையும் உருவாக்குவதில், மழையும், காற்றும் அதன் மூலம் விளையும் விளைச்சல்களும் உழைக்கும் அனைவருக்கும் உரிமையானது. இயற்கையின் விளைச்சல்களை, வளங்களை தனி உடமை ஆக்கிக் கொண்டு பிறருக்கும் சேர வேண்டியதை தன்னிடத்தில் குவித்துக் கொள்கிறோம் அல்லது குறைந்த அளவாக பணக்காரனாக மாட்டோமா என்று எல்லோருமே ஓரளவு ஆசைப்படுகிறோம்.

அவர் பேசியது கொள்கை அளவில் பொது உடமையா, ஆத்திகமா, எதார்தமா என்று தெரியவில்லை, ஒருவருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லாவிட்டால் கூட, தனிப்பெரும் பணக்காரன் என்பவன் பல்வேறு தரப்பினரைச் சுரண்டுபவன் அல்லது பிறரது செல்வங்களையும் சேர்த்தே தன்னிடத்தில் வைத்திருப்பவன் என்கிற மற்றொரு பொருளும் அந்த 'பணக்காரன்' என்ற ஒற்றைச் சொல்லுக்குள் வைத்திருக்கிறான்.

9 கருத்துகள்:

  1. அருமையான கட்டுரை....மனிதன் மனிதனாக வாழவேண்டும் உங்க சீன நண்பரின் வேண்டுதல் சற்று வித்தியாசமானதுதான்....ஆனால் நல்ல மனிதன்.

    பதிலளிநீக்கு
  2. //தன் தேவைக்கு எஞ்சிய உபரியாக சேர்க்கும் செல்வம் என்பது பிறருக்கும் சேர வேண்டியதையும் சேர்த்தே குவிப்பது ஆகும்.//

    சரியா சொன்னீங்க.

    ஆனால் சேர்ப்பவர்கள் சேர்த்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
    சில சமயம் அது ஒரு நோயோ என்று நினைப்பதுண்டு.

    நல்ல கட்டுரை அண்ணா.

    இந்த விசயத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  3. என்னுடைய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் வ‌ருட‌த்துக்கு 1 கோடி வ‌ரை குத்த‌கை எடுப்ப‌வ‌ர் க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளாக‌ வெகு சொற்ப‌ வேலைக‌ளை அதுவும் தேர்ந்தெடுத்து செய்கிறார் ஏனென்று கேட்டால் ச‌ம்பாதித்த‌து போதும் என்கிறார்.அப்ப‌டி ஒன்றும் பிர‌மாத‌மாக‌ ச‌ம்பாதிக்க‌விட்டாலும், போதும் என்ற‌ ம‌ன‌நிலை வெகுசில‌ருக்கே இய‌ற்கையாக‌ அமைகிற‌து.

    பதிலளிநீக்கு
  4. //கிளியனூர் இஸ்மத் said...

    அருமையான கட்டுரை....மனிதன் மனிதனாக வாழவேண்டும் உங்க சீன நண்பரின் வேண்டுதல் சற்று வித்தியாசமானதுதான்....ஆனால் நல்ல மனிதன்.//

    பாராட்டுக்கு நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு
  5. // அக்பர் said...

    //தன் தேவைக்கு எஞ்சிய உபரியாக சேர்க்கும் செல்வம் என்பது பிறருக்கும் சேர வேண்டியதையும் சேர்த்தே குவிப்பது ஆகும்.//

    சரியா சொன்னீங்க.

    ஆனால் சேர்ப்பவர்கள் சேர்த்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
    சில சமயம் அது ஒரு நோயோ என்று நினைப்பதுண்டு.

    நல்ல கட்டுரை அண்ணா.//

    பாராட்டுக்கு நன்றி அக்பர்.

    // இந்த விசயத்தில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்று நினைக்கிறேன். :)//

    இது போன்ற கட்டுரைகளை வாசிப்பவர்களும் குறைவே

    பதிலளிநீக்கு
  6. //வடுவூர் குமார் said...

    என்னுடைய‌ ந‌ண்ப‌ர் ஒருவ‌ர் வ‌ருட‌த்துக்கு 1 கோடி வ‌ரை குத்த‌கை எடுப்ப‌வ‌ர் க‌ட‌ந்த‌ சில‌ ஆண்டுக‌ளாக‌ வெகு சொற்ப‌ வேலைக‌ளை அதுவும் தேர்ந்தெடுத்து செய்கிறார் ஏனென்று கேட்டால் ச‌ம்பாதித்த‌து போதும் என்கிறார்.அப்ப‌டி ஒன்றும் பிர‌மாத‌மாக‌ ச‌ம்பாதிக்க‌விட்டாலும், போதும் என்ற‌ ம‌ன‌நிலை வெகுசில‌ருக்கே இய‌ற்கையாக‌ அமைகிற‌து.//

    உண்மையிலேயே அவரைப் பாராட்டனும். வாழ்வு முழுவதும் பொருளீட்டளில் இருந்தால் தனக்காக வாழும் நேரம் எதுவுமே இல்லாமலும் போய்விடும்.

    பதிலளிநீக்கு
  7. இது போன்ற சுருக்கமான , அழகான, அருமையான பதிவுகளை 2010-ல் எதிர்பார்க்கிறேன்

    no உள்குத்து ;)

    அன்புடன்
    சிங்கை நாதன்

    பதிலளிநீக்கு
  8. :) சீன பாஸ் கிட்ட உங்க பதிவெல்லாம் காட்டுங்க :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !