1 டிசம்பர், 2009

பதிவுலகம், எழுத்தாளர்களின் பொது புத்தி !

மாபெரும் எழுத்தாளர் சாரு "இணைய வாசிப்பு குப்பை, நான் அதைப் படிப்பதே இல்லை" என்றார், மாபெரும் இலக்கியவாதி ஜெமோ சாருவை கொஞ்சம் 10 விழுக்காடு தள்ளுபடி செய்து "இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே." அதாவது 90 விழுக்காடு மட்டுமே குப்பை என்கிறார்.

எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என்று அடையாளத்துக்குள் சென்றவர்களுக்கு பதிவுலகம் குப்பையாக தெரிவதில் வியப்பே இல்லை.

வலைப்பதிவு, வலைப்பதிவர்களை பொதுவாக அடையாளப்படுத்தும் ஒரு முயற்சியாக சாரு மற்றும் ஜெமோ ஆகிய இருவரின் வலைப்பதிவர்கள் குறித்து விமர்சனத்தைப் பார்க்கிறேன்.

கைதேர்ந்த எழுத்தாளர்களால் வலைப்பதிவு எழுதப்படுகிறது என்று எந்த திரட்டியும் அல்லது பதிவர்களால் எங்கும் சொல்லப்பட்டு இருப்பது போல் நான் படித்ததும் இல்லை. வலைப்பதிவு ஊடகம் எண்ணப் பகிர்வு என்ற அடைப்படையில் வலைப்பதிவாளர்களால் எண்ணங்களை எழுத்தப்பட்டு வருகிறது, அதிலும் பல பதிவர்கள் சிறந்த ஆக்கங்களை படைக்கிறார்கள், விகடன் உட்பட பல்வேறு ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகிறது.

வயது, தொழில் இவற்றில் மாறுபட்ட பலர் ஒன்றிணையும் ஒரு இணைய ஊடகம் என்பதைத் தவிர்த்து வலைப்பதிவுகளுக்கு பொதுவான ஒரு அடையாளம் இருப்பது போல் தெரியவில்லை. வலைப்பதிவுகளை அவை இணைந்திருக்கும் திரட்டிகளை வைத்தும் அடையாளப்படுத்திவிட முடியாது.

தமிழ்மணம் பற்றிய ஜெமோவின் குற்றச் சாட்டு,

"தமிழ்மணம் போன்ற திரட்டிகளே அவதூறாளர்களின் கையில் ஆயுதமாகத்தான் பயன்பட்டன என்று இணையத்தில் வாசித்தபோது மனக்கசப்படைந்தேன். ஒரு திரட்டியில் என் இணையதளத்தை இணைப்பதற்கே நான் அச்சப்படும் சூழல் இன்று நிலவுகிறது."

எங்கோ வாசித்ததின் நம்பகத்தன்மையை சோதிக்காமல் எப்படி அவர் அப்படியே நம்புகிறார் என்று தெரியவில்லை, அதை தனது வலைத்தளத்தில் எழுதுவதன் மூலம் தமிழ்மணம் திரட்டியின் நம்பகத்தன்மை பற்றிய கேள்விப்பட்டேன் என்று எழுதுவது ஒரு திரட்டிகான அவதூறாக எடுத்துக் கொள்ளப்படாதா என்பதை ஜெமோவின் வாசகர்கள் அல்லது ஜெமோ தான் விளக்க வேண்டும்.

நான் அறிந்தவரையில், வாசித்தவரையில் நேச குமார் என்பரின் பதிவுகளை திரட்டுவதை தமிழ்மணம் நிறுத்தியது அதற்கு காரணமாக நேச குமார் தமிழ் மணம் ஐபி முகவரிகளை சிலரிடம் தருவதாக அவதூறு சொல்லி இருந்தார் என்கிற காரணத்தையும் தமிழ்மணம் வெளி இட்டு இருந்தது. தமிழ்மணம் நேச குமார் பதிவுகளை திரட்டுவதை நிறுத்தியதும் நேச குமாரை வாசிக்கும் அல்லது ஆதரவான பதிவர்கள் தமிழ்மணம் பாசிச திரட்டி என்று வசைந்துவிட்டு விலகிக் கொண்டார்கள். நேச குமார் அறியப்பட்டதே தமிழ்மணம் திரட்டி வழியாகத்தான் என்பதை ஜெமோவுக்கு தெரியுமா என்றே தெரியவில்லை. நேச குமார் ஆதரவாளர்களின் தமிழ்மணம் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை ஜெமோ கேள்விப்பட்டு இருக்கக் கூடும், அல்லது அவர்களில் ஒருவர் ஜெமோவுக்கு தமிழ்மணம் பற்றிய மேற்கண்ட 'அச்சப்படும் சூழல்' தகவல்களை கொடுத்திருக்க கூடும். இருந்தாலும் அதன் நம்பகத்தன்மையை அல்லது நடந்தவற்றை முழுதாக அறிந்து ஆய்ந்துவிட்டு ஜெமோ தமிழ்மணம் பற்றி தனது இணையத்தில் குறிப்பிட்டு இருக்கலாம். ஜெமோவின் தமிழ்மணம் பற்றிய கருத்துகளைப் படிப்பவர்கள், தமிழ்மணம் பற்றி ஓரளவுக்கு அறிந்தவர்கள் ஜெமோவின் அந்த கருத்தைக் கூட குப்பை என்று தான் சொல்லுவார்கள்.

*****

இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. - ஜெமோ

தமிழ் இணையத்தில் பெருவாரியாக எழுதுபவர்கள் தமிழ் பதிவர்கள், எனவே அவர் தமிழ் பதிவர்களைத்தான் குறிப்பிடுகிறார் என்றே நினைக்கிறேன். வலைப்பதிவு ஊடகம் ஒரு வடிவம் பெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாக இருந்தால் கண்டிப்பாக வடிவம் பெரும். தற்பொழுது எழுதுபவர்களில் அனைவருமே வலை எழுத்துக்களை பகுதி நேரமாக அல்லது பொழுது போக்காகவே செய்துவருகிறார்கள், எண்ணப் பகிர்வு, தகவல்கள், விமர்சனங்கள் பெருவாரியாக எழுதப்படுபவை. அடுத்தக்கட்ட எழுத்தாளர் அவதாரம் எடுக்க வேண்டும் என்று எண்ணி எழுதுபவர்கள் குறைவு. ஏனெனில் எழுத்து என்பது பல வலைபதிவர்களுக்கு தொழில் கிடையாது.

வலைப்பதிவு சார்ப்பு ஊடகம் கிடையாது, இப்படித்தான் எழுத வேண்டும், இப்படி எழுதினால் தான் அது ஆக்கம் என்பது எல்லம சார்பு ஊடகங்களின் இலக்கணமாக இருக்கலாம், வலைப்பதிவுகளுக்கு என்று எந்த இலக்கணமும் கிடையாது. 90 விழுக்காடு குப்பையாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள், வலைப்பதிவு வாசகர்கள் தான். ஜெமோவின் வலைப் பதிவர்கள் பற்றிய 'குப்பை' விமர்சனம் ஜெமோவின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. மற்றபடி வலைப்பதிவர்களின் எழுத்து பற்றி மதிப்பீடு செய்யும் தகுதியோ, வலைப்பதிவர்கள் என்ன, எதை, எப்படி எழுத வேண்டும் என்கிற தகுதியையோ எவரும் முடிவு செய்துவிட முடியாது என்றே நினைக்கிறேன். ஜெமோவின் வலைப்பதிவர்கள் பற்றிய விமர்சனம், சாருவின் விமர்சனங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அது அவர்களைப் போன்ற எழுத்தாளர்களின் வலைப்பதிவு, இணைய எழுத்து சார்ந்த பொது புத்தி விமர்சனமாகவே தெரிகிறது.

வலைப்பதிவுகள், இணைய எழுத்துகள் அனைத்தையுமே பொதுப்படுத்திவிட முடியாது, பொதுவிலும் அடங்காது,யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, கட்டுப்பாட்டிலும் வராது. ஆனால் அப்படி ஒரு முயற்சியை தங்கள் 'குப்பை' விமர்சனங்கள் மூலம் சாருவும், ஜெமோவும் செய்துவருகிறார்கள்.

பின்குறிப்பு : இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே வலைப்பதிவு சார்பாக நான் எழுதவில்லை :)

48 கருத்துகள்:

  1. //இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. - ஜெமோ//

    இவரும் இணையத்தில் எழுதுகிறார். அப்படியானால் அவரையும் சேர்த்துதானே

    பதிலளிநீக்கு
  2. ’எங்க நமக்கு போட்டியாக வந்து விடுவார்களே’ என்ற பயம் தான். ஜெ.மோ அந்த வகையில் தன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்...

    பதிலளிநீக்கு
  3. எழுத்தாளர்கள் என்ற 'அடைமொழி' வர என்ன செய்யணும்? அதுக்குப் பொருள் என்னன்னு கொஞ்சம் 'ஆராய்ஞ்சதில்' குறைஞ்சது ஒரு புத்தகம் வெளியிட்டு இருந்தால் அவர் எழுத்தாளர் என்ரு அ(ரி)றியப்படுவாராம்.

    ஜெமோ எழுதுனது அவரோட சொந்தக் கருத்து. அதை அப்படியே வீட்டுடணும்.
    இதுக்கெல்லாம் 'சூடாகக்கூடாது':-)

    அப்புறம் வெகுஜனப்பத்திரிகைகளில் வந்தால்தான் சிறந்ததுன்னு சொல்ல முடியாது. பத்திரிக்கை ஒவ்வொன்னும் ஒரு கொளுகை வச்சுருக்கு. அதுக்குத்தோதா எழுதுவதெல்லாம் ஆகாது.

    இப்ப அவுங்களும் இணையத்துலே வர்றதையெல்லாம் எடுத்துப்போட்டுப் பக்கம் நிரப்பும் வேலையைச் செய்யறாங்க.

    pin குறிப்பு: இது எல்லாமே என் சொந்தக் கருத்து

    பதிலளிநீக்கு
  4. பெரும்பாலான பதிவுகள் தரமற்றவை என்பது உண்மையே. இன்னொரு பக்கம் பார்த்தால் எழுதத் தொடங்குபவர்களுக்கு திரட்டிகள் வழங்கும் வாய்ப்புகள் பாராட்டப்படவேண்டிய விஷயம். ஆனால் ஜெயமோகனின் விஷப் பதிவுகளைவிட தமிழ்மனத்தில் வரும் பதிவுகள் எவ்வளவோ மேல்.

    பதிலளிநீக்கு
  5. ஹய்யா..வாங்க..வாங்க..இன்னைக்கு கோவி அண்ணனோட ப்ளாக்கு...

    பதிலளிநீக்கு
  6. :)

    கேபிள் அண்ணே.. ஜெமோ மிச்சப்படுத்தின 10 விழுக்காடுல அவரோட தளமும் சேர்ந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. //Cable Sankar said...

    //இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. - ஜெமோ//

    இவரும் இணையத்தில் எழுதுகிறார். அப்படியானால் அவரையும் சேர்த்துதானே//

    :) நான் அப்படிச் சொல்லவில்லை, அவரோட வாசகர் கடிதத்தை அதில் சேர்க்காமல் இருந்தால் நல்லது.

    பதிலளிநீக்கு
  8. //பிரசன்னா இராசன் said...

    ’எங்க நமக்கு போட்டியாக வந்து விடுவார்களே’ என்ற பயம் தான். ஜெ.மோ அந்த வகையில் தன் இடத்தைக் காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்...//

    கருத்து சொல்ல வேண்டும் என்கிற சிலரின் தொண தொணப்புக்காக கருத்து என்பதாக சொல்லி வைக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. // துளசி கோபால் said...

    எழுத்தாளர்கள் என்ற 'அடைமொழி' வர என்ன செய்யணும்? அதுக்குப் பொருள் என்னன்னு கொஞ்சம் 'ஆராய்ஞ்சதில்' குறைஞ்சது ஒரு புத்தகம் வெளியிட்டு இருந்தால் அவர் எழுத்தாளர் என்ரு அ(ரி)றியப்படுவாராம்.//

    அம்மா,

    எழுத்தாளர் என்ற அடைமொழிக்கு புக்கு போட்டால் மட்டும் போதாது வரலாற்று(றை) ஆய்(வு) செய்து ஒரு நூல் வெளி இட வேண்டும். அப்போது தான் எழுத்தாளர்களிடையே மதிக்கப்படுவார்கள்

    பதிலளிநீக்கு
  10. //Robin said...

    பெரும்பாலான பதிவுகள் தரமற்றவை என்பது உண்மையே. இன்னொரு பக்கம் பார்த்தால் எழுதத் தொடங்குபவர்களுக்கு திரட்டிகள் வழங்கும் வாய்ப்புகள் பாராட்டப்படவேண்டிய விஷயம். ஆனால் ஜெயமோகனின் விஷப் பதிவுகளைவிட தமிழ்மனத்தில் வரும் பதிவுகள் எவ்வளவோ மேல்.//

    அவங்க கட்டமைப்பு அல்லது குற்றச் சாட்டு வலைப்பதிவாளர்கள் எழுத்து என்பதன் தகுதி அறிந்து எழுத வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போல.

    பதிலளிநீக்கு
  11. //♠ ராஜு ♠ said...

    ஹய்யா..வாங்க..வாங்க..இன்னைக்கு கோவி அண்ணனோட ப்ளாக்கு...//

    அவரு சொன்னதை நிரூபனம் செய்ய முயற்சி செய்றிங்க, நீங்க அபிமான அவரோட வாசகராத்தான் இருக்கனும்.
    :)

    பதிலளிநீக்கு
  12. //சென்ஷி said...

    :)

    கேபிள் அண்ணே.. ஜெமோ மிச்சப்படுத்தின 10 விழுக்காடுல அவரோட தளமும் சேர்ந்திருக்கும்.//

    விழுக்காட்டைக் கூட்டச் சொல்லி வலைப்பதிவாளர்கள் சார்பில் அமீரகத்தில் ஒரு உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யுங்கள்

    பதிலளிநீக்கு
  13. //வரலாற்று(றை) ஆய்(வு) செய்து ஒரு நூல் வெளி இட வேண்டும். //

    விடிஞ்சது போங்க!

    பதிலளிநீக்கு
  14. //
    விழுக்காட்டைக் கூட்டச் சொல்லி வலைப்பதிவாளர்கள் சார்பில் அமீரகத்தில் ஒரு உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யுங்கள்//

    பிரியாணி சாப்பிட வேணும்னா கூட்டத்தை கூட்ட முடியும். உண்ணா விரதத்துக்கெல்லாம் ஆள் சேர்க்க முடியாது. வேணும்னா ஒரு ரெண்டு நாளைக்கு ஆசிப் அண்ணாச்சியை சாப்பிட வேணாம்னு சொல்லிப் பார்க்கறேன் :)

    பதிலளிநீக்கு
  15. ரெம்ப சரியாய் எழுதி இருக்கீங்க.

    //அடுத்தக்கட்ட எழுத்தாளர் அவதாரம் எடுக்க வேண்டும் என்று எண்ணி எழுதுபவர்கள் குறைவு. ஏனெனில் எழுத்து என்பது பல வலைபதிவர்களுக்கு தொழில் கிடையாது.//

    //வலைப்பதிவுகள், இணைய எழுத்துகள் அனைத்தையுமே பொதுப்படுத்திவிட முடியாது, பொதுவிலும் அடங்காது,யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை, கட்டுப்பாட்டிலும் வராது.//

    அப்படியே என்னோட நிலையின் பிரதிபலிப்பு. திருப்பி சொல்கிறேன். ரெம்ப சரியாய் எழுதி இருக்கீங்க!!

    பதிலளிநீக்கு
  16. தமிழ்ப்பதிவர்கள் பெரும்பாலும் பொழுதுபோக்காகவே எழுதுகிறார்கள். ஆனாலும் இன்று தமிழ் சார்ந்த இணையத்தில் பல புரட்சிகள் அவர்களால்தான் நிகழ்கின்றன. திரைப்படங்களையே எடுத்துக்கொள்ளலாம். பல நல்ல, ஆனால் அடையாளம் காணப்படாத திரைப்படங்களை ஏற்றிவிட்ட பெருமை வலைப்பதிவர்களையே சாரும். அதே நேரம் ஊடகங்களால் ஏற்றிவைக்கப்பட்ட பலதை குழிதோண்டிப் புதைத்ததும் நாங்கள்தான். காரணம் பதிவுகள் பெரும்பாலும் காமன் மேன்களின் பார்வை. விதிவிலக்குகளை விட்டுவிடுவோம். மற்றவற்றால் பதிவர்கள் இன்று அதிகம் கவனிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

    பதிலளிநீக்கு
  17. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தைத் தங்களுடைய அனுபவத்தில், அல்லது தங்களுக்கு சரி எனப் படுவதை, அல்லது, தாங்கள் சார்ந்திருக்கும் ஒரு குழு அல்லது மந்தை என்ற அடிப்படையில் தான் பார்க்கிறார்கள், சொல்கிறார்கள்.

    ஜெமோ கருத்து அவருக்கு, வேறுவிதமாக நினைப்பது உங்களுக்கு! இப்படிப் பலவிதமாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே!

    ஆனால் 'எல்லாமே நாங்க தான்' என்று திரு சுபாங்கன் சொல்லியிருந்ததைப் படித்தவுடன் சிரிக்காமல் இருக்க முடியவில்லை!

    "புரட்சி!" என்ன புடலங்காய் புரட்சி?
    தேநீர் குடிக்குற கப்புலே சுனாமி வந்ததுன்னு சொல்றமாதிரி?

    பதிலளிநீக்கு
  18. எல்லாமே நாங்கதான் என்று சொல்லவில்லை நண்பரே, நாங்களும் கவனிக்கப்படுகிறோம் என்பதையே கூறினேன். பதிவுகளால்தான் இன்று ஏழைசொல்லும் கொஞ்சம் அம்பலம் ஏறுகின்றது.

    பதிலளிநீக்கு
  19. // சென்ஷி said...

    //
    விழுக்காட்டைக் கூட்டச் சொல்லி வலைப்பதிவாளர்கள் சார்பில் அமீரகத்தில் ஒரு உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யுங்கள்//

    பிரியாணி சாப்பிட வேணும்னா கூட்டத்தை கூட்ட முடியும். உண்ணா விரதத்துக்கெல்லாம் ஆள் சேர்க்க முடியாது. வேணும்னா ஒரு ரெண்டு நாளைக்கு ஆசிப் அண்ணாச்சியை சாப்பிட வேணாம்னு சொல்லிப் பார்க்கறேன் :)//

    ஆசிப் அண்ணாச்சி மேல நீங்க காண்டாக இருக்கிங்க. பாவம் அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  20. //
    அப்படியே என்னோட நிலையின் பிரதிபலிப்பு. திருப்பி சொல்கிறேன். ரெம்ப சரியாய் எழுதி இருக்கீங்க!!//

    பாராட்டுக்கு நன்றி செந்தில் நாதன்

    பதிலளிநீக்கு
  21. //மற்றவற்றால் பதிவர்கள் இன்று அதிகம் கவனிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

    2:18 PM, December 01, 2009//

    இதுபற்றி பரவலாக எல்லோரும் குறிப்பிடுகிறார்கள்.

    நன்றி சுபங்கன்

    பதிலளிநீக்கு
  22. //"புரட்சி!" என்ன புடலங்காய் புரட்சி?
    தேநீர் குடிக்குற கப்புலே சுனாமி வந்ததுன்னு சொல்றமாதிரி?

    2:52 PM, December 01, 2009//

    :) தேனீர் கப்பில் எழுமிச்சை சேர்த்து குடித்தால் வயிற்றுக்குள் கடமுட சுனாமி அடங்கிடும்னு சொல்லுவாங்க !

    பதிலளிநீக்கு
  23. ஜெமோ சொல்வது கிட்டத்தட்ட சரிதான் , கருப்பு காலத்தில் தமிழ்மணம் எப்படி இருந்தது , காழ்ப்பை தவிர வேறெதும் கண்ணுக்கே தெரியாதே ,

    இன்று நிலமை பரவாயில்லை , தமிழிஸ் வந்தபிறகு வெறுப்பு பதிவுகளை தவிர பிறவும் கண்ணில் படுகின்றன ,

    உதாரணமாக கணினி சம்பந்தமான பதிவுகள்

    பதிலளிநீக்கு
  24. நல்ல கருத்துக்கள். நல்ல விளக்கம். ஆனா என்னைப் பொறுத்த வரையில் நான் முட்டாளாக இருந்தால் அடுத்தவரை முட்டாள் என்று சொல்வேன். நான் எழுதுவது குப்பை என்று நான் நினைத்தால் அடுத்தவனைக் குப்பை என்று கூறி பெருமைப் பட்டுக் கொள்வேன். அப்படின்னு நினைத்து விட்டுப் போக வேண்டியதுதான். நன்றி. மனத்தளவே உயருமாம் நீராம்பல் குணத்தளவே வளரும்மாம் மாண்பு.

    பதிலளிநீக்கு
  25. //மற்றவற்றால் பதிவர்கள் இன்று அதிகம் கவனிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.//

    என் கருத்தும் இதுதான்.

    பதிலளிநீக்கு
  26. ம்ம்ம்ம்ம் ஜெயமோகன் அவரது கருத்தினை - இணையம் என்ற பொதுச் சொல்லில் - குறிப்பாக தமிழ்ப் பதிவுகளைத்தான் குப்பை எனக்கூறுகிறார். அவர் எதிர்பர்ர்ப்பது பதிவர்கள் கடைப்ப்டிக்க வேண்டும் என நினைக்கிறார். அது இயலாத செயல்.

    பதிலளிநீக்கு
  27. //மதி.இண்டியா said...

    ஜெமோ சொல்வது கிட்டத்தட்ட சரிதான் , கருப்பு காலத்தில் தமிழ்மணம் எப்படி இருந்தது , காழ்ப்பை தவிர வேறெதும் கண்ணுக்கே தெரியாதே ,

    இன்று நிலமை பரவாயில்லை , தமிழிஸ் வந்தபிறகு வெறுப்பு பதிவுகளை தவிர பிறவும் கண்ணில் படுகின்றன ,

    உதாரணமாக கணினி சம்பந்தமான பதிவுகள்//

    ஐயா, நீங்கள் ஜெமோ குறிப்பிடும் 10 விழுக்காட்டில் ஒருவர், ஏனென்றால் உங்கள் வலைப்பதிவில் பதிவுகளே இல்லை :)

    பதிலளிநீக்கு
  28. //பித்தனின் வாக்கு said...

    நல்ல கருத்துக்கள். நல்ல விளக்கம். ஆனா என்னைப் பொறுத்த வரையில் நான் முட்டாளாக இருந்தால் அடுத்தவரை முட்டாள் என்று சொல்வேன். நான் எழுதுவது குப்பை என்று நான் நினைத்தால் அடுத்தவனைக் குப்பை என்று கூறி பெருமைப் பட்டுக் கொள்வேன். அப்படின்னு நினைத்து விட்டுப் போக வேண்டியதுதான். நன்றி. மனத்தளவே உயருமாம் நீராம்பல் குணத்தளவே வளரும்மாம் மாண்பு.//

    சரி சரி மலை யேறுங்கள் ஐ மீன் சபரி மலைக்கு போவதாக எழுதினிங்களே !

    பதிலளிநீக்கு
  29. //நாடோடி இலக்கியன் said...

    //மற்றவற்றால் பதிவர்கள் இன்று அதிகம் கவனிக்கப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.//

    என் கருத்தும் இதுதான்.//

    மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  30. // cheena (சீனா) said...

    ம்ம்ம்ம்ம் ஜெயமோகன் அவரது கருத்தினை - இணையம் என்ற பொதுச் சொல்லில் - குறிப்பாக தமிழ்ப் பதிவுகளைத்தான் குப்பை எனக்கூறுகிறார். அவர் எதிர்பர்ர்ப்பது பதிவர்கள் கடைப்ப்டிக்க வேண்டும் என நினைக்கிறார். அது இயலாத செயல்.//

    பெரியவர், மூத்தப் பதிவர் என்கிற முறையில் உங்கள் கருத்து இங்கே மிக முதன்மையானது. நன்றி !

    பதிலளிநீக்கு
  31. //மணிகண்டன் said...

    ஜெமோ வாழ்க ! :)-//

    உங்க பேரில் மணி தானே இருக்கு !
    :)

    பதிலளிநீக்கு
  32. "புரட்சி!" என்ன புடலங்காய் புரட்சி?
    தேநீர் குடிக்குற கப்புலே சுனாமி வந்ததுன்னு சொல்றமாதிரி

    நீங்கள் சொல்ல வந்த கருத்தின் மொத்த மொழிக்கான நடையும், தெளிவான கோர்வையும் மிக அற்புதம்.

    மேலும் மேலே உள்ள வாசகம், துளசி கோபால் சொன்ன வார்த்தைகள் மூலம் நிறைய கற்றுக்கொள்ள வைத்தார்கள்.

    நீங்கள் சொன்னது, சொல்ல வருவது எல்லாமே என்னைப் போன்றவர்களுக்கு புதிது.

    ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கி உள்ளே நுழைந்து வெளியே வந்தால் ஒரு நூற்றாண்டு சண்டை போல பயம் தருகிறது.

    நீங்கள் சொன்னது சரிதான்.

    தன்னை இறக்கி வைத்துக்கொள்வது.
    தன்னை அலசிப்பார்க்க உதவுவது
    தன் எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள உதவுவது.

    ஆனால் துளசி கோபால் சொன்ன ஆய், கொளுகை சிரிப்பை வரவழைத்தாலும் யோசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  33. ஆஹா, திரும்ப ஆரம்பிச்சிட்டாங்களா? இந்த தரம் பிரிக்கிற வேலையை யாரப்பா கொடுத்தா? ஆமாம், ஆங்கில வலைப்பதிவர்கள் எல்லாம் கோடிக்கனக்கா இருக்காய்ங்க, அவன் அவனும் வெகு ஜன ஊடகங்களுக்கு ஆப்படிக்கிற வேலையை கன ஜோரா செஞ்சிட்டு வாராய்ங்க, அதெல்லாம் பார்த்து இவிங்களுக்கும் "கிலி" பிடிச்சிருச்சோ?? :))

    நான் நினைச்சிட்டு இருக்கேன், பேனா, காகிதம் பிடிச்சு எழுதுற இப்போ மென் பொருள் எழுதுற கணினி ஆளுங்க கூட "எழுத்தாளர்கள்" தான்னு... அப்போ அப்படி இல்லையா ;-)

    pin குறிப்பு:D : இத எழுதும் பொழுது சுய நினைவோடும், புத்தியிலும் இருந்தே என் கருத்தா சொல்லுறேன்.

    *துள்சிம்மா சொன்ன, வெகு ஜன ஊடகங்களின் கொளுகைகளே வேற வேற... ரொம்ப சத்தியமான வும்மைங்க

    பதிலளிநீக்கு
  34. //Thekkikattan|தெகா said...
    ஆஹா, திரும்ப ஆரம்பிச்சிட்டாங்களா? இந்த தரம் பிரிக்கிற வேலையை யாரப்பா கொடுத்தா? ஆமாம்,
    //

    நான்கு படம் நடித்தவர்கள் நாளைய முதல்வர் ஆகும் போது 40 புத்தகங்களுக்கு, 4000 கடிதங்களுக்கு மேல எழுதிய இலக்கியவாதி ஜெ தரம் பிரித்து சொல்லுவதில் என்ன தப்புங்கிறேன்.
    :)

    பதிலளிநீக்கு
  35. ஜெயமோகனின் கயமைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்பிராஜநாயஹம் அவர்களின் வலைப் பதிவில் படியுங்கள்.http://rajanayahem.blogspot.com

    பதிலளிநீக்கு
  36. //ஒவ்வொரு இணைப்பையும் சொடுக்கி உள்ளே நுழைந்து வெளியே வந்தால் ஒரு நூற்றாண்டு சண்டை போல பயம் தருகிறது.//

    :)

    நன்றி ஜோதிஜி !

    //நீங்கள் சொன்னது சரிதான்.

    தன்னை இறக்கி வைத்துக்கொள்வது.
    தன்னை அலசிப்பார்க்க உதவுவது
    தன் எழுத்து திறமையை வளர்த்துக்கொள்ள உதவுவது.//

    அவரு(ஜெ) திமிங்கிலம் பிடிப்பவர், இறால் தான் பிடிக்கிறார்கள் என்று கிண்டல் அடிக்கிறார்.

    பதிலளிநீக்கு
  37. //திண்டுக்கல் சர்தார்12818834628383879881 said...

    ஜெயமோகனின் கயமைகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்பிராஜநாயஹம் அவர்களின் வலைப் பதிவில் படியுங்கள்.http://rajanayahem.blogspot.com//

    கயமை என்று சொல்லமாட்டேன். அறிவு ஜீவிகள் ஆகிவிட்டால் அடுத்த கடமையாக அவர்கள் நினைப்பது சமூகத்துக்கு (இயன்றவரை) அறிவுரை ஆற்றுவது, ஜெ ஒருவேளை தன்னை அப்படி நினைக்கிறாரோ.

    பதிலளிநீக்கு
  38. //இரா. வசந்த குமார். said...

    test fb...//

    வெற்றி வெற்றி வெற்றி !

    பதிலளிநீக்கு
  39. கோவி,

    நல்ல கருத்து, ஆனால் பதிவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்ப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சுபாங்கன் அவர்கள் சொன்னதுபபோல் அதிகம் எதிர்பார்ப்பதன் முலம் 1000தில் 2 பதிவர்கள் அடுத்தகட்டத்தை அடைவதற்கு ஒரு தூண்டுகோலக இருக்கலாம் அல்லவா?

    திவாகர்

    டிஸ்கி: முதல் முறை தமிழில் தட்டச்சுகிறேன். பெரிய போரட்டத்துக்கு பிறகு... :)

    பதிலளிநீக்கு
  40. // DiwakarN said...
    கோவி,

    நல்ல கருத்து, ஆனால் பதிவர்களிடம் இருந்து அதிகமாக எதிர்பார்ப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. சுபாங்கன் அவர்கள் சொன்னதுபபோல் அதிகம் எதிர்பார்ப்பதன் முலம் 1000தில் 2 பதிவர்கள் அடுத்தகட்டத்தை அடைவதற்கு ஒரு தூண்டுகோலக இருக்கலாம் அல்லவா?

    திவாகர்

    //

    திவாகர், தமிழில் தட்டச்சு செய்து பின்னூட்டம் இடுவதற்கு மகிழ்ச்சி மற்றும் பாராட்டுகள்.

    தமக்கு தேவையற்றதும் அங்கே இருக்கிறது என்பதற்காக பல்பொருள் கடைகளில் குப்பைகளும் நிறைந்துள்ளதாகக் கூற முடியாது.

    ஆக்கங்கள் அனைத்தும் மக்கள் தொகை போல, சிறப்பாக இருப்பது மட்டுமே சிலையாக மாறும், அது பற்றி மிகுதியாக கவலை கொள்ளத் தேவை இல்லை :)

    பதிலளிநீக்கு
  41. என்னடா கொஞ்ச நாளா இணையத்துல நம்மை பற்றியே எழுத மாட்டேங்கிறாங்க சாரு பற்றி எழுதி பட்டைய கிளப்புறாங்களே அப்படிங்கிற வருத்தத்தில் அப்படி சொல்லியிருப்பார்.

    அவருடைய ஆசையை புரிந்து கொண்டு அவரைப்பற்றி பதிவிட்ட கோவி அண்ணனுக்கும் பின்னூட்டமிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ஆனா தலைப்புல அவரு பேர் வந்திருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பார்.

    எல்லாம் சரி நாம எப்படி எழுதனும்னு எதிர்பார்க்கிறார்.

    பதிலளிநீக்கு
  42. இது அங்கதம் (சரிதானே) என்ற நகைச்சுவை வகையை சார்ந்தது யாரையும் புண்படுத்த அல்ல.

    பதிலளிநீக்கு
  43. கோவியாரே,

    நீங்கள் கூறுவது சரியே, அனைத்து இடத்திலும் நல்லது கெட்டது இரண்டும் சேர்ந்தே இருக்கும். நல்லதை பாராட்டும் பொழுது கெட்டதை பற்றி கவலை படத்தேவை இல்லை என்று கூறமுடியாதே. யாரவது கவலை பட்டுக்கொண்டுதான் இருப்பார்கள். இந்த ஒரு எழுத்தினால் மாறுபவர்கள் இருந்தால் மாறிவிட்டு போகிறார்கள். இல்லை என்றால் உதாசினப்படுத்த வேண்டியதுதான்.

    இதில் உள்ள கருத்து வேற்றுமை உங்கள் பார்வையில் அது பல் பொருள் அங்காடியாகவும் அவர் பார்வையில் சிப்பிக்களும் முத்துமாக இருக்கிற‌து என்று நினைக்கிறேன். ஆயிரம் (?) சிப்பியை உடைத்தல் 1 அல்லது 2 முத்துக்கள் கிடைக்கிறது. அவரின் எதிர்பார்ப்பு 1000 சிப்பியை உடைத்தால் 900 முத்துக்கள் என்றால் இருக்கட்டுமே, பதிவுகளில் எழுதும் போது அனைவரது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் அல்லவா? இல்லை என்றால் ஒரு நாட்குறிப்பு போதுமே?

    அதுவுமல்லாமல் பதிவுகளால் சாதனை செய்யபட்டு இருக்கிறது அல்லவா? அவரின் கருத்து அதை ஏன் விணடிக்கவேண்டும் என்பதாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். 2+2 கூட்டுவதற்கு கணினியின் அவசியம் என்ன? ஆனால் அதை செய்யக்கூடியவர்கள் இருப்பார்கள் என்பதை மறுப்பதற்க்கு இல்லை.

    டிஸ்கி: "மறுப்பதற்க்கு" என்பதில் உள்ள எழுத்து பிழை அது ஏன் இருக்ககூடாது என்பதற்(க்)கான காரணத்தை அறிந்துகொள்ள விடப்பட்டுலள்ளது. எனக்கு இதற்(க்)கான விடையை அறிந்துகொள்ள முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  44. //இதில் உள்ள கருத்து வேற்றுமை உங்கள் பார்வையில் அது பல் பொருள் அங்காடியாகவும் அவர் பார்வையில் சிப்பிக்களும் முத்துமாக இருக்கிற‌து என்று நினைக்கிறேன். ஆயிரம் (?) சிப்பியை உடைத்தல் 1 அல்லது 2 முத்துக்கள் கிடைக்கிறது. அவரின் எதிர்பார்ப்பு 1000 சிப்பியை உடைத்தால் 900 முத்துக்கள் என்றால் இருக்கட்டுமே, பதிவுகளில் எழுதும் போது அனைவரது கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் அல்லவா? இல்லை என்றால் ஒரு நாட்குறிப்பு போதுமே?
    //

    அவரு 1000 சிப்பியை உடைத்தாரா ? ஒரு பானை சோற்றில் ஒன்று போதுமென பதம் பார்த்தாரா என்பது அவருக்கே வெளிச்சம்

    பதிலளிநீக்கு
  45. மிகவும் ஆரோக்கியமான கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  46. //இன்று இணையத்தில் நமக்கு வாசிக்கக் கிடைப்பவற்றில் தொண்ணூறு விழுக்காடு குப்பையே. - ஜெமோ//

    உண்மை தான். அதே போல அச்சு இதழ்களில் வருபவற்றில் 96 விழுக்காடு குப்பை தான். அதை அவர் சொல்ல மறந்து விட்டார் :D

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !