3 செப்டம்பர், 2008

முதன் முதலாக வலையில் வலம் வரும் ஒரு செம்மொழி ..... !

தேவ பாஷை, கம்யூட்டர் ( லக்ன யந்த்ரா ?) பாஷை, மருத்துவ பாஷை மற்ற மொழிகளை ஒன்றாக இணைத்து ஒட்டும் பசை என்றெல்லாம் புகழ் பெற்ற வடமொழி எனப்படும் சமஸ்கிரதம் முதன் முதலாக (என்ன கொடுமை ?) இணையத்தில் நாளிதழாக வருகிறதாம். ஒரு செம்மொழி முதன் முறையாக இணையத்தில் ஏறுவது பெருமைக் குரியது தானே ?


தினமலர் பெருமையோடு தரும் இந்த செய்தியை உங்களுடன் பகிர்கிறேன் :

மைசூரு : பேச்சுவழக்கிலிருந்து அடியோடு அழிந்து விட்ட பழம்பெரும் மொழி சம்ஸ்கிருதத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிதழ் "சுதர்மா' இப்போது " இ - பேப்பராக' வெப்சைட்டில் வெளிவருகிறது.மைசூரிலிருந்து இரண்டு பக்கம் கொண்டதாக இந்த நாளிதழ் சில ஆண்டுகள் முன் ஆரம்பிக்கப்பட்டது. மைசூரை சேர்ந்த பிரபல சம்ஸ்கிருத பண்டிட் வரதராஜ அய்யங்கார், இந்த நாளிதழை நடத்தி வந்தார்.



கடந்த 1990 ல் அவர் மறைந்தபோது, அவர் மகன் சம்பத் குமார், மருமகள் ஜெயலட்சுமி இருவரும், அவருக்கு கொடுத்த வாக்குறுதி படி, பத்திரிகையை தொடர்ந்து நடத்தி வந்தனர்.மாத சந்தா 250 ரூபாய் வசூலித்தாலும், போதுமான அளவில் விளம்பரம் கிடைக்காததால் பத்திரிகையை நடத்த முடியாமல் திணறினர். அப்போது தான் அவர்களுக்கு வெப்சைட் யோசனை தோன்றியது.சமீபத்தில் வெப்சைட் ஆரம்பித்து அதில் "இ - பேப்பராக' சுதர்மாவை வெளியிட ஆரம்பித்தனர். மைசூரில் மட்டும் மூன்றாயிரம் பிரதிகள் விற்பனை ஆனது போய், இப்போது உலகம் முழுவதும் "இ - பேப்பரை' பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விளம்பரங்களும் வரத்துவங்கி விட்டன.

இந்த பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்கள் இந்துக்கள் தான். சம்ஸ்கிருதத்தை படிக்க அதில் அடிப்படை அறிவு வேண்டும். (அது பற்றிய எழுத்தறிவும், பொருள் புரிதலும் போதாதா ? அறிவுக்கு இதில் தொடர்பேது... ? இப்படித்தான் பெருமை பேசியே பொத்தி வச்சு அழிச்சிட்டாங்க... ) மொழி தெரியாமல் படிக்க முடியாது. இந்தவகையில் அச்சிட்டு தந்த பிரதிகளை விட, வெப்சைட்டில் அதிகம் பேர் பார்ப்பதும் தெரியவந்தது.பத்திரிகையில், மற்ற நாளிதழ்களில் வரும் செய்திகள் போல எல்லா துறை சம்பந்தப்பட்டதும் வெளியிடப்படுகின்றன. சம்ஸ்கிருத மொழியுடன் ஆங்கிலமும் சேர்த்து வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் யாரும் படிப்பதற்கு சுலபமாக இருக்கும்.


"அமெரிக்காவில் 10 லட்சம் இந்துக்கள், ஐரோப்பாவில் உள்ள 15 லட்சம் இந்துக்கள் மற்றும் ட்ரினிடாட், டுபாக்கோ (டுப்பாக்கூர் இல்லை), கென்யா உட்பட சில ஆப்ரிக்க நாடுகளிலும் எங்கள் பத்திரிகையை இந்துக்கள் பார்ப்பர் என்று எண்ணுகிறோம். "சம்ஸ்கிருதம் என்பது அறிவியல் மொழி. அதனால் பலரும் மீண்டும் சம்ஸ்கிருத மொழியை குழந்தைகளுக்கு கற்பித்து வருகின்றனர். அதனால், எங்கள் வெப்சைட்டுக்கு வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை' என்று சம்பத் குமார் கூறினார்.சம்ஸ்கிருத மொழியை வளர்ப்பதில் சம்ஸ்கிருத பாரதி உட்பட சில அமைப்புகள் சேவை செய்து வருகின்றன. இந்நிலையில், சம்ஸ்கிருத நாளிதழ் வெப்சைட்டில் வருவது இதுவே முதன் முறை. சம்ஸ்கிருத பத்திரிகையின் வெப்சைட் முகவரி: http://sudharma.epapertoday.com/

*****************************

சமஸ்கிரத பற்றாளர்கள் தேவ பாஷைக்கு சந்தா செலுத்தக் கூட மனமில்லாமல் ஏன் தான் வீண் பெருமை மட்டும் பேசுகிறார்களோ ? ஒரு மொழி உருவாவதற்கு குறைந்தது 500 ஆண்டுகளாவது ஆகும், சமஸ்கிரதமும் பழம்பெருமை வாய்ந்த மொழிதான். பவுத்தர்கள், சமணர்கள் தங்கள் இலக்கியங்களை பாலி மற்றும் சமஸ்கிரதத்தில் ஆக்கி வைத்திருக்கிறார்கள்.
சமஸ்கிரத ஆயுர்வேத குறிப்புகளில் பெளத்த / சமணர்களின் பங்கு மிகப் பெரியது. எந்த மொழியும் அழிகிற நிலைக்குச் செல்வதன் காரணம் அதைப் பேசும் மக்களின் பொறுப்பின்மையே. மொழிகளின் அழிவில் / ஆக்ரமிப்பில் நான் உடன்பட்டவன் அல்ல. எல்லா மொழிகளுமே உருவாக்குவதற்கு அரியவைகள் (பொக்கிஷங்கள்) தான். சமஸ்கிரத பற்றாளர்கள் தமிழைத் தூற்றுவதற்கு பதிலாக வடமொழியின் அழிவை காப்பாற்றுவதே அவர்களின் மொழிக்கு ஆற்றவேண்டிய மிகப் பெரிய சேவை.

கர்மண்யேவ அதிகாரஸ்தே ! ( அதைச் செய்ய மட்டுமே உனக்கு உரிமை இருக்கு)

இந்திய அரசு சமஸ்கிரத வளர்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவளிக்கிறது என்று சொல்கிறார்கள். அதை வைத்து சமஸ்கிரதத்தில் ஒரு நாளிதழ் கூட வழங்க முடியவில்லை என்றால்....பருப்பும், நெய்யும் விலை உயர்ந்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது.... ...ஹூம்

ஆங்கிலத்தில் 'வெப்சைட்டு' என்பதற்கு....தமிழில் இணையதளம் என்று யாராது தினமலருக்கு காயிதம் போடுங்கோ....... :)

16 கருத்துகள்:

  1. சரியா சொல்லியிருக்கீங்க. புரிஞ்சுகிட்டா சரி.
    சம்ஸ்கிருதம் உட்பட எந்த மொழியும் அழியக்கூடாது. வளரத்தான் வேண்டும். ஆனால் வளர்ச்சி என்பது சுயமாக இருக்க வேண்டுமே தவிர வேறு ஒன்றை அழித்து அல்ல.

    பிறது கோட்டை அழிக்காமல் தங்கள் கோட்டை பெரிதாக்க முயல வேண்டும். சமஸ்கிருதத்தை எல்லோரும் கற்றால் கோயில்களில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் எல்லோருக்கும் புரிந்துவிடும் என்பதால்தான் அதை மற்றவர்கள் கற்க விடாமல் செய்கிறார்கள் என்று ஒருவர் சமஸ்கிருதத்தின் அழிவை குறித்து பேசும்போது சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மையெனத் தெரியவில்லை. கோயிலில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தங்கள் மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன தவறு ? கிறிஸ்தவ மதம் இந்த அளவுக்கு உலகம் முழுவதும் பரவியதற்கு முதல் காரணமே வழிபாடுகளை அந்தந்த பிராந்திய மொழிகளிலேயே செய்வதுதான். ஆலயங்களில் சொல்லப்படும் அத்தனை செபங்களின் அர்த்தமும் எனக்கு தெரியும். ஆனால் கோயில்களில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் எத்தனை பேருக்குத் தெரியும்?

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்து கோவி.கண்ணன். பாராட்டுக்கள்.

    //ஒரு செம்மொழி முதன் முறையாக //

    அப்போ தமிழ் செம்மொழி இல்லையா? தமிழ் செம்மல் கனிமொழி சொன்னாங்களே!!!

    //.மாத சந்தா 250 ரூபாய் வசூலித்தாலும்//
    அப்படி போடு அருவாள‌

    //பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விளம்பரங்களும் வரத்துவங்கி விட்டன.
    //
    போடுறா இன்னொரு அருவாள‌

    //இந்த பத்திரிகையின் பெரும்பாலான வாசகர்கள் இந்துக்கள் தான். //
    என்னா கண்டுபிடிப்புடா சாமி

    //மொழி தெரியாமல் படிக்க முடியாது//
    கண்டுபிடிப்பு நெம்பர் 2. ப்ரெஞ்ச் நாளிதழ் படிக்க ப்ரெஞ்ச் தெரிய வேண்டியதில்லையா என்னா?

    // எந்த மொழியும் அழிகிற நிலைக்குச் செல்வதன் காரணம் அதைப் பேசும் மக்களின் பொறுப்பின்மையே.//
    100% ச‌ரி. நாளைக்கு த‌மிழ் அந்த‌ நிலைக்கு போன‌துனா நாம‌ எல்லாருமே ஒருவித‌த்துல‌ கார‌ண‌மா இருப்போம் (ஒருவேளை நானெல்லாம் வ‌லைப்பூ எழுத‌ற‌து கூட‌ கார‌ண‌மாக‌லாம், பாத்துகோங்க‌)

    //இந்திய அரசு சமஸ்கிரத வளர்ச்சிக்கு கோடிக் கணக்கில் செலவளிக்கிறது என்று சொல்கிறார்கள்//

    அடங்கொய்யால... இந்த கணக்குல வேற சாப்புடுறாங்களா...

    பதிலளிநீக்கு
  3. //வெண்பூ said...
    அருமையான கருத்து கோவி.கண்ணன். பாராட்டுக்கள்.

    //ஒரு செம்மொழி முதன் முறையாக //

    அப்போ தமிழ் செம்மொழி இல்லையா? தமிழ் செம்மல் கனிமொழி சொன்னாங்களே!!!

    //

    வெண்பூ,

    தமிழ் செம்மொழி என்பதும் லட்சக்கணக்கில் இணையபக்கங்கள் இருப்பதும் தெரிந்தது தானே. சமஸ்கிரதம் செம்மொழி தகுதி கொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.இப்பொழுதுதான் முதன் முதலில் நாளிதழ் வருகிறதாம் !

    //அடங்கொய்யால... இந்த கணக்குல வேற சாப்புடுறாங்களா...

    1:01 PM, September 03, 2008//

    எங்க ஊர் பத்ரி அண்ணன் பதிவில் எழுதி இருக்கார் பாருங்கோ

    பதிலளிநீக்கு
  4. மிகவும் சரியா சொன்னிங்க கண்ணன்.சம்ஸ்கிருதம் அழிவதற்கும், அழிந்து வருவதற்கும் , அதை பேசுபவர்கள்தான் காரணம்.. சாதரணமாக விருப்பபட்ட எல்லொருக்கும் அவர்கள் சொல்லித் தருவதுமில்லை.. மொழியின் பெறுமையை மட்டும் சொல்லி பிதட்டுவதை பார்த்துள்ளேன்..

    பதிலளிநீக்கு
  5. //ஜோசப் பால்ராஜ் said...
    சரியா சொல்லியிருக்கீங்க. புரிஞ்சுகிட்டா சரி.
    சம்ஸ்கிருதம் உட்பட எந்த மொழியும் அழியக்கூடாது. வளரத்தான் வேண்டும். ஆனால் வளர்ச்சி என்பது சுயமாக இருக்க வேண்டுமே தவிர வேறு ஒன்றை அழித்து அல்ல.
    //

    பால்ராஜ்,
    உங்கள் கருத்து மிகச் சரி ! பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  6. //ஆ.ஞானசேகரன் said...
    மிகவும் சரியா சொன்னிங்க கண்ணன்.சம்ஸ்கிருதம் அழிவதற்கும், அழிந்து வருவதற்கும் , அதை பேசுபவர்கள்தான் காரணம்.. சாதரணமாக விருப்பபட்ட எல்லொருக்கும் அவர்கள் சொல்லித் தருவதுமில்லை.. மொழியின் பெறுமையை மட்டும் சொல்லி பிதட்டுவதை பார்த்துள்ளேன்..
    //

    கருத்துக்கு நன்றி ஞானசேகரன் !

    பதிலளிநீக்கு
  7. அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

    ஒரு மொழி அழிக்கப்பட்டால் ஒரு யுகமே அழிக்கப்படுகிறது. அந்த யுகத்தின் எதுவும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது.

    இன்று தமிழை இந்த அளவுக்கு நாம் காப்பாற்றியே இன்னும் சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மொழியின் ஒருசில சொற்கள் அழிக்கப்படுவதாலேயே இந்த அளவுக்கு இழப்பு இருக்கும்போது, ஒரு மொழியே அழிக்கப்பட்டால்? இழப்பு அந்த மொழியினருக்கு மட்டுமல்ல அகில உலகத்தவருக்கும் தான்.

    கருத்தை மட்டும் சொல்லாமல் அந்த ஒரே ஒரு சமஸ்கிருத வளைதளத்தின் சுட்டியையும் கொடுத்துள்ள உங்களின் நடுநிலை மனபான்மைக்கு, ஒரு தமிழன் என்ற முறையில் எனது பெருமையான வணக்கங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஒரு மொழி அழியரத யாராலையும் தடுக்க முடியாது. அது அந்த காலகட்டத்துல உள்ள சமுதாய மாற்றத்துக்கு ஏற்றவாறே அமையும்.

    இந்தியாவுல உள்ள பிராமன சமுதாயம் மட்டும் பேசி வந்த மொழின்னு சொல்றாங்க. அந்த சமுதாயம் எதிர்கால முன்னேற்றத்துக்கு (ஆதிக்கம்) ஆங்கிலத்துக்கு மாறிட்டாங்க. சமஸ்க்ருதத்த மொழிய ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு ஆராய்ச்சியாளர்கள் இருந்தா போதுமானது.

    நான் பெங்களூர்ல பல வருடங்கள் இருந்து இருக்கேன். அடுத்ததா போக போற மொழி கன்னடம் தான். அதுனால தானா என்னவோ அதையும் செம்மொழியாக்க முயற்சி பண்றாங்க.

    பதிலளிநீக்கு
  9. சமஸ்கிருதம் இன்றளவில்...+2 மாணவர்கள் மதிப்பெண் அதிகம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்கக்கூடிய மொழியாக மட்டுமே இருந்து வருகிறது(இதில் 100க்கு 100 வாங்கலாம்.தமிழில் முடியாதே).

    பதிலளிநீக்கு
  10. //ஆங்கிலத்தில் 'வெப்சைட்டு' என்பதற்கு....தமிழில் இணையப்பக்கம் / வலைப்பக்கம்' என்று யாராது தினமலருக்கு காயிதம் போடுங்கோ....... :)//

    ரிப்பீட்டேய்

    பதிலளிநீக்கு
  11. ///அறிவகம் said...
    அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

    ஒரு மொழி அழிக்கப்பட்டால் ஒரு யுகமே அழிக்கப்படுகிறது. அந்த யுகத்தின் எதுவும் நம்மால் அறிந்து கொள்ள முடியாது. //

    அறிவகம், மிக நன்றாக சொல்லி இருக்கிறீர்கள், உடன்படுகிறேன். பாராட்டுக்கள் !

    //இன்று தமிழை இந்த அளவுக்கு நாம் காப்பாற்றியே இன்னும் சித்தர்களின் பாடல்களுக்கு விளக்கம் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஒரு மொழியின் ஒருசில சொற்கள் அழிக்கப்படுவதாலேயே இந்த அளவுக்கு இழப்பு இருக்கும்போது, ஒரு மொழியே அழிக்கப்பட்டால்? இழப்பு அந்த மொழியினருக்கு மட்டுமல்ல அகில உலகத்தவருக்கும் தான். //

    சமஸ்கிரத புழக்கம் குறைந்ததற்குக் காரணமே 'புனிதம்' கற்பித்து பிறர் கற்கவிடாமல் செய்துவிட்டனர். தொடர்புகள் வளராமல் முடங்கிவிட்டது. இனிமேல் பொதுப் புழக்கத்திற்கு கொண்டுவருவது கடினம். பேசப்படும் மொழிகள் தான் அழியாமல் இருக்கும்.

    //கருத்தை மட்டும் சொல்லாமல் அந்த ஒரே ஒரு சமஸ்கிருத வளைதளத்தின் சுட்டியையும் கொடுத்துள்ள உங்களின் நடுநிலை மனபான்மைக்கு, ஒரு தமிழன் என்ற முறையில் எனது பெருமையான வணக்கங்கள். நன்றி.

    4:06 PM, September 03, 2008
    //

    மிக்க நன்றி ! நான் எந்த மொழிகளையும் வெறுப்பது இல்லை. அவர்கள் நம்மை தூற்றும் போது அவர்களை சில சமயம் எதிர்த்துக் கேட்கவேண்டி இருக்கிறது. தமிழுக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த மொழி கன்னடம். கன்னடர்களின் குழந்தைகள் கன்னடம் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு இனிமை இருக்கும்.

    பதிலளிநீக்கு
  12. //அவனும் அவளும் said...
    ஒரு மொழி அழியரத யாராலையும் தடுக்க முடியாது. அது அந்த காலகட்டத்துல உள்ள சமுதாய மாற்றத்துக்கு ஏற்றவாறே அமையும்.//

    மொழி அழிவது அந்த மொழியைத் தாய்மொழியாக உடையவர்களின் பெறுப்பின்மைதான். வீட்டிற்குள் பேசப்படாத தாய்மொழி காணாமல் போகும்.

    //இந்தியாவுல உள்ள பிராமன சமுதாயம் மட்டும் பேசி வந்த மொழின்னு சொல்றாங்க. //

    பார்பனர்கள் வீட்டுக்குள் பேசிவந்தார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை, அது நூல்களை எழுதப் பயன்பட்டுவந்த மொழிதான்.

    //சமஸ்க்ருதத்த மொழிய ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு ஆராய்ச்சியாளர்கள் இருந்தா போதுமானது.//

    இப்படியே போனால் இன்னும் கொஞ்சநாள் சமஸ்கிரத மொழி குறித்த ஆராய்ச்சி மட்டும் தான் நடக்கும் போல :(

    //நான் பெங்களூர்ல பல வருடங்கள் இருந்து இருக்கேன். அடுத்ததா போக போற மொழி கன்னடம் தான். அதுனால தானா என்னவோ அதையும் செம்மொழியாக்க முயற்சி பண்றாங்க.

    4:21 PM, September 03, 2008
    //

    பெங்களூர், கர்நாடகாவில் இந்தி ஆதிக்கம் செலுத்துகிறது. நீங்கள் சொல்வது போல் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

    பதிலளிநீக்கு
  13. //kanchana Radhakrishnan said...
    சமஸ்கிருதம் இன்றளவில்...+2 மாணவர்கள் மதிப்பெண் அதிகம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் படிக்கக்கூடிய மொழியாக மட்டுமே இருந்து வருகிறது(இதில் 100க்கு 100 வாங்கலாம்.//

    இராதகிருஷ்ணன் ஐயா, மாணவன் எழுதிய பதில் ஆசிரியருக்கு தெரியாது இருந்தால் அதற்கு அவர் முழுமதிப்பெண் போட்டுத்தானே ஆகனும் !
    :)

    பதிலளிநீக்கு
  14. //வடகரை வேலன் said...
    //ஆங்கிலத்தில் 'வெப்சைட்டு' என்பதற்கு....தமிழில் இணையப்பக்கம் / வலைப்பக்கம்' என்று யாராது தினமலருக்கு காயிதம் போடுங்கோ....... :)//

    ரிப்பீட்டேய்

    3:20 AM, September 04, 2008
    //

    நன்றி அண்ணாச்சி !

    பதிலளிநீக்கு
  15. தம் அன்றாட அவசர வேலக்கிடையே அலைகடல் போல் அலையும் நம் மனது அமைதியடைய, மகிழ்ச்சியுடன் இருக்க தினமும் கேளூங்கள் பாலு அவர்களின் தேனினும் இனிமையான குரலில் லிங்காஷ்டகம்.

    ஓம் நமச்சிவாயா

    ப்ரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
    சிறிதும் கலங்கம் இல்லா சிவ லிங்கம்
    பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
    நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

    தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
    காமனை எரித்த கருனா லிங்கம்
    ராவண உள்ளம் விலங்கிடும் லிங்கம்
    நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

    வாசம் அனைத்தையும் பூசிய லிங்கம்
    வளர் அறிவாகிய காரண லிங்கம்
    சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
    நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

    பொன்மணி சூடி சுடர்ந்திடும் லிங்கம்
    தன்னிலை நாகம் அணிந்திடும் லிங்கம்
    தக்ஷனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
    நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

    குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
    பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
    முந்திய வினைகளை போற்றிடும் லிங்கம்
    நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

    தேவர் கனங்களின் அர்ச்சன லிங்கம்
    தேடிடும் பக்தியின் ஊறிடும் லிங்கம்
    சூரியன் கோடி சுடர்ந்விடும் லிங்கம்
    நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

    எட்டு தளத்தினில் எழுந்திடும் லிங்கம்
    எல்லாம் ஆகிய காரண லிங்கம்
    எட்டு தரித்திர நீக்கிடும் லிங்கம்
    நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

    தேவரின் உருவின் பூஜைக்கோர் லிங்கம்
    தேவ வணமலரை ஏற்றிடும் லிங்கம்
    பரமண அதணாய் பறவிடும் லிங்கம்
    நாளும் வணங்கும் சதாசிவ லிங்கம்

    லிங்காஷ்டக இதை தினமும்
    சிவ சந்நிதியில் சொல்வார்
    சிவலோக காட்சியுடன்
    சிவன் அருளும் கொள்வார்கள்.

    பதிலளிநீக்கு
  16. //Elakian, Rathangan said...
    தம் அன்றாட அவசர வேலக்கிடையே அலைகடல் போல் அலையும் நம் மனது அமைதியடைய, மகிழ்ச்சியுடன் இருக்க தினமும் கேளூங்கள் பாலு அவர்களின் தேனினும் இனிமையான குரலில் லிங்காஷ்டகம்.

    ஓம் நமச்சிவாயா//

    Elakian,

    நன்றி,

    இதற்கு உண்மையான பொருள் விளக்கம் அறிந்தவன் என்ற முறையில் உங்களுக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !