8 நவம்பர், 2007

இலங்கைத் தமிழர்களின் நலம் விரும்பிகளுக்கு வேண்டுகோள் !

கடந்த 30 ஆண்டுகளாக இலங்கையில் நடைபெறும் இனமோதல்கள் அனைவருக்கும் தெரிந்ததே. அங்கு நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ் விடுதலை அமைப்பினருக்கு இந்திராகாந்தி முதல் எம்ஜிஆர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி இருக்கின்றனர். எம்ஜிஆர் காலத்தில் இருந்த திமுகவில் கலைஞரும், வைகோவும், பழ.நெடுமாறன் மற்றும் விடுதலை ஆசிரியர் வீரமணி ஆகியோர் வெறும் பெயரளவில் ஆதரவு கொடுக்காமல் உணர்வு பூர்வமாக இலங்கை தமிழ் போராட்டத்திற்கும், தமிழ் போராளிகளுக்கும் ஆதரவாக மேடையெங்கும் முழங்கி இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் எல்லோரும் ஒரே தமிழர்கள் தான் என்ற உணர்வை ஏற்படுத்தி தமிழகத்தில் பெரும் எழுச்சி ஏற்படுத்தினர்.

இதெல்லாம் இராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்புதான். அந்த சம்பவம் தமிழக தமிழர்களுக்கு இந்திய அளவில் பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி இலங்கைத் தமிழர்களின் நலன் குறித்த அக்கரையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இது எல்லாம் ஏற்கனவே பலருக்கும் தெரிந்தவை தான். அந்த நிகழ்வுக்கு பிறகு இலங்கைத் தமிழர்களின் அக்கறைக்கு பத்திரிக்கைக்கள் மூலம் மூக்கு சிந்துவது சோ, இந்துராம், சு.சாமி மற்றும் ஜெ போன்றவர்களும் அவர்கள் தான் இந்திய மண்ணை உய்விக்க வந்த உத்தமர்கள் என்று சொல்லிக் கொண்டு முதுகு சொறிந்து கொள்பவர்களும் தான். மற்றவர்களெல்லாம் ஊமையாகி பேச மறுத்தனர்.

ஆம்...இவர்கள் இலங்கை தமிழர்களுக்காக நாளொரு
பொழுதாக கண்ணீர் விட்டு விட்டு இந்துமகா சமுத்திரத்தின் நீர் மட்டம் 30 அடி உயர்ந்திருக்கிறது. இவர்களைப் போல் கருணாநிதியோ,வீரமணியோ,வைகோவோ, ஏன் இராஜிவ் காந்தி கொலைக் குற்றத்தில் மரணதண்டனைக் குறித்து கருத்து சொன்ன அன்னை சோனியாவோ இலங்கைத் தமிழர்கள் குறித்து அக்கரைக் கொள்ளவில்லை.

********
இலங்கைத் தமிழர்களுக்கு, இந்தியாவிலும் தமிழகத்திலும் பாராமுகம் காட்டப்பட்டபிறகு, இலங்கைத்தமிழர்கள் தங்களுக்கு தாங்களே தான் உதவி செய்து கொள்ள முடியும் என்பதால் அவர்களுக்கு போராட அங்குள்ள விடுதலை அமைப்பை தவிர வேறு எந்த அமைப்பும் இல்லை. இலங்கை அதிபர் சந்திரிகாவுடன் விருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த ஜெயலலிதாவுகோ மேலே கூறப்பட்ட சோ வகையறாவினருக்கோ, இந்தியாவைச் சேர்ந்த இராமேஸ்வர தமிழர்கள் மீன்பிடிக்கச் செல்லும் போது இலங்கை இராணுவத்தால் சுடப்படும் சம்பவங்களைக் கூட கண்டித்தால் இலங்கை - இந்திய உறவு பாலத்தில் விரிசல் விழுந்துவிடுமோ என்று தேசிய நலனில் அக்கரை கொண்டு இந்திய தேசியத்தின் சகோதரத்தன்மையை கண்ணை இமை காப்பதுபோல் காத்து வந்தனர்.

இராமேஸ்வர மீனவர்கள் சுடப்படும் போதெல்லாம் இலங்கை அரசை எதிர்த்து கண்டனம் தெரிவிப்பது அதனுடன் நட்பாக இருக்கும் இந்தியாவிற்கு செய்யும் தேசதுரோகம் என்பது கூட தெரியாமல் கருணாநிதியும், நெடுமாறனும், வைகோவும் வரட்டு தவளைபோல் கத்தி வந்தனர். இதுமட்டுமா ? இலங்கை தமிழர்களை இலங்கை அரசு கொன்று கொக்கரித்த போதெல்லாம் நட்பு நாடான இலங்கைக்கு எதிராக கோஷமிட்டு அரசியல் சாசன சட்டப்படி பதிவியேற்ற கருணாநிதி தெரிந்தே தேச துரோகம் செய்தார். இப்பொழுது உச்சகட்டமாக என்னை என்னவேண்டுமானாலும் செய்து கொள் என்று இந்திய அரசுக்கு மறைமுகமாக சவால் விடும் நோக்கில் அரசு சார்பில் தமிழ் செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

**************

வரும் அகதிகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர, இலங்கைத் தமிழர்களின் நலனை இந்தியா கைவிட்ட பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் போராடம் தவிர்த்துப் பார்த்தால், இலங்கையில் இலங்கை தமிழர்களின் விடியலுக்கு, மறுவாழ்வுக்கு வாய்ப்பு இல்லை. எந்த ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டமும் ரத்தம், நம்பிக்கை துரோகம், பலிவாங்குதல், தியாகம் இது போன்ற பல்வேறு தளங்களில் போராட்டம் அமையாமல் இருந்ததே இல்லை. ஆங்கிலேயனுக்கு தீவிரவாதியாக தெரிந்த நேதாஜி இந்தியருக்கு மாவீரன். ஒரே ஒரு விரும்பத் தகாத சம்பவத்தை வைத்து இலங்கைத்தமிழர்களை ஒட்டு மொத்தமாக புறக்கணித்து பெயரளவில் அவர்கள் நலன் குறித்து கண்ணீர் சிந்துவதனால் மட்டுமே விடிவுகாலம் ஏற்படப்போவதில்லை.

'இலங்கை தமிழர்' என்ற சொல்லை பத்திரிக்கை வியாபாரத்திற்காகவும், நடுநிலையாளர் என்ற வேசத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர்த்து சோ, இந்துராம், சு.சாமி மற்றும் ஜெ வகையறாக்கள் அவர்கள் வாழ்வுரிமைக்காக எந்த விதப் போராட்டமோ, 'நாங்கள் இருக் கின்றோம் கவலை கொள்ளாதீர்கள்' என்ற ஆறுதல்களை, இலங்கை தமிழர்களுக்கு அறிக்கை அளவுக்கு, பெயரளவுக்குக் கூட தந்ததே இல்லை. அப்படி எதாவது அதிசயம் இராஜிவ் காந்தி மறைவிற்கு பிறகு நடந்திருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.
இவர்கள் மட்டுமல்ல இந்த வகையறாக்களை ஆதரிப்பவர்களும், அவர்களை ஆபத்பாந்தவனாக நினைப்பவர்களும், போராளிகளை ஆதரிக்க வேண்டாம், ஆனால்

சாத்வீக வழியில்,
இலங்கை தமிழர்களுக்கு விடுதலையை பகவான் கிருஷ்ணனோ, இராமனோ
வந்து மீட்டுத்தருவார்கள் என்று நினைக்கிறார்களா ? எனக்கு தெரியவில்லல சொல்லுங்கள்.
இல்லை இராமனையோ, கிருஷ்ணனையோ வரவழைக்க யாகம் நடத்தினார்களா ?

இலங்கைத்
தமிழர்கள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு சிங்களருடன் சேர்ந்து வாழவேண்டும் என்று
விரும்புகிறார்களா ? தெரியவில்லை, வெளிப்படையாக சொல்லச் சொல்லுங்கள்

அப்படி
நல்லண்ணம் கொண்டிருந்தால் இலங்கை தமிழர்கள் அக்கரை குறித்து இலங்கை அரசுடன் எத்தனை
முறை பேச்சு நடத்தி இருக்கிறார்கள், அல்லது கண்டனமோ, வர்புறுத்தலோ
செய்திருக்கிறார்கள் ?

அல்லது இலங்கை அரசுடன் இந்தியாவை இலங்கை தமிழர்களின்
நலன் குறித்து பேச வற்புறுத்தி இருக்கிறார்கள் ? தெரிந்து கொள்கிறேன். இருந்தால்
சொல்லுங்கள்.

இதில் எதையுமே செய்திருக்காவிட்டால் இலங்கை தமிழர்களுக்காக குடம் குடமாக கண்ணீர் வடிப்பதையும், அக்கறை கொள்வதாக காட்டிக் கொள்ள நீலிக்கண்ணீர் விடுவதையும், முதலை கண்ணீர் வடிப்பததையும் முதலில் நிறுத்துங்கள்.

உங்கள் போன்றவர்களின் ஆதரவை கேட்பதையே இழுக்காக நினைக்கும் நிலைக்கு இலங்கைத் தமிழர்களும், பேராட்டக் குழுக்களும் முடிவு செய்துவிட்டன. ஏனென்றால் அவர்கள் போராட்டம் வெற்றிபெற்றவுடன் அந்த வீர வரலாற்றின் காவிய வரிகளில் உங்கள் முதலைக்கண்ணீர் துளிகளும் சேர்ந்து திரிந்து களங்கப்பட்டுவிடும் என்பதால்.

கருணாநிதி இலங்கைத் தமிழர்களுக்காக என்ன செய்தார் ? என்று எவரும் கேட்டால், இதுபோன்று ஜெ, சோ, சு.சாமி வகையறாக்களைத் தவிர்த்து வேறு எவரும் கேட்க மாட்டார்கள், அப்படி கேட்டால், ஜெ, சோ வகையறாக்கள் இலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தார்கள் ? முதலைக் கண்ணீரை வெளியில் விட்டு கண்ணை சுத்தப்படுத்திக் கொண்டைதைத் தவிர ? என்று திருப்பிக் கேளுங்கள்.

கருணாநிதியை கொச்சைப்படுத்துவதற்கும், ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கும் தங்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மேல் அக்கரை இருப்பதாக சொல்வதற்காக 'இலங்கைத் தமிழர்கள் நலன்' என்று சொல்வதை நிறுத்துங்கள்,

நெல்லை பாசையில் சொல்லனும் என்றால்

போங்கடே... நீங்களும் .... இலங்கை தமிழர் குறித்த உங்க அக்கறையும் .... நிறுத்துங்கடே !

15 கருத்துகள்:

  1. கோவி உங்க கட்டுரை செருப்பால் அடித்தது போல் இருக்கிறது. மிக அருமை. மறப்போம் மன்னிப்போம் என்ற மனித தன்மை கூட இல்லாமல் தமிழ் செல்வன் இறந்த செய்தி கேட்டு இனிப்பு கொடுத்து கொண்டாடிய காங்கிரசை என்ன சொல்வது.

    சகோதரர்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு நாள் விடிவு வரும் கோவி

    நம்பிக்கைதான் வாழ்கை.

    பதிலளிநீக்கு
  2. இந்த 'அக்கரை'யை 'அக்கறை' எனத் திருத்தியெழுதினால் நன்று.

    'அக்கரை'க்கும் இவ்விடுகைக்கும் தொடர்பிருக்கிறதுதான்.
    இராமேஸ்வரத்துக்கு அக்கரையில்தான் ஈழமிருக்கிறது. அதனால்தான்
    உங்களுக்கு ஈழம் மீது 'அக்கறை'யிருக்கிறது.



    இப்படிக்கு 'அக்கரை'யிலிருக்கும் ஒருவன்.

    பதிலளிநீக்கு
  3. வேதனையிலும் ஆறுதல் தரும் இந்தப் பதிவை முடிந்தால் தமிழகத்தின் ஏதாவது செய்தித்தாளில் வர ஏற்பாடு செய்யுங்கள். இது ஈழத் தமிழருக்கு நீங்கள் தரும் தீபாவளிப் பரிசாக ஏற்றுக்கொள்வோம்.


    ஒரு ஈழத் தமிழன்

    பதிலளிநீக்கு
  4. வேதனையிலும் ஆறுதல் தரும் இந்தப் பதிவை முடிந்தால் தமிழகத்தின் ஏதாவது செய்தித்தாளில் வர ஏற்பாடு செய்யுங்கள். இது ஈழத் தமிழருக்கு நீங்கள் தரும் தீபாவளிப் பரிசாக ஏற்றுக்கொள்வோம்.


    ஒரு ஈழத் தமிழன்

    பதிலளிநீக்கு
  5. //
    'நாங்கள் இருக் கின்றோம் கவலை கொள்ளாதீர்கள்' என்ற ஆறுதல்களை, இலங்கை தமிழர்களுக்கு அறிக்கை அளவுக்கு, பெயரளவுக்குக் கூட தந்ததே இல்லை. அப்படி எதாவது அதிசயம் இராஜிவ் காந்தி மறைவிற்கு பிறகு நடந்திருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.
    //
    இராஜிவ் காந்தி மறைவிற்கு முன்பு ஆறுதல் தந்தாங்களா என்ன?

    செஞ்சோலைப் படுகொலை போன்ற இகழ்வுகளின் போது "பச்சைத் தமிழச்சி" எங்க போனாங்களாம்?

    :(

    பதிலளிநீக்கு
  6. //குசும்பன் said...
    கோவி உங்க கட்டுரை செருப்பால் அடித்தது போல் இருக்கிறது. மிக அருமை. மறப்போம் மன்னிப்போம் என்ற மனித தன்மை கூட இல்லாமல் தமிழ் செல்வன் இறந்த செய்தி கேட்டு இனிப்பு கொடுத்து கொண்டாடிய காங்கிரசை என்ன சொல்வது.

    சகோதரர்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு நாள் விடிவு வரும் கோவி

    நம்பிக்கைதான் வாழ்கை.
    //

    குசும்பன் உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    'நலம் விரும்பிகள்' டயலாக் பேசி அக்கறை உள்ளவர்கள் போல் காட்டுவதை ஈழத்தமிழர்கள் புரிந்து கொண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும்.

    உலக அரங்கில் உள்ளவர்களுக்கு ஈழத்தமிழர்கள் பக்கம் உள்ள ஞாயம் தற்பொழுது நன்றாக தெரிகிறது, விரைவில் விடிவுகாலம் பிறக்கும்.

    பதிலளிநீக்கு
  7. //ஈழவன் said...
    இந்த 'அக்கரை'யை 'அக்கறை' எனத் திருத்தியெழுதினால் நன்று.

    'அக்கரை'க்கும் இவ்விடுகைக்கும் தொடர்பிருக்கிறதுதான்.
    இராமேஸ்வரத்துக்கு அக்கரையில்தான் ஈழமிருக்கிறது. அதனால்தான்
    உங்களுக்கு ஈழம் மீது 'அக்கறை'யிருக்கிறது.

    இப்படிக்கு 'அக்கரை'யிலிருக்கும் ஒருவன்.
    //

    ஈழவன் ஐயா,

    எழுத்துப்பிழையை திருத்திவிட்டேன்.
    மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  8. //Elath Thamilan said...
    வேதனையிலும் ஆறுதல் தரும் இந்தப் பதிவை முடிந்தால் தமிழகத்தின் ஏதாவது செய்தித்தாளில் வர ஏற்பாடு செய்யுங்கள். இது ஈழத் தமிழருக்கு நீங்கள் தரும் தீபாவளிப் பரிசாக ஏற்றுக்கொள்வோம்.


    ஒரு ஈழத் தமிழன்
    //

    ஈழத்தமிழன் ஐயா,

    தீபாவளி அன்று இதை வெளி இடலாமா ? என்று சற்று தயங்கினேன். பிறகு ஈழ சகோதரர்களுக்கு 'தீபாவளி பரிசாக' இருக்கட்டம் என்று நினைத்து, மறுயோசனை இன்றி வெளி இட்டுவிட்டேன்.

    அதை இங்கு சரியாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. //ஜெகதீசன் said...
    இராஜிவ் காந்தி மறைவிற்கு முன்பு ஆறுதல் தந்தாங்களா என்ன?

    செஞ்சோலைப் படுகொலை போன்ற இகழ்வுகளின் போது "பச்சைத் தமிழச்சி" எங்க போனாங்களாம்?

    :(
    //

    ஜெகதீசன், அம்மா பச்சை தமிழச்சி என்று ஏன் நம்ப மறுக்கிறீர்கள், தமிழகத்தில் அவர் செல்லுமிடமெல்லாம் பச்சை மயமாக இருந்ததே.
    :)

    பதிலளிநீக்கு
  10. \\தீபாவளி அன்று இதை வெளி இடலாமா ? என்று சற்று தயங்கினேன். பிறகு ஈழ சகோதரர்களுக்கு 'தீபாவளி பரிசாக' இருக்கட்டம் என்று நினைத்து, மறுயோசனை இன்றி வெளி இட்டுவிட்டேன். \\

    எங்கட ஊர்ல எங்களுக்கு வேண்டிய ஆக்கள் செத்தா ஒரு வருடத்துக்கு நல்ல காரியம் ஓன்றும் கொண்டாடுவதில்லை.

    பதிலளிநீக்கு
  11. //
    ஜெகதீசன், அம்மா பச்சை தமிழச்சி என்று ஏன் நம்ப மறுக்கிறீர்கள், தமிழகத்தில் அவர் செல்லுமிடமெல்லாம் பச்சை மயமாக இருந்ததே.
    //

    நேத்து வரைக்கும் பச்சை நிற 'வண்ணத்துப்பூச்சி' யாகத்தான இருந்தார்... எப்படி திடீருன்னு 'தமிழச்சி' யானார்? ஓட்டுப் போயிருமின்னு பயமா?

    தமிழ்க் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அவர் "தமிழச்சி" ஆகிவிட முடியாது....

    பதிலளிநீக்கு
  12. கூட்டம் கூட்டமாக அப்பாவி மக்களை அடக்கு முறையால் கொன்று குவித்த சந்திரிகாவுடன் சேர்த்து கொண்டு தமிழக மக்களுக்கு கசப்பு மருந்து கொடுத்தது பத்தாது என்று ஈழவருக்கு விடம் கொடுத்த பெருந்தகை பேச்சு எல்லாம் பச்சை பச்சையாகத்தான் இருக்கிறது. இதில் செய்தி வியாபாரிகள் எல்லாம் வேறு சேர்ந்து கொள்கிறார்கள்.

    சாதாரண மக்களாகிய நாமே ஒரு கருத்தாக்கமாவது உருவாக்க வேண்டும் என்று இவ்வளவு மெனக்கொடும் போது, அதிகாரத்திலும் பத்திரிக்கையிலும் உள்ளவர்கள் என்ன என்ன விதமான முன்னெடுப்புகளை எடுக்கலாம். அமெரிக்காவில இருந்து வந்ததும் வராததுமாக இராமர் பாலமாக உச்ச நீதிமன்றம் போய் பார்க்க வேண்டியவர்களை எல்லாம் பார்த்து காரியம் சாதிக தெரிந்தவர்களுக்கு. அமெரிக்கவிலேயே இருக்கும் ஐ நா விற்கு சென்று ஒரு இந்திய அரசியல்வாதியாக இலங்கையில் நடக்கும் மனித கொடுமைகளை பதிவு செய்து விட்டு வந்தால் என்ன. செய்ய மாட்டார்களே இந்த அறிவு வியாபாரிகள்.

    ஈழவர்கள் வெற்றி பெற்றால் இவர்களுக்கு அப்படி என்ன குறை வந்துவிட போகிறத், அப்படி என்ன தான் அந்த ஏழை பாழைகள் மேல் பொறாமையோ........

    பதிலளிநீக்கு
  13. நன்றி ஐயா ........

    நல்ல பதிவு........நிச்சயம் எங்களுக்கு விடிவு பிறக்கும்...இந்திய தமிழ் மக்களின் திருப்பம் எங்கள் மீது இப்போது ஆழமாக விழ தொடங்கி இருக்கிறது என்பது தமிழ் மணத்தில் வரும் பதிவுகளில் இருந்து புரிகிறது....

    எங்கள் மண் காக்க போரிடும் வீரர்க்கும் , விதைக்கப்பட்ட போராளிகளுக்கும் இந்த நேரத்தில் என் வணக்கங்கள்

    பதிலளிநீக்கு
  14. கண்ணன்...

    தாமதமான பின்னோட்டம். காரணம் மற்ற வேலைகளில் இங்கு வர இயலவில்லை.

    பதிவு வழைமைபோல உங்களது தெளிவான நடையால் நுட்பமாக சாட்டைய விளாசியிருக்கிறீர்கள். ஒரே ஒரு திருத்தம் பதிவில் 'இலங்கைத் தமிழர்கள்' என்று இருப்பதை 'ஈழத் தமிழர்கள்' என்று குறிப்பிட்டால் அரசியல் ரீதியாக சரியானதாக இருக்கும். இலங்கைத் தமிழர் என்பது அந்நியமாக உள்ளது. மற்றபடி உங்களது உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  15. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !