29 செப்டம்பர், 2008

நண்பர்களும், பில்டர் காஃபியும் !

காஃபி சமாச்சாரம் இல்லை காபி அடிக்காத சமாச்சாரம். எதைக் காப்பி அடிக்கவில்லை ? பொதுவாகவே எல்லோருக்குமே நண்பர்கள் இருப்பார்கள், முற்றிலும் ஒன்று போலவே குணமுடையவர்கள் இல்லாவிட்டாலும், சிற்சில குணங்கள் அடிப்படையிலேயே, அதைப் பிடித்திருப்பதாலும், அவற்றில் சில தன்னுடன் ஒன்றிப் போவதாலும் நட்புத் துளிர்க்கிறது. ஒத்தவயது நண்பர்களிடம் ஏறக்குறைய பிடித்தவைகள் நிறைய இருக்கும். மற்ற வயதினரிடையே இருக்கும் நட்பு, நல்ல பழக்கவழக்கம், குணங்களைச் சார்ந்ததாகவே இருக்கும். வயதானவர்களின் அனுகுமுறை பிடித்துப் போய் அவர்களிடம் பழகுவோம். சிறுவயதினரிடையே நாமாக விரும்பி நட்பு கொள்வதும் அவர்களிடம் இருக்கும் எதோ ஒரு நல்ல குணம் நம்மை ஈர்பதாகவே இருக்கும்.

நமது நண்பர்கள் நம்மைவிட எதோ ஒரு குணத்தில் நல்லவர்களாகவே இருப்பார்கள், ஒவ்வொருவருக்கும் இருக்கும் நண்பர்களும், அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் ஈர்ப்பு, கண்டிப்பாக எதோ ஒரு நல்ல குணம் தமக்கு பிடித்ததாக இருக்கும். ஒருவரிடம் இருக்கும் ஒரு நல்ல குணம், இன்னொரு நண்பரிடம் இருக்காது, அதுபோல் ஒவ்வொருவரும் வேறு வேறொன்றில் நல்லவர்களாகவே நடந்து கொள்பவர்களாக இருப்பார்கள், அவர்களை வேறுபடுத்தி அறிய வைப்பதும் கூட அவர்களிடம் இருக்கும் நல்ல குணமேயன்றி அவர்களது கெட்ட குணங்கள் இல்லை. நமக்கு ஒரு 10 பேர் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிந்தது இல்லை என்றே வைத்துக் கொள்வோம். இந்த 10 நண்பர்களின் நல்ல குணங்கள் நமக்கும் இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி இருப்பது தான் இயற்கை, அதனால் தான் அவர்களை நமக்குபிடித்து இருக்கிறது. ஆனால் இயற்கைக்கு மாறாகவே நமது குணங்கள் இருக்கும், நண்பர்களிடம் நல்ல குணம் இருக்கிறது என்பதற்காக நாம் அவர்களை நேசிப்போம், பழகுவோம். ஆனால் அவர்கள் ஒவ்வொருவரிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்றைக் கூட நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கவே மாட்டோம். நம்மிடம் அவை இல்லாததாலேயே அவர்களை நமக்கு எப்போதும் பிடித்துப் போகிறது. நண்பர்களின் நல்ல குணத்தை நாமும் கொண்டிருந்தால் அவர்களை விட்டு விலகிவிடுவோம் என்று தவறான புரிந்து கொள்ளவேண்டாம்.

நெருக்கமாக இருக்கும், எனது நண்பர்களின் ஒவ்வொருவரின் நல்ல குணங்களை மட்டும் பார்க்கும் போது

1. ஒருவர் எளிதில் எவருடனும் பழகிவிடுவார் - ஒரு நண்பர்
2. உதவி செய்யச் சொல்லிக் கேட்டால், செய்துவிட்டு தான் அவருடைய வேலையைப் பார்ப்பர் - இது இன்னொரு நண்பர்
3. பார்த்தவுடனேயே முகம் மலர, மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருப்பார் - இன்னொருவர்
4. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி அக்கரையுடன் விசாரிப்பார் - இன்னொருவர்
5. எந்த நிகழ்வாக இருந்தாலும் உடனே எனக்கு தகவல் சொல்லிவிடுவார் - இன்னொருவர்
6. மனவருத்தம் ஏற்பட்டால் மறுநாளே எதுவுமே நடக்காதது போல் பேசுவார் - இன்னொருவர்
7. கூப்பிட்ட உடனேயே எந்த வேலையாக இருந்தாலும் போட்டுவிட்டு ஊர் சுற்ற வருவார் - இன்னொருவர்
8. எனக்கு எதாவது துன்பம் என்றால் துடித்துப் போவார் - இன்னொருவர்
9. எப்போதும் நான் தான் தொடர்பு கொள்ளனுமா ? பண்ணித் தொலைகிறேன் - அலுத்துக் கொண்டாலும் நான் தொடர்பு கொள்ளாவிட்டாலும் அடிக்கடி தொடர்பு கொள்வார் - இன்னொருவர்
10. அவர்கள் வீட்டிற்குச் சென்றால் என்னையும் அவர்களது பெற்றோர் அதே பாசத்துடன் நடத்துவதைப் பார்த்து பெருமையடைவார் - இவர் இன்னொருவர்

இது போன்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்

இவையெல்லாம் எனக்கு இருக்கிறதா ? என்றால் ஏறக்குறைய இல்லை அல்லது குறைவு என்றே சொல்வேன். அவர்களையெல்லாம் பிடித்து நட்பைத் தொடர்வதற்கு அவர்கள் ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்தனி நல்ல குணமே காரணம். இவற்றையெல்லாம் நாமும் ஏற்படுத்திக் கொண்டால் ? என்று நினைப்பதோடு சரி. நட்புக்கு நாம் கொடுக்கும் மரியாதை அவர்களிடம் உள்ள ஒரு சில நல்ல குணங்களை பின்பற்றுவது தான். அதைச் செய்கிறோமா என்பது அவரவர் மனசாட்சியைப் பொறுத்ததே. பொதுவாக நட்பு என்பதே வாசனைக்காக விரும்பிக் குடிக்கப்படும் பில்டர் காஃபி போல் தான். நண்பர்களின் நல்ல குணம், நட்பு என்னும் புரிந்துணர்வின் பயன்பாட்டுடன் மட்டுமே தொடர்கிறது. நண்பர்களிடம் இருக்கும் எதோ ஒரு குணத்தைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ளும் நாம், அவர்களை எதற்காகப் போற்றுகிறோமோ, அதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதே இல்லை.

11 கருத்துகள்:

  1. ///நண்பர்களிடம் இருக்கும் எதோ ஒரு குணத்தைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ளும் நாம், அவர்களை எதற்காகப் போற்றுகிறோமோ, அதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதே இல்லை.///

    அதுதான் பொது மனித இயல்பு. பாகற்காய் என்ன தான் சர்க்கரையைப்போட்டு சமைத்தாலும் அது தன் இயற்கைச் சுவையை (கசப்பை) விடாது. அதுபோல மனிதனின் இயற்கைக் குணம் மாறவே மாறாது! கற்றுக்கொண்டாலும் மாறாது (அதற்கு உதாரணம் வேண்டுமா? இதோ: Donkey is always a donkey; donkey will not become a horse:-)))))

    பதிவு நன்றாக உள்ளது; சிந்திக்க வைக்கிறது. நன்றி!

    பதிலளிநீக்கு
  2. :-)))))

    என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய இரு நண்பர்களுக்கு பிரச்சினை என்றால் இருவரிடமும் பேசி அவரவர் நிலைப்பாட்டை அறிந்தபிறகே எந்த கருத்தாக இருந்தாலும் சொல்வது அவரது வழக்கம்.

    பதிலளிநீக்கு
  3. // SP.VR. SUBBIAH said...
    அதுதான் பொது மனித இயல்பு. பாகற்காய் என்ன தான் சர்க்கரையைப்போட்டு சமைத்தாலும் அது தன் இயற்கைச் சுவையை (கசப்பை) விடாது. அதுபோல மனிதனின் இயற்கைக் குணம் மாறவே மாறாது! கற்றுக்கொண்டாலும் மாறாது (அதற்கு உதாரணம் வேண்டுமா? இதோ: Donkey is always a donkey; donkey will not become a horse:-)))))

    பதிவு நன்றாக உள்ளது; சிந்திக்க வைக்கிறது. நன்றி!
    //

    வாத்தியார் ஐயா,

    உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது பொறுமை, கோபமின்மை. "வாத்தியார் 3 மணி நேரம் மைக்கைப் பிடித்து, நிறுத்தவே இல்லை" என்று பதிவில் எழுதினாலும், நொந்து கொள்ளாதா உங்கள் பொறுமை, பலரும் பின்பற்றக் கூடிய ஒன்று !

    முதல் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா !

    பதிலளிநீக்கு
  4. //லக்கிலுக் said...
    :-)))))

    என்னுடைய நண்பர் ஒருவர் அவருடைய இரு நண்பர்களுக்கு பிரச்சினை என்றால் இருவரிடமும் பேசி அவரவர் நிலைப்பாட்டை அறிந்தபிறகே எந்த கருத்தாக இருந்தாலும் சொல்வது அவரது வழக்கம்.

    2:30 PM, September 29, 2008
    //

    லக்கிலுக்,
    புண்ணானதிலிருந்து அப்படி செய்வதில்லை. அதையும் ஒரு நண்பரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். அது நீங்களா என்று கேட்காதிங்க :)) பொதுவான கருத்து சொல்வதிலிருந்து தனது கருத்தைச் சொல்லும் பக்குவத்தை அவரிடமிருந்து தான் கற்றுக் கொண்டேன். நன்றி லக்கிலுக் !
    :)

    பதிலளிநீக்கு
  5. சிந்திக்க வைக்கும் பதிவு..

    ///நண்பர்களிடம் இருக்கும் எதோ ஒரு குணத்தைப் போற்றி, அவர்களை நட்பாக்கிக் கொள்ளும் நாம், அவர்களை எதற்காகப் போற்றுகிறோமோ, அதை நாம் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்வதே இல்லை.///
    மிகச் சரியாக சொண்ணீர்..

    என்ன தான் மனித இயல்பு என்றாலும், நாம் இன்னும் கற்கால மனிதனைப் போலவா வாழ்கிறோம்??
    மன வளர்ச்சி என்பது, இதில் தான் உள்ளது..
    மன முதிர்ச்சி அதிலிருன்ந்துதான் வருகிறது...

    பின்பற்ற முயற்சிக்கிறேன்..
    நன்றி..

    பதிலளிநீக்கு
  6. உண்மை கோவி. நம்ப அவங்களோட எல்லா நல்ல பழக்கவழக்கத்தையும் கத்துகிட்டோம்னா நம்ப பாடு திண்டாட்டம் தான்.

    பதிலளிநீக்கு
  7. //1. ஒருவர் எளிதில் எவருடனும் பழகிவிடுவார் - ஒரு நண்பர்
    2. உதவி செய்யச் சொல்லிக் கேட்டால், செய்துவிட்டு தான் அவருடைய வேலையைப் பார்ப்பர் - இது இன்னொரு நண்பர்
    3. பார்த்தவுடனேயே முகம் மலர, மணிக்கணக்கில் பேசிக் கொண்டு இருப்பார் - இன்னொருவர்
    4. வீட்டில் உள்ளவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி அக்கரையுடன் விசாரிப்பார் - இன்னொருவர்
    5. எந்த நிகழ்வாக இருந்தாலும் உடனே எனக்கு தகவல் சொல்லிவிடுவார் - இன்னொருவர்
    6. மனவருத்தம் ஏற்பட்டால் மறுநாளே எதுவுமே நடக்காதது போல் பேசுவார் - இன்னொருவர்
    7. கூப்பிட்ட உடனேயே எந்த வேலையாக இருந்தாலும் போட்டுவிட்டு ஊர் சுற்ற வருவார் - இன்னொருவர்
    8. எனக்கு எதாவது துன்பம் என்றால் துடித்துப் போவார் - இன்னொருவர்
    9. எப்போதும் நான் தான் தொடர்பு கொள்ளனுமா ? பண்ணித் தொலைகிறேன் - அலுத்துக் கொண்டாலும் நான் தொடர்பு கொள்ளாவிட்டாலும் அடிக்கடி தொடர்பு கொள்வார் - இன்னொருவர்
    10. அவர்கள் வீட்டிற்குச் சென்றால் என்னையும் அவர்களது பெற்றோர் அதே பாசத்துடன் நடத்துவதைப் பார்த்து பெருமையடைவார் - இவர் இன்னொருவர்//

    அது போல இருந்தால் இதுபோல் சொல்றாங்களே.
    1. ஒட்டுண்ணி
    2. பொழப்பத்தவன்
    3. அறுவை
    4. கிறுக்கு
    5. டமாரம்
    6. சுரணையற்றவர்
    7. ஊர் சுற்றி
    8. கோழை மனசு
    9. ப்ளேடு
    இது போன்று நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்
    :))) (சும்மா ட்மாஷ் -மோகன் கந்தசாமி இல்லை)

    பதிலளிநீக்கு
  8. "நண்பர்களும், பில்டர் காஃபியும் !"


    அர்த்தம் பொதிந்தத் தலைப்பு.
    பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.
    வகையா வகைப்படுத்துறீங்க!

    இன்ஸ்டன்ட் காப்பின்னு ஒன்னு இருக்கு இல்ல?

    பதிலளிநீக்கு
  9. //சிறுவயதினரிடையே நாமாக விரும்பி நட்பு கொள்வதும் அவர்களிடம் இருக்கும் எதோ ஒரு நல்ல குணம் நம்மை ஈர்பதாகவே இருக்கும்//

    :-))))))))))

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ந‌ண்ப‌ரே,
    உங்க‌ளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன்.
    பாருங்க‌ள்.

    பதிலளிநீக்கு
  11. யோசிக்க வைச்சிட்டீங்க..முயற்சி செய்கிறேன்..

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !