6 பிப்ரவரி, 2007

பெயருக்குப் பின்னால் சாதி ? அவப்பெயரே !

பழமொழிகள் மக்களின் பண்பாடு கலாசாரத்தை வெளுத்துக் காட்டுபவை (ப்ரதிபலித்தல்). எல்லா நாடுகளிலும் பல மொழிகளிலும் பழ மொழிகள் உண்டு. நம் இந்தியாவில் பலமொழிகளுக்கென தனி அகராதியே போடலாம். தமிழ்நாட்டில் பலமொழிகள் என்பது தனி இலக்கியம் என்ற அளவில் எண்ணிக்கையில் இருக்கிறது. பழமொழிகள் தத்துவங்கள் சொல்வதும் உண்டு சாடுவதும் உண்டு.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பது பழமொழி - இது தத்துவம் சார்ந்தது.
சுக்கு கால் பணம் சுமைகூலி முக்கால் பணம் - இது சாடல் வகை.

பழமொழிகள் பெருவாரியாக (அதிகம்) சாடுவதற்கென்றே உருவாக்கப் பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் சாதிகளுக்கு பஞ்சமில்லை. உயர்த்தி தாழ்த்திச் சொல்ல என்பதில் பெரும்பாலும் தாழ்த்திச் சொல்லவே பழமொழிகள் பெருவாரியாக பயன்பட்டுவந்திருக்கிறது. ஐம்பது நூற்றாண்டுகளுக்கு முன்புவரை இத்தகைய பழமொழிகள் புழங்குவது மிகவும் இயல்பு. தற்பொழுது சாதியைச் சாடும் பழமொழிகளை சிலவற்றைத் தவிர மற்றவற்றையெல்லாம் மக்கள் மனதில் இருந்து மறைந்து போய்விட்டது. இதற்கு காரணம் சாதிகள் ஒழிந்துவிட்டன என்று கொள்ளமுடியாது. எல்லோர் மனதிலும் அவரவர் சாதி குறித்த நல்லெண்ணம் இருக்கிறது.

தங்கள் சாதி உயர்ந்தது என்று நினைக்காவிட்டாலும் கண்டிப்பாக தாழ்வில்லை என்று கருதுகிறார்கள். ஒரு சில முற்பட்ட சாதிகளைத் தவிர மற்ற சாதியினர் சாதிப் பெயரைச் சொல்லி பெருமை (இதில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன் என்பது போல்) கொள்வதும் இல்லை. மற்றவர்களை சாடுவதும் இல்லை. இந்த ஒரு இணக்கமான சூழலை நாம் அடைந்ததற்கு காரணம் சாதி பெயரை பெயரில் இருந்து நீக்கி கொண்டது தான் முதன்மையான காரணமாக இருக்க முடியும்.

தன் சாதி உயர்ந்ததென்று நினைத்து பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ள முயன்றால் மற்றவர்களால் சொல்லடிபடுவோம் என்று பலதரப்பினரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். பழமையை மீட்டு எடுக்கிறோம் சாதி என்பது பெருமை என்று மீண்டும் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொண்டால் அவப்பெயர் நமக்கு மட்டுமல்ல நம் குலத்துக்கே கூட கிடைக்கும்.

சாதிகளைச் சொல்லி பழிக்கும் பழமொழிகளை கீழே தருகிறேன்.


  • சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

  • கெட்டுப்போன பாப்பானுக்கு செத்த மாட்ட சீதனமா கொடுத்த மாதிரி

  • முதலியார் ஜெம்பம் வெளக்கெண்ணெய்க்கு கேடு

  • உதைப்பானுக்கு வெளுப்பான் சாதி வண்ணான்

  • செத்தாத்தான் தெரியும் செட்டியார் வாழ்வு

  • கிள்ளி எடுக்க சதை இல்ல பேரோ தொந்தியா பிள்ளை

  • இடையனுக்குப் புத்தி பிடரியில

  • உப்புக் கண்டம் பறிகொடுத்த பாப்பாத்தி போல

  • ஆட்டுக்கும் மாட்டுக்கும் ரெண்டு கொம்பு அய்யங்காருக்கு மூணுகொம்பு

  • வண்ணான்கிட்ட துணியப் போட்டுட்டு கொக்கு பின்னால நின்னாளாம்

  • ஆத்துல போட்டாலும் செட்டி அளந்துதான் போடுவான்

  • முட்டாள் நாய்கனும் மொரட்டு துலுக்கனும் பட்டாளத்துக்கு ஒத்துவராது

  • அம்பட்டனை அம்பலத்துக்கு அழைதால் மயிர் மயிர்னு தான் சொல்லுவான்

  • ஆடு திருடின கள்ளனுக்கு ஆக்கிப் போடும் கள்ளச்சி

  • ஆத்துல போனாலும் செட்டி ஆதாயம் இல்லாமல் போவானா ?

  • ஆரிய கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

  • இடையன் அன்பெல்லாம் ஆட்டுக்குட்டி மேலே

  • இராவுத்தனே சினந்து இருக்கயில் குதிரை கோதுமை ரொட்டிக்கு அழுததாம்

  • செட்டி வீட்டில் பணம் இருக்கிறது ஆல மரத்தில் பேய் இருக்கிறது

  • தச்சன் பெஞ்சாதி தரையிலே கொல்லன் பெஞ்சாதி கொம்பிலே

  • திகம்பர சன்யாசிக்கு வண்ணானோடு என்ன உறவோ ?

  • தோண்டிக் கள்ளை தொடர்ந்து குடித்தால் பாண்டியன் மகனும் பறையன் ஆவான்

  • காடு கெட ஆடு ஊருகெட நூல் (பூனூல் அணிந்தவர்)

  • பசு சாதும் பார்பன ஏழையும் நம்பப்படா

  • பார்பனுக்கு மூத்த பறையன் கேட்பாரில்லாமல் கீழ்சாதியானான்

  • வண்ணான் பிள்ளை செத்தால் அம்பட்டனுக்கு மயிர் போயிற்று

  • வெள்ளாளர் செய்த வேளாண்மை வீடு வந்து சேராது

  • வேலை மெனக்கட்ட அம்பட்டன் பூனையை சிரைத்தானாம்

  • செட்டி சிங்காரிக்கிறத்துக்குள்ளே பட்டணமே பறி போகுமாம்

  • ஆற்றுக்கு பார்பன் துணையா ? சோற்றுக்கு பயற்றங்காய் கரியா ?

இன்னும் இருக்கின்றன பதிவின் நீளம் கருதி தவிர்த்துவிடுகிறேன். இந்த பழமொழிகளைப் பார்க்கும் போது நான்கு வருண அடுக்கில் கீழே உள்ளவர்களின் அறிவு குறித்து கேலி செய்யப்பட்டு இருக்கிறது, வைசியர்களின் தொழில் கேலி செய்யப்பட்டுள்ளது. சத்திரியர்களின் வீரம் கேலி செய்யப்பட்டுள்ளது. பார்பனர்களின் நம்பகத்தன்மை குறித்து கேலி செய்யப்பட்டுள்ளது.

சாதி பெயரை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதன் மூலம் சாதியைச் சொல்லி பிறர் பழிப்பதற்கு ஏதுவாக அமைந்துவிடும். பழமொழிகளைப் பார்க்கும் போது மக்கள் மனதில் எந்த சாதியும் உயர்ந்ததாக கொள்ளவில்லை என்பது நன்றாக தெரிகிறது. சாதிப் பெயரை பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வது என்பது இறந்து போன அல்லது மறந்து போன சாதிகளைக் குறித்த இழிவான பழமொழிக்களை தோண்டி எடுக்கும் வீண் முயற்சி. ஆக்கபூர்வமாக இல்லாமல் மேலும் வெறுப்பை (துவேசத்தை) வளர்க்கவே அது வழிவகுக்கும்.

சாதியை இழிவாக சொல்லும் பழமொழிகள் உங்களுக்கும் தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரியபடுத்துங்கள் எந்த சாதிக்கு என்ன 'பெயர்' கிடைத்திருக்கிறது என்று எல்லோரும் அறியட்டும். தனிமனித தாக்குதல் தவிர்க்க.

Don't Do !

20 கருத்துகள்:

  1. //ஆத்துல போனாலும் செட்டி ஆதாயம் இல்லாமல் போவானா ?//

    "ஆதாயம் இல்லாமல் செட்டி ஆத்துல கால விடமாட்டான்!"

    பதிலளிநீக்கு
  2. என்னைப் பொருத்தவரை, நாம் முயலாமல் கிடைத்த ஒன்றிற்காக நாம் பெருமை கொள்ள நினைப்பது பெரும் சிறுமையே. அந்த ஜாதியில் அல்லது மதத்தில் பிறப்பதற்காக, நாம் என்ன முயற்சிகள் செய்தோம்?!. எனவே நம் முயற்சியில் கிடைக்கப் பெறாத ஒன்றை, நம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டு பெருமை கொள்ள நினைப்பதும் இழிவே.

    பதிலளிநீக்கு
  3. ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை.

    ஆமா எங்க புடிச்சீங்க இத்தனை பழமொழியை?

    பதிலளிநீக்கு
  4. //நாம் முயலாமல் கிடைத்த ஒன்றிற்காக நாம் பெருமை கொள்ள நினைப்பது பெரும் சிறுமையே.// சரியாக சொன்னீர்கள் சுல்தான்.

    வசதிபடைத்தவர்கள், ஆதிக்க சக்தி உள்ளவர்கள், தங்களது பிள்ளைகளை சிறு வயது முதற்கொண்டே இம்மன நிலையை ஊட்டியே வளர்க்கின்றனர்.

    இதெல்லாவற்றிற்கும் அடிப்படையில் சகிப்பு தன்மை இல்லாததுதான் காரணம் என் சொல்லலாமோ?

    பதிலளிநீக்கு
  5. நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் கோவியாரே!

    //ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை//

    செந்தில் குமரன்!
    ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்! அதுவும் நச் என்று சொன்னீர்!

    பதிலளிநீக்கு
  6. //ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை//

    சரியான கருத்து.

    பாலா

    பதிலளிநீக்கு
  7. //மாசிலா said...
    //ஆத்துல போனாலும் செட்டி ஆதாயம் இல்லாமல் போவானா ?//

    "ஆதாயம் இல்லாமல் செட்டி ஆத்துல கால விடமாட்டான்!"
    //

    மாசிலா,

    இரண்டும் ஒரே பொருள்தான் !
    :)

    பதிலளிநீக்கு
  8. //சுல்தான் said...
    என்னைப் பொருத்தவரை, நாம் முயலாமல் கிடைத்த ஒன்றிற்காக நாம் பெருமை கொள்ள நினைப்பது பெரும் சிறுமையே. அந்த ஜாதியில் அல்லது மதத்தில் பிறப்பதற்காக, நாம் என்ன முயற்சிகள் செய்தோம்?!. எனவே நம் முயற்சியில் கிடைக்கப் பெறாத ஒன்றை, நம் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொண்டு பெருமை கொள்ள நினைப்பதும் இழிவே.
    //

    ஐயா,

    நன்று சொன்னீர்கள், நல்லிணக்கம் தழைத்து எல்லோரும் ஓர் குலம் என்று முன்னேற்ற பாதையை பலர் தேடிக் கொண்டிருக்க, சிலர் சாதியினால் பெருமை என்பதை சொல்லும் போது பொறுப்பற்ற செயல் என்று சொல்லத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  9. சூப்பரப்பு.
    எப்படி?

    பெயருக்குப் பின்னாடி ஏதாவது போடணுமுன்னா ஒரு டிகிரி படிச்சா போதுமே.

    :)

    பதிலளிநீக்கு
  10. சிறில், அந்த டிகிரியையும் நம்ம ஊருல தானே போட்டுக்கிறாங்க. இங்கே அமெரிக்காவுல அது கூட கிடையாது.

    கோவி.கண்ணன் அண்ணா. நல்ல தொகுப்பு. இந்தப் பழமொழிகள் எல்லாம் சமூக ஆராய்ச்சியாளர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

    உங்கள் பதிவின் மொத்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை.

    பதிலளிநீக்கு
  11. வெறி பிடித்த சில கிழட்டு மிருகங்களுக்கு மட்டும்தான் ஜாதி வேண்டும்.

    நமக்கெல்லாம் ரெண்டே ஜாதிதான்.

    ஒன்று ஆண்ஜாதி, இன்னொன்று பெண் ஜாதி.

    பதிலளிநீக்கு
  12. // செந்தில் குமரன் said...
    ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை.

    ஆமா எங்க புடிச்சீங்க இத்தனை பழமொழியை?
    //

    செந்தில் குமரன்,

    ஒன்றே சொன்னீர் அதில் அதிலும் நன்றே சொன்னீர்.

    கீழ்கண்ட புத்தகத்திலிருந்து தேடிப் எடுத்தேன்.

    பழமொழிகள் 5000
    ஆசிரியர் முத்துக்குமரன்
    சங்கர் பதிப்பகம்
    21 ஆசிரியர் சங்கக் குடியிருப்பு
    இராஜாஜி நகர் பிரிவு, வில்லிவாக்கம்,
    சென்னை - 49

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் பெயருக்கு முன்பு அவர் வாழும் ஊரின் பெயர் இருக்கும் அதாவது ஊர்பெயரின் முதல் எழுத்து தமிழிலும் ஆங்கிலத்திலும் இருக்கும்.அவர் சார்ந்த சமூகத்தின் பெயர் (சாதி)அவரி அவ பெயருக்கு பின்னால் இருக்கும்.உ.தா. என்.எஸ்.கிருஷ்ணன்.

      நீக்கு
  13. // நாமக்கல் சிபி said...
    நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் கோவியாரே!

    //ஜாதியால் பெருமை என்று நினைப்பவர்கள் எண்ணத்தால் சிறியவர்களாகிறார்கள் என்பது தான் உண்மை//

    செந்தில் குமரன்!
    ஒன்றே சொன்னாலும் நன்றே சொன்னீர்! அதுவும் நச் என்று சொன்னீர்!

    7:00 PM, February 06, 2007
    //

    சிபியாரே,

    கருத்துக்களால் வழிமொழிந்ததற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  14. பெயருக்குப் பின்னால் ஜாதி வேண்டுமா?


    முதலில் ஜாதியைக் கண்டு பிடித்தது யார்?

    பார்ப்பனர்தான். அதற்கு துணையாக புரட்டு வேதங்களையும் இழி(தி)காசங்களையும் அழைத்துக் கொண்டார்கள்.

    தாங்கள் பிரம்மனின் மூக்குச் சளியில் இருந்து பிறந்தவர்கள் என்று சொல்லி மன்னனை நம்ப வைத்து பெரிய பதவிகளை வாங்கிக் கொண்டார்கள். அதன்பிறகு பெரிய பதவிகளுக்கு மற்ற யாரும் வரவிடாமல் தடுக்க, செய்கின்ற தொழிலை வைத்து ஜாதிகளைப் பிடித்தார்கள்.

    அன்றைக்கு அவர்களுக்கு ஜாதிகள் தேவையாக இருந்தது. அவசியமாக இருந்தது. எனவே பிரித்தார்கள். தம்மை மற்றவர்களிடம் இருந்து பிரித்துக் காட்டினார்கள். மக்களைக் கூறு போட்டார்கள்!

    திராவிடன் என்றும் பஞ்சமன் என்றும் சூத்திரன் என்றும் சத்திரியன் என்றும் கலர் கலராக வர்ணங்களைக் கொண்டு மக்களைக் கூறு போட்டார்கள். ஆனால் இன்றைக்கு இட ஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் அதெல்லாம் முடியாது என்கின்றனர். அன்றைக்கு ஜாதியை அவர்கள் கண்டு பிடித்ததால்தானே இன்றைக்கு இவ்வளவும்? ஜாதியால் பிரிக்கப் பட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. ஏழையாகவே பிறந்தனர், வாழ்ந்தனர், வாழ்கின்றனர்.

    பல கால கட்டங்களில் அவர்களுக்கு கல்வி உரிமைகூட மறுக்கப் பட்டது. அப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கொடுத்தால் பார்ப்பனர்கள் ஒப்பாறி வைக்கின்றனர். குய்யோ முறையோ என குதிக்கின்றனர்! அரசு தங்கள் வயிற்றில் அடித்து விட்டதாக மண்ணை வாறி இறைக்கின்றனர்!

    சரி அது போகட்டும்.. பெயருக்குப் பின்னால் ஏன் ஜாதி? அதெல்லாம் ஒன்னும் இல்லை. பெயரை அழைக்கும்போது ஜாதியும் கூடவே வரும். அப்படி கூடவே வந்தால் அந்த பெயரை மக்கள் மறந்து விடாமல் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்படி மக்கள் மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தால் பார்ப்பனர்கள் மேலோர் என்று மக்களை இன்னமும் எஞ்சிய காலத்திற்கும் நம்ப வைக்க முடியும். அதனால்தான் ஜாதிப் பெயர் அவர்களுக்கு வேண்டும். ஜாதிப் பெயரைச் சொல்லி அழைப்பதன் மூலம் மனிதன் ஒருவனை தொடலாமா தொடக் கூடாதா என்று தீண்டாமையை முடிவு செய்யலாம் அவர்கள்!

    தெருக்களின் பெயர்களில் ஏன் ஜாதி வேண்டும்? இதற்கும் மேலே சொன்ன காரணம்தான். நாம் அழைக்கும்போது ஜாதியையும் சேர்த்தே சொன்னால் ஜாதிப்பெயர் அழியாது. ஜாதிகள் இன்னும் வளரும். மக்கள் மனதில் நீடித்து நிற்கும். இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிரம்மன் மூக்குச் சளியில் இருந்துதான் பிறந்தோம் என்று புரூடாக் கதைகளை மக்களிடம் அள்ளி விடலாம்!

    பதிலளிநீக்கு
  15. பார்ப்பனர்களும் பாதிப்பார்ப்பனராகத் தம்மை எண்ணுபவர்களும் சாதியைப் போட்டுக் கொள்வது திமிருக்காக.
    மற்றவர்கள் போட்டுக்கொள்வது தாங்கள் சூத்திரர்கள் என்று சூத்திரன் என்றால் என்ன பொருள் என்றே தெரியாமல் தங்கள் அறியாமையை வெளிப்படுத்துவதற்காக.

    பதிலளிநீக்கு
  16. தமிழ்ப்பழமொழிகள் ன்னு ஒரு புத்தகம் நம்ம கலைமகள் கி.வா.ஜ. தொகுத்து
    வழங்கியது கிடைக்குது. அதுலே எக்கச்சக்கமாக் கொட்டிக்கிடக்குது.

    பதிலளிநீக்கு
  17. ஒரு பத்து வருடம் முந்தி வந்திருக்க வேண்டிய பதிவு.

    அடி, உதைக்குப் பயந்தோ, அல்லது அதன் இழிவு புரிந்தோ அல்லது இதில் ஒன்றும் தனிப்பெருமை இல்லை என்பதை உணர்ந்தோ, அநேகமாக எவருமே [நான் சொல்வது ஒரு 40 வய்துக்குக் கீழே இருப்பவரை மட்டுமே] இப்போதெல்லாம் சாதிப் பெயரை தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதில்லை என நினைக்கிறேன்.

    இருப்பினும், சொன்னதில் தவறில்ல்லை.

    அவ்வப்போது இதையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருப்பதும் தேவையான ஒன்றே!

    பாராட்டுகள் கோவியாரே!

    பதிலளிநீக்கு
  18. // SK said...
    ஒரு பத்து வருடம் முந்தி வந்திருக்க வேண்டிய பதிவு.

    அடி, உதைக்குப் பயந்தோ, அல்லது அதன் இழிவு புரிந்தோ அல்லது இதில் ஒன்றும் தனிப்பெருமை இல்லை என்பதை உணர்ந்தோ, அநேகமாக எவருமே [நான் சொல்வது ஒரு 40 வய்துக்குக் கீழே இருப்பவரை மட்டுமே] இப்போதெல்லாம் சாதிப் பெயரை தங்கள் பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதில்லை என நினைக்கிறேன்.

    இருப்பினும், சொன்னதில் தவறில்ல்லை.

    அவ்வப்போது இதையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருப்பதும் தேவையான ஒன்றே!

    பாராட்டுகள் கோவியாரே!
    //

    எஸ்கே ஐயா,

    பத்துவருடத்துக்கு முன்பே இந்த பிரச்சனை முடிந்துவிடவில்லை. பிணங்களை தோண்டுவது போல் சாதிப் பெயர் போடுவதைப் பொறுத்து பலர் பலவித கருத்துக்களைச் சொல்கிறார்கள். சாதிப் பெயரால் அவப் பெயர்தான் இதுவரை கிடைத்திருக்கிறது என்பதை இந்த பதிவின் வழி சுட்டினேன்.

    அடி உதைக்கு பயந்து என்பது சுஜாதா பாணி பதிலாக இருக்கிறது. :)

    பதிவை பாராட்டியதற்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  19. //அவ்வப்போது இதையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டிருப்பதும் தேவையான ஒன்றே!//

    இதைப் படிக்கவில்லை போலும்!
    :)))))))))))))

    பதிலளிநீக்கு

தமிழில் தட்டச்சு செய்ய... இங்கே... செல்லுங்கள் !