30 மார்ச், 2008

கடந்து போன வாழ்க்கை மனநிறைவானதா ?

ஞாயிற்றுக்கிழமை வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்க சிங்கை 'குட்டி இந்தியாவுக்கு'ச் செல்வது வழக்கம், ஞாயிற்றுக்கிழமையில் பச்சைமாறாக் காய்கறிகள் (fresh veg) அன்று வரும், மேலும் தமிழகத்திலிருந்து கட்டுமானத்துறைக்கு வேலைக்கு வந்திருக்கும் தொழிலாளர்கள் எல்லோரும் அன்று தான் அங்கு கூடுவார்கள். அவர்களைப் பார்க்கும் போது தமிழகமே அங்கிருப்பது / தமிழகத்தில் இருப்பது போன்ற மகிழ்ச்சி எனக்கு கிடைக்கும், கூட்ட நெரிசலில் செல்வது கடினம் என்றாலும் அது ஒருவித மகிழ்ச்சி தான்.வீட்டுக்கு வரும் போது காய்கறி பைகள் இருக்கும் எனவே பொது போக்குவரத்து வாகனங்களில் செல்லாமல் வாடகை வண்டியில் (டாக்சியில்) வருவேன். தற்போது மீட்டர் கட்டணம் (35 விழுக்காடு வரை) ஏறி இருப்பதால் டாக்சியில் ஏறும் போது மீட்டர் ஏற ஏற எனக்கும் டிக் டிக் அதிகமாகும். :) பொது போக்குவரத்து பேருந்து அல்லது ரயிலில் வீட்டுக்குச் செல்ல 1 மணி நேரமாகும், டாக்சி என்றால் 30 நிமிடத்தில் சென்றுவிடலாம். மறுநாள் திங்கள் வழக்கம் போல் வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பதால் சோர்வான பயணத்தை தவிர்க்க டாக்சியில் தான் செல்வேன்.

நான் டாக்சியில் ஏறினால் பகல் பொழுதாக இருந்தால் அங்கு வாங்கி வந்த நக்கீரன் புத்தகத்தைப் புறட்டுவேன். மாலை 7 மணிக்கு மேல் என்றால் போதிய வெளிச்சமின்மையால் டாக்சியுனுள் புத்தகம் படிக்க முடியாது. எந்த நேரமாக இருந்தாலும் டாக்சி ஓட்டுனர் பேச்சுக் கொடுத்தால் சுவையார்வமாக பேசிக் கொண்டு வருவேன். இன்று ஒரு 60 வயது சீன பெரியவரின் டாக்சி கிடைத்தது.

பொதுவாக் ஞாயிற்றுக்கிழமைகளில் குட்டி இந்தியாவழியாக செல்ல டாக்சி ஓட்டுனர் அல்லாத சீனர்கள் தவிர்பர். அதையும் மீறி அந்த பகுதிவழியாக செல்ல முகம் சுழிப்பர், காரணம் எண்ணமுடியாத தலைகள், சாலையில் திடிரென்று குறுக்கே ஓடுபவர்கள் என சாலை நெரிசலாக இருக்கும். வாகனம் ஓட்டுபவர்களுக்கு திறன் இல்லை என்றால் விபத்து ஏற்படும் அளவுக்கு குறுக்கே ஓடுவார்கள். அது தவிர அங்கு கூடியிருக்கும் தொழிலாளர்கள் பஞ்சம் பிழைக்க வந்ததாகவே நினைத்திருப்பதால் உயர்மனப்பாண்மையில் இருப்பவர்கள் அந்த வழியை புறக்கணிப்பர்.

டாக்சி ஓட்டுனரிடம் கேட்டேன்,'இந்த கூட்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.'

'அவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விட்டால் இங்கே வருவதற்கான வாய்ப்பு இல்லை, அன்றுதான் வங்கிகள் மூலம் பணம் அனுப்புவார்கள், நண்பர்களை சந்திப்பார்கள் இது தவிர்க்க முடியாது, ஆனால் சாலையை கடக்கும் முன் தங்கள் உயிருக்கும் மதிப்புக் கொடுக்கலாம்' என்றார்

அவர் சரியாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார். அங்குவருபவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைதான் வெளியில் செல்லவே அனுமதி கிடைக்கும், அதனால் ஒருவாரத்துக்கு தேவையானதை வாங்கிச் செல்வார்கள், நண்பர்களுடன் மகிழ்வுடன் இருப்பார்கள். இதை பலர் புரிந்து கொள்ளாமல் ஏன் இங்கே இவ்வளவு கூட்டம் என்பது போல் முகம் சுழிப்பார்கள். அதைப் புரிந்து வைத்திருந்த அந்த பெரியவரிடம் மரியாதை வந்தது.

பிறகு, அவரது மகன்கள் பிஹெச்டி வரை படித்திருப்பதைப் பற்றி பெருமையாக சொன்னார்.

"நீங்கள் ஏன் டாக்சி ஓட்டி கஷ்டப்படுக்கிறீர்கள், உங்கள் மகன்கள் உங்களுக்கு உதவ வில்லையா ?"

"எனக்கு 60 வயது ஆகின்றது, என்னால் வேலை செய்யும் முடியும் வரை செய்வேன், இல்லையென்றால் முடியவில்லை உதவுங்கள் என்று கேட்பேன்" என்றார்

"சிங்கை கல்சர் படி, வாரிசுகள் வேலைக்குச் சென்றதும் பெற்றோர்களுக்கு உதவுகிறார்களா ?"

"நல்லது, நான் எனது பெற்றோர் இருக்கும் வரை உதவி இருக்கிறேன், அது போல் எனக்கு முடியவில்லை என்றால் என்மகன்கள் உதவுவார்கள், தற்போதைக்கு என்னால் வீட்டில் சும்மாவும் இருக்க முடியாது, கைகால்கள் நன்றாக இருக்கும் வரை யாரையும் எதிர்பார்காது உழைப்பில் சாப்பிடுவதுதான் எனக்கும் மகிழ்ச்சி" என்றார்

"உங்களுக்கு 60 வயது ஆகிறது என்கிறீர்கள், கடந்து வந்த வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்ததா ?"

"வெல், ஆடிட்டிங் கம்பெணி மற்றும் பேங்கில் 58 வரை வேலை செய்தேன், எனது மகன்களை நன்கு படிக்க வைத்தேன், எனது பெற்றோர்களுக்கு உதவி இருக்கிறேன், எனது கடமைகளை சரியாக செய்தேன், ஓரளவு சேமிப்பும் இருக்கிறது, எனது வாழ்க்கையில் பொருள் நிறைந்ததாகவே நினைக்கிறேன். எனது வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, தற்போதும் இருக்கிறது" என்றார்.

பொதுவாக நம் இந்தியர்களுக்கு, தாங்கள் தான் உலகத்துக்கே பண்பாடு கலாச்சாரம் சொல்லிக் கொடுப்பவர்கள் என்ற நினைப்பு உண்டு, வெளிநாட்டுக்காரர்கள் எல்லோரும் பொறுப்பற்றவர்களாவும், சுயநலத்தில் வாழ்பவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். இல்லறம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கையுடன் அதை அமைத்துக் கொண்டவர்களில் 90 விழுக்காட்டினர் எந்த நாட்டினராக இருந்தாலும் பொறுப்பாகவும் மகிழ்வுடனும் வாழ்கிறார்கள்.

கடமைகளை சரியாக செய்துவிட்டால் ஆணோ பெண்னோ 60 வயதில் கூட மகிழ்வுடனும், மேலும் முழு மனநிறைவுடன் இருப்பார்கள். அதைச் செய்யத் தவறியவர்களும், வாரிசுகளால் கவனிக்கப்படாதவர்களும் முதுமையில் மனவருத்தமும், வாழ்ந்த / வாழும் வாழ்கையின் மீது வருத்தமும் இருக்கும்.

ஒருவர் தனது கடமைகளை சரிவர செய்திருந்தால், கண்டிப்பாக அவர் ஓய்வடையும் போது மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையே மனநிம்மதியும், முழுமையான வாழ்க்கை வாழ்ந்ததற்கான மனநிறைவும் இருக்கும்.

தொடர்புடைய மற்றொரு சுட்டி மரணத்தை கொண்டாட முடியுமா ?

18 கருத்துகள்:

  1. பொதுவாக நம் இந்தியர்களுக்கு, தாங்கள் தான் உலகத்துக்கே பண்பாடு கலாச்சாரம் சொல்லிக் கொடுப்பவர்கள் என்ற நினைப்பு உண்டு, வெளிநாட்டுக்காரர்கள் எல்லோரும் பொறுப்பற்றவர்களாவும், சுயநலத்தில் வாழ்பவர்களாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். //

    எல்லாம் நிறக் கண்ணாடி படுத்தும் பாடு... நல்லது கெட்டதுகளை சீர் தூக்கி எல்லா இடங்களிலும் எல்லாவிதமான மனிதர்களும் சமமாக கலந்தே இருக்கிறார்கள் என்ற புரிதல் கிடைத்து விட்டால், நம் பூமி மட்டுமே புனித பூமி என்ற வறட்டு "தூக்குதல்கள்" இருக்காது என்றே நம்புகிறேன்.

    நல்ல பதிவு!

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஒரு பதிவு தொடருங்கள் கண்னன் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //இல்லறம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கையுடன் அதை அமைத்துக் கொண்டவர்களில் 90 விழுக்காட்டினர் எந்த நாட்டினராக இருந்தாலும் பொறுப்பாகவும் மகிழ்வுடனும் வாழ்கிறார்கள்.//
    எனக்கும் இது சரியாக தெரிகிறது.

    //கடமைகளை சரியாக செய்துவிட்டால் ஆணோ பெண்னோ 60 வயதில் கூட மகிழ்வுடனும், மேலும் முழு மனநிறைவுடன் இருப்பார்கள். அதைச் செய்யத் தவறியவர்களும், வாரிசுகளால் கவனிக்கப்படாதவர்களும் முதுமையில் மனவருத்தமும், வாழ்ந்த / வாழும் வாழ்கையின் மீது வருத்தமும் இருக்கும்.//
    தம் பெற்றோரை தம் வசதிக்கேற்றவாறு சரிவர கவனிக்காதவர்களுக்கும் தாம் வாழ்ந்த வாழ்க்கையின் மீது வருத்தம் முதுமையில் வரும்.

    பதிலளிநீக்கு
  4. பதிவையும் இணைப்புச் சுட்டியில் இருந்த பதிவையும் ரசித்தேன். குற்ற உணர்வற்ற வாழ்க்கை மட்டுமே நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கான இன்றைய டெப்பாஸிட். எந்த வேஷத்தையும் கொண்டு எல்லோரையும் ஏமாற்றி விடலாம். உண்மையைச் சரிவர அறிந்து கொண்டு மறக்காமலும் இருக்கும் மனசாட்சியுடன் தான் நாம் தனிமையைக்கழிக்க வேண்டி இருக்கும்.

    மனிதர்களின் (என்னுடையவை உட்பட) பாசாங்குகளையும் போலித் தனங்களையும் தேடித் தேடி ரசிக்கும் இயல்பினாலோ என்னவோ எனக்குத் தோன்றுவது இதுதான்: நான் என் கடமைகளை முடித்து விட்டேன்; இனி இறப்பதற்குச் சம்மதம் என்று சொல்வதெல்லாம், அப்படிச் சொல்வது கேட்டு மரணம் உடனே அழைக்க வந்துவிடாது என்கிற நம்பிக்கையில் தான். மரணம் குறித்த மனிதப் பாசாங்குகளில் இன்னொன்று: இன்னார் சிவலோகப் பதவி அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்கிற வாக்கியம். சிவலோகப்பதவி என்றால் லேசுப்பட்ட ஒன்றா? அதை ஒருவர் அடைவதில் அடுத்தவருக்கு எப்படி ஆழ்ந்த வருத்தம் வரலாம்?

    இன்றைய என்னுடைய பதிவில் நான் மரியாதையுடன் எடுத்துக் காட்டி இருக்கும் மரணம் குறித்த அப்துல்ரகுமான் அவர்களின் கவிதையில் பாருங்கள்; இத்தகைய பாசாங்குகள் இருக்காது.

    பதிலளிநீக்கு
  5. //நான் என் கடமைகளை முடித்து விட்டேன்; இனி இறப்பதற்குச் சம்மதம் என்று சொல்வதெல்லாம், அப்படிச் சொல்வது கேட்டு மரணம் உடனே அழைக்க வந்துவிடாது என்கிற நம்பிக்கையில் தான். //

    ரத்னேஷ் அண்ணா,

    சம்மதம் யாரும் சொல்ல மாட்டார்கள், 60வயதின் அருகில் இருப்பவர்களுக்கு இருக்கும் வாழ்ந்த வாழ்க்கைப் பற்றிய உணர்வுகளை அவர்களது வாயால் கேட்டு எழுதினேன்.

    மரணம் பற்றிய அப்துல் ரகுமான் கவிதை அருமை. அங்கு பின்னூட்டமிட்டேன்

    நான் கூட மரணம் குறித்து பாசாங்கு அற்ற இடுகையும், கவிதையும் அமைய எழுதிய சுட்டி தருகிறேன்.

    http://govikannan.blogspot.com/2006/07/blog-post_03.html

    உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது படித்துபாருங்கள். உங்களுக்கு அதுவும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

    அங்கு இந்த சுட்டியை இணைக்கலாம், விளம்பரம் போல் ஆகுமென்பதால் இணைக்கவில்லை

    பதிலளிநீக்கு
  6. //ஒருவர் தனது கடமைகளை சரிவர செய்திருந்தால், கண்டிப்பாக அவர் ஓய்வடையும் போது மகிழ்ச்சி இருக்கிறதோ இல்லையே மனநிம்மதியும், முழுமையான வாழ்க்கை வாழ்ந்ததற்கான மனநிறைவும் இருக்கும்//

    நல்ல அனுபவம்...

    பதிலளிநீக்கு
  7. வாழ்க்கைன்னு எதைச் சொல்றீங்க?

    அனுபவங்கள்தான் வாழ்க்கை என்பது என்னோட கருத்து. என் கடந்தகாலத்தைத் திரும்பிப்பார்த்தால்
    அதுலே ஒரு 85 சதமானம் நல்லவை. மீதி அல்லவை. அந்த அல்லவைகளில் நாம் படிச்ச பாடங்கள்
    ,நான் உயிரோடு இருக்கப்போகும் மீதி நாட்களுக்குப் படிப்பினை.

    பதிலளிநீக்கு
  8. //பொதுவாக நம் இந்தியர்களுக்கு, தாங்கள் தான் உலகத்துக்கே பண்பாடு கலாச்சாரம் சொல்லிக் கொடுப்பவர்கள் என்ற நினைப்பு உண்டு//

    உண்மைதான்...

    சீனர்கள் ஏன் பல துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள் என்பதை உங்கள் பதிவில் வரும் சீனப் பெரியவரின் சுறுசுறுப்பு மற்றும் வாழ்க்கையை அவர் எதிர்நோக்கும் போக்கின் மூலம் நன்கு புரிந்து கொள்ள முடிகிறது..

    பதிலளிநீக்கு
  9. //
    நையாண்டி நைனா said...

    கோவியாரே இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும்
    //

    நைனா நீங்கள் யார் ?
    எவராக வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க,

    மேலே நீங்கள் சொன்னதையே நினைத்தேன். பதிவில் உள்குத்து முதல் பத்தியிலேயே வந்துவிட்டது என்று. சரியாத்தான் சொல்லி இருக்கிங்க. இன்னும் ஒருவாரத்த்துக்கு பதிவில் தத்துவம் பேசுவதில்லை. தத்துவம் எழுதா விரதம் தான். ரத்னேஷ் அண்ணாவே சொன்னாலும் தத்துவம் இனி தடுமாறி கூட வராது.

    ஸ்மைலி போடனுமா ?
    =============
    /*நைனா நீங்கள் யார் ?
    எவராக வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க,*/

    இது கோபத்தின் வெளிப்பாடல்லவே??

    /*ஸ்மைலி போடனுமா ?*/

    ஆஹா கண்டிப்பாக அண்ணன் கோவியார் என் மீது காண்டு கொண்டுள்ளார்....

    ஐயா,
    தங்கள் மனம் நோக அத்தனை கூற வில்லை,
    வலைப்பதிவில் அப்படி ஒரு கருத்து வர தாங்கள் தான் காரணம் என்று, அதாவது TREND SETTER [வழி முறை மாற்றி(மொழி பெயர்ப்பு சரி தானே?)] என்று கூற வந்தேன்.
    தங்கள் மனம் புண்பட்டிருந்தால், நான் வருந்தி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
    ==============

    திரு ரத்னேஷ் அவர்களின் பதிவில், எனக்கு தங்களின் பதில் கிடைக்காத காரணத்தால்
    எனது வாழ்க்கை இப்படி கழிந்து கிடக்கிறது
    "கடந்து போன வாழ்க்கை மனநிறைவானதா?" என்று.


    விரைவில் பதில் தரவும்.

    பதிலளிநீக்கு
  10. ///*நைனா நீங்கள் யார் ?
    எவராக வேண்டுமானாலும் இருந்துட்டு போங்க,*/

    இது கோபத்தின் வெளிப்பாடல்லவே??

    /*ஸ்மைலி போடனுமா ?*///

    நைனா,

    கண்டிப்பாக கோபத்தின் வெளிப்பாடு அல்ல, ஸ்மைலி போடனுமா என்று கேட்டது ஸ்மைலி தேவை இல்லை, சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்ற பொருளில் சொன்னேன்.

    எனது பதிவுகளை அடிக்கடிப்படிப்பவர், கருத்து கூறுபவர் பற்றி சிறு அறிமுகமேனும் எனக்கு தெரிந்திருந்தால் மகிழ்ச்சி, அனானி பின்னூட்டங்களை தவிர்பதற்கும் காரணம் அதுதான். அனானி என்றாலும் அறிமுகம் இல்லாதவர்களும் ஒன்று தானே. 'வெளி இட வேண்டாம்' என்ற பின்னூட்டத்தில் உங்களைப் பற்றிய தகவல் தந்தால் நல்லது. புரிந்துணர்வுடன் கருத்துப் பறிமாற்றம் செய்வது நல்லது என்பது என் எண்ணம்

    பதிலளிநீக்கு
  11. மிக நன்றி,
    நான் தங்களின் மனத்தை புண்படுத்தி விட்டேனோ(may be due to misunderstanding) என்று வருந்தினேன் (due to misunderstanding). இப்போ தெளிந்துள்ளேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. //வெல், ஆடிட்டிங் கம்பெணி மற்றும் பேங்கில் 58 வரை வேலை செய்தேன், எனது மகன்களை நன்கு படிக்க வைத்தேன், எனது பெற்றோர்களுக்கு உதவி இருக்கிறேன், எனது கடமைகளை சரியாக செய்தேன், ஓரளவு சேமிப்பும் இருக்கிறது, எனது வாழ்க்கையில் பொருள் நிறைந்ததாகவே நினைக்கிறேன். எனது வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் இருந்தது, தற்போதும் இருக்கிறது" என்றார//

    இவர்களுடைய வாழ்க்கையை அணுகும் தன்மை ரசிக்கத்தக்கதாகவும் வழிகாட்டியாகவும் கூட இருக்கிறது.
    பாங்கிலோ ஆடிட்டிங் கம்பெனி யில் வேலை பார்த்த இந்தியர்கள், குறிப்பாக தமிழ் மக்கள் வேலையிலிருந்து
    ஓய்வு பெற்ற பின்பு, டாக்சி ஒட்டுவார்களா என்பது சந்தேகம் தான். பஞ்சாபிக்காரர்கள் மட்டும் இதற்கு
    விதிவிலக்கு. நம்மைப் போன்றவர்கள், ஏதோ கணக்கு வேலை கிடைத்தால் செல்வார்களே தவிர அவர்களது
    சுயகெளரவம் ( perceived self prestige)
    காரோட்டி சம்பாதிக்க அனுமதிக்குமா எனத்தெரியவில்லை.

    செய்யும் தொழிலே தெய்வம் என்றார்கள் சான்றோர்.

    நிற்க. உங்கள் மார்ச் பதிவு ஒன்றுக்கு பூச்செண்டு கிடைத்திருக்கிறதே ! நீங்கள்
    வாங்க வரவேண்டாமா ?

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    பதிலளிநீக்கு
  13. கடந்து போன வாழ்க்கை நாலதுதான். அதைவிட இப்போ கடக்கும் வாழ்க்கை இன்னும் சரியாக இருக்கிறது என்றுதான் சொல்வேன்.

    கடமைகளைச் செய்துவிட்டோம் சரி.
    இன்னும் தொடருகிறது.

    வாழ்வில் இன்னும் கற்றுக் கொள்ளவேண்டியது எத்தனையோ இருக்கிறது.
    நம் ஊரிலும் இருக்கிறார்கள் கண்ணன்.
    மன நிறைவோடு விட்டுக் கொடுத்து
    வாழும் முதியோர்.

    இளைஞர்களைப் புரிந்து கொண்டவர்கள்.
    என்ன? அவர்களுக்குப் பணம் சேர்ப்பதிலும், உடல் நலம் பேணுவதிலும் தடுமாற்றம்.
    அதையும் சரி படுத்திவிட்டால்.....வாழ்க்கை வாழ்வதற்கே:))

    பதிலளிநீக்கு
  14. // Thekkikattan|தெகா said...

    எல்லாம் நிறக் கண்ணாடி படுத்தும் பாடு... நல்லது கெட்டதுகளை சீர் தூக்கி எல்லா இடங்களிலும் எல்லாவிதமான மனிதர்களும் சமமாக கலந்தே இருக்கிறார்கள் என்ற புரிதல் கிடைத்து விட்டால், நம் பூமி மட்டுமே புனித பூமி என்ற வறட்டு "தூக்குதல்கள்" இருக்காது என்றே நம்புகிறேன்.

    நல்ல பதிவு!
    //

    இயற்கைநேசி சார்,

    பூமி புனிதமடைய வாழும் அனைவருமே சமமானவர்களாக நடந்து கொள்ள வேண்டும், பூமி மீது கருணையுடன் சொல்லியுள்ளக் கருத்து(ம்) பாராட்டத்தக்கது, பின்னூட்டத்திற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  15. //தென்றல்sankar said...
    நல்ல ஒரு பதிவு தொடருங்கள் கண்னன் வாழ்த்துக்கள்
    //

    தென்றல், மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  16. சுல்தான் said...
    //தம் பெற்றோரை தம் வசதிக்கேற்றவாறு சரிவர கவனிக்காதவர்களுக்கும் தாம் வாழ்ந்த வாழ்க்கையின் மீது வருத்தம் முதுமையில் வரும்.//

    சுல்தான் ஐயா,
    தந்தையை 18 ஆண்டுகளுக்கு முன்பு இழந்து, நம்மை வளர்த்தவருக்கு எதுவுமே செய்யவில்லை என்ற வருத்தம் இருக்கிறது.

    பெற்றோர்களுக்கு எதுவும் செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு ஒரு வருத்தம் இருந்து கொண்டுதான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  17. //துளசி கோபால் said...
    வாழ்க்கைன்னு எதைச் சொல்றீங்க?

    அனுபவங்கள்தான் வாழ்க்கை என்பது என்னோட கருத்து. என் கடந்தகாலத்தைத் திரும்பிப்பார்த்தால்
    அதுலே ஒரு 85 சதமானம் நல்லவை. மீதி அல்லவை. அந்த அல்லவைகளில் நாம் படிச்ச பாடங்கள்
    ,நான் உயிரோடு இருக்கப்போகும் மீதி நாட்களுக்குப் படிப்பினை.
    //

    துளசி அம்மா,
    திரும்பிப்பார்க்கும் அளவுக்கு போதிய அனுபவம் பெற்றவர்கள் வாழ்ந்த அனுபவத்தை வாழ்கை என்ற பொருளில் சொன்னேன்.
    85 விழுக்காடு ! கோல்டு மெடலிஸ்ட் !
    :)

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !